Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                                Year B  
                                                          பொதுக்காலம் 34ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் கிறிஸ்து அரசர் பெருவிழா - 2ம் ஆண்டு
=================================================================================

மானிட மகனின் ஆட்சியுரிமை என்றும் உள்ளதாகும்.


இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 13-14


அந்நாள்களில் இரவில் நான் கண்ட காட்சியாவது: வானத்தின் மேகங்களின் மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார்.

ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்குக் கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றும் உளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்து போகாது.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா: 93: 1a-c. 1de-2. 5 (பல்லவி: 1ab) Mp3
=================================================================================
 பல்லவி: ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்.

1a-c ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்; ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார். பல்லவி

1de பூவுலகை அவர் நிலைப்படுத்தினார்; அது அசைவுறாது. 2 உமது அரியணை தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றுள்ளது; நீர் தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர். பல்லவி

5 உம்முடைய ஒழுங்குமுறைகள் மிகவும் உறுதியானவை; ஆண்டவரே! என்றென்றும் தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும். பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர் நம்மைக் குருக்களாக ஏற்படுத்தினார்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 1: 5-8

கிறிஸ்துவே நம்பிக்கைக்குரிய சாட்சி; இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர்; மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர். இவர் நம்மீது அன்புகூர்ந்தார்; தமது சாவு வாயிலாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார்.

ஆட்சி உரிமை பெற்றவர்களாக, அதாவது நம் கடவுளும் தந்தையுமானவருக்கு ஊழியம் புரியும் குருக்களாக நம்மை ஏற்படுத்தினார். இவருக்கே மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் உரியன. ஆமென்.

இதோ! அவர் மேகங்கள் சூழ வருகின்றார். அனைவரும் அவரைக் காண்பர்; அவரை ஊடுருவக் குத்தியோரும் காண்பர்; அவர் பொருட்டு மண்ணுலகின் குலத்தார் அனைவரும் மாரடித்துப் புலம்புவர். இது உண்மை, ஆமென்!

"அகரமும் னகரமும் நானே" என்கிறார் கடவுளாகிய ஆண்டவர். இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவரும் அவரே.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மாற் 11: 10

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
அரசன் என்று நீர் சொல்கிறீர்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 33-37

அக்காலத்தில் பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு அவரிடம், "நீ யூதரின் அரசனா?" என்று கேட்டான்.

இயேசு மறுமொழியாக, "நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப் பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?" என்று கேட்டார்.

அதற்குப் பிலாத்து, "நான் ஒரு யூதனா, என்ன? உன் இனத்தவரும் தலைமைக் குருக்களும்தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்?"என்று கேட்டான்.

இயேசு மறுமொழியாக, "எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல" என்றார். பிலாத்து அவரிடம், "அப்படியானால் நீ அரசன்தானோ?" என்று கேட்டான்.

அதற்கு இயேசு, "அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்" என்றார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
கிறிஸ்து அரசர் பெருவிழா

இயேசுவின் அரசு அன்பின் அரசு

மாவீரன் அலெக்ஸ்சாண்டர் எல்லா நாடுகளின் மீதும் படையெடுத்து, வெற்றி கொண்டபிறகு, இறுதியாக இந்தியாவின்மீது படையெடுத்து வெற்றிக்கொள்ள தன்னுடைய படைவீரர்களோடு இந்தியாவை நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்தான்.

வரும்வழியில் அவன் ஒரு ஞானியைச் சந்தித்தான். அந்த ஞானி உடம்பில் ஒட்டுத் துணிகூட இல்லாமல் நிர்வாணமாய் தவக்கோலத்தில் இருந்தார். அவரைக் கண்டு அவர்மீது பரிதாபப்பட்ட மாவீரன் அலெக்ஸ்சாண்டர் அவரை எழுப்பி, "ஐயா உங்களைப் பார்த்தால் மிகவும் பரிதாபமாக இருக்கின்றது. உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள். நான் அதைத் தருகின்றேன். ஏனென்றால், நான்தான் இந்த உலகமனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மாவீரன் அலெக்சாண்டர்" என்று ஒரு விதமான ஆணவத்தோடு பேசினான்.

அவனுக்குப் அறிவுரை புகட்ட நினைத்த ஞானி அவனிடம். "உலகனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அரசன் நீ என்று சொல்கிறாய். உன்னிடத்தில் ஒரு ஒருசில கேள்விகளைக் கேட்கின்றேன். அவற்றிக்கு நீ சரியான பதில்களைத் தந்தால் நீ சொல்வதை ஒத்துக்கொள்கின்றேன்" என்றார். அவனும் அதற்குச் சரியென்று சொல்ல, ஞானி அவனிடத்தில், "உதாரணத்திற்கு நீ பாலைவனத்தில் மிகுந்த தாகத்தோடு வருகின்றாய் என்று வைத்துக்கொள்வோம். உனக்கெதிரே நான் ஒரு குவளையில் தண்ணீரோடு வருகின்றேன். அப்போது நீ என்னிடம் குடிக்கத் தண்ணீர் வேண்டும் என்று கேட்கின்றாய், நானோ 'தண்ணீர் தந்தால் அதற்கு நீ என்ன தருவாய்?' என்று கேட்கின்றேன். அப்போது நீ என்ன பதிலளிப்பாய்" என்று கேட்டார்.

