Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 மங்கள வார்த்தைகள்

                                                                ஆண்டவர்  உம்முடனே


வாழ்க (சலோம் சமாதானம்) இவ்வாறு வாழ்த்துதலாகக் கருதப்பட்டதோ, அதேபோல் ஆண்டவர்  உம்முடனேயும் (ஆ உ) ஒரு வாழ்த்தாக பழக்கத்தில் இருந்தது. வாழ்த்தும் ஆசீரும் ஒன்றை ஒன்று தழுவியுள்ளதை ஒவ்வொரு கலாச்சாரத்திலும கண்கூடாகக் காணலாம். (Good morning - God be with you this morning) காலையில் கனிவான கடவுள் உன்னோடு இருப்பாராக! இதுபோன்று கடவுள் பெயரால் உம்மை வாழ்த்துகிறேன் என்பர்  ஜெர்மானியர். இவையிரண்டும் எபிரேய கிரேக்க கலாச்சாரத்தின் கலவையே. எனவே ஆண்டவர்  உம்முடனே (ஆஉ ) வாழ்த்து அல்லது ஆசீர் வசப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் "ஆண்டவர்  உம்முடனே" ஆசீர்  அருளும் திருமுறையின் மாதிரியாகவே இருந்துள்ளது. இந்த திருமுறையைக் கொண்டே இறைவன் கெதயோனையும், (நீதி:6:12) மோயீசனையும், (யாத்:3:12) யோசுவாவையும் யோசுவா:1:9) ஆசீர்வதிக்கின்றார். இறையாசீர்  பெற்ற யோசுவாவைப் பாராட்டிய பொழுது, மக்கள் அதே திருமுறையினால் ஆசி கூறுகின்றனர். யோசுவா:1:17). சவுல் தாவீதையும், (1சாமு:17:37) தாவீது சாலமோனையும் (1நாள்:22:11) இறையாசீர்  கூறி வாழ்த்தும்போது, இதே திரு முறையைக் கையாண்டுள்ளனர். இவையனைத்தும் (ஆஉ) திட்டவட்டமான வரையறுக்கப்பட்ட திருமுறையென இயம்பாவிட்டாலும், எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு பின்பற்றப்பட்ட ஒன்றென அறிவுறுத்துகின்றது.

இத்திரு முறையின் உட் பொருளை அறிய வேண்டும் என்றால், ஆசீரின் பாரம்பரியத்தை புரட்டி பார்க்க வேண்டும். மீட்பின் வரலாற்றில் முதலிடத்தில் இறைவன் மட்டுமே தகுதியுடன் பொருத்தமான ஆசீர்  வழங்கியிருக்கிறார் (நீதி:6:12) யோசு:1:9, நாளா:20:17). இரண்டாம் படியில் கடவுள் மட்டுமன்றி, அவருடைய இடத்தில் பதிலாளியாக இருக்கும் அரசர்கள், குருக்கள், இறைவாக்கினர்கள், குடும்பத்தலைவர்கள் ஆசிர்  கூறுகின்றனர். தொடர்ந்து தனிப்பட்ட விதத்தில், கடவுளிடமிருந்து எவரெல்லாம் ஆசீர்  பெற்று உயர்வடைகிறார்களோ, அவர்களும் ஆசீரின் கருவிகளாகும் தகுதி பெறுகின்றனர்.

எனவே இஸ்ராயேலின் பாரம்பரியத்தில் குடும்பத் தலைவர்களை மட்டும் இவண் காண்போம். குடும்பத்தின் தந்தை அல்லது திருத்தந்தை இறையாசீர்  பெற்றவர். அவரே கடவுளுக்குப் பதிலாக, குடும்பத்தை தலைமை ஏற்று நடத்துபவர். அவருடைய கட்டளை இறைவனின் திருவுளம் ஆகும். அவருடைய சொல்லைத் தட்டுவது கடவுளுடைய கட்டளையை மீறுவதாகும். அவர்  ஆசீர்வதித்தால் ஆசீரும், சபித்தால் சாபமும் வந்தடையும். (ஆதி:12:3). இந்த நடைமுறை ஒழுங்கை ஆபிரகாமும் (ஆதி;:18:18- 28:14) யாக்கோப்பும் (ஆதி:30:27-30) சூசையும் (39:5) பின்பற்றி வந்திருக்கின்றனர். இவர்கள் தாங்கள் பெற்ற ஆசீரை முறைப்படி தங்கள் வழிவந்ததோருக்கு வழங்கியுள்ளனர்.

