Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(4)  புனித யோவான்  நற்செய்தி

1) யோவான் என்பவர் யார்?
       கடவுளால் அனுப்பப்பட்டவரும் சீடரும் ஆவார். (1:6)

2) யோவான் இந்நற்செய்தியைத் தவிர, வேறு புதிய ஏற்பாட்டு நூல்கள் ஏதேனும் 
    எழுதினாரா?

    ஆம், மூன்று திருமுகங்களும், திருவெளிப்பாடும் எழுதியவர் இவரே.

3) யோவான் தன்னுடைய நற்செய்தியை எவ்வாறு ஆரம்பிக்கின்றார்?
    "தொடக்கத்தில் வாக்கு இருந்தது: அவ்வாக்கு கடவுளோடு இருந்தது:
     அவ்வாக்கு கடவுளாயுமிருந்தது". (1:1)

4)"வாக்கு" என்பதன் பொருள் என்ன?
     தமதிருத்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சுதன்.

5) "வாக்கு மனுவுருவானார்" என்றால் என்ன?
       தமதிருத்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சுதன் மனிதரானார் என்பது பொருள்.

6) திருமுழுக்கு யோவானைப்பற்றி உரைத்தது யார்?
    எசாயா இறைவாக்கினர். (1:23)

7) எசாயா இறைவாக்கினர் திருமுழுக்கு சேயாவானைப்பற்றி உரைத்தது என்ன?
   ஆண்டவருக்காக வழியை செம்மையாக்குங்கள் என பாலை நிலத்தில் குரல்  
    ஒன்று கேட்கின்றது. (1:23)

8) யோவான் இயேசுவைப்பற்றி கூறியது என்ன?
     " இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி" என்றார். (1:29)

9) " கேபா" என்றால் என்ன?
     " பாறை" என்பது பொருள். (1:42)

10) பிலிப்பு எந்த ஊரைச் சேர்ந்தவர்?
      பெத்சாயிதா. (1:44)

11) பிலிப்பு இயேசுவிடம் யாரை அழைத்து வந்தார்?

     நத்தனியேல். (1:45)

12) நத்தனியேல் தம்மிடம் வருவதைக் கண்ட இயேசு, அவரை குறித்து கூறியது
      என்ன?

      " இவர் உண்மையான இஸ்ராயேலர், கபடற்றவர்" (1:47)

13) இயேசு செய்த முதல் புதுமை என்ன?
      கானாவூரில் தண்ணீரை திராட்சை இரமாக மாற்றியது. (2:11)

14) இயேசு எத்தனை தண்ணீர் நிறைந்த கல்தொட்டிகளை, திராட்சை இரசமாக   
       மாற்றினார்?

       ஆறு. (2:6)

15) ஜெருசலேம் ஆலயத்தை கட்டி முடிக்க எத்தனை ஆண்டுகள் எடுத்தன?
      46 ஆண்டுகள். (2:20)

16) இரவில் இயேசுவைக் காண வந்தவர் யார்?
       நிக்கொதேமு. (3:1)

17) யோவான் எங்கே திருமுழுக்கு கொடுத்துக் கொண்டிருந்தார்?

      சலீம் என்னும் இடத்திற்கு அருகில் உள்ள அயினோன் என்னும் இடத்தில். (3:23)

18) இயேசு சமாரியப் பெண் ஒருவரை, மனமாற்றிய ஊர் எது?
       சிக்கார் (4:5)

19) இயேசு சமாரியப் பெண்ணிடமிருந்து கேட்டது என்ன?
      தண்ணீர் கேட்டார். (4:7)

20) இயேசு அப் பெண்ணிற்கு என்ன கொடுப்பதாக வாக்களித்தார்?
      வாழ்வு தரும் தண்ணீர். (4:7)

21) சிக்கார் என்னும் ஊரில் இயேசு எத்தனை நாட்கள் தங்கியிருந்தார்?
     இரண்டு நாட்கள். (4:43)

22) ஐந்து மண்டபங்கள் கொண்ட பெற்சதா என்னும் குளம் எங்கே இருந்தது?
      எருசலேமில், ஆட்டு வாயிலுக்கு அருகில். (5:42)

23) சிறுவன் ஒருவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும்  
       உள்ளன என இயேசுவிடம் கூறியது யார்?

      ஆந்திரேயா. (6:8)

24) இயேசு ஐந்து வாற்கோதுமை அப்பங்களை கொண்டு எத்தனை பேருக்கு      
       உணவளித்தார்?

      ஏறக்குறைய ஐயாயிரம். (6:10)

25) இயேசு மக்களுக்கு எவ்வகையான உணவு அளிப்பதாக வாக்களித்தார்?
      தனது சதையை உணவாகக் கொடுக்க வாக்களித்தார் (6:51)

26) இதைக் கேட்ட மக்கள் இயேசுவை நம்பினார்களா?

