|
14
பிப்ரவரி 2019 |
|
பொதுக்காலம்
5ம் வாரம் வியாழக்கிழமை - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 2: 18-25
அந்நாள்களில் ஆண்டவராகிய கடவுள், "மனிதன் தனிமையாக இருப்பது
நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்'' என்றார்.
ஆண்டவராகிய கடவுள் மண்ணிலிருந்து எல்லாக் காட்டு விலங்குகளையும்
வானத்துப் பறவைகளையும் உருவாக்கி, அவற்றிற்கு மனிதன் என்ன பெயரிடுவான்
என்று பார்க்க, அவற்றை அவனிடம் கொண்டு வந்தார். உயிருள்ள ஒவ்வொன்றுக்கும்
அவன் என்ன பெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று. கால்நடைகள், வானத்துப்
பறவைகள், காட்டு விலங்குகள் ஆகிய எல்லாவற்றிற்கும் மனிதன் பெயரிட்டான்;
தனக்குத் தகுந்த துணையையோ மனிதன் காணவில்லை.
ஆகவே ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து,
அவன் உறங்கும்பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு,
எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார். ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து
எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்து
வந்தார்.
அப்பொழுது மனிதன், "இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின்
சதையும் ஆனவள்; ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால், இவள் பெண் என்று
அழைக்கப்படுவாள்'' என்றான். இதனால் கணவன் தன் தாய் தந்தையை
விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே
உடலாய் இருப்பர். மனிதன், அவன் மனைவி ஆகிய இருவரும் ஆடையின்றி
இருந்தனர். ஆனால் அவர்கள் வெட்கப்படவில்லை.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா:128: 1-2. 3. 4-5 (பல்லவி: 1)
=================================================================================
பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்!
1 ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! 2
உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும்
பெறுவீர்! பல்லவி
3 உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல்
இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப்
போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். பல்லவி
4 ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.
5 ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ்
நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக!
பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யாக் 1: 21
அல்லேலூயா, அல்லேலூயா! உங்களிடம் மிகுந்துள்ள தீமையை அகற்றி,
உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக்கொள்ளுங்கள்.
அதுவே உங்களை மீட்க வல்லது. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளை
நாய்க்குட்டிகள் தின்னுமே!
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
7: 24-30
அக்காலத்தில் இயேசு புறப்பட்டுத் தீர் பகுதிக்குள் சென்றார்.
அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்; தாம் அங்கிருப்பது எவருக்கும்
தெரியாதிருக்க வேண்டுமென்று விரும்பியும் அதை மறைக்க இயலவில்லை.
உடனே பெண் ஒருவர் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு உள்ளே வந்து,
அவர் காலில் விழுந்தார். அவருடைய மகளைத் தீய ஆவி பிடித்திருந்தது.
அவர் ஒரு கிரேக்கப் பெண்; சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர்.
அவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு அவரை வேண்டினார்.
இயேசு அவரைப் பார்த்து, "முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும்.
பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது
முறையல்ல'' என்றார்.
அதற்கு அப்பெண், "ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும்
நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத்
தின்னுமே'' என்று பதிலளித்தார்.
அப்பொழுது இயேசு அவரிடம், "நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்;
பேய் உம் மகளை விட்டு நீங்கிற்று'' என்றார். அப்பெண் தம் வீடு
திரும்பியதும் தம் பிள்ளை கட்டிலில் படுத்திருக்கிறதையும் பேய்
ஓடிவிட்டதையும் கண்டார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை
அவ(ர்க)ள் வெட்கப்படவில்லை
வெட்கம் - ஒரு வித்தியாசமான உணர்வு.
'இதைச் செய்ய உனக்கு வெட்கமாயில்லையா?' என்று இந்த வார்த்தையை
அழுத்தமாகவும் பயன்படுத்தலாம்.
'போங்க...எனக்கு வெட்கமா இருக்க!' என்று இந்த வார்த்தையை ரொம்ப
மெதுவாகவும் பயன்படுத்தலாம்.
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று சங்ககாலம் பெண்களின் உணர்வுகளைப்
பட்டியலிடுகிறது. இவற்றில் நாணம் என்பதுதான் வெட்கம்.
நாளைய முதல் வாசகத்தில் 'ஆணும், பெண்ணும் ஆடையின்றி இருக்கின்றனர்.
