Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                              Year B  
                                                        பொதுக்காலம் 30ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
பார்வையற்றோருக்கும் கால் ஊனமுற்றோருக்கும் ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவேன்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 31: 7-9

ஆண்டவர் கூறுகிறார்: யாக்கோபை முன்னிட்டு மகிழ்ந்து பாடுங்கள்; மக்களினத் தலைவனைக் குறித்து ஆர்ப்பரியுங்கள்; முழக்கம் செய்யுங்கள், புகழ்பாடுங்கள்; `ஆண்டவர் இஸ்ரயேலில் எஞ்சியோராகிய தம் மக்களை மீட்டருளினார்!' என்று பறைசாற்றுங்கள்.

இதோ! வடக்கு நாட்டிலிருந்து அவர்களை நான் அழைத்து வருவேன்; மண்ணுலகின் கடை எல்லைகளினின்று அவர்களைக் கூட்டிச் சேர்ப்பேன். அவர்களுள் பார்வையற்றோரும் கால் ஊனமுற்றோரும் கருவுற்றோரும் பேறுகாலப் பெண்டிரும் அடங்குவர்; பெரும் கூட்டமாய் அவர்கள் இங்குத் திரும்பி வருவர்.

அழுகையோடு அவர்கள் திரும்பி வருவார்கள்; ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவேன்; நீரோடைகள் ஓரமாக அவர்களை நான் நடத்திச் செல்வேன்; இடறிவிழாதவாறு சீரான வழியில் அவர்கள் நடக்கச் செய்வேன். ஏனெனில் நான் இஸ்ரயேலின் தந்தை, எப்ராயிமோ என் தலைப்பிள்ளை.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா 126: 1-2ab. 2cd-3. 4-5. 6 (பல்லவி: 3a) Mp3
=================================================================================
 பல்லவி: ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்.

1 சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம். 2ab அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது. பல்லவி

2cd " ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்" என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். 3 ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். பல்லவி

4 ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவது போல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும். 5 கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். பல்லவி

6 விதை எடுத்துச் செல்லும்போது - செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது - வரும்போது - அக்களிப்போடு வருவார்கள். பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6

சகோதரர் சகோதரிகளே, தலைமைக் குரு ஒவ்வொருவரும் மனிதரிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, பாவங்களுக்குக் கழுவாயாகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துவதற்காக மக்கள் சார்பாகக் கடவுள் முன் பணிபுரிய ஏற்படுத்தப்படுகிறார்.

அவர் தாமே வலுவின்மைக்கு ஆளாகியிருப்பதால், அறியாமையில் இருப்போருக்கும் நெறிதவறி நடப்போருக்கும் பரிவு காட்டக்கூடியவராய் இருக்கிறார்.

அவர் மக்களுடைய பாவத்திற்குக் கழுவாயாகப் பலி செலுத்துவது போல, தம் வலுவின்மையின் பொருட்டுத் தமக்காகவும் பலி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்.

மேலும், யாரும் இம்மதிப்புக்குரிய பணியைத் தாமே தேர்ந்துகொள்வதில்லை. ஆரோனுக்கு வந்ததுபோன்று கடவுளிடமிருந்தே அழைப்பு வரவேண்டும்.

அவ்வாறே கிறிஸ்துவும் தலைமைக் குருவாகத் தம்மையே உயர்த்திக் கொள்ளவில்லை. " நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்" என்று அவரிடம் கூறியவரே அந்த மேன்மையை அவருக்கு அளித்தார்.

இவ்வாறே மற்றோரிடத்தில், " மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே" என்றும் கூறப்பட்டுள்ளது.


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
2 திமொ 1: 10b

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ரபூனி, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 46-52

அக்காலத்தில் இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவை விட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். நாசரேத்து இயேசுதாம் போகிறார் என்று அவர் கேள்விப்பட்டு, " இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று கத்தத் தொடங்கினார்.

பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்; ஆனால் அவர், " தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று இன்னும் உரக்கக் கத்தினார்.

இயேசு நின்று, " அவரைக் கூப்பிடுங்கள்" என்று கூறினார்.

அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, " துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்" என்றார்கள்.

அவரும் தம் மேலுடையை எறிந்துவிட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார்.

இயேசு அவரைப் பார்த்து, " உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?" என்று கேட்டார்.

பார்வையற்றவர் அவரிடம், " ரபூனி, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்" என்றார்.

இயேசு அவரிடம், " நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று" என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
விடாமுயற்சியுடன் கூடிய நம்பிக்கை!

அன்றைக்கு அந்த மருத்துவமனையில் இருந்த பிரசவ வார்டுப் பகுதி மிகவும் பரபரப்பாக இருந்தது. ஏனென்றால், அங்கு வந்த ஒரு நிறைமாக கர்ப்பிணி மிகுந்த வேதனையோடு அலறிக்கொண்டிருந்தாள். அவளுக்குப் பிரசவம் பார்த்த மருத்துவர்கூட மிகுந்த பதற்றத்தோடுதான் பிரசவம் பார்த்தார்.