      இல்லை. பலர் அவரை விட்டு விலகினர். (6:66)

27) யூதாசைப்பற்றி இயேசு கூறியது என்ன?
     உங்களுள் ஒருவன் அலகையாய் இருக்கிறான். (6:70)

28) விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை இயேசுவிடம் கூட்டிக் கொண்டு வந்த 
      மக்களிடம், அவர் கூறியது என்ன?

     " உங்களுள் பாவம் இல்லாதவர், முதலில் கல் எறியட்டும்.(8:7)

29) உம் தந்தை எங்கே இருக்கிறார்? என்று கேட்ட யூதர்களுக்கு, இயேசு அளித்த     
      மறுமொழி என்ன?

    "என்னை உங்களுக்கு தெரிந்திருந்தால், ஒருவேளை என் தந்தையையும்
      தெரிந்திருக்கும்" என்றார். (8:19)

30) " உனக்கு இன்னும் 50 வயது கூட ஆகவில்லை, நீ ஆபிரகாமைக்
       கண்டிருக்கிறாயா"? என்று கேட்ட யூதர்களுக்கு இயேசு அளித்த பதில் என்ன?

       " அபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன்" என்றார். (8:58)

31) ஏழை பிறவியிலேயே பார்வையற்றவராகப் பிறந்தது ஏன்?
    கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும் பொருட்டே, இப்படிப் பிறந்தார்.
     (9:3)

32) மார்த்தா, மரியா என்னும் இவர்களின் சகோதரர்கள் யார்?

       லாசர். (11:2)

33) இயேசு பெத்தானியாவுக்கு செல்வதாகக் கூறிய பொழுது, தோமா 
      மறுமொழியாகக் கூறியது என்ன?

      " நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்" என்றார். (11:16)

34) பெத்தானியாவுக்கு ஜெருசலேமிலிருந்து எவ்வளவு தொலைவு?
      ஏறக்குறைய மூன்று கிலோ மீற்றர் (11:18)

35) லாசர் கல்லறையில் எத்தனை நாள் வைக்கப்பட்டிருந்தார்?
     நான்கு நாட்கள். (11:17)

36) இயேசு லாசரிடம் கூறியது என்ன?
      " லாசரே, வெளியே வா" என்றார். (11:43)

37) மரியாள் எப்பொழுது இயேசுவின் காலடிகளை நறுமணத்தைலம் கொண்டு பூசினார்?
       பாஸ்கா விழாவுக்கு 6 நாட்களுககு முன்பு. (12:1)

38) மரியாள் கொண்டு வந்த நறுமணத்தைலத்தின் அளவு என்ன?

         ஏறக்குறைய 320 கிராம். (12:3)

39) இத்தைலத்தை எவ்வளவுக்கு விற்றிருக்கலாம் என யூதாஸ் கூறினார்?
     300 தெனாரியத்திற்கு. (12:5)

40) குருத்து ஞாயிறு அன்று இயேசு எவ்வாறு ஜெருசலேமுக்குள் நுழைந்தார்?
     ஒரு கழுதைக் குட்டியின்மேல் அமர்ந்தபடி அங்கு சென்றார். (12:4)

41) மக்கள் இயேசுவை எவ்வாறு வாழ்த்தினார்கள்?
     " ஓசான்னா! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப் பெறுக! 
      இஸ்ராயேலின் அரசர் போற்றப் பெறுக" என்று சொல்லி ஆர்ப்பரித்தனர். (12:13)

42) " ஓசான்னா!" என்னும் எபிரேய சொல்லுக்கு பொருள் என்ன?
         " விடுவித்தருளும்" என்பது பொருள் (12:13)

43) இயேசு கழுதைக் குட்டியின்மேல் அமர்ந்தபடி ஜெருசலேமுக்குள் நுழைவார் 
      என முன்னறிவித்தது யார்?

      சக்கரியா (12:15)

44) இயேசு தன் சீடர்களின் பாதங்களைக் கழுவியபின், அவர்களுக்கு கூறியது
      என்ன?

     "ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன்
      என்றால், நீங்களும் ஒருவர் மற்றவர்களுடைய காலடிகளைக் கழுவக்  
      கடமைப்பட்டிருக்கிறீர்கள்(13:14)

45) இயேசு தன் சீடர்களுக்கு அளித்த புதிய கட்டளை என்ன?

      " நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல, நீங்களும் ஒருவர் மற்றவரிடம்
      அன்பு செலுத்துங்கள்" (13:34)

46) " ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்" என்று பிலிப்பு கேட்ட   
        பொழுது, மறுமொழியாக இயேசு கூறியது என்ன?

      " என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். (14:9)

47) இயேசுவின் பார்வையில் அவரை உண்மையிலே அன்பு செய்பவர் யார்?

