Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         02 மே 2019  
                     பாஸ்கா காலம் இரண்டாம் வாரம்  - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
நாங்களும் தூய ஆவியும் சாட்சிகள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 27-33


அந்நாள்களில் காவலர்கள் திருத்தூதர்களை அழைத்துக்கொண்டுவந்து யூதத் தலைமைச் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள். தலைமைக் குரு அவர்களை நோக்கி, "நீங்கள் இந்த இயேசு பற்றிக் கற்பிக்கக்கூடாது என்று நாங்கள் கண்டிப்பாய்க் கட்டளையிடவில்லையா? என்றாலும் எருசலேம் முழுவதும் நீங்கள் கற்பித்து வருகிறீர்கள்.

மேலும் இந்த மனிதருடைய இரத்தப் பழியையும் எங்கள்மீது சுமத்தப்பார்க்கிறீர்களே!" என்றார். அதற்குப் பேதுருவும் திருத்தூதரும் மறுமொழியாக, "மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிடக் கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்?

நீங்கள் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்ற இயேசுவை நம் மூதாதையரின் கடவுள் உயிர்த்தெழச் செய்தார்.

இஸ்ரயேல் மக்களுக்கு மனமாற்றத்தையும் பாவ மன்னிப்பையும் அளிப்பதற்காகக் கடவுள் அவரைத் தலைவராகவும் மீட்பராகவும் தமது வலப்பக்கத்துக்கு உயர்த்தினார்.

இவற்றுக்கு நாங்களும் கடவுள் தமக்குக் கீழ்ப்படிவோருக்கு அருளும் தூய ஆவியும் சாட்சிகள்" என்றனர்.

இவற்றைக் கேட்ட தலைமைச் சங்கத்தார் கொதித்தெழுந்து, திருத் தூதர்களைக் கொல்லத் திட்டமிட்டனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 34: 1,8. 16-17. 18-19 (பல்லவி: 6a)
=================================================================================
பல்லவி: ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்.
அல்லது: அல்லேலூயா.

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். பல்லவி

16 ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். 17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். பல்லவி

18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். 19 நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல; அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 20: 29

அல்லேலூயா, அல்லேலூயா! "தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர்," பேறுபெற்றோர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தந்தை மகன்மேல் அன்புகூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 31-36

அக்காலத்தில் இயேசு நிக்கதேமிடம் கூறியது: மேலிருந்து வருபவர், அனைவரையும்விட மேலானவர். மண்ணுலகிலிருந்து உண்டானவர் மண்ணுலகைச் சேர்ந்தவர். மண்ணுலகு சார்ந்தவை பற்றியே அவர் பேசுகிறார். விண்ணுலகிலிருந்து வருபவர், அனைவருக்கும் மேலானவர்.

தாம் கண்டதையும் கேட்டதையும் பற்றியே அவர் சான்று பகர்கிறார். எனினும் அவர் தரும் சான்றை எவரும் ஏற்றுக்கொள்வதில்லை. அவர் தரும் சான்றை ஏற்றுக்கொள்பவர் கடவுள் உண்மையானவர் என்பதை உறுதிப்படுத்துகிறார்.

கடவுளால் அனுப்பப்பெற்றவர் கடவுளின் வார்த்தைகளைப் பேசுகிறார். கடவுள் அவருக்குத் தம் ஆவிக்குரிய கொடைகளை அளவின்றிக் கொடுக்கிறார்.

தந்தை மகன்மேல் அன்புகூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார். மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர். நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார். மாறாகக் கடவுளின் சினம் அவர்கள்மேல் வந்து சேரும்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 யோவான் 3: 31-36

இயேசுவின்மீது நம்பிக்கை வைப்போம், நிலைவாழ்வைப் பெறுவோம்

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் முல்லர் என்பவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் அனாதைக் குழந்தைகளின் நல்வாழ்விற்காக அர்ப்பணித்தவர்.