ஆனால் அவர்கள் வெட்கப்படவில்லை.' நற்செய்தி வாசகத்தில்,
'பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்களுக்குப் போடுவது நல்லதல்ல' என்று
சொல்லி இயேசு தன்னை மறைமுகமாக 'நாய்' என அழைத்தாலும், சிரிய
பெனிசியப் பெண் வெட்கப்படவில்லை.
'இதுதான் நான்!' என்று சொல்பவர்கள் வெட்கப்படத் தேவையில்லை. இப்படிப்பட்ட
ஒரு வெட்கம் இல்லாத நிலைதான் அகுஸ்தினாரை, 'கன்ஃபஷென்ஸ்' என்ற
நூல் எழுத தூண்டியிருக்க வேண்டும்.
'இதுதான் நான் - ஆனால் இப்படி இருப்பதை நான் உனக்கு தெரிவிக்க
விரும்புவதில்லை' என்று சொல்பவர்கள்தாம் வெட்கப்படுவார்கள்.
'இதுதான் நான்!' என்று நாம் நம்மையே எப்போது காட்டுகிறோம்?
இறைவன் முன்னிலையிலும், நமக்கு நெருக்கமானவர்கள்
முன்னிலையிலும்.
இவ்விரண்டு பேரும் நம்மை இருப்பது போல ஏற்றுக்கொள்கின்றனர்.
'அவமானம்' என்ற உணர்வு 'வெட்கம்' என்ற உணர்வோடு சேர்ந்தே போகிறது.
மிஷல் ஃபூக்கோ என்கிற மெய்யியல் அறிஞர், 'நாம் ஒரு வீட்டில் இருக்கிறோம்.
அந்த வீட்டின் சாவித்தூரம் வழியாக அடுத்தவர்கள் நம்மை
பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் பார்க்கிறார்கள் என்ற
அவமானமும், அதனால் வரும் வெட்கமும்தான் நாம் கொண்டிருக்கின்ற
மரபு, பாரம்பரியம், கலாச்சாரம், நாகரீகம் அனைத்திற்கும் காரணம்'
என்கிறார்.
'இதுதான் நான்!' என்று என்னையே அறிந்து கொள்ள, ஏற்றுக்கொள்ள
முடிந்தால் எத்துணை நலம்!
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
மாற்கு 7: 24-30
நம்பிக்கை இருந்தால் போதும்...
நிகழ்வு
2000 ஆம் ஆண்டு, செப்டம்பர் திங்கள் 25 ஆம் நாள்,
பிலிப்பைன்ஸில் உள்ள ஸாம்போவாங்கா என்ற சிற்றூரில் வசித்துவந்த
மாரிசெல் அபாடன் என்ற பதினோரு வயது சிறுமி, தனது மாமாவுடன் தண்ணீர்
எடுத்துவர கிளம்பிப் போனார். வழியில் நான்குபேர் கையில் கத்தியுடன்
அவர்களை வழிமறித்தார்கள். அவர்களில் ஒருவன், மாரிசெல்லின்
மாமாவை மண்டியிட்டுக் கீழே அமரச் சொன்னான். என்ன நடக்கிறது என்று
சுதாரிப்பதற்குள், அவர் கழுத்தில் வெட்டு விழுந்தது. இவ்வளவு
நேரம் தன்னோடு பேசிக்கொண்டு வந்த மாமா ஒரு கணத்துக்குள் இறந்துபோனதை
நம்பமுடியாமல் பார்த்தார் மாரிசெல். பிறகு அவர்களிடமிருந்து தப்பித்து
ஓடத் தொடங்கினார். ஆனால், அவர்கள் வேகமாக ஓடிவந்து அவரைப்
பிடித்தனர்.
அப்பொழுது அவர்களில் ஒருவன் மாரிசெல்லின் கழுத்தில்
வெட்டினான். கீழே விழுந்தவர், கொஞ்சம் கொஞ்சமாக நினைவிழக்கத்
தொடங்கினார். ஆனாலும், உள்ளுக்குள் ஒரு குரல் "நான் சாகக்கூடாது...
