|
திருவருகைக்காலம்
3ஆம் ஞாயிறு
Year C |
|
==================================================================
முதல் வாசகம்
===================================================================
உன் பொருட்டு ஆண்டவர் மகிழ்ந்து களிகூருவார்.
இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 3: 14-17
மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்;
மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி. ஆண்டவர்
உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்; உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்;
இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; நீ இனி
எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய். அந்நாளில் எருசலேமை நோக்கி
இவ்வாறு கூறப்படும்; "
சீயோனே, அஞ்சவேண்டாம்; உன் கைகள் சோர்வடைய
வேண்டாம். உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்;
அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன் பொருட்டு அவர் மகிழ்ந்து
களிகூருவார்; தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்; உன்னைக்
குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார்.
==========================================================
பதிலுரைப்
பாடல்
- எசா 12: 2-3. 4. 5-6 (பல்லவி: 6)
===========================================================
பல்லவி: ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; ஆண்டவர் சிறந்து விளங்குகின்றார்.
2
இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்;
ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே.
3
மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர்கள்.
- பல்லவி
4
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்;
மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர்
உயர்க எனப் பறைசாற்றுங்கள். - பல்லவி
5
ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர்
மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்துகொள்வதாக.
6
சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின்
தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். - பல்லவி
===========================================================
இரண்டாம் வாசகம்
===========================================================
ஆண்டவர் அண்மையில் உள்ளார்.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய
திருமுகத்திலிருந்து வாசகம் 4: 4-7
சகோதரர் சகோதரிகளே,
ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன்,
மகிழுங்கள். கனிந்த உங்கள் உள்ளம் எல்லா மனிதருக்கும்
தெரிந்திருக்கட்டும். ஆண்டவர் அண்மையில் உள்ளார். எதைப்பற்றியும்
கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு
ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத்
தெரிவியுங்கள். அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி
கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும்
பாதுகாக்கும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
==============================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
===============================================================
எசா 61: 1ac
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உள்ளது;
ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தி அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார்.
அல்லேலூயா.
===============================================================
நற்செய்தி வாசகம்
================================================================
நாங்கள் என்ன செய்யவேண்டும்?
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 10-18
அக்காலத்தில்
திருமுழுக்கு யோவான் போதித்துக்கொண்டிருந்தபோது, "
நாங்கள் என்ன
செய்ய வேண்டும்?"
என்று கூட்டத்தினர் அவரிடம் கேட்டனர். அதற்கு
அவர் மறுமொழியாக, "
இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து
கொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்"
என்றார்.
வரிதண்டுவோரும் திருமுழுக்குப் பெற வந்து, "
போதகரே, நாங்கள் என்ன
செய்யவேண்டும்?"
என்று அவரிடம் கேட்டனர். அவர், "
உங்களுக்குக்
குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள்"
என்றார்.
படைவீரரும் அவரை நோக்கி, "
நாங்கள் என்ன செய்ய வேண்டும்?"
என்று
கேட்டனர். அவர், "
நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்;
யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே
போதும் என்றிருங்கள்"
என்றார்.
அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள்
எண்ணிக்கொண்டிருந்தார்கள். யோவான் அவர்கள் அனைவரையும்
பார்த்து, "
நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக்
கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார்.
அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர்
தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக்
கொடுப்பார். அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும்
பிரித்தெடுப்பார். கோதுமையைத் தம் களஞ்சியத்தில் சேர்ப்பார்;
பதரையோ அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்"
என்றார்.
மேலும் பல அறிவுரைகள் கூறி மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
===============================================================
மறையுரைச் சிந்தனை -
1
================================================================
திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு
I செப்பனியா 3: 14-17
II பிலிப்பியர் 4: 4-7
III லூக்கா 3: 10-18
"
மகிழுங்கள்"
நிகழ்வு
அது ஓர் இருப்பூர்தி நிலையம் (Railway Station). ஒருநாள் காலை
வேளையில், வேலை நிமித்தமாகப் பக்கத்து ஊருக்குச் செல்ல, பயணச்சீட்டு
வாங்க அங்கு வந்த பெண்மணியிடம், அங்கிருந்த பயணச்சீட்டுகளைக்
கொடுத்துக்கொண்டிருந்த பெரியவர், "
அம்மா! நான் உங்களுக்கு நன்றி
சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன்"
என்றார்.
எதற்கு என்பதுபோல், பெண்மணி பெரியவரைப் பார்த்தபோது அவர்,
"
அம்மா! ஒவ்வொருநாளும் நீங்கள் இங்கே பயணச்சீட்டு வாங்க வரும்போது,
புன்னைகையோடு வருவதைப் பார்த்துவிட்டு, ஒருநாள் உங்களிடம்,
அது எப்படி உங்களால் எப்போதும் புன்னகையோடு இருக்க முடிகிறது?
