Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                     25 டிசம்பர்  B  
                                    கிறிஸ்து பிறப்புக் காலம் - திருவிழிப்புத் திருப்பலி
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
டிசம்பர் 24ஆம் நாள் மாலையில் நடைபெறும் திருவிழிப்புத் திருப்பலியில் கீழ்க்கண்ட வாசகங்களைப் பயன்படுத்தவும்.


ஆண்டவர் உங்களில் பேருவகை கொள்கிறார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 62: 1-5

சீயோனின் வெற்றி வைகறை ஒளியெனவும், அதன் மீட்பு சுடர் விளக்கெனவும் வெளிப்படும்வரை, அதனை முன்னிட்டு மவுனமாயிரேன்; எருசலேம் பொருட்டுச் செயலற்று அமைதியாயிரேன். பிற இனத்தார் உன் வெற்றியைக் காண்பர்; மன்னர் யாவரும் உன் மேன்மையைப் பார்ப்பர்; ஆண்டவர் தம் நாவினால் சூட்டும் புதியதொரு பெயரால் நீ அழைக்கப் படுவாய்.

ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்; உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய். 'கைவிடப்பட்டவள்' என்று இனி நீ பெயர் பெறமாட்டாய்; 'பாழ்பட்டது' என இனி உன் நாடு அழைக்கப்படாது; நீ 'என் மகிழ்ச்சி' என்று அழைக்கப்படுவாய்; உன் நாடு 'மணம் முடித்தவள்' என்று பெயர் பெறும்.

ஏனெனில், ஆண்டவர் உன்னை விரும்புகின்றார்; உன் நாடு மணவாழ்வு பெறும். இளைஞன் கன்னிப் பெண்ணை மணப்பதுபோல உன்னை எழுப்பியவர் உன்னை மணந்துகொள்வார்; மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வதுபோல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா 89: 3-4. 15-16. 26, 28 (பல்லவி: 1a)
=================================================================================
 பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்.

3 நீர் உரைத்தது: 'நான் தேர்ந்துகொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது: 4 உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்'. பல்லவி

15 விழாவின் பேரொலியை அறிந்த மக்கள் பேறுபெற்றோர்; ஆண்டவரே! உம் முகத்தின் ஒளியில் அவர்கள் நடப்பார்கள். 16 அவர்கள் நாள் முழுவதும் உம் பெயரில் களிகூர்வார்கள்; உமது நீதியால் அவர்கள் மேன்மை அடைவார்கள். பல்லவி

26 'நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை' என்று அவன் என்னை அழைப்பான். 28 அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்; அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும். பல்லவி


================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
தாவீதின் மகனான கிறிஸ்து பற்றிப் பவுலின் சான்று.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 16-17,21-25

தொழுகைக் கூடத்தில் பவுல் எழுந்து கையால் சைகை காட்டிவிட்டுக் கூறியது: "இஸ்ரயேல் மக்களே, கடவுளுக்கு அஞ்சுவோரே, கேளுங்கள். இந்த இஸ்ரயேல் மக்களின் கடவுள் நம்முடைய மூதாதையரைத் தேர்ந்தெடுத்தார்; அவர்கள் எகிப்து நாட்டில் அன்னியர்களாகத் தங்கியிருந்தபோது அவர்களை ஒரு பெரிய மக்களினமாக்கினார்.

பின்பு அவர் தம் தோள்வலிமையைக் காட்டி அவர்களை அந்த நாட்டை விட்டு வெளியே அழைத்துக்கொண்டு வந்தார்; பின்பு அவர்கள் தங்களுக்கு ஓர் அரசர் வேண்டும் என்று கேட்டார்கள். கடவுள் கீசு என்பவரின் மகனான சவுல் என்பவரை அவர்களுக்கு அரசராகக் கொடுத்தார்.

பென்யமின் குலத்தினராகிய அவர் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார்.

பின்பு கடவுள் சவுலை நீக்கிவிட்டுத் தாவீதை அவர்களுக்கு அரசராக ஏற்படுத்தினார்; அவரைக் குறித்து 'ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன்; என் விருப்பம் அனைத்தையும் அவன் நிறைவேற்றுவான்' என்று சான்று பகர்ந்தார். தாம் அளித்த வாக்குறுதியின்படி கடவுள் அவருடைய வழிமரபிலிருந்தே இஸ்ரயேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார்.

அவருடைய வருகைக்கு முன்பே யோவான், 'மனம்மாறி திருமுழுக்குப் பெறுங்கள்' என்று இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பறைசாற்றி வந்தார்.

