|
23
பிப்ரவரி 2019 |
|
பொதுக்காலம்
6ம் வாரம் சனிக்கிழமை - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
உலகம் கடவுளின் சொல்லால் உருவாக்கப்பட்டது என்று நம்பிக்கையால்
புரிந்துகொள்கிறோம்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 11: 1-7
சகோதரர் சகோதரிகளே, நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை
கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய
ஐயமற்ற நிலை. இந்த நம்பிக்கையால்தான் நம் மூதாதையர் நற்சான்று
பெற்றனர்.
உலகம் முழுமையும் கடவுளின் சொல்லால் உருவாக்கப்பட்டது என்றும்
காணப்படாதவற்றினின்று காணப்படுகிறவை உண்டாயின என்றும் நம்பிக்கையாலேயே
புரிந்துகொள்கிறோம்.
நம்பிக்கையினால்தான் ஆபேல் காயினுடைய பலியை விட மேலான பலியைக்
கடவுளுக்குச் செலுத்தினார். அதனால் அவர் நேர்மையானவர் எனக் கடவுளிடமிருந்து
நற்சான்று பெற்றார். அவருடைய காணிக்கைகளைக் குறித்துக் கடவுளே
சான்று பகர்ந்தார். இறந்துபோன போதிலும் இந்த ஆபேல் நம்பிக்கையின்
மூலம் இன்னும் பேசிக்கொண்டேயிருக்கிறார்.
நம்பிக்கையாலேயே ஏனோக்கு சாவுக்கு உட்படாதபடி கடவுளால் எடுத்துக்கொள்ளப்பட்டார்.
கடவுள் அவரை எடுத்துக்கொண்டதால் அவர் காணாமற் போய்விட்டார்.
அவர் மேலே எடுத்துக்கொள்ளப்படும் முன்பே கடவுளுக்கு உகந்தவர்
என்று நற்சான்று பெற்றவரானார். நம்பிக்கையினால் அன்றி எவரும்
கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது.
ஏனெனில், கடவுளை அணுகிச் செல்வோர் அவர் இருக்கிறார் என்பதையும்
அவரைத் தேடிச் செல்வோருக்குத் தக்க கைம்மாறு அளிக்கிறார் என்பதையும்
நம்பவேண்டும். நோவா கண்ணுக்குப் புலப்படாதவை குறித்துக் கடவுளால்
எச்சரிக்கப்பட்டபோது, தம் குடும்பத்தைக் காப்பாற்ற, கவனத்தோடு
ஒரு பேழையை அமைத்தது நம்பிக்கையினால்தான். அதன் வழியாய் அவர்
உலகைக் கண்டித்து இறைவனுக்கு ஏற்புடையவர் என்னும் உரிமைப் பேறு
பெற்றதும் நம்பிக்கையினால்தான்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா:145: 2-3. 4-5. 10-11 (பல்லவி: 1b)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, உமது பெயரை எப்பொழுதும் போற்றுவேன்.
2 நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும்
புகழ்வேன். 3 ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கு
உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது. பல்லவி
4 ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்;
வல்லமைமிகு உம் செயல்களை எடுத்துரைக்கும். 5 உமது மாண்பின்
மேன்மையையும் மாட்சியையும் வியத்தகு உம் செயல்களையும் நான்
சிந்திப்பேன். பல்லவி
10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்;
உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். 11 அவர்கள் உமது
அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப்
பேசுவார்கள். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மாற் 9: 7
அல்லேலூயா, அல்லேலூயா! மேகம் வந்து அவர்கள் மேல் நிழலிட அந்த
மேகத்தினின்று,
"என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச்
செவிசாயுங்கள்" என்று ஒரு குரல் ஒலித்தது. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
திருத்தூதர்கள் முன், இயேசு தோற்றம் மாறினார்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 2-13
அக்காலத்தில் இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து,
ஓர் உயர்ந்த மலைக்கு அவர்களை மட்டும் தனிமையாகக் கூட்டிக்
கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவருடைய
ஆடைகள் இவ்வுலகில் எந்தச் சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு
வெள்ளை வெளேரென ஒளிவீசின.
அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும்
இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
பேதுரு இயேசுவைப் பார்த்து, "ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது.
உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று
கூடாரங்களை அமைப்போம்" என்றார். தாம் சொல்வது என்னவென்று அவருக்குத்
தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள்.
அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள் மேல் நிழலிட அந்த மேகத்தினின்று,
"என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்" என்று
ஒரு குரல் ஒலித்தது.
உடனடியாக அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். தங்கள் அருகில்
இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.
அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்தபோது அவர்,
"மானிட மகன் இறந்து உயிர்த்தெழும்வரை, நீங்கள் கண்டதை எவருக்கும்
எடுத்துரைக்கக் கூடாது" என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி,
'இறந்து உயிர்த்தெழுதல்'
என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.
அவர்கள் அவரிடம், "எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல்
அறிஞர் கூறுவதேன்?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், "எலியா முதலில் வந்து எல்லாவற்றையும் சீர்படுத்தப்
போகிறார் என்று கூறுவது உண்மையே. ஆனால் மானிட மகன் பல துன்பங்கள்படவும்
இகழ்ந்து தள்ளப்படவும் வேண்டுமென்று அவரைக் குறித்து எழுதப்பட்டுள்ளதே,
அது எப்படி? ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியா வந்துவிட்டார்.
அவர்கள் தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள்.
அவரைக் குறித்து மறைநூலில் எழுதியுள்ளவாறே அவை நிகழ்ந்தன" என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
முதல் வாசகம்
உலகம் கடவுளின் சொல்லால் உருவாக்கப்பட்டது என்று நம்பிக்கையால்
புரிந்துகொள்கிறோம்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 11: 1-7
நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது
நிகழ்வு
ஒரு கிராமத்தில் ஏழை ஒருவன் இருந்தான். அவன் தனக்குக் கிடைத்த
சிறிதளவு தினக் கூலியை வைத்து பிழைப்பு நடத்தி வந்தான். ஒரு
நாள் அவன் வேலைக்குச் செல்கையில், ஓட்டைக் காலணா ஒன்று
தெருவில் கிடப்பதைக் கண்டான். 'கீழே கிடைக்கும் ஓட்டைக் காலணா
அதிஷ்டத்தை தரும்' என்றொரு நம்பிக்கை இருந்தது. உடனே அவன் அதை
அதிஷ்டம் என்று எண்ணி, தன் சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டான்.
வழக்கத்திற்கு மாறாக, அவனுக்கு அன்று வருமானம் அதிகமாகவே
கிடைத்தது. அதனால் அவனுக்கு ஓட்டைக் காலணா மீதிருந்த நம்பிக்கையும்
அதிகரித்தது.
அன்று இரவு வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பியதும் தனக்கு
கிடைத்த ஓட்டைக் காலணா குறித்து தன் மனைவியிடம் அவன் சந்தோசமாக
விவரித்தான். பின் அந்த ஓட்டைக் காலணாவை தான் அன்று அணிந்திருந்த
சட்டையிலேயே வைத்து, அந்தச் சட்டையைத் தனியாக வைத்தான். தினமும்
வேலைக்குச் செல்லும் முன்பு அந்த சட்டைப் பையில் இருக்கும் ஓட்டைக்
காலாணாவை வெளியே எடுக்காமல், தொட்டு மட்டும் பார்த்துவிட்டு
போனான். காலம் கடந்தது. அவன் தன் வாழ்வில் படிப்படியாக
முன்னேறினான். வீடு, நான்கு சக்கர வாகனம் என அனைத்தையும் அவன்
சம்பாதித்தான். எல்லாம் அந்த ஓட்டைக் காலணா வந்த ராசி என்று
அவன் ஆணித்தரமாக நம்பினான்.
