|
11
பிப்ரவரி 2019 |
|
பொதுக்காலம்
5ம் வாரம்
திங்கள்கிழமை - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
தூய லூர்தன்னை விழா (பிப்ரவரி 11)
=================================================================================
கடவுள் உரைத்தார்: அஃது அவ்வாறே ஆயிற்று.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 1: 1-19
தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது,
மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள்
பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக்
கொண்டிருந்தது.
அப்பொழுது கடவுள், "ஒளி தோன்றுக!" என்றார்; ஒளி தோன்றிற்று.
கடவுள் ஒளி நல்லது என்று கண்டார். கடவுள் ஒளியையும் இருளையும்
வெவ்வேறாகப் பிரித்தார். கடவுள் ஒளிக்குப் "பகல்' என்றும் இருளுக்கு
"இரவு' என்றும் பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று முதல்
நாள் முடிந்தது.
அப்பொழுது கடவுள், "நீர்த்திரளுக்கு இடையில், வானம் தோன்றுக!
அது நீரினின்று நீரைப் பிரிக்கட்டும்" என்றார். கடவுள் வானத்தை
உருவாக்கி வானத்திற்குக் கீழுள்ள நீரையும் வானத்திற்கு மேலுள்ள
நீரையும் பிரித்தார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் வானத்திற்கு
"விண்ணுலகம்' என்று பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று
இரண்டாம் நாள் முடிந்தது.
அப்பொழுது கடவுள், "விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில்
ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக!" என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
கடவுள் உலர்ந்த தரைக்கு "நிலம்' என்றும் ஒன்றுதிரண்ட
நீருக்குக் "கடல்' என்றும் பெயரிட்டார். கடவுள் அது நல்லது என்று
கண்டார்.
அப்பொழுது கடவுள், "புற்பூண்டுகளையும் விதை தரும் செடிகளையும்,
கனி தரும் பழமரங்களையும் அந்த அந்த இனத்தின்படியே நிலம்
விளைவிக்கட்டும்" என்றார். அது அவ்வாறே ஆயிற்று. புற்பூண்டுகளையும்
விதையைப் பிறப்பிக்கும் செடிகளையும் கனிதரும் மரங்களையும் அந்த
அந்த இனத்தின்படி நிலம் விளைவித்தது. கடவுள் அது நல்லது என்று
கண்டார். மாலையும் காலையும் நிறைவுற்று மூன்றாம் நாள் முடிந்தது.
அப்பொழுது கடவுள், "பகலையும் இரவையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும்
காலங்கள், நாள்கள், ஆண்டுகள் ஆகியவற்றைக் குறிப்பதற்கும்
விண்விரிவினில் ஒளிப்பிழம்புகள் தோன்றுக! அவை மண்ணுலகிற்கு ஒளி
தர விண்விரிவினில் ஒளிப்பிழம்புகளாக இருக்கட்டும்" என்றார்.
அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் இருபெரும் ஒளிப்பிழம்புகளை உருவாக்கினார்.
பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள்வதற்குச்
சிறிய ஒளிப்பிழம்பையும் மற்றும் விண்மீன்களையும் அவர் உருவாக்கினார்.
கடவுள் மண்ணுலகிற்கு ஒளி தர விண்ணுலக வானத்தில் அவற்றை அமைத்தார்;
பகலையும் இரவையும் ஆள்வதற்கும் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப்
பிரிப்பதற்கும் அவற்றை அமைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
மாலையும் காலையும் நிறைவுற்று நான்காம் நாள் முடிந்தது.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா:104: 1-2. 5-6. 10-12. 24,35c (பல்லவி: 31b)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக!
1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர்
எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர்.
2 பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர்; வான்வெளியைக் கூடாரமென
விரித்துள்ளவர். பல்லவி
5 நீவிர் பூவுலகை அதன் அடித்தளத்தின்மீது நிலைநாட்டினீர்; அது
என்றென்றும் அசைவுறாது. 6 அதனை ஆழ்கடல் ஆடையென மூடியிருந்தது;
மலைகளுக்கும் மேலாக நீர்த்திரள் நின்றது. பல்லவி
10 பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகள் சுரக்கச் செய்கின்றீர்; அவை
மலைகளிடையே பாய்ந்தோடும். 12 நீரூற்றுகளின் அருகில் வானத்துப்
பறவைகள் கூடுகட்டிக் கொள்கின்றன; அவை மரக்கிளைகளினின்று இன்னிசை
இசைக்கின்றன. பல்லவி
24 ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! நீர் அனைத்தையும்
ஞானத்தோடு செய்துள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.