மாவீரன் அலெக்ஸ்சாண்டரோ சிறுது நேரம் யோசித்துவிட்டு, "பாலைவனம்.., தாகம் வேறு அதிகமாக இருக்கின்றது.., தண்ணீர் அருந்தாவிட்டால் உயிரை இழக்கக்கூடிய சூழ்நிலை.., அப்படிப்பட்ட தருணத்தில் நான், "என்னுடைய அரசாங்கத்தில் பாதியைத் தருவேன் என்று பதிலளிப்பேன்" என்றான். உடனே ஞானி அவனிடம், "பாதி அரசாங்கத்திற்கு எல்லாம் ஒரு குவளைத் தண்ணீரை தரமுடியாது என்று சொல்லிவிடுகிறேன் என்று வைத்துக்கொள்வோம். அப்போது நீ என்ன பதிலளிப்பாய் என்று கேட்டார். அவனோ, "உயிரைக் காக்கக்கூடிய ஒரு குவளைத் தண்ணீருக்கு பாதி அரசாங்கம் போதவில்லை என்றால், அரசாங்கம் முழுவதையும் எடுத்துக்கொள்ளும் என்று பதிலளிப்பேன்" என்றார்.

அவன் இவ்வாறு பதிலளித்த பின்பு ஞானி அவனிடத்தில் பொறுமையாகச் சொன்னார், "அப்படியானால் உன்னுடைய அரசாங்கத்தின் மதிப்பு ஒரு குவளைத் தண்ணீர்தானா?, இதற்காக ஏன் இவ்வளவு அரும்பாடுபட்டு எல்லா நாடுகளின்மீதும் போர்தொடுத்துக் கொண்டிருக்கின்றாய்?, இதற்காக ஏன் ஏராளமான உயிர்களைக் கொன்றுபோட்டுக் கொண்டிருக்கின்றாய்?". ஞானி கேட்ட கேள்விக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை. அது மட்டுமல்லாமல், அவன் இந்தியாவின் மீது படையெடுத்துச் செல்லும் எண்ணத்தை மாற்றிக்கொண்டு, தன்னுடைய சொந்த நாடு திரும்பினான்.

மதிப்பே இல்லாத அரசாங்கத்திற்காக, ஆட்சிக்காக எத்தனையோ அரசர்கள் (?) ஏராளமான உயிர்களைக் கொன்றுபோட்டத்தை நினைத்துப் பார்க்கும்போது உண்மையில் மிகவும் வேதனையாக இருக்கின்றது. இத்தகைய சூழலில்தான் நாம் கிறிஸ்து அரசர் பெருவிழாவை கொண்டாடுகின்றோம். மக்கள் ஆட்சித்தத்துவம் செயல்பட்டுக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் இயேசுவை நாம் அரசராக ஏற்றுக்கொள்வது சரிதானா?, மற்ற பூவுலகின் மற்ற அரசர்களிலிருந்து எப்படி வித்தியாசப்பட்டு இருக்கின்றார் என்று நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

பேரறிஞர் பெர்னாட்ஷா அரசாங்கம் தொடர்பாகக் கூறுகின்ற போது, "மக்கள் நலனை மையப்படுத்திச் செயல்படுவதே அரசாங்கம்" என்பார். ஆம், அரசாங்கம் என்றால் மக்களை மையப்படுத்தியதாக இருக்கவேண்டும். அப்படி இல்லாமல், ஆளும் வர்க்கத்தை மட்டும் மையப்படுத்தி இருந்தால் அது ஒரு உண்மையாக அரசாங்கமாக இருக்காது. இன்றைக்கு மாநில அளவிலும் தேசிய அளவிலும் ஏன் உலக அளவிலும்கூட நடக்கின்ற அரசாங்கங்கள் எல்லாம் மக்களுக்கான அரசாங்கமாக இல்லை என்பதுதான் வேதனை கலந்த உண்மை. இத்தகைய பின்னணியில் இயேசுவின் அரசாங்கம் எத்தகையது என்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நற்செய்தி வாசகத்தில் இயேசு கிறிஸ்து விசாரணைக்காக பிலாத்துவின் முன்பாக நிறுத்தி வைக்கப்படுகின்றார். அப்போது அவன் இயேசுவிடம், "நீ யூதரின் அரசனா?" என்று கேட்கும்போது இயேசு அவனிடம், "எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல" என்கின்றார். ஆம், இயேசுவின் ஆட்சி இவ்வுலக ஆட்சி அல்ல, ஏனென்றால் இவ்வுலக ஆட்சியில் தலைவர்கள் மக்கள்மீது அதிகாரம் செலுத்தி அவர்களை அடக்கி ஆட்கின்றார்களே ஒழிய, மக்கள்மீது அன்பு கொள்கின்றவகளாக, அக்கறை கொள்ளாதவர்களாக இல்லை. ஆனால் ஆண்டவர் இயேசு அப்படி இல்லை. அவர் எல்லாரையும், ஏன் தன்னை வெறுத்தோரையும் அன்பு செய்பவராக இருந்தார், அவர்களுக்காகத் தன்னுடைய உயிரையும் தருபவராக இருந்தார்.

