|
13
பிப்ரவரி 2019 |
|
பொதுக்காலம்
5ம் வாரம் புதன்கிழமை - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஆண்டவராகிய கடவுள் ஏதேன் தோட்டத்தில்
தாம் உருவாக்கிய மனிதனை வைத்தார்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 2:
4b-9,15-17
அந்நாள்களில் ஆண்டவராகிய கடவுள் மண்ணுலகையும், விண்ணுலகையும்
உருவாக்கியபொழுது, மண்ணுலகில் நிலவெளியின் எவ்விதப் புதரும்
தோன்றியிருக்கவில்லை; வயல்வெளியின் எவ்விதச் செடியும்
முளைத்திருக்கவில்லை; ஏனெனில் ஆண்டவராகிய கடவுள் மண்ணுலகின்
மேல் இன்னும் மழை பெய்விக்கவில்லை; மண்ணைப் பண்படுத்த மானிடர்
எவரும் இருக்கவில்லை. ஆனால் நிலத்திலிருந்து மூடுபனி எழும்பி
நிலம் முழுவதையும் நனைத்தது. அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் நிலத்தின்
மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன்
உயிர் உள்ளவன் ஆனான்.
ஆண்டவராகிய கடவுள் கிழக்கே இருந்த ஏதேனில் ஒரு தோட்டம் அமைத்துத்
தாம் உருவாக்கிய மனிதனை அங்கே வைத்தார். ஆண்டவராகிய கடவுள் கண்ணுக்கு
அழகானதும் உண்பதற்குச் சுவையானதுமான எல்லா வகை மரங்களையும்,
தோட்டத்தின் நடுவில் வாழ்வின் மரத்தையும் நன்மை தீமை அறிவதற்கு
ஏதுவான மரத்தையும் மண்ணிலிருந்து வளரச் செய்தார். ஏதேன் தோட்டத்தைப்
பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு
கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார்.
ஆண்டவராகிய கடவுள் மனிதனிடம், "தோட்டத்தில் இருக்கும் எந்த
மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் நீ உண்ணலாம். ஆனால் நன்மை
தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே; ஏனெனில்
அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய்"என்று கட்டளையிட்டுச்
சொன்னார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா:104: 1-2a. 27-28. 29bc-30 (பல்லவி: 1a)
=================================================================================
பல்லவி: என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர்
எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர்.
2ய பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர்.
-பல்லவி
27 தக்க காலத்தில் நீர் உணவளிப்பீர் என்று இவையெல்லாம் உம்மையே
நம்பியிருக்கின்றன.
28 நீர் கொடுக்க, அவை சேகரித்துக் கொள்கின்றன; நீர் உமது
கையைத் திறக்க, அவை நலன்களால் நிறைவுறுகின்றன.
-பல்லவி
29bஉ நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும்
புழுதிக்கே திரும்பும்.
30 உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின்
முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.
-பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 17: 17ab
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும்.
உமது வார்த்தையே உண்மை. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மனிதரின் உள்ளத்திலிருந்து வருவதே அவரைத்
தீட்டுப்படுத்தும்.
புனித மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து
வாசகம் (7: 14-23)
அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தை மீண்டும் தம்மிடம் வரவழைத்து,
அவர்களை நோக்கி, "நான் சொல்வதை அனைவரும் கேட்டுப்
புரிந்துகொள்ளுங்கள். வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று
அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு
உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும்.
கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்"என்று கூறினார்.
அவர் மக்கள் கூட்டத்தை விட்டு வீட்டிற்குள் வந்தபோது அவருடைய
சீடர் அவரிடம் இந்த உவமையைப் பற்றிக் கேட்க, அவர் அவர்களிடம்,
"நீங்களுமா இந்த அளவுக்குப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்?
வெளியேயிருந்து மனிதருக்குள்ளே செல்லும் எதுவும் அவர்களைத்
தீட்டுப்படுத்த முடியாது என உங்களுக்குத் தெரியாதா? ஏனென்றால்,
அது அவர்களுடைய உள்ளத்தில் நுழையாமல் வயிற்றுக்குச் சென்று கழிப்பிடத்திற்குப்
போய்விடுகிறது"என்றார்.