35உ என் உயிரே! நீ ஆண்டவரைப் போற்றிடு! பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மத் 4: 23
அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்;
மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இயேசுவைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
6: 53-56
இயேசுவும் அவருடைய சீடர்களும் மறு கரைக்குச் சென்று கெனசரேத்துப்
பகுதியை அடைந்து படகைக் கட்டி நிறுத்தினார்கள். அவர்கள் படகை
விட்டு இறங்கிய உடனே, மக்கள் இயேசுவை இன்னார் என்று கண்டுணர்ந்து,
அச்சுற்றுப்பகுதி எங்கும் ஓடிச் சென்று, அவர் இருப்பதாகக்
கேள்விப்பட்ட இடங்களுக்கெல்லாம் நோயாளர்களைப் படுக்கையில்
கொண்டு வரத் தொடங்கினார்கள்.
மேலும் அவர் சென்ற ஊர்கள், நகர்கள், பட்டிகள் அனைத்திலும் உடல்
நலம் குன்றியோரைப் பொது இடங்களில் கிடத்தி, அவருடைய மேலுடையின்
ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினார்கள்.
அவரைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை
தொடுகை அற்புதமானதும், நலம் தரக் கூடியதும். இதனை உணர்ந்தவர்கள்
ஊருக்கு நல்லது செய்வது இயல்பானது.
இந்த தொடுகையை தவறாக உணர்ந்து கொண்டு பயன்படுத்துவோரால், பல காயங்கள்
ஏற்படுவதும் உண்டு.
நம்முடைய மனநிலையே இதனை உயர்வாகவும், உத்தமாகவும் ஆக்கிட
முடியும்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
மாற்கு 6: 53-56
மலைபோல் இருந்த மக்களின் நம்பிக்கை
நிகழ்வு
பக்கத்துப் பக்கத்து வீடுகளில்
இருந்த இரண்டு சிறுவர்கள் சந்தோசமாக ஓடியாடி விளையாடிக்
கொண்டிருந்தார்கள். அவர்களுடைய விளையாட்டினூடே ஒருவன் மற்றவனைப்
பார்த்துக் கேட்டான். "உன்னிடம் எவ்வளவு காசு இருக்கின்றது?"
உடனே இன்னொரு சிறுவன் தன்னுடைய சட்டைப் பையில் கையைவிட்டு, உள்ளே
வைத்திருந்த சில்லறைக் காசுகளை எடுத்து ஒன்று, இரண்டு, மூன்று
என எண்ணத் தொடங்கி "பத்து ரூபாய்" என்றான். அவன் சரியென்று
சொல்லிவிட்டு அமைதியானான்.
சிறுதுநேரம் கழித்து இவன் அவனிடத்தில், "உன்னிடம் எவ்வளவு
காசு இருக்கின்றது?" என்று கேட்டான். உடனே அவன் தன்னுடைய சட்டைப்
பையில் கையை விட்டு, உள்ளே வைத்திருந்த சில்லறைகளை எடுத்து, ஒன்று,
இரண்டு, மூன்று என எண்ணத் தொடங்கி "இருபது ரூபாய்" என்றான்.
அதற்கு இவன், "உன்னிடத்தில் பத்துரூபாய் இருக்கின்றது... அப்படியிருக்கும்போது
ஏன் இருபது ரூபாய் என்று பொய் சொல்கிறாய்" என்றான். "அதுவா...
இன்று அதிகாலையில் என்னுடைய தந்தை வேலைக்குக் கிளம்புப்போது
'வேலைக்குப் போய்விட்டு இரவு வீட்டுக்கு வரும்போது உனக்குப் பத்து
ரூபாய் தருகிறேன்' என்று சொல்லிவிட்டுச் சென்றார். அவர்
சொன்னால் நிச்சயம் தருவார். அதனால்தான் என்னிடத்தில் உள்ள பத்து
ரூபாயையும் அவர் தருவதாகச் சொன்ன பத்து ரூபாயையும் சேர்த்து இருபது
என்று சொன்னேன்" என்றான் அவன்.
