|
09 மே 2019 |
|
பாஸ்கா காலம்
மூன்றாம் வாரம் - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நீர் முழுஉள்ளத்தோடு நம்பினால் தடையில்லை._
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 8: 26-40
அந்நாள்களில் ஆண்டவரின் தூதர் பிலிப்பிடம், "நீ எழுந்து எருசலேமிலிருந்து
காசாவுக்குச் செல்லும் வழியாகத் தெற்கு நோக்கிப் போ" என்றார்.
அது ஒரு பாலைநிலப் பாதை. பிலிப்பு அவ்வாறே புறப்பட்டுப்
போனார்.
அப்போது எத்தியோப்பிய அரச அலுவலர் ஒருவர் எருசலேம் சென்று, கடவுளை
வணங்கிவிட்டுத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தார். அவர் ஓர் அலி;
எத்தியோப்பிய அரசியான கந்தகியின் நிதியமைச்சர். அவர் தமது
தேரில் அமர்ந்து எசாயாவின் இறைவாக்கு நூலைப் படித்துக்
கொண்டிருந்தார்.
தூய ஆவியார் பிலிப்பிடம், "நீ அந்தத் தேரை நெருங்கிச் சென்று
அதனோடு கூடவே போ" என்றார்.
பிலிப்பு ஓடிச் சென்று, அவர் எசாயாவின் இறைவாக்கு நூலை வாசிப்பதைக்
கேட்டு, "நீர் வாசிப்பதின் பொருள் உமக்குத் தெரிகின்றதா?" என்று
கேட்டார்.
அதற்கு அவர், "யாராவது விளக்கிக்காட்டாவிட்டால் எவ்வாறு என்னால்
தெரிந்துகொள்ள முடியும்?" என்று கூறித் தேரில் ஏறித் தன்னோடு
அமருமாறு பிலிப்பை அழைத்தார்.
அவர் வாசித்துக்கொண்டிருந்த மறைநூல் பகுதி பின்வருமாறு: "அடிப்பதற்கு
இழுத்துச்செல்லப்பட்ட ஆட்டுக் குட்டிபோலும், உரோமம் கத்தரிப்போன்
முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார்.
தாழ்வுற்ற நிலையில் அவருக்கு நீதி வழங்கப்படவில்லை. அவருடைய தலைமுறையைப்பற்றி
எடுத்துரைப்பவன் யார்? ஏனெனில் அவருடைய உயிர்தான் எடுக்கப்பட்டுவிட்டதே!"
அவர் பிலிப்பிடம், "இறைவாக்கினர் யாரைக் குறித்து இதைக்
கூறுகிறார்? தம்மைக் குறித்தா, அல்லது மற்றொருவரைக் குறித்தா?
தயவு செய்து கூறுவீரா?" என்று கேட்டார்.
அப்போது பிலிப்பு, இந்த மறைநூல் பகுதியிலிருந்து தொடங்கி, இயேசுவைப்பற்றிய
நற்செய்தியை அவருக்கு அறிவித்தார். அவர்கள் போய்க்கொண்டிருந்தபோது
வழியில் தண்ணீர் இருந்த ஓர் இடத்துக்கு வந்தார்கள்.
அப்போது அவர், "இதோ, தண்ணீர் உள்ளதே, நான் திருமுழுக்குப் பெற
ஏதாவது தடை உண்டா?" என்று கேட்டார். அதற்குப் பிலிப்பு,
"நீர் முழு உள்ளத்தோடு நம்பினால் தடையில்லை" என்றார்.
உடனே அவர், "இயேசு கிறிஸ்து இறைமகன் என்று நம்புகிறேன்" என்றார்.
உடனே அமைச்சர் தேரை நிறுத்தக் கூறினார். பிலிப்பு, அமைச்சர் ஆகிய
இருவரும் தண்ணீருக்குள் இறங்கினர். பிலிப்பு அவருக்குத்
திருமுழுக்கு கொடுத்தார். அவர்கள் தண்ணீரிலிருந்து வெளியேறினவுடனேயே
ஆண்டவரின் ஆவியார் பிலிப்புவை எடுத்துச் சென்றுவிட்டார். அமைச்சர்
அதன்பின் அவரைக் காணவில்லை; அவர் மகிழ்ச்சியோடு தம் வழியே
சென்றார்.