இவ்வாறு அவர் எல்லா உணவுப் பொருள்களும் தூயன என்று
குறிப்பிட்டார். மேலும், "மனிதருக்கு உள்ளேயிருந்து வருவதே
அவர்களைத் தீட்டுப்படுத்தும். ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே
பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம்,
காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச்
செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன. தீயனவாகிய இவை
அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன"
என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
மாற்கு 7: 14-23
உள்ளத்தைத் தூய்மையாக வைப்போம்
நிகழ்வு
ஒரு கிராமத்தில் இருந்த தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் தனது
மானவர்களுக்கு ஒரு முக்கியமான் பாடம் கற்றுத்தர விரும்பினார்.
எனவே ஒவ்வொரு குழந்தையையும் ஒரு நெகிழி (Plastic) பையும் சில
உருளைக்கிழங்குகளும் எடுத்து வரச் சொன்னார். பின்னர் ஒவ்வொருவரையும்
தங்களது நெகிழிப் பையில் தாங்கள் எத்தனை நபர்களை வெறுக்கிறார்களோ
அத்தனை உருளைக்கிழங்குகளை போடச் சொன்னார்.
எல்லாக் குழந்தைகளும் அவ்வாறே செய்தார். சில குழந்தைகள் இரண்டு
உருளைக்கிழங்குகளையும் இன்னும் ஒருசில குழந்தைகள் மூன்று உருளைக்கிழங்குகளையும்
போட்டனர். விதிவிலக்காக ஓரிரு குழந்தைகள் ஐந்து உருளைக்கிழங்குகளைப்
போட்டனர். ஒரு வாரத்திற்கு அந்தப் பைகளை உருளைக்கிழங்குகளுடன்
தங்கள் கையிலேயே வைத்திருக்கவேண்டும் என்பதுதான் விளையாட்டு.
எங்கு சென்றாலும் குளியலறை உட்பட பையையும் அதனுள் உருளைக்கிழங்குகளையும்
எடுத்துச் செல்லவேண்டும்
இந்த வித்தியாசமான விளையாட்டை எல்லாரும் உற்சாகமாக ஆரம்பித்தனர்.
மூன்று நாட்கள் கழித்து மெதுவாக ஒவ்வொருவராக அதன் கஷ்டத்தை
உணரத் தொடங்கினார்கள். சிறிது கனமான பையை கையிலேயே வைத்திருப்பது
கஷ்டமாக இருந்தது. மேலும் உருளைக்கிழங்கு அழுகிப்போய் துர்நாற்றம்
எடுக்கத் தொடங்கியது. அதுவும் மிகவும் கஷ்டமாக இருந்தது. ஒருவழியாக
கஷ்டப்பட்டு ஒரு வாரத்தை முடித்தனர். தலைமையாசிரியர் ஒவ்வொருவரையும்
தமது அனுபவத்தைச் சொல்லச் சொன்னார். எல்லாரும் பையை எப்பொழுதும்
தூக்கிச்செல்வது மிகவும் கடினமாக இருந்ததாகவும் அழுகிப்போன உருளைக்கிழங்குகளின்
துர்நாற்றம் கஷ்டத்தைத் தந்ததாகும் கூறினர்.
அப்பொழுது தலைமையாசிரியை அதன் அர்த்தத்தை விளக்கினார்.
"இப்படித்தான் நாமும் மற்றவகளின்மீது வெறுப்பைச் சுமக்கும்போது
அது நமக்குக் கடினமாகவும் அதனால் உண்டாகும் தீய எண்ணம்
(துர்நாற்றம்) நமது மனத்தைக் கெடுப்பதாகவும் உள்ளது. நம்முடைய
உள்ளத்திலிருந்து வெறுப்பைத் தூங்கி எரிந்துவிட்டால் நிம்மதியாகவும்
மகிழ்ச்சியாகவும் இருக்கலாம்."
இந்நிகழ்வு நமக்குக் கற்றுத்தருகின்ற உண்மை மிகவும் அற்புதமானது.
நம்முடைய உள்ளத்தில் இருக்கின்ற தீய எண்ணங்களை அப்புறப்படுத்திவிட்டால்,
நம்முடைய வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்ற உண்மையை
எடுத்துச் சொல்லும் இந்நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.
