|
30 ஏப்ரல் 2019 |
|
பாஸ்கா காலம் இரண்டாம் வாரம் - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 32-37
அந்நாள்களில் நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே
உயிருமாய் இருந்தனர். அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக்
கருதவில்லை; எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது.
திருத்தூதர் அனைவரும் ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் என
மிகுந்த வல்லமையோடு சான்று பகர்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும்
மக்களின் நல்லெண்ணத்தை மிகுதியாகப் பெற்றிருந்தனர்.
தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை. நிலபுலங்களை
அல்லது வீடுகளை உடையோர் அவற்றை விற்று அந்தத் தொகையைக் கொண்டுவந்து
திருத்தூதருடைய காலடியில் வைப்பர்; அது அவரவர் தேவைக்குத் தக்கவாறு
பகிர்ந்து கொடுக்கப்படும்.
சைப்பிரசு தீவைச் சேர்ந்த யோசேப்பு எனும் லேவியர் ஒருவர் இருந்தார்.
இவருக்குத் திருத்தூதர்கள்,
'ஊக்குவிக்கும் பண்பு கொண்டவர்' என்று
பொருள்படும் பர்னபா என்னும் பெயரைக் கொடுத்திருந்தார்கள். அவர்
தமது நிலத்தை விற்று அந்தப் பணத்தைக் கொண்டுவந்து திருத்தூதர்களது
காலடியில் வைத்தார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
93: 1ab. 1c-2. 5 (பல்லவி: 1a)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் ஆட்சிசெய்கின்றார்; மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்.
அல்லது: அல்லேலூயா.
1ab ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்;
ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார். பல்லவி
1c பூவுலகை அவர் நிலைப்படுத்தினார்; அது அசைவுறாது. 2 உமது அரியணை
தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றுள்ளது; நீர் தொன்றுதொட்டே
நிலைத்துள்ளீர். பல்லவி
5 உம்முடைய ஒழுங்குமுறைகள் மிகவும் உறுதியானவை; ஆண்டவரே! என்றென்றும்
தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 3: 15
அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகனில் நம்பிக்கை கொள்ளும் அனைவரும்
நிலைவாழ்வு பெறும்பொருட்டு அவர் உயர்த்தப்பட வேண்டும். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள
மானிட மகனைத் தவிர, வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து
வாசகம் 3: 7-15
அக்காலத்தில் இயேசு நிக்கதேமிடம் கூறியது: "நீங்கள் மறுபடியும்
பிறக்க வேண்டும் என்று நான் உமக்குக் கூறியது பற்றி நீர் வியப்படைய
வேண்டாம். காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக்
கேட்கிறது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்குச்
செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும்
இது பொருந்தும்"என்றார்.
நிக்கதேம் அவரைப் பார்த்து, "இது எப்படி நிகழ முடியும்?"என்று
கேட்டார்.
அதற்கு இயேசு கூறியது: "நீர் இஸ்ரயேல் மக்களிடையே போதகராய் இருந்தும்
உமக்கு இது தெரியவில்லையே! எங்களுக்குத் தெரிந்ததைப்பற்றியே
பேசுகிறோம்; நாங்கள் கண்டதைப்பற்றியே சான்று பகர்கிறோம். எனினும்
எங்கள் சான்றை நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை என உறுதியாக உமக்குச்
சொல்கிறேன். மண்ணுலகு சார்ந்தவை பற்றி நான் உங்களுக்குச் சொன்னதை
நீங்கள் நம்பவில்லை என்றால் விண்ணுலகு சார்ந்தவை பற்றிச்
சொல்லும்போது எப்படி நம்பப்போகிறீர்கள்?
விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு
எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை. பாலை நிலத்தில்
மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல மானிடமகனும் உயர்த்தப்பட
வேண்டும்.''
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை:
ஆதிக்கிறிஸ்தவ மக்களின் வாழ்க்கை தூய ஆவியினால் அர்ச்சிக்கப்பட்டது.
அவர்களிடையே ஓற்றுமை இருந்தது.
அவர்களிடையே பகிர்வு இருந்தது.
அவர்கள் பிறரை மதித்தனர்.
தெய்வ பற்றுருதியோடு அவர்கள் வாழ்ந்து வந்தனர்.