ஒருநாள் இரவு அவர் தூங்கிக்கொண்டிருக்கும்போது கனவு ஒன்று கண்டார். அந்தக் கனவில், கடவுள் அவருக்கு காட்சிதந்து, ஓர் அனாதை இல்லம் கட்டியெழுப்பச் சொல்லிவிட்டு மறைந்தார். ஜார்ஜ் முல்லர் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தபோது என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார். ஏனென்றால் அவரிடம் அனாதை இல்லம் கட்டுகின்ற அளவுக்கு போதிய பணம் இல்லை. அவரிடம் இருந்ததே இரண்டு பவுண்டுதான்.

ஒருநிமிடம் அவர் கண்களை மூடி ஜெபித்தார். "கடவுளே! என்னிடம் அனாதை இல்லம் கட்டும் அளவுக்கு போதிய பணமில்லை. ஆனாலும் உம்மீது நம்பிக்கை வைத்து இந்த பணியில் இறங்குகின்றேன். நீர்தான் எனக்கு உதவவேண்டும்" என்று சொல்லி, ஜெபித்துவிட்டு பணியில் இறங்கினார்.

ஆச்சரியம் என்னவென்றால், அவர் பணியைத் தொடங்கிய ஒரே வாரத்தில் திரு. ஜார்ஜ் ஆலன் மற்றும் அவருடைய துணைவியார் அவரிடம் வந்து 70 இலட்சம் ரூபாய் பணத்தைக் கொடுத்துவிட்டு, அதை அனாதை இல்லத்திற்காகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுவிட்டுச் சென்றனர். ஜார்ஜ் முல்லர் அப்பணத்தை வைத்து பிரிஸ்டோல் என்னும் இடத்தில் பெரிய ஓர் ஆதரவற்றோர் நலம்காக்கும் இல்லம் ஆரம்பித்தார். அது இன்றுவரைக்கும் ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட மக்களுக்கு ஓர் இல்லிடமாக இருந்து செயல்பட்டு வருகிறது.

ஜார்ஜ் முல்லர் கடவுளை நம்பி, பணியில் இறங்கினார். அதனால் கடவுளுடைய ஆசிர்வாதத்தை அவர் நிறைவாகப் பெற்றார். நாமும் கடவுளை நம்பி, எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் கடவுள் நம்மை நிச்சயம் ஆசிர்வதிப்பார் என்பதையே இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துரைக்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, 'மகனிடம் (தன்னிடம்) நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவார்; நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார்" என்கிறார். யோவான் நற்செய்தி முழுவதுமே இயேசுவிடம் நாம் நம்பிக்கைகொண்டு வாழவேண்டும், அந்த நம்பிக்கையே நமக்கு நிலைவாழ்வைத் தரும் என்ற சிந்தனை திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகின்றது. உண்மையிலே நாம் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு வாழ்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இயேசு இந்த மண்ணுலகில் வாழ்ந்தபோது அவர்மீது முழுமையான நம்பிக்கை கொண்ட நூற்றுவத் தலைவன் தன்னுடைய மகனின் நோய் நீங்கப்பெற்றுச் சென்றான்; கனானியப் பெண்மணியோ தன்னுடைய மகளைப் பிடித்திருந்த தீயஆவி முற்றிலுமாக வெளியேற்றப்பெற்றுச் சென்றாள். இதுபோன்று பலர் இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கையால் நலம்பெற்றுச் சென்றனர். ஆனால் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளாத ஒருசில மக்கள் அவரிடமிருந்து நலம்பெறாததையும் விவிலியம் நமக்குச் சுட்டுகாட்டத் தவறவில்லை. இயேசுவின் சொந்த ஊரான நாசரேத்து மக்கள் மற்றும் பரிசேயர்கள், மறைநூளர் அறிஞர்கள் இயேசுவின் மீது நம்பிக்கைகொள்ளவில்லை, அதனால் அவரிடமிருந்து நலமும் பெறவில்லை.