ஒருசில நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு அந்தப் பெண்மணி ஓர் அழகான பெண்குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவளுக்குப் பிறந்த குழந்தையை கையில் ஏந்திய மருத்துவர் பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளானார். அந்த அதிர்ச்சியை எப்படி குழந்தையின் தாயிடத்தில் சொல்வது என்ற ஒருவிதமான பதற்றத்தோடு அவர் அந்தப் பெண்மணியிடம் பேசத் தொடங்கினார். "அம்மா! இப்போது நான் உங்களிடத்தில் சொல்லக்கூடிய செய்தியைக் கேட்டு நீங்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகவேண்டாம்" என்றார். "அதிர்ச்சி தரக்கூடிய அளவுக்கு அப்படி என்ன செய்தியைச் சொல்லப்போகிறீர்கள்?, ஒருவேளை என்னுடைய குழந்தை பிறக்கும்போதே இறந்துவிட்டதா?" என்று கேட்டாள். " அப்படியில்லை உங்களுடைய குழந்தை பிறந்தபோதே பார்க்கும் திறனில்லாமலும், கேட்கும் திறனில்லாமலும் பிறந்திருக்கின்றது" என்றார். " அப்படியா! என்னுடைய குழந்தைக்கு கண்தெரியாதா?, காது கேட்காதா?  ஐயோ நான் என்ன செய்வேன்" என்று அவள் அலறினாள்.

மருத்துவமனையிலிருந்து திரும்பிய அந்தப் பெண்ணானவள் உடல் குறைபாடுகளோடு பிறந்த தன்னுடைய குழந்தையோடு மிகுந்த அன்போடு வளர்த்தெடுத்தாள். அந்தக் குழந்தையும் வளர்ந்து கைகளால் தொட்டுத் தொட்டு எல்லாவற்றையும் கற்றுகொண்டாள். பிற்காலத்தில் அவள் எல்லாராலும் வியந்து பார்க்கக்கூடிய அளவுக்கு வளர்ந்தாள். நிறையப் புத்தங்களை எழுதினாள்; பல்வேறு இடங்களுக்குச் சென்று பலருக்கும் ஊக்கமும் உத்வேகமும் தரக்கூடிய சொற்பொழிவுகளை ஆற்றி வந்தாள்.

இப்படி பிறக்கும்போதே பார்வை இல்லாது, காது கேளாது பிறந்து, பிற்காலத்தில் எல்லாரும் வியந்து பார்க்கக்கூடிய பெண்மணியாய் விளங்கியவள் வேறு யாருமல்ல ஹெலன் ஹெல்லரே ஆவார். அவர்தான் பார்க்கும் திறனற்றும் கேட்கும் திறனற்றும் பிறந்தார். அவர்தான் பிற்காலத்தில் எல்லாரும் வியந்து பார்க்கக்கூடிய அளவுக்கு சிறப்பு வாய்ந்த பெண்மணியாய் விளங்கினார். அவர் இவ்வாறு விளங்கியதற்குக் காரணம் அவருடைய நம்பிக்கையும் அதோடு கூடிய விடாமுயற்சியும்தான் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆம், நம்பிக்கைத்தான் உடல் குறைபாடுகளோடு பிறந்த ஹெலன் ஹெல்லரை உலகம் வியந்து பார்க்கக்கூடிய பெண்மணியாய் மாற்றியது.

பொதுக்காலத்தின் முப்பதாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் நம்பிக்கையுடன் கூடிய விடாமுயற்சி என்னும் சிந்தனையைத் தருகின்றன. நாம் அதனைக் குறித்து சற்று ஆழமாக சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களோடு எரிக்கோவிலிருந்து எருசலேம் நகர் நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றார். அவரைச் சூழ்ந்து மக்கள் எல்லாம் போய்க்கொண்டிருக்கின்றார்கள். இதற்கிடையில் பாதையோரமாய் அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்த பர்த்திமேயு என்னும் பார்வையற்றவர் இயேசு அவ்வழியாய் போவதை அறிந்து, " தாவீதின் மகனே எனக்கு இரங்கும்" என்று கத்தத் தொடங்குகின்றார். இயேசுவைச் சூழ்ந்து சென்றுகொண்டிருந்த மக்களோ, அவரைக் கத்தவேண்டாம் என்று அதட்டுக்கின்றார்கள். அப்படியிருந்தும் அவர், " தாவீதின் மகனே எனக்கும் இரங்கும்" என்று இன்னும் உரக்கக் கத்துகின்றார். இதனால் அவருடைய கூக்குரல் இயேசுவின் செவிகளை எட்டுகின்றது. அவர் அந்த பார்வையற்ற பிச்சைக்காரனை அழைத்து அவருக்கு நலம் தருகின்றார்.

இயேசு பார்வையற்ற பர்த்திமேயுவுக்கு பார்வையளித்த நிகழ்வு நமக்கு ஒருசில உண்மைகளை மிகத் தெளிவாக விளக்குகின்றது. அவை என்னென்னவென்று இப்போது பார்ப்போம்.