திருதூதர்களுக்கு பணிந்து இருந்தனர்.
இன்றைக்கு இத்தகைய வாழ்வுமுறை நம்மிடையே இருந்தால் நாமும் ஆவியினால்
அர்ச்சிக்கப்பட்டவர்கள்.
அர்ச்சிக்கப்பட்டவர்களாய் வாழ்வை தொடர அருள் கேட்போம்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
திருத்தூதர் பணிகள் 4: 32-37
அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை
நிகழ்வு
அமெரிக்காவில் தோன்றிய மிகப்பெரிய கவிஞரும் நாவலாசிரியருமான
ஜேம்ஸ் அகீ (James Agee 1909 -1954) ஒருசமயம் அப்பலாச்சியா என்ற
இடத்திற்குச் சென்றிருந்தபோது, அங்கொரு மூதாட்டியைச் சந்தித்தார்.
அவர் பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாகவும் சாப்பாட்டிற்கே மிகவும்
திண்டாடுவதும்போல் இருந்தார்.
உடனே ஜேம்ஸ் அகீ அவரிடம், "அம்மா! உங்களிடம் ஆயிரம் டாலர்
குடுத்தால், அதை வைத்து நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று
கேட்டார். அதற்கு அந்த மூதாட்டி சிறிதும் தாமதியாமல், "ஒருவேளை
நீங்கள் எனக்கு ஆயிரம் டாலர் கொடுத்தால், அதைக்கொண்டு நான் என்னிலும்
வறியவர்களுக்கு சிறிது சிறிதுப் பிரித்துக்கொடுத்துவிட்டு, அதுபோக
மீதமிருப்பதை எனக்கு வைத்துக்கொள்வேன்" என்றார். அந்த
மூதாட்டியிட்மிருந்து இப்படியொரு பதிலை எதிர்பார்த்திராத
ஜேம்ஸ் அகீ, அவருக்கு அவர் கொடுப்பதாகச் சொன்ன ஆயிரம் டாலரைக்
கொடுத்துவிட்டுத் தன்னுடைய இல்லம் திருப்பினார்.
தான் வறிய நிலையில் இருந்தபோதும், தனக்குக் கிடைக்க இருந்த பணத்தைத்
தன்னிலும் வறிய நிலையில் இருப்பவருக்குக் கொடுப்பதாகச் சொன்ன,
பின்னர் அதுபோலவே செய்த அந்த மூதாட்டியின் செயல் உண்மையில்
பாராட்டக்கூடியதாக இருக்கின்றது. கடவுள் நம் ஒவ்வொருவருக்கும்
கொடுத்திருக்கும் கொடைகளும் திறமைகளும் வாய்ப்பு வசதிகளும் நமக்கானவை
மட்டுமல்ல, அவை பிறருக்கானவை என்னும் உண்மையை எடுத்துச்
சொல்லும் இந்நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய முதல் வாசகமும்
இதையொத்த சிந்தனையை நமக்கு வழங்குகிறது. நாம் அது குறித்து இப்பொழுது
சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்த தொடக்க காலக்கிறிஸ்தவர்கள்
திருத்தூதர் பணிகள் நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம்,
தொடக்க காலக்கிறிஸ்தவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தார்கள்
என்பதை எடுத்துக் கூறுவதாக இருக்கின்றது. அவர்களைக் குறித்து
வாசிக்கின்றபோது, அவர்கள் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தார்கள்
என்று வாசிக்கின்றோம். சீடர்களில் பலதரப்பட்ட மனிதர்கள் இருந்தார்கள்.
அப்படியிருந்தபோதும் அவர்கள் தங்களுக்குள் பாகுபாடு பார்க்காமல்,
ஒரே உள்ளமும் உயிருமாய் இருந்தார்கள் என்பது வியப்பாக இருக்கின்றது.
இத்தகைய நிலை தூய ஆவியாரால் ஏற்பட்டது என்று சொன்னால், அது
மிகையாகாது. ஏனென்றால் தூய ஆவியார்தான் எல்லாரையும் இணைக்கும்
இணைப்பாளராக செயல்பட்டார்.