ஒருநாள் காலை வழக்கம்போல அவன் அந்த ஓட்டைக் காலணாவை தொட்டுப்
பார்த்தான். அன்று அவனுக்கு அந்த ஓட்டைக் காலணாவை வெளியில் எடுத்துப்
பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது. அதை வெளியில் எடுத்துப்
பார்த்த அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில், அந்த பழைய
சட்டைப் பையில் இருந்தது ஓட்டைக் காலணாவே இல்லை, அதற்குப் பதிலாக
வேறு காசு இருந்தது. அவன் தன் மனைவியை அழைத்து அது குறித்து
விசாரித்தான். அப்பொழுது அவள், "அந்த ஓட்டைக் காலணா கிடைத்த அடுத்த
நாள் உங்கள் சட்டையைத் துவைக்க நான் எடுத்தேன். அப்பொழுது அதை
உதறும்போது அதிலிருந்த ஓட்டைக் காலணா எங்கோ விழுந்துவிட்டது.
நான் எவ்வளவு தேடியும் அது கிடைக்க வில்லை. அதனால் உங்கள் மனம்
கஷ்டப்படக்கூடாது என்று எண்ணி, நான்தான் அதில் வேறு காசைப்
போட்டுவைத்தேன்... என்னை மன்னித்துவிடுங்கள்" என்றாள்.
மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் அந்த ஏழை, 'கீழே கிடைக்கும்
ஓட்டைக் காலணா அதிஷ்டம் தரும் என்று நம்பினான். அந்த நம்பிக்கையே
அவனுக்கு வாழ்வில் வளமும் நலமும் எல்லா ஆசியையும் தந்தது.
நம்பிக்கை நன்மைகளின் ஊற்று
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட முதல்
வாசகத்தில், அதன் ஆசிரியர், நம்பிக்கையினால் நற்சான்று
பெற்றோரையும் அதே நம்பிக்கையினால் கடவுளுக்கு உகந்தவர்களானோர்
பற்றியும் எடுத்துக் கூறுகின்றார். ஒருவர் கடவுளுக்கு உகந்தவராக
இருப்பதற்கு, அவர் கடவுள்மீது கொண்டிருக்கின்ற நம்பிக்கை காரணமாக
இருக்கின்றது என்றால், நம்பிக்கை எத்துணை உயர்வான ஒரு பண்பு என்பதை
நாம் புரிந்துகொள்ளவேண்டும். நம்பிக்கை, இறைவன் நமக்குத் தரக்கூடிய
எல்லா ஆசிக்கும் காரணமாக இருக்கின்றது என்றால், அதனை நன்மைகளின்
ஊற்று என்று சொல்வதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை.
நம்பிக்கையினால் கடவுளுக்கு நற்சான்று பகர்ந்த ஏனோக்
நம்பிக்கையினால் கடவுளுக்கு நற்சான்று பகர்ந்தோர்களைப் பட்டியலிடும்
எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர், ஆபேலை அடுத்து ஏனோக்கைக்
குறிப்பிடுகின்றார். இந்த ஏனோக்கைக் குறித்து தொடக்க நூல் ஐந்தாம்
அதிகாரம் 24 ஆம் இறைவார்த்தையில் படிக்கின்றோம். அங்கு அவர்
கடவுளோடு நடந்து கொண்டிருந்தார். பின்பு அவரைக் காணவில்லை. ஏனெனில்,
கடவுள் அவரை எடுத்துக் கொண்டார் என்று படித்தறிகின்றோம். ஏனோக்
கடவுளோடு நடந்தார் எனில், அவர் கடவுளுடைய கட்டளைப்படி நடந்தார்
என்றுதான் சொல்லவேண்டும். அதனால்தான் அவரைக் கடவுள் சாவின் நிழல்
தீண்டுவதற்கு முன்பே எடுத்துக்கொண்டார். நாமும் ஏனோக்கைப்
போன்று இறைவன்மீது கொண்ட நம்பிக்கையினால், அவருடைய
வார்த்தையின் நடந்தால், அவருக்கு உகந்தவர்களாவோம் என்பதும் அவருக்கு
நற்சான்று பகர்வோம் என்பது உறுதி.
