Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                       
                                 பொதுக்காலம் 26 ஆம் ஞாயிறு - 3ம் ஆண்டு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
கிடையிலிருந்து வரும் ஆட்டுக்குட்டிகளையும் மந்தையிலிருந்து வரும் கொழுத்த கன்றுகளையும் உண்போருக்கு ஐயோ கேடு!

இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 6: 1, 3-7


எல்லாம் வல்ல இறைவன் கூறுவது:

சீயோன் குன்றின்மீது இன்பத்தில் திளைத்திருப்போரே! சமாரியா மலைமேல் கவலையற்றிருப்போரே! மக்களினங்களுள் சிறந்த இனத்தின் உயர்குடி மக்களே! இஸ்ரயேலின் மக்கள் தேடிவருமளவுக்குப் பெருமை வாய்ந்தவர்களே! உங்களுக்கு ஐயோ கேடு! தீய நாளை இன்னும் தள்ளி வைப்பதாக நீங்கள் நினைக்கின்றீர்கள்; ஆனால் வன்முறையின் ஆட்சியை அருகில் கொண்டு வருகின்றீர்கள். தந்தத்தாலான கட்டிலில் பஞ்சணை மீது சாய்ந்து கிடப்போருக்கும், கிடையிலிருந்து வரும் ஆட்டுக்குட்டிகளையும் மந்தையிலிருந்து வரும் கொழுத்த கன்றுகளையும் உண்போருக்கும் ஐயோ கேடு! அவர்கள் வீணையொலி எழுப்பி அலறித் தீர்க்கின்றார்கள், தாவீதைப் போல புதிய இசைக் கருவிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். கோப்பைகளில் திராட்சை இரசம் குடிக்கின்றார்கள்; உயர்ந்த நறுமண எண்ணெயைத் தடவிக் கொள்கின்றார்கள். ஆகையால் அவர்கள்தான் முதலில் நாடு கடத்தப்படுவார்கள்; அவர்களது இன்பக் களிப்பும் இல்லாதொழியும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 146: 7. 8-9a. 9bc-10 (பல்லவி: 1a) Mp3
=================================================================================
 

பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு.

அல்லது: அல்லேலூயா.
7
ஆண்டவர் ஒடுக்கப்பட்டடோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலைஅளிக்கின்றார். - பல்லவி

8
ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.
9a
ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். - பல்லவி

9bc
அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்துவிடுகின்றார்.
10
சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். - பல்லவி


================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தோன்றும் வரையில் கட்டளையை அப்பழுக்கின்றிக் கடைப்பிடித்து வா.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 11-16

கடவுளின் மனிதனாகிய நீ, பொருள் ஆசையிலிருந்து தப்பி ஓடு. நீதி, இறைப் பற்று, நம்பிக்கை, மன உறுதி, பணிவு ஆகியவற்றை நாடித் தேடு. விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு. நிலை வாழ்வைப் பற்றிக்கொள். அதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறாய். அதனை முன்னிட்டே பல சாட்சிகள் முன்னிலையில் விசுவாசத்தைச் சிறப்பாக அறிக்கையிட்டாய்.

அனைத்துக்கும் வாழ்வளிக்கும் கடவுளின் முன்னிலையிலும், பொந்தியு பிலாத்துவின் முன் விசுவாசத்தைச் சிறப்பாக அறிக்கையிட்ட இயேசு கிறிஸ்துவின் முன்னிலையிலும் உனக்குக் கட்டளையிடுகிறேன். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தோன்றும் வரையில் குறைச் சொல்லுக்கு இடந்தராமல் இந்தக் கட்டளையை அப்பழுக்கின்றிக் கடைப்பிடித்து வா. உரிய காலத்தில் பேரின்பக் கடவுள் அவரைத் தோன்றச் செய்வார். கடவுள் ஒருவரே வேந்தர், அரசருக்கெல்லாம் அரசர், ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவர். அவர் ஒருவரே சாவை அறியாதவர்; அணுக முடியாத ஒளியில் வாழ்பவர்; அவரைக் கண்டவர் எவருமிலர்; காணவும் முடியாது. அவருக்கே என்றென்றும் மாண்பும் ஆற்றலும் உரித்தாகுக! ஆமென்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
2 கொரி 8: 9

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு உங்களுக்காக ஏழையானார். அல்லேலூயா.
 
