Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   29  மார்ச் 2019  
                        தவக்காலம் 3ம் வாரம் வெள்ளி- 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
எங்கள் கைவினைப் பொருள்களை நோக்கி, 'எங்கள் கடவுளே' என்று இனி சொல்லமாட்டோம்.

இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 14: 1-9

ஆண்டவர் கூறியது: இஸ்ரயேலே! உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா; நீ உன் தீச்செயலால் வீழ்ச்சியுற்றாய்.

இம்மொழிகளை ஏந்தி ஆண்டவரிடம் திரும்பி வந்து இவ்வாறு சொல்லுங்கள்: "தீவினை அனைத்தையும் அகற்றியருளும், நன்மையானதை ஏற்றுக்கொள்ளும்; நாங்கள் எங்கள் வாய்மொழியாம் கனிகளை உமக்கு அளிப்போம்; அசீரியர் எங்களை விடுவிக்கமாட்டார்கள்; குதிரைமேல் நாங்கள் ஏறமாட்டோம்; எங்கள் கைவினைப் பொருள்களை நோக்கி, 'எங்கள் கடவுளே!' என்று இனிச் சொல்லமாட்டோம்; திக்கற்றவன் உம்மிடத்தில் பரிவைப் பெறுகிறான்" எனச் சொல்லுங்கள்.

அவர்களுடைய பற்றுறுதியின்மையை நான் குணமாக்குவேன்; அவர்கள்மேல் உளமார அன்புகூர்வேன். அவர்கள் மேலிருந்த என் சினம் தணிந்துவிட்டது. நான் இஸ்ரயேலுக்குப் பனி போலிருப்பேன்; அவன் லீலிபோல் மலருவான்; லெபனோனின் மரம்போல் வேரூன்றி நிற்பான். அவனுடைய கிளைகள் விரிந்து பரவும்; அவன் பொலிவு ஒலிவ மரம் போல் இருக்கும்; லெபனோனைப்போல் அவன் நறுமணம் பரப்புவான். அவர்கள் திரும்பிவந்து என் நிழலில் குடியிருப்பார்கள்; கோதுமைபோல் தழைத்தோங்குவார்கள். திராட்சைக் கொடிபோல் செழிப்படைவார்கள். லெபனோனின் திராட்சை இரசம்போல் அவர்களது புகழ் விளங்கும். இனிமேல் எப்ராயிமுக்குச் சிலைகள் எதற்கு? நானே அவனுக்குச் செவிசாய்த்து, அவன்மேல் அக்கறை கொண்டுள்ளேன்; நான் பசுமையான தேவதாரு மரம் போன்றவன். உன் கனி எல்லாம் என்னிடமிருந்தே வரும். ஞானம் நிறைந்தவன் எவனோ, அவன் இவற்றை உணர்ந்து கொள்ளட்டும்; பகுத்தறிவு உள்ளவன் எவனோ, அவன் இவற்றை அறிந்துகொள்ளட்டும்; ஆண்டவரின் நெறிகள் நேர்மையானவை; நேர்மையானவர்கள் அவற்றைப் பின்பற்றி நடக்கிறார்கள்; மீறுகிறவர்கள் அவற்றில் இடறி விழுகின்றார்கள்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:81: 5a-7a. 7ba-8. 9-10ab. 13,16 (பல்லவி:10,8a)
=================================================================================
பல்லவி: உன் கடவுளாகிய ஆண்டவர் நானே; என் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்.

5c நான் அறியாத மொழியைக் கேட்டேன். 6 தோளினின்று உன் சுமையை அகற்றினேன்; உன் கைகள் கூடையினின்று விடுதலை பெற்றன. 7ய துன்ப வேளையில் என்னை நோக்கி மன்றாடினீர்கள்; நான் உங்களை விடுவித்தேன். பல்லவி

7bc இடி முழங்கும் மறைவிடத்தினின்று நான் உங்களுக்கு மறுமொழி கூறினேன்; மெரிபாவின் நீரூற்று அருகில் உங்களைச் சோதித்தேன். 8 என் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; நான் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றேன்; இஸ்ரயேலரே, நீங்கள் எனக்குச் செவிசாய்த்தால், எவ்வளவு நலமாயிருக்கும்! பல்லவி 9 உங்களிடையே வேற்றுத் தெய்வம் இருத்தலாகாது; நீங்கள் அன்னிய தெய்வத்தைத் தொழலாகாது. 10ab உங்களை எகிப்து நாட்டினின்று அழைத்து வந்த கடவுளாகிய ஆண்டவர் நானே. பல்லவி