தம்முடையதைத் தம்முடையதாகக் கருதாக தொடக்ககாலக் கிறிஸ்தவர்கள்
தொடக்ககாலக் கிறிஸ்தவர்களிடமிருந்த இரண்டாவது முக்கியமான பண்பு,
அவர்கள் தங்களிடம் இருந்ததைத் தங்களுடையதாகக் கருதாமல் பொதுநலத்தோடு
பகிர்ந்துகொடுத்ததுதான். இன்றைக்கு அப்படிப்பட்ட எண்ணம் மனிதர்களிடம்
இல்லாததால்தான் பணத்தையும் பொருளையும் ஏன் கிடைக்கின்ற எல்லாவற்றையும்
சேர்த்து வைக்கிறார்கள். ஒருவேளை மனிதர்கள் தங்களிடம் உள்ளவை
யாரும் பிறருக்கானவை என்றொரு நிலையிருந்தால், பதுக்கி வைக்கும்
எண்ணம் ஏற்பட்டிருக்காது; பற்றாக்குறையும் ஏற்பட்டிருக்காது.
தன்னிடம் உள்ளது தனக்கானது மட்டும் கிடையாது, அது பிறருக்கானது
என்ற எண்ணத்தோடு வாழ்ந்தவர்க்குக் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு
யோசேப்பு அல்லது பர்னபா. இவர் தன்னுடைய நிலத்தை விற்று, அதிலிருந்து
கிடைத்த பணத்தைத் திருத்தூதர்களின் காலடியில் வைக்க, அவர்கள்
மக்களின் தேவைக்கு ஏற்றவாறு பிரித்துக் கொடுக்கின்றார்கள். பர்னபாவுக்கு
என்னவோர் உயர்வான எண்ணம் இருந்திருந்தால், அவர் தன்னிடம் இருந்த
நிலத்தைத் தேவையில் உள்ளவர்களுக்காகக் கொடுத்திருப்பார். இத்தகையதோர்
சிந்தனையை இயேசுவின் வழியில் நடக்கின்ற ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்வது
தேவையான ஒன்றாக இருக்கின்றது.
உயிர்த்த இயேசுவைப் பற்றி வல்லமையோடு சான்று பகர்ந்த தொடக்ககாலக்
கிறிஸ்தவர்கள்
தொடக்ககாலக் கிறிஸ்தவர்களிடம் இருந்த மூன்றாவது மிக முக்கியமான
பண்பு, அவர்கள் உயிர்த்த ஆண்டவரைப் பற்றி வல்லமையோடு சான்று
பகர்ந்ததாகும். தொடக்ககாலக் கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கையே மிகச்
சிறந்த முன்னுதாரணமாக இருந்தது. அதனால் அவர்களைக் பற்றிய நல்ல
எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டது. இதனால் ஏராளமான மக்களும்
திருமறையில் சேர்ந்து, உயிர்த்த இயேசுவைப் பற்றி, வல்லமையோடு
மக்களுக்குச் சான்று பகர்ந்து வந்தார்கள்.
ஒருவருடைய வாழ்க்கைதான் மிகச் சிறப்பான பாடம். தொடக்க காலக்கிறிஸ்தவர்கள்
எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழ்ந்தைப் பார்த்துவிட்டுத்தான் மற்றவர்களும்
திருமறையில் சேர்ந்தார்கள். இந்தத் தொடக்ககாலக் கிறிஸ்தவர்களின்
வாழ்க்கையைப் போன்று நம்முடைய வாழ்க்கையும் இருக்க இயேசுவின்
வழியில் நடப்போம்.
சிந்தனை
'பொதுநன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும்
வெளிப்படுகின்றது' (1கொரி 12:7) என்பார் பவுல். ஆகவே, நாம்
பெற்ற கொடைகளைப் பொதுநன்மைக்காகப் பயன்படுத்தி, எல்லாரும்
இன்பம் காணச் செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
யோவான் 3: 7-15
"அவரிடம் நம்பிக்கைகொள்ளும் அனைவரும்
நிலைவாழ்வு பெறுவர்"
நிகழ்வு
ஒரு கிராமத்தில் ஆரோக்கியசாமி என்றொருவன் வாழ்ந்து வந்தான்.
