வருடம் தோறும் வந்து போகும் இத்தவக்காலம் எம்மை மனமாற்றத்துக்கு
அழைப்பு விடுகிறது. தவக்காலம் என்றவுடன் நாங்கள் ரொம்பவும்
பிஸி ஆகிடுவோம். நாற்பத்தைந்து நாள் விரதம் இருப்போம், மரக்கறி
சாப்பிடுவோம். காசு செலவழித்து மைல் கணக்கில் பயணம் செய்து
சிலுவை பாதை செய்வோம். ஏழைகளுக்கு உதவி செய்வோம், இப்படியெல்லாம்
செய்யும் போது இறைவன் எம்மை பார்த்து "உண்மையாகவே நான்
விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்: எரிபலிகளைவிட,
கடவுளை அறியும் அறிவையே நான் விரும்புகின்றேன்" (ஓசேயா 6 : 6
), அதலால் "நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம்,
இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம்
திரும்பி வாருங்கள். அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்:
நீடிய பொறுமையுள்ளவர், பேரன்புமிக்கவர்: செய்யக் கருதிய
தீங்கைக் குறித்து மனம் மாறுகின்றவர்" ( யோவேல் 2 :13 ). என்று
எங்களைப்பார்த்து சொல்கிறார் . ஆகவே இறைவன் எம்மிடம் எதிர்
பார்ப்பது எமது மனதின் மாற்றத்தையே. "இப்பொழுதாவது உண்ணா
நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு
என்னிடம் திரும்பி வாருங்கள் என்கிறார் ஆண்டவர். ஆகவே இந்த 45
நாட்களில் ( விபூதி புதன் தொடக்கம் - பெரிய வெள்ளி வரை ) எம்வாழ்வில்
முழு மாற்றத்தை ஏற்படுத்த முயல்வோம். எவையெவை எம்மை இறைவனிடமிருந்து
பிரிக்கின்றதோ அவற்றை இறைவனின் உதவியோடு இல்லாமல் ஒழிப்போம்.
எவற்றை எம்வாழ்வில் மாற்ற முடியாமல் இருக்கிறதோ அவற்றை இந்த 45
நாட்களில் இறை உதவியோடு மாற்ற முயல்வோம். இன்று நாங்கள் மது,
மாது, இன்டர்நெட், போதைபொருட்களுக்கும் அடிமையாகி, மேலும் இடைவிடாது
தொலைக்காட்சி நாடகங்கள், அதிலும் பிசாசின் ஆதிக்கத்தின் கீழ்
நடக்கும் Big Boss என்ற கேவலம் கெட்டுப் போன, குடும்பங்களையும்,
இளைஞர்களையும் நாசப்படுத்தும், சீர்குலைக்கும் இந்த சீரியல்களுக்கு
அடிமையாகி, அதிலிருந்து வெளி வர முடியாமல் தவித்து கொண்டு இருக்கிறோம்.
இதனால் வாழ்கையில் வேதனை, கவலை, குற்ற உணர்வுகளோடும், ரகசியங்களோடும்,
மனதில் விரக்தி, தோல்வியோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இறைவனை
நாம் தேடும் போது, அவரும் எம்மை தேடி வருவார். நாம் எமது பலவீனங்களுக்கு
எதிராக போராட எடுக்கும் முயற்சிகளை அவர் பார்க்கும் போது கட்டாயம்
எமக்கு அவர் உதவி கரம் நீட்ட வருவார்.
இந்த 45 நாட்களில் எவற்றை நாம் மாற்ற வேண்டுமோ,அவை எல்லாவற்றுக்கும்
ஒரு முற்றுப்புள்ளி வைப்போம். ஒவ்வொரு தீய எண்ணகளும் வரும்
போது அல்லது தீய செயல்கள் செய்ய எம் உள்மனம் எம்மை தூண்டும்
போது கிறிஸ்துவின் முகத்தை பார்தோமென்றால் நாம் இறைவனுக்காகவே
இவற்றை தவிர்த்து கொள்வோம். அவற்றை எதிர்த்து போராடுவோம். ஒவ்வொரு
நாளும் நற்கருணை நாதரை தேடி செல்வோம். அவரால் மாத்திரமே எம்மனதில்
இருக்கும் புண்களை மாற்ற முடியும். எப்படி உடைந்து போன எமது
காரை கராச்சில் கொண்டு போய், அதை திருத்தி முடிக்க மட்டும் பல
நாள் பொறுமையுடம் காத்து இருக்கிறோமே, அதே போன்று உடைந்து,
நொந்து, காயப்பட்ட, வேதனையோடு இருக்கும் எம் வாழ்கையை நற்கருணை
நாதர் முன் கொண்டு போய் அமைதியாக இறைவன் தொட்டு குணப்படுத்த
அவருக்கு அனுமதி கொடுப்போம். அவரிடம் நாம் ஒன்றும் கேட்க
தேவையில்லை, ஏனெனில் எமக்கு என்ன தேவையோ அது என்னவென்று அவருக்கு
நன்றாக தெரியும். ஆனால் நற்கருணை பேழையின் முன் எங்களை, எங்கள்
உடைந்த வாழ்கையை கொண்டு போய் வைக்கும் போது மாத்திரமே அவர் எம்மை
தொட்டு குணமாக்குவார். அது போன்று இந்த 45 நாட்களில் நல்ல,
முழுமையான, மற்றும் ஒன்றையும் மறைக்காத ஒரு பாவசங்கீர்த்தனம்
செய்ய முயல்வோம். நல்ல, முழுமையான, மற்றும் ஒன்றையும் மறைக்காத
பாவசங்கீர்த்தனம் இல்லாத வாழ்க்கை நடைபிணமான ஒரு
வாழ்க்கையாகும். ஆகவே இந்த 45 நாட்களை எமது வாழ்வில் மாற்றத்தை
ஏற்படுத்த இறைவனை நாடுவோம். டிவிக்கு ஒய்வு கொடுப்போம். படிக்க
விருப்பமில்லையா? நான் இறைவனுக்கா படிப்பேன் என்று இன்னும்
கூடிய நேரம் எடுத்து படிக்க வேண்டும். இன்டர்நெட்டுக்கு நேரம்
கொடுத்து பாவிப்போம். அதை நல்லதுக்கு மாத்திரம் பாவிப்போம்.