திருவெளிப்பாடு நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகம் மேற்ச்சொன்ன வார்த்தைகளை எண்பிப்பதாய் இருக்கின்றது,. அங்கு நாம் வாசிக்கின்றோம், "கிறிஸ்துவே... மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர். இவர் நம்மீது அன்பு கூர்ந்தார்; தமது சாவு வழியாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுத்தார்". தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மக்கள் அடக்கி ஆண்டு, அவர்களைக் கொடுமைப்படுத்தும் தலைவர்கள், அரசர்களுக்கு மத்தியில், மக்களை உண்மையாகவே அன்பு செய்து, அவர்களுக்காக தன்னுடைய உயிரையும் தந்தததால் இயேசுவை உண்மையான அரசர் என்றும், அவருடைய அரசாங்கம் இவ்வுலக அரசாங்கம் போன்றது கிடையாது என நாம் உறுதியாகச் சொல்லலாம்.

இயேசுவின் அரசு இவ்வுலக அரசு போன்றது கிடையாது என்பதற்கு இரண்டாவது காரணமாக அதன் அழிவுறாத, என்றும் நிலைத்திருக்கும் தன்மையைச் சொல்லலாம். இந்த உலகத்தில் எத்தனையோ அரசுகள் தோன்றி இருக்கின்றன. ஆனால், அவையெல்லாம் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போய்விட்டன. உலகமெங்கும் பரவி இருந்தது உரோமை அரசாங்கம். ஆனால் அது இன்றைக்கு இருந்த இடம் தெரியவில்லை. மிகவும் பழமை வாய்ந்த அரசாங்கம் பாபிலோனிய அரசாங்கம், அதுவும் இன்றைக்கு இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிட்டது. இப்படி வரலாற்றில் தோன்றிய எத்தகைய அரசாங்கங்கள் ஒருகுறிப்பிட்ட காலம் வரைக்கும் செம்மையாய் இருந்தன. அதன்பிறகு அவை மண்ணோடு மண்ணாய் போய்விட்டன. ஆனால், இயேசுவின் அரசு, அவருடைய அரசாங்கம் அப்படி இல்லை. அதற்கு முடிவு என்பதே இல்லை.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம், "வானத்தின் மேகங்களின் மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் தோன்றினார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அவருக்குக் கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றுமுள்ளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்து போகாது" என்று. ஆம், இயேசுவின் அரசாங்கம் ஒரு குறிப்பட்ட காலத்தில் தோன்றி, குறிப்பட்ட காலத்திற்கு மறையக்கூடிய அரசாங்கம் கிடையாது. அவருடைய அரசாங்கம் என்றுமுள்ள அரசாங்கம், அவருடைய ஆட்சிக்கு முடிவு என்பதே கிடையாது. அதனால்தான் இயேசு இவ்வுலக அரசு போன்றது கிடையாது என்று சொல்கின்றோம்.

இப்படிப்பட்ட அழியாத, என்றுமுள்ள அரசாங்கத்தின் குடிமக்களாக வாழவேண்டும் என்றால், அதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்துப் பார்ப்பது நம்முடைய கடமையாகும்.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு பிலாத்துவிடம், "அரசன் என்று நீர் சொல்கின்றீர். உண்மைய எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன்" என்று சொல்லிவிட்டு, "உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவி கொடுப்பர்" என்பார். அப்படியானால், உண்மையின் வழியின் நடக்கின்ற அனைவருமே இயேசுவின் என்றுமுள்ள அரசின் குடிமக்களாகத் திகழ்வார்கள் என்பது உறுதியாகின்றது. நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் உண்மையின் வழியில், உண்மையின் வடிவான ஆண்டவர் இயேசுவின் நடக்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் உண்மைக்குப் புறம்பாக வாழ்ந்துகொண்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கின்ற ஒரு செயலாக இருக்கின்றது. ஆகவே, இயேசுவின் மறுவுலக அரசில் நாம் பங்குபெற, அவருடைய உண்மைக் குடிமக்களாக வாழ நாம் உண்மையின் வழி நடப்போம்.

அடுத்ததாக, இயேசுவின் மறுவுலக அரசில் பங்குபெற நாம் செய்யவேண்டியது அவரைப் போன்று அனைவரையும் அன்பு செய்வதாகும். இயேசு எல்லாரையும் அன்பு செய்து, அவர்களுக்காகத் தம்முடைய உயிரையும் தந்தார் என்று இன்றைய வாசகத்தில் ஏற்கனவே சிந்தித்தோம். அவருடைய வழியில் நடக்கும் நாமும் அவரைப் போன்று அனைவரும் அன்பு செய்வதுதான் அவருடைய ஆட்சியில் பங்கு பெற தகுதியாக இருக்கும்.