13 என் மக்கள் எனக்குச் செவிசாய்த்திருந்தால், இஸ்ரயேலர் நான் காட்டிய வழியில் நடந்திருந்தால், எவ்வளவோ நலமாயிருந்திருக்கும். 16 உங்களுக்கு நயமான கோதுமையை உணவாகக் கொடுப்பேன்; உங்களுக்கு மலைத் தேனால் நிறைவளிப்பேன். பல்லவி

 
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 4: 17

மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது, என்கிறார் ஆண்டவர்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். அவரிடம் அன்புகூர்வாயாக.

+மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 28b-34

அக்காலத்தில் மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசுவை அணுகி வந்து, "அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?" என்று கேட்டார்.

அதற்கு இயேசு, "இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக' என்பது முதன்மையான கட்டளை.

"உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக' என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை" என்றார்.

அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், "நன்று போதகரே, 'கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை' என்று நீர் கூறியது உண்மையே. அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்பு கொள்வதுபோல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்துவதும் எரிபலிகளையும் வேறு பலிகளையும்விட மேலானது" என்று கூறினார்.

அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், "நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை" என்றார்.

அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

அறிவு தெளிவோடு பதில் அளித்ததை கண்டு, மிக அருகாமையில் இருக்கின்றாய் என்றார்.

மனிதர் எப்பொழுது அறிவுத் தெளிவோடு பதில் அளிக்க முடியும்?

சட்டங்களையும், திட்டங்களையும் அறிந்து செயல்படும் போது மட்டுமே. அப்படியென்றால் இவர்கள் வாழ்வுக்கு மிக அருகாமையில் இருக்கிறார்கள் என்பது தானே அர்த்தம். இதனையே இயேசுவும் உறுதிப்படுத்துகின்றார்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
  "அன்பே, அனைத்திலும் மேலான கட்டளை"

முன்பொரு காலத்தில் ஆபிரகாம் என்றொரு மனிதர் இருந்தார். அவர் கடவுள்மீது மிகுந்த பக்தி கொண்டவர். ஒரு சமயம் அவர் புனிதத்தலம் ஒன்றிற்குத் திருப்பயணம் மேற்கொண்டார். நீண்ட நாட்கள் நடந்ததன் பயனாக அவர் அந்த புனிதத்தலத்தை அடைந்தார்.

புனிதத்தலத்தை அடைந்ததும் ஓர் மூலையில் படுத்து ஓய்வெடுக்கத் தொடங்கினார். அன்று இரவு அவருக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில், வானதூதர்கள் இருவர் தோன்றி, பேறுபெற்றவர்கள் பட்டியலை வாசித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு வானதூதர் மிகவும் சத்தமாக, "இந்த பேறுபெற்றவர் பட்டியலில் முதலில் இடம் பிடித்திருக்கின்ற 'அம்மாபட்டணத்தில்' வசிக்கக்கூடிய யோசுவா, திருப்பயணம் மேற்கொள்வதில்லை. ஏன் ஆலயத்திற்குக்கூட வருவதில்லை. ஆனாலும் அவர் தன்னால் இயன்ற உதவிகளை, தன்னை விட எளியவர்களுக்கும் வறியவர்களுக்கும் செய்து கொண்டிருக்கிறார். அதனால்தான் அவர் இந்த பேறுபெற்றவர் பட்டியலில் முதலில் இடம் பிடித்திருக்கின்றார்" என்றார்.

இதைக் கேட்ட ஆபிரகாமிற்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. உடனே அவர் அம்மாபட்டணத்தில் வசிக்கக்கூடிய யோசுவாவை பார்க்கப் புறப்பட்டுச் சென்றார். அம்மாபட்டணத்தை அடைந்ததும் அங்கிருந்தவர்களிடம் யோசுவாவைக் குறித்து விசாரித்துப் பார்த்தார். ஆனால், யாருக்கும் அவரைப் பற்றித் தெரியவில்லை. ஒருசில மணிநேர அலைச்சலுக்குப் பின்னர் ஆபிரகாம், யோசுவாவைக் கண்டுகொண்டார். யோசுவாவோ பாதையோரத்தில் அமர்ந்து செருப்புத் தைத்துக்கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் ஆபிரகாமிற்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த மனிதர்தான் பேறுபெற்றவர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளவரா, இவரைப் பார்க்கும்போது அவ்வளவு ஒன்றும் பெரிய மனிதர் போன்று தெரியவில்லையே. சரி, எது அவரை பேறுபெற்றவர் பட்டியலில் முதலிடத்தில் அமரச் செய்தது என்று விசாரித்துப் பார்ப்போம் என்று அவரிடத்தில் சென்றார்.