பின்பு பிலிப்பு ஆசோத்து என்னும் இடத்தில் காணப்பட்டார். செசரியா
போய்ச் சேரும்வரை அவர் சென்ற நகரங்களிலெல்லாம் நற்செய்தியை அறிவித்தார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா:
66: 8-9. 16-17. 20 (பல்லவி: 1)
=================================================================================
பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!
அல்லது: அல்லேலூயா.
8 மக்களினங்களே! நம் கடவுளைப் போற்றுங்கள்; அவரைப் புகழ்ந்துபாடும்
ஒலி கேட்கச் செய்யுங்கள். 9 நம்மை உயிர்வாழச் செய்தவர் அவரே;
அவர் நம் கால்களை இடற விடவில்லை. பல்லவி
16 கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர்
எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன். 17 அவரிடம் மன்றாட என்
வாய் திறந்தது; அவரை ஏத்திப் புகழ என் நா எழுந்தது. பல்லவி
20 என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள் போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து
நீக்காத இறைவன் போற்றி! பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 6: 51
அல்லேலூயா, அல்லேலூயா! "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த
வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே
வாழ்வார்," என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த
வாழ்வு தரும் உணவு நானே.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 44-51
அக்காலத்தில் இயேசு யூதர்களைப் பார்த்துக் கூறியது: "என்னை அனுப்பிய
தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை
நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச்
செய்வேன். 'கடவுள்தாமே அனைவருக்கும்
கற்றுத்தருவார்' என இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது.
தந்தைக்குச் செவிசாய்த்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும்
என்னிடம் வருவர். கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை
எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக்கூடாது. கடவுளிடமிருந்து
வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார்.
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என்னை நம்புவோர்
நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர். வாழ்வு தரும் உணவு நானே. உங்கள்
முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர். உண்பவரை
இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த
இந்த உணவே.
விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த
உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக்
கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை:
பிலிப்புவின் போதனையை விளக்கத்தை கேட்டு, திருமுழுக்கு
பெற்றார் எத்தியோப்பிய நிதியமைச்சர்.
போதனையின் விளக்கம் மக்களை கவர்ந்து, அவர்களை திருமுழுக்கு பெறச்
செய்ய வேண்டும்.
எனவே தான் பவுல் கூறுவார், நற்செய்தி அறிவிப்பவர்களின் மலரடிகள்
எத்துணை பேறுபெற்றது என்று.
இன்றும் அறிவிப்பவர்கள் அறிவித்துக் கொண்டேயிருக்கிறார்கள்.
பலபேர் விளக்கங்களை படித்து ஆய்வு செய்து முனைவராகும் வாய்ப்பு
இன்று அதிகரித்துள்ளது.
ஆனால் இது உள்ளத்தை தொடுகின்றதா? இல்லை தலையோடு முடிந்து
போகின்றதா?
கவர்ந்து ஈர்க்கச் செய்யப்பட வேண்டியது போதனைகள் இன்றைய காலத்தின்
கட்டாயம். போதகர்களுக்காக செபிப்போம்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
முதல் வாசகம்
_ நீர் முழுஉள்ளத்தோடு நம்பினால் தடையில்லை.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்
8: 26-40
ஆண்டவரின் வாக்கை அறிவிப்போம்
நிகழ்வு
பல்வேறு அடக்குமுறைக்கும் சித்ரவதைக்கும் மத்தியிலும் சீனாவில்
ஆண்டவரின் வார்த்தையை எடுத்துரைத்து, ஆயிரக்கணக்கான மக்களை
கிறிஸ்தவ மறைக்குள் கொண்டு வந்தவர் ஹட்சன் டெய்லர் (Hutson
Taylor). 1857 ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஹட்சன் டெய்லர்,
சீனாவில் உள்ள நிங்போ (Ningpo) என்ற இடத்தில் ஆண்டவரின்
வார்த்தையை எடுத்துரைத்தபோது, நி (Nyi) என்பவர் கிறிஸ்துவை மிகவும்
மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் ஏற்றுக்கொண்டார்.