முதலாவதாக இந்த நிகழ்வு உணர்த்தும் செய்தி பார்வையற்றவரின் உறுதியான நம்பிக்கை ஆகும். பார்வையற்ற பர்த்திமேயுவின் நம்பிக்கை எவ்வாறு இருந்தது என்று பார்க்கும்போது, அவர் இயேசுவை சாதாரண ஒரு போதகராக மட்டும் பார்க்கவில்லை, மாறாக, அவர் இயேசுவை தாவீதின் மகனாக, மெசியாகப் பார்க்கின்றார். அது மட்டுமல்லாமல், இயேசு தனக்கு நிச்சயம் குணம் தருவார் என்ற நம்பிக்கையோடு கத்துகின்றார். இயேசு அவரை அழைக்கின்றபோது, இனிமேலும் தான் பாதையோரம் அமர்ந்து பிச்சை எடுக்கின்ற நிலைவராது என்பதால் தன்னுடைய மேலுடையை தூக்கி எறிந்துவிட்டு, நம்பிக்கையோடு ஆண்டவரிடம் செல்கின்றார். ஆண்டவரும் அவருடைய நம்பிக்கையைக் கண்டு, அவருக்குப் பார்வையளிக்கின்றார். ஆகவே, நம்பிக்கைதான் பார்வையற்ற பர்த்திமேயுவுக்கு நலம் தந்தது என்று நாம் உறுதியாகச் சொல்லலாம்.

பார்வையற்ற பர்த்திமேயுவை ஆண்டவர் இயேசு குணப்படுத்தி நிகழ்வு நமக்கு உணர்த்தும் இரண்டாவது செய்தி அவரிடமிருந்த விடாமுயற்சி ஆகும். தொடக்கத்தில் பர்த்திமேயு, " தாவீதின் மகனே எனக்கு இரங்கும்" என்று கத்துகின்றபோது இயேசுவைச் சூழ்ந்து சென்றுகொண்டிருந்த மக்கள்கூட்டமோ அவரைக் கத்தவேண்டும் என்று அதட்டுகின்றனர். ஆனால் அவரோ விடாமல், இன்னும் சத்தமாகக் கத்துகின்றார். இதனால் அவருடைய குரல் இயேசுவின் காதுகளை அடைகின்றது, அதனால் அவருக்கு நலம் கிடைக்கின்றது. பார்வையற்ற பர்த்திமேயுவுக்கு இயேசுவின்மீது ஆழமான நம்பிக்கை இருந்தது என்று மேலே பார்த்தோம். நம்பிக்கையோடு விடாமுயற்சியும் இருந்தது. அதனால்தான் அவர் நினைத்த காரியம் நிறைவேறியது.

இயேசுவைப் பின்பற்றி நடக்கும் நமக்கு நம்பிக்கை அதோடு கூடிய விடாமுயற்சி இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் இறைவனிடம் வேண்டுகின்றபோது ஒருமுறை ஜெபித்துவிட்டு, இறைவன் என்னுடைய வேண்டுதலுக்கு செவிசாய்க்கவில்லை என்று அவரிடம் குறைபட்டுக்கொள்கின்றோம். ஆனால், உண்மை என்னவேனில் விடாமுயற்சியோடு ஜெபிப்போருக்கும் கேட்போருக்கும்தான் இறைவன் தன்னுடைய ஆசிரை அதிகமாக வழங்குகின்றார். லூக்கா நற்செய்தி 18:7 ல் இயேசு கூறுவார், " தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பழகும் தம்மை நோக்கி கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்று. ஆகையால், நாம் நம்பிக்கையோடு ஜெபிக்கவேண்டும் அதோடுகூட விடாமுயற்சியோடும் ஜெபிக்கவேண்டும்.