சிந்தனை
'நான் கூறிய வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொண்டிருக்கின்றன'
என்பார் இயேசு. (யோவா 6:63). ஆகவே, அத்தகைய வல்லமை நிறைந்த
வார்த்தைகளை நம்பிக்கையோடு கடைப்பிடித்து வாழ்வோம். அதன்வழியாக
இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மாற்கு 9: 2-13
முதலில் பாடுகள், அதன்பிறகுதான் பரலோகம்
நிகழ்வு
காலில் இரு பலகைகளை மாட்டிக்கொண்டு, கையில் ஒரு குச்சியை
வைத்துக்கொண்டு பனிபடர்ந்த பிரதேசத்தில் சாகசம் செய்யும் பனிச்சறுக்கு
விளையாட்டை எப்போதாவது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?...
தொலைக்காட்சியிலும் காணொளிகளிலும் பார்த்திருக்கக்கூடும்.
இப்படிப்பட்ட பனிச்சறுக்கு விளையாட்டில் பெரிய ஆளாக வேண்டும்
என்று கிறிஸ்டோபருக்கு நீண்ட நாளை ஆசை. எனவே, அவன் இதற்காக சிறப்பாகப்
பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளரைச் சந்தித்தான். அவரும் அவனுக்குப்
பயிற்சி கொடுக்கத் தயார் என்றதும், இரண்டு பெரிய பலகைகள், ஒரு
குச்சி இன்னும் தேவையான உபகரணங்களுடன் பயிற்சிக்குத் தயாரானான்.
பயிற்சி தொடங்கிய தொடக்கத்தில் அவன் கால்களில் மாட்டப்பட்டிருந்த
இரு பலகைகள் தடுக்கி, இடறி இடறி விழுந்தான். அப்பொழுது அவன் பயிற்சியாளரிடம்,
"என்னால் இந்த பனிச்சறுக்கு விளையாட்டில் பெரியாளாக முடியாதா?"
என்று மிக வருத்தத்துடன் கேட்டான். அதற்கு அவர் அவனிடம்,
"உன்னால் நிச்சயம் பெரியாளாக முடியும்... ஆனால், உடனடியாக
முடியாது. முதலில் உன்னுடைய கால்களில் சிறு பலகைகளைக் கட்டி பயிற்சியை
மேற்கோள், அதில் நன்றாகத் தேறியவுடன் பெரிய பலகைகளைக் கட்டி,
பயிற்சி மேற்கொள். இப்படிச் செய்தால் உன்னால் நிச்சயம் இந்த பனிச்சறுக்கு
விளையாட்டில் பெரியாளாக முடியும்" என்றார்.
கிறிஸ்டோபரும் பயிற்சியாளர் சொன்னதை உள்வாங்கிக்கொண்டு, முதலில்
சிறிய பலகைகளை வைத்து பயிற்சிகளை மேற்கொண்டான். அதில் அவன்
தேறியவுடன் பெரிய பலகைகளை வைத்து பயிற்சிகளை மேற்கொண்டான். இவ்வாறு
அவன் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டதால், ஒருகட்டத்தில் அவன்,
அவன் நினைத்தவாறே பனிச்சறுக்கு விளையாட்டில் மிகபெரிய ஆளாய் உருமாறி
நின்றான்.
பனிச்சறுக்கு விளையாட்டு என்றில்லை, நமது வாழ்க்கையிலும்கூட
துன்பங்களையும் சவால்களையும் தாங்கிக்கொள்ளத் தயாராகவேண்டும்.
அப்பொழுதுதான் இன்பமான வாழ்வு நமக்கு கிடைக்கும். இதனை இன்றைய
நற்செய்தியில் இடம்பெறுகின்ற ஆண்டவர் இயேசுவின் உருமாற்ற நிகழ்வும்
நமக்கு எடுத்துச் சொல்கின்றது. எனவே, அதைக் குறித்து
சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவின் உருமாற்றம்
இயேசு தன்னுடைய மூன்று முதன்மைச் சீடர்களான யோவான், யாக்கோபு
மற்றும் பேதுருவுடன் ஓர் உயர்ந்த மலைக்குச் சென்று அங்கு உருமாற்றம்
அடைகின்றார். இயேசுவின் இந்த உருமாற்றம் அவரோடு சென்ற பேதுருவை
தன்னிலை மறந்து பேசச் செய்கின்றது. இயேசுவின் இந்த உருமாற்றம்
நமக்குச் சொல்லும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்பதற்கு
முன்பாக, இந்நிகழ்விற்கு முன்பாக என்ன நடந்தது என்று
தெரிந்துகொள்வது நல்லது.
