|
06 மே 2019 |
|
பாஸ்கா
காலம் மூன்றாம் வாரம் - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஸ்தேவானின் ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தைகளையும்
எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 6: 8-15
அந்நாள்களில் ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களிடையே
பெரும் அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார்.
அப்பொழுது உரிமையடைந்தோர் எனப்படுவோரின் தொழுகைக் கூடத்தைச்
சேர்ந்த சிலரும் சிரேன், அலக்சாந்திரியா நகரினரும் சிலிசியா,
ஆசியா மாநிலத்தவரும் ஸ்தேவானோடு வாதாடத் தொடங்கினர். ஆனால்
அவரது ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தை களையும்
எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை.
பின்பு அவர்கள், "இவன் மோசேக்கும் கடவுளுக்கும் எதிராகப் பழிச்சொற்கள்
சொன்னதை நாங்கள் கேட்டிருக்கிறோம்" என்று கூறச் சிலரைத்
தூண்டிவிட்டனர். அவ்வாறே அவர்கள் மக்களையும் மூப்பர்களையும் மறைநூல்
அறிஞர்களையும் அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழச் செய்தார்கள்.
உடனே அவர்கள் எழுந்துவந்து அவரைப் பிடித்துத் தலைமைச் சங்கத்துக்கு
இழுத்துச் சென்றார்கள்; மேலும் பொய்ச் சாட்சிகளைக் கொண்டுவந்து
நிறுத்தினார்கள்.
அவர்கள், "இந்த மனிதன் இத்தூய இடத்தையும் திருச்சட்டத்தையும்
எதிர்த்து ஓயாமல் பேசிவருகிறான்" என்று கூறினார்கள்.
மேலும் அவர்கள், "நசரேயராகிய இயேசு இந்த இடத்தை அழித்துவிடுவார்
என்றும், மோசே நமக்குக் கொடுத்திருக்கிற முறைமைகளை
மாற்றிவிடுவார் என்றும் இவன் கூறக் கேட்டோம்" என்றார்கள்.
தலைமைச் சங்கத்தில் அமர்ந்திருந்த அனைவரும் அவரை உற்றுப்பார்த்தபோது
அவரது முகம் வானதூதரின் முகம்போல் இருக்கக் கண்டனர்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
119: 23-24. 26-27. 29-30 (பல்லவி: 1b)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.
அல்லது: அல்லேலூயா.
23 தலைவர்கள் ஒன்றுகூடி எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தாலும்,
உம் ஊழியன் உம்முடைய விதிமுறைகளைக் குறித்தே சிந்திக்கின்றேன்.
24 ஏனெனில், உம் ஒழுங்குமுறைகள் எனக்கு இன்பம் தருகின்றன; அவையே
எனக்கு அறிவுரையாளர். பல்லவி
26 என் வழிமுறைகளை உமக்கு எடுத்துச் சொன்னேன்; நீர் என் மன்றாட்டைக்
கேட்டருளினீர்; உம் விதிமுறைகளை எனக்குக் கற்றுத்தாரும். 27 உம்
நியமங்கள் காட்டும் வழியை என்றும் உணர்த்தியருளும்; உம் வியத்தகு
செயல்கள்பற்றி நான் சிந்தனை செய்வேன். பல்லவி
29 பொய் வழியை என்னைவிட்டு விலக்கியருளும்; உமது திருச்சட்டத்தை
எனக்குக் கற்றுத்தாரும். 30 உண்மையின் பாதையை நான்
தேர்ந்துகொண்டேன்; உம் நீதிநெறிகளை என் கண்முன்
நிறுத்தியுள்ளேன். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மத் 4: 4b
அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக,
கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
அழிந்து போகும் உணவுக்காக அல்ல; நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே
உழையுங்கள்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 22-29
இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்த பின், சீடர்கள் புறப்பட்ட
கரையிலேயே மறுநாளும் மக்கள் கூட்டமாய் நின்றுகொண்டிருந்தார்கள்.
முந்தின நாள் ஒரு படகைத் தவிர வேறு படகு எதுவும் அங்கு இல்லை
என்பதையும் அதில் இயேசுவின் சீடர்கள் மட்டும் போனார்களே அன்றி
இயேசு அவர்களோடு அப்படகில் ஏறவில்லை என்பதையும் அவர்கள் கண்கூடாகப்
பார்த்திருந்தார்கள்.