நான் சாகக் கூடாது..." என்று அழுத்தமாக ஒலித்துக்கொண்டே இருந்தது,
அவருக்கு லேசாக நினைவு வந்தபொழுது, கொலைகாரர்கள் நான்கு பேரின்
கால்களும் தெரிந்தன. அவர் இறந்ததைப்போல பேச்சு மூச்சில்லாமல்
அப்படியே கிடந்தார். சிறிது நேரம் கழித்து அவர்கள் அங்கிருந்து
நகர்ந்ததும் வீட்டை நோக்கி ஓடினார். "கடவுளே! நான் பிழைக்கவேண்டும்,
நான் பிழைக்கவேண்டும்" என்று திரும்பத் திரும்ப மனதுக்குள்
சொல்லியபடி ஓடினார்.
சிறிது தூரத்துக்குமேல் அவரால் ஓட முடியவில்லை. அப்பொழுதுதான்
தன் கரங்களை கவனித்தார். அவரின் மணிக்கட்டுக்குக்கீழ் இரு கைப்பகுதிகளும்
வெட்டுப்பட்டு தொங்கிக்கொண்டிருந்தன. அவருக்கு மயக்கம் வருவதுபோல்
இருந்தது. இருந்தாலும் நிலைமையை சமாளித்துக்கொண்டு, "நான்
பிழைக்கவேண்டும்" என்கிற நம்பிக்கையோடு விடாமல் ஓடினார்.
வீட்டை நெருங்கியதும் "அம்மா, அம்மா" என்று இன்னும் சத்தமாகக்
கத்தினார். மகளின் அலறல் சத்தம்கேட்டு, வீட்டிலிருந்து ஓடிவந்த
மாரிசெல் தாய், அவரின் நிலைகண்டு பதறிப்போனார். ஒருகணம் என்ன
செய்வதென்று தெரியாமல் திகைத்த அவர் வேகமாக வீட்டுக்குள் ஓடி,
ஒரு போர்வையை எடுத்துவந்து, மகளின் உடலைச் சுற்றிப்
போர்த்திவிட்டு, மகளை மருத்துவமனைக்குத் தூக்கிக் கொண்டு ஓடினார்.
மாரிசெல்லின் வீட்டிலிருந்து மருத்துவமனை 12 கிலோமீட்டர்
தொலைவில் இருந்தது. அதை ஓடிக் கடப்பதற்கு எப்படியும் நான்குமணி
நேரமாகும். இருந்தாலும், மாரிசெல்லின் தாயார் அவரைத்
தூக்கிக்கொண்டு அந்த 12 கிலோமீட்டைரையும் கடந்து ஒருவழியாக மருத்துவமனையை
அடைந்தார்.
மணிக்கட்டுக்குக் கீழ் வெட்டுப்பட்டுத்தொங்கும் இரு கைகள், கழுத்தில்
காயம் என்றிருந்த மாரிசெல்லைப் பார்த்த மருத்துவர்கள், "இவர்
பிழைப்பது கஷ்டம்தான்... இருந்தாலும் முயற்சிசெய்து
பார்க்கிறோம்..." என்று அவருக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கினார்கள்.
ஏறக்குறைய ஐந்துமணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மாரிசெல்
காப்பாற்றப்பட்டார். கழுத்தைச்சுற்றி மட்டும் அவருக்கு 25 தையல்கள்
போடப்பட்டன. கஷ்டப்பட்டு மாரிசெல்லைக் காப்பாற்றிய மருத்துவர்களால்
அவரின் கைகளைக் காப்பாற்ற முடியவில்லை. அவரின் மணிக்கட்டுக்குக்
கீழ் மொன்னைப் பகுதிகளாக அவை மாறியிருந்தன.
ஒருமாத காலம் மருத்துவமனையில் இருந்து சிகிச்சையை
முடித்துவிட்டு மாரிசெல்லும் அவருடைய தாயும் திரும்பிவந்தார்கள்.
அவர்கள் இருவரும் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது அவர்களுக்கு
இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களது வீடு முழுவதும்
கொலைகாரர்களால் அடித்து நொறுக்கப்பட்டு, தீவைத்துக் கொளுத்தப்பட்டிருந்தது.
இதைப் பார்த்துவிட்டு இருவரும் கலங்கிப்போயினர்.