தீய எண்ணங்கள், யோசனைகளை வரும் போது இறைவனின் கரத்தை இறுக்கி
பிடிப்போம்.
எல்லவற்றையும் விட எமது பகைவர்கள், எதிர்களான எமது சகோதர்களை
தேடிசெல்வோம். அன்றைய காலத்தில் எமது பக்கத்து கிராமத்து மக்கள்,
பிற மொழி மக்கள் தான் எமது பகைவர், மற்றும் எமது கடன் காரர்கள்
எமக்கு எதிர்களாக இருந்தார்கள், ஆனால் இன்றோ ஒரே தாயின் வயிற்றில்
பிறந்த பிள்ளைகள், சகோதரர்கள் நாங்கள் எங்களுக்குள்ளேயே
போட்டி, பொறாமையினால், காசு, சொத்துக்காக பிரிந்து போய் பகைவர்கள்,
எதிரிகளாக வாழ்ந்து கொண்டிருகிறோம். மன்னிப்புகோ,
பேச்சுவார்தைக்கோ இடமில்லை, சொந்தங்கள், பந்தங்கள் வேண்டாம்,
எங்களுக்கு நாங்களே காணும், எங்களுக்கு பிறத்தியார் போதும் என்று
சொல்லி உறவுகளில் பாரிய விரிசல்களை ஏற்படுத்தி வைத்து கொண்டு
வாழ்கிறோம். ஆனால், ஆண்டவரோ, கொலை செய்யாதே; கொலை செய்கிறவர்
எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர் என்று முற்காலத்தவர்க்குக்
கூறப்பட்டிருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள்.✠ஆனால், நான்
உங்களுக்குச் சொல்கிறேன்: தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர்
தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ
முட்டாளே என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்;
அறிவிலியே என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார். ஆகையால், நீங்கள்
உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள்
சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென
அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள்
காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக்
கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.
உங்கள் எதிரி உங்களை நீதிமன்றத்துக்குக் கூட்டிச் செல்லும்
போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள்.
இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர்
காவலரிடம் உங்களை ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள்.
கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற
மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன் . (மத்தேயு 5:
21 -26) என்று இயேசு உறுதியாக எங்கள் அனைவருக்கும் சொல்கிறார்.