வழிவழியாக வரும் ஆசீரை அளிக்கும் போதெல்லாம், கரங்களை உயர்த்தி அவர்களது தலைமீது பரப்பி கடவுள் பெயரால் ஆசீர்  உரைக்கின்றனர். (ஆதி:48:14). இச்சடங்கு முறையைப் பின்பற்றி நோவா தன் மக்களையும், ஆதி: 9:26-27) ஈசாக்கையும் யாக்கோப்பையும் (ஆதி: 27:28-29) யாக்கோப்பு சூசையின் மக்களையும் (ஆதி: 39:5) ஆசீர்வதித்துள்ளனர். பாரம்பரிய சிறப்புமிக்க இவ்வாசீரால், தந்தை தன் பொறுப்பையும், அதிகாரத்தையும், அனைத்து உரிமைகளையும், கடமைகளையும், எல்லா சொத்துக்களையும், சுருங்கக்கூறின் தன்வாழ்வையுமே ஆசி பெறுபவரிடம் ஒப்புவிக்கிறார். ஒருவர்  ஒருமுறைதான் வாழ முடியும். அந்த ஒரேவாழ்வை ஒரு முறைதான் பகிரமுடியும். வாழ்வையே வழங்க வல்ல ஆசிரை ஒரேமுறை ஒருவருக்கே அளிக்கினறார். (ஆதி:37:37-38)

வலிமையும், முழுமையும் நிறைந்த இவ்வாசீரை அழைப்பை ஏற்றவருக்கு அளிக்கின்றார்  இறைவன். அழைப்பு வந்தவுடனே அஞ்சி நடுங்குவோரை "அஞ்சாதே நான் உன்னோடு இருக்கிறேன்" எனத் திடப்படுத்துகின்றார். (லூக்:1:12-13, 29-30, 2:9-10 மத்:1:20, ஆதி:17:3, நீதி.13:6,22, யாத்:3:6, நீதி:6:22-23). தமது பெயரையே திடப்படுத்தி ஆசீர்  அருள்பவராக அறிவிக்கின்றார். உம்மோடு இருக்கின்றவராக இருக்கிறார். (யாத்3:14). எனவே மோயீசனோடு இஸ்ராயேலின் தலைவராக, விடுதலை வீரராக, உலகப்புகழ் பெற்ற பார்வோனையே அச்சுறுத்துபவராக, விடுதலை பயணத் தலைவராக, உடன்படிக்கையின் நடுவராக, ஆசீர்  வழங்கும் தலைவராக இருக்கின்றவரானார்.

தான் பெற்ற அதிகாரத்தினால் மோயீசன் இஸ்ராயேல் மக்களை ஆசீர்வதிக்கின்றார். (உப:28:1-14, 33:1-22). இறைவனின் கொடையான உடன்படிக்கை உறவில் இஸ்ராயேலை இணைக்கின்றார். அவர்களும் புதியதொரு உறவுக்குள் புகுகின்றனர். நீங்கள் என் மக்களாயிருப்பீர்கள் நான் உங்கள் கடவுளாயிருப்பேன். (எரே:7:23,11:4,24:7 எசே:1:20,14:11, ஓசே:2:25). இந்தப்பாடம் கீழேய நாடுகளின் திருமண ஒப்பந்தங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. " நான் உன் கணவனாய் இருப்பேன.; நீ என் மனைவியாய் இருப்பாய்" கணவன் மனைவி நெருக்கத்தை விட மேலாக, கடவுளும் மக்களும் உயிரும் உடலுமாய் நெருங்கச் செய்கின்றது இந்த ஆசீர்.

ஆனால் அன்னைமரியாள் பெற்ற ஆசீர்  இந்த வழியில் வந்தாலும் இதிலிருந்து வேறுபட்டதாகும். எரேமியா தாயின் வயிற்றிலிருக்கும்போதே ஆசீர்  பெற்றிருந்தார். (எரே:2:5). இதேபோல் ஸநாபக அருளப்பரும் பிறக்குமுன்னே ஆசீர்  பெற்றார். (லூ க்:2:41) இவர்களையும்விட மாறுபட்ட விதத்தில் கன்னி மரியா உருவாகும்பொழுதே, தனிச் சலுகையினால் சிறப்பு ஆசீர்  பெற்றிருக்கின்றார். இதைத்தான் ஏற்கனவே ஆண்டவர்  உம்முடனே (லூக்: 1:28) என வானதூதர்  அறிவித்தார்.