என்று நான் கேட்டதற்கு, நீங்கள் உங்கள் கையில் இருந்த
திருவிவிலியத்தைச் சுட்டிக்காட்டு, "
என்னுடைய புன்னகைக்குக் காரணம்,
இந்த திருவிவிலியம்தான்! என்றீர்கள். இதன்பிறகு நான் ஒரு
திருவிவிலியத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கினேன். இப்போது, என்னால்
உங்களைப் போன்று மகிழ்ச்சியோடு புன்னகை பூக்க முடிகின்றது. அதனால்தான்
நான் உங்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன் என்று
கூறினேன்"
என்று முகத்தில் புன்னகை தவழக் கூறினார்.
ஆம், நாம் ஆண்டவருடைய வார்த்தையை வாசித்து, அவரோடு ஒன்றித்திருக்கும்போது,
மகிழ்ச்சியோடு அல்லது புன்னகையோடு இருக்க முடியும். அதைத்தான்
இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகின்றது. திருவருகைக்காலத்தின்
மூன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை,
"
மகிழுங்கள்"
என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம்
சிந்திப்போம்.
ஆண்டவரோடு ஒன்றித்திருக்கும்போது மகிழலாம்
இன்றைய நவீன உலகில், மனிதர்கள் மகிழ்ச்சியைப் பணம், பொருள், புகழ்
என எதிலெல்லாமோ தேடுகின்றார்கள். பணம் இருந்தால், பொருள் இருந்தால்,
புகழ் இருந்தால் மகிழ்ச்சியாக இருந்துவிடலாம் என்று
நினைத்துக்கொண்டு மனிதர்கள் அவற்றிக்குப் பின்னால்
செல்கின்றார்கள். உண்மை அதுவல்ல என்பதுதான் வரலாறு கற்பிக்கின்ற
பாடம். 1957 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில்,
அமெரிக்கர்களின் தனிமனித வருமானம் இரண்டு மடங்கானது; ஆனால், அந்தக்
காலக்கட்டத்தில்தான் தற்கொலை மிகுதியாக இருந்தது. இதன்மூலம் ஒருவரிடம்
இருக்கும் பணம், பொருள், புகழ் இன்ன பிறவற்றிற்கும், மகிழ்ச்சிக்கும்
எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பது தெளிவாகிறது. இயேசுகூட,
"
மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது"
(லூக் 12:15) என்று இதையேதான் சொல்கின்றார்.
இந்த இடத்தில் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த சிந்தனையாளரும், கடவுள்
மறுப்புக் கொள்கையைக் பின்பற்றி வந்தவருமான வால்டரைப் பற்றித்
தெரிந்துகொள்வது அவசியம். தன் வாழ்நாள் முழுவதும் கடவுள் இல்லை
என்று சொல்லி வந்த இந்த வால்டர், சாவதற்கு முன்பாகச் சொன்ன
வார்த்தைகள், "
நான் பிறவாமல் இருந்தால், நன்றாக இருந்திருக்கும்!"
என்பதாகும்.
அப்படியானால், ஒருவரிடம் உள்ள பணமோ, பொருளோ, புகழோ அல்லது ஆண்டவரை
விட்டுவிலகி இருப்பதோ மகிழ்ச்சியைத் தராது. மாறாக, ஆண்டவரோடு
ஒன்றித்திருப்பதே மகிழ்ச்சியைத் தரும். இதைத்தான் பவுல், இன்றைய
இரண்டாம் வாசகத்தில் "
ஆண்டவரோடு ஒன்றித்து என்றும் மகிழுங்கள்;
மீண்டும் கூறுகின்றேன், மகிழுங்கள்"
என்று கூறுகின்றார். ஆதலால்,
நாம் ஆண்டவரோடு ஒன்றித்திருந்தால் மட்டுமே மகிழ முடியும் என்ற
உண்மையை உணர்ந்தவர்களாய், அவரோடு ஒன்றித்திருக்க முயற்சி
செய்வோம்.
இருப்பதை இல்லாதவரோடு பகிரும்போது மகிழலாம்
வாழ்வில் மகிழ்ந்திருக்க வேண்டும் எனில், ஆண்டவரோடு ஒன்றித்திருக்க
வேண்டும் என்று பவுல் குறிப்பிடும் அதேவேளையில், நாம் எவ்வாறு
ஆண்டவரோடு ஒன்றித்து மகிழலாம் என்பதற்கான தெளிவினை இன்றைய நற்செய்தியில்
திருமுழுக்கு யோவான் தருகின்றார்.