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================

நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 19-31

அக்காலத்தில்

இயேசு பரிசேயரிடம் கூறியது: செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார். அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும். அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார்.

அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார். அவர், தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச் செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப் படுகிறேன் என்று உரக்கக் கூறினார்.

அதற்கு ஆபிரகாம், மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக்கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது என்றார்.

அவர், அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன். எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே என்றார். அதற்கு ஆபிரகாம், மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும் என்றார்.

அவர், அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள் என்றார். ஆபிரகாம், அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்பமாட்டார்கள் என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
பொதுக் காலத்தின் இருபத்து ஆறாம் ஞாயிறு


I ஆமோஸ் 6: 1, 3-7
II 1 திமொத்தேயு 6: 11-16
III லூக்கா 16: 19-31

தப்பி ஓடு, நாடித் தேடு; போராட்டத்தில் ஈடுபடு


உதவும்போது கேட்கும் இசை:

பதினேழாம் நூற்றாண்டில் ஜார்ஜ் விதர் (George Wither) என்றோர் ஆங்கிலக் கவி இருந்தார். பெரிய பேச்சாளராகவும் அறியப்பட்ட இவர் பல இடங்களுக்கும் பேச அழைக்கப்பட்டார்.

ஒருநாள் இவர் ஒரு நிகழ்ச்சியில் பேசுவதற்கு அழைக்கப்பட்டிருந்தார். அதற்காக இவர் நல்லமுறையில் தயாரித்துக்கொண்டு, அழகான ஆடையை அணிந்துகொண்டு நிகழ்ச்சி நடைபெறவிருந்த இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். வழியில் ஒருவர் மயங்கிக் கிடந்தார். உடனே இவர் அவரருகில் சென்று, அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து, அவரை இயல்பு நிலைக்குக் கொண்டு, அவருக்கு உணவும் வாங்கிக் கொடுத்தார். இதனால் இவரது அழகான ஆடை அழுக்கானது.

இதற்கு நடுவில் நிகழ்ச்சிக்கு நேரமாகிவிட்டதால், இவர் வீட்டிற்குச் சென்று வேறோர் ஆடையை மாற்றிக்கொள்ளாமல், அழுக்குப் படிந்த அதே ஆடையுடன் சென்றார். அதைப் பார்த்துவிட்டு இவரது நலவிரும்பிகள், ஏன் இப்படி அழுக்கடைந்த உடையுடன் வந்திருக்கின்றீர்கள்? நல்லதோர் ஆடையுடன் வரக்கூடாதா? என்று கேட்டதற்கு, இவர் நடந்தையெல்லாம் அப்படியே சொல்லிவிட்டு, வழியில் மயங்கிக் கிடந்த அந்த மனிதருக்கு நான் உதவினேன் அல்லவா! அதனால் என்னுடைய செவிகளில் நல்லதோர் இசை ஒலித்துக் கொண்டே இருக்கும். ஒருவேளை நான் அந்த மனிதருக்கு உதவாமல் வந்திருந்தாள் என்னுடைய செவிகளில் அபஸ்வர ஓசை ஒலித்துக் கொண்டே இருக்கும் என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

தேவையில் உள்ள ஒருவருக்கு உதவும்போது, அதனால் கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது; அதையே இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகின்றது. பொதுக் காலத்தின் இருபத்து ஆறாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, தீயவற்றிலிருந்து தப்பியோடி, நல்லவற்றை நாடித் தேடினால், நிலைவாழ்வைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

எதிலிருந்து தப்பி ஓடுவது?