         அவரது கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்கள். (14:15)

48) தன்னுடைய சீடர்களோடு என்றும் இருக்க யாரை அனுப்புவதாக இயேசு 
     வாக்களித்தார்?

     தூய ஆவியை அனுப்புவதாக வாக்களித்தார். (47:16)

49) இயேசு தம் சீடர்களுக்காக தந்தையிடம் வேண்டுவதை, எந்த அதிகாரத்தில்
      காணலாம்?

       17ம் அதிகாரம்.

50) சீமோன் பேதுறு வலக்காதை வெட்டிய தலைமைக்குருவின் பணியாளர் பெயர்
      என்ன?

        மால்கு (18:10)

51) இயேசு கைது செய்யப்பட்ட பிறகு அவரை யாரிம் கொண்டு சென்றனர்?
      அன்னாவிடம். (18:13)

52) இயேசுவைக் கன்னத்தில் அறைந்தது யார்?
      காவலருள் ஒருவர். (18:22)

53) பேதுறு இயேசுவை எத்தனை முறை மறுதலித்தார்?
      3 முறை. (18:13-18)

54) யாரை விடுதலை செய்யுமாறு மக்கள் கேட்டனர்?
      பரபாசை. (18:40)

55) இயேசு குற்றமற்றவர் என பிலாத்து அறிந்திருந்தாரா?
        ஆம். (19:6)

56) இயேசுவின் சிலுவையடியில் நின்றுகொண்டிருந்தவர்கள் யாவர்?
          1) இயேசுவின் தாய்
          2) கிளையேபாவின் மனைவி மரியா
          3) மக்தலா மரியா
          4) இயேசுவின் அன்புச் சீடர் யோவான் (19:25-26)

57) இயேசு தன் தாயிடமும், அன்புச் சீடர் யோவானிடமும் கூறியது என்ன?
        தம் தாயிடம் " அம்மா இவரே உன் மகன்" என்றார்.
        தம் சீடரிடம் " உன் தாய்" என்றார். (19:26-27)

58) இயேசு சிலுவையில் இருந்து கூறிய கடைசி வார்த்தை என்ன?

         " எல்லாம் நிறைவேறிற்று" (19:30)

59) இயேசுவின் அடக்கத்திற்கு நிக்கொதெம் கொண்டு வந்தது என்ன?
     வெள்ளைப்போளமும் சந்தணத் தூளும் கலந்த ஏறக்குறைய 30கிலோ கிராம்
     கொண்டு வந்தார். (19:39)

60) கல்லறைக்குள்ளே மக்தலதமரியா கண்டது என்ன?
     வெண்ணாடை அணிந்த இரு வானதூதரைக் கண்டார். (20:2)

61) மக்தலா மரியா இயேசுவைக் கண்டாரா?
      ஆம், தன்னை பெயர் சொல்லி அழைத்த இயேசுவைக் கண்டார். (20:16)

62) " ரபூனி" என்ற எபிரேயச் சொல்லுக்கு பொருள் என்ன?
      " போதகரே" என்பது பொருள். (20:16)

63) இயேசு உயிர்த்தெழுந்த நாள் அன்று தம் சீடர்களுக்கு தோன்றியபொழுது,       
       ஒருவர் மட்டும் அங்கு இல்லை, அவர் யார்?

       திதீம் என்னும் தோமா. 20:24)

64) எட்டு நாளுக்குப் பிறகு, இயேசு மீண்டும் தம் சீடர்கள் தோன்றியபொழுது, 
      அவர் தோமாவிடம் கூறியது என்ன?

       " இதோ என் கைகள் இங்கே உன் விரலை இடு" என்றார். (20:27)

65) தோமா மறுமொழியாகக் கூறியது என்ன?
      " நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்" (20:28)

66) பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் எத்தனை மீன்கள் பிடித்தனர்?
       153 (21:11)

67) இயேசு உணவருந்திய பின் சீமோன் பேதுறுவைப் பார்த்துக் கூறியது என்ன?

      என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர், என் ஆடுகளைப் பேணிவளர்"
       என்றார். (21:15-17)

68) " ஆட்டுக்குட்டிகள்" என இயேசு யாரைக் குறிப்படுகிறார்?
      கிறிஸ்தவர்களை.

69) " ஆடுகள்" என இயேசு யாரைக் குறிப்படுகிறார்?
       ஆயர்களை.

70) " நசரேத்து இயேசு யூதர்களின் அரசன்" என்னும் வசனம் எந்தெந்த 
        மொழிகளில் எழுதப்பட்டது?

        எபிரேயம், லத்தீன், கிரேக்கம். (19:20)

 

 உந்தன் சக்தி வாய்ந்த செபமே எந்தன் வாழ்வில் என்றும் ஜெயமே