யோவான் தம் வாழ்க்கை என்னும் ஓட்டத்தை முடிக்கும் தறுவாயில் `நான் யார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவரல்ல நான். இதோ, எனக்குப்பின் ஒருவர் வருகிறார்; அவருடைய மிதியடிகளை அவிழ்க்கவும் எனக்குத் தகுதியில்லை' என்று கூறினார்."


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! நாளை அவனியின் அநீதி அழிவுறும்; உலகின் மீட்பர் நம்மீது அரசாள்வார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தாவீதின் மகனான இயேசு கிறிஸ்துவின் தலைமுறை அட்டவணை.

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-25

தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்: ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோபு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும். யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்; பெரேட்சின் மகன் எட்சரோன்; எட்சரோனின் மகன் இராம். இராமின் மகன் அம்மினதாபு; அம்மினதாபின் மகன் நகசோன்; நகசோனின் மகன் சல்மோன். சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு; போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது; ஓபேதின் மகன் ஈசாய். ஈசாயின் மகன் தாவீது அரசர். தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன். சாலமோனின் மகன் ரெகபயாம்; ரெகபயாமின் மகன் அபியாம்; அபியாமின் மகன் ஆசா. ஆசாவின் மகன் யோசபாத்து; யோசபாத்தின் மகன் யோராம்; யோராமின் மகன் உசியா. உசியாவின் மகன் யோத்தாம்; யோத்தாமின் மகன் ஆகாசு; ஆகாசின் மகன் எசேக்கியா. எசேக்கியாவின் மகன் மனாசே; மனாசேயின் மகன் ஆமோன்; ஆமோனின் மகன் யோசியா. யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும் அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள்.

பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல். செருபாபேலின் மகன் அபியூது; அபியூதின் மகன் எலியாக்கிம்; எலியாக்கிமின் மகன் அசோர். அசோரின் மகன் சாதோக்கு; சாதோக்கின் மகன் ஆக்கிம்; ஆக்கிமின் மகன் எலியூது. எலியூதின் மகன் எலயாசர்; எலயாசரின் மகன் மாத்தான்; மாத்தானின் மகன் யாக்கோபு. யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு.

ஆக மொத்தம் ஆபிரகாம் முதல் தாவீதுவரை தலைமுறைகள் பதினான்கு; தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு; பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் முதல் கிறிஸ்துவரை தலைமுறைகள் பதினான்கு.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.

அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி. "யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்சவேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்"என்றார்.

"இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்"என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன.

இம்மானுவேல் என்றால் `கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள்.

யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.

மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

அல்லது - குறுகிய வாசகம்

மரியா ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர்.

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 18-25

இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. மரியா தூய ஆவியால் கருவுற்றிருந்தார். மரியாவின் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.

அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி. "யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்சவேண்டாம். ஏனெனில் மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்"என்றார்.

'இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் 'கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள்.

யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
கிறிஸ்து பிறப்புப் பெருவிழா (அதிகாலைத் திருப்பலி)


I எசாயா 62: 11-12
II தீத்து 3: 4-7
III லூக்கா 2: 15-20

"தீவனத் தொட்டியில் மீட்பர்"

நிகழ்வு

அமெரிக்காவைச் சார்ந்தவர் அனிசா அயலா (Anissa Ayala). இவருக்குப் பதினாறு வயது நடக்கும்பொழுது இரத்தப் புற்றுநோய் (Leukemia) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவருக்குச் சிகிச்சையளித்த மருத்துவர்கள் இவருடைய பெற்றோரிடம், "உங்களுடைய மகளுக்கு இரத்தப் புற்றுநோய் இருப்பதால், கூடிய விரைவில் அவளுக்கு எலும்பு மச்சை மாற்று அறுவைச் சிகிச்சைக்கு (Bone Marrow Transplantation) ஏற்பாடு செய்யுங்கள். இல்லையென்றால் அவர் பிழைப்பு கடினம்" என்றார்கள்.

இச்செய்தி அனிசா அயலாவின் பெற்றோருடைய உள்ளத்தில் பேரிடியாய் விழுந்தது. அவர்கள் மருத்துவர்களிடம், "எங்களுடைய எலும்பு மச்சையை அனிசா அயலாவிற்குப் பொருத்தலாமா?" என்று கேட்டார்கள். மருத்துவர்கள் அதற்கு முடியாது என்று சொல்ல, அவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம், "எங்களுடைய மகளுக்கு எலும்பு மச்சையைத் தரமுடியுமா?" என்று கேட்டுப் பார்த்தார்கள். யாருமே இதற்கு முன் வருவதால் அவர்கள் வருத்தம் கொள்ளத் தொடங்கினர்கள். ஏனெனில், மருத்துவர்கள் அனிசா அயலாவிற்குக் குறித்த நாள் நெருங்கிக்கொண்டே வந்தது.

