|
25
மார்ச் 2019 |
|
கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழா
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இதோ, கருவுற்றிருக்கும் அந்த கன்னிப் பெண் ஓர் ஆண்மகவைப்
பெற்றெடுப்பார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 7: 10-14; 8: 10b
அந்நாள்களில் ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச்
சொல்லியது: "உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு
கேளும்; அது கீழே பாதாளத்திலோ, மேலே வானத்திலோ தோன்றுமாறு
கேட்டுக்கொள்ளும்" என்றார்.
அதற்கு ஆகாசு, "நான் கேட்க மாட்டேன். ஆண்டவரைச் சோதிக்க
மாட்டேன்" என்றார். அதற்கு எசாயா: "தாவீதின் குடும்பத்தாரே!
நான் சொல்வதைக் கேளுங்கள்; மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம்
சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட
சோதிக்கப் பார்க்கிறீர்களோ?
ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ,
கருவுற்றிருக்கும் அந்த கன்னிப் பெண் ஓர் ஆண்மகவைப்
பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவர்
'இம்மானுவேல்' என்று பெயரிடுவார்.
ஏனெனில் கடவுள் எங்களோடு இருக்கிறார்" என்று கூறினார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா:40: 6-7a. 7b-8. 9. 10 (பல்லவி: 7a,8a
காண்க)
=================================================================================
பல்லவி: இறைவா, இதோ உம் திருவுளம் நிறைவேற்ற நான் வருகின்றேன்.
6 பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும்
பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள்
திறக்கும்படி செய்தீர். 7a எனவே,
'இதோ வருகின்றேன்.' பல்லவி 7b
என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது; 8 என்
கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்;
உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான்.
பல்லவி
9 என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில்
அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே!
நீர் இதை அறிவீர். பல்லவி
10 உமது நீதியை நான் என் உள்ளத்தின் ஆழத்தில் மறைத்து வைக்கவில்லை;
உம் வாக்குப்பிறழாமையைப் பற்றியும் நீர் அருளும் மீட்பைப் பற்றியும்
கூறியிருக்கின்றேன்; உம் பேரன்பையும் உண்மையையும் மாபெரும் சபைக்கு
நான் ஒளிக்கவில்லை. பல்லவி
இரண்டாம் வாசகம்
என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 4-10
சகோதரர் சகோதரிகளே, காளைகள், வெள்ளாட்டுக் கிடாய்கள் இவற்றின்
இரத்தம் பாவங்களைப் போக்க முடியாது. அதனால்தான் கிறிஸ்து உலகிற்கு
வந்தபோது, "பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஆனால்
ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர். எரிபலிகளும் பாவம்
போக்கும் பலிகளும் உமக்கு உகந்தவையல்ல.
எனவே நான் கூறியது: என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, `இதோ
வருகின்றேன்.' என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது"
என்கிறார். திருச்சட்டப்படி செலுத்தப்பட்ட போதிலும், "நீர் பலிகளையும்
காணிக்கைகளையும் எரிபலிகளையும் பாவம்போக்கும் பலிகளையும்
விரும்பவில்லை; இவை உமக்கு உகந்தவையல்ல" என்று அவர் முதலில்
கூறுகிறார்.
பின்னர் "உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்" என்கிறார்.
பின்னையதை நிலைக்கச் செய்ய முன்னையதை நீக்கி விடுகிறார். இந்தத்
திருவுளத்தால்தான் இயேசு கிறிஸ்து ஒரே ஒரு முறை தம் உடலைப் பலியாகச்
செலுத்தியதன் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 1: 14யb
அல்லேலூயா, அல்லேலூயா! வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே
குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்.
+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
1: 26-38
ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள
நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர்
தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு
மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத்
தோன்றி, "அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்"
என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து
எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.
வானதூதர் அவரைப் பார்த்து, "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக்
கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு
இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத
கடவுளின் மகன் எனப்படுவார்.
அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு
அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின்மீது என்றென்றும் ஆட்சி
செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார். அதற்கு
மரியா வானதூதரிடம், "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!"
என்றார்.
வானதூதர் அவரிடம், "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை
உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது.
அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம்
முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற
இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில்,
கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" என்றார். பின்னர் மரியா,
"நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார்.
அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை
யாருடைய சித்தம் நிறைவேற்ற உள்ளோம்.
நம்முடைய விருப்பு வெறுப்புக்கு ஆளாகி நாம் நம்முடைய தேவைகளை
நிறைவு செய்து மண்ணுலக மாந்தர்களைப் போல வாழ்ந்து வருவேமானால்,
நாம் நம்முடைய பாவத்திலேயே மடிந்து போவோம் என்பது தான் உண்மை.
அவருடைய சித்தம் நிறைவேற்றவே நாம் படைக்கப்பட்டு உள்ளோம்.