"யோசுவா! நீங்கள் பேறுபெற்றவர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளீர்கள். பேறுபெற்றவர் பட்டியலில் முதல் இடத்தில் இடம்பெறுகின்ற அளவுக்கு அப்படி என்ன செய்தீர்கள்?, சொல்லுங்கள்?" என்றார் ஆபிரகாம். உடனே யோசுவா என்ற அந்த செருப்பு தைக்கும் தொழிலாளி, "நான் அன்றாடம் செருப்பு தைத்து, அதிலிருந்து கிடைக்கக்கூடிய வருமானத்தைக் கொண்டு பிழைப்பை ஓட்டக்கூடியவன். ஒருநாள் என்னுடைய மனைவி என்னிடத்தில், 'அறுசுவை உணவு சாப்பிடவேண்டும் என்று ஆசையாக இருக்கின்றது, எனக்காக அருகாமையில் இருக்கக்கூடிய உணவகத்திலிருந்து அதை வாங்கித்தர முடியுமா?" என்று கேட்டாள். நானும் 'கையில் கொஞ்சம் பணம் சேர்ந்த பிறகு வாங்கித் தருகிறேன்' என்று சொல்லிவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து வைத்தேன். கையில் ஓரளவு பணம் சேர்ந்தபிறகு உணவகத்திற்குச் சென்று, அறுசுவை உணவை வாங்கி வந்தேன்.

அப்போது பாதையோரத்தில் ஒரு பிச்சைக்காரன் மயக்கமடைந்து விழுந்து கிடந்ததைப் பார்த்தேன். அவனை எழுப்பி விசாரித்தபோதுதான் தெரிந்தது, அவன் சாப்பிட்டு ஒருவாரம் ஆகிவிட்டது என்று. உடனே நான் என்னுடைய மனைவிக்காக வாங்கிக்கொண்டு போன அறுசுவை உணவை எடுத்து அவனுக்கு உண்ணக் கொடுத்தேன். அவனும் வயிறார சாப்பிட்டு என்னை மனதார வாழ்த்தினான். அப்போது அவனுடைய முகத்தில் தெரிந்த சந்தோசம், அதற்கு முன்னதாக யாரிடத்திலும் கண்டதில்லை. அன்றைக்கே நான் முடிவுசெய்தேன். இனிமேல் நாம் நமக்குக் கிடைக்கூடிய உணவை, நம்மிலும் வறியவரோடு பகிர்ந்து உண்ணவேண்டும் என்று. அன்றிலிருந்து இன்றுவரை அதைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன். ஒருவேளை அதுதான் என் பெயரை பேறுபெற்றவர் பட்டியலில் முதல் இடத்தில் வைக்கக் காரணமாக இருக்குமோ என்னவோ" என்றார். ஆபிரகாம் உண்மையை உணர்ந்துகொண்டவராய் அங்கிருந்து நகர்ந்தார்.

அன்போடு நாம் எளியவருக்குச் செய்யக்கூடிய உதவி, இறைவனுடைய பார்வையில் உயர்ந்ததாக இருப்பதோடு மட்டுமல்லாமல், அது நாம் இறைவனை அன்பு செய்வதற்குச் சமமாக இருக்கின்றது என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக் கூறுகின்றது.

நற்செய்தி வாசககத்தில் மறைநூல் அறிஞர் இயேசுவிடம், "அனைத்திலும் முதன்மையான கட்டளையை எது" என்று கேட்கின்றபோது இயேசு, இறையன்பே முதன்மையான கட்டளை, அதே நேரத்தில் இறையன்புக்கு இணையான கட்டளை பிறரன்பு என்கின்றார். இறைவனில் நாம் கொள்கின்ற அன்பு, மனிதரை அன்பு செய்யத் தூண்டவேண்டும்; மனிதரை அன்பு செய்யாமல் இறைவனை அன்பு செய்ய முடியாது என்பதுதான் இயேசுவின் ஆணித்தரமான பதிலாக இருக்கின்றது.