அப்போது, ஆண்டவர் கடவுளுக்கு நன்றி செலுத்திக் கொடுத்த உணவை மக்கள்
உண்ட இடத்திற்கு அருகில், திபேரியாவிலிருந்து படகுகள் வந்து
சேர்ந்தன. இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட
மக்கள் கூட்டமாய் அப்படகுகளில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச்
சென்றனர்.
அங்கு கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, "ரபி, எப்போது இங்கு
வந்தீர்?" என்று கேட்டார்கள்.
இயேசு மறுமொழியாக, "நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல,
மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள்
என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அழிந்து போகும் உணவுக்காக
உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்.
அவ்வுணவை மானிட மகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய
கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்" என்றார்.
அவர்கள் அவரை நோக்கி, "எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக
இருப்பதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டார்கள்.
இயேசு அவர்களைப் பார்த்து, "கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கு
ஏற்ற செயல்" என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை:
நம்முடைய செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருக்க வேண்டும்.
நம்முடைய விருப்பத்தை செயலாற்றவே விரும்புகின்றோம்.
செயல்கள் சிறியவையோ பெரியவையோ, பல நேரத்தில் நாம் செய்யும்
செயல்கள் அனைத்தும், நம்முடைய விருப்பத்தை நிறைவேற்றுவதாகவே
அமைக்கின்றோம்.
கடவுளுக்கு ஏற்றவையாக மாற்ற நினைத்தால் மாத்திரமே செயல்கள்
வெற்றி பெற முடியும்.
திருமணமோ, திருவிழாக்களோ, வீடுகட்டுமான பணியோ அல்லது எந்தவொரு
செயலோ நாம் அவரிடம் ஓப்படைத்து, அவருடைய விருப்பத்தை அறிந்து
செய்வதை விடுத்து, நம்முடைய விருப்பத்தை மாத்திரமே கவனத்தில்
கொள்கின்றோம். நாள் பார்ப்பது, நேரம் பார்ப்பது, இவை கடவுளின்
ஆசீரைப் பெற்றுத் தருமா?
நம் செய்கள் வெற்றி பெறாமல் போவதற்கு காரணம், அவருக்கு
எற்புடையாவையாக்கி செய்யாமல் போவதால் தான்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
யோவான் 6: 22-29
அழியா உணவுக்காக உழையுங்கள்
ஓர் ஊரில் பணக்காரன் ஒருவன் இருந்தான். அவன் பணம்
சேர்ப்பதற்காக உலகில் எவ்வளவு தீய வழிகள் இருக்கின்றானோ
அவ்வளவு தீய வழிகளையும் பயன்படுத்தி பணத்தைச் சேர்த்தான்.
அப்படி சேர்த்த பணத்தை நல்லமுறையில் செலவு செய்தானா? என்றால்
அதுவும் இல்லை. மிகப்பெரிய கருமியாக இருந்தான். தான் சேர்த்த
பணத்தை ஒரு இமியளவுகூட யாருக்கும் கொடுக்காமல் இருந்தான்.
ஒருநாள் அவன் அவ்வூரில் இருந்த துறவியைச் சந்தித்து பேசினான்.
"சுவாமி என்னிடத்தில் பணம் இருக்கின்றது. ஆனால் நிம்மதி
மட்டும் இல்லை". பணக்காரனிடம் சிறிதுநேரம் துறவி அவனை தன்னுடைய
அறையில் இருந்த கண்ணாடி ஜன்னல் அருகே அழைத்துச் சென்று,"இந்த
ஜன்னல் வழியாக என்னென்ன தெரிகிறது பார்" என்றார். அவனும்
ஜன்னல் வழியாகத் தெரிந்த ஒவ்வொன்றையும் துறவியிடத்தில்
எடுத்துச் சொன்னான்.
பின்னர் துறவி அவனை தன்னுடைய அறையில் இருந்த முகம் பார்க்கும்
கண்ணாடி முன்பாக அழைத்துச் சென்று,"இதில் என்ன தெரிகிறது?"