அவர் ஹட்சன் டெய்லரிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். அந்தக்
கேள்வி இதுதான்: "கிறிஸ்துவை உங்களுக்கு எத்தனை ஆண்டுகளாகத்
தெரியும்?" "கிறிஸ்துவை எனக்கு என்னுடைய சிறிய வயதிலிருந்தே
தெரியும். ஆனால், என்னுடைய முன்னோர்க்கு பல நூற்றாண்டுகளாகத்
தெரியும்" என்றார் ஹட்சன் டெய்லர். அவர் இவ்வாறு சொன்னதைக்
கேட்டு மிகவும் வியப்புற்று, "கிறிஸ்துவை உங்களுக்குச் சிறிய
வயதிலிருந்தே தெரியும் என்கிறீர்கள். உங்களுடைய முன்னோர்க்கு
பல நூறு ஆண்டுகளுக்காகத் தெரியும் என்கிறீர்கள். அப்படியிருக்கும்போது
நீங்களோ அல்லது உங்களுடைய முன்னோர்களோ எல்லார்க்கும் மீட்பை
வழங்க வந்த கிறிஸ்துவைப் பற்றி ஏன் எங்களுக்கு முன்னதாகவே அறிவிக்கவில்லை.
என் தந்தை பல ஆண்டுகளாக உண்மை நெறியைத் தேடி அலைந்துகொண்டிருந்தார்.
ஒருவேளை நீங்களோ அல்லது உங்களுடைய முன்னோர்களோ கிறிஸ்துவைப் பற்றி
முன்னதாகவே என் தந்தைக்கு அறிவித்திருந்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார்"
என்றார்.
அப்பொழுதுதான் ஹட்சன் டெய்லர், 'கிறிஸ்துவைப் பற்றி இந்த மக்களுக்கு
இவ்வளவு தாமதமாக அறிவிக்கின்றோமே!'என்று எண்ணி வருத்தப்பட்டார்.
மறைபோதகரான ஹட்சன் டெய்லரின் வாழ்க்கையில் நடந்த இந்த நிகழ்வு,
கிறிஸ்துவைக் குறித்து அறிந்துகொள்ளவும் அவரைப் பின்பற்றி நடக்கவும்
ஏராளமானபேர் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றார்கள். நாம்தான்
ஆண்டவரின் வார்த்தையை அறிவிப்பதற்கு இன்னும் தாமதப்படுத்திக்
கொண்டிருக்கின்றோம் என்ற செய்தியை நமக்கு எடுத்துச் சொல்கின்றது.
இன்றைய முதல் வாசகம், ஆண்டவரின் வாக்கை அறிந்துகொள்ளவேண்டும்
என்ற ஆவலோடு இருந்த எத்தியோப்பிய நிதியமைச்சர்க்கு பிலிப்பு ஆண்டவரின்
வாக்கை அறிவிக்கின்றார். இதைக் குறித்து நாம் இப்பொழுது
சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
ஆண்டவரின் வாக்கை (ஆழமாக) அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆவலோடு
இருந்த எத்தியோப்பிய நிதியமைச்சர்
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்
வாசகத்தில், ஆண்டவரின் தூதர் பிலிப்பிடம், எருசலேமிலிருந்து
காசா நோக்கிச் செல்லும் வழியாகத் தெற்கு நோக்கிப் போ"
என்கின்றார். பிலிப்பும் அவ்வாறே செல்ல, அங்கு எத்தியோப்பிய
நிதியமைச்சர் எசாயாவின் சுருளேட்டை வைத்து வாசித்துக்
கொண்டிருக்கின்றார். அவர் வாசித்துக் கொண்டிருந்த பகுதி எசாயா
53: 7-8 ஆகும். அக்காலத்தில் திருமறை நூலை சத்தமாக வாசிப்பது
வழக்கம். எத்தியோப்பிய நிதியமைச்சரும் அப்படித்தான்
இறைவாக்கினர் எசாயாவின் நூலை சத்தமாக
வாசித்துக்கொண்டிருக்கின்றார். பிலிப்பு அவரருகே சென்று, "நீர்
வாசிக்கின்ற பகுதியின் பொருள் தெரிகின்றதா?" என்று
கேட்கின்றார் அவரோ, "யாராவது விளக்கிச் சொன்னாலொழிய எவ்வாறு
என்னால் தெரிந்துகொள்ள முடியும்?" என்கின்றார். அதைத்
தொடர்ந்து என்ன நடந்தது என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
ஆண்டவரின் வார்த்தையை அறிவித்த/விளக்கிச் சொன்ன பிலிப்பு
எத்தியோப்பிய நிதியமைச்சர் பிலிப்பிடம், "யாராவது
விளக்காவிட்டால் எவ்வாறு என்னால் தெரிந்துகொள்ள முடியும்?"