இன்றைக்கு மக்கள் ஒருவர் மற்றவரை அவர்கள் வைத்திருக்கும் பணத்திற்காகவும், அவர்கள் வகிக்கின்ற பதவிக்காகவும் அன்பு செய்கின்றார்கள். இதனால் உண்மையான அன்பு என்பது கானல்நீராகப் போய்விட்டது. ஆனால், இயேசுவின் ஆட்சிக்குரிய மக்களாகிய நாம் ஒருவர் மற்றவரிடம் உண்மையான அன்பினைக் காட்டவேண்டும். அப்போதுதான் அவருடைய ஆட்சியில் கலந்துகொண்டு, அவர் தருகின்ற அருளைப் பெறமுடியும்.

ஓர் ஊரில் மனைவியை இழந்த பணக்காரர் ஒருவர் வேறு மணம் செய்துகொள்ளாமல், தன்னுடைய மகனே உலகம் என்று வாழ்ந்து வந்தார். அந்தப் பணக்காரர் வீட்டில் ஓர் ஏழைப் பணிப்பெண் வேலை பார்த்துவந்தார். அவள் தன்னுடைய வேலைகளை பொறுப்புடனும் வாஞ்சையுடனும் செய்துவந்தார். அது மட்டுமல்லாமல் அவர் அந்த பணக்காரரின் மகன்மீது மிகுந்த அன்பு காட்டிவந்தார். இது அந்த பணக்காரருக்கு மிகவும் பிடித்துப் போனது.

எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில் அந்தப் பணக்காரரின் பையன் திடிரென்று ஒருநாள் நோய்வாய்ப்பட்டு இறந்து போனான். அந்தத் துக்கம் தாளாமல் பணக்காரரும் விரைவில் இறந்து போனார். இதனால் அந்த வீட்டில் யாரும் இல்லா நிலை ஏற்பட, அந்த ஏழைப் பணிப்பெண் மிகுந்த வருத்ததோடு வேறொரு வீட்டிற்கு வேலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டார்.

இதற்கிடையில் பணக்காரரின் வீடும் அதில் உள்ள பொருட்களும் அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ளப்பட்டு ஒருநாள் ஏலத்திற்கு வந்தது. பெரிய பெரிய லட்சாதிபதிகள் எல்லாம் அந்த வீட்டை வாங்குவதற்கு போட்டி போட்டுக்கொண்டு வைத்தார்கள். முன்பு அங்கு வேலைபார்த்த ஏழைப் பணிப்பெண்ணும் அங்கு என்னதான் நடக்கின்றது என்று பார்க்கவந்தார். ஏலம் தொடங்கியது. பணக்காரர்களுக்கு மத்தியில் வீட்டை யார் வாங்குவது என்ற போட்டி நிலவியது. ஏலத்திற்கு இடையில் பணக்காரது பையனின் புகைப்படம் என்று ஏலத்திற்கு வந்தது. அதனை வாங்க யாருமே முன்வரவில்லை. கடைசியில் அந்தப் பெண்தான் பையன்மீது கொண்டிருந்த அன்பினால் வாங்கினாள். அதை அவள் வாங்கிக்கொண்டு வீட்டிற்குச் சென்று அந்தப் புகைப்படத்தைத் திறந்து பார்த்தபோது, அதற்குப் பின்னால், "இந்த படத்தை யார் வாங்குகின்றார்களோ அவர்களுக்குத்தான் என்னுடைய சொத்து அனைத்தும்" என்று எழுதியிருந்தது. இதை அவள் அரசாங்கத்திடம் கொண்டுபோய் காட்டி, கடைசியில் அந்த வீட்டை தனக்கு உரியதாக்கிக் கொண்டாள்.

உண்மையான அன்பு கொண்டிருப்பவர்களுக்கு இறைவன் தகுந்த கைம்மாறு தருவார் என்பதை இந்த நிகழ்வு நமக்கு அருமையாக எடுத்துக்கூறுகின்றது. இயேசுவின் அரசில் பங்குபெறத் தகுதியுடையோராய் ஆகவேண்டும் என்றால், நாம் நம்மோடு வாழக்கூடியவர்களிடம் உண்மையான அன்பு கொண்டிருக்கவேண்டும்.

எனவே, இயேசுவின் உன்னத அரசை நாம் உரித்தாக்கிக்கொள்ள அவர் நம்மிடம் எதிர்பார்க்கும் உண்மை, அன்பு போன்ற பண்புகளை வாழ்வாக்குவோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
நீ அரசன்தானோ?

♔ கிறிஸ்து - அனைத்துலக அரசர் பெருவிழா ♔

தானியேல் 7:13-14
திருவெளிப்பாடு 1:5-8
யோவான் 18:33-37

இன்று கிறிஸ்துவை அனைத்துலகிற்கும் அரசராகக் கொண்டாடுகிறோம். உலகின் பல இடங்களில் அரசாட்சி இன்று மறைந்துவிட்டாலும், 'அரசன்' என்பது நமக்கு ஒரு வார்த்தை-உருவகமாகவே இருக்கிறது. 'அரசன்' என்ற வார்த்தையைக் கேட்டவுடன், பகட்டான ஆடை, தலையில் மணிமுடி, கையில் செங்கோல், பெரிய அரியணை, காலில் பெரிய காலணி, சாமரம் வீசும் இரண்டு பெண்கள், கம்பீரமான பார்வை என எல்லாம் நம் உள்ளத்தில் தோன்றி மறைகின்றன. 'கிறிஸ்து அரசர்' உருவப்படங்களைப் பார்த்துப் பழகிய நம் மனம், கிறிஸ்துவையும் மேற்காணும் உருவத்திலேயே பார்க்கின்றது.