ஆக, கடவுள்மீது நாம் கொள்ளும் நம்பிக்கைதான் நமக்கு வாழ்வையும், தாழ்வையும் பெற்றுத் தருகிறது என்பதை இதன்மூலம் அறிந்துகொள்ளலாம்.

ஜான் விட்டியா என்ற அறிஞர் கூறுவார், "நம்பிக்கையையும், கௌரவத்தையும் இழந்த மனிதன் இறந்தவனே" என்று. இது முற்றிலும் உண்மை. நம்மிடம் நம்பிக்கை இல்லாதபோது நாம் இறந்தவர்கள்தான்.

ஆகவே, நிலைவாழ்வை அளிக்கும் இறைவன்மீது/ இயேசுவின்மீது முழுமையான நம்பிக்கை வைப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
யோவான் 3: 31-36

இயேசுவை நம்பினால் நிலைவாழ்வு

சில ஆண்டுகளுக்கு முன்பாக டெக்ஸ்சாஸ் (Texas) மாகாணத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் நடந்த நிகழ்வு.

அந்த மாகாணத்தில் சில ஆண்டுகளாக மழையே இல்லாமல் மக்களுடைய வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது, மக்கள் குடிநீருக்குக்கூட பெரிதும் கஷ்டப்பட்டார்கள். இத்தகைய சூழ்நிலையில் இறைமக்கள் சிலர் பங்குத்தந்தையிடம் வந்து, "மழை இல்லாமல் மக்களுடைய வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது, ஆதலால், மழைக்காக சிறப்பு ஜெப வழிபாடு நடத்தலாமே" என்று தங்களுடைய கருத்துகளைச் சொன்னார்கள். பங்குத்தந்தையும் அதற்கு சரியென்று சொல்லி, ஒரு குறிப்பிட்ட நாளில் மழைக்காக சிறப்பு ஜெப வழிபாடு நடத்தலாம் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார்.

குறிப்பிட்ட அந்த நாளும் வந்தது. இறைமக்கள் அனைவரும் பெருந்திரளாக ஆலயத்திற்கு வந்து, மழைக்கான சிறப்பு ஜெப வழிபாட்டில் கலந்து கொண்டார்கள். ஜெப வழிபாடு நல்ல முறையாகப் போய்க்கொண்டிருந்தது. அப்போது பங்குத்தந்தை மக்களுக்கு முன்பாகத் தோன்றி பேசத் தொடங்கினார். "அன்பு இறைமக்களே! நாம் அனைவரும் இங்கே ஒன்றாகக் கூடிவந்ததற்குக் காரணம் மழைக்காக ஜெபிப்பதற்குத்தான். ஆனால், வேதனையான விஷயம் என்னவென்றால், யாருடைய கையிலும் குடையில்லை. இது சுட்டிக்காட்டுவது என்னவென்றால் மழை வரும் என்று உங்களுக்கே நம்பிக்கை இல்லை. ஒருவேளை மழை வரும் என்று நீங்கள் இங்கு நம்பி வந்திருந்தால், கையில் குடையோடு வந்திருப்பீர்கள்".

பங்குத் தந்தை இப்படிப் பேசக் கேட்டதும் அங்கே கூடியிருத்த இறைமக்களுக்கு பெருத்த அவமானமாய் போய்விட்டது.

Gisbest Kranz என்ற ஆங்கில எழுத்தாளர் சொல்லக்கூடிய இந்த நிகழ்வானது மனிதர்களாகிய நாம் எந்தளவுக்கு நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு யூதத்தலைவர்களில் ஒருவரும், பரிசேயர்களில் ஒருவருமான நிக்கதேமிடம் உரையாடுகின்றார். அப்படி உரையாடுகின்றபோது பலவற்றைக் குறித்துப் பேசுகின்றார். அதில் ஒரு கரியம்தான் மானிட மகனிடம்மீது நம்பிக்கை வைத்து வாழ்வதாகும். இயேசு நிக்கதேமிடம், "மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர். நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார். மாறாக கடவுளின் சினம் அவர்கள் மேல் சேரும்" என்கிறார். இயேசுவின் இவ்வார்த்தைகளை நம்முடைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