என்று சொன்னதைத் தொடர்ந்து, பிலிப்பு அவர்க்கு அந்த மறைநூல்
பகுதியிலிருந்து இயேசுவரை விளக்கம் அளிக்கின்றார். இதைத்
தொடர்ந்து எத்தியோப்பிய நிதியமைச்சர் இயேசுவின்மீது
நம்பிக்கைகொண்டு, அவரை ஏற்றுக்கொள்கின்றார், தொடர்ந்து
திருமுழுக்கும் பெறுகின்றார். இந்த நிகழ்விற்குப் பிறகு
பிலிப்பு செசரியா போய்ச் சேரும்வரை ஆண்டவரின் வார்த்தையை
எடுத்துரைத்துக் கொண்டே செல்கின்றார்.
பிலிப்பிடம் இருந்த உன்னதப் பண்பு அதாவது ஆண்டவரின் வார்த்தை
எல்லார்க்கும் எடுத்துரைக்கும் பண்பு நாம் ஒவ்வொருவரும்
கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்றாக இருக்கின்றது. முதல் வாசகத்தில்
வருகின்ற இந்த எத்தியோப்பிய நிதியமைச்சரைப் போன்றுதான் பலரும்
ஆண்டவரின் வார்த்தையைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவலோடு
இருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் திருமுழுக்குப்
பெற்றிருக்கின்ற நாம் ஒவ்வொருவரும் ஆண்டவரின் வார்த்தையை
எடுத்துரைத்து, அவர்களுக்குப் புதிய வாசலைத் திறந்துகாட்டுவது
காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.
சிந்தனை
'நற்செய்தியை அறிவிக்கவேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது.
நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு'(1கொரி 9:16)
என்பார் பவுல். ஆகவே, நற்செய்தியை ஆண்டவரின் வார்த்தையை
எடுத்துரைப்பது நம் ஒவ்வொருவருடைய கடமை என உணர்ந்து, ஆண்டவரின்
வார்த்தையை மக்களுக்கு எடுத்துரைப்போம். அதன்வழியாக இறையருள்
நிறைவாகப் பெறுவோம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
யோவான் 6: 44-51
எனது சதையை உணவாகக் கொடுக்கின்றேன்
சீனாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையும், கலவரமும்
வெடித்து, கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுவதற்கு தடை உத்தரவு போடப்பட்டபோது
நடந்த நிகழ்வு இது.
அந்நாட்களில் யாராவது தன்னை கிறிஸ்தவராக அடையாளப்படுத்திக்
கொண்டாலோ அல்லது கிறிஸ்துவின் பெயரை உச்சரித்தாலோ அவர் சீன அரசாங்கத்தால்
கடுமையான சித்ரவதைக்கு உள்ளானார். அப்படிப்பட்ட வேளையிலும் ஒரு
குருவானார் மிகவும் துணிச்சலாக கிறிஸ்தவர்களைத் தங்களுடைய நம்பிக்கையில்
திடப்படுத்தும் பணியைச் செய்துவந்தார்.
அவர் சாதாரண ஒரு மளிகைக் கடைகாரரைப் போன்று உடை உடுத்தி, சந்தையின்
ஒரு ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு, வியாபாரம்
செய்துகொண்டிருப்பார். கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் அன்பர்கள்
யாராவது நற்கருணையை உட்கொள்ள விரும்பினால், அவர்கள் குருவானவர்
இருக்கும் கடைக்குச் சென்று, ஒரு குறிப்பிட்ட சைகையை
செய்துகாட்டினால், அவர் அவர்களுக்கு நற்கருணையை ஒரு சோப்புக்
கட்டிக்குள் மறைத்துவைத்து, உண்ணக் கொடுப்பார்.
கிறிஸ்தவர்கள் தாங்கள் குருவானவரிடமிருந்து பெற்ற நற்கருணையை,
தங்களுடைய இல்லங்களுக்கு எடுத்துச்சென்று, நம்பிக்கையோடு உட்கொண்டு
கிறிஸ்தவ விசுவாசத்தில் இன்னும் உறுதியடைந்தார்கள். கிறிஸ்தவ
நெறியைப் பின்பற்றுவதற்கே ஆபத்தான ஒரு சூழல் ஏற்பட்ட போதிலும்,
கிறிஸ்தவர்கள், குருவானவர்கள் நற்கருணையை உட்கொண்டு தங்களுடைய
நம்பிக்கையில், வாழ்க்கையில் திடம்பெற்றார்கள் என்று அறியும்போது
நற்கருணை எந்தளவுக்கு ஆற்றல் நிறைந்தது என்பதை நாம்
புரிந்துகொள்ளலாம்.