ஆகவே, நாம் நம்மோடு வாழக்கூடிய மனிதர்களை முழுமையாய் அன்பு செய்து, அதன்வழியாக இறைவனை அன்பு செய்வோம். அதன்வழியாக இறையருள் பெற்று, இறையாட்சியை நமதாக்குவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
அன்பே நம்முடைய வாழ்வாகட்டும்

பிரபல இரஷ்ய நாட்டு எழுத்தாளரான லியோ டால்ஸ்டாயின் கதை இது.

ஓர் ஊரில் செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவன் இருந்தான். ஒரு நாள் அவன் வழியோரம் நடந்து சென்றுகொண்டிருந்தபோது வறிய நிலையில் இருந்த மனிதன் ஒருவனைக் கண்டான். அவனைப் பார்த்தபோது அவன் சாப்பிட்டே பல நாட்கள் ஆனது போன்று இருந்தது. உடனே செருப்பு தைக்கும் தொழிலாளி அந்த மனிதனை தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து வந்து, தன்னுடைய மனைவியிடம் அவனுக்கு உணவு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டான். அவளோ, "நாமே கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறோம், இதில் இன்னொரு ஆளா?" என்று தன்னுடைய கணவரிடத்தில் அங்கலாய்த்தாள். இருந்தாலும் கணவன் சொல்லிவிட்டானே என்பதற்காக வீட்டில் இருந்த பழைய சாதத்தை எடுத்து அதை அந்த ஏழை மனிதனுக்கு கொடுத்தாள், அவனும் வயிறார உண்டான்.

ஏழை மனிதனுக்குக் சொந்த பந்தம் என்று யாருமில்லாததால், அவன் செருப்பு தைக்கும் தொழிலாளியின் வீட்டிலே தங்கிவிட்டான். செருப்பு தைக்கும் தொழிலாளியும், 'சரி இருந்துவிட்டுப் போகட்டும்' என்று தன்னுடைய வீட்டிலே அவனைத் தங்க வைத்தான். ஆனால் அவனுடைய மனைவிக்குத் தான் அவனுக்கு மூன்று வேளையும் சோறு தருவது கஷ்டமாக இருந்தது. வேண்டா வெறுப்பாகவே அவள் அந்த ஏழை மனிதனுக்கு உணவு கொடுத்து வந்தாள். இதனால் அந்த மனிதனுடைய உடல் இன்னும் மெலிந்துபோனது. இதைப் பார்த்து அவள் பயந்து போனாள். நாம் இப்படி வேண்டா வெறுப்பாக உணவு கொடுப்பதால்தான் இந்த மனிதர் இப்படி மெலிந்து போகிறார், இனிமேல் இவருக்கு இன்முகத்தோடு உணவு கொடுப்போம். அப்போது இவர் உடல்நிலை எப்படி ஆகிறது என்று பார்ப்போம் என்று நினைத்துக்கொண்டு ஒவ்வொருநாளும் இன்முகத்தோடு உணவு கொடுக்கத் தொடங்கினாள்.

இதனால் அந்த ஏழை மனிதனுடைய உடல் நலம் தேறியது. இதைப் பார்த்து அவள் மிகவும் மகிழ்ந்துபோனாள். தொடர்ந்து இன்முகத்தோடு அவருக்கு அவள் உணவு கொடுத்து வந்தாள். ஒரு குறிப்பிட்ட நாளில் அந்த ஏழை மனிதன் தான் யார் என்பதை அவர்களுக்கு வெளிப்படுத்தினான். தான் விண்ணத்திலிருந்து கீழே தவறுதலாகக் குதித்துவிட்ட வானதூதர் என்றும், அங்கே அன்பு மயமான சூழல் அதனால்தான் நன்றாக இருந்தேன், ஆனால் இங்கே வந்தபோது யாரிடத்திலும் அன்பு இல்லை, தொடக்கத்தில் இங்கு வந்தபோது உங்களிடத்திலும் கூட அன்பில்லை. ஆனால் போகப் போக நீங்கள் என்னிடத்தில் அன்பைப் பொழிந்ததால் என்னுடைய உடல்நலம் பழைய நிலைக்குத் திரும்பிவிட்டது" என்றார். இதைக் கேட்ட செருப்பு தைக்கும் தொழிலாளியின் மனைவியும் அவனும் மிகவும் மகிழ்ந்தார்கள். பின்னர் ஏழை மனிதன் வடிவில் இருந்த வானதூதர் அவர்களுக்கு பரிசுகள் பல கொடுத்துவிட்டு, அங்கிருந்து விண்ணகம் சென்றார்.