கடவுளால் படைக்கப்பட்டவை அனைத்தும் நல்லவையே
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, தூய்மை குறித்த ஒருசில உண்மைகளை
நமக்கு மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றார். அவர்
கூறுகின்றார், "வெளியேயிருந்து மனிதருக்கு உள்ளே சென்று அவர்களைத்
தீட்டுப்படுத்தக்கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து
வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும்." இயேசு கூறும்
இவ்வார்த்தைகளில் இரண்டு முக்கியமான உண்மைகள் அடங்கி இருக்கின்றன.
ஒன்று, இந்த உலகத்தில் படைக்கப்பட்ட எல்லாமும் நல்லவை, தூயவை.
இரண்டு. மனிதருடைய உள்ளத்திலிருந்துதான் தீயவை தோன்றுகின்றன.
இந்த இரண்டையும் குறித்து சிறிது சிந்தித்துப் பார்ப்போம்.
ஆண்டவராகிய கடவுள் இந்த உலகத்தையும் இதிலுள்ள யாவற்றையும் படைத்தபோது
அவை நன்றாக இருந்தன (தொநூ 1:31) என்று விவிலியம் நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
அப்படியிருக்கின்றபோது இவ்வுலகத்தில் உள்ள எதுவும் தீட்டாக,
தூய்மையில்லாமல் இருக்குமா? என்றால், நிச்சயமாக இல்லை என்றுதான்
சொல்லவேண்டும். மனிதர்கள் இது இது தூய்மையானது, இது இது தீட்டானது
என்று பிரித்துவைத்து விட்டார்கள். இங்கேதான் பிரச்சனை ஆரம்பிக்கின்றது.
மனித உள்ளத்திலிருந்து எழும் எண்ணங்கள்தான் தீயவை
வெளியே இருந்து வருபவை அல்ல, உள்ளே இருந்து வருபவைதான் மனிதர்களைத்
தீட்டுப்படுத்தும் என்று இயேசு சொல்வதற்குக் காரணம், உள்ளிருந்துதான்
எல்லாவிதமான தீய எண்ணங்களும் பிறப்பெடுக்கின்றன. ஆகவே, இத்தகைய
தீய எண்ணங்களை ஒருவர் தன்னுடைய மனத்திலிருந்து அப்புறப்படுத்திவிட்டு,
அங்கு தூய எண்ணங்களை வைத்திருக்கும்போது அல்லது மனதில் உள்ள
சாத்தானை அப்புறப்படுத்திவிட்டு, அங்கு தூயவராம் கடவுளைக் குடியமர்த்தினால்
அவருடைய வாழ்க்கை மிகவும் மகிழ்சியாக இருக்கும் என்பதில் எந்தவொரு
மாற்றுக்கருத்தும் கிடையாது. இத்தகைய சிந்தனையைத்தான் இயேசு மக்களுக்கும்
பின் தன்னுடைய சீட்ரகளுக்கும் எடுத்துச் சொல்கின்றார்.
இதில் வேடிக்கை என்னவென்றால், இயேசு தீட்டு
- தூய்மை குறித்து
இவ்வளவு எடுத்துச் சொன்னபோதும் பேதுரு, "தீட்டானதும் தூய்மையற்ற
எதையும் நான் உண்டதில்லை" என்பார். பின்னர் பேதுருவிடம் பேசிய
குரல், "தூய்மையான எதையும் தீட்டாகக் கருதாதே" என்று சொன்னபின்தான்
அவ்வுணவை அவர் உண்பார். ஆகையால், பேதுருவிடமிருந்து விலகிய
தீட்டு குறித்த எண்ணம் நம்மிடம் விலகவேண்டும்; எல்லாவற்றையும்
தூய்மையானதாகப் பார்க்கப் பழகவேண்டும் (திப 10: 14,15).
சிந்தனை
கடவுள் படைத்த எல்லாமும் நல்லவைதான், நம்முடைய உள்ளம்தான் தீமைகளின்
பிறப்பிடமாக இருக்கின்றது. ஆகவே, நம்முடைய உள்ளத்தைத்
தூய்மையாக வைத்து, தூயவரின் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள்
நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
தொடக்க நூல் 2: 4-9; 15-19
கீழ்ப்படிந்து நடந்தால் நன்மை பெருகும்
நிகழ்வு
ஒரு கிராமத்தில் ஏழை மனிதர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு
மூன்று பிள்ளைகள் இருந்தனர். ஒருநாள் அந்த ஏழை தன் மரணம் அண்மையில்
இருப்பதை உணர்ந்து, தன் மூன்று பிள்ளைகளையும் அழைத்தார். "குழந்தைகளே...