நற்கருணை ஒரு வழிபாட்டுக் கொண்டாட்டம் மட்டும் அல்ல, அது நம்முடைய
வாழ்வோடு இரண்டற கலந்த ஒன்று. நம்பிக்கையோடு அதனை உட்கொள்கின்றபோது
இறைவன் அளிக்கும் எல்லா அருளையும், ஆசிரையும், ஆற்றலையும் நாம்
அதிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்பது ஆழமான உண்மை. ஆம், இரண்டாம்
வத்திக்கான் சங்கம் சொல்வது போன்று 'நற்கருணை திருச்சபையின்
வாழ்விற்கு ஊற்றும் உச்சமாக இருக்கின்றது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து,
"விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவே நானே, இவ்வுணவை உண்போர்
என்றுமே வாழ்வர்" என்கிறார். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இஸ்ராயேல்
மக்கள் மன்னாவை உண்டுவந்தார்கள். அவ்வுணவை உண்டவர்கள் இறந்துபோனார்கள்.
ஆனால், இயேசு தரும் உணவு அப்படிக் கிடையாது. ஏனென்றால், இயேசு
தன்னுடைய உடலையே உணவாகத் தருகிறார். அதுவும் நாம் அனைவரும்
நிலைவாழ்வு பெறத் தருகின்றார். ஆகையால், நாம் இயேசுவின் உடலை
நம்பிக்கையோடு உட்கொள்கிறபோது நாம் நிலைவாழ்வைப் பெறுகிறோம் என்பது
உண்மை.
தூய அகுஸ்தினார் கூறுவார், "இயேசுவின் உடலை/ நற்கருணையை நம்பிக்கையோடு
உட்கொள்ளும்போது நாம் அவராகவே மாறிவிடுகிறோம்" என்று. இது எவ்வளவு
ஆழமான உண்மை. நற்கருணையை உட்கொண்டு நாம் அவராகவே மாறிவிட்டோம்
என்றால் அவரது இறையாட்சிக் கனவுகள் நமதாகும்; அவரது பார்வைகள்
நமதாகும். அவரது எண்ணங்கள், சிந்தனைகள் எல்லாம் நமதாகும். தூய
பவுல் கூறுவதுபோன்று, "வாழ்வது நானல்ல, என்னில் கிறிஸ்துவே
வாழ்கின்றார்" ( கலா 2:20) என்றதொரு நிலை உருவாகும். அப்படி
வாழும்போது நம்மிடத்தில் பிரிவினைகள் இருக்காது. உயர்ந்தவன்,
தாழ்ந்தவன் என்ற ஏற்றத்தாழ்வு இருக்காது; வறுமையும், எழ்மையும்கூட
இருக்காது.
ஆகையால் இயேசுவின் உடலை/நற்கருணை ஒவ்வொருநாளும் நாம் உட்கொள்ளும்போது
இந்த உண்மையை நம்முடைய மனக்கண் முன்னால் நிறுத்துவோம். தொடர்ந்து
இயேசுவின் உடலை நம்பிக்கையோடு நாம் உட்கொள்வோம்; அவராகவே
வாழ்வோம். இந்த மண்ணுலகில் இயேசு கண்ட கனவு நனவாகச் செய்வோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
யோவான் 6: 44-51
கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத்தருவார்
நிகழ்வு
சில ஆண்டுகளுக்கு முன்பாக பெல்ஜியம் நாட்டில் ஒரு அக்காவும்
தம்பியும் தங்களுடைய வீட்டிற்கு முன்பாக இருந்த மரத்தின்
அடியில் விவிலியம் வாசித்துக் கொண்டிருந்தனர். இதை அந்த
வழியாகச் சென்ற ஒரு நாத்திகவாதி பார்த்து, "போயும் போயும் ஒரு
மோசமான புத்தகத்தை (Bad Book) வாசித்துக்
கொண்டிருக்கிறீர்களே!" என்றான்.