மனிதர்கள் செய்யும் பாவத்தை, தீமை செய்தல், தீமை செய்வதைத் தடுக்காதிருத்தல், நன்மை செய்யாதிருத்தல், நன்மை செய்வதைத் தடுத்தல் என நான்கு வகைப்படுத்தலாம். இன்றைய இறைவார்த்தை நன்மை செய்யாதிருத்தல் என்ற பாவத்தைப் பற்றிக் கூறுகின்றது.

ஆண்டவர் இயேசுவின் போதனைகளில் மூன்றில் ஒரு பகுதி உவமைகள்தான் என்று திருவிவிலிய அறிஞர்கள் கூறுவார்கள். அதிலும் குறிப்பாக, இன்றைய நற்செய்தியில் இடம்பெறும் செல்வரும் இலாசரும் உவமைக்கு ஒரு தனிச்சிறப்பு இருக்கின்றது. அது என்னவெனில், இயேசு சொன்ன எந்த உவமையில் இடம்பெறும் கதாப்பாத்திரங்களுக்குப் பெயர் இருக்காது. செல்வரும் இலாசரும் உவமையில் வரும் ஏழைக்கே இலாசர் என்று பெயர் இருக்கின்றது. இதுவே இந்த உவமைக்கு இருக்கும் தனிச் சிறப்பாகும். உவமையில் வரும் ஏழைக்கு இலாசர் என்று பெயர் இருப்பதால், யூத சமூகத்தில் நடந்த ஒரு நிகழ்வைத்தான் இயேசு தன்னுடைய பாணியில் ஓர் உவமையாகச் சொல்லியிருக்கின்றார் என்று திருவிவிலிய அறிஞர்கள் கூறுவார்கள்.

இயேசு சொன்ன இந்த உவமையில் வரும் செல்வர், தன்னுடைய வீட்டு வாசலில் கிடந்த இலாசரை அங்கிருந்து துரத்தவில்லை; இருந்தும் அவர் இறந்தபிறகு பாதாளம் செல்கின்றார். காரணம், அவர் தீமை செய்தார் என்பதற்காக அல்ல, நன்மை செய்யத் தவறினார் என்பதற்காகவே ஆகும். ஏன் இவரால் நன்மை செய்ய முடியாமல் போனது எனில், இன்றைய இரண்டாம் வாசகத்திற்கு முந்தைய பகுதியில், பவுல் சொல்வதுபோல், பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர் (1 திமொ 6:10) என்பதாலாகும். அதனால்தான் பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தின் தொடக்கத்தில், கடவுளின் மனிதனாகிய நீ, பொருள் ஆசையிலிருந்து தப்பி ஓடு என்கிறார்.

உவமையில் வரும் செல்வரால் பொருள் ஆசையிலிருந்து தப்பி ஓட முடியவில்லை. அதனால்தான் அவரால் நன்மை செய்ய முடியவில்லை. இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் இஸ்ரயேலில் இருந்த பணம் படைத்தவர்கள் நாட்டில் இருந்த வறியவர்களைப் பற்றிக் கவலைப்படாமல், கொழுத்த கன்றை உண்டு, திராட்சை இரசத்தை அருந்தி, பஞ்சணையில் சாய்ந்து மகிழ்ச்சியில் திளைத்திருந்ததைப் பற்றிக்கூறுகின்றது. இப்படி அவர்கள், நாட்டில் இருந்த வறியவர்களுக்கு நன்மை செய்ய வாய்ப்பிருந்தும், நன்மை செய்யாததால் தண்டிக்கப்படப் போவதாக ஆமோசால் எச்சரிக்கப்படுகிறார்கள்.

எதனை நாடித் தேடுவது?

பொருள் ஆசையிலிருந்து தப்பி ஓடு என்று சொன்ன பவுல், நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மன உறுதி, பணிவு ஆகியவற்றை நாடித் தேடு என்கிறார்.