"மருத்துவமனையில் சிகிச்சைக்கான பணத்தைக் கட்ட கையில் பணமில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இதுவேறயா?" என்று மரிசெல்லின்
தாயார் புலம்பப் தொடங்கினார். ஆனாலும், மாரிசெல் `இந்த
நிலையும் மாறும் என்று நம்பிக்கையோடு இருந்தார். அந்த நம்பிக்கைக்கு
கடவுளிடமிருந்து பதில் கிடைத்தது. எப்படியென்றால்,
மாரிசெல்லின் தூரத்து உறவினராக இருந்த பேராயரார் ஒருவர் அவரின்
மருத்துவமனைச் செலவுகளை ஏற்றுக்கொண்டார். அது மட்டுமல்லாமல்
குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தவும் உதவினார். அவர்கள்
சிறையிலடைக்கப்பட்டார்கள்.
இதன்பிறகு விரல்களில்லாத மாரிசெல் தன் மணிக்கட்டைப் பயன்படுத்தியே
தன் வேலைகள் எல்லாவற்றையும் செய்யப் பழகினார். எழுதக் கற்றுக்கொண்டார்;
கணினி பழகினார், உணவக நிர்வாகத்தில் (Hotel Management) பட்டம்
வாங்கினார். ஆர்ட்ஸ் அண்டு கிராஃப்ட்ஸ் படிப்பில் ஒரு தங்கப்பதக்கமும்
வென்றார். இன்றைக்கு மாரிசெல் ஒரு சமையற்கலை நிபுணர் (Chef).
உலகிலேயே கைகள் இல்லாத சமையல் கலைஞர் இவராகத்தான் இருக்கும்.
தன் மணிக்கட்டுகளையும் பிற உடல் பகுதிகளையும் பயன்படுத்தி எல்லா
வேலைகளையும் செய்யும் இவர் பலருக்கும் நம்பிக்கை நட்சத்திரமாகத்
திகழ்கின்றார்.
கழுத்தில் வெட்டப்பட்டு, கைகளில் விரல்கள் இல்லாத நிலையிலும்
ஒரு சாதனைப் பெண்ணாக மாரிசெல்லால் வலம்வர முடிகின்றதென்றால்,
அதற்கு அவரிடம் இருக்கும் நம்பிக்கைதான் காரணம் என்று சொன்னால்
அது மிகையாகாது. இந்த மாரிசெல்லைப் போன்று நற்செய்தியிலும் நம்பிக்கைக்கு
மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் ஒரு பெண்மணியைக்
குறித்துப் படிக்கின்றோம். அவருடைய நம்பிக்கை எத்தகையது, அந்த
நம்பிக்கையினால் இயேசுவிடமிருந்து அவர் பெற்ற நன்மை என்ன என்று
சிந்தித்தப் பார்ப்போம்.
அம்மா, உமது நம்பிக்கை பெரிது
இயேசு, புறவினத்தார் வாழும் பகுதியான தீர் பகுதிக்குள்
நுழையும்போது அங்கிருந்த கிரேக்கரும் சிரிய பெனிசிய இனத்தைச்
சார்ந்தவருமான ஒரு பெண் தன்னுடைய மகளிடமிருந்து பேயை ஓட்டுமாறு
இயேசுவிடம் கேட்கின்றார். ஒரு பக்கம் அவர் ஒரு பெண், அதுவும்
புறவினத்துப் பெண், இன்னொரு பக்கம் அவரை அனுப்பிவிடத்
துடிக்கும் இயேசுவின் சீடர்கள் (மத்15: 23) இவற்றையும் கடந்த
அப்பெண் இயேசுவிடம் வந்து தன் மகளுக்காக இயேசுவை
வேண்டிநிற்கின்றார். இயேசுகூட தொடக்கத்தில் அவருக்கு மறுமொழி
பேசவில்லை, அவரை நாயென்று (தெரு நாயல்ல, செல்ல நாய்தான்) அழைக்கின்றார்.
இருந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் தன் மகளுக்காகத் தொடர்ந்து
இயேசுவை இறைஞ்சி நிற்கின்றார். இதையெல்லாம் பார்த்த இயேசு அவருடைய
மகளுக்கு நலமளிக்கின்றார். அதைவிடவும் அவருடைய நம்பிக்கை
பெரிது என்று பாராட்டுகின்றார் (மத் 15: 28).
நற்செய்தியில் இருவருடைய நம்பிக்கையைக் கண்டு இயேசு வியந்து
பாராட்டுகின்றார். ஒருவர் நூற்றுவத் தலைவர், இன்னொருவர் இவர்.
இந்த இரண்டு பேருமே புறவினத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் நம்மிடம் ஆழமான நம்பிக்கை இருந்தால், நம்மால் நிச்சயம்
இறையாசியை பெற முடியும் என்ற உண்மையானது வெளிப்படுத்தப்படுகின்றது.