'அரசன்' என்ற சொல்லாடல் அல்லது 'அரசாட்சி' என்ற சொல்லாடல் இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர் சாமுவேலின் காலத்தில்தான் வருகின்றது. '... அனைத்து வேற்றினங்களிடையே இருப்பதுபோல ஓர் அரசனை நியமித்தருளும்' (1 சாமு 8:5) என்று இஸ்ரயேல் மக்கள் சாமுவேலிடம் முறையிட்டபோது, '... அவர்கள் உன்னைப் புறக்கணிக்கவில்லை. அவர்கள் நான் ஆளாதபடி என்னைத்தான் புறக்கணித்துவிட்டனர்' (1 சாமு 8:7) என்கிறார் ஆண்டவராகிய கடவுள். ஆண்டவராகிய கடவுளே அரசாண்ட நிலையில் அவருடைய அரசாட்சியைப் புறக்கணிக்கின்றனர் இஸ்ரயேல் மக்கள். ஆண்டவர் சாமுவேல் வழியாக அவர்களை எச்சரித்தது போலவே அரசர்கள் அவர்களுக்குத் தோல்வியாகவே முடிகின்றனர். இந்தப் பின்புலத்தில் எசேக்கியேல் இறைவாக்கினர் வழியாக இறைவாக்குரைக்கின்ற கடவுள், 'நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக் காப்பேன்' (எசே 34:11) என்கிறார். அன்று முதல் மெசியா அரசராக வருவார் என்ற நம்பிக்கை இஸ்ரயேல் மக்கள் நடுவில் வளரலாயிற்று. இயேசுவின் சமகாலத்தில் விளங்கிய எஸ்ஸீனியர்கள் என்ற அமைப்பினரும் 'அரச மெசியாவை' எதிர்பார்த்துக் காத்திருந்ததை அவர்களின் குழும வாழ்வு ஏடுகள் காட்டுகின்றன. இந்தப் பின்புலத்தில்தான் இயேசு பிறக்கின்றார்.

மரியாளுக்கு மங்கள வார்த்தை சொல்லும் கபிரியேல், 'அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது' (லூக் 1:33) என்று உரைத்து, இந்த எதிர்பார்ப்பைக் கூட்டுகின்றார். இயேசுவின் பணிவாழ்வு முழுவதும் அவருடன் இருந்தவர்களும், அவரால் பயன்பெற்றவர்களும் இந்த எதிர்பார்ப்பிலேயே வளர்கின்றனர். உண்டு பசியாறியவர்கள் அவரை அரசராக்கிவிடத் துடிக்கின்றனர் (யோவா 6:15). அவரோடு உடனிருந்தவர்கள் அவரின் அரியணையின் அருகில் அமர ஆசைப்படுகின்றனர் (மாற் 10:35-45). ஆனால், கழுவுற மீனில் நழுவுற மீனாக ஓடுகிறார் இயேசு.

இருந்தாலும், இயேசு தன்னை அரசன் என்று சொன்னாரா? ஆம். எப்போது? ஐந்து முறை தன்னை அரசன் என்று சொல்லாமல் சொல்கின்றார்:

1. 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?' (மத் 2:2) என்று தேடி வரும் மூன்று ஞானியருக்கு இயேசு மறுப்பு சொல்லவில்லை. அவர் ரொம்ப குட்டிக் குழந்தையாய் இருந்ததால் அவர் சொல்லியிருக்க வாய்ப்பில்லை.

2. 'ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர். ஏனெனில் விண்ணரசு அவர்களதே' (மத் 5:3) என்று தொடங்கி, தன் போதனை, தன் உருவகம், தன் அறிகுறிகள் அனைத்திலும் விண்ணரசை (அல்லது இறையரசு) மட்டுமே முன்னிறுத்துவதன் வழியாக, தன்னை அரசன் என்று மறைமுகமாகச் சொல்கின்றார்.

3. 'ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப் பெறுக!' (லூக் 19:38) என்று எருசலேம் மக்கள் வெற்றி ஆரவாரம் செய்தபோது மறுப்பேதும் சொல்லவில்லை.

4. 'அப்படியானால் நீ அரசன்தானோ?' (யோவா 18:37) என்று பிலாத்து விசாரித்தபோதும், 'யூதரின் அரசரே வாழ்க!' (யோவா 19:3) என்று பிலாத்தின் அரண்மனை படைவீரர்கள் கன்னத்தில் அறைந்த போதும், 'இதோ, உங்கள் அரசன்!' (யோவா 19:14) என்று மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டபோதும், தன் மௌனத்தால் 'ஆம்' என மொழிகின்றார் இயேசு.