தன்னுடைய தந்தை தான் சொன்னது போன்று தருவார் என்ற நம்பிக்கையுடன்
பேசிய அந்தச் சிறுவனின் நம்பிக்கை நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது.
அடிப்படையில் நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை
கிடைக்கும் என்னும் உறுதிதானே.
மக்களின் அசாதாரண நம்பிக்கை
நற்செய்தி வாசகத்தில், இயேசுவை
இன்னாரெனக் கண்டுகொண்ட மக்கள் அவரிடம் ஊர்கள், நகர்கள், பட்டிகளிலிருந்து
நோயாளிகளை படுக்கையில் வைத்துத் தூக்கிக்கொண்டு வந்து, அவர்கள்
இயேசுவினுடைய மேலுடையின் ஓரத்தையாவது தொடச் செய்கின்றார்கள்;
தொட்ட அவர்கள் குணமடைகிறார்கள்.
இம்மக்கள் இயேசுவைக் குறித்து ஓரளவு அறிந்திருந்தார்கள். அவர்
பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய பெண்மணியை, அதுவும்
அவருடைய மேலுடையின் ஓரத்தைத் தொட்டால் போதும் குணமடைவேன் என்று
நம்பித் தொட்டுக் குணமடைந்திருந்ததையும் (மாற் 5: 35-44) இன்னும்
பல அருமடையாளங்களையும் குறித்து நன்றாக அறிந்துவைத்திருந்தார்கள்.
அதனால்தான் அவர்கள் தங்களுடைய பகுதிகளில் இருந்த நோயாளிகளை, படுக்கையில்
வைத்து தூக்கிக்கொண்டு வந்து, அவர்கள் இயேசுவைத் தொடுவதற்கு அனுமதி
பெற்று, தொட்டுக் குணமடையச் செய்கிறார்கள். இயேசுவினுடைய ஆடையின்
ஓரத்தையாவது தொட்டால் போதும் என்ற மலைபோல் உயர்ந்திருந்த அவர்களுடைய
நம்பிக்கை நம்மை ஆச்சரியப்பட வைப்பதாக இருக்கின்றது. இது இயேசுவின்
சொந்த ஊர் மக்கள், அவர்களித்தில் கொண்டிருந்த நம்பிக்கைக்கு
(!) முற்றிலும் மாறுபட்டதாக இருக்கின்றது
இயேசுவின் சொந்த ஊர் மக்களோ 'இவர் தச்சர்தானே, இவர் தாய் மரியதானே'
என்று அவரை ஏற்றுக்கொள்ளவும் அவர்மீது நம்பிக்கை கொள்ளவும் தயங்கினார்கள்.
அதனால்தான் இயேசு அங்கு பல வல்லசெயல்களைச் செய்யவில்லை. ஆனால்,
இங்கு மக்கள் இயேசுவின்மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.
அதனால் இயேசு அம்மக்கள் மத்தியில் பல வல்ல செயல்களைச்
செய்தார்.
உலகை வெல்வது நமது நம்பிக்கையே
தூய யோவான் தன்னுடைய முதல் திருமுகத்தில் கூறுவார், "உலகை வெல்வது
நம்பிக்கையே." இயேசுவின் சொந்த ஊர் மக்கள் அவரிடமிருந்து நலன்களைப்
பெற்றுக்கொள்ளாததற்கும் நற்செய்தியில் வருகின்ற மக்கள் இயேசுவிடமிருந்து
பல நலன்களைப் பெற்றுக்கொண்டதற்கும் ஒரே காரணம் நம்பிக்கை மட்டுமே.
நம்பிக்கையினால்தான் மக்கள் இயேசுவிடத்தில் நலன்களைப் பெற்றார்கள்.
அது இல்லாதவர்கள் இயேசுவிடமிருந்து நலன்களைப் பெற முடியாமல்
போனார்கள். ஆகையால், நம்பிக்கைதான் எல்லாம். அந்த நம்பிக்கை ஒருவரிடத்தில்
இருக்கின்றபோது யோவான் சொல்வது போன்று உலகையும் வெல்ல
முடியும்.
