![]() |
![]() |
![]() |
|
திருமணத் திருப்பலி முன்னுரை | சகோதரி மெரினா | ||
கும்ப ஆரத்தி ஆக்கமுள்ள பணிகள் பல பங்கினில் மேற்கொண்டு ஆர்வமுடன் பணி செய்யும் பங்கின் பங்குத் தந்தை (திருப்பலி நிறைவேற்றும் குருக்களின் பெயர்கள்) மற்றும் மகிழ்விற்கு மகிழ்வு சேர்க்க வந்திருக்கும் ஏனைய குருக்கள் அருட்சகோதரிகள் இறைமக்கள் அனைவரையும் தமிழர் பண்பாட்டு வரவேற்பு முறையோடு வரவேற்க விரும்புகிறோம். மணத்தோடு மகிழ்வையும் தருவது சந்தனம். வீரத்திற்கும் வித்தியாசமான சிந்தனைக்கும் காரணமாய் இருப்பது குங்குமம். இத்தகைய இரு பெரும் நற்குணங்களைத் தன்னகத்தேக் கொண்ட சந்தனம் குங்குமம் கொண்டு திருப்பலி சிறப்புச் செய்ய வந்திருக்கும் குருக்களையும் மற்றும் இத்திருப்பலியில் பங்கேற்று மணமக்களுக்கு ஆண்டவரின் ஆசீரை அள்ளிப் பெற்றுத் தர ஆவலாய் காத்திருக்கும் உங்களையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். செழிப்பைத் தரும் மஞ்சள் நிற நூல் கொண்டு சுற்றிய நிறை குடம், அதில் தீமையை விரட்டும் மாவிலை, கரடும் முரடும், இனிமையும் சுவையும் சேர்ந்தது தான் வாழ்க்கை என்று அடையாளப்படுத்தும் முழுத் தேங்காய், இவை அனைத்தையும் உள்ளடக்கியது தான் கும்ப ஆரத்தி. இத்தகைய கும்ப ஆரத்தி எடுப்பது நிறைவையும் மகிழ்வையும் முழுமையாக ஒருவர் பெற வேண்டும் என்னும் நல்லெண்ண அடிப்படையில் தான். எனவே இன்று மணநாள் காண காத்திருக்கும் மணமக்களை வாழ்த்தி அவர்களுக்காக செபிக்க திருப்பலி நிறவேற்ற வந்திருக்கும் குருக்கள் இறைமக்களாகிய உங்கள் அனைவரையும் மங்களகரமான கும்ப ஆரத்தி எடுத்து வரவேற்கிறோம். குத்துவிளக்கேற்றுதல் இல்லம் தோறும் இறை ஒளி இன்பம் பொங்கும் மனதில் இனி, ஆலயம் முழுதும் உறவின் ஒலி ஆயுள்முழுதும் தொடரட்டும் நனி. அகஇருள் களைந்து புறஒளியாம் இத்தீப ஒளியில் நாம், உள்ளொளி பெற அருள்வேண்டுவோம். தந்தை மகன் தூய ஆவி என்னும் தமத்திரித்துவத்தின் அருளை நாம் பெற உதவியாகவும் நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு என்னும் ஐம்பூதங்களின் ஆற்றலைப் பெற உதவியாகவும் இருக்கும் இந்த மங்கள விளக்கினை ஏற்றி நாம் இந்த வழிபாட்டில் இணைவோம். 1. இருளாக இருந்த இவ்வுலகை ஒளியால் நிரப்ப எண்ணிய இறைவன் முதலில் "ஒளி தோன்றுக" என்றார். ஓளி தோன்றிற்று. கடவுள் வார்த்தையால் உலகில் உருவான ஒளியைப் போன்று இம்மணமக்களின் வாழ்வும் இறைவார்த்தையால் ஒளிபெற அருள்வேண்டி குத்துவிளக்கின் முதல் முகப்பினை பங்குத்தந்தை அவர்கள் ஏற்றுகிறார். ( முதல் திரி :பங்குத்தந்தை) 2. கடவுள் மானிடரை நம் உருவிலும் நம் சாயலிலும் உண்டாக்குவோம் என்று கூறி, மண்ணால் மனிதனை உருவாக்கி அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊதி உயிர் உள்ள மனிதனை உருவாக்கினார். பின்பு மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று அவனுக்கு தகுந்த துணையை உருவாக்குவேன் என்று கூறி மனிதனிடமிருந்து விலா எலும்பு ஒன்றை எடுத்து ஒரு பெண்ணாக உருவாக்கினார். இப்படிப்பட்ட ஆதிப்பெற்றோரால் உருவான