Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                       
                                 பொதுக்காலம் 18ஆம் வாரம் - ஞாயிறு - 3ம் ஆண்டு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
உழைத்துச் சேர்த்த சொத்தை, அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச் செல்கிறார்.

சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம் 1: 2; 2: 21-23

வீண், முற்றிலும் வீண், என்கிறார் சபையுரையாளர்; வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண்.

ஏனெனில், ஞானத்தோடும் அறிவாற்றலோடும் திறமையோடும் ஒருவர் உழைக்கிறார்; உழைத்துச் சேர்த்த சொத்தை அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச் செல்கிறார். அவரது உழைப்பும் வீணே. இது பெரிய அநீதி. உலகில் அவர் செய்த எல்லா முயற்சிக்காகவும், வகுத்த செயல் திட்டங்களுக்காகவும் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? வாழ் நாளெல்லாம் அவருக்குத் துன்பம்; வேலையில் தொந்தரவு; இரவிலும் அவரது மனத்திற்கு அமைதியில்லை. எல்லாம் வீணே.

ஆண்டவரின் அருள்வாக்கு.


=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 90: 3-4. 5-6. 12-13. 14,17 (பல்லவி: 1)  Mp3
=================================================================================
 
பல்லவி: என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.
3
மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள் என்கின்றீர்.
4
ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. - பல்லவி

5
வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்;
6
அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்துபோகும். - பல்லவி

12
எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.
13
ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். - பல்லவி

14
காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.
17
எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! - பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================


மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள்.


திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-5, 9-11

சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப் பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். இவ்வுலகு சார்ந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்து விட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது. கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும்பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள்.

ஆகவே உலகப் போக்கிலான உங்கள் இயல்புக்குரிய பரத்தைமை, ஒழுக்கக்கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு, தீய நாட்டம், சிலை வழிபாடான பேராசை ஆகியவற்றை ஒழித்துவிடுங்கள்.

ஒருவரோடு ஒருவர் பொய் பேசாதீர்கள். ஏனெனில் நீங்கள் பழைய மனித இயல்பையும் அதற்குரிய செயல்களையும் களைந்துவிட்டு, புதிய மனித இயல்பை அணிந்திருக்கிறீர்கள். அவ்வியல்பு தன்னை உண்டாக்கினவரின் சாயலுக்கேற்பப் புதுப்பிக்கப்படுகிறது. இவ்வாறு நீங்கள் கடவுளை முழுமையாய் அறிய முடியும். புதுப்பிக்கப்பட்ட நிலையில் கிரேக்கர் என்றும், யூதர் என்றும், விருத்தசேதனம் பெற்றவர் என்றும், விருத்தசேதனம் பெறாதவர் என்றும், நாகரிகம் அற்றோர் என்றும், சீத்தியர் என்றும், அடிமை என்றும், உரிமைக் குடிமக்கள் என்றும் வேறுபாடு இல்லை. கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாய் இருப்பார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 5: 3

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.
 
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================

நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 13-21

அக்காலத்தில்

கூட்டத்தில் இருந்த ஒருவர் இயேசுவிடம், "போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக் கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்" என்றார். அவர் அந்த ஆளை நோக்கி, "என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?" என்று கேட்டார். பின்பு அவர் அவர்களை நோக்கி, "எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது" என்றார்.

அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்: "செல்வனாய் இருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அவன், நான் என்ன செய்வேன்? என் விளைபொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே! என்று எண்ணினான். ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்'. பின்பு, என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு எனச் சொல்வேன் என்று தனக்குள் கூறிக்கொண்டான். ஆனால் கடவுள் அவனிடம், அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னை விட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்? என்று கேட்டார். கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே."

ஆண்டவரின் அருள்வாக்கு.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
பொதுக்காலத்தின் பதினெட்டாம் ஞாயிறு


I சபை உரையாளர் 1: 2; 2: 21-23
II கொலோசையர் 3: 1-5, 9-11
III லூக்கா 12: 13-21

"மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள்"

யார் உண்மையான பணக்காரர்?

அது ஒரு நகர்ப்புறப் பங்கு. ஒருநாள் காலையில் அந்தப் பங்கில் பங்குப்பணியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த அருள்பணியாளரைச் சந்திக்கப் பெரியவர் ஒருவர் வந்தார். அவருக்கு வயது எப்படியும் எழுபதுக்கும் மேல் இருக்கும். அவர் பங்குப்பணியாளரிடம், "இன்று மதியம் என்னுடைய வீட்டிற்கு உணவருந்த வர முடியுமா?" என்று கேட்டார். பங்குப் பணியாளரும் அதற்கு மறுப்பேதும் சொல்லாமல் அவருடைய வீட்டிற்கு வருவதாகச் சொன்னார்.