இயேசு கூறும் இவ்வார்த்தைகளின் மூலம் மானிடமகன்மீது கொள்ளும் நம்பிக்கைதான் ஒரு மனிதனின் வாழ்வையும் தாழ்வையும் தீர்மானிக்கின்றது என்று நாம் புரிந்துகொள்ளலாம். மானிட மகன்மீது கொள்ளும் நம்பிக்கை ஒருவருக்கு நிலைவாழ்வையும், அவநம்பிக்கையோ ஒருவருக்கு அழிவையும், கடவுளின் சினத்தையும் பெற்றுத்தருகின்றது என்று புரிந்துகொள்ளலாம். இப்படியாக நம்முடைய வாழ்வும் தாழ்வும் நம்முடைய (நம்பிக்)கையில் இருகின்றது என்ற விதத்தில் உணர்ந்துகொள்ளலாம்.

இணைச்சட்ட நூல் 30 ஆம் அதிகாரம் 15-20 வரை உள்ள பகுதியில் இவ்வாறு வாசிக்கின்றோம்:

இதோ பார், வாழ்வையும் நன்மையையும், சாவையும் தீமையையும் இன்று நான் உனக்கு முன்பாக வைத்துள்ளேன். உன் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு. அவரைப் பின்பற்றி அவரது வழியில் நட. அவரது கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் கடைப்பிடி. அப்போது நீ வாழ்வாய், நீ பலுகுவாய். நீ உடைமையாகக் கொள்ளப்போகும் நாட்டில் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசிவழங்குவார். ஆனால், உனது உள்ளம் விலகிச் சென்று, நீ செவிகொடாமல் கெட்டலைந்து, வேறு தெய்வங்களை வணங்கி, அவற்றுக்குப் பணிவிடை புரிந்தால், இன்று நான் உனக்கு அறிக்கையிட்டுக் கூறுகிறேன். நீ நிச்சயம் அழிந்துபோவாய். நீ உரிமையாக்கிக் கொள்ளுமாறு, யோர்தானைக் கடந்து சென்றடையும் பூமியில் உன் வாழ்நாள் நீடித்திருக்காது.

உன்மேல் இன்று நான் விண்ணையும் மண்ணையும் சான்றாக அழைத்து, வாழ்வையும் சாவையும், ஆசியையும் சாபத்தையும் உனக்கு முன் வைக்கிறேன். நீயும் உனது வழித்தோன்றல்களும் வாழும் பொருட்டு வாழ்வைத் தேர்ந்துகொள். உன் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு, அவரது குரலுக்குச் செவிகொடு, அவரையே பற்றிக் கொள். ஏனெனில், அவரே உனது வாழ்வு: அவரே உன் நீடிய வாழ்வு. அதனால், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்னும் உன் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டில் நீ குடியேறுவாய்".

ஆம், இஸ்ரயேல் மக்களுக்கு முன்பாக வாழ்வும் (கடவுளின் வார்த்தையைக் கேட்டு நடத்தல்), சாவும் (கடவுளின் வார்த்தையைக் கேளாமல் நடத்தல்) வைக்கப்பட்டது போல, நமக்கு முன்பாகவும் இன்று வாழ்வும் (மானிட மகன்மீது நம்பிக்கை), சாவும் (அவர்மீது நம்பிக்கை) வைக்கப்பட்டுள்ளது. நாம் மானிட மகன்மீது நம்பிக்கைக்கும்போது வாழ்வைப் பெறுகின்றோம், அதே நேரத்தில் அவர்மீது அவ நம்பிக்கை வைக்கும்போது நிலைவாழ்வினை இழந்து விடுகின்றோம் என்பது நிதர்சன உண்மையாக இருக்கின்றது.