இவ்வாசீர்  பொழியப்பட்ட விதத்தை வேதாகமமே விளக்குகின்றது. ஆதியிலே வார்த்தை இருந்தார்;. அவ்வார்த்தை கடவுளோடிருந்தார். அவ்வார்த்தை கடவுளாகவுமிருந்தார்  (அரு:1:1). வார்த்தை உலகின் எல்லாப் பொருட்களையும், உயிரினங்களையும், மனிதர்களையும் படைத்தது. (ஆதி:1:1-31) அதே வார் த்தை கன்னி மரியாவையும் கருவில் உருவாகும் பொழுதே, தனக்கு ஏற்ற இல்லிடமான தூய ஆலயமாகப் படைத்தது. அதனாலே அவர்  அமலஉற்பவி என்று அழைக்கப்படுகின்றார்.

அதே வார்த்தையைத்தான் கன்னி மரியா தன் வயிற்றினில் கருத்தாங்கினார். இந்த உயிருள்ள ஆற்றல் மிக்க வார்த்தை (எபி:4:12). இவ் வார் த்தை தான் விரும்பியதைச் செய்து முடிக்கும் ஆற்றலுள்ளது (இசை: 55:11). என்றுமே அழியாத அந்த வார்த்தை (இசை:40:8) மரியாவின் அருகிலிருந்தது, வாயிலிருந்தது, அவர்  உள்ளத்திலிருந்தது (உரோ:10:8). ஆன்மாவின் உள்ளாழத்தையும், ஆவியின் உள்ளாழத்தையும் ஊருடுவியது. மூட்டு, மூளைவரை எட்டியது. கருத்துக்களையும், எண்ணங்களையும் சீர் தூக்கிப் பார் த்தது (எபி:4:12). இந்த வார்தைகளையே தன் மனதில் கொண்டு தியானித்துக் கொண்டிருந்தார்  மரியா (லூக்:2:19,51). இதன் பயனாக வார்த்தை உடலோடு, உடலாக, உயிரோடு, உயிராக, ஆளுமையோடு ஆளுமையாக ஒன்றித்துவிட்டது. அந்த வார்த்தையே மனுஉடல் எடுத்தது (அரு:1:14). மனித உடல் எடுத்த இறைக் குழந்தையைப் பெற்றெடுத்து, முன்னிட்டியில் கிடத்திப் பார்த்து, அள்ளி அணைத்து மகிழ்ந்தார்  மரியா (லூக்:2:17).

வார்த்தையான இறைமகன் இயேசு மரியாவுடனும், சூசையுடனும் தங்கி, முப்பது ஆண்டுகள் வாழ்ந்தார். திருக்குடும்பம் வாழும் இல்லத்தையே கோவிலாக்கினார். மண்ணகத்தை விண்ணகமாக மாற்றினார். அந்த இல்லத்தில் வாழ்வே வழிபாடானது. அவரது சொற்களே இறைவனின் திருவுளமானது (அரு:2:4). வாழ்வின் நிகழ்வுகளே வழிபாட்டின் நிகழ்வுகளாயின. அவருடன் ஒன்றித்திருந்த மரியா, சொல்லாலும் செயலாலும் இறைவனுக்குப் புகழ் சேர்த்தார்  (லூக்:2:46). மார்த்தாளின் சகோதரி மரியாவைப் (லூ க்:10:39) போன்று அவர்  காலடியில் மாதா இன்புற்றிருந்தார். இராயப்பரைப் போன்று (லூக்:9:33) அவருடன் தங்குவதே பேரின்பமெனக் கண்டறிந்தார்.