என்றார். பணக்காரனோ,"என்னுடைய முகத்தைத் தவிர, வேறொன்றும்
தெரியவில்லை" என்றார். பணக்காரன் இவ்வாறு சொன்னதற்குப் பிறகு,
துறவி அவனிடத்தில் பேசத் தொடங்கினார்,"முலாம் பூசப்படாத
கண்ணாடியைப் பார்க்கும்போது எல்லாரும் நன்றாகத் தெரிகிறார்கள்
என்று சொன்னாய், முலாம் பூசப்பட்ட கண்ணாடியைப் பார்த்தபோது
உன்னுடைய முகத்தைப் பார்த்தபோது, வேறொன்றும் தெரியவில்லை என்று
சொல்கின்றாய். இவை இரண்டையும் வைத்தே உனக்கு ஓர் அறிவுரை
சொல்கிறேன், கவனமாகக் கேள்:
உன்னிடம் இருக்கும் செல்வத்தை பிறருக்குக் கொடுத்து வாழும்போது
உன்னுடைய வாழ்வு முலாம் பூசப்படாத கண்ணாடியைப் போன்று மிகப்
பிரகாசமாக இருக்கும், அதே நேரத்தில் உன்னுடைய செல்வத்தை
யாருக்கும் கொடுக்காமல், உனக்காக மட்டுமே நீ பயன்படுத்தி
வாழும்போது மூலாம் பூசப்பட்ட கண்ணாடியைப் போன்று உன்னைத் தவிர
வேறு யாரையும் உனக்குத் தெளிவாகக் காட்டாது, ஆகையால் உன்னுடைய
செல்வத்தை பிறருக்குக் கொடுத்து வாழ். அப்போது உன்னுடைய
வாழ்க்கை மிகப் பிரகாசமாக இருக்கும்.
பணம் ஒன்றும் தான் வாழ்வு என்று இருப்பவரால் நிம்மதியாக இருக்க
முடியாது, பணத்தை விடவும் சக மனிதன் மீதான அக்கறை, இறைத்தேடல்
இவைதான் ஒரு மனிதனுடைய வாழ்விற்கு உண்மையான அர்த்தம்
தருகின்றது என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னைத் தேடி வந்த
மக்களைப் பார்த்துச் சொல்கிறார்:"அழிந்து போகும் உணவுக்காக
உழைக்கவேண்டாம், நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே
உழையுங்கள்" என்று. இயேசு கூறிய இவ்வார்த்தைகளுக்கு பின்னால்
இருக்கும் அர்த்தம் என்ன என்று இப்போது நாம் சிந்தித்துப்
பார்ப்போம்.
இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் வைத்து ஐயாயிரம்
பேருக்கு இதற்கு முந்தைய பகுதியில் உணவளித்திருந்தார். எனவே
மக்கள், இயேசுவுக்குப் பின்னால் சென்றால் நிச்சயம் உணவு
கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் எங்கு சென்றாரோ அங்கு
சென்றார்கள். இதைப் பார்த்துதான் இயேசு அவர்களிடம் மேலே சொன்ன
வார்த்தைகளைச் சொல்கிறார். இந்த இடத்தில் நான்காம்
நூற்றாண்டில் வாழ்ந்த தூய ஜான் கிரிசோஸ்டம் என்ற இறையியலாளர்
சொன்ன கருத்துகளை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது மிகவும்
பொருத்தமானதாகும். அவர் சொல்கிறார், (Men are nailed to the
things of this life)"மனிதர்களாகிய நாம் எப்போதும் இவ்வலகு
சார்ந்தவற்றையே நாடுபவர்களாக இருக்கின்றோம்". இது நிசதர்சனமான
உண்மை. ஆகையால், இயேசு அழிந்து போகும் உணவுக்காக உழைக்காமல்,
நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காக உழையுங்கள்" என்று
சொன்னதில் வியப்பேதும் இல்லை.
அழிந்து போகும் உணவாகிய பணம், பொருள், இன்பம் இவையெல்லாம் ஒரு
மனிதனுக்கு குறுகிய காலம்தான் இன்பம் தரும். நிலையான இன்பத்தை
அவைகளால் தரமுடியாது. ஆனால் ஆண்டவரைத் தேடுகின்றபோது எல்லா
ஆசிரும் அருளும் கிடைக்கும் என்பதுதான் இறைவார்த்தை நமக்குத்
தரும் செய்தியாக இருக்கின்றது."ஆகவே, அனைத்திற்கும் மேலாக
அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுகள்.
அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்"
என்று மத்தேயு நற்செய்தியில் இயேசு சொல்கிறார் (மத் 6:33).