உங்களிடம் கொடுப்பதற்கு என்னிடம் பெரிதாக சொத்துக்கள் ஒன்றுமில்லை.
என்னிடம் உள்ளதை உங்களுக்கு தருகிறேன். அதைக்கொண்டு நீங்கள்
புத்தியோடு பிழைத்துக் கொள்ளுங்கள்"என்று கூறிவிட்டு முதல்
மகனுக்கு ஒரு கோழியையும் இரண்டாம் மகனுக்கு அரிவாளையும்
மூன்றாம் மகனுக்கு ஒரு பூனையையும் கொடுத்தார்.
"பிள்ளைகளே இந்தப் பொருட்களை பார்த்து ஏளனமாக நினைக்கவேண்டாம்.
இந்த பொருட்களில் உங்கள் தந்தையுடைய ஆசி இருக்கிறது. நீங்கள்
என் சொல் கேட்டு நடந்தால், உங்களுக்கு நிறைய பொருட்களை இவை சம்பாதித்து
தரும். இவற்றை எடுத்துக் கொண்டு, இந்த பொருட்கள் இல்லாத நாடுகளுக்கு
சென்று, அங்கு உங்கள் அறிவு திறமையை பயன்படுத்தினால் நிச்சயம்
பணக்காரனாவீர்கள்"என்று சொல்லிவிட்டு இறந்தார்.
தந்தையின் இறப்புக்குப் பிறகு மூத்த மகன், தந்தை தனக்குக்
கொடுத்த கோழியை எடுத்து கொண்டு வீட்டை விட்டுப் புறப்பட்டான்.
ஒவ்வொரு நாடாகச் சென்றான். ஒரு நாள் ஒரு புதிய தீவை அடைந்தான்.
அந்த தீவில் கோழிகளே இல்லை. சூரியனைக் கண்டுதான் காலை மாலை நேரத்தை
அறிந்துகொண்டு வந்தனர். இரவு நேரத்தை அவர்களால் கணக்கிட முடியாமல்
தவித்தனர். இதுதான் தன் கோழியை விற்க சரியான இடம் என்பதை அறிந்து,
அந்த ஊர் மக்களை அழைத்தான் மூத்தவன்.
"இந்தப் பறவையை பார்த்தீர்களா? எவ்வளவு அழகாக இருக்கிறது. இது
இரவு நேரத்தில் மூன்று முறை கூவும். பகலிலும் கூவும். அதை
வைத்து நேரத்தை எப்படி கணக்கிட வேண்டும்" என்றான். அதை கேட்ட
அந்த தீவு மக்கள் மிக்க மகிழ்ச்சியடைந்த மக்க, அவன் கேட்டதுபோல
ஒரு மூட்டை பொன் நாணயம் கொடுத்தனர். பொன்னை எடுத்து கொண்டு ஊர்
திரும்பினான் மூத்தவன். அண்ணன் கொண்டு வந்த பொற்காசுகளை கண்டு
வியப்படைந்தனர் தம்பிகள் இருவரும். உடனே இரண்டாவது மகன் தன் அரிவாளை
எடுத்து கொண்டு புறப்பட்டான்.
அவன் புறப்பட்டு சென்று பல நாட்கள் வரையில் அந்த அரிவாளால் எந்த
நன்மையும் ஏற்படவில்லை. கடைசியாக ஒரு நாட்டிற்கு வந்தான். அந்த
நாட்டிலிருந்தவர்கள் அரிவாளை பார்த்ததேயில்லை. அந்நாட்டு மக்கள்
வயல்களில் தானியம் விளைந்தால், அவற்றை கையால் கசக்கியோ அல்லது
கதிர்களை கிள்ளியோ எடுத்துச் செல்வர். இந்நிலையைப் பார்த்த இரண்டாவது
மகன், அந்நாட்டு மக்களுக்கு தன்னுடைய அரிவாளின் பயனை எடுத்து
கூறினான். பிறகு அரிவாளை கொண்டு கதிர்களை அறுத்துகட்டிகொடுத்தான்.