செருப்பு தைக்கும் தொழிலாளியின் மனைவி வானதூதரிடத்தில் வெறுப்போடு இருந்தபோது அவர் மெலிந்துகொண்டே போனார். என்றைக்கு அவள் அவரிடத்தில் அன்பாக இருந்தாரோ அன்றைக்கே அவர் உடல் வலிமை/ வளமை பெற்றார். நாமும் நம்மோடு வாழக்கூடியவர்களோடு அன்பாக இருக்கும்போது பிறருடைய வாழ்வு மட்டுமல்ல, நம்முடைய வாழ்வும் வளமாகும் என்பதை இந்தக் கதையானது நமக்கு எடுத்துரைக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் மறைநூல் அறிஞர் ஒருவர் இயேசுவிடம் வந்து, அனைத்திலும் முதன்மையான கட்டளை என்ன?" என்று கேட்கின்றார். மறைநூல் அறிஞருக்கு தான் கேட்கக்கூடிய கேள்விக்கான பதில் தெரிந்திருக்கும், இருந்தாலும் அவர் இயேசுவைச் சோதிக்கும் நோக்குடனே கேட்கின்றார். இயேசுவோ அவற்றையெல்லாம் அறிந்தவராக இருந்தாலும், அவர் கேட்ட கேள்விக்கு, "உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனதோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக, உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக" என்கிறார். இயேசு மறைநூல் அறிஞருக்குச் சொன்ன பதிலானது இணைச்சட்டம் 6:4, லேவியர் புத்தகம் 19:18 ஆம் வசனங்களில் வருகின்ற இறைவார்த்தையின் சாராம்சமாக இருக்கின்றது.

இயேசுவுக்கு முன்பு வரை குறிப்பா ஹில்லேல் என்பவர், "உனக்குத் தீங்கு என நினைப்பவற்றை பிறருக்குச் செய்யதே" என்பதையே முதன்மையான கட்டளையாக சொல்லிவந்தார். இக்கட்டளை செய்யாதே என்று எதிர்மறையிலே இருக்கின்றது. ஆனால் ஆண்டவர் இயேசுவோ அதனைத் திருத்தி, "உன் மீது நீ அன்பு கூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீது அன்பு கூர்வாயாக" என்று நேர்மறையில் சொல்கிறார். அடிப்படையில் அன்பு ஒன்றுதான் முதன்மையான கட்டளை என்பது இயேசுவின் பதிலாக இருக்கின்றது.

எனவே, இயேசு நமக்குக் கற்பித்தது போல, இறைவனையும் அயலாரையும் அன்பு செய்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
ஓசேயா 14: 1-9

உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா

நிகழ்வு

ஒரு சமயம் சார்லஸ் பின்னி என்ற மறைபோதகர் 'பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது' (உரோ 5:20) என்ற இறைவார்த்தையை மையமாக வைத்துப் போதித்துக் கொண்டிருந்தார். அவ்வேளையில் அவ்வழியாகக் குதிரையில் வந்த ஒரு கொள்ளைக் கூட்டத்தலைவன், சார்லஸ் பின்னி போதித்துக்கொண்டிருந்த இறைவார்த்தையால் மிகவும் ஈர்க்கப்பட்டான். எனவே, அவன் அவரை எப்படியாவது பார்த்து, அவரிடம் பேசிவிடவேண்டும் என்று முடிவுசெய்தான்.