தேர்வு செய்யப்பட்டு இருக்கிறோம்.
அன்னை மரியாள் நமக்கு இதனைத் தான் உணர்த்தி நிற்கின்றார்கள்.
தன் வாழ்வில் இதனை தெளிவுற அறிவுறுத்தினார்கள். உம் திருவுளம்
நிறைவேற்ற இதோ வருகின்றேன் என்று சொல்லி, இறுதி வரை சென்று மகனையே
பலியாக்கி கொடுக்கின்றார்கள்.
இறுதி வரை நின்று மீட்பை தேடிக் கொள்வோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
இன்று அன்னையாம் திருச்சபை ஆண்டவர் இயேசுவின் பிறப்பு
முன்னறிவிப்புப் பெருவிழாவக் கொண்டாடுகின்றது.
இந்த உலகத்தில் எத்தனையோ மனிதர்கள் தோன்றி இருகிறார்கள்; எத்தனையோ
தலைவர்கள் தோன்றி மறைந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களின் பிறப்பைக்
குறித்து முன்னறிவிக்கப்படவில்லை. அவர்களின் பிறப்பைக்
குறித்து யாருக்கும் முன்னதாகச் சொல்லப்படவில்லை. இயேசுவின் பிறப்பைக்
குறித்துத்தான் முன்னறிவிக்கப்பட்டது; அவரது பிறப்பைக்
குறித்துதான் இறைவாக்காகச் சொல்லப்பட்டது. அப்படிப்
பார்க்கும்போது இயேசு எந்தளவுக்கு மற்ற எல்லாரையும்விட பெரியவர்;
உயர்ந்தவர் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
இயேசுவின் பிறப்பைப் குறித்து பல இடங்களில் இறைவாக்கின் வழியாக
முன்னறிவிக்கப்பட்டாலும், அதில் ஒருசில இடங்கள் மிகவும் முக்கியத்துவம்
வாய்ந்ததாக இருக்கின்றன. எனவே நாம் அவற்றைக் குறித்து சிறது
ஆழமாகச் சிந்தித்துப் பார்த்து, இன்றைய இறைவார்த்தை நமக்குக்கூறும்
உண்மை என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவின் பிறப்பைப் குறித்து முன்னறிவிக்கப்பட்ட பகுதிகளில்
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது தொடக்க நூல் 3:15. இப்பகுதியில்
கடவுள், தன்னுடைய வார்த்தையைக் கடைபிடிக்காமல் விலக்கப்பட்ட
மரத்தின் கனியை உண்ட ஆதிப் பெற்றோர்களான ஆதாமையும், ஏவாளையும்,
அதற்குக் காரணமாக இருந்த பாம்பையும் தண்டிக்கிறார். அப்படித்
தண்டிக்கும்போது அவர் வாயிலிந்து வரக்கூடிய ஒரு இறைவாக்குதான்
"உனக்கும் பெண்ணுக்கும், உன்வித்துக்கும், அவள் வித்துக்கும்
பகையை உண்டாக்குவேன், அவள் வித்து உந்தலையை காயப்படுத்தும், நீ
அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்" என்பதாகும். இப்பகுதி இயேசுவின்
பிறப்பைப் பற்றி நேரடியாகச் சொல்லாவிட்டாலும், இயேசுவின் பிறப்பால்
தீமைகள்/ பாவங்கள் வேரோடு அழிக்கப்படும் என்று சொல்லப்படுகின்றது.
இயேசுவின் பிறப்பைப் குறித்து முன்னறிவிக்கப்பட்ட பகுதியில்
இரண்டாவது முக்கியமான பகுதி எசாயா புத்தகம் 7:14 (இன்றைய முதல்
வாசகம்). இப்பகுதியில் எசாயா இறைவாக்கினர் ஆகாசு மன்னனிடம்,
கடவுளைப் பார்த்து அடையாளம் ஒன்றைக் கேள் என்று கேட்கச்
சொல்கிறார். அதற்கு அவன் அடையாளம் கேட்பது என்பது கடவுளைச்
சோதிப்பதற்குச் சமம் என்று நினைத்து, கேட்க மறுத்துவிடுகிறான்.
இறுதியில் கடவுளே அவனுக்கு ஓர் அடையாளத்தைத் தருகிறார். அதுதான்,
"கருவுற்றிருக்கும் இளம்பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு
அவள் இம்மானுவேல் என்று பெயரிடுவர்" என்பதாகும். இங்கே இயேசு
யாரிடம் பிறப்பார் என்பது பற்றிச் சொல்லப்படுகிறது.