இதற்கு நடுவில் அனிசா அயலாவிற்கு மரிசா (Marissa) என்றொரு தங்கை பிறந்திருந்தாள். அவள் பிறந்து பதினான்கு மாதங்கள் ஆனபோது, அவளுடைய பெற்றோருக்கு, "மரிசாவின் எலும்பு மச்சையை அனிசா அயலாவிற்குப் பொருத்தலாமா...? என்றோர் எண்ணம் தோன்றியது. இதை அவர்கள் மருத்துவர்களிடம் சொன்னபொழுது, "நீங்கள் தயார் என்றால், நாங்களும் தயார்" என்று சொல்லி, 1991 ஆம் ஆண்டு, ஜூன் திங்கள் 4 ஆம் ஆண்டு அனிசா அயலாவிற்கு எலும்பு மச்சை மாற்று அறுவைச் சிகிச்சை செய்தார்கள். இதனால் அனிசா அயலா உயர்பித்தார். மரிசாவும்கூட எலும்பு மச்சையைக் கொடுத்த பின்னும் நல்ல உடல் நலத்தோடு இருந்தார்.

ஆம், பதினான்கு வயதுக் குழந்தையான மரிசா தன்னுடைய எலும்பு மச்சையைக் கொடுத்து, தன் சகோதரி அனிசா அயலாவின் உயிரைக் காப்பாற்றினார்; அவரை மீட்டார். ஆண்டவராகிய இயேசுவும் நம்மை மீட்பதற்காக ஒரு குழந்தையாகப் பிறந்தார். அதைத்தான் இன்று நாம் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவாகப் கொண்டாடுகின்றோம். மகிழ்ச்சி பொங்கும் இப்பெருவிழா நமக்கு என்ன செய்தியைத் தருகின்றது என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கேட்டார்கள்

இன்றைய நற்செய்தியில் வானதூதர், கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்த இடையர்களுக்குத் தோன்றி, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியான இயேசுவின் பிறப்பைப் பற்றிச் சொல்வதையும், அவர் சொன்னதைக் கேட்டு அவர்கள் குழந்தை இயேசுவைக் காணச் சென்றதையும், பின்னர் அவர்கள் கடவுளைப் புகழ்ந்து பாடிக்கொண்டே சென்றதையும் குறித்து வாசிக்கின்றோம்.

யூதச் சமூகத்தில் இடையர்கள் மிகவும் பின்தங்கியவர்களாக, சாதாரணமானவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு வானதூதர் மூலம் ஆண்டவரின் பிறப்புச் செய்தி முதன்முதலில் அறிவிக்கப்பட்டதைக் கொண்டே, இயேசுவின் பிறப்பு எல்லாருக்கும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி என்று சொல்லலாம். மேலும் வானதூதர் அவர்களிடம் இயேசுவின் பிறப்பைப் பற்றிச் சொன்னபொழுது, அதை அப்படியே கேட்டார்கள். அவர்கள் பரிசேயர்களைப் போன்று காதிருந்தும் செவிடர்களாய் இருக்கவில்லை (மாற் 8: 18). இவ்வாறு இடையர்கள் கடவுளின் வார்த்தையைக் கேட்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றார்கள்.

இங்கு, நாம் ஏன் கடவுளின் வார்த்தையை, அறிவிக்கப்படும் நற்செய்தியைக் கேட்கவேண்டும் என்ற கேள்வி எழலாம். இது குறித்துத் திருத்தூதர் புனித பவுல் கூறும்பொழுது, "அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும்" (உரோ 10: 17) என்பார். ஆம், வானதூதர் தங்களுக்கு அறிவித்த மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை இடையர்கள் கேட்டார்கள். இதனால் அவர்களுக்கு இயேசுவின் பிறப்பில் நம்பிக்கை ஏற்பட்டது.