இங்கு ஏழை இலாசர் எப்படி, யூதர்களின் தால்முத்தில் விண்ணகத்தைக் குறித்துக் காட்டும் ஆபிரகாமின் மடியை அடைந்தார் என நாம் அறிந்துகொள்வது முக்கியம். இலாசர் என்றால் கடவுள் உதவினார் அல்லது கடவுளே உதவி என்று பொருள். அந்த அடிப்படையில் இலாசர் தன்னுடைய பெயருக்கேற்றாற்போல் கடவுளே தனக்கு உதவி என்று அவரை மட்டும் நம்பியிருந்தார், அவரைப் பற்றிக்கொண்டிருந்தார். இவ்வாறு ஏழையான அவர், சமவெளிப் பொழிவில் இயேசு சொல்வது போல், இறையாட்சியை உரித்தாக்கிக் கொண்டார்.

இப்பொழுது பவுல் சொல்லும், நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மன உறுதி, பணிவு ஆகியவற்றை நாடித் தேடு என்ற வார்த்தைகளுக்கு வருவோம். ஏழை இலாசர் இறைவன்மீது பற்றுக்கொண்டு இறைப்பற்று, நம்பிக்கை ஆகியவற்றை நாடித் தேடினார். அதன்மூலம் இறையாட்சியை உரித்தாக்கிக் கொண்டார். இன்றைக்குப் பலர் நற்செய்தியில் வரும் செல்வரான இளைஞரைப் போன்று, நான் எந்தவொரு பாவமும் செய்யவில்லை. அதனால் நான் நிலைவாழ்வை உரித்தாக்கிக் கொள்வேன் என நினைக்கின்றார்கள். இவர்களுக்கெல்லாம் இயேசு, செல்வரான இளைஞரிடம் சொன்னது போன்று ஒன்று குறைவு படுகின்றது. அதுதான், ஆண்டவர்மீது பற்று வைத்து, நன்மைகள் செய்வதாகும்.

நற்செயலுக்குக் கிடைக்கும் கைம்மாறு:

தப்பி ஓடு... நாடித் தேடு என்று சொன்ன பவுல் நிறைவாக, நம்பிக்கை வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு என்று திமொத்தேயுவுக்கு அறிவுறுத்துகின்றார். கிறிஸ்தவம் வேகமாகப் பரவி வந்த தொடக்க காலகட்டத்தில் கிறிஸ்துவின்மீது பற்றுக்கொண்டு வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்குப் பலவிதமான துன்பங்கள் வந்தன. இதற்கு அஞ்சி ஒருசிலர் கிறிஸ்துவின்மீது தாங்கள் கொண்டிருந்த நம்பிக்கையைக் கைவிட்டார்கள். இந்நிலையில் எபேசு நகரில் ஆயராக இருந்த திமொத்தேயு எத்தகைய துன்பம் வந்தாலும் நம்பிக்கை வாழ்வு என்னும் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்கிறார் பவுல். இவ்வாறு அவரும், அவரது மக்களும் நம்பிக்கை வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடும்போது, நிலைவாழ்வைப் பற்றிக் கொள்ளலாம் என்கிறார் பவுல்.

இயேசுவும் தன் சீடர்களிடம் எத்தகைய துன்பம் வந்தாலும், இறுதிவரை மன உறுதியோடு இருக்கச் சொல்கின்றார் (மத் 24:13) எனவே, நாம் தீமையை விட்டுத் தப்பி ஓடி, நன்மையை நாடித் தேடி, நம்பிக்கை வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபட்டு, இலாசரைப் போன்று விண்ணகத்தை, நிலைவாழ்வை உரித்தாக்கிக் கொள்வோம்

சிந்தனைக்கு:

வாழ்க்கை என்பது வாய்ப்புகளால் நிரம்பியது; நாம் எந்த வாய்ப்பைப் பயன்படுத்துகின்றோம் என்பதைப் பொறுத்துத்தான் நம் வாழ்க்கை அமையும் என்பார் ஜான் எப். கென்னெடி. ஆதலால், நாம் தீமையை விட்டுவிட்டு, நன்மையை நாடி, அதில் உறுதியாக நிலைத்திருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.



மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!