இதைக் கேட்டுக் கடுஞ்சீற்றம் கொண்ட அந்த சகோதரி,
"திருவிவிலியத்தை மோசமான நூல் என்று சொல்கிறீர்களே... இதனுடைய
அருமை உங்களுக்குத் தெரியுமா... இத்திருவிவிலியத்தை
வாசிப்பதற்கு முன்பாக என் தம்பி இவன் சோம்பேறியாக, பயங்கர
சூதாட்டாக்காரனாக, குடிகாரனாக, குடும்பத்திற்கே பெரிய
தொல்லையாக இருந்ததுவந்தான். என்றைக்கு இவன் திருவிவிலியத்தை
வாசிக்கத் தொடங்கினானோ, அன்றைக்கே இவன் மனம்திரும்பி
வேலைக்குப் போகத் தொடங்கிவிட்டான். இப்போது இவன்
சூதாடுவதில்லை; குடிப்பதில்லை; யாரிடமும் சண்டை போடுவதில்லை.
மாறாக வீட்டில் இருக்கின்ற வயதான தாயாரை நல்லமுறையில்
பராமரித்துக்கொள்கிறான்; பொறுப்புடன் இருக்கிறான். இதைவிட
வேறென்ன சான்று வேண்டும், இத்திருவிவிலியம் மோசமான புத்தகம்
இல்லை, வாழ்வளிக்கும் என்பதற்கு" என்றார்.
இதைக் கேட்டுவிட்டு அந்த நாத்திகவாதி ஓட்டம் பிடித்தவன்தான்,
மறுபடி அவர்களிடம் திரும்பி வரவே இல்லை. (Source: Feathers for
Arrow, Charles Spurgeon)
மேலே சொல்லப்பட்ட நிகழ்வு, இறைவனின் வார்த்தைக்கு,
திருவிவிலியத்திற்கு எந்தளவுக்கு வல்லமை இருக்கின்றது என்பதை
மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தி
வாசகமும் இறைவார்த்தையின் வல்லமையையும் அதை நம்பி வாழ்வோர்
பெறக்கூடிய நிலைவாழ்வையும் குறித்து எடுத்துச் சொல்கின்றது.
நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவு
செய்வோம்.
அனைவருக்கும் கற்றுத்தரும் ஆண்டவர்
யோவான் நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய
நற்செய்தியில், இயேசு, "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு
நானே" என்று சொன்னதும், அங்கிருந்த யூதர்கள், "இவர் யோசேப்பின்
மகன்தானே, இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா?
அப்படியிருக்க இவர், நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்'
என்று சொல்கிறாரே என்று முணுமுணுக்கத் தொடங்குகிறார்கள். இயேசு
யாருக்குப் பிறந்தார்? எந்த ஊரில் பிறந்தார்? என்ற
விவரங்களையெல்லாம் அறிந்த யூதர்கள், ஒருவேளை இயேசுவின்
பெற்றோரிடம் சென்று, அவர் யார் என்று கேட்டிருந்தால் உண்மை
விளங்கியிருக்கும். ஆனால், அவர்கள் அதற்குத் தயாராக இல்லை.
அதனால்தான் அவர்கள் இயேசுவைப் பற்றித் தவறாகப் பேசுகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இயேசு, 'கடவுள்தாமே
அனைவருக்கும் கற்றுத் தருவார்'என்ற இறைவார்த்தையை மேற்கோள்
காட்டிப் பேசுகின்றார். இயேசு மேற்கோள் காட்டுகின்ற இந்த
இறைவார்த்தை, இறைவாக்கினர் எசாயா நூலில் இடம்பெறுகின்றது.
அங்கு நாம் இவ்வாறு வாசிக்கின்றோம்: "உன் குழந்தைகள்
அனைவருக்கும் ஆண்டவர்தாமே கற்றுத்தருவார்; உன் பிள்ளைகள்
நிறைவாழ்வு பெற்றுச் சிறப்புறுவர்." (எசா 54:3). இயேசு
மேற்கோள் காட்டிப் பேசுகின்ற இறைவார்த்தையிலிருந்து,
இறைவன்தாம் எல்லாருக்கும் கற்றுத்தருகின்றார் என்ற என்ற
உண்மையும் அவர் கற்றுத்தருகின்றவற்றைக் கடைப்பிடித்து
வாழ்ந்தால் நிலைவாழ்வை அடையலாம் என்ற உண்மையும் நமக்குத்
தெரியவருகின்றது.
இங்கு நாம் இன்னொரு உண்மையையும் தெரிந்துகொள்ளவேண்டும். அது
என்னவெனில் எல்லாருக்கும் கற்றுத்தந்த இறைவன், இறுதியாகத் தன்
மகன் இயேசு வழியாக பேசுகின்றார் (எபி 1: 1-2) என்பதேயாகும்.