அதுதான் நம்முடைய வாழ்விற்கு நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய
செய்தியாக இருக்கின்றது.
எனவே கிறிஸ்தவர்களாகிய நாம் நிலைவாழ்வை நமக்குத் தரும் இறைவன்
ஒருவரை மட்டுமே தேடிச் சொல்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
யோவான் 6: 22-29
அழிந்துபோகும் உணவிற்காக உழைக்கவேண்டாம்
ஒரு கணவனும், மனைவியும் பேருந்தில் பயணம்
செய்துகொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராத விதமாக விபத்து
ஏற்படவே, அந்தப் பேருந்தில் பயணம்செய்த ஏராளமான மக்கள்
இறந்துபோனார்கள். அந்தப் பெண்மணியின் கணவரும் தலையில் பலத்த
காயத்தோடு, இரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
விபத்துச் செய்தி கேள்விப்பட்டு மருத்துவர் குழு ஒன்று அங்கே
விரைந்து வந்தது. விபத்தில் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் என
எல்லாரையும் அவர்கள் படுக்கையில் தூக்கிப்போட்டுக்கொண்டு
மருத்துவமனைக்கு விரைந்தார்கள். அவர்களுக்குப் பின்னாலேயே
தன்னுடைய கணவனைப் பறிகொடுத்த அந்தப் பெண்மணியும் ஓடினாள்.
"ஐயா! என்னுடைய கணவருக்கு என்ன ஆயிற்று? அவர் இப்போது உயிரோடு
இருக்கிறாரா? அல்லது இறந்துவிட்டாரா?" என்று அங்கே இருந்த ஒரு
மருத்துவரின் அவள் கெஞ்சிக் கேட்டாள். அவருடைய கணவரைச்
ஆய்வுசெய்து பார்த்த அந்த மருத்துவர் சற்று வருத்ததோடு,
"அம்மா! உங்களுடைய கணவர் இறந்து ஒரு மணிநேரத்திற்கு மேல்
ஆயிற்று" என்று சொல்லிவிட்டு விரைந்தார்.
ஆனால் படுக்கையில் படுத்துக்கிடந்த அவளுடைய கணவர்,
படுக்கையிலிருந்து எழுந்துநின்று,"ஐயா! நான் இறக்கவில்லை,
இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்" என்றார். இதைப்பார்த்த
அவருடைய மனைவி, 'அதான் மருத்துவரே நீ இறந்துவிட்டதாக
சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாரே, அப்புறம் எதற்கு இன்னும் நான்
உயிரோடு இருக்கிறேன் என்று கத்திக்கொண்டிருக்கிறீர். பேசாமல்
படும்" என்று அதட்டினார்.
தன்னுடைய மனைவியின் நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ள முடியாத அந்த
அப்பாவிக் கணவர் அவளிடம்,"எதற்காக இப்படி நான் உயிரோடு
இருக்கும்போதே இறந்துவிட்டதாகச் சொல்கிறாயே? உனக்கு என்ன
ஆயிற்று?" என்று கேட்டார். அதற்கு அவருடைய மனைவி,"நீங்கள்
இறந்தால் தான் பாலிசிப் பணம் (LIC Policy) panamஎனக்குக்
கிடைக்கும். அதனால்தான் அபப்டிச் சொன்னேன்" என்றாள். அதன்பிறகு
கணவன் இந்த பூமியில் வாழ்வதில் எந்தவொரு அர்த்தமும் இல்லை
என்று சொல்லி தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டான்.
பணத்திற்காக/சொத்து, சுகங்களுக்காக உயிரோடு இருக்கும் தன்னுடைய
கணவரை இறந்ததாகச் சொல்லும் அவலம் இன்றைக்கும் தொடர்ந்துகொண்டே
இருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னைப் பின்தொடர்ந்து
வந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்துச் சொல்கிறார்,"நீங்கள்
அரும் அடையாளத்தைக் கண்டதால் அல்ல, மாறாக அப்பங்களை வயிறார
உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச்
சொல்கிறேன். அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம்,
நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்" என்கிறார்.