மதிய வேளையில் பங்குப்பணியாளர் பெரியவரின் வீட்டிற்கு உணவருந்தச் சென்றார். அவரது வீடு அரண்மனை போன்று இருந்தது. வீட்டில் ஏராளமான வேலைக்காரர்கள் இருந்தார்கள். எல்லாவற்றையும் வியப்போடு பார்த்துக்கொண்டே பங்குப்பணியாளர் வீட்டிற்குள் நுழைந்தார். உணவு பரிமாறப்படும் வேளையில், பெரியவர் கண்களில் நீர் மல்கப் பேசத் தொடங்கினார்: "சுவாமி! நான் நினைத்தால் எதையும் விலைகொடுத்து வாங்கிவிடலாம். எங்கு வேண்டுமானாலும் நினைத்த நேரத்திற்குச் செல்லலாம். அந்த அளவுக்கு என்னிடத்தில் பணம் உள்ளது; ஆனால், என்னுடைய மனைவி என்னோடு இல்லை; பிள்ளைகளும் அவளோடு சென்றுவிட்டார்கள். இதனால் வாழ்க்கையில் நிம்மதியில்லாமல் நரகம் போன்று இருக்கின்றது."

பெரியவர் சொன்னதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த பங்குப்பணியாளர் அவரிடமிருந்து விடைபெறும் வேளையில், "கவலைப்படாதீர்கள்! கடவுள் உங்களுடைய வாழ்வில் மகிழ்ச்சியையும் அமைதியையும் தரவேண்டும் என்று நான் அவரிடம் வேண்டிக்கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

அன்று மாலையில், பெரியவர் ஒருவர் தன்னுடைய வீட்டை மந்திர வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் பெயரில், பங்குப் பணியாளர் அவருடைய வீட்டிற்குச் சென்றார். பங்குப் பணியாளர் அவரோடு பேசுகையில்தான் தெரிந்தது அவருடைய மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டார் என்பதும், அவர் உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளியான தன் சகோதரியைக் கவனித்துக் கொண்டிருக்கின்றார் என்பதும் தெரிந்தது. பெரியவரிடமிருந்து பங்குப் பணியாளர் விடைபெறுகையில், அவர், "சுவாமி! எனக்கென வங்கிக் கணக்கு எதுவும் இல்லை; ஆனால், ஆண்டவரிடம் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கையினால் நான் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றேன்" என்றார்.

பங்குப் பணியாருக்கு ஆச்சரியமாக இருந்தது. எல்லாம் இருந்தும் நிம்மதியில்லாத அந்தப் பணக்காரர் எங்கே? எதுவும் இல்லாவிடினும், மகிழ்ச்சியோடு இருக்கும் இவர் எங்கே? ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து மகிழ்ச்சியோடு வாழும் இவரல்லவா உண்மையான பணக்காரர்! என நினைத்துக்கொண்டே போனார் பங்குப் பணியாளர்.

ஆம், மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் மட்டும் ஒருவருக்கு வாழ்வோ, மகிழ்ச்சியோ வந்துவிடாது. ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, மேலுலகு சார்ந்தவற்றை நாடுகின்றபோதுதான் ஒருவருக்கே உண்மையான மகிழ்ச்சி கிடைக்கும். பொதுக் காலத்தின் பதினெட்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, "மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள்" என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

நிலையில்லாததைத் தேடும் மனிதர்கள்:

இவ்வுலகில் வாழும் பலருக்கு, மிகுதியான பொருள் இருந்தால், மிகுதியான பணம் இருந்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்றோர் எண்ணமிருக்கின்றது. மிகுதியான பொருள்களும் பணமும் இருந்தால் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிடலாம் பெரிய பெரிய பணக்காரர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமே! அவர்களெல்லாம் மகிழ்ச்சியாக இல்லை என்பதுதான் வேதனை கலந்த உண்மை.

நற்செய்தியில் இயேசுவிடம் வருகின்ற ஒருவர், "போதகரே, சொத்தை என்னோடு பங்கிக்கிட்டுக் கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்" என்கிறார். யூத சமூகத்தில், தலைச்சன் பிள்ளைக்கு, சொத்தில் இரண்டு பங்கு கொடுக்க வேண்டும் (இச 21:17). அப்படியிருக்கையில், இவர் தன் சகோதரர் சொத்தைத் தன்னோடு பங்கிட்டுக் கொள்ளுமாறு இயேசுவிடம் கேட்கின்றார்.