இயேசுவின் பிறப்பைக் குறித்து முன்னறிவிக்கப்பட்ட பகுதிகளில்
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மூன்றாவது பகுதி மீக்கா புத்தகம்
5:2. அதில் "நீயோ எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே, யூதாவின்
குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய், ஆயினும் இஸ்ரயேலை
என்சார்பாக ஆளப்போகிறவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்" என்று
சொல்லப்படுகிறது. இதில் இயேசு எந்த இடத்தில் பிறப்பால் என்று
சொல்லப்படுகின்றது. ஆக, மேலே சொல்லப்பட்ட இந்த மூன்று இறைவாக்குப்
பகுதிகளும் இயேசு என்பவர் யார்? அவர் எங்கே, யாரிடம் பிறப்பார்,
என்ன செய்யப்போகிறார்? என்பது முதற்கொண்டு எல்லாவற்றையும் மிகத்
தெளிவாகச் சொல்கிறது.
கடவுள் பாவம் செய்த தன்னுடைய மக்கள் அப்படியே அழிந்துபோகட்டும்
என்று விட்டுவிடவில்லை, மாறாக அவர்களுக்கு மீட்பை வழங்குவேன்
என்று வாக்களிக்கின்றார். வாக்களித்தை நிறைவேற்றவும்
செய்கின்றார். ஆதலால்தான் இன்று நாம் கொண்டாடும் கிறிஸ்து பிறப்பு
முன்னறிவிப்புப் பெருவிழா கடவுள் வாக்குறுதி மாறாதவர் என்பதை
நமக்கு மிகத் தெளிவாக எடுத்துரைகிறது (எபிரேயர் 13:8).
இன்றைக்கு மனிதர்களாகிய நாம் காலையில் ஒன்றைச் சொல்கிறோம்.
மாலையில் அதற்கு முற்றிலும் எதிராகப் வேறொன்றைப் பேசுகின்றோம்.
ஆனால், கடவுள் அப்படியல்ல. அவர் சொன்ன சொல்லை நிறைவேற்றுபவர்,
வாக்குறுதி மாறாதவர்.
செவ்விந்திய பழங்குடி மக்களிடம் நிலவும் ஒரு புராதனக் கதை.
செவ்விந்தியப் பழங்குடி மக்களில் இருக்கக்கூடிய ஆண்கள் தங்களுடைய
புஜபலத்தை நிரூபிப்பதற்காக ஊருக்குப் பக்கத்தில் இருக்கக்கூடிய
செங்குத்துப் பாறையின்மேல் ஏறுவதுண்டு. அப்படி ஒருவன் தன்னுடைய
புஜபலத்தை நிரூபிப்பதற்காக செங்குத்துப் பாறையின் மீது ஏறினான்.
தொடக்கத்தில் அவன் ஒருசில இடங்களில் சறுக்கினாலும், இறுதியில்
அவன் வெற்றிகரமாக செங்குத்துப் பாறையின் உச்சியை அடைந்தான்.
அவன் தான் செங்குத்துப் பாறையின் உச்சியை வெற்றிகரமாக அடைந்துவிட்டேன்
என்பதை மகிழ்ந்து, ஆர்ப்பரித்து கீழே இருப்பவர்களுக்கு தெரியப்படுத்தினான்.
அப்பொழுது அவனுக்குப் பக்கத்தில் பாம்புச் சத்தம் கேட்டது.
திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். அங்கே அவனுடைய
காலுக்குப் பக்கத்தில் ஒரு பாம்பானது பசியால் துடித்துக்
கொண்டிருந்தது. அது அவனிடம், "நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்.
தயவுசெய்து என்னைக நீ கீழே இறக்கிவிட்டுவிடு, இல்லையென்றால்
நான் இங்கேயே உணவு கிடைக்காமல், பசியால் செத்து மடிந்துவிடுவேன்"
என்றது. அதற்கு அவனோ, "அதெல்லாம் முடியாது, பாம்பைக் குறித்து
நான் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் வஞ்சகம் நிறைந்தவர்கள்,
கொடிய விஷமுள்ளவர்கள். ஆதலால் உன்னை நான் காப்பாற்ற மாட்டேன்"
என்றுசொல்லி மறுத்தான்.
பாம்பு மறுபடியும், மறுபடியும் அவனைக் கெஞ்சிக் கேட்டதால், அவன்
வேறுவழியில்லாமல் பாம்பை தன்னுடைய தோல் பையில்போட்டு, கீழே
கொண்டுசென்றான். பாம்பு அவனை ஒன்றுமே செய்யாமல் அமைதியாக இருந்தது.
அவன் பூமியை அடைந்ததும், அவன் தன்னுடைய பையைத் திறந்து,
பாம்பைக் இறக்கிவிட்டான். அப்போது அந்தப் பாம்பு அவனைக் கடித்துவிட்டு,
புதருக்குள் ஓடியது.