அவன் சரியான சந்தேகப் பேர்வழி. எதைச் செய்தாலும் எதைக்
கண்டாலும் சந்தேகக் கண்ணோடே பார்ப்பான்; எளிதில் யாரையும்
நம்பமாட்டான்; குடும்பத்தில் இருப்பவர்களிடமும் அப்படித்தான்
நடந்துகொள்வான். ஆனால், அவன் கடவுளிடம் அதிகமான ஈடுபாடு
கொண்டிருந்தான். ஒருநாள் அவன் இல்லறவாழ்வைத் துறந்து கடவுளின்
அருளைப் பெற துறவறவாழ்வை மேற்கொண்டான். அதனால் காட்டில் கடவுளை
நினைத்து கடுந்தவம் புரிந்தான். சில மாதங்கள் கழிந்தன. கடவுள்
வரவில்லை. ஆண்டுகள் பல கழிந்தன. அப்போதும் கடவுள் வரவில்லை.
அனைத்திலும் பக்குவமடைந்த அவனுக்குச் சந்தேகப் புத்தி மட்டும்
போகவில்லை. அவனது தவத்தை மெச்சிய கடவுள், அவனது
சந்தேகப்புத்தியை நினைத்து நினைத்து வேதனையடைந்தார். அதனால்
அவர் அவனிடம் விளையாட நினைத்தார்.
முதலில் ஒரு பக்கிரியாக அவன்முன் தோன்றினார். "மகனே
நெடுநாட்களாகத் தவம்புரிகிறாயே... கடவுளைக் காணவா...?"
என்றார். 'இவர் நம்மிடமிருந்து எதுவும் பறித்துக்கொண்டு
போகப்போகிறாரோ...?' என்ற சந்தேகத்துடன் அவரைப் பார்த்தான்
ஆரோக்கியசாமி. பின்னர் பக்கிரி வடிவில் இருந்த கடவுள்
அவனருகில் அமர்ந்து, "சிறிதுகாலம் நானும் உன்னுடன் தங்கி
கடவுளைத் தரிசிக்கப்போகிறேன்" என்றார். அடுத்தநொடியிலிருந்து
அவன் கடவுளை விடுத்துப் பக்கிரியைக் கவனிக்கத் தொடங்கினான்.
சில நாட்களுக்குப் பிறகு பக்கிரி வேடத்திலிருந்த கடவுள்
அவனிடம் புன்னகைத்தப்படி விடைபெற்றார். இவனுக்கோ பரம சந்தோஷம்.
'இனி பரமனை நினைக்கலாம்' என்று மீண்டும் தியானத்தில்
ஆழ்ந்தான்.
இம்முறை கடவுள் கூன் விழுந்த வயோதிகனாய், பார்க்கவே சகிக்காத
தோற்றத்தில் வந்தார். வந்தவர், "தம்பி! நீ கடவுளைக்
காணத்துடிப்பதுபோல் நானும் துடிக்கிறேன்... அவர் வரும்வரை
காத்திருந்துவிட்டு மீண்டும் சென்றுவிடுகிறேன்" என்றார். உடனே
ஆரோக்கியசாமி, 'அது எப்படி? இங்கே கடவுளுக்காக நான்
காத்திருக்கிறேன்... கடவுள் வந்ததும் இவனின் நிலையைக்கண்டு
இவனுக்கு வரம் கொடுத்துவிட்டால் நான் என்ன செய்வது?' என்று
கடவுளையே சந்தேகப்பட்டான். மறுபுறம் 'கடவுளுக்கு நம்மைக்
கவனிக்க நேரம் ஏது? அவர் வரமாட்டார்' என்று சந்தேகத்தோடு
எதிர்பார்த்தான். அவனைப் பார்த்துப் புன்னகைத்த கூன் விழுந்த
தோற்றத்தில் இருந்த கடவுள் அவனிடமிருந்து விடைபெற்றார்.