இயேசு அனைத்துலகிற்கும் நடுவராக இருக்கும்போது (யோவா 5:22), சாதாரண பிரச்சனைகளில் அல்லது உலகப் போக்கிலான பிரச்சனைகளில் நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருக்க முடியாது என்பதால், "என்னை உங்களுக்கு நடுவராகவோ, பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?" என்று கேட்கின்றார். தொடர்ந்து அவர் தன்னைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, "எவ்வகைப் பேராசைக்கும் இடம்கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது" என்கிறார். இந்த உண்மையை விளக்க அவர் சொல்லும் உவமைதான் அறிவற்ற செல்வந்தன் உவமை.

அறிவற்ற செல்வந்தன் பேராசையோடு செயல்பட்டு அழிந்து போனதற்குக் காரணம், இன்றைய இரண்டாம் பவுல் சொல்வது போன்று, அவனிடம் இருந்த ஊனியல்புதான். அதுவே அவனை அவ்வாறு செயல்படத் தூண்டியது. இத்தகைய வாழ்க்கை இன்றைய முதல் வாசகத்தில் சொல்லப்படுவது போல, வீண்; முற்றிலும் வீண்தான்.

நிலையானவற்றைத் தேடினால் வாழ்வு:

ஊனியல்பிற்கே ஒருவர் வாழ்வது முற்றிலும் வீணானது. அத்தகைய வாழ்க்கை அவரை அழிவுக்குத்தான் இட்டுச் செல்லும் என்று பார்த்தோம். இதற்கு முற்றிலும் மாறாக, ஒருவர் புதிய இயல்போடு வாழும்போது அல்லது மேலுலகு சார்ந்தவற்றை நாடுகின்றபோது, அவர் ஆண்டவர் தோன்றும்போது மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவார். இது பற்றி இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் தெளிவாக எடுத்துக் கூறுகின்றார்.

ஒரு மனிதர் புதிய இயல்புடையராய், மேலுலகு சார்ந்தவற்றை நாடவேண்டும் எனில், அவர் தனது பழைய இயல்பான ஊனியல்பைக் களைந்துவிட்டுக் கிறிஸ்துவோடு உயிர்த்தெழ வேண்டும். இதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாய் இருப்பவர், இத்தகைய வார்த்தைகளை உதிர்க்கும் பவுல்தான். ஒரு காலக்கட்டத்தில் திருஅவையைத் துன்புறுத்தி வந்த பவுல், கிறிஸ்துவால் தொடப்பட்ட பின்பு, கிறிஸ்துவோடு உயிர்த்தெழுந்த பின்பு கிறிஸ்துவாகவே வாழத் தொடங்கினார் (கலா 2:20) இவ்வாறு கடவுளின் மாட்சியில் பங்கு பெறும் தகுதி பெற்றார்.

கடவுள் முன்னிலையில் செல்வந்தராய்!

பழைய இயல்பு அழிவுக்கு வழிவகுக்கும்; புதிய இயல்போ நிலைவாழ்வுக்கு வழிவகுக்கும் என்று சிந்தித்தோம். இப்போது நமக்கு முன், அன்று ஆண்டவராகிய கடவுள் மோசே வழியாக, இஸ்ரயேல் மக்களிடம் சொன்னது போன்று, வாழ்வும் சாவும் உள்ளன (இச 30: 15). இவற்றில் நாம் எதைத் தேர்ந்தெடுக்கப்போகின்றோம் என்பதைப் பொறுத்துத்தான் நமது வாழ்வு உள்ளது.

இன்றைக்குப் பலர் உலகினர் முன்பு செல்வந்தர்களாய் இருக்க விரும்புகின்றார்கள். இதற்காக அவர்கள் தவறான வழிகளில் செல்கின்றார்கள். இவ்வாறு அவர்கள் சொதனையாகிய கண்ணியில் சிக்கி அழிவுறுகின்றார்கள் (1 திமொ 6:9), ஆண்டவர் முன்பு செல்வந்தராய் இருக்க விரும்புகின்றவர் இந்த உலகப் போக்கின்படி ஒழுகாமல், ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, மேலுலகு சார்ந்தவற்றை நாடுவார்கள். நாம் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, மேலுலகு சார்ந்தவற்றை நாடி, கடவுள் முன் செல்வந்தர்களாய் விளங்குவோம்.

சிந்தனைக்கு:

ஆண்டவர் வந்து உங்கள்மேல் நேர்மையைப் பொழியுமாறு நீங்கள் அவரைத் தேடும் காலம் நெருங்கி வந்துவிட்டது (ஓசே 10: 12) என்பார் ஓசேயா இறைவாக்கினர். எனவே, நாம் ஆண்டவரைத் தேடுகின்ற காலம் நெருங்கி வந்துவிட்டது என்பதை உணர்ந்து, அவரைத் தேடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!