இவ்வாறு மகன் வழியாக இறைவன் பேசுவதற்கும் கற்பிப்பதற்கும் நாம்
செவிக்கொடுக்கின்றோமா? அதன்வழியாக அவர் தருகின்ற நிலைவாழ்வை
பெற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப்
பார்க்கவேண்டும்.
இயேசுவின் வார்த்தையைக் கேட்டு அவரை நம்புவோர் நிலைவாழ்வைக்
கொண்டுள்ளனர்
'கடவுள் தாமே அனைவருக்கும் கற்றுத் தருவார்'என்று சொன்ன இயேசு
தொடர்ந்து சொல்லக்கூடிய வார்த்தைகள், "என்னை நம்புவோர்
நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்" என்பதாகும். இயேசுவை நம்புவது
என்பது அவருடைய வார்த்தைகளை நம்புவதும் கடைப்பிடிப்பதுமாகும்.
இயேசுவின் வார்த்தைகளைக் கேட்காத, அதன்படி வாழாத ஒருவரால்
இயேசுவை நம்பவோ அவரை அன்புசெய்யவோ (யோவா 14:15) அவர்தருகின்ற
நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ளவோ முடியாது என்பதுதான் உண்மை.
எனவேதான், இயேசு தருகின்ற நிலைவாழ்வைப் பெறுவதற்கு அவருடைய
வார்த்தைகளை நம்புவது மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது.
நாம் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு அவர்மீது நம்பிக்கை
வைப்போம். அதன்வழியாக அவர் தரும் நிலைவாழ்வைப்
பெற்றுக்கொள்வோம்.
சிந்தனை
'ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம். நிலைவாழ்வு அளிக்கும்
வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன'(யோவா 6: 68) என்பார் பேதுரு.
ஆகவே, நிலைவாழ்வு தருகின்ற வார்த்தைகளைக் கொண்டிருக்கும்
இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து, அவருடைய வார்த்தையின் படி
வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
யோவான் 6: 44-51
மறையுரைச் சிந்தனை - விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வுதரும்
உணவு இயேசு
1970 களில் வியட்நாமில் ஆயராக இருந்தவர் வான் துவான் (Van
Thuan) என்பவர். அச்சமயம் கிறிஸ்தவர்களுக்கு எதிராக கலவரம்
வெடித்தபோது ஆயர் வான் துவான் கைதுசெய்யப்பட்டு, அங்கிருந்த
சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் சிறைக்கு இழுத்துச் செல்லப்பட்டபோது அவருடைய கையில் எதுவும்
இல்லை. அடுத்தநாள்தான் அங்கிருந்த சிறை அதிகாரி ஒருவர் ஆயரிடம்,
"உங்களுக்குத் தேவையான பொருள்களை ஒரு கடிதம் மூலம் எழுதி
பெற்றுக்கொள்ளுங்கள்" என்றார். ஆயாரோ மிகவும் விவேகமாக
"வயிற்றுவலியை போக்க கொஞ்சம் திராட்சம் இரசம், உட்கொள்ள கொஞ்சம்
ரொட்டித் துண்டு, இன்ன பிற பொருட்களையும் அவசரமாக அனுப்பி
வையுங்கள்" என்று இறைமக்களுக்கு ஒரு கடிதம் எழுதினர். இறைமக்கள்
அவர் எழுதிய கடிதத்தின் உட்பொருளை உணர்ந்தார்களாய் Medicine
for Stomach ache என்று ஒரு பாட்டிலில் எழுதி அதில் திருப்பலிக்குப்
பயன்படுத்தபடும் திராட்சை இரசத்தையும், ரொட்டிகள் என்று ஒரு
பெட்டியில் எழுதி அதில் அப்பத்தையும், பொழுதுபோக்குக்கு வாசிக்கத்
தேவையான நூல்கள் என்ற பெயரில் விவிலியத்தையும், அதன் உள்ளே செபமாலையும்
இன்ன பிற பொருட்களையும் அனுப்பி வைத்தார்கள். சிறை அதிகாரிகள்
அவற்றை மருந்து மாத்திரைகள் என நினைத்து சோதித்துப் பார்க்காமலே
ஆயர் வான் துவான் அவர்களிடம் கொடுத்தார்கள்.