இதற்குப் பின்பு ஆரோக்கியசாமிக்கு வயதாகத் தொடங்கியது. அப்போது
அவன், 'இவ்வளவு நாள் வராத கடவுள் இனிமேல் வரப்போகிறாரா?' என்று
நினைக்கத் தொடங்கினான். ஒருநாள் அவனுக்குத் திடிரென்று இறப்பு
வந்தது. அவன் இறந்தபிறகு அவனுடைய உடலை வானதூதர்கள்
விண்ணகத்திற்கு எடுத்துச் சென்றார்கள். விண்ணகத்தில் அவன்
கடவுளைக் கண்டதும், "நீதான் எம்மைக் காக்கும் கடவுளா? எனக்கு
உன்னைக் கண்டால் சந்தேகமாக இருக்கிறதே!" என்றான். கடவுள்
அவன்முன் பக்கிரியாகவும் கூன் விழுந்த வயோதிகனாகவும் தோன்றி
நடந்ததை விளக்கினார். அப்பொழுது ஆரோக்கியசாமி அவரிடம், "என்னை
மன்னித்துவிடுங்கள் சாமி... தாங்கள் யார் என்று முன்னமே
கூறியிருக்கலாமே" என்றான். அதற்குக் கடவுள் அவனிடம், "கொஞ்சம்
நிதானித்திருந்தால் நீ என்னைக் கண்டிருக்கலாம். நீதான்
சந்தேகம் என்னும் பேயைப் பக்கத்திலேயே வைத்திருந்தாயே... நான்
வருவேனா, மாட்டேனா என்ற சந்தேகமே உன் மனம் முழுக்க
வியாபித்திருந்தது. உனக்கு முன்னால் நான் தோன்றியும் என்னை
புரிந்துகொள்ளாத நீ என்ன பக்தன்!" என்றார். அப்பொழுதான்
ஆரோக்கியசாமி தன்னுடைய தவற்றை உணர்ந்து வருத்தத் தொடங்கினான்.
இந்நிகழ்வில் வரும் ஆரோக்கியசாமியைப் போன்றுதான் பலரும்
கடவுளிடம் நம்பிக்கை இல்லாமல், அவர் தருகின்ற ஆசியை பெறாமல்
போகின்றார்கள். இத்தகைய பின்னணியில், இன்றைய நற்செய்தி வாசகம்,
கடவுளின் நம்பிக்கை கொண்டு வாழ்வதால் ஒருவர் பெறுகின்ற ஆசியைக்
குறித்து எடுத்துச் சொல்லுகின்றது, நாம் அதைக் குறித்து
இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
நம்பிக்கையும் நிலைவாழ்வும்
நற்செய்தியில் இயேசுவுக்கும் நிக்கதேமுக்கும் இடையே நடந்த
உரையாடலின்போது இயேசு உதிர்த்த பொன்மொழிதான், "(தன்னிடம்)
நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்" என்பதாகும்.
இயேசு இப்பொன்மொழியை உதிர்ப்பதற்கு முன்னதாக, அவர், இஸ்ரயேல்
மக்கள் பாலைநிலத்தில் பாம்பால் கடிபட்டதையும் வெண்கலப்
பாம்பைக் கண்டவர்கள் உயிர்பெற்றதைக் குறித்துப் பேசுவார்.
இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில் பாம்பால் கடிபட்டதற்கு மிக
முக்கியமான காரணம், அவர்கள் கடவுளிடம் நம்பிக்கை கொள்ளாமல்
அவருக்கு எதிராகக் கலகம் செய்ததுதான் (எண் 21: 4-9). ஆனால்,
அவர்கள் வெண்கலப் பாம்பைக் கண்ட பிறகு உயிர்பெற்றார்கள். இதை
மேற்கோள் காட்டிப் பேசும் இயேசு, யாராரெல்லாம் (சிலுவையில்
உயர்த்தப்பட இருக்கும்) தன்னை நம்பிக்கையோடு
உற்றுநோக்குகிறார்களோ அல்லது யாராரெல்லாம் தன்மீது நம்பிக்கை
கொள்கிறார்களோ அவர்கள் நிலைவாழ்வு பெறுவர் என்று கூறுகின்றார்.
இவ்வாறு நிலைவாழ்விற்கும் தன்மீது நம்பிக்கை கொண்டு
வாழ்வதற்கும் நெருங்கிய தொடர்பிருக்கின்றது என்று இயேசு
எடுத்துக் கூறுகின்றார்.
நாம் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டு அவர் தரும் நிலைவாழ்வைப்
பெறத் தயாராக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப்
பார்க்கவேண்டும்.
சிந்தனை
'அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும்
அவர் கடவுளின் பிள்ளைகளாகும் உரிமையை அளித்தார்' (யோவா 1:12)
என்பார் யோவான் நற்செய்தியாளர். ஆகவே, நமக்கு நிலைவாழ்வையும்
எல்லா நலன்களையும் தரும் இயேசுவிடம் நம்பிக்கை கொள்வோம்.
அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
|
|