வழிபாடு முடிய நீண்ட நேரமானது. ஆனாலும், அவன் அவருக்காகக் காத்திருந்து, வழிபாடு முடிந்ததும் அவரைச் சந்தித்தான். மக்களெல்லாம், "இவர் (சார்லஸ் பின்னி) எவ்வளவு பெரிய பாவியிடம் பேசிக்கொண்டிருக்கின்றார்?' என்று முணுமுணுத்தார்கள். சார்லஸ் பின்னியோ மக்கள் பேசியதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், அந்த கொள்ளைக்கூட்டத் தலைவனிடம் பேசினார். சிறிது நேரத்திற்குப் பிறகு அவன் சார்லஸ் பின்னியிடம், "நீங்கள் என்னோடு ஓரிடத்திற்கு வரமுடியுமா?" என்று கேட்டான். அவரும் அதற்குச் சரியென்று சொல்ல, அவன் தான் வைத்திருந்த குதிரையில் சார்லஸ் பின்னியை ஏற்றிக்கொண்டு, ஒரு பாழடைந்த கட்டிடத்திற்கு முன்பாகப் போய் நின்றான்.

பின்னர் அவன் அவரை அந்தப் பாழடைந்த கட்டிடத்திற்குள் கூட்டிக்கொண்டு போனான். அங்கு ஒரே மதுபானப் புட்டியும் மனிதர்களின் எலும்புக் கூடும் கிடந்தன. அவற்றைக் கண்டு, அதிர்ந்துபோய் நின்ற சார்லஸ் பின்னியிடம், "ஐயா! நான் மிகப்பெரிய குடிகாரன், கொலைகாரன், கொள்ளைக்காரன். அப்படிப்பட்ட என்னை ஆண்டவர் இயேசு மன்னித்து ஏற்றுக்கொள்வாரா?" என்றான். அவர் அவனிடம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். பின்னர் அவன் அவரை ஒரு குடிசைக்கு அழைத்துக்கொண்டு போனான். அங்கு ஒரு பெண்ணும் அவளுடைய மகனும் இருந்தார்கள். அவர்கள் இருவரையும் சார்லஸ் பின்னியிடம் சுட்டிக்காட்டிய அவன், "இவர்கள்தான் என்னுடைய மனைவியும் பிள்ளையும். இவர்கள் இருவரும் என்னைப் பார்த்தாலே பயந்து நடுங்குகிறார்கள். இப்படிப்பட்ட பெரும்பாவியாகிய என்னை இயேசு மன்னித்து ஏற்றுக்கொள்வாரா?" என்றான்.

அவன் பேசியதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த சார்லஸ் பின்னி, "மகனே! உன்னைப் போன்ற பாவிகளை மீட்கத்தான் இயேசு இந்த உலகத்திற்கு வந்தார்; (லூக் 19:20) உன்னைப் போன்றவர்களுக்காகதான் அவர் கல்வாரி மலையில் இரத்தம் சிந்தி தனது இன்னுயிரைத் துறந்தார். அதனால் அவர் உன்னைக் கட்டாயம் ஏற்றுக்கொள்வார்" என்று அவனைக் கட்டித் தழுவினார். இதற்குக் பின்பு அவன் தன்னுடைய மனைவி மற்றும் மகனுடைய காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு, புதியதொரு மனிதனாக வாழத் தொடங்கினான்.

பாவ வாழ்க்கை வாழும் ஒவ்வொருவரும் இறைவனின் அன்பையும் அவருடைய அருட்பெருட்கையும் உணர்ந்து, அவரிடம் திரும்பிவரவேண்டும் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.

மக்கள் தன்னிடம் திரும்பி திருந்தி வர அழைப்பு விடுக்கும் ஆண்டவர்

இறைவாக்கினர் ஓசேயா நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள், இஸ்ரயேல் மக்கள் தன்னிடம் திரும்பி வருமாறு அழைப்பு விடுக்கின்றார். காரணம், அவர்கள் கடவுளின் பேரன்பை மறந்து வேற்று தெய்வத்தை வழிபடத் தொடங்கினார்கள். அதனாலேயே அவர்கள் அழிவைச் சந்தித்தார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ஆண்டவராகிய கடவுள் ஓசேயா இறைவாக்கினர் வழியாக தன்னுடைய மக்கள் தன்னிடம் திரும்பி வருமாறு அழைப்புவிடுக்கின்றார்.

தன்னிடம் திரும்பி வரும் மக்களை லீலிபோல மலரச்செய்யும் இறைவன்

இஸ்ரயேல் மக்கள் வேற்று தெய்வத்தை வழிபட்டு வீழ்ச்சியுற்றார்கள். இதைக் கண்ட இறைவன் அவர்கள்மேல் மனம் இரங்கி, அவர்கள் தன்னிடம் வரவேண்டும் என்று விரும்புகிறார். அப்படி அவர்கள் தன்னிடம் திரும்பி வந்தால், அவர்கள் லீலிமலர் போல் மலரச் செய்வேன் என்றும் ஒலிவ மரம் போன்று பொலிவாய் இருப்பார்கள் என்றும் கூறுகின்றார். .