அப்போது அவன் அந்தப் பாம்பிடம், "என்னைக் கடிக்கமாட்டேன் என்று
வாக்குறுதி கொடுத்துவிட்டு, இப்படிக் கடித்துவிட்டுச்
வாக்குறுதியை மீறிவிட்டுச் செல்கிறாயே. இது என்ன நியாயம்?" என்று
கேட்டான். அதற்கு அந்தப் பாம்பு, "நான் மட்டுமா வாக்குறுதியை
மீறுகிறேன். மனிதர்களாகிய நீங்களும்கூடத் தான் வாக்குறுதியை
மீறுகிறீர்கள். இதில் என்னை மட்டும் ஏன் குறை சொல்கிறீர்கள்"
என்று சொல்லிவிட்டு புதருக்குள் ஓடி மறைந்தது.
பாம்பு தான் கொடுத்த வாக்குறுதியை மீறியதால், இன்றைக்கும்கூட
செவ்விந்தியப் பழங்குடி மக்களிடம் 'பாம்பிடம் மிகக் கவனமாக இருக்கவேண்டும்"
என்று எச்சரிக்கை உணர்வு இருக்கிறது.
மனிதர்களாகிய நாம் எப்போதும் கொடுத்த வாக்குறிதியை மீறக்கூடியவர்கள்
என்பதை இந்த நிகழ்வு நமக்கு சுட்டிக்காட்டுகிறது. மனிதர்கள்
தாங்கள் கொடுத்த வாக்குறுதியிலிருந்து மாறலாம். ஆனால், கடவுள்
அப்படியல்ல. அவர் வாக்குறுதி மாறாதவர்.
இந்த விழா நமக்கு உணர்த்தும் இன்னொரு உண்மை. கடவுளின் மீட்புத்
திட்டம் நிறைவேறவேண்டும் என்றால், நாம் அவருடைய திட்டத்திற்கு
ஒத்துழைக்கவேண்டும் என்பதாகும். நற்செய்தியில் அன்னை மரியாள்,
வானதூதர் கபிரியேல் தன்னிடம் இறைவனின் மீட்புத் திட்டத்தைப் பற்றிச்
சொன்னபோது, இது எப்படி நிகழும்? என்று கேட்டாலும், இறுதியில்
எல்லாம் உணர்த்தப்பட பின், 'இதோ ஆண்டவரின் அடிமை, உமது சொற்படி
நிகழட்டும்" என்று கடவுளின் மீட்புத் திட்டம் நிறைவேற தன்னையே
இறைவனின் கரங்களில் கையளிக்கிறார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய
இரண்டாம் வாசகத்திலும் இயேசு இறைவனின் திட்டம் நிறைவேற தன்னையே
கையளிப்பதைப் குறித்து வாசிக்கின்றோம். ஆகவே, நாம் ஒவ்வொருவரும்
இறைவனின் திட்டம் இந்த மண்ணுலகில் நிறைவேற நம்மையே நாம் கையளிக்க
வேண்டும்.
எனவே அன்பினியவர்களே! கிறிஸ்துவின் பிறப்பு முன்னறிவிப்புப்
பெருவிழாவைக் கொண்டாடும் நாம் இறைவன் வாக்குறுதி மாறாதவர் என்பதை
நம்பி ஏற்றுக்கொள்வோம். அதேவேளையில், அவருடைய திட்டம் நிறைவேற
அன்னை மரியாவைப் போன்று, ஆண்டவர் இயேசுவைப் போன்று இறைவனின்
கரங்களில் நம்மையே நாம் ஒப்புக்கொடுப்போம். அதன்வழியாக இறையருள்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
வானதூதர் கபிரியேல் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்ன விழா
(மார்ச் 25)
நிகழ்வு
பிரபல ஆங்கில எழுத்தாளரான ஜே. மாரூஸ் (J. Maurus) என்பவர் சொல்லக்கூடிய
ஒரு கதை.
ஒருமுறை வானத்தில் நீண்ட நேரமாக வட்டமடித்துக் கொண்டிருந்த கழுகு
ஒன்று ஒரு குடிசையின் வெளிமுற்றத்தில் தூக்கிக்கொண்டிருந்த
சிறு குழந்தையையைக் கண்டது. உடனே அது வேகமாகச் சென்று, தன்னுடைய
இரண்டு கால்களுக்கும் இடையே அந்தக் குழந்தையை தூக்கி
வைத்துக்கொண்டு மேலே பறந்தது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தில்
இருந்தவர்கள் எல்லாம் அந்தக் குழந்தையை கழுகிடமிருந்து
காப்பாற்றுவதற்கு எவ்வளோ முயற்சித்தார்கள். ஆனால் அந்தக் கழுகு
குழந்தையை தூக்கிக்கொண்டு ஊருக்கு வெளியே இருந்த மலையில் உள்ள
தன்னுடைய கூட்டினில் போய் வைத்துக்கொண்டது.