சிந்தனை
'ஒருவரிடம் இருக்கும் சிறு அளவு நம்பிக்கை அவரது ஆன்மாவை விண்ணகத்திற்கு
இட்டுச் செல்லும். அதேநேரத்தில் அவரிடம் இருக்கும் பெரிய அளவு
நம்பிக்கை விண்ணகத்தையே அவருடைய ஆன்மாவிற்கு இட்டுக்கொண்டு வரும்'
என்பார் பெர்னார்ட் ராம் என்ற எழுத்தாளர். இவ்வரிகள் ஒருவரிடம்
நம்பிக்கை என்ற ஒன்று இருக்கும்போது அவரால் எதையும் செய்ய
முடியும் என்ற உண்மையை நமக்கு எடுத்துச் சொல்கிறது.
ஆகையால், எல்லா நன்மைகளுக்கும் ஊற்றாகிய நம்பிக்கையை இறைவனிடம்
கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
தொடக்க நூல் 1: 1-19
தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும் மண்ணுலகையும்
படைத்தபொழுது...
நிகழ்வு
ஓரூரில் ஜோ, சார்லஸ் என்ற நண்பர்கள் இருவர் இருந்தார்.
ஜோவிற்கு கடவுள் நம்பிக்கை அதிகமாக உண்டு. கிறிஸ்தவனாகிய அவன்
விவிலியத்தில் உள்ளவற்றை அப்படியே நம்பினான். சார்லஸோ அப்படியில்லை.
அவனுக்கு கடவுள் நம்பிக்கையே கிடையாது. அதனால் அவன் புனித நூல்கள்
எதையும் நம்பாதிருந்தான்.
ஒருநாள் இருவருக்கும் தொடக்க நூலில் வரும் 'தொடக்கத்தில் கடவுள்
விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்தபொழுது, மண்ணுலகு உருவற்று
வெறுமையாக இருந்தது' என்ற வார்த்தையை மையமாக வைத்து விவாதம்
நடந்தது. கடவுள் நம்பிக்கையுடைய ஜோவோ, "விவிலியத்தில் வருக்கின்ற
வார்த்தைகள் உண்மையிலும் உண்மையானவை... எனவே, கடவுள்தான் இந்த
உலகைப் படைத்தார் என்று உறுதியாகச் சொன்னான். கடவுள் நம்பிக்கை
இல்லாத சார்லஸோ. "அப்படியிருக்க வாய்ப்பில்லை... ஏனென்றால், பரிணாம
வளர்சிக் கோட்பாட்டின்படி இந்த உலகம் ஒருசெல் உயிரி அமீபா, ஊர்வன,
குருங்கு, மனிதன் என படிப்படியாகத் தோன்றியது" என்றான்.
சார்லஸ் சொன்னதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த ஜோ அவனிடத்தில்,
நீ சொல்வது போன்று இந்த உலகில் உள்ள ஒவ்வொன்றும் பரிணாம வளர்ச்சிக்
கோட்பாட்டின் அடிப்படையில் படிப்படியாகத் தோன்றியது என்றால்,
அவையெல்லாம் தோன்றும்போது நீ அங்கு இருந்தாயா அல்லது மற்றவர்
சொன்னதைக் கேட்டுவிட்டு என்னிடத்தில் அப்படி சொல்கிறாயா?" என்றான்.
அதற்கு சார்லஸ், "மற்றவர் என்னிடத்தில் சொன்னவற்றை
வைத்துத்தான் நான் உனக்குச் சொல்கிறேன்" என்றான். உடனே ஜோ அவனிடம்,
"கடவுளைப் பொருத்தமட்டில் அப்படியில்லை... அவர், நீ சொன்ன உயிரினங்கள்
அனைத்தும் தோன்றும்போது கண்ணால் கண்ட சாட்சி., அதைவிடவும் அவரே
இந்த உலகத்தை உண்டாக்கியவர். ஆகவே, யாரோ ஒருவர் சொன்னதை நம்புவதை
விடவும் கண்ணால் கண்ட சாட்சியாகிய கடவுளை நம்புவதுமேல்... இந்த
உலகம் கடவுளாலேயே படைக்கப்பட்டது" என்று உறுதியாகச் சொன்னான்.