நிறைவாக நற்செய்தி வாசகம் நமக்கு உணர்த்துகின்ற செய்தி இயேசுவிடமிருந்து நன்மைகளை, நலன்களைப் பெற்றுக்கொள்கின்ற நாம், அவரை இறுதிவரை பின்பற்றிச் செல்லக்கூடியவர்களாக இருக்கவேண்டும் என்பதாகும். பார்வையற்ற பர்த்திமேயு இயேசுவிடமிருந்து குணம்பெற்றதும் நினைத்தது நடந்துவிட்டது பிறகு எதற்கு இயேசுவைப் பின்தொடர்ந்து செல்லவேண்டும் என்று இருக்கவில்லை, மாறாக அவர் இயேசுவைப் பின்தொடர்ந்து செல்கின்றார். அவர் இயேசுவைப் பின்தொடர்ந்து சென்றதால், அதனால் வந்த இழப்புகளையும் அவர் சந்தித்திருக்கவேண்டும். இவ்வாறு அவர் ஓர் உண்மையான சீடனுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குகின்றார். இயேசுவிடமிருந்து அருளையும் ஆசிரையும் அதிகமாய் பெற்றுக்கொள்கின்ற நாம் அவருக்கு எப்போதும் நன்றியுள்ளவர்களாக, அவரை இறுதி வரைக்கும் பின்பற்றி நடப்பவர்களாக இருக்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இதுவரை பார்வையற்ற பர்த்திமேயு எப்படி ஆழமான நம்பிக்கையும் விடாமுயற்சியையும் கூடவே சீடத்துவ பண்பினையும் கொண்டிருந்தார் என்று சிந்தித்த நாம், இயேசு எவ்வாறு பார்வையற்றோருக்கு இரங்குகின்ற பரிவு என்னும் குணத்தினைக் கொண்டிருந்தார் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசு எரிக்கோவிலிருந்து எருசலேம் நோக்கிப் போக்கும்போது, வழியில் தன்னுடைய சீடர்களுக்கும் தன்னைப் பின்பற்றி வந்தவர்களுக்கும் பலவற்றைக் குறித்து போதித்துக் கொண்டே சென்றிருக்கவேண்டும். ஏனென்றால், வழக்கமாக யூத இரபிக்கள் தன்னுடைய சீடர்களுக்கு பயணத்தில்போதுதான் பலவற்றைக் குறித்து கற்பிப்பார்கள். அப்படியானால் இயேசுவும் தன்னைப் பின்தொடர்ந்து வந்தவர்களுக்கு பயணத்தின்போது நிறைய போதித்துக்கொண்டேதான் சென்றிருக்கவேண்டும். இத்தகைய சூழலில்தான் பார்வையற்ற பர்த்திமேயு தன்னை குணப்படுத்துமாறு கத்துகின்றார். இயேசு அவர் கத்தியைக் கண்டு, தன் போதித்துக்கொண்டிருப்பதற்கு இடையூறாக இருக்கின்றது என்று நினைக்கவில்லை, மாறாக அவர் அவரை அழைத்து அவருடைய தேவையை நிவர்த்தி செய்கின்றார், அதாவது அவருக்குப் பார்வையளிக்கின்றார். இவ்வாறு அவர் பார்வையற்ற பர்த்திமேயுவுக்கு நலமளித்து தான் மக்கள்மீது பரிவுகொள்ளும் இறைமைந்தன் என்பதை நிரூபித்துக்காட்டுகின்றார்.

இயேசு செய்த இந்த புதுமை எரேமியாப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் வருகின்ற, " அழுகையோடு வருகின்ற பார்வையற்றோர், காலூனமுற்றோர், கருவுற்றோர், பேறுகாலப் பெண்டீர் போன்றோரை நான் ஆறுதலளித்துக் கூட்டி வருவேன்" என்ற வார்த்தைகளையும், " அவர் பரிவு காட்டுகின்றவராக இருக்கின்றார்" என்று இரண்டாம் வாசகத்தில் வருகின்ற வார்த்தைகளையும் நிறைவு செய்வதாய் இருக்கின்றது.

இயேசுவின் வழியில் நமக்கு இயேசுவிடம் இருந்த பரிவும், எளியவருக்கு இரங்குகின்ற குணமும், துன்புருவோரோடு உடன் துன்புறும் பண்பும் இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் உடல் குறைபாடோடு இருக்கின்றவர்களை ஏளனமாக, இழிவாகப் பார்க்கின்றக் கூடிய நிலைதான் இருக்கின்றது. இத்தகைய சூழலில் நாம் இயேசு எப்படி உடல் ஊனமுற்றவர்கள் மீது மனமிரங்கி, அவர்களுடைய துன்பத்தைப் போக்கினாரோ, அதுபோன்று நாமும் நம்மோடு வாழக்கூடிய ஏழை எளியவர், ஊனமுற்றோர் இவர்கள்மீது மனமிரங்கி அவர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யவேண்டும். அப்போதுதான் நாம் இயேசுவின் உண்மையான சீடர்களாக இருக்கமுடியும்.

ஆகவே, நாம் பார்வையற்ற பர்த்திமேயுவைப் போன்று இயேசுவிடம் ஆழமான நம்பிக்கை கொண்டுவாழ்வோம். அதே நேரத்தில் இயேசுவிடமிருந்த பரிவு, இரக்கத்தை நம்முடைய வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.



மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
நீங்கள் ஒளியாய் இருக்கிறீர்கள்

எபேசியர் 4:32-5:8
லூக்கா 13:10-17

'நீங்கள் ஒளியாய் இருக்கிறீர்கள்', என்று இன்றைய முதல் வாசகத்திலே நம்மை பார்த்து அறிவுறுத்துகிறார் பவுலடிகளார். ஒளியாய் இருப்பதென்றால் என்ன என்பதையும் தெளிவாய் உணர்த்துகிறார்... கிறிஸ்துவோ அதை நடைமுறையாய் வாழ்ந்து காட்டுகிறார்.

தனிப்பட்ட வாழ்வில் தூய்மை ஒருவரை இருளின் மத்தியிலே ஒளிரச்செய்கிறது. இன்று உலகம் தவறு செய்வதை குறித்து அஞ்சுவதை விட தவறு செய்து சிக்கிக்கொள்வதை குறித்தே அஞ்சுகிறது. வெறும் மற்றவர் பார்வைக்கும் உலகத்தின் புகழுக்கும் வாழப்படுவது தூய்மையானது!