தனக்கு நம்பிக்கைக்குரியவர்களாய் இல்லாத இஸ்ரயேல் மக்களை இறைவன் நினைத்திருந்தால் தண்டித்திருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யாமல், அவர்கள் மனந்திரும்பி வரவேண்டும் என்று ஆசைப்படுகின்றார். வந்தால் அவர்களை அவர் எல்லாவிதமான நலன்களாலும் ஆசியாலும் நிரப்புவேன் என்கின்றார். இதுதான் கடவுளின் பேரன்பு. இத்தகைய பேரன்புமிக்க இறைவனிடம் மக்கள் தங்களுடைய தவற்றை உணர்ந்து, திரும்பி வந்து, அவரோடு ஒப்புரவாவது சாலச் சிறந்தது.

சிந்தனை

'என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' (லூக் 15: 24) என்று தந்தை ஊதாரி மைந்தனைப் பார்த்துச் சொல்வார். தவறை உணர்ந்து தந்தைக் கடவுளிடம் திரும்பி வரும் ஒவ்வொருவரையும் இறைவன் இப்படித்தான் ஏற்றுக்கொள்வார். ஆகவே, இறைவனின் பேரன்பை உணர்ந்து, அவரிடம் திரும்பி வந்து அவரோடு ஐக்கியமாவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
மாற்கு 12: 28-34

அன்பே அனைத்திலும் முதன்மையான கட்டளை

நிகழ்வு

பள்ளி ஆசிரியர் ஒருவர் தன்னிடம் பாடம் கற்றுவந்த குழந்தைகளிடம், "உங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக யாரேனும் ஒருவருக்கு ஒரு ரோஜாவைக் கொடுங்கள்" என்றார். இதைக் கேட்டு ஒரு குழந்தை, தன்னைப் பள்ளியிலிருந்து வீட்டில் தன் காரில் இறக்கிவிட்ட செல்வந்தர் ஒருவரிடம் ரோஜாவைக் கொடுத்தது. அவர் வீடு சென்றார். தன் வளர்ந்த மகனிடம் ரோஜாவைத் தந்தார். அவன் கதறிக் கொண்டே கட்டியணைத்தான். "அப்பா! உங்கள் வேலைகளுக்கு நடுவில் என்னைக் கவனிப்பதே கிடையாது... என்னை வெறுக்கிறீர்கள் என்று நினைத்து தற்கொலைக்குத் தயாராகிக் கொண்டிருந்தேன்... இப்போது நீங்கள் எனக்குத் தந்த ரோஜா, என்மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பைத் தெளிவாகக் காட்டுகின்றது உங்கள் அன்புக்கு நன்றி" என்றான்.

அன்பு யாரும் நினைத்துப் பார்க்கமுடியாத அதிசயங்களையும் நிகழ்த்தி காட்டும். ஆதலால், அன்பு செய்து வாழ்வோம்.

அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?

நற்செய்தி வாசகத்தில், மறைநூல் அறிஞர் ஒருவர் இயேசுவிடம் வந்து, "அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?" என்று கேட்கின்றார். அவர் இப்படிக் கேட்டதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. யூதர்களுக்கு முன்பாக மொத்தம் 613 கட்டளைகள் இருந்தன. இதில் 365 செய்யக்கூடாதவை என்ற கட்டளைகளும் 248 செய்யவேண்டும் என்ற கட்டளைகளும் இருந்தன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், எது முதன்மையான கட்டளை என்று யூதர்கள் குழம்பித் தவித்தார்கள். அதனடிப்படியில்தான் மறைநூல் அறிஞர் இயேசுவிடம் அப்படியொரு கேள்வியைக் கேட்கின்றார்.