அதைக் கட்டு ஆச்சரியடைந்த மக்கள் அவன் கேட்டது போல, இரண்டு
மூட்டை பொன் நாணயங்கள் கொடுத்தனர். அவன் அதைப் பெற்றுக்கொண்டு
மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினான் இளையவன்.
அண்ணன்கள் இருவரும் நிறைய பணம் சம்பாதித்து வந்ததை கண்ட தம்பி,
தந்தை தனக்குக் கொடுத்த பூனையுடன் புறப்பட்டான். ஒருநாட்டில்
பூனையே இல்லாததும் ஆனால், அங்கு எக்கச்சக்கமான எலிகள் இருப்பதும்
அவை மக்களுக்கு தொல்லைகள் கொடுத்து வருவதையும் கேள்விப்பட்டு
அவன் அரசனிடம் சென்று பூனையினால் ஏற்படும் நன்மைகளைப் பற்றிக்
கூறினான். உடனே அரசன் மிகவும் மகிழ்ந்துபோய் அவன் கேட்டுக்கொண்டதற்கு
ஏற்ப பத்து மூட்டை பொன்னும் பத்து மூட்டை வெள்ளியும் கொடுத்து
அனுப்பி வைத்தான். அவனோ தான் சம்பாதித்த பொருட்களோடு ஊர் போய்
சேர்ந்தான். அவன் வீட்டிற்கு வந்ததும் தங்களை விட தங்கள் தம்பி
பல மடங்கு பொருள்கள் கொண்டு வந்ததைக் கண்டு மகிழ்ந்தனர் அவனது
அண்ணன்கள். பின்னர் சகோதரர்கள் மூவரும் தங்களுக்கு வேண்டிய
வீடு, நிலம் முதலியவற்றை வாங்கி கொண்டு சுகமாக வாழ்ந்தனர்.
மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் அந்த மூன்று மகன்களும் தங்களது
தந்தையின் சொல்கேட்டு அல்லது அவருக்குக் கீழ்படிந்து நடந்தார்கள்.
அதனால்தான் நிறைய ஆசி பெற்றார்கள்.
கடவுள் மனித இனத்தோடு செய்த முதல் உடன்படிக்கை
ஆண்டவராகிய கடவுள் எல்லாவற்றையும் படைத்துவிட்டு, கடைசியில் மனிதனைத்
தம் உருவிலும் சாயலிலும் படைத்து, அவனை ஏதேன் தோட்டத்தில் அமர்த்துகின்றார்.
பின்னர் அவர் அவனிடத்தில், "தோட்டத்திலிருக்கும் எந்த மரத்திலிருந்தும்
உன் விருப்பம் போல் நீ உண்ணலாம். ஆனால், நன்மை தீமை அறிவதற்கு
ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே; ஏனெனில் அதிலிருந்து
நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய்" என்கின்றார். இதுதான் கடவுள்
மனித இனத்தோடு செய்த உடன்படிக்கை. இந்த உடன்படிக்கையை மனிதன்
மீறாமல் இருந்திருந்தால் அல்லது விலக்கப்பட்ட மரத்தின் கனியை
உண்ணாது இருந்திருந்தால் அவன் சாகாமல் நித்தியத்திற்கு
நிலைத்திருப்பான். ஆனால், அவன் கடவுளோடு செய்த உடன்படிக்கையை
மீறினான், அதனால் பாவத்திற்கு ஆளாகி, சாவை எதிர்கொண்டான்.
இந்த நிகழ்வில் நாம் இன்னொரு செய்தியையை அறிந்துகொள்ளலாம். அது
என்னவெனில், கடவுள் ஒவ்வொருவருக்கும் முழு சுதந்திரத்தை அளித்திருக்கிறார்.
அதனை நாம் எப்படிப் பயன்படுத்துகின்றோமோ அதன்படி நம்முடைய
வாழ்வும் தாழ்வும் அமைக்கின்றது என்பதாகும்.