இந்நிகழ்விற்கு முன்பு, இயேசு தன்னுடைய பாடுகளையும் எருசலேமில்
அடைய அடைய இருந்த சிலுவைச் சாவைக் குறித்தும் எடுத்துச்
சொன்னார். இதைக் கேட்ட சீடர்கள், இந்த உலகத்தைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு, ஆட்சி செலுத்தும் ஒருவர் எப்படி பாடுகள் படமுடியும்...
ஒருவேளை இயேசு மெசியாதானா என்று ஐயம் கொள்ளத் தொடங்கினார்கள்.
இப்படிப்பட்ட பின்னணியில்தான் இயேசு தன்னுடைய உருமாற்றத்தின்
வழியாக, தான் மெசியாதான் என்பதை அவர்களுக்கு நிரூபித்துக்
காட்டுகின்றார். இருந்தாலும், மானிடமகன் இறந்து உயிர்த்தெழும்
வரை இதைக் குறித்து யாரிடமும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்குக்
கட்டளை பிறப்பிக்கின்றார். ஒருவேளை, சீடர்கள் மூவரும் தன்னுடைய
உருமாற்றத்தைக் குறித்து மக்களிடத்தில் எடுத்துச் சொன்னால், அது
மக்கள் மத்தியில் ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதால்
இயேசு அவ்வாறு கட்டளையிடுகின்றார்.
இயேசு பயணப்பட்ட பாடுகளின் வழியில் பயணப்படவேண்டும்
இயேசுவின் உருமாற்றம் நிகழ்ந்ததன் முக்கியத்துவத்தை அறிந்துகொண்ட
நாம், இயேசுவின் உருமாற்றம் நமக்குச் சொல்லும் செய்தியென்ன என்று
இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவின் உருமாற்றத்தைப் பார்த்துவிட்டு தன்னிலை மறந்த
பேதுரு, "ரபி, நான் இங்கேயே இருப்பது நல்லது" என்பார். அவ்வேளையில்
மேகத்திலிருந்து ஒரு குரல், "என் அன்பார்ந்த மைந்த இவரே; இவருக்குச்
செவிசாயுங்கள்" என்று ஒலிக்கும். இதுதான் இயேசுவின் உருமாற்றம்
நமக்குச் சொல்லும் செய்தியாக இருக்கின்றது. அதாவது, நாம்
பேதுருவைப் போன்று தன்னிலை மறந்து இவ்வுலகம் தரும் மகிழ்ச்சியில்
திளைத்துக்கொண்டிருக்காமல், இயேசு நமக்குப் போதித்த பாடுகளின்
வழியில் நடக்கவேண்டும். ஏனெனில், இயேசுவின் வார்த்தையும் அவருடைய
விழுமியங்களும்தான் நமக்கு நிலையான மகிழ்ச்சியைத் தருமே ஒழிய,
இவ்வுலக இன்பமல்ல.
ஆகையால், இயேசுவின் சீடர்களாக, அவருடைய வழியில் நடக்கின்ற
நாம், அவருடைய குரலைக் கேட்டு, அவருடைய பாடுகளின் வழியில் பயணப்படுவது
நல்லது.
சிந்தனை
'துன்பங்களை ஏற்கத் துணிந்த ஒருவரையே கடவுள் மிகப்பெரிய செயல்களைச்
செய்யப் பயன்படுத்துகின்றார்' என்பார் ஏ. டபிள்யு. டோஜர். எனவே,
நாம் இயேசுவைப் போன்று துன்பங்களை ஏற்பத் துணிவோம். அதன்வழியாக
இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
|
|