குடும்பம் வழியாக நம்மையும் படைத்து உருவாக்கிய இறைவனுக்கு நன்றி கூறும் விதமாகவும் குடும்பமாக இவர்கள் இன்புற்று இணைந்து வாழவும் அருள்வேண்டி இம்மணமக்களின் பெற்றோர் இரண்டாம் மற்றும் மூன்றாம் திரிகளை ஏற்றுகின்றனர். (2, 3ஆம் திரி பெற்றோர்) 3. கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி 'பலுகிப்பெருகி பூமியை நிரப்புங்கள்' என்றார். இவ்வாறு முதல் குடும்பத்தை ஆசிர்வதித்து உருவாக்கிய இறைவன் இன்று திருமணம் என்னும் அருள் அடையாளத்தினால் இணைக்கப்பட இருக்கும் இம்மணமக்களை இறைவன் எல்லா நலன்களாலும் வளங்களாலும் ஆசீர்வதித்து பலுகிப் பெருக வைக்க அருள்வேண்டி, நான்காம் திரியினை மணமக்கள் ஏற்றுகின்றனர். (4ஆம் திரி மணமக்கள்) 4. நீங்கள் பெற்றுக் கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள் முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரை ஒருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து தூய ஆவியார் அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். (எபேசி 4 1-3). என்ற இறைவார்த்தைக்கிணங்க உலகை உண்டாக்கி அதில் குடும்பத்தை உருவாக்கிய இறைவன், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக இத்திருமணத்தை ஒரு திருவருளடையாளமாக உயர்த்த அருள்வேண்டி, இந்த ஐந்தாம் திரியினை திருப்பலி நிறைவேற்றும் குரு ஏற்றுகின்றார் (5ஆம் திரி- திருப்பலி நிறைவேற்றும் குரு) தூய ஆவியார் வழியாக இறைவன் இன்றும் நம்மோடு இருந்து நம்மை நடத்துகிறார் என்பதை உணர்ந்தவர்களாய் திருமண வாழ்வில் இணைய உள்ள இந்த மணமக்களுக்காக இறைவனின் அருள்வேண்டி இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்று செபிப்போம். புதுமணத் தம்பதியர் செபம்! மாறாத அன்புடன் உன்னோடு மண ஒப்பந்தம் செய்து கொள்வேன்; நேர்மையிலும் நீதியிலும் பேரன்பிலும் உன்னோடு மண ஒப்பந்தம் செய்து கொள்வேன் என்று ஒசேயா (2:19-20) இறைவாக்கினர் வாயிலாக உரைத்த எம் தாயும் தந்தையுமான இறைவா! உம்மை போற்றுகின்றோம். இயேசு மரி சூசை வழியாக இம்மண்ணுலகில் அமைத்த திருக்குடும்பத்தைப்போல இன்று எங்கள் வழியாக ஓர் திருக்குடும்பத்தை ஏற்படுத்துகின்றமைக்காக உமக்கு நன்றி செலுத்துகின்றோம். "மனிதன் தனிமையான இருப்பது நன்றன்று, அவனுக்கு உற்ற துணையை உருவாக்குவேன்" என்று சொல்லி, உலகில் திருக்குடும்பத்தை ஏற்படுத்திய இறைவா, இன்று எங்களை ஒருவர் மற்றவருக்கு உற்ற துணையாக கொடுத்தமைக்காகவும் நன்றி செலுத்துகின்றோம். எங்களுக்கு ஒருவர் மற்றவர் வழியாக ஏராளமான உறவுகளையும் கொடுத்தமைக்காக நன்றி செலுத்துகின்றோம். இக்குடும்ப உறவுகளை எம் வாழ்வின் சிறந்த கொடையாக ஏற்று, திருமணம் குறித்த திருச்சபையின் படிப்பினைகளை உணர்ந்து வாழ்ந்திட உம் ஞானத்தை எமக்கு அளித்தருளும். எம் திருமண வாழ்வில் மகிழ்ந்திருக்க, நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, குறை நிறைகளோடு மற்றவரை ஏற்றுக்கொண்டு அன்பு செய்ய நிறைவான அருளினைத்தர வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென். |