எனவே, நமக்கு நிலைவாழ்வைத் தரும் இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து, அவர் நமக்கு போதித்த போதனையின் படி நடப்போம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
யோவான் 3: 31-36

இயேசுவிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வு பெறுவர்


நிகழ்வு

பறவைகளை வேட்டையாடுவதில் செவ்விந்திய இளைஞன் ஒருவன் கைதேர்ந்தவனாக இருந்தான். ஒருநாள் அவன் பறவைகளை வேட்டையாடுவதற்குக் காட்டிற்குள் சென்றபோது ஒரு பறவையின் சத்தம் கேட்டு மேலே பார்த்தான். அங்கு ஒரு பறவை தன்னுடைய கூட்டிற்கு மேல் வட்டமடித்துக்கொண்டிருந்தது. உடனே அவன் தன்னுடைய அம்பறாத்தூணியிலிருந்து ஓர் அம்பை எடுத்து, மேலே பறந்துகொண்டிருந்த பறவையைக் குறி வைத்து அடிக்கத் தயாரானான்.

அப்பொழுது அவன் ஒரு பெரிய பாம்பு அந்தப் பறவையின் கூட்டைநோக்கி ஊர்ந்து செல்வதைக் கண்டான். எனவே அவன் பறவையை நோக்கி அம்பெய்வதை நிறுத்துவிட்டு, அடுத்து என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினான். அவ்வேளையில் மேலே பறந்துகொண்டிருந்த அந்தப் பறவை, சிறிதுதூரம் வேகமாகப் பறந்துசென்று, ஒரு செடியிலிருந்து ஓர் இலையைக் கவ்விக்கொண்டு வந்து, தன்னுடைய கூட்டினில் வைத்துவிட்டு, சற்று மேலே பறக்கத் தொடங்கியது.

இதற்கிடையில் கூட்டை நோக்கி ஊர்ந்துசென்ற பாம்பானது கூட்டினில் வைக்கப்பட்டிருந்த பச்சிலையைக் கண்டதும், போன வேகத்தில் திரும்பி வந்தது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அந்த வேடன், அந்தப் பாம்பு ஏன் அவ்வளவு வேகமாகத் திரும்பி வந்தது என்று யோசிக்கத் தொடங்கினான். பின்னர் அவன் அந்தப் பறவை தன் அலகில் கொத்திக்கொண்டு வந்து, கூட்டினில் வைத்த இலை எந்தச் செடியின் இலை என்று பார்க்கச் சென்றான். குறிப்பிட்ட அந்தச் செடியைக் கண்டபிறகுதான் அவனுக்கு உண்மை புரிந்தது ஏன் அந்தப் பாம்பானது அவ்வளவு வேகமாகக் கீழே இறங்கி வந்தது என்று. ஏனெனில், அந்தத் தாய்ப்பறவையானது பாம்பைப் பக்கத்தில் அண்டவிடாமல் விரட்டியடிக்கும் பச்சிலையைத் தன்னுடைய கூட்டினில் கொண்டுபோய் வைத்தது. அதைக் கண்டுதான் பாம்பானது தலைதெறிக்கக் கீழே இறங்கிவந்தது.

இதை அந்த செவ்விந்திய வேடன் தன்னுடைய இனத்தில் இருந்தவர்களுக்குச் சொல்லிவிட்டு, இறுதியில் இவ்வாறு சொன்னான். "எப்படி அந்தப் பறவைகொண்டு வந்த பச்சிலை பாம்பை விரட்டி அடித்ததோ, அதுபோன்று ஒருவர் இறைவன்மீது கொள்ளும் நம்பிக்கை அவரை எல்லா ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றி, அவருக்கு எல்லா ஆசியையும் பெற்றுத்தரும்."