பெரும்பாலான நேரங்களில் நமது வாழ்க்கையே இயேசு கூறுவதுபோன்று
அழிந்துபோகும் செல்வதைத் தேடுகின்ற ஒரு பயணமாக
முடங்கிபோய்விடுகின்றது. கடினமாக உழைத்து பொருள் ஈட்டுகிறோம்;
பணம் ஈட்டுகிறோம். ஆனால் இறுதியில் 'நாய் பெற்ற தெங்கம்பழம்'
போன்று நாமும் பயன்படுத்தாமல், பிறரையும் பயன்படுத்தவிடாமல்
மண்ணோடு மக்கிச் சாகின்றோம். ஆண்டவர் இயேசு சொல்லக்கூடிய
அறிவற்ற செல்வந்தன் உவமையில் அதுதான் நிகழ்ந்தது. அவன் வயல்
நன்றாக விளைந்ததும், களஞ்சியத்தைப் பெரிதாக்க நினைத்தானே ஒழிய,
அதனைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளவில்லை. கடைசியில் அவன்
சம்பாதித்த செல்வம் யாருக்கும் பயன்படாமல் இறந்தான்.
ஆகவே, நாம் பொருட்செல்வத்தைத் தேடுவதோடு நம்முடைய வாழ்வை
முடித்துக்கொள்ளாமல், அருட்செல்வத்தைச் சேர்ப்பதிலும் நம்முடைய
கவனத்தைச் செலுத்துவோம். இயேசு கூறுவார்,"அனைத்திற்கும்
மேலாக, அவருடைய ஆட்சியையும், அவருக்கு ஏற்புடையவற்றையும்
நாடுங்கள், அப்போது இவையனைத்தும் உங்களுக்கு சேர்த்துக்
கொடுக்கப்படும்" என்று. (மத் 6;33).
எனவே, இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்வோம். இறைவனுக்குப்
பிரியமானதைத் தேடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய்
பெறுவோம்.
"கதவின் வழியாக அநியாயமாக வரும் செல்வம், ஜன்னலின் வழியாக
வெளியே செல்கிறது எகிப்து பழிமொழி.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
முதல் வாசகம்
ஸ்தேவானின் ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய
வார்த்தைகளையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 6: 8-15
"அவரது ஞானத்தையும் தூய ஆவியார் வழியாக அவர் பேசிய
வார்த்தைகளையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை"
நிகழ்வு
ஒரு காட்டில் இருந்த கழுதை அதே காட்டில் இருந்த புலியிடம்
வந்து,"தோழா! புல்லின் நிறம் நீலம்தானே!" என்றது. அதற்குப்
புலி கழுதையிடம்,"புல்லின் நிறம் நீலம் இல்லை. பச்சை" என்றது.
"இல்லை தோழரே! நான் சொல்வது போல் புல்லின் நிறம் நீலம்தான்.
பச்சை" என்று அடித்துச் சொன்னது கழுதை. புலியோ,"நான்
சொல்வதுதான் சரி" என்றது. இதனால் இரண்டு பேர்க்கும் இடையே
வாக்குவாதம் வரத் தொடங்கியது. வாக்குவாதம் முற்றி சண்டையில்
போய் முடிவதற்கு முன்னம், கழுதை புலியிடம்,"தோழரே! நாம்
எதற்கு இப்படி வாக்குவாதம் செய்துகொண்டிருக்கவேண்டும்.
நம்முடைய பிரச்சினையை காட்டு அரசரான சிங்கத்திடம் எடுத்துச்
சொல்வோம். அது நம்மிடம் என்ன சொல்கின்றதோ அதை அப்படியே
ஏற்றுக்கொள்வோம்" என்றது. புலியும் அதற்குச் சரியென்று சொல்ல,
இரண்டு பேரும் சிங்கத்திடம் சென்றன.
கழுதையும் புலியும் தங்களுடைய பிரச்சினையை சிங்கத்திடம்
கொண்டுசென்ற நேரம், அது தன்னுடைய அரியணையில் மிகவும் கம்பீரமாக
வீற்றிருந்தது. இரண்டு பேரும் சிங்கத்திற்கு வணக்கம் சொன்ன
பிறகு, கழுதை தன் தரப்பு நியாயத்தை சிங்கத்திடம் எடுத்துச்
சொல்லத் தொடங்கியது:"அரசே! புல்லின் நிறம் நீலம்தானே!"