சிறையில் ஆயருக்கு மிகச் சிறிய அறைதான் கொடுக்கப்பட்டது, அதிலும்
போதிய மின்சார வசதியும் அடிப்படை வசதிகளும்கூட கிடையாது. அந்த
அறையில்தான் ஆயர், இறைமக்கள் கொடுத்தனுப்பிய திராட்சை இரசத்தையும்
அப்பத்தையும் குறைந்த அளவு பயன்படுத்தி திருப்பலி நிறைவேற்றி
வந்தார். ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகள் ஆயர் அந்தச் சிறையில் இருந்தார்.
அந்த நாட்களில் இறைமக்கள் கொடுத்தனுப்பிய திராட்சை இரசத்தையும்
அப்பத்தையும் வைத்துதான் திருப்பலி நிறைவேற்றி வந்தார்.
அவ்வப்போது அவர் இறைமக்களுக்கு எழுதும் கடிதங்களில்,
"ஒவ்வொருநாளும் சிறையின் உள்ள நான் நிறைவேற்றும் திருப்பலியும்
உட்கொள்ளும் நற்கருனையும்தான் இந்த வேதனையான சிறைவாழ்வில்
எனக்கு மிகப்பெரிய ஆறுதலாகவும் உறுதுணையாகவும் இருக்கின்றது"
என்று எழுதி வந்தார்.
நற்கருணைதான் ஒன்பது ஆண்டுகள் கொடிய சிறைவாழ்வை அனுபவித்த ஆயர்
வான் துவான் அவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாகவும்
உறுதுணையாகவும் இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "விண்ணகத்திலிருந்து
இறங்கி வந்த வாழ்வுதரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால்
அவர் என்றுமே வாழ்வார்" என்று சொல்லிவிட்டு தொடர்வார், "எனது
சதையை உணவாகக் கொடுக்கின்றேன். அதை உலகு வாழ்வாகவே
கொடுக்கின்றேன்" என்று. இயேசுவின் இவ்வார்த்தைகளை நாம்
எப்படிப் புரிந்துகொள்வது என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
ஆய்வாளர்கள் சொல்வார்கள், "நாம் எந்த மாதிரியான உணவை
உட்கொள்கின்றோமோ, அதனுடைய குணங்களை நாம் உள்வாங்கிக்
கொள்கின்றோம்" என்று. எடுத்துக்காட்டாக நாம் சைவ உணவுவகைகளை
உட்கொள்ளும்போது அதற்கேற்ற மாதிரி மென்மைத்தன்மையைப்
பெறுகின்றோம். ஒருவேளை நாம் அசைவ உணவு வகைகளை உட்கொள்ளும்போது
கொஞ்சம் முரட்டுத்தனத்தையும் மூர்கத்தனத்தையும் இயல்பாகவே
பெறுகின்றோம். அதுபோன்றுதான் ஆண்டவரின் திருவுடலை
ஒவ்வொருநாளும் நாம் உட்கொள்கின்றபோது அவரைப் போன்று
மாறுகின்றோம். இன்னும் சொல்லப்போனால் அவருடைய விழுமியங்களை,
இறையாட்சிக் கனவுகளை நாம் வாழ்வாக்குகின்றபோது அவர்தரும்
நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி.
ஆனால் நம்மால் நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியவில்லையே?, அது
ஏன் என்பதுதான் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக
இருக்கின்றது. தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல்
திருமுகம் 11: 27- 30 ல் கூறுவார், "எவராவது தகுதியற்ற
நிலையில் இந்த அப்பத்தை உண்டால் அல்லது ஆண்டவரின் கிண்ணத்தில்
பருகினால், அவர் ஆண்டவரின் உடலுக்கும் இரத்தத்திற்கும்
எதிராகக் குற்றம் புரிகின்றார்... இதனாலேயே, உங்களில் பலர்
வலுவற்றவராகவும் உடல் நலமாற்றோராகவும் இருக்கின்றனர்; மற்றும்
பலர் இறந்தும் விட்டனர்". ஆம், நாம் தகுதியற்ற நிலையில்
ஆண்டவரின் திருவுடலையும் இரத்தத்தையும் உட்கொள்ளும்போது ஆசிரை
அல்ல, சாபத்தைப் பெற்றுக்கொள்ளுகின்றோம் என்பதுதான் நிசர்தன
உண்மையாக இருக்கின்றது.
எனவே, இயேசுவின் சீடர்களாகிய நாம், அவருடைய உடலை தகுதியான
முறையில் உட்கொள்வோம், அது மட்டுமல்லாமல் இயேசுவின்
இறையாட்சிக் கனவை நனவாக்குவோம். அதன்வழியாக இறைவன் தருகின்ற
நிலைவாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
|
|