உண்மைதான் ஒருவர் இறைவன்மீதும் அவர்மகன் இயேசுவின்மீதும் கொள்ளும் நம்பிக்கை அவருக்கு எல்லா ஆசியையும் பெற்றுத்தரும். இதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது. பவுலடியார் இதைத்தான், "எந்நிலையிலும் நம்பிக்கை என்னும் கேடயத்தைப் பிடித்துக்கொள்ளுங்கள். அதைக் கொண்டு தீயோனின் தீக்கணைகளையெல்லாம் அனைத்துவிட முடியும்" (எபே 6:16) என்கின்றார். இன்றைய நற்செய்தி வாசகமும் ஒருவர் இறைமகன் இயேசுவின் கொள்ளும் நம்பிக்கையினால் எத்தகைய ஆசியைப் பெறுகின்றார் என்பதையும் அவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதால் எத்தகைய தண்டனையைப் பெற்றுக்கொள்கின்றார் என்பதையும் குறித்து எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

இயேசுவின்மீது நம்பிக்கை வைத்தால் நிலைவாழ்வு

நற்செய்தியில் இயேசு, பரிசேயரும் யூதத் தலைவர்களுள் ஒருவருமான நிக்கதேமிடம் பலவற்றைக் குறித்துப் பேசுகின்றார். அப்படிப் பேசும்போது, மானிடமகன்மீது நம்பிக்கை கொள்வதால் நிலைவாழ்வு பெறுவதையும் குறித்துப் பேசுகின்றார்.

மானிடமகன் மற்ற மனிதர்களைப் போன்று சாதாரணமானவர் கிடையாது. அவர் மேலிருந்து வந்தவர்; கடவுளின் ஆவியாரை நிரம்பப் பெற்றவர். அது மட்டுமல்லாமல் தந்தைக் கடவுளின் அன்புக் குரியவர். அப்படிப்பட்டவர்மீது ஒருவர் நம்பிக்கை கொள்வதால் நிச்சயம் நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுதான் உண்மை. ஆனால், நடைமுறையோ வேறொன்றாக இருந்தது, இருக்கின்றது. யூதர்கள் கடவுளின் வார்த்தையை எடுத்துச் சொன்ன இயேசுவின் நம்பிக்கைகொண்டு நிலைவாழ்வைப் பெற்றிருக்கலாம். ஆனால், அவர்கள் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளாமல், அவரைப் புறக்கணித்து, அவர் தர இருந்த நிலைவாழ்வையும் பெறாமல் போனார்கள். அன்று யூதர்கள் செய்த அதே தவறைத்தான் இன்றும் பலரும் செய்கிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை.

இயேசுவை நம்பாதோர் கடவுளின் சினத்திற்கு ஆளாவர்

மானிடமகன்மீது நம்பிக்கை கொண்டால், நிலைவாழ்வு உண்டு என்று சொன்ன இயேசு, நம்பிக்கை கொள்ளாமல் போனால் கடவுளின் சினம் அவர்கள்மேல் வந்து சேரும் என்றும் கூறுகின்றார். ஆகவே, ஒருவர் கடவுள் அருளும் நிலைவாழ்வைப் பெறுவதும் அல்லது அவர் கடவுளின் சினத்திற்கு ஆளாவதும் அவர் இயேசுவின் மீது வைக்கும் நம்பிக்கையைப் பொறுத்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

சிந்தனை

'இயேசுவே ஆண்டவர் என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்பு பெறுவீர்கள்' (உரோ 10: 9) என்பார் பவுல். ஆகவே, நமக்கு நிலைவாழ்வைத் தரும் இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து, அவர் காட்டிய வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
நாங்களும் தூய ஆவியும் சாட்சிகள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 27-33

"மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்"

நிகழ்வு

ஒரு சமயம் மிகப்பெரிய எழுத்தாளரான மார்க் ட்வைனிடம் (Mark Twain) ஒரு தொழிலதிபர் வந்தார். அவர் மார்க் ட்வைனிடம், "நான் சாவதற்கு முன்பாக ஒருமுறையாவது புனித நாடுகளுக்குச் சென்று, அங்குள்ள சீனாய் மலையின் உச்சியில் ஏறி, ஆண்டவராகிய கடவுள் கொடுத்திருக்கின்ற பத்துக் கட்டளையை உரக்கச் சொல்லவேண்டும்" என்றார்.