"ஆமாம், நீ சொல்வதுபோல் புல்லின் நிறம் நீலம்தான்" என்றது
சிங்கம். உடனே கழுதை சிங்கத்திடம்,"புல்லின் நிறம் நீலம்
என்று உங்களுக்குத் தெரிகின்றது. இந்த எளிய உண்மைகூடத்
தெரியாமல் இந்தப் புலி 'புல்லின் நிறம் பச்சை' என்று என்னிடம்
வாக்குவாதம் செய்துகொண்டிருக்கின்றது. எனவே, இதற்குத் தண்டனை
கொடுக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று
சொல்லிவிட்டு கழுதை தன்னுடைய நடையைக் கட்டத் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து சிங்கம், புலியைச் சிறையில் அடைத்தது.
அப்பொழுது புலி சிங்கத்திடம்,"அரசே! புல்லின் நிறம்
நீலநிறமல்ல, பச்சை என்று எல்லார்க்கும் தெரியும்.
அப்படியிருக்கும் அந்தக் கழுதை சொன்னதைக் கேட்டுக்கொண்டுவிட்டு
'புல்லின் நிறம் நீலம்தான்' என்று என்னை இப்படிச் சிறையில்
அடைத்திருக்கின்றீர்களே! இது உங்களுக்கு நல்லதாகச்
தெரிகின்றதா?" என்றது. புலி இவ்வாறு சொன்னதைத் தொடர்ந்து
சிங்கம் அதனிடம்,"புல்லின் நிறம் பச்சை என்பது எனக்கு
நன்றாகவே தெரியும். அதற்காக நான் உன்னைச் சிறையில்
அடைக்கவில்லை. மாறாக, நீ அந்த முட்டாள் கழுதையோடு வாக்குவாதம்
செய்தாயே. அதற்காகத்தான் உனக்கு இந்தச் சிறைத்தண்டனை" என்றது.
மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் முட்டாள் கழுதைப் போன்றுதான்
பலரும் நம்மிடம் வாக்குவாதம் செய்வார்கள். அவர்களிடம் நாம்
மிகவும் கவனமாக இருப்பது தேவையானது. இன்றைய முதல் வாசகத்திலும்
ஒரு வாக்குவாதம் வருகின்றது. அது எப்படிப்பட்ட வாக்குவாதம்?
அதைத் தொடர்ந்து நடப்பது என்ன? என்பதை இப்பொழுது சிந்தித்துப்
பார்ப்போம்.
ஞானத்தோடும் தூய ஆவியாரின் வல்லமையோடும் பேசிய ஸ்தேவான்
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்
வாசகத்தில் உரிமையடைந்தோர் எனப்படுவோரின் தொழுகைக்கூடத்தைச்
சார்ந்த சிலரும் இன்னும் ஒருசிலரும் ஞானமும் தூய ஆவியாரின்
வல்லமையும் நிரம்பிய ஸ்தேவானோடு வாதாடத் தொடங்குகிறார்கள்.
அவர்களால் ஸ்தேவானோடு வாதாட முடியாமல் போகவே, அவர்கள் அவர்க்கு
எதிராகப் பொய்க்குற்றம் சுமத்துகிறார்கள்.
மற்றவர்களால் ஸ்தேவானோடு வாதாட முடியாமல் போனதற்குக் காரணம்
அவர் தங்கள் சொந்த பலத்தை நம்பி வாதாடியதாக இருந்திருக்கலாம்.
ஸ்தேவான் அப்படி இல்லை. அவர் தூய ஆவியாரின் வல்லமையோடு
வாதாடுகின்றார். அதனால் வெற்றியும் பெறுகின்றது. என்றைக்கு
நாம் தூய துணையோடு ஒன்றைச் செய்கின்றோமோ, அன்றைக்கு அதில் நாம்
வெற்றியடைவோம் என்பது உறுதி.
வாதாட முடியாமல் ஸ்தேவான்மீது பொய்க்குற்றம் சுமத்துதல்
ஸ்தேவானோடு வாதாடியவர்கள் அவரோடு எதிர்த்து நிற்க முடியாமல்,
அவர் மோசேக்கும் கடவுளுக்கும் எதிராகப் பழிச் சொற்கள் கூறியதை
எங்கள் காதால் கேட்டோம் என்று பொய்க்குற்றம் சுமத்துகிறார்கள்.
