"கண்ணீர் அஞ்சலி" | ||
நண்பனே நீ எங்கே? எங்கே?.. உங்கள் குரலைக் கேட்கவேணும் போலிக்கு, நீண்ட நாட்கள் உங்களைக் காணவில்லை, நீண்ட நாட்கள் பேசவுமில்லை... உயிரற்ற உங்கள் உடல் இப் பெட்டிக்குள், உங்கள் கடைசி நேரமிது, ஒரு முறை உங்கள் முகம் காணத் தவிக்குது எம் மனம், பார்க்க முடியாத கோலம் என்று பூட்டி விட்டார்களே..... வேதனையை மனதில் பூட்டி, நொந்தழுகின்றோம், ஒருவரையொருவர் அறியாது, எங்கோ பிறந்து எங்கோ வாழ்ந்த நம்மை காலம் கொண்டு வந்து ஒன்றாக்கியது, ஒன்றான உறவால் லூர்து நகர், கடல் குளிப்பு,பற்பல கொண்டாட்டம் என்று, ஆடினோம் பாடினோம் குதூகலித்தோம், யாவும் கண்முன் நிழலாட, நீங்கள்.. மட்டும் இல்லையே.. செய்தி கேட்ட அந்த இரவு... ஒவ்வொருவரும் பட்டபாடு தெரியுமா நண்பா? நம்ப முடியவில்லையே என்று.. எத்தனை தொடர் அழைப்புக்கள்... உங்களுக்காக எத்தனை பேர் அழுதார்கள் தவித்தார்கள், மண்ணில் மனிதனைப் படைத்து.. அவன் வாழ்ந்து முடிக்குமுன்.. இடையில் அவனை உம்மிடம் அழைப்பது முறையா? இறைவா.. மனைவி பிள்ளைகள் உறவுகள் துடிப்பது தெரியலையா இறைவா.. அப்பா இறந்ததை மகனுக்கு சொல்ல முடியாமல் மனைவி தவித்தது தெரியலையா? அடிபட்ட மகள் படுக்கையில் கிடந்து, தன் காய வேதனையோடு I miss papa என்று புலம்பியது கேட்கலையா? உன் திட்டத்தை மாற்ற நாங்கள் யார் இறைவா? உன் கை வேலைப்பாட்டில் உருவான மண்பாண்டம் தானே நாங்கள்.. நீர் விரும்பும் போது உடைக்கின்றீர்.. ஏன் இப்படி எல்லாம் நடக்குது என்று நாம் உம்மைக் கேட்க! சிந்தித்து செயல்ப்பட பல வழி தந்தேன் என்று கூறுகிறாயா இறைவா.. விவேகமற்ற வேகத்தால் விதி விளையாடி விட்டதே! ஏன் இப்படி வேகமாக ஓடி ஒரு குடும்பத்தை உருக்குலைத்து விட்டாய் என்று கேள்வி கேட்கணும் போலிருக்கு, ஆனால், வாகனம் ஓட்டியவரும் இல்லையே, கடந்தது திரும்பாது எனும் போது கனக்கிறது மனது. மனைவி நினைத்து நினைத்து கலங்குகிறார், பிள்ளைகள் கலங்குவதை பார்க்க முடியவில்லை, அந்த நேரம் கடந்திருக்க கூடாதா என்ற ஓர் அங்கலாய்ப்பு,, எல்லாம் முடிந்து விட்டது...ஐயா..... நாங்கள் கூப்பிட்டாலும் கேட்காத தூரத்துக்குச் சென்று விட்டீர்களே... உங்கள் நினைவுகளே எங்களோடு வாழும் இனி... கண்ணீர் சொரிந்து விடைதருகின்றோம், சென்று வான் வீட்டில் இறைவனின் நிழலில் இளைப்பாறுங்கள். கண்ணீர் அஞ்சலிகள். ரஞ்சிதம் யேம்ஸ் - Paris |