பேரின்பம் விடுதலைப்பயணத்தின் இறுதியிலே கிடைக்கும். இதை அறிந்த அவர்,  தொடக்க முதல் இறுதிவரை, இயேசுவுடன் இணைந்தே பயணம் செய்தார். இஸ்ராயேல் செய்த பயணத்தை தொடக்கத்திலேயே செய்து (மத்:2:19-23) வாழ்வு முழுவதும் விடுதலைப் பயணம் என அறிந்தார். இப்பயணத்தில் முணுமுணுக்கவோ, இறைத்திட்டத்தை எதிர்க்கவோ இல்லை. எண்ணற்றவருக்கு உணவும், (மத்:14:31-21), பானமும் அரு:7:37-38) அளித்தார்  இயேசு. இத்தனை நிகழ்ச்சிகளிலும், இணைபிரியாது இருந்ததுமன்றி, கல்வாரிச் சிலுவையடியிலும் ஒன்றித்தே இருந்தார் (அரு:19:25-29). இறுதிவரை இணைந்து நின்று,  மீட்பின் வெற்றியைக் கண்டார். ஆண்டவர்  அவருடனிருந்ததன் பலனைக் கண்டார்  என்று வாழ்த்துகிறார். புசிக்கும் நேரமென அறிந்து குழந்தை அழுவதற்கு முன்பே, அமுதூட்டுவாள் அன்பு நிறை அன்னை. இப்படிப் பால்மணம் மாறாப் பச்சிளம் குழந்தையை தாய்; ஒருபோதும் மறப்பதில்லை. ஒருவேளை தாய் கூட தன் குழந்தையை மறந்து விடலாம். ஆனால் ஒருபோதும் மறவாது, உயிர்  கொடுத்து உயிர்  காக்கும் தாயினும் மேலான தாயாக இருப்பாராக (இசை:49:15 லூக்:15:11-32) என்று வாழ்த்துகின்றார்.

நண்பராக, சகோதரராக, தாயாக, தந்தையாக நெருக்கமாகவும், உருக்கமாகவும் முப்பணிகளை நிறைவேற்ற ஆண்டவர்  உம்முடனே என ஆசீரருள்கின்றார். மேலும் அன்னை வழியாக தீமை அனைத்திலுமிருந்து விடுதலையும், அனைத்து அலுவல்களையும் நன்கு முடிக்க ஆசீரும், செபமாலையில் பெறுகின்றோம். ஏனெனில் இச் செபத்தில் வலிமை வாய்ந்த புனித அன்னையுடன் இணைகின்றோம். அவர்  வழியாக ஆசீர்  பெறமுடியும். காரணம் அவரே பெண்களுக்குள் ஆசீர்  பெற்றவர்.

அமெரிக்கர்கள் ஒருவர்  மற்றொருவரை சற்று வித்தியாசமாக அறிமுகம் செய்வர். அறிமுகம் செய்பவரும் செய்யப்படுபவரும்
How do you do  என்றே சொல்வர். ஏறக்குறைய இதே மாதிரியைத்தான் இஸ்ராயேலரும் பின்பற்றியிருக்கின்றனர்.  வாழ்த்துரையைத்  தொடங்குபவரும்  பதிலுரைப்பவரும்,        
" ஆண்டவர்  உம்முடனே " என்றே சொல்வர்  (ரூத்.2:4). உயர்  குடி மக்கள் பண்பில் சிறந்தவர்கள். பண்பை உயர்வாக மதிப்பவர்கள். பண்பிலிருந்து ஒருபோதும் விலகமாட்டார்கள்.

இந்த சிறந்த கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டு மரியா. இவர்  கலாச்சார விதிமுறைகளுக்கு உட்படுபவரேயன்றி விதிவிலக்காக இருக்கமாட்டார். இதனால்தான் அவரே முன்வந்து முதலில் வாழ்த்துக் கூறியிருக்கிறார்  (லூக்:1:40). அவரக்கே உரிய தனிப்பண்பு அவ்வாறிருக்க, இங்கு நாமே முன்வந்து செபமாலையில் வாழ்த்து உரைக்கிறோம். இதைக் கேட்டுவிட்டு கேளாதவர்  போல அவர்  இருக்க மாட்டார். பதிலுக்கு ஆண்டவர்  உம்முடனே என்று சொல்லி நம்மை அவர்  ஆசீர்வதிப்பார்.