சிந்தனை
நம்பிக்கை என்பது விழித்திருக்கும் நிலையில் காணும் கனவு என்பார்
கிங்சங் என்ற அறிஞர். எனவே, நமது நம்பிக்கை ஆழமானதாக இருக்கச்
செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
தொடக்க நூல் 2: 18-25
"இதோ இவளே என் எலும்பின் எழும்பும் சதையின் சதையும் ஆனவள்"
நிகழ்வு
செல்வனுக்கும் யாழினிக்கும் அன்றுதான் திருமணம் நடந்தது. திருமணம்
முடிந்ததும் யாழினியின் தாயார், புதிதாகத் தொடங்கப்பட்ட ஒரு வங்கிக்கணக்கின்
பாஸ்புக்கை அவர்கள் இருவரிடமும் கொடுத்து, "இதைத் திருமணப்பரிசாக
வைத்துக்கொள்ளுங்கள்... இதில் ஐயாயிரம் ரூபாய் முன்பணமாகச்
செலுத்தியிருக்கின்றேன். எப்பொழுதெல்லாம் நீங்கள் மகிழ்ச்சியாக
உணர்கிறீர்களோ, அப்பொழுதெல்லாம் இதில் கொஞ்சம் பணத்தைப்
போட்டு, உங்களுடைய எதிர்கால வாழ்விற்கு வைத்துக் கொள்ளுங்கள்"
என்றார். அவர்கள் சரியென்று சொல்லிவிட்டு, அதனைப்
பெற்றுக்கொண்டார்கள்.
திருமணமான முதல் மாதத்திலேயே செல்வனுக்கு அவன் வேலைபார்த்து வந்த
நிறுவனத்தில் பதவி உயர்வு கிடைத்தது. அதன் நிமித்தமாக அவன் வங்கிக்
கணக்கில் பத்தாயிரம் ரூபாய் போட்டான். மூன்றாம் மாதத்தில்
யாழினி கருவுற்றதன் நிமித்தமாக அவள், வங்கிக்கணக்கில் ஐந்தாயிரம்
ரூபாய் போட்டாள். அதற்குப் பிறகு இருவருக்கும் குழந்தை பிறந்ததன்
நிமித்தமாக இருவரும் சேர்ந்து வங்கிக்கணக்கில் ஐம்பதாயிரம்
ருபாய் போட்டார்கள். இப்படி அவர்கள் இருவரும் எப்பொழுதெல்லாம்
மகிழ்ச்சியாக இருப்பதை உணர்ந்தார்களோ, அப்பொழுதெல்லாம் அவர்கள்
வங்கிக்கணக்கில் பணத்தைப் போட்டுக்கொண்டே வந்தார்கள்.
ஆண்டுகள் உருண்டோடின. அவர்களுடைய குழந்தை வளர்ந்து பள்ளிக்கூடம்
போகத் தொடங்கியது. இதற்கிடையில் அவர்களுக்கு இடையே, அவ்வப்போது
சிறுசிறு சண்டைகள் வந்தன. ஒருநாள் அவர்களுக்கு இடையே வந்த ஒருசிறிய
சண்டை வளர்ந்து, பெரிதாகி இருவரும் விவாகரத்து செய்துகொள்ளலாம்
என்ற முடிவுக்கு வந்தனர். இந்த முடிவை யாழினி தன்னுடைய தாயிடத்தில்
சொன்னாள். அப்பொழுது அவளுடைய தாய், "நீங்கள் இருவரும் விவாகரித்து
செய்துகொள்ளும் முடிவுக்கு வந்துவிட்டீர்களா... சரி, நீங்கள்
விவாகரத்து செய்துகொள்வதற்கு முன்பாக, உங்கள் திருமணத்தன்று
நான் கொடுத்த வங்கிக்கணக்கை முடித்துக்கொண்டு, அதிலிருக்கும்
பணத்தை இருவரும் பாதியாகப் பிரித்துக்கொண்டு விவாகரத்து
செய்துகொள்ளுங்கள்" என்றார். யாழினியும் அதற்குச் சரியென்று
சொல்லிவிட்டு, தாய் தங்களிடம் கொடுத்த பாஸ்புக்கைப்
பார்வையிட்டாள். அதில் அத்தனை மகிழ்ச்சியான தருணங்கள் இருந்தன.