மனித உறவுகளில் உண்மை ஒருவரை இறைச்சாயல் பெறச்செய்கிறது. தான் என்ற அகங்காரமோ, தனக்கு என்ற சுயநலமோ, தனது என்ற பயன்படுத்தும் மனநிலையோ இல்லாமல் வளரும் உறவுகளில் இறைவனே வாழ்கிறார். ஒருவரை கண்டவுடனேயே அவர்களது தேவை நமது கண்களுக்கு படவேண்டும் தவிர அவர்களது பலகீனம் அல்ல.

ஆன்மீகத்தில் ஊன்றிய அடையாளம் ஒருவரை இறைவனுக்குரியவர் ஆக்குகிறது. இறைவனின் உருவையும் சாயலையும் தாங்கியவர் என்ற உணர்வு மிகுந்தவராக இறைவனுக்கு உரியவற்றையே செய்யும் வாழ்க்கை முறை அடுத்தவரோடு ஒப்பிட்டு அல்ல இறைவனின் சித்தம் என்னை எதற்கு அழைக்கிறது என்ற தெளிவோடு நடக்கவே என்னை அழைக்கிறது.

சுருங்க கூறின், தனிப்பட்ட தூய்மை, உறவில் உண்மை, இறையுணர்வு என்னும் இவை என்னை இறைவனின் சாயலாகவே மாற்றுகிறது! நாம் அவரைப்போலவே மாற அழைக்கப்படுகிறோம், ஏனெனில் நாம் அவரது பிள்ளைகளாவோம். கடவுளை போல் மாற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை கிறிஸ்துவே வாழ்ந்து காட்டியுள்ளார். ஒளியான அவரது வழியில் நடப்போம், ஒளியாய் வாழ்வோம்!

(Rev. Father: Antony Christy SDB)



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 
ஆண்டின் பொதுக்காலம் 30ம் ஞாயிறு
(அக்டோபர் 24, 2021)

எரேமியா 31:79
 எபிரேயர் 5:16
 மாற்கு 10:4652

அடிமை நிலையை மாற்றிய ஆண்டவர்

'சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம்  ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவது போல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்!'

இன்றைய பதிலுரைப்பாடலில் (காண். திபா 126), ஆசிரியர் மேற்காணும் அழகான வரிகளைப் பாடுகின்றார். இஸ்ரயேலுக்கு நாம் இன்று செல்லும்போது நிறைய வறண்ட ஓடைகளைக் காணலாம். ஆனால், வற்றிய அந்த ஓடைகளுக்கு வெளியே, 'ஓடையைக் கடக்க வேண்டாம்' என்று எச்சரிக்கைப் பலகை வைத்திருப்பார்கள். 'தண்ணீர் இல்லாத ஓடையைக் கடந்தால் என்ன?' என்று நாம் கேட்கலாம். ஆனால், இஸ்ரயேலின் நில அமைப்பின்படி, எங்காவது ஓரிடத்தில் மழை பெய்தால், அனைத்து ஓடைகளும் உடனடியாகத் தண்ணீரால் நிரம்பி விடும். அல்லது வறண்ட ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். ஆக, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வறண்ட ஓடை வெள்ளம் ஓடும் நீரோடையாக மாறிவிடும். ஆகையால்தான், 'கடக்க வேண்டாம்' என்னும் எச்சரிக்கை. திருப்பாடல் ஆசிரியர் இந்த நிகழ்வை அப்படியே எடுத்து, 'ஆண்டவரே எங்கள் அடிமை நிலையை நீர் இவ்வளவு விரைவாக மாற்றியருளும்!' என்று பாடுகின்றார். பாடலின் முதற்பகுதியில் தங்கள் அடிமைநிலை மாற்றப்பட்டதாக உணர்கின்றார்.

அடிமை நிலை என்றால் என்ன?

'பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை. அடிமைக்கு வீட்டில் நிலையானதொரு வீடில்லை' என்கிறார் இயேசு. ஆக, 'அடிமை' என்பது 'தற்காலிகம்.' அல்லது 'அடிமை' நிரந்தரமானவர் அல்ல. அல்லது அடிமைக்கு நிரந்தரத்தின்மேல் உரிமை இல்லை. அடிமை மனப்பான்மையில் ஒருவர் தன் தான்மையையும் தன்மதிப்பையும் இழந்துவிடுகிறார். ஓர் அடிமை தனக்கென எதையும் உறுதிசெய்ய முடியாது.

இஸ்ரயேல் மக்கள் அசீரிய அடிமைத்தனத்தின்போதும், பாபிலோனிய அடிமைத்தனத்தின்போதும் மிகவும் இழிவான நிலைக்கு உட்படுத்தப்படுகின்றனர். தங்கள் நாடு, மண், அரசு, வீடு, ஆலயம் என அனைத்தையும் இழந்த பாபிலோனியாவில் அவர்கள் அடிமைகளாக இருந்த நிலையை, ஆண்டவராகிய கடவுள் ஒரே நாளில் மாற்றினார் என்று புகழ் பாடுகின்றனர்.