யோர்தான் ஆற்றில் திருமுழுக்குக் கொடுத்துக்கொண்டிருந்த யோவானிடம்
பலதரப்பட்ட மக்கள் வந்தார்கள். அவ்வாறு வந்தவர்களில் முதலாவதாக
வந்தவர்கள், பொது மக்கள். இவர்களிடம் யோவான், இருப்பவர் இல்லாதவரோடு
பகிர்ந்து கொள்ளட்டும். அது உணவாக இருக்கலாம். உடையாக இருக்கலாம்
என்கிறார். அடுத்ததாக அவரிடம் வருகின்ற வரிதண்டுபவர்களிடம்,
அவர், "
உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு மிகுதியாக எதையும்
தண்டாதீர்கள்"
என்கிறார். இதன்மூலம் யோவான் அவர்களிடம், பணத்திற்கு
ஆசைப்படாதீர்கள் என்கிறார். இதை நாம் வேறு வார்த்தைகளில் சொல்ல
வேண்டும் என்றால், அழிந்து போகும் செல்வத்தில் அல்ல, அழியாத
செல்வமான ஆண்டவரில் பற்று வைத்து வாழுங்கள் என்று சொல்லலாம்.
மூன்றாவதாக யோவானிடம் படைவீரர்கள் வந்தார்கள். அவர்களிடம் அவர்,
"
யார்மீதும் பொய்க்குற்றம் சுமத்தாதீர்கள்"
என்கிறார். இன்றைக்குப்
பலர் அடுத்தவர்மீது பொய்க்குற்றம் சுமத்தி, அவர்களிடமிருந்து
இருப்பதைக் கவர்ந்திட வேண்டும் என்றே நினைக்கின்றார்கள். இத்தகைய
சூழ்நிலையில் யார்மீதும் பொய்க்குற்றம் சுமத்தாதீர்கள் என்று
யோவான் படைவீர்ர்களிடம் சொல்லும் வார்த்தைகள், அன்று மட்டுமல்ல
இன்றும் பொருந்தும்.
இவ்வாறு யோவான், இருப்பவர் இல்லாதவரோடு பகிரவேண்டும்; பேராசை
வேண்டாம்; பொய்க்குற்றம் சுமத்தவேண்டாம் என்று மக்களுக்குக் கற்பித்தார்
எனில், அவர் தானாக எதையும் கற்பித்து விடவில்லை. தாம்
பெற்றுக்கொண்ட கடவுளின் வாக்கையே கற்பித்தார் (லூக் 3:3). ஆகையால்,
யோவான் கற்பித்திருக்கும் பகிர்வு, ஆண்டவர்மீது பற்று, அடுத்திருப்பவரோடு
நல்லறவு போன்ற படிப்பினைகளின்படி நாம் வாழ்கின்றபோது, ஆண்டவரோடு
ஒன்றித்து மகிழலாம் என்று உறுதி.
ஆண்டவர் நம் குற்றங்களை மன்னித்து, நம் நடுவில் இருப்பதால் மகிழலாம்
ஆண்டவரின் வார்த்தைகளின்படி நடந்து, அவரோடு ஒன்றித்திருந்தால்
மகிழலாம் என்று இன்றைய நற்செய்தி மற்றும் இரண்டாவது வாசகங்கள்
கூறும்போது, இன்றைய முதல் வாசகம், ஆண்டவர் நம் நடுவில் இருக்கின்றார்.
அதனால் மகிழுங்கள் என்கிறது.
கடவுளுடைய கட்டளைகளைக் கைவிட்டு, வேற்று தெய்வங்களை வழிபட்டதால்,
பாபிலோனியர்களால் நாடு கடத்தப்பட்ட யூதா நாட்டினர், எல்லாமே
முடிந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள். அப்போதுதான்
கடவுள் இறைவாக்கினர் செப்பனியா வழியாக, "
ஆண்டவர் உன் தண்டனைத்
தீர்ப்பைத் தள்ளிவிட்டார்; உன் பகைவர்களை அப்புறப்படுத்திவிட்டார்;
இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; மகிழ்ச்சியால்
ஆர்ப்பரி; ஆரவாரம் செய்; அகமகிழ்ந்து அக்களி"
என்று நம்பிக்கைச்
செய்தியைத் தருகின்றார். ஆம், கடவுள் நம் குற்றங்களை எல்லாம்
மன்னித்து, நம் நடுவில் இருக்கின்றார் எனில், நாம் மகிழத்தானே
வேண்டும்!
எனவே, நாம் நடுவில் இருக்கின்ற ஆண்டவரின் கட்டளையைக் கடைப்பிடித்து,
அவரோடு ஒன்றித்து, அவர் தருகின்ற மகிழ்ச்சியைப் பெற்று
வாழ்வோம்.
சிந்தனை
மகிழ்ச்சியாக இருக்கும் மனிதர் நம் இல்லத்திற்குள் வருவது என்பது,
இருள் மண்டிக் கிடக்கும் நம் இல்லத்திற்குள் விளக்கோடு வருவதற்கு
இணையானது என்பார் ஆர். எல்.ஸ்டீவன் என்ற அறிஞர். எனவே, நாம்
ஆண்டவரோடு ஒன்றித்து மகிழ்வோம். அந்த மகிழ்ச்சியை மற்றவருக்கு
வழங்கி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
===================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
===================================================================
=================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================
|
|