அன்னை வாழ்த்தும்போது ஆண்டவர்  இயேசுவே வாழ்த்துகின்றார். ஏனெனில் அன்னையையும், ஆண்டவர்  இயேசுவையும் பிரிக்கமுடியாது. இணைபிரியாது ஒற்றுமையாக வாழ்பவர்கள். ஒருவருக்கு பிரியமில்லாததை மற்றவர்  செய்யமாட்டார். எனவே அன்னை ஆண்டவருக்கு பிரியமில்லாததை ஒருபோதும் செய்வதில்லை. அப்படியானால் அன்னை வாழ்த்துக் கூறும்வேளை ஆண்டவர்  இயேசுவே ஆசீர்வதிக்கின்றார். ஆண்டவரிடமிருந்து புறப்படும் எதுவும் ஆற்றல் மிக்கதாகவே இருக்கும். அந்த ஆசீர்  எதை நிறைவேற்றத் தோன்றுகிறதோ, அதை நிறைவேற்றியே தீரும். (இசை:55:11).

அன்னை " ஆண்டவர்  உம்முடனே" என நமக்கு ஆசீர்  அருளும்போது, நாம் இறை பிரசன்னத்துக்குள் வருகிறோம். இந்த இறைபிரசன்னம் அற்புதமாகச் செயல்படுகிறது. மலைபோன்ற நம் பாவச்சுமைகளை பனிபோல மறையச் செய்கின்றது. குறிப்பாக சிலைவழிபாட்டை முற்றிலுமாக அகற்றுகின்றது. 2அர:18:7ல் ஓசே அரசன் (ஆஉ) ஆசீர்  பெறுகிறார். படைப்பவருக்குரிய இடத்தைப் பிடித்திருக்கும் படைப்பின் பொருள்களை முற்றிலுமாக அழிக்கின்றார். அந்நியருக்கல்ல, ஆண்டவருக்கே ஆராதனை செய்கின்றார். இது போன்ற அன்னையின் ஆசீர்  பெற, அனைவரும் தாய்த் திருச்சபையிலே நிலைத்திருப்பார்களேயன்றி, மனித படைப்பின் அமைப்புக்களை நாடிச் செல்லமாட்டார்.

அன்னையின் ஆசீரால் தீய சக்திகளை நாம் விரட்டியடிக்க முடியும். இராட்சச மனிதனான கோலியாத் இஸ்ராயேல் அரசுக்கே அச்சுறுத்தலாக இருந்தான். அவனை வெல்லவில்லையானால், இஸ்ராயேல் பிலிஸ்தியருக்கு அடிமை. இந்தச் சூழ்நிலையை மீட்க வருகிறான் சிறுவன் தாவீது. கோலியாத்தைக் கொன்று வீழ்த்தினான். (1சாமு:18:17-30) அவ்வாறே ஆண்டவர்  உம்முடனே என்று அன்னை சொன்னாலே போதும். பேய் பிசாசுகள், நோய் நோக்காடுகள், சோதனைகள், வேதனைகள், கண்ணீர்கள், கவலைகள் யாவற்றையும் கோலியாத்தை அழித்தது போல அழித்துவிடலாம்.

நமது வாழ்த்துக்கு "ஆண்டவர்  உம்முடனே" எனப் பதிலுரைக்கு அன்னையின் ஆசீரோடு தொடங்கப்படும் அலுவல், விரைவிலேயே முடியும். எருசலேம் தேவாலயத்தைக் கட்ட முயற்சிக்கிறார்  சாலமோன் அரசர். ஆண்டவர்  உம்முடனே என தாவீது அரசர்  சாலமோனை ஆசீர்வதிக்கின்றார். அவர்  உலகெங்கிலுமுள்ள கலைஞர்களைக் கொண்டு வந்தார். வனப்புமிக்க, கலைநயமுள்ள, இறைபிரசன்னத்திற்குத் தகுதியான மிகச் சிறந்த ஆலயத்தைக் கட்டி முடிக்கின்றார்  (நாளா:22:11-16). செபமாலையைச் செபித்துக் கொண்டு அன்னையின் ஆசி பெற்று, எந்தப் பணியைத் தொடங்கினாலும், அதிசயமான வெற்றியடைவோம் என்பதை இந்நிகழ்ச்சி உறுதிப்படுத்துகின்றது.