நம்பினார்கள்

வானதூதர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டதால் இடையர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது என்று மேலே பார்த்தோம். இடையர்கள் வானதூதர் சொன்னதை நம்பியதன் வெளிப்பாடாக, குழந்தை இயேசுவைக் காணச் செல்கின்றார்கள். "நம்பிக்கை செயல்வடிவம் பெறாவிட்டால், தன்னிலே உயிரற்றதாக இருக்கும்" (யாக்கோபு) என்ற புனித யாக்கோபின் வார்த்தைகளுக்கு ஏற்ப இடையர்கள், வானதூதர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டதனால் ஏற்பட்ட நம்பிக்கையை வெறும் சொல்லளவில் வைத்திருக்காமல், அதற்குச் செயல்வடிவம் கொடுக்கும்வகையில் குழந்தை இயேசுவைக் காணச் சென்றார்கள். அங்கு அவர்கள் கேட்டது போன்று அல்லது அவர்கள் நம்பியது போன்று, ஆண்டவராகிய மெசியா என்றும் மீட்பர் தீவனத் தொட்டியில் கிடத்தியிருக்கக் காண்கின்றார்கள்.

தீவனத் தொட்டி என்பது இடையர்களுக்கு நன்று அறிமுகமான ஒன்று. தங்களிடம் உள்ள ஆடு மாடுகளுக்கு உணவு கொடுக்கப் பயன்படுத்தவும் ஓர் இடத்தில் ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் கிடத்தப்பட்டிருந்த காட்சி இடையர்களுக்கு மிக நெருக்கமாக இருந்திருக்கும். மட்டுமல்லாமல், குழந்தை இயேசு இவ்வுலகிற்கு வாழ்வளிக்கும் உணவாக இருக்கப்போகின்றார் என்பதை அவர்களுக்குக் குறிப்பால் உணர்த்தியிருக்கும். ஆம், இடையர்கள் வானதூதர்கள் சொன்னதை நம்பினார்கள். அந்த நம்பிக்கையினால் அவர்கள் மெசியாவைக் காணும் பேறுபெறுகின்றார்கள்.

புகழ்ந்தார்கள்

இடையர்கள் ஆண்டவராகிய மெசியாவைத் தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்ட நிலையில் கண்ட பிறகு அவர்கள் கடவுளைப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள் என்று வாசிக்கின்றோம். அவர்கள் ஏன் கடவுளைப் புகழ்ந்து பாடிக்கொண்டே செல்ல வேண்டும் என்ற அடுத்த கேள்வி எழலாம். இதற்கு இயேசு தன் சீடர்களிடம் கூறும், "நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்புப் பேறுபெற்றோர்" (லூக் 10: 23-24) என்ற வார்த்தைகளே பதிலாக இருக்கின்றன.

ஆண்டவராகிய மெசியாவைக் காண்பதற்குப் பலரும் ஏங்கிக் கொண்டிருந்தார்கள்; ஆனால், அவர்களுக்கெல்லாம் அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. மாறாக, எளிய மனத்தவரும், வானதூதரின் வார்த்தைகளை அப்படியே நம்பியவர்களுமான இடையர்களுக்கு அந்தப் பேறு கிடைத்தது. அதனாலேயே அவர்கள் தங்களுக்குக் கிடைத்த இந்த மிகப்பெரிய பேற்றிற்காகக் கடவுளைப் புகழ்ந்து பாடிக்கொண்டே சென்றார்கள். நாமும் இடையர்களைப் போன்று எளியவர்களாக, ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டு, அதனை நம்பி, அதன்படி செயல்படக்கூடியவர்களாக இருந்தால், அவர்களுக்குக் கிடைத்த பேறு நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி.

ஆகவே, எல்லா மக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியான இயேசுவின் பிறப்புப் பெருவிழாவில், இடையர்களைப் போன்று ஆண்டவரின் வார்த்தையைக் கேட்போம்; கேட்பவற்றை நம்பி ஏற்றுக்கொள்வோம்; நம்பி ஏற்றுக்கொண்டதை நம்முடைய வாழ்வில் வாழ்ந்து காட்டுவோம். அதன்மூலம் இயேசுவின் பிறப்புப் பெருவிழாவைப் பொருளுள்ளதாக்குவோம்.

சிந்தனை

"இயேசு கிறிஸ்து ஆயிரம் முறை பெத்லகேமில் பிறந்தாலும், என்னுடைய உள்ளத்தில் பிறக்கவில்லை என்றால், எல்லாமே வீண்தான் என்பார் ஏஞ்சலூஸ் சிலேசியுஸ் என்ற அறிஞர். ஆகையால், இயேசு கிறிஸ்துவை நம்முடைய உள்ளத்தில் பிறக்கச் செய்வோம். அதற்கு நாம் இடையர்களைப் போன்று ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
திருப்பலி முன்னுரை
=================================================================================
இனியவர்களே!
மீட்பராம் இயேசுவின் பிறப்பு பெருவிழா கொண்டாட்டத்திற்கு வந்துள்ள உங்கள் யாவரையும், குழந்தை இயேசுவின் இனிய நாமத்தில் அன்புடனே வாழ்த்துகின்றேன்.

பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை குழந்தை இயேசுவுக்கு பகிரும் இந்த இரவு உங்களுக்கும், உங்களது உறவுகளுக்கும் மகிழ்வு தரும் நல்ல இரவாக அமைய வாழ்த்துகின்றோம்.

அவருக்கு உகந்தவர்க்கு அமைதியை தரும் இந்த நல்ல காலத்திலே நல்ல ஆன்ம ஆயத்தத்தோடு, மகிழ்வுடனே வந்துள்ள உங்களுக்கும், உங்களது உறவுகளுக்கும், அமைதி பிறக்கட்டும் என வாழ்த்துகின்றோம்.

நமக்காக ஒரு குழந்தை தரப்பட்டது. அந்த குழந்தையின் வரவு பல மாற்றங்களை கொணர்ந்தது. வரலாற்றைக் கூட முன் பின் என பிரித்தது. வாழும் நாம் வாழ்விலும் பல மாற்றங்களை இன்றும் தந்து வளப்படுத்துகின்றார். பிறப்பு தரும் அற்புதத்தை கண்டு, மகிழ்ந்து, அந்த பிறப்பினை கொண்டாடுவதோடு, எதற்காக பிறப்பு தரப்பட்டதோ அதனை உணர்ந்து, பிறர் வாழச் செய்ய நல்லதை செய்து வாழ்ந்து, பிறப்பு அர்த்தம் கொடுக்க முன்வருவோம். வாருங்கள். பலியிலே இணைந்து கொண்டாடுவோம்.

முதல் வாசக முன்னுரை: (எசாயா 9: 2-4,6-7)

காரிருளில் நடந்த மக்கள் மீது சுடர் ஒளி உதித்துள்ளது. எனவே மக்கள் மகிழ்ச்சியில் அக்களிக்கிறார்கள். ஏனெனில் இன்று நமக்கு மீட்பர் பிறந்துள்ளார். அவர் ஆட்சி வலிமை மிகுந்தது. அமைதி நிறைந்தது. நீதி செழித்தது என்றும் நிலைபெயராதது என வரவிருக்கும் அரசரைப் பற்றி எசாயா இறைவாக்கினர் கூறும் வாசகத்திற்கு ஆர்வமுடன் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை: (தீத்து 2: 11-14)

கடவுளின் அருள் நம்மீது பொழியப்பட்டுள்ளது. இவ்வருளை வளப்படுத்த நாம் தீமையைக் களைய வேண்டும். ஏனெனில் இயேசுவின் மாட்சி வெளிப்படப் போகிறது. எனவே நாம் நம்மையே தூய்மையாக்க வேண்டும் என அறிவுறுத்தும் இவ்வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

மன்றாட்டு:

மனுவுருவானவரே இறைவா! திருஅவை பொறுப்பாளர்கள் முன்னெடுக்கும் எல்லா சீர்திருத்த நடவடிக்கைகளிலும், அவர்களுக்கு பக்கபலமாக இருந்து திருஅவையை காலத்திற்கு ஏற்ப கொண்டு செல்ல, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மனுவுருவானவரே இறைவா! மதவாத சக்திகளால், பாரதம் பின்தள்ளப்படாமல், ஆள்வோர் உண்மையோடும், நேர்மையோடும், மக்களை முன்னேற்றமான பாதையில் அழைத்துச் செல்ல, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மனுவுருவானவரே இறைவா! பலியிலே பங்கேற்கும் நாங்கள், மகிழ்வோடும், மனஅமைதியுடனும் பயணிக்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மனுவுருவானவரே இறைவா! பல்வேறு காரணங்களினால், மகிழ்வையும் அமைதியையும் இழந்து அவநம்பிக்கை கொண்டோருக்கு, உம்முடைய ஆசீர் கிடைக்கப் பெறவும், தங்களது நம்பிக்கையில் உறுதிப் பெறவும், அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மனுவுருவானவரே இறைவா! கொண்டாட்டங்களில் மகிழும் நாங்கள், ஒன்றுபட்ட மனநிலையோடு, உறவோடும், உண்மை அன்போடு பயணிக்க, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!