எப்படி யூதர்கள் இயேசுவுக்கு எதிராகப் பொய்க்குற்றம்
சுமத்தினார்களோ, அதுபோன்று ஸ்தேவானுக்கு எதிராகவும்
பொய்க்குற்றம் சுமத்துகிறார்கள். உண்மையில் ஸ்தேவன் மோசேக்கு
எதிராகப் பேசவில்லை. மோசேயைப் போன்று இருந்தார். அதனால்தான்
அவருடைய முகம் வானதூதர்களின் முகம் போன்று ஒளிவீசியது (விப 34:
29-30)
சிந்தனை
'இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின் வாழ்வை உனக்கு
முடியாகச் சூட்டுவேன்' (திவெ 2:10) என்கிறது இறைவார்த்தை.
ஸ்தேவான் இறுதிவரைக்கும் நம்பிக்கையில் உறுதியாக இருந்து,
ஆண்டவரின் வார்த்தையை எடுத்துரைத்தார். நாமும் இறக்கும்வரை /
இறுதிவரை நம்பிக்கையோடு இருந்து, ஆண்டவரின் வார்த்தையை
எடுத்துரைப்போம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
யோவான் 6: 22-29
கடவுளுக்கேற்ற செயல் எது?
நிகழ்வு
ஒரு நகரில் செல்வரத்தினம் என்றொரு கல்லூரி மாணவன் இருந்தான்.
சாதாரண குடும்பத்தைத் சார்ந்த அவன், ஒருநாள் தன்னுடைய
பெற்றோரோடு ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது, அங்கு
வந்திருந்த அவனுடைய உற்றார் உறவினர் யாவரும் மிகவும் ஆடம்பரமாக
உடை உடுத்திப் பகட்டாக இருப்பதைப் பார்த்தான். இதைப் பார்த்த
பிறகு அவனுடைய உள்ளத்தில், 'நாமும் இவர்களைப் போன்று
வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்து, எல்லாரும் மெச்சக்கூடிய
அளவுக்கு வாழவேண்டும்' என்ற எண்ணமானது உதித்தது. அன்றிலிருந்து
அவன் அதே சிந்தனையோடு வாழத் தொடங்கினான்.
கல்லூரிப் படிப்பை முடித்தபின்பு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில்
வேலைக்குச் சேர்ந்து சம்பாதிக்கலாமா? என்று யோசித்தான். அப்படி
யோசித்துக்கொண்டிருக்கையில், 'அடுத்தவருக்குக் கீழ்
வேலைபார்த்து, மாதாமாதம் சம்பளம் வாங்கிப் பெரியாளாவது என்பது
முடியாத காரியம்... சொந்தமாகத் தொழில் தொடங்கினால்தான்
நம்முடைய இலட்சியம் நிறைவேறும்' என்ற யோசனை வர, சிறிய அளவில்
ஒரு தொழில் தொடங்கினான். அதில் அவன் படிப்படியாக வளர்ந்து நல்ல
நிலையை அடைந்தான். இதற்குப் பின்பு அவனுக்குத் திருமணம்
நடைபெற்று, இரண்டு குழந்தைகள் பிறந்தார்கள். ஆனால், அவன்
அதிகமாகப் பணம் சம்பாதிக்கவேண்டும், பெரிய ஆளாக என்ற
முனைப்பில் மனைவி, பிள்ளைகள் எல்லாரையும் மறந்தான்.
ஒருகட்டத்தில் வேலை வேலை என்று அலைந்ததால் அவனுடைய உடல்நலம்
பாதிக்கப்பட்டது. இதனால் அவன் நகரில் இருந்த ஒரு பெரிய
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அவனைச் சோதித்துப்
பார்த்த மருத்துவர்கள் அவனுக்குத் தீராத நோய் வந்திருப்பதாகச்
சொன்னார்கள். இதைக் கேட்டு அவன் மிகவும் அதிர்ச்சியடைந்தவனாய்,
"எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை, எப்படியும் என்னைக்
குணப்படுத்துங்கள்" என்று கெஞ்சிக் கேட்டான். அவர்களோ அதற்குச்
சரியென்று சொல்லிவிட்டு, சிகிச்சை அளிக்கத் தொடங்கினார்கள்.
ஆனால் சிகிச்சை எந்தவிதத்திலும் பயனளிக்காமல் போகவே, அவன்
மிகக் குறைந்த வயதில் இறந்துபோனான்.