ஆசீரளிக்கும் அன்னை நம்மை நமது அழைத்தலில் உறுதிப்படுத்துகின்றார். இறைவாக்கினர்  பதவிக்கு எரேமியாசை இறைவன் அழைக்கின்றார். "நான் சிறுபிள்ளை எனக்குப் பேசவராது" என்று தடை சொல்கிறார்  எரேமியாஸ். "நான் உன்னோடிருக்கிறேன் என் வார்த்தையை நான் உன்வாயில் வைத்துள்ளேன்" என்றார்  இறைவன். அவரும் ஆற்றல் பெற்று இறைவாக்குப் பணியை சிறப்பாகவே செய்கிறார். செபமாலை செபித்து அர்ப்பண வாழ்வை இறைவனிடம் ஒப்படைப்போமெனில், அவர்  ஆண்டவரிடம் ஆசீர்  பெற்றுத் தந்து, நம்மைக் கறைபடாமல் காப்பாற்றுவார். பணி நிறைவேற்றத் தேவையான அனைத்து ஆற்றலையும் பெற்றுத் தருவார்.

அன்னைமரி வழிபாட்டிற்கு முதலிடம் கொடுப்பவர். பாஸ்கா தவறாமல் எருசலேம் சென்றவர்.(லூ க்:2:41). இல்லச் செப வழிபாட்டிற்கு அவர்  ஒருபோதும் தவறியதில்லை. இவ்வாறு வாழ்வையே வழிபாடாக மாற்றியவர். இல்லத்தில்தான் என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப் போற்றுகின்றது" (லூக்: 1:39-59) என பாடினார். அவர்  பங்கேற்ற அனைத்து வழிபாட்டிலும் ஆண்டவர்  உம்முடனே ஆசீர்  அடிக்கடி உரைக்கப்பட்டிருக்கவேண்டும்.

அதுபோல பங்கேற்பாளரும் அதற்குத் தகுந்த அதே பதிலுரையைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். இவ்வாறுதான் திருச்சபையின் திருவழிபாட்டினுள் இந்த ஆசியுரை புகுத்தப்பட்டிருக்கின்றது. ஆகையால் தான் இன்றும் அதே வாழ்த்துரையை நம் வழிபாட்டில் பயன்படுத்துகிறோம். அன்று மரியா சிலுவை அடியில் நின்றார். அன்றைய சிலுவைப்பலிதான் இன்றைய திருப்பலி. இங்கும் அன்னை ஆண்டவரை விட்டு அகலாது நின்று கொண்டிருக்கிறார். ஆண்டவர்  இயேசுவுடன் அன்னை இணைந்து ஆண்டவர்  உம்முடனே என நம்மை ஆசீர்வதிக்கின்றார். நாமும் அதே பதிலை முறையே சொல்லுகின்றோம். அப்போது அன்னை பல்வேறு தேவைகளை நிறைவேற்றித் தருகின்றார். குறிப்பாக, குருக்கள் செபமாலை செபிக்கையில், அவர்களின் அரசர், இறைவாக்கினர்,  குருத்துவ முப்பணிகளை நிறைவேற்றும் ஆசீரை அன்னை பெற்றுத் தருகின்றாள்.

முதலில் இறைவன் இயேசுவை ஓர்  அரசனாக வெளிப்படுத்துகின்றார். தாவீதின் அரியணையில் அவர்  வீற்றிருப்பார். அவர்  இஸ்ராயேல் மீது என்றென்றும் அரசாள்வார்  என அறிவித்துள்ளார்  (லூக்:1:23-33). நாம் "ஆண்டவர்  உம்முடனே" என வாழ்த்தும்போது அன்னை "ஆண்டவர்  உனக்கு அரசருக்குரிய இறையாண்மை செலுத்தும் பணிக்கான அருளை அளிப்பாராக" என்கிறார். பதிலிறுக்கும் அரசுரிமையில் பங்கேற்கும் (1இரா:2:9) நாம் அப்பணியினைச் செவ்வனே செய்ய ஆசீர்வதிக்கப்படுகிறோம். ஆனால் தண்ணீர்  தாமரைபோல நாம் இவ்வுலகில் வாழ்வோமென்றால்தான், இவ்வுலகை ஆண்டு நடத்துவதற்குத் தேவையான அருளை நாம் அன்னை மூலம் பெறமுடியும்.