குழந்தையை மீட்பதற்காக அந்த ஊரில் இருந்த நாட்டாமை மலையேற முயற்சி
செய்தார். ஆனால் சிறுது தூரத்திலேயே அவர் கால்கள் வலிக்கிறது
என்று சொல்லிக்கொண்டு கீழே இறங்கிவிட்டார். அவருக்குப் பின் அந்த
ஊரில் இருந்த ஓர் ஆடு மேய்க்கும் இளைஞன் தான் மலையேறுவதில்
கெட்டிக்காரன் சொல்லிவிட்டு மலையேறினான். மலையில் பாதிதூரம் ஏறிய
அந்த ஆடுமேய்க்கும் இளைஞன் இனிமேலும் தன்னால் மலையேற முடியாது
என்று சொல்லிவிட்டு கீழே இறங்கிவிட்டான். இறுதியாக ஒரு சாதாரண
ஏழைப் பெண்மணி மலைமீது ஏறத் தொடங்கினாள். செங்குத்தாக உயர்ந்து
நின்ற அந்த மலையில் மிகவும் கஷ்டப்பட்டு ஏறி, மலைமேல் இருந்த
கழுகின் கூட்டினை அடைந்தார். அங்கே இருந்த கழுகை ஒரு கம்பால்
அடித்து விரட்டிவிட்டு, குழந்தையை கையோடு தூக்கிக்கொண்டு கீழே
வந்தார்.
அங்கே கூடியிருந்த மக்களுக்கு எல்லாம் ஆச்சரியம். "எப்படி உன்னால்
மட்டும் முடிந்தது?" என்று எல்லாரும் அவளைக் கேட்டார்கள். அதற்கு
அந்தப் பெண்மணி, "அது என்னுடைய குழந்தை" என்று ஒரே
வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு, அங்கிருந்து நகர்ந்தாள்.
தாயானவள் தன்னுடைய பிள்ளைக்காக எதையும் செய்வாள், ஏன் தன்னுடைய
உயிரையும் தருவாள். அதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
வரலாற்றுப் பின்புலம்
இன்று நாம் வானதூதர் கபிரியேல் மரியாளுக்கு மங்கள வார்த்தை
சொன்னதை நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றோம். தொடக்கத்தில் இவ்விழா
'இயேசுவின் மனித அவதாரப் பெருவிழா' என்று கொண்டாடப்பட்டு வந்தது.
பின்னர்தான் இன்று நாம் வழங்கும் இப்பெயரால் அழைக்கப்பட்டது.
வானதூதர் கபிரியேல் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்ன இந்த நிகழ்வு
ஒரு சாதாரண நிகழ்வு கிடையாது. அது மனித வரலாற்றையே
மாற்றிப்போட்ட நிகழ்வு என்றுகூடச் சொல்லலாம். ஏனென்றால் மரியாள்
சொன்ன ஆம் என்ற ஒற்றைச் சொல்லால்தான் 'வார்த்தை வடிவான கடவுளால்
நம்மிடையே குடிகொள்ள முடிந்தது' (யோவா 1:14); மீட்பு இந்த உலகிற்கு
வந்தது. ஆகையால் இந்த நிகழ்வின் முக்கியத்துவதை முதலில் நாம்
உணர்ந்துகொள்ள வேண்டும்.
கபிரியேல் அதிதூதர் மரியாளிடம், "அருள்மிகப்பெற்றவரே வாழ்க! ஆண்டவர்
உம்முடனே!" என்று சொன்னவுடன், இவ்வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக்
மரியாள் கலங்குகிறார். இதைக் குறித்து தூய பெர்னார்டின் இவ்வாறு
கூறுவார், "மரியாளிடம் வானதூதர் 'உலகத்திலேயே நீதான் மிகப்பெரிய
பாவி' என்று சொல்லியிருந்தால்கூட அவள் ஏற்றிருப்பாள். ஆனால்
அவரோ அருள்மிகப்பெற்றவரே என்று சொன்னதால்தான் மரியாள் கலங்குகிறார்.
காரணம் தாழ்ச்சி நிறைந்த உள்ளம் இதுபோன்ற வார்த்தைகளைக் கேட்டு
கலங்கத்தான் செய்யும்".
தொடர்ந்து வானதூதர் மரியாவிடம், "இதோ, கருவுற்று ஒரு மகனைப்
பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராய்
இருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை
தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர்
யாக்கோபின் குடும்பத்தின்மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார்.
அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்று சொன்னபோது, மரியாள்,
"இது எப்படி நிகழும்?", நான் கன்னி ஆயிற்றே!" என்கிறார். மரியாள்
இப்படிக் கேட்பதில் அர்த்தமில்லாமல் இல்லை. ஏனென்றால் விவிலியத்தில்
வயது முதிர்ந்தோர் கருவுற்று குழந்தையைப் பெற்ற நிகழ்வு இருக்கிறது.