மேலே உள்ள நிகழ்வு, பரிணாம வளர்ச்சியினால் அல்ல, கடவுளாலேயே இந்த
உலகம் தோன்றியது என்ற உண்மையை மிக ஆணித்தரமாக எடுத்துகூறுகின்றது.
வெறுமையாய் இருந்த உலகத்திற்கு தனது வல்லமையான வார்த்தையால் உயிர்கொடுத்த
இறைவன்
தொடக்க நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், கடவுள்
இந்த உலகைப் படைத்ததைக் குறித்து எடுத்துச் சொல்கின்றது. ஒருசில
விவிலிய அறிஞர்கள், "யூத மக்களைச் சுற்றிவாழ்ந்த பிற இனத்து
மக்கள், இந்த உலகமும் இதிலுள்ள யாவும் எப்படி உண்டாயின, யார்
இதைப் படைத்தார் என்பது குறித்தான செய்திகளை வைத்திருந்தார்கள்.
யூதர்களிடம் அது இல்லாமல் இருந்தது. இத்தகைய சூழலில், இந்த
உலகம் எப்படிப் படைக்கப்பட்டது என்பது பற்றிய வரலாறு தங்களுக்கும்
வேண்டும் என்று யூதர்கள் தொடக்க நூலில் வரும் முதல் பதினோரு அதிகாரங்களை
கட்டமைத்தார்கள்" என்று சொல்வார்கள். (Warren W. Wiersbe's The
Wiersbe Bible Commentary. p.14-15). இது ஒரு கூற்றாக இருந்தாலும்
விவிலியம் ஆண்டவருடைய வார்த்தைகளைத் தாங்கிய ஒரு பேழை என்பதாலும்
அதனை ஞானக்கண்களால் பார்க்கவேண்டும் என்பதாலும் வெறுமையாக இருந்த
இந்த உலகத்திற்கு ஆண்டவர் தன்னுடைய வல்லமைமிக்க வார்த்தையால்
உயிர் தந்தார் என உறுதியாக நம்பலாம்.
ஆண்டவராகிய கடவுள், ஒளி தோன்றுக, வானம் தோன்றுக, தரை தோன்றுக
என்று சொன்னதும் எல்லாமே தோன்றிற்று. இவற்றை எல்லாம்
வாசிக்கின்றபோது, சொன்னதும் அது நிறைவேறுகிற வல்லமை ஆண்டவரைத்
தவிர வேறு எவருக்கும் இல்லை என்பதை எடுத்துக் கூறுகின்றது.
தான் படைத்த அனைத்தும் நல்லதெனக் கண்ட இறைவன்
யாரவது ஒருவர் வீட்டை அழகுறக் கட்டும்போது, 'இவர் எல்லாவற்றையும்
பார்த்துப் பார்த்துச் செய்கின்றார்' என்று சொல்வோம். ஆண்டவராகிய
கடவுளும் தான் படைத்த அனைத்தும் நல்லதாகவே இருக்கவேண்டும் என்று
படைத்து, படைத்த பின் நல்லதெனக் காண்கிறார். இதன்மூலம் கடவுளுடைய
படைப்பில் எல்லாமே நல்லதாகத்தான் இருந்தது... இன்றைக்கு இந்த
உலகத்தில் காணப்படும் குறைகள் யாவும் மனிதர்கள் உண்டாக்கியவை
என்ற செய்தியை உணர்ந்துகொள்ளலாம்.
சிந்தனை
கடவுள் நமக்கென்று ஓர் அற்புதமான, நல்ல உலகத்தைப் படைத்து, நம்முடைய
கையில் தந்திருக்கின்றார். இதனை நாம் நல்லமுறையில் வைத்திருப்பதும்
இதில் நல்லதொரு வாழ்க்கை வாழ்வதும் நம்முடைய கையில்தான் இருக்கின்றது.
எனவே, கடவுள் கொடுத்த இந்த நல்ல உலகை நல்லமுறையில் பரமாரித்து,
இதில் நாம் நல்லபடி வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்
பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
|
|