சமாரியப் பெண் இயேசுவுடன் உரையாடிக்கொண்டிருக்கிறாள். படிப்படியாக அவரை இறைவாக்கினர்  (அரு:4:19) என இனம் கண்டு கொள்கிறாள். இறைவாக்குப்பணியில் பங்கேற்கும் நாம் இறைத் திருவுளத்தை உய்த்துணரவேண்டும். இதை மற்றவரும் கடைப்படித்து ஒழுகத் துணை செய்ய வேண்டும். ஒரு புறமும் சாராது வாளாவிருக்கும் நிலை கடந்து, நல்லனவற்றை அதுவும் இறைவன் விரும்புவனவற்றை அறிந்து வாழ அருள் பெறுகிறோம்.

மெல்கிசேதக் முறைப்படி நீர்  என்றென்றும் குருவேயென ஆண்டவர்  ஆணையிட்டுச் சொன்னார்  (சங்:110:4). திருமுழுக்கில் பொலிவுபெற்ற நமக்கு கிறிஸ்து தம் குருத்துவத்தில் பங்களிக்கின்றார். தகுதியுடன் பங்கு பெற நம் உடலை கடவுளுக்குகந்த பரிசுத்த உயிருள்ள பலியாக ஒப்புக் கொடுத்து, ஆன்மீக வழிபாடு செலுத்தவேண்டும். (உரோ:12:1). இந்த எதிர்பார்ப்புடன் குருத்துவப் பணியைத் திறம்பட ஆற்ற அன்னையின் ஆசீரால் அருளை அதிகமாகவே பெறுகிறோம்.

திருப்பலியில் கிறிஸ்துவே தலைவராகவும், பலி நிறைவேற்றுபராகவும் பிரசன்னமாகியிருக்கிறார். அவருடன் அன்னையும் பலி ஒப்புக் கொடுப்பவராக நின்று கொண்டிருக்கிறார். இந்த இறைமகன் இயேசுவின் வெளிப்படை அடையாளமாகவே குருவானவர்  நின்று கொண்டிருக்கிறார். எனவே குருவானவர்  வாழ்த்தும்போது, அன்னையோடு  ஆண்டவர்  இயேசுவே  வாழ்த்துகின்றார்.     எனவே
"ஆண்டவர்  உம்முடனே" குருவானவர்  வாழ்த்தும்போது, இறைவன் உமக்குத் தந்தையாக, தாயாக, சகோதரராக, நண்பராக இருப்பாராக என்று கூறுகின்றார்.

கிறிஸ்துவின் பெயரால் குரு " இறைவன் உமக்குத் தந்தையாக இருப்பாராக" என்று வாழ்த்துகின்றார். அணுக முடியாத ஒளியில் வாழ்ந்தவர்  இறைவன். இப்பொழுது அருகில் வந்ததுமல்லாமல், நெருக்கமான உறவுள்ள அப்பா என்றழைக்க (லூக்:11:2) கிறீஸ்து நமக்கு கற்றுத் தந்துள்ளார். "அப்பத்தையோ மீனையோ கேட்டால், அவற்றை மட்டுமல்லாமல், அதைவிட மேலாக நமக்கு என்னென்ன தேவைகள் ஏற்படுமோ, அவை அனைத்தையும் உங்களுக்குத் தருகின்ற தந்தையாக இருப்பராராக" என ஆசீர்  அருளுகின்றார்.

தந்தையாக இருப்பதுபோல் தாயாகவும் இருப்பாராக. முடிவாக நாம் ஒவ்வொரு முறையும்  "ஆண்டவர்  உம்முடனே" என்று சொல்லும்போது  "மரியே உமக்குத் தனி வரம் உண்டு, நீர்  சிறப்புச் சலுகை பெற்றவர் , உம்மை ஆண்டவர்  ஆசீர்வதித்துள்ளார், அதனால் அவர்  உம்மிடம் நிறைந்துள்ளார், உம்மோடு உம் இல்லத்தில் தங்கி வாழ்ந்துள்ளார், நீர்  பங்கேற்ற சிலுவைப்பயணத்தை உம்முடன் இணைந்து நின்று வெற்றி காணச் செய்தார்  என்றுரைக்கின்றோம்.

 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே
பெண்களிலே நீர் பேறுபெற்றீர்!! உம் மகனும் வாழியவே!!!