ஆனால் கன்னி ஒருத்தி கருவுற்று குழந்தையைப் பெற்றெடுத்த நிகழ்வு
இல்லை. அதனால் மரியாள் அப்படிக் கேட்கிறார். மரியாளுடைய
கேள்வியின் ஆழத்தைப் புரிந்துகொண்ட வானதூதர், "தூய ஆவி உம்மீது
வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால், உம்மிடம்
பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்"
என்று சொன்னபிறகு மரியாள், "நான் ஆண்டவரின் அடிமை. உமது சொற்படி
எனக்கு நிகழட்டும்" என்கிறார். உடனே தூய ஆவியார் அவர்மீது இறங்கி
வர இயேசுவை கருத்தரிக்கிறார்.
ஆகவே, மரியாள் 'ஆம்' என்று சொன்ன அந்த ஒரு சொல்லில் மீட்பு இந்த
மண்ணுலகிற்கு வந்துவிட்டது என நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஆதிபெற்றோரான
ஆதாமும் ஏவாளும் கடவுளின் கட்டளையை மறுத்ததால் பாவம் இந்த மண்ணுலகில்
நுழைந்தது. அந்தப் பாவத்தை மரியாள் தான் சொன்ன ஆம் என்ற
சொல்லினால் விரட்டியடிக்கிறார். வானதூதர் கபிரியேல் மரியாளுக்கு
மங்கள வார்த்தை சொன்ன இந்த நிகழ்வு கி.பி. 431 ஆம் ஆண்டிற்குப்
பிறகு இன்றுவரை விழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
மரியாளுக்கு வானதூதர் கபிரியேல் மங்கள வார்த்தை சொன்ன விழாவைக்
கொண்டாடும் இந்த நல்ல நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி
என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
இறைத்திருவுளத்திற்கு பணிந்து நடத்தல்
நாம் அனைவரும் கடவுளால் படைக்கப்பட்டவர்கள், எனவே நாம் ஒவ்வொருவரும்
நம்முடைய விருப்பத்தின்படி அல்ல, இறைவிருப்பத்தின் படி நடக்கவேண்டும்.
இதுதான் இறைவன் நம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கிறார். ஆனால் பல
நேரங்களில் இந்த உண்மையை மறந்து, நாம் நம்முடைய விருப்பத்தின்படி
தான்தோன்றித் தனமாக வாழ்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
ஆனால் இன்று நாம் நினைவுகூறும் மரியா தன்னுடைய வாழ்நாள் முழுவதும்
இறைவனின் திருவுளத்திற்குப் பணிந்து நடந்தவர் என்று சொன்னால்
அது மிகையாகாது. ஆண்டவரின் தூதர் மரியாவிடம் இறைவிருப்பத்தை எடுத்துச்
சொன்னபோது, தொடக்கத்தில் தயங்கினாலும் எல்லாவற்றையும் உணர்ந்துகொண்டு,
'உமது வார்த்தையின் படியே ஆகட்டும்' என்று சொல்லி மரியாள் தன்னுடைய
வாழ்வின் இறுதிக்கட்டம் வரை இறை விருப்பத்தின்படியே நடக்கின்றார்.
இறை விருப்பத்தின் நடப்பதனால் தனக்கு எத்தகைய துன்பம் வரும் என்பதை
அவர் நன்றாக உணர்ந்திருந்தார். இருந்தாலும் அவர் எல்லாத் துன்பங்களையும்
சவால்களை மனத்துணிவோடு எதிர்கொண்டார்.
இன்று நாம் இறைவனின் திருவுளத்திற்கு பணிந்து நடக்கின்றோமா? அல்லது
இறைவன் நம் வழியாய் செயலாற்ற நாம் கருவியை விளங்குகின்றோமா? என்று
சிந்தித்துப் பார்க்கவேண்டும். யோவான் நற்செய்தி 6:38 ல் இயேசு
கூறுவார், "ஏனெனில் என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை
அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து
இறங்கி வந்தேன். இயேசுவிடம், அன்னை மரியாவிடம் விளங்கிய இத்தகைய
மனநிலையை நமதாக்குவோம்.
தாழ்ச்சியோடு வாழ்தல்
'தாழ்நிலையில் இருப்போரை ஆண்டவர் உயர்த்துகிறார்' (லூக் 1:53)
என்று மரியாள் இறைவனை நோக்கி பாடல் பாடுவார். இப்பாடல்
யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ மரியாவுக்கு நன்றாகவே
பொருந்துகிறது. மரியாள் தாழ்ச்சியோடு வாழ்ந்தார். அதனால்தான்
ஆண்டவர் அவரைத் தேடி வந்தார். மரியாள் ஆண்டவர் இயேசுவைப்
பெற்றெடுத்த பின்னும் அவர் தாழ்ச்சியோடுதான் வாழ்ந்தார். அதனால்தான்
அவர் எங்கோ இருந்த எலிசபெத்தைத் தேடிச் சென்று உதவுகிறார்.