5. 'இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்' (லூக் 23:42) என்ற நல்ல கள்வனுக்கு உடனடியாக பேரின்ப வீட்டில் இடம் தந்ததும் இயேசுவை அரசனாகத்தான் காட்டுகிறது.

மேற்காணும், ஐந்து நிகழ்வுகளில் நான்காம் நிகழ்வின் ஒரு பகுதியைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம்.

பிலாத்து இயேசுவை விசாரிக்கும் நிகழ்வை நற்செய்தியாளர் யோவான் மிக நீண்டதாகவும், ஆழமாகவும் பதிவு செய்கின்றார். பிலாத்துவின் முன் இயேசு மட்டும் விசாரிக்கப்படுவதாக நினைக்க வேண்டாம். இயேசுவைக் காட்டிக் கொடுத்ததால் இப்போது காட்டிக்கொடுத்தவர்களும் விசாரணை வளையத்திற்குள் வருகின்றனர். இதைப் புரிந்துகொண்டால் நமக்கு இன்றைய திருநாளின் பொருள் புரிந்துவிடும்.

பிலாத்து உரோமை ஆளுநன். யூதேயா, கலிலேயா, சமாரியா போன்ற பகுதிகளுக்கு அரசன் இருந்தாலும், இவர்களை நிர்ணயிக்கும் பொறுப்பை பிலாத்து பெற்றிருந்தார். அன்றைய அகில உலகப் பேரரசின் பதிலி பிலாத்து. ஆக, எங்கும் சீசர்தான் அரசராக இருக்கிறார் என்பதை உறுதி செய்ய வேண்டியவர் பிலாத்து. ஆனால், உரோமையின் ஆட்சி யூதர்களுக்குப் பிடிக்கவில்லை. எனவே, அவ்வப்போது சிலர் எழும்பி உரோமைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வர். அவர்களை அடக்க வேண்டியதும், அழிக்க வேண்டியதும் ஆளுநரின் பொறுப்பு. பிலாத்துவிடம் இயேசுவை ஒப்படைக்கும் அவர்கள் அவர்மேல் எந்தவொரு குற்றச்சாட்டையும் வைக்கவில்லை. 'இவன் குற்றம் செய்யாதிருந்தால் இவனை நாங்கள் உம்மிடம் ஒப்புவித்திருக்கமாட்டோம்' (யோவா 18:30) என்று மொட்டையாகச் சொல்கின்றனர். ஆனால், மற்ற நற்செய்தியாளர்களின் கருத்துப்படி, 'இவன் தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக்கொள்கிறான்' (காண். லூக் 23:2) என்று இயேசுவைக் குற்றம் சாட்டுகின்றனர். இயேசுவிடம் பிலாத்து கேட்கும் முதல் கேள்வியே, 'நீ யூதரின் அரசனா?' (யோவா 18:33) என்பதுதான். இந்தக் கேள்வியின் ஊற்று என்ன? என்று பிலாத்தை விசாரிக்கிறார் இயேசு: 'நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப் பற்றி சொன்னதை வைத்து கேட்கிறீரா?' பிலாத்து புத்திசாலி. இயேசுவின் கேள்விக்கு மற்றொரு கேள்வியால் விடை தருகிறார்: 'நான் ஒரு யூதனா, என்ன?' இப்படியே விசாரணை நகர, இயேசுவும், 'எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல' என்கிறார். பிலாத்துவுக்கு பாதி சந்தேகம் தீர்ந்துவிட்டது. இயேசுவால் சீசரின் ஆட்சிக்கு ஆபத்து இல்லை. ஏனெனில், 'மறுவுலகில் யார் ஆட்சி செய்தால் என்ன? இந்த உலகில் சீசர் தான் ஆள வேண்டும்' என நினைத்தார் பிலாத்து. மீதிச் சந்தேகத்தைத் தீர்க்க, 'அப்படியானால் நீ அரசன் தானோ?' என்று பிலாத்து கேட்க, 'அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன். வளர்ந்தேன். பணி செய்தேன்' என்கிறார். ஆக, அரசன் என்ற டைட்டிலை விடுத்து தன் அரச நிலையைப் பணியாக முன்வைக்கிறார் இயேசு. மீதி சந்தேகமும் தீர்ந்தது. இயேசு யூதர்களின் அரசன் இல்லை.