அழிந்து போகும் செல்வத்தைத் தேடி, கடைசியில் தன்னுடைய வாழ்வையே
தொலைத்துக்கொண்ட இந்த செல்வரத்தினத்தைப் போன்றுதான் பலரும்
அழிந்துபோகும் செல்வத்தைத் தேடி, வாழ்வையே தொலைத்து
நிற்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் இன்றைய இறைவார்த்தை அழியா
செல்வம் அல்லது அழியா உணவிற்காக உழைக்கவேண்டும் என்றோர் உயரிய
அழைப்பினைத் தருகின்றது. நாம் அந்த அழியான செல்வம் அல்லது
உணவினைப் பெற - கடவுளுக்கு ஏற்ற செயலாக - என்ன செய்யவேண்டும்
என்று சிந்தித்துப் பார்ப்போம்.
அழிந்துபோவதைத் தேடி அலையும் மக்கள்
இயேசு ஐயாயிரம் பேருக்கு அப்பங்களைப் பகிர்ந்தளித்ததைத் (யோவா
6:1-15) தொடர்ந்து, மக்கள்கூட்டம் 'இயேசுவுக்குப் பின்னால்
சென்றால் எப்படியும் வயிறார உணவு கிடைக்கும்' என்ற எண்ணத்தில்
அவரைத் தேடி, கப்பர்நாகும் செல்கிறது. அப்பொழுதுதான் இயேசு
தன்னைத் தேடிவந்த கூட்டத்திடம்,"அழிந்துபோகும் உணவிற்காக
உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவிற்காகவே
உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார்"
என்கின்றார்.
மனித வாழ்விற்கு உணவோ, பணமோ தேவைதான். ஆனால், அவை மட்டுமே
வாழ்க்கை கிடையாது. வாழ்வு அதைவிட அதி உன்னதமானது. இதைத்தான்
ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் எசாயா வழியாக,"உணவாக இல்லாத
ஒன்றிற்காக நீங்கள் ஏன் பணத்தைச் செலவிடுகிறீர்கள்? நிறைவுதராத
ஒன்றிற்காய் ஏன் உங்கள் உழைப்பை வீணாக்குகிறீர்கள்? எனக்குச்
செவிகொடுங்கள்; அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள்" (எசா 55:
2-3) என்கின்றார். ஆகையால், அழிந்து போகின்ற உணவு, பணம்
இன்னபிற காரியங்களைத் தேடி வாழ்வைத் தொலைப்பதற்குப் பதில்
அழியா உணவை, அழியா செல்வத்தை, அழியா வாழ்வினைத் தரும்
இறைவனுக்குச் செவிகொடுத்து, அதற்கேற்றாற்போல் வாழ்வது சாலச்
சிறந்தது.
கடவுளுக்கேற்ற செயல் எது?
பணம், பொருள் இன்ன பிற காரியங்கள் எல்லாம் அழிந்துபோகக்கூடியவை
என்று பார்த்தோம். அப்படியானால், அழியா உணவு எது? அதைப்
பெற்றுக்கொள்ள ஒருவர் செய்வது? என்ற கேள்விகள் எழலாம்.
இக்கேள்விகளுக்கான பதிலைத்தான் இயேசு,"கடவுள் அனுப்பியவரை
நம்புவதே கடவுளுக்கேற்ற செயல்" என்று சொல்கின்றார். இதன்மூலம்
இயேசுவின்மேல் நம்பிக்கை வைப்பதுதான் அழியா உணவு அல்லது
கடவுளுக்கு ஏற்ற செயல் என உறுதியாகச் சொல்லலாம்.
இயேசுவின் காலத்தில் இருந்த யூதர்கள், அவரை நம்பாமல் அவர் தந்த
அழியா வாழ்வினை உதறித் தள்ளினார்கள். நாம் அப்படிப்பட்ட
தவற்றினைச் செய்யாமல், இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து, அவர்
தருகின்ற அழியா உணவு அல்லது அழியா வாழ்வினைப் பெறுவோம்.
சிந்தனை
'இறைமகனிடம் நம்பிக்கை கொண்டுள்ளோருக்கு நிலைவாழ்வு உண்டு'
என்பார் யோவான் (1யோவா 5:13). நாம் அழிந்து போகின்ற உலக
செல்வத்தின்மீது அல்ல, இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து, அவர்
காட்டிய வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
|
|