அவர் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த மார்க் ட்வைன் அவரிடம், "நண்பரே! நான் இதைவிடச் சிறப்பான ஒரு யோசனையை வைத்திருக்கின்றேன்" என்றார். "அப்படியா! அது என்ன யோசனை?" என்று தொழிலதிபர் மார்க் ட்வைனை வேகப்படுத்த, மார்க் ட்வைன் அந்தத் தொழிலதிபரிடம் சொன்னார்: "நீங்கள் புனித நாடுகளுக்குச் சென்று, அங்கிருக்கும் சீனாய் மலையில் பத்துக் கட்டளைகளை உரக்கச் சொல்வதைவிடவும் நீங்கள் இருக்கின்ற இந்தப் பாஸ்டன் நகரிலேயே கடவுள் கொடுத்திருக்கின்ற பத்துக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படித்து, அதன்படி வாழ்ந்தால், அதைவிடப் பெரியது வேறொன்றுமில்லை."

கடவுளுக்கும் அவர் கொடுத்திருக்கின்ற கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து வாழ்வதைவிடவும் பெரியது வேறொன்றுமில்லை என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. இன்றைய முதல் வாசகமும் கடவுளுக்கு கடவுளுக்கு மட்டுமே கீழ்ப்படிந்து வாழ்ந்த சீடர்களைக் குறித்துப் பேசுகின்றது. இப்பொழுது நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

இயேசுவைப் பற்றி அறிவிக்கக்கூடாது என்று எச்சரித்தும் அவரைப் பற்றி அறிவித்த திருத்தூதர்கள்

இயேசுவைப் பற்றி மக்களுக்கு அறிவிக்கக்கூடாது என்று தலைமைக் குருவும் சதுசேயர்களும் திருத்தூதர்களை எச்சரித்து அனுப்பியதைக் குறித்து இதற்கு முந்தைய பகுதியில் அதாவது நேற்றைய முதல் வாசகத்தில் நாம் வாசித்துத் தியானித்தோம். ஆனால், வெளியே சென்ற திருத்தூதர்கள் வழக்கம் போல் ஆண்டவரைப் பற்றி மக்களுக்கு அறிவிக்கத் தொடங்குகின்றார்கள். இதனால் காவலர்கள் திருத்தூர்களைப் பிடித்துகொண்டு வந்து, யூதத் தலைமைச் சங்கத்திற்குக் முன்பாக நிறுத்த, சங்கத்தில் இருந்தவர்கள் அவர்களிடம், "நீங்கள் இந்த இயேசுவைப் பற்றிக் கற்பிக்கக்கூடாது என்று நாங்கள் கட்டளையிட்டும், எருசலேம் முழுவதும் கற்பித்துக் கொண்டு வருகின்றீர்களே!" என்று கேட்கின்றார்கள். அதற்குப் பேதுருவும் மற்ற திருத்தூதர்களும், "மனிதர்களுக்குக் கீழ்படிவதைவிட கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படியவேண்டும்" என்கின்றார்கள்.