இப்போது பிலாத்துவுக்கு சந்தேகம் மக்கள் மேல் திரும்புகிறது: 'நீ யூதர்களுக்கு அரசன் இல்லை' என்பது தெளிவாகிறது என்று இயேசுவைப் பற்றி முடிவெடுத்த பிலாத்து, 'இந்த மக்களுக்கு யார் அரசன்?' என்பதை உறுதி செய்ய, இப்போது மக்களை விசாரிக்கிறான். நேருக்கு நேர் விசாரிக்காமல் மற்றொரு யுக்தியைக் கையாளுகின்றார். இயேசுவை நன்றாக அடித்து, மேலுடை, முள்முடி அணிவித்து அவரை வெளியே கொண்டு போய் மக்களிடம், 'இதோ, உங்கள் அரசன்' (யோவா 19:15) என, அவர்கள், 'எங்களுக்கு சீசரைத் தவிர வேறு அரசர் இல்லை' என்று சொல்கின்றனர். மறைமுகமாக மக்களையும் விசாரித்தாயிற்று. சீசரின் அரச நிலையை உறுதி செய்தாயிற்று. உடனே நிகழ்வை முடிக்கின்றார் யோவான்: 'அப்போது பிலாத்து அவரைச் சிலுவையில் அறையுமாறு அவர்களிடம் ஒப்புவித்தான். அவர்கள் இயேசுவைத் தங்கள் பொறுப்பில் ஏற்றுக்கொண்டனர்' (யோவா 19:16). 'ஆண்டவரே எங்கள் அரசர்' (திபா 47:7) என்று வாய்நிறையப் பாடிய இஸ்ரயேல் மக்கள், 'சீசரைத் தவிர எங்களுக்கு வேறு அரசர் இல்லை' என்று பொய்யுரைக்கின்றனர். இயேசு, 'உண்மை' என்ற வார்த்தையால் தன் அரச நிலையை உறுதி செய்தார். ஆனால், மக்கள், 'பொய்' ஒன்றைச் சொல்லி ஆண்டவராகிய கடவுளின் அரச நிலையை மறுதலிக்கின்றனர். இதுதான், யோவான் நற்செய்தியாளரின் இலக்கியத்திறன்.

ஆக, 'இயேசு அரசரா? யூதர்களின் அரசரா?' என்பது இன்றைய கேள்வி அல்ல.

மாறாக, 'எனக்கு அவர் அரசரா?' என்பதுதான் இன்றைய திருநாள் முன்வைக்கின்ற கேள்வி. நாம் ஏற்கனவே கண்ட ஐந்து நிலைகளில் மக்கள் தங்களுக்கு இயேசுவை அரசராக ஏற்றுக்கொண்டனர். அந்த நேரங்களில் அவர் அந்த டைட்டிலை மறுக்கவில்லை. மாறாக, அது தன்னை மையப்படுத்தியதாக இருந்தபோதுதான் இயேசு அதை மறுக்கிறார்.

'எனக்கு அவர் அரசராக இருக்க வேண்டும்' என்றால் நான் சில பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று பட்டியலிடுகின்றது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

1. உண்மையை எடுத்துரைத்தல்:
'உண்மையா? அது என்ன?' என்ற பிலாத்துவின் கேள்வி இன்றுவரை நாம் விடை காண இயலாத கேள்வி. ஏனெனில், உண்மை என்பது தனிநபர் சார்ந்தது. இடத்திற்கு இடம், சூழலுக்குச் சூழல் மாறுபடுவது. தண்ணீரின் மூலக்கூறுகள் 2 ஹைட்ரஜன், 1 ஆக்ஸிஜன் என்னும் உண்மை எல்லா இடத்திற்கும், எல்லா சூழலுக்கும் பொருந்தும். ஆனால், உறவுநிலை, அறநெறி, தனிநபர் வாழ்வு, சமூகம் என்று வரும்போது உண்மை எப்போதும் இடம் சார்ந்தே இருக்கிறது. அதனால்தான், ஒரு நபர் கீழிருந்து பார்க்கப்படும்போது போராளியாகவும், மேலிருந்து பார்க்கப்படும்போது தீவிரவாதியாகவும் தெரிகின்றார். இந்த சார்புநிலையைத்தான் பிலாத்து, 'உண்மையா? அது என்ன?' என்று கேட்கிறார். 'உண்மை' என்பதை இயேசுவே மற்றொரு இடத்தில் வரையறை செய்கிறார். 'உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை' (17:17) எனத் தமது சீடர்களுக்காகச் செபிக்கிறார் இயேசு. இங்கே, உண்மை என்பது இறைவனுக்கு ஒருவரை அர்ப்பணமாக்குகிறது என்றும், இறைவனின் பார்வையில் ஒன்றைப் பார்ப்பதே உண்மை என்பதும் பொருளாகிறது. ஆக, ஒரு நிகழ்வை அல்லது நபரை இறைவன் பார்ப்பதுபோல நான் பார்க்கும்போது நான் உண்மை உடையவன் ஆகிறேன். இறைவன் என்றும் மாறாதவர். ஆக, இந்த உண்மையும் சார்புநிலை அற்றது. இறைவன் எப்படிப் பார்க்கிறார்? 'மனிதர் பார்ப்பதுபோல இறைவன் பார்ப்பதில்லை. மனிதர் புறத்தைப் பார்க்கின்றனர். இறைவனோ அகத்தைப் பார்க்கின்றார்' (1 சாமு 16:7). புறத்தையும் தாண்டி அகத்தைப் பார்த்து, அகத்தை நிறைவாகப் பார்த்து, அதில் நிறைவைக் காண்பதே உண்மை. ஆக, நான் என் புறம்சார்ந்த நிறம், உடை, அழகு, ஆபரணம், செயல் ஆகியவற்றை விடுத்து, என் அகத்தில் இருக்கும் இறைவனைக் கண்டு, அதே மனநிலையில் எனக்கு அடுத்திருப்பவரின் இதயத்தின் இறைவனையும் நான் கண்டால் நான் உண்மை உள்ளவன் ஆகிறேன்.