இயேசுவோ, இணைச்சட்ட நூல் ஆறாம் அதிகாரத்தில் இடம்பெறும் இறைவார்த்தையையும் (6: 4-5) லேவியர் புத்தம் பத்தொன்பதாம் அதிகாரத்தில் இடம்பெறும் இறைவார்த்தையையும் (19: 18) இணைத்து, முதன்மையான கட்டளை என்று மறைநூல் அறிஞருக்கு விடையளிக்கின்றார். இயேசு மறைநூல் அறிஞருக்கு அளித்த பதில், அவர் கேள்விபடாத ஒன்று அல்ல, ஏனென்றால் ஒவ்வொரு யூதரும் இணைச்சட்ட நூல் 6:4-5 ஐ மனப்பாடமாகச் சொல்வார்கள். அப்படியிருந்தாலும் முதன்மையான கட்டளை குறித்த குழப்பம் அவர்களுக்கு இருந்துகொண்டே இருந்தது. இப்படிப்பட்ட நிலையில், இதுதான் முதன்மையான கட்டளை என்று இயேசு சொன்னபிறகு மறைநூல் மகிழ்ந்திருக்கக் கூடும். அதனால்தான் இயேசுவைக் கேள்வி கேட்டு, சிக்கலில் மாட்டிவிடவேண்டும் என்று வந்த மறைநூல் அறிஞர் (மத் 22: 34-35) அவரோடு அறிவுத்திறனோடு உரையாடுகின்றார், உறவாடுகின்றார்.

நீர் இறையாட்சியினின்று தொலைவில் இல்லை

இயேசுவைக் கேள்விக் கணைகளால் சோதிக்கவேண்டும் என்று நினைத்த வந்த மறைநூல் அறிஞர், இயேசு அளித்த பதிலைக் கண்டு வியந்து, முதன்மையான கட்டளை குறித்து திருநூல் (1சாமு 15: 22; திபா 51:16-17) சொல்வது பற்றி அவரோடு விவாதிக்ககத் தொடங்கினார். அப்போதுதான் இயேசு அவரிடம், "நீர் இறையாட்சியினின்று தொலைவில் இல்லை" என்கின்றார்.

மறைநூல் அறிஞர், மறைநூல்/திருநூல் குறித்து தெளிவாகத் தெரிந்து வைத்திருந்ததனால்தான் இயேசு அவரிடம் அவ்வாறு சொல்கின்றார். இயேசுவின் வழியில் நடக்கும் ஒருவர் திருநூலைக் குறித்துத் தெரிந்து வைத்திருப்பது மட்டும் போதாது. அதன்படி வாழவும் வேண்டும். இதைத்தான் தூய யாக்கோபு, "இறைவார்த்தையைக் கேட்கின்றவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக் கொள்ளவேண்டாம். அதன்படி நடக்கின்றவர்களாகவும் இருங்கள்" என்கின்றார் (யாக் 1:22) இயேசுவிடம் வந்த மறைநூல் அறிஞருக்கு மறைநூலைக் குறித்த அறிவு இருந்த அளவுக்கு, அவர் மறைநூலின் படி வாழ்ந்தாரா என்று தெரியவில்லை. ஒருவேளை அவர் அதன்படி வாழ்ந்திருந்தால்,"நீர் இறையாட்சிக்குத் தகுதியுடையவர்" என்று இயேசு அவரைப் பார்த்துச் சொல்லி இருக்கக்கூடும். அவர் அதன்படி நடவாமல், தெரிந்து மட்டும் வைத்திருந்தால்தான் இயேசு அவரிடம், "நீர் இறையாட்சியின்று தொலைவில் இல்லை" என்கின்றார்.

ஆகவே, இறைவார்த்தையைக் குறித்து ஆழமாகத் தெரிந்து வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், அதைக் கடைப்பிடிக்கவும் வேண்டும்.

சிந்தனை

'அன்பே திருச்சட்டத்தின் நிறைவு' என்பார் தூய பவுல் (உரோ 13: 10). உண்மையில் இயேசு, என்ன போதித்தாரோ அதை அப்படியே தூய பவுல் உள்வாங்கிக் கொண்டார். அதனால்தான் அவரால் இப்படி எழுத முடிந்தது. திருச்சட்டம் முழுவதையும் ஒரே ஒரு வார்த்தையில் அடக்கவேண்டும் எனில், அன்பு என்ற வார்த்தையில் அடக்கவிடலாம். ஏனென்றால், அன்புதான் முதன்மையான கட்டளை. அத்தகைய கட்டளையை ஒவ்வொருவரும் வாழ்வாக்க முயற்சி செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!