இந்த 45 நாட்களில் இறைவனின் பிள்ளையாக மாறுவோம். இறைவனின் உதவியோடு
அவர் வாழ்வை எமது வாழ்வாக மாற்றி அமைப்போம். இறைவனோடு இணைந்து
இறைவனுக்காக வாழ்வோம். பல வருடங்களாக, நாங்கள் சொல்லாமல்
வைத்திருக்கும், அந்த மறந்த போன அந்த பெரிய பெரிய பாவங்களை பாவசங்கீர்த்தன
தொட்டியில் அமர்ந்திருக்கும் குருவிடம் அறிக்கையிட்டு, எமது
வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம். பாவத்தோடு நாங்கள்
இறைவனை நற்கருணை வடிவில் பெற்றுக்கொள்ளும் போது, எமது வாழ்வு
இன்னும் இன்னும் இருளடைந்து கொண்டே போகும் என்பதை மறக்க
வேண்டாம். தூய உள்ளத்தில் மாத்திரமே இறைவன் குடிகொள்வார் என்பதை
மறந்துவிடக் கூடாது. இயேசு, எத்தனையோ பேர்களை குணப்படுத்தினார்
மற்றும் குணப்படுத்திக் கொண்டேயிருக்கிறார், ஆனால் அவர் அவர்களை
குணப்படுத்த முன், உனது பாவங்கள் மன்னிக்கப்பட்டன, எழுந்து
வீட்டுக்கு செல் என்று சொல்லி, அந்த நோய்க்கு காரணமான ஒருவரின்
பாவங்களை மன்னித்து, அவனை/ளை குணப்படுத்துகின்றார். அவர் அவனை/ளை
தொடவில்லை, ஆசீர்வதிக்கவில்லை, கட்டி அணைக்கவுமில்லை, தட்டி
கொடுக்கவுமில்லை, மாறாக அவனது பாவத்தை மன்னிக்கிறார். அவனது பாவங்கள்
மன்னிக்கப்பட்டதும், அவன் குணமாக்கப்படுகிறான். இப்பொழுது
புரிகிறாதா ஏன் எங்கள் குடும்பங்களில் நிம்மதி இல்லை, சந்தோசம்
இல்லை, மகிழ்ச்சியில்லை, இல்லம் இருளடைந்து, குடும்பங்கள் சிதறுண்டு,
மன்னிக்க முடியாமல், சிரிக்க முடியாமல், பிள்ளைகள் தாங்களும்
தங்கள் பாடுகளுமென்று, அவர்கள் நினைத்ததை செய்து கொண்டு
பெற்றோரையும் மதிக்காமல், அவர்கள் சொல்வதையும் கேட்காமல் ஏனோதானோ
என்று வாழ்கிறார்கள் என்று?????
ஜோனாஸ் இறைவனை விட்டு தப்பி ஓடுகிறார். இறைவன் போக சொன்ன இடத்துக்கு
செல்லாமல், மாற்று திசையில் நோக்கி ஒளித்து ஓடுகிறார். அவர்
போகும் கப்பல் புயலில் அகப்படுகிறது. கடலில் பெரும் கொந்தளிப்பு
உண்டாயிற்று; கப்பல் உடைந்துபோகும் நிலையில் இருந்தது. கப்பலில்
இருந்தவர்கள் திகிலடைந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தம் தம்
தெய்வத்தை நோக்கி மன்றாட தொடங்கினார்கள். கடைசியில் ஜோனாவை
தூக்கி கடலில் வீச, கொந்தளிப்பு அடங்கி போகிறது. ஒருவனின் கீழ்படியாமை,
மற்றும் அவன் செய்த பாவத்தினால் கப்பலில் பயணம் செய்த அனைவரும்
துன்புறுகிறார்கள், குழப்பப்படுகிறார்கள், பேரச்சம் கொள்கிறார்கள்.
கப்பலில் பயணம் செய்த எல்லாரும் பாவம் செய்யவில்லை, மாறாக
ஜோனாஸ் என்ற அந்த தனிமனிதன் மட்டுமே பாவம் செய்கிறார். எமது
குடும்பங்களிலும் இன்று இது தான் நடக்கின்றது. பாவசங்கீர்த்தனம்
செய்யாமல் வாழும் ஒரு சிலரால் எமது குடும்பம் முழுமையாக ஆட்டம்
காணுகிறது, குழப்பப்படுகிறது. சோதிக்கப்படுகிறது.
சிந்திப்போம், எம்மை பரிசோதித்துப் பார்ப்போம். எம்மை
பார்த்துகொண்டிருக்கும் இறைவனை உற்று நோக்குவோம். மனம் வருந்துவோம்,
அழுவோம். நல்ல, முழுமையான, ஒன்றையும் மறைக்காத பாவசங்கீர்த்தனம்
செய்து, எமது இதயத்தில், வாழ்வில், குடும்பத்தில் ஒளி ஏற்ற இறைவனுக்கு
அனுமதி கொடுப்போம். செபிக்க மனமில்லாமல், விருப்பமில்லாமல், இறைவனோட
பேசாமல், அவரோடு உறவாடாமல், பாவம் செய்த பின் ஆதாம், ஏவாள் ஓடிப்போய்
ஒளித்ததை போன்று நாங்களும் இன்று இறைவனை அன்பு செய்யாமல், அவரை
தேடாமல், அவரது பிரசன்னத்தை எம் வாழ்வில் உணராமல் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம். அதனால் தான் இன்று களைத்துப்போய், வேதனையோடும்,
புண்கள், மன, உடல் வலி - நோய்களோடு வாழ்ந்து கொண்டிக்கிறோம்...
எழுவோம், எழுந்து இறைவனை தேடுவோம், அவரின் உதவியோடு உடைந்து
போன மற்றும் காயப்பட்ட எமது வாழ்க்கையை மாற்றி அமைப்போம், இந்த
தவக்காலத்தை நல்ல முறையில் வாழ்வோம்.இடைவிடாது "எங்கள் அன்றாட
உணவை இன்று எங்களுக்குத் தாரும்
எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும்
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்,
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்" என்று எங்கள் வானகத்தந்தையை
நோக்கி மன்றாடுவோம். ஆமேன்!. |
|