இந்த நிகழ்வு எப்படி நடந்தது?

'நாங்கள் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம்' என்கிறார் ஆசிரியர். அதாவது, 'எல்லாம் கனவுபோல இருந்தது' என்கிறார் ஆசிரியர்.

கனவுபோல இருப்பது என்றால் என்ன?

கனவு போல நடக்கும் ஒன்றுக்கு மூன்று பண்புகள் உண்டு. (அ) கனவில் நடக்கின்ற எதுவும் எதிர்பாராமல் நடக்கின்றது. 'இன்று எனக்கு இது கனவில் வரும்!' என்று நாம் எதையும் நினைத்துத் தூங்கச் செல்வது கிடையாது. கனவு என்பது எதிர்பாராமல் நிகழக் கூடியது. ஆக, ஆண்டவர் தங்களுடைய அடிமை நிலையை மாற்றியது எதிர்பாராத நேரத்தில் நடந்தது என்கிறார்கள் இஸ்ரயேல் மக்கள். (ஆ) கனவில் நடக்கின்ற எதுவும் விரைவாக நடக்கும். நாம் ஒரே கனவில் பிறந்து, வளர்ந்து, உயர்ந்துவிட முடியும். கனவில் ஒரே நொடியில் பெரிய கட்டடத்தை நம்மால் எழுப்பிவிட முடியும். இப்படியாக, இஸ்ரயேல் மக்களின் விடுதலை விரைவாக நடக்கின்றது. (இ) கனவில் நடக்கும் எதற்கும் நம் முயற்சி தேவையில்லை. அதாவது, நீட் தேர்வுக்குப் படிக்காமலேயே கனவில் நான் நீட் தேர்வில் வெற்றிபெற முடியும். கனவில் நடக்கும் எந்த நிகழ்வுக்கும் நம் முயற்சி தேவையில்லை. ஆக, மனிதர்களின் முயற்சி இல்லாமலேயே அனைத்தும் நடந்தேறியதாக இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் அளப்பரிய செயலைப் புகழ்ந்து பாடுகின்றனர்.

இன்றைய பதிலுரைப்பாடலில் நாம் காணும் இந்த உருவகங்கள் இன்றைய வாசகங்களின் கருத்துகளை மிக அழகாகச் சுருங்கச் சொல்கின்றன.

இன்றைய முதல் வாசகம் (காண். எரே 31:7-9), எரேமியா நூலின், 'ஆறுதலின் புத்தகம்' என்ற பகுதியிலிருந்து (எரே 30-31) எடுக்கப்பட்டுள்ளது. யூதாவின் அழிவைப் பற்றி இறைவாக்குரைக்கின்ற எரேமியா இப்பகுதியில், யூதாவின் மீட்பு குறித்து இறைவாக்குரைக்கின்றார். 'இஸ்ரயேலில் எஞ்சியோராகிய தம் மக்களை ஆண்டவர் மீட்டருளினார்' என்கிறார் எரேமியா. 'எஞ்சியோர்' என்னும் பதம், முதலில், 'நாடுகடத்தப்பட்டு உயிருடன் இருக்கும் அடுத்த தலைமுறையினரையும்,' 'ஒடுக்கப்பட்டோர், ஏழைகள், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், பெண்கள், அநாதைகள், குழந்தைகள்' ஆகியோரையும் குறிப்பிடுகின்றது. ஆண்டவராகிய கடவுள் அனைவரையும் ஒன்று சேர்க்கின்றார். அனைவரையும் ஒன்று சேர்த்தல் என்பது, 'யூதா' மற்றும் 'எப்ராயிம்' என்னும் இரு பெயர்கள் வழியாகக் குறிக்கப்படுகின்றது.

'அழுகையோடு அவர்கள் திரும்பி வருவார்கள். ஆறுதல் அளித்து அவர்களை நான் அழைத்து வருவேன்' என்கிறார் ஆண்டவர். 'அழுகை' என்பது அவர்களுடைய மனமாற்றத்தைக் குறிக்கின்றது. தங்கள் முன்னோர்கள் தங்களுடைய சிலைவழிபாட்டால் அடிமை நிலைக்கு உட்படுத்தப்பட்டதை எண்ணி இவர்கள் அழுது தங்கள் மனத்தை இறைவன்பக்கம் திருப்புகின்றனர். இறைவனும் அவர்களுக்கு ஆறுதல் தருகின்றார்.

ஆக, அடிமைத்தனத்தில் எஞ்சியிருத்த மக்களின் நிலையை விடுதலையின் நிலைக்கு மாற்றுகின்றார் ஆண்டவராகிய கடவுள்.