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் தாழ்ச்சியோடு இருக்கிறோமா?
என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நான் பெரியவன்,
மெத்தப் படித்தவன், எல்லாம் தெரிந்தவன் என்ற ஆணவத்தில், அகங்காரத்தில்
அலைகிறோம். இத்தகைய மனநிலையை மாற்றிக்கொண்டு நாம் தாழ்ச்சியை
ஆடையாக அணிந்துகொண்டு வாழ்வவேண்டும். இயேசு கூறுவார், "தம்மைத்
தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்படுவர், தம்மைத்தாமே தாழ்த்துவோர்
உயர்த்தப்படுவர்" (மத் 23:12). ஆகவே, மரியன்னைக்கு விழா எடுக்கும்
இந்த நல்ல நாளில், அவரிடம் விளங்கிய தாழ்ச்சியை, இறை விருப்பத்திற்கு
பணிந்து வாழும் பண்பை நமதாக்குவோம். அதன்வழியாக இறையருள்
நிறைவாய் பெறுவோம்
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
இயேசுவின் பிறப்பு முன்னறிவிப்பு
பெருவிழா
உம் சொற்படியே
நாளை 'கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழாவை' (மங்கள
வார்த்தை திருநாள்) கொண்டாடுகிறோம்.
இந்த நாள் மூன்று நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது:
அ. கடவுளின் மீட்பிற்கு மனித உதவி தேவை
'மங்கள வார்த்தை திருநாள்' கடவுளின் ஆற்றலுக்கே சவால் விடுகிறது.
எப்படி? கடவுள் எல்லாம் வல்லவர் என்றால், மனிதர்களின்
துணையில்லாமல் அவர்களை மீட்டிருக்கலாமே? எதற்காக மனுக்குலத்தின்
உதவியை நாட வேண்டும்? கடவுளின் மீட்புத்திட்டம் மனிதரின் உதவியில்லாமல்
நிறைவேற முடியாது. கடவுள் தனக்கு உதவி செய்ய வேண்டி தன் தூதரை
அனுப்புகின்றார். கடவுள் மரியாளை நோக்கி நீட்டிய கைதான் கபிரியேல்.
ஆ. கடவுள் சாதாரணவை(வர்)களின் கடவுள்
இன்று நாம் நம்மைவிட பெரிய நிலையில் இருப்பவர்களின் உதவியைத்தான்
அதிகம் நாடுகிறோம். பொருளாதாரத்தில், பதவியில், அதிகாரத்தில்
நம்மைவிட பெரிய நிலையில் இருப்பவர்களின் துணையை நாடுவதற்கு எத்தனையோ
வகையில் முயற்சி செய்கிறோம். ஆனால், கடவுளின் அணுகுமுறை
வித்தியாசமானதாக இருக்கிறது. எருசலேம் என்ற நகரத்தையும், நகர்வாழ்
நங்கையரையும் நாடிச் செல்லாமல், நாசரேத்தை நாடிவருகிறார்.
இ. மாஸ்டர் பிளான் (Master Plan) அல்ல மாஸ்டர்ஸ் பிளான் (Master's
Plan)
நம்ம வாழ்வில் நாம போடும் மாஸ்டர் பிளான் தோல்வியாகத்தான்
போகும். படைப்பின் தொடக்கத்தில் மாஸ்டர்ஸ் பிளானை (கடவுளின்
பிளானை) கண்டுகொள்ளாமல், தாங்களாகவே ஒரு மாஸ்டர் பிளான்
போடுகின்றனர் ஆதாமும், ஏவாளும். விளைவு பாவம் வந்து சேர்கிறது.
ஏதேன் தோட்டத்தை விட்டு துரத்தப்படுகிறார்கள். செபதேயுவின் மக்கள்
இயேசுவிடம் வந்து வலப்புறம், இடப்புறம் இடம் கேட்டதும் மாஸ்டர்
பிளான்தான். யூதாசு தலைமைச்சங்கத்திடம் சென்று பேரம் பேசியதும்
மாஸ்டர் பிளான்தான். ஆனால், இவை எல்லாமே தோல்வியில் முடிகின்றன.
மாஸ்டர்ஸ் பிளான் மட்டும்தான் வெற்றி பெறுகிறது. மேலும், மாஸ்டர்ஸ்
பிளானை விடுத்து நாம் நம் மாஸ்டர் பிளானை வைத்துக்கொண்டு
நிற்கும்போது அது நிறைவேறாமல் போனால் ஏமாற்றமும், விரக்தியும்
நம் கன்னத்தில் அறைகின்றன. மரியாள் தன் பிளானைப் பற்றி கவலைப்படவே
இல்லை. 'இதோ நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு ஆகட்டும்'
என்று தன் பிளானைக் கிழித்துப் போட்டுவிட்டு, மாஸ்டர்ஸ் பிளானை
கையில் எடுத்துக்கொள்கின்றார்.