இருவரும் இணைந்து இவ்வளவு மகிழ்ச்சியான தருணங்களை அனுபவித்து
வாழ்ந்திருக்கும்போது, ஒரு சாதாரண காரியத்திற்காக விவாகரித்து
செய்வதா... கூடவே கூடாது என்று விவாகரத்து செய்துகொள்ளும் எண்ணத்தை
விட்டுவிட்டு, யாழினி தன் கணவர் மற்றும் பிள்ளையோடு மிகவும் சந்தோசமாக
வாழ்ந்துவந்தார். அதன்பிறகு அவர்களுக்கு இடையில் விவாகரத்து என்ற
பேச்சுக்கே இடமில்லாமில்லாமல் போனது.
கணவனும் மனைவியும் ஈருடல் ஓருயிராக வாழத்தான் படைக்கப்பட்டிருக்கிரார்களே
ஒழிய, அவர்கள் உறவை முறித்துகொண்டு பிரிந்துவாழப் படைக்கப்படவில்லை
என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு சிந்தனைக்குரியது.
ஆதாமுக்கு ஏற்ற துணையாக ஏவாளைப் படைத்த கடவுள்
ஆண்டவராகிய கடவுள் எல்லாவற்றையும் படைத்துவிட்டு, கடைசியில் மனிதனை/ஆதாமைப்
படைக்கின்றார். அவன் தனித்திருப்பதையும் அப்படி இருப்பது நல்லதன்று
என்று கண்ட கடவுள் அவனுக்கு ஏற்றத் துணையை, அவனுடைய விலா எலும்பிலிருந்து
படைக்கின்றார். இதைக் குறித்துச் சொல்லும்போது விவிலிய அறிஞரான
மத்தேயு ஹென்றி என்பவர், "ஆதாம் தன் மனைவி ஏவாளை தன்னுடைய
நெஞ்சுக்கு நெருக்கமாக பாவித்து நடத்தவேண்டும் என்பதற்காக கடவுள்
அவளை ஆதாமிலிருந்து பாதத்திலிருந்தோ அல்லது அவனுடைய தலையிலிருந்தோ
அல்லாமல், அவனுடைய இதயத்திற்கு நெருக்கமான இடத்திலிருந்து எடுத்துப்
படைத்தார்" என்று கூறுவார்.
இவ்வாறு தனக்குத் துணையாகப் படைக்கப்பட்ட மனைவியை ஒவ்வொரு கணவனும்
தனது நெஞ்சத்திற்கு நெருக்கமாகப் பாவித்து நடத்துவது நல்லது.
இது மனைவிக்கும் பொருத்தும்.
கணவனும் மனைவியும் எலும்பின் எலும்பாக, சதையின் சதையாக இருக்கவேண்டும்
ஏவாளைப் படைத்த கடவுள் அவளை ஆதாமிடம் கொடுக்கிறார். அவன் அவளைப்
பார்த்துவிட்டு, "இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையுமானவள்"
என்கின்றார். உலகத்தில் பாடப்பட்ட முதல் காதல் கவிதையான இதில்
கணவனும் மனைவியும் ஓருயிராக வாழவேண்டும் என்ற செய்தியானது சொல்லப்படுகின்றது.
இதை உணர்ந்து ஒவ்வொரு கணவரும் தன் மனைவியை அல்லது ஒவ்வொரு மனைவியும்
தன் கணவனை தன் உயிராக நினைத்து அன்புசெய்து வாழ்ந்தால் மண்ணகத்திலே
விண்ணகத்தைக் காணும் வாய்ப்பினைப் பெறமுடியும் என்பதில் எந்தவித
ஐயமும் இல்லை.
சிந்தனை
இணைந்து வாழவேண்டும் ஒருவர் மற்றவருக்கு உறுதுணையாக இருக்கவேண்டும்
என்பதற்காக கடவுள் ஆதாமுக்கு ஏற்ற துணையான ஏவாளைப் படைத்தார்
என்பதைப் பற்றி சிந்தித்துப் பார்த்த நாம், நம்முடைய
வாழ்க்கையில் பிரிவினைக்கான சக்திகளை வேரறுத்துவிட்டு, உண்மையான
அன்பில் இணைந்து வாழ முயற்சிப்போம். அதன்வழியாக இறையருள்
நிறைவாய் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
|
|