இரண்டாம் வாசகம் (காண். எபி 5:1-6) இரு பகுதிகளாக அமைந்துள்ளது. முதற்பகுதியில், அருள்பணியாளராக ஒருவர் பணிசெய்வதற்குத் தேவையான பண்புகள் வரையறுக்கப்படுகின்றன. இரண்டாம் பகுதியில், இயேசுவின் குருத்துவத்தின் பண்புகள் முன்வைக்கப்படுகின்றன. இஸ்ரயேல் மக்களின் குருக்கள் லேவி குலத்தின் உறுப்பினர்களாக இருந்தனர். அல்லது லேவி குலத்தில் பிறத்தல் என்பது அவர்களை, 'குருக்கள்' நிலைக்கு உயர்த்தியது. தலைமைக்குரு என்பவர் லேவி குலத்தில் பிறந்தவராக இருப்பதோடு, அவர் ஆரோனின் குடும்பத்தில் பிறந்த அவருடைய வழிமரபினராக இருக்க வேண்டும். அவர் மனிதர்களின் வழிமரபினராக இருப்பதால் அவரும் பாவத்திற்கு உட்பட்டவராக இருக்கிறார். ஆக, அவர் தனக்கென முதலில் பலி செலுத்தி, பின்னர், மற்றவர்களுக்காக பலி செலுத்த வேண்டும்.

இயேசு லேவி குலத்தில் பிறந்தவர் அல்லர். அவர் யூதா குலத்தில் பிறந்தவர் அல்ல. ஆக, அவர் ஆரோனின் வழிமரபினரும் அல்லர். இப்படி இருக்க, அவரை நாம் எப்படி தலைமைக்குரு என அழைக்கலாம்? எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் இரு நிலைகளில் இயேசுவை, 'தலைமைக்குரு' என முன்வைக்கின்றார். ஒன்று, திபா 2:7இன் படி, கடவுளின் மகனாக இருக்கிறார். ஏனெனில், 'நீர் என் மைந்தர். இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்' என்று கடவுள் அவரிடம் சொல்கின்றார். ஆக, கடவுளின் மகன் என்ற முறையில் இயேசு இறைவனின் திருமுன் பணியாற்றும் உரிமையையும், இறைவனின் திருத்தூயகத்திற்குள் நுழையும் உரிமையையும் பெறுகின்றார். இரண்டு, திபா 110:4இன் படி, இயேசுவின் அருள்பணி நிலை இறைவனின் ஏற்படுத்துதலால் வருகிறது. 'மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே!' என்று ஆண்டவராகிய கடவுள் அவரிடம் சொல்கின்றார். ஆபிரகாமைச் சந்திக்க வருகின்ற மெல்கிசதேக்கு எந்தவொரு தொடக்கமும் முடிவும் இல்லாமல், எந்தவொரு மனித வழிமரபும் இல்லாமல் வருகின்றார். இயேசுவும் தொடக்கமும் முடிவும் இல்லாத கடவுளாகவும், எந்தவொரு மனித வழிமரபும் இல்லாமலும் வருவதால், மெல்கிசதேக்கின் முறைப்படி அவர் நிலையான குருவாக இருக்கின்றார்.

ஆக, நம் வலுவின்மையில் பங்குபெறும் தலைமைக்குரு இயேசு நமக்காக ஒரே பலி செலுத்தி நம் அடிமை நிலையை மாற்றினார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 10:46-52), திமேயுவின் மகன் பர்த்திமேயுவுக்குப் பார்வை தருகின்றார் இயேசு. இது ஒரு வல்ல செயல் போல இருந்தாலும், இதை ஓர் உருவகம் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஏனெனில், இயேசுவுக்கு அருகில் இருந்தவர்கள், இயேசுவை நேரில் கண்டவர்கள், அவரிடம் நம்பிக்கை கொள்ளவில்லை. ஆனால், பார்வையற்ற பர்த்திமேயு, 'இயேசுவே, தாவீதின் மகனே!' என நம்பிக்கை அறிக்கை செய்கின்றார். 'நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்' என்னும் இவரின் வார்த்தைகள், 'இவர் ஏற்கெனவே பார்வை பெற்றிருந்தார்' என்றும், 'இவர் இரண்டாவது பெற்றது நம்பிக்கை பார்வை' என்றும் பொருள்கொள்ளப்படுகின்றன.

மாற்கு கதையாடல்களை மிகவும் நுணுக்கமாகப் பதிவு செய்யக்கூடியவர். இந்த நிகழ்வை அவர் பதிவு செய்வதிலும் அது வெளிப்படுகின்றது. இயேசுவும் சீடர்களும் எரிகோவுக்கு வந்துவிட்டு மீண்டும் வெளியேறுகின்றனர். 'திரளான மக்கள் கூட்டம்' என்பது இயேசுவைப் பின்பற்றியவர்களையோ, அல்லது இயேசுவோடு உடன்பயணித்தவர்களையும் குறிக்கலாம். வழியோரம் அமர்ந்து பிச்சையெடுக்கின்ற பர்த்திமேயு, நாசரேத்து இயேசுதாம் போகிறார் எனக் கேள்விப்பட்டு, 'இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்!' எனக் கூக்குரலிடுகின்றார். இயேசுவே தனக்கு நலம் தர இயலும் என்றும், இந்த வாய்ப்பைத் தவற விட்டால் இனி தனக்கு வாய்ப்பே கிடைக்காது என்றும் அறிந்தவராகக் குரல் எழுப்புகின்றார் பர்த்திமேயு. மக்கள் கூட்டம் அவரை அதட்டுகின்றது. ஆனால், அதே மக்கள் கூட்டம், 'துணிவுடன் எழுந்து வாரும். இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்' என்று தன் இயல்பை மாற்றிக்கொள்கின்றது. அவர் பார்வை பெறுவதற்குத் தடையாக இருந்த மக்கள் கூட்டம், அவர் பார்வை பெறுவதற்கு உதவியாக மாறுகின்றது.