நிற்க.
கடவுளின் முதல் 'ஆமென்' உலகை படைத்தது.
மரியாளின் இறுதி 'ஆமென்' புதிய உலகம் உருவாக வழி வகுத்தது.
காலங்கள் உம்முடையன.
யுகங்களும் உம்முடையன.
உம்சொற்படியே நிகழட்டும் - இன்றும், என்றும்.
இதுவே மனுக்குலத்திற்கு மங்களமான செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
உம் சொற்படியே
நாளை 'கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழாவை' (மங்கள
வார்த்தை திருநாள்) கொண்டாடுகிறோம்.
இந்த நாள் மூன்று நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது:
அ. கடவுளின் மீட்பிற்கு மனித உதவி தேவை
'மங்கள வார்த்தை திருநாள்' கடவுளின் ஆற்றலுக்கே சவால்
விடுகிறது. எப்படி? கடவுள் எல்லாம் வல்லவர் என்றால்,
மனிதர்களின் துணையில்லாமல் அவர்களை மீட்டிருக்கலாமே? எதற்காக
மனுக்குலத்தின் உதவியை நாட வேண்டும்? கடவுளின் மீட்புத்திட்டம்
மனிதரின் உதவியில்லாமல் நிறைவேற முடியாது. கடவுள் தனக்கு உதவி
செய்ய வேண்டி தன் தூதரை அனுப்புகின்றார். கடவுள் மரியாளை
நோக்கி நீட்டிய கைதான் கபிரியேல்.
ஆ. கடவுள் சாதாரணவை(வர்)களின் கடவுள்
இன்று நாம் நம்மைவிட பெரிய நிலையில் இருப்பவர்களின்
உதவியைத்தான் அதிகம் நாடுகிறோம். பொருளாதாரத்தில், பதவியில்,
அதிகாரத்தில் நம்மைவிட பெரிய நிலையில் இருப்பவர்களின் துணையை
நாடுவதற்கு எத்தனையோ வகையில் முயற்சி செய்கிறோம். ஆனால்,
கடவுளின் அணுகுமுறை வித்தியாசமானதாக இருக்கிறது. எருசலேம் என்ற
நகரத்தையும், நகர்வாழ் நங்கையரையும் நாடிச் செல்லாமல்,
நாசரேத்தை நாடிவருகிறார்.
இ. மாஸ்டர் பிளான் (Master Plan) அல்ல மாஸ்டர்ஸ் பிளான்
(Master's Plan)
நம்ம வாழ்வில் நாம போடும் மாஸ்டர் பிளான் தோல்வியாகத்தான்
போகும். படைப்பின் தொடக்கத்தில் மாஸ்டர்ஸ் பிளானை (கடவுளின்
பிளானை) கண்டுகொள்ளாமல், தாங்களாகவே ஒரு மாஸ்டர் பிளான்
போடுகின்றனர் ஆதாமும், ஏவாளும். விளைவு பாவம் வந்து சேர்கிறது.
ஏதேன் தோட்டத்தை விட்டு துரத்தப்படுகிறார்கள். செபதேயுவின்
மக்கள் இயேசுவிடம் வந்து வலப்புறம், இடப்புறம் இடம் கேட்டதும்
மாஸ்டர் பிளான்தான். யூதாசு தலைமைச்சங்கத்திடம் சென்று பேரம்
பேசியதும் மாஸ்டர் பிளான்தான். ஆனால், இவை எல்லாமே தோல்வியில்
முடிகின்றன. மாஸ்டர்ஸ் பிளான் மட்டும்தான் வெற்றி பெறுகிறது.
மேலும், மாஸ்டர்ஸ் பிளானை விடுத்து நாம் நம் மாஸ்டர் பிளானை
வைத்துக்கொண்டு நிற்கும்போது அது நிறைவேறாமல் போனால்
ஏமாற்றமும், விரக்தியும் நம் கன்னத்தில் அறைகின்றன. மரியாள்
தன் பிளானைப் பற்றி கவலைப்படவே இல்லை. 'இதோ நான் ஆண்டவரின்
அடிமை. உம் சொற்படியே எனக்கு ஆகட்டும்' என்று தன் பிளானைக்
கிழித்துப் போட்டுவிட்டு, மாஸ்டர்ஸ் பிளானை கையில்
எடுத்துக்கொள்கின்றார்.
நிற்க.
கடவுளின் முதல் 'ஆமென்' உலகை படைத்தது.
மரியாளின் இறுதி 'ஆமென்' புதிய உலகம் உருவாக வழி வகுத்தது.
காலங்கள் உம்முடையன.
யுகங்களும் உம்முடையன.
உம்சொற்படியே நிகழட்டும் - இன்றும், என்றும்.
இதுவே மனுக்குலத்திற்கு மங்களமான செய்தி.
- Rev. Fr. Yesu Karunanidhi |
|