சிந்தனை
ஆதாமின் கீழ்ப்படியாமையால் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது என்றால்,
இயேசுவின் கீழ்ப்படிதலால் மீட்பு இந்த உலகிற்கு வந்தது. அதுபோல
நம்முடைய வாழ்வில் இறையாசி கிடைக்கவேண்டுமெனில், நாம் இறைவனுக்குக்
கீழ்ப்படிந்து நடக்கவேண்டும். ஆகவே, நாம் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து
நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
''இயேசு, 'வெளியேயிருந்து மனிதருக்குள்ளே செல்லும் எதுவும் அவர்களுடைய
உள்ளத்தில் நுழையாமல்
வயிற்றுக்குச் சென்று கழிப்பிடத்திற்குப் போய்விடுகிறது' என்றார்.
இவ்வாறு அவர் எல்லா உணவுப் பொருள்களும் தூயனவென்று
குறிப்பிட்டார்"(மாற்கு 7:19)
-- ''எல்லா உணவுப் பொருள்களும் தூயன"(மாற் 7:19) என்று இயேசு
குறிப்பிட்டதாக மாற்கு எழுதுகிறார். உடலின் உள்ளே சென்று சீரணமடைந்த
பிறகு மலமாக வெளியேறுகின்ற உணவுப்பொருள் எதுவாக இருந்தாலும் அது
மனிதரை மாசுபடுத்தாது என இயேசு போதிக்கிறார். எந்த உணவு தூயது
எந்த உணவு தீட்டானது எனத் தீர்மானிப்பதில் மோசே சட்டம் அதிக
கவனம் செலுத்தியது. தீட்டான உணவை உண்டால் குற்றம் என்பது சட்டம்.
ஆனால் இயேசு உணவுப் பொருள்களில் இது தூயது, அது தீட்டானது என்றெல்லாம்
வேறுபாடு பார்க்க வேண்டாம் என்றுரைத்தார். எந்த உணவுப்
பொருளும் மனிதரின் பசியை ஆற்றவே உள்ளதால் தூயதாகவே கருதப்பட
வேண்டும். இவ்வாறு இயேசு போதித்ததிலிருந்து இரு முடிவுகள் பெறப்படுகின்றன.
முதலில், இயேசு யூத இனத்தார் மட்டுமன்றி பிற இனத்தாரும் கடவுளின்
ஆட்சியில் பங்கேற்க வருவார்கள் என அறிவிக்கிறார். யூதர்கள் தங்கள்
உணவுப் பழக்க வழக்கங்கள் பிற இனத்தாரின் முறையிலிருந்து மாறுபட்டது
என்று பெருமை பாராட்டிக் கொண்டார்கள். ஆனால் இயேசுவோ, எந்த உணவை
உண்டாலும் சரியே என்னும் கருத்தை முன்வைத்ததால் பிற இனத்தாரையும்
கடவுளின் ஆட்சியில் பங்கேற்கத் தகுதியுடையவராக்கினார். அவரே
பிற இனத்தாருக்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றார் (மாற் 7:30).
-- இரண்டாவதாக, தொடக்க காலத் திருச்சபையில் உணவு பற்றிய சர்ச்சை
தொடர்ந்தது. யூத சமயத்திலிருந்து மனம் மாறி கிறிஸ்தவத்தைத் தழுவிய
சிலர் பழைய உணவுப் பழக்கங்களைக் கைவிடாமல் இருந்ததோடு, பிற இனக்
கிறிஸ்தவரும் யூத உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்
என வாதாடினர். எல்லா உணவுகளும் தூயனவே என கி.பி. 50ஆம் ஆண்டளவில்
எருசலேமில் நிகழ்ந்த சங்கம் முடிவுசெய்தது (காண்க: திப
10:1-11:18; 15:22-29). ஆக, எந்த உணவை உண்பது எந்த உணவைத் தவிர்ப்பது
என்பதன்று முக்கியம். மாறாக, ஒவ்வொரு மனிதரின் உள்ளத்திலும் மன
மாற்றம் நிகழ வேண்டும் என்பதே முக்கியம். இத்தகைய மன மாற்றம்
ஏற்படும்போது தீய சிந்தனையையும் தீய நடத்தையையும் விட்டுவிட்டு
அறநெறிக்கு அமைந்த வாழ்வை நடத்த மனிதர் முன்வருவார்கள். இதையே
இயேசு அழுத்தமாக அறிவித்தார்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
|
|