அவர் தன் 'மேலுடையை எறிந்துவிட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வருகின்றார்.' இங்கே மேலுடை என்பதை அவர் அணிந்திருந்த ஆடை எனப் புரிந்துகொண்டால் அவர் நிர்வாணமாக இயேசுவிடம் வந்திருக்க வேண்டும். மேலுடை என்பது தனக்கு முன்பாக அவர் விரித்து வைத்து பிச்சை கேட்கப் பயன்படுத்திய ஆடை என்று நினைத்தால், தன் பழைய வாழ்க்கையையும், பாதுகாப்பு வளையத்தையும் அவர் விட்டுச் சென்றார் என்று புரிந்துகொள்ளலாம். 'உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என நீர் விரும்புகிறீர்?' என்னும் இயேசுவின் கேள்விக்கு உடனடியாக, 'என் போதகரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்' எனச் சொல்கிறார் அவர். தன் விருப்பம் என்ன என்பதை மிகத் தெளிவாக அறிந்திருந்தார் அவர். 'நீர் போகலாம். உம் நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று' எனச் சொல்கின்றார் இயேசு. அவரும் பார்வை பெற்றவராக இயேசுவைப் பின்தொடர்கின்றார்.

ஆக, பர்த்திமேயுவின் பார்வையற்ற நிலை என்னும் அடிமை நிலையிலிருந்து அவரை விடுவிக்கின்றார் இயேசு. இது மூன்று நிலைகளில் நடந்தேறுகின்றது: (அ) இயேசுவைப் பற்றிய நம்பிக்கை அறிக்கை செய்கின்றார், (ஆ) மக்கள் கூட்டத்தின் அதட்டலிலும் தன் நம்பிக்கையை அவர் இழக்கவில்லை, (இ) தன் மேலுடையை (பாதுகாப்பு வளையத்தை) இழக்க அவர் தயாராக இருந்தார்.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்குத் தரும் செய்தி என்ன?

ஆண்டவராகிய கடவுள் நம் அடிமை நிலையை இன்றும் மாற்றுகின்றார். பாவத்தில் விழுந்து கிடக்கும் அடிமை நிலை, நாம் விட்டு விலக இயலாத தீமை என்னும் அடிமை நிலை என அனைத்திலுமிருந்து நம்மை விடுவிக்க அவர் நம் நடுவே வருகின்றார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவரின் உடனிருப்பைக் கண்டுகொள்வதும், அறிக்கையிடுவதுமே.

புனித அகுஸ்தினார் தன், 'ஒப்புகைகள்' நூலில், 'மேலுடை' என்னும் உருவகத்தைப் பயன்படுத்துகின்றார். அவர் தன் பழைய வாழ்க்கையை விட்டுவிட்டு, மனமாற்றம் அடையத் தயாரா உடன், அவருடைய பழைய பழக்கங்கள், அவரின் ஆடையின் விளிம்பைப் பிடித்துக்கொண்டு, 'நீ போய்விடப் போகிறாயா? நாங்கள் இல்லாமல் நீ இருந்துவிடுவாயா? நீ மீண்டும் வருவது எப்போது? எங்களைவிட்டுப் போகாதே!' எனச் சொல்கின்றன. ஆனால், தன் மேலுடையைக் களைந்துவிட்டு மனமாற்றத்தைத் தழுவிக்கொள்கின்றார் அகுஸ்தினார். பல ஆண்டுகள் முயற்சி எடுத்துக் கிடைக்காத மனமாற்றம் கனவுபோல ஒரு நொடியில் நடந்தேறுகிறது.

நம் வாழ்விலும் ஆண்டவர் மாபெரும் செயல்களை இப்படித்தான் நடத்துகின்றார். கண்ணீரோடு விதைவிதைக்கும் நம்மை அறுவடையின் மகிழ்ச்சியால் நிரப்புகின்றார்.

பார்வையற்று வறண்டு கிடந்த பர்த்திமேயு என்னும் ஓடையை இயேசு வான்மழை நிறைந்தோடும் நீரோடையாக மாற்றுகின்றார்.

நம் அடிமைநிலையும் மாறும்! கனவு காண்பது போல நமக்குத் தெரிய அனைத்தும் மாற்றம் பெறும்!

(அருட்தந்தை: யேசு கருணாநிதி)
மதுரை உயர்மறைமாவட்டம்

 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!