திருத்தூதர்கள் ஆண்டவர் இயேசுவைப் பற்றிக் கற்பித்து வந்ததால் அவர்களை தலைமைச் சங்கத்தார் அடித்துத் துன்புறுத்தினர். அப்படியிருந்தபோதும் அவர்கள் தலைமைச் சங்கத்தார்க்குக் கீழ்ப்படியாமல், ஆண்டவருக்கு மட்டுமே கீழ்ப்படிந்து அவருடைய வார்த்தையை மக்களுக்கு எடுத்துரைத்து வருகின்றார்கள். திருதூதர்கள் நினைத்திருந்தால் சித்ரவதைகளுக்குப் பயந்து அல்லது தலைமைச் சங்கத்தார்க்குக் கீழ்ப்படிந்து, இயேசுவைப் பற்றி அறிவிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், அவர்கள் எதற்கும் பயப்படாமல், யார்க்கும் கீழ்ப்படியாமல் ஆண்டவர்க்கு மட்டுமே கீழ்ப்படிந்து நடக்கின்றார்கள். இதன்மூலம் அவர்கள் இயேசு சொன்ன, "எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது" என்ற வார்த்தைக்கு அர்த்தம் தருபவர்களாக இருக்கின்றார் (மத் 6:24)

இங்கு நாம் நம்முடைய கவனத்தில் கொள்ளவேண்டிய செய்தி என்னவென்றால், திருத்தூதர்களுக்கு ஏற்பட்ட இந்த இக்கட்டான சூழ்நிலையைப் போன்று நமக்கும் ஏற்படலாம். அப்படிப்பட்ட தருணத்தில் நாம் துன்பங்களுக்குப் பயந்து மனிதர்களுக்குக் கீழ்ப்படியாமல், ஆண்டவர்க்குக் கீழ்ப்படிந்து வாழ்வது நல்லது

இயேசுவைத் தம் வலைப்பக்கத்திற்கு உயர்த்திய கடவுள்

திருத்தூதர்கள் தலைமைச் சங்கத்தாரிடம் தொடர்ந்து பேசக்கூடிய வார்த்தைகள் நமக்கு கவனத்திற்கு உரியவையாக இருக்கின்றன. அவர்கள் தலைமைச் சங்கத்தாரிடம், "இஸ்ரயேல் மக்களுக்கு மனமாற்றத்தையும் பாவ மன்னிப்பையும் அளிப்பதற்காகக் கடவுள் அவரைத் தலைவராகவும் மீட்பராகவும் தமது வலைப்பக்கத்திற்கு உயர்த்தினார்" என்கிறார்கள். தலைமைச் சங்கத்தில் இருந்த சதுசேயர்களுக்கு வானதூதர்கள்மீதும் உயிர்த்தெழுதலின்மீதும் நம்பிக்கை கிடையாது. அப்படியிருக்கும்போது இயேசு உயிர்த்தெழுந்து தந்தைக் கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார் என்று சொன்னால், அவர்கள் தங்களை அடித்துத் துன்புறுத்துவார்கள் என்றெல்லாம் நினைத்து திருத்தூதர்கள் உண்மையை எடுத்துரைக்காமல் இருக்கவில்லை. மாறாக, அவர்கள் இயேசு உயிர்த்தெழுந்ததையும் தந்தைக் கடவுளின் வலப்பக்கம் வீற்றிருப்பதையும் அவர்களுக்கு முன்பாகச் சொல்கின்றார்கள். இதனால் அவர்கள் திருத்தூதர்களைக் கொள்வதற்குத் திட்டம் போடுகின்றார்கள்.

நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவு பெரிய ஆபத்து வந்தாலும், உண்மையை உரக்கச் சொல்லவேண்டும் என்பதை திருத்தூதர்கள் நமக்குக் கற்றுத் தருபவர்களாக இருக்கின்றார்கள். ஆகவே, நாமும் திருத்தூதர்களின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி ஆண்டவரைப் பற்றி எல்லா மக்களுக்கும் அறிவிப்பது தேவையான ஒன்று.

சிந்தனை

'கடவுளுக்கு அஞ்சி நட; அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படி. இதற்காகவே மனிதர் படைக்கப்பட்டனர்' (சஉ 12:13) என்கிறது சபை உரையாளர் நூல். ஆகவே, நாம் திருத்தூதர்களைப் போன்று கடவுளுக்குக் கீழ்ப்படிந்து, அவரைப் பற்றி எல்லார்க்கும் எடுத்துரைத்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!