2. பணி செய்தல்:
இயேசுவைப் பொறுத்தவரையில் அரசர் என்பவர் பணியாளர். பணியாளருக்கு என்று எந்தவொரு விருப்பு வெறுப்பும் இருக்க முடியாது. அவர் முழுக்க முழுக்க தன் தலைவருக்கு உரியவராக இருக்கிறார். இந்த நிலையை அடைய நிறைய சரணாகதி வேண்டும். ஏனெனில், இயல்பாகவே நம் உடலில் உள்ள ஜீன்கள் ஆளப்பிறந்தவை. அவை எவ்வழியிலும் தங்களைக் காத்துக்கொள்ளும் துணிவு பெற்றவை. அவை தன்னலம் ஆனவை. எந்நேரமும் அவை தங்களை மட்டுமே முன்நிறுத்துபவை. ஆக, நம் உடலின் ஜீன்களுக்கும், உள்ளத்தின் பேரார்வத்திற்கும் எதிர்திசையில் செல்வதுதான் பணியாளர் நிலை. ஏனெனில், பணியாளர் நிலை என்பது ஒரு நொறுங்குநிலை உணர்வு. இங்கே, ஒருவரின் விருப்பு, வெறுப்பு, நல்லது, கெட்டது எதுவும் மதிக்கப்படாது. ஒருவர் எந்நேரமும் கடிந்துகொள்ளப்படலாம், சந்தேகப்படப்படலாம், குற்றம் சுமத்தப்படலாம், பணிநீக்கம் செய்யப்படலாம், தண்டிக்கப்படலாம். அரசநிலைக்கு எதிர்நிலை இது. ஏனெனில், அரசரை யாரும் கடிந்துகொள்ளவோ, சந்தேகப்படவோ, குற்றம் சுமத்தவோ, தண்டிக்கவோ, பணிநீக்கம் செய்யவோ முடியாது. இப்படியாக, பணியாளர் நிலையோடு தன் அரசநிலையைப் பொருத்திப்பார்க்கிறார் இயேசு. என்னை அரசனாக்கும் இரண்டாவது பண்பும் இதுவே.

3. அவரின் குரலுக்குச் செவிமடுத்தல்:
'உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்' (யோவா 18:38). மெல் கிப்ஸன் அவர்கள் இயக்கிய தெ பேஸ்ஷன் ஆஃப் தெ க்ரைஸ்ட் என்ற திரைப்படத்தில் பிலாத்துவுக்கும், அவருடைய மனைவி கிளவுதியாவுக்கும் இடையே ஓர் உரையாடல் நடக்கும்: பிலாத்து: 'உண்மையா அது என்ன கிளவுதியா? எனக்கு நீ அதைச் சொல்வாயா?' கிளவுதியா: 'அதை நீங்களாகக் கேட்கும் வரை உங்களுக்கு யாரும் சொல்ல முடியாது.' ஆக, நானாகக் கேட்காமல் உண்மையை நான் அறிந்துகொள்ள முடியாது. அவரின் குரலே என் மனத்தில் உண்மையாக ஒலித்துக் கொண்டிருந்தால்தான் வெளியில் இருக்கும் உண்மை எனக்குத் தெரியும். இன்று நான் விரும்பிக் கேட்கும் அலைபேசி அல்லது நேரடி உரையாடல்கள், விரும்பாமல் கேட்கும் காணொளி, இசை என குரல்கள் என் காதுகளில் விழுந்துகொண்டே இருக்கின்றன. இந்தக் குரல்களும் என் உள்ளத்தில் கேட்கும் அவரின் குரல்களும் எதிரெதிரே இருக்கின்றன. நான் எக்குரலுக்குச் செவிமடுக்கிறேனோ, அக்குரலைப் பொறுத்தே என் உண்மையை நிர்ணயம் செய்கிறேன். அவரின் குரலை நான் கேட்பதும் அரச நிலைக்கு என்னை உயர்த்தும்.

இறுதியாக,
'அவரை அரசர்' எனக் கொண்டாடும் நான், 'அவரை நான் என் அரசராக ஏற்கிறேனா?' எனக் கேட்டு, அதற்குரிய பண்புகளை என் வாழ்வில் செயல்படுத்தினால், எனக்கும், என் குடும்பம், பணியிடம், சமூகம் என அனைத்து நிலைகளிலும் நான் அரசராக இருக்க முடியும். அவரைக் கொண்டாடும் நான் இன்று என்னையே கொண்டாடுகிறேன். அவரை அரசராக ஏற்கும் நானும் அரசராகிறேன். இதுதான் அவருடைய அரசின் மாற்றம், ஏற்றம், தோற்றம் - இதையே காட்சியில் காண்கின்றனர் தானியேலும் (முதல் வாசகம்), யோவானும் (இரண்டாம் வாசகம்).

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
Faculty Member
Saint Paul's Seminary
Tiruchirappalli - 620 001

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!