|
29 ஏப்ரல் 2019 |
|
பாஸ்கா காலம் இரண்டாம் வாரம் - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்களாய்க் கடவுளின்
வார்த்தைகளைத் துணிவுடன் எடுத்துக் கூறினர்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 23-31
அந்நாள்களில் விடுதலை பெற்ற சீடர்கள், தங்களைச் சேர்ந்தவர்களிடம்
வந்து, தலைமைக் குருக்களும் மூப்பர்களும் தங்களுக்குக் கூறிய
யாவற்றையும் அறிவித்தார்கள்.
இவற்றைக் கேட்ட யாவரும் ஒரே மனத்துடன் தங்கள் குரலைக் கடவுள்பால்
எழுப்பி, பின்வருமாறு மன்றாடினர்: "ஆண்டவரே, விண்ணுலகையும்
மண்ணுலகையும் கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்தவர்
நீரே'.
எங்கள் தந்தையும் உம் ஊழியருமாகிய தாவீது வாயிலாகத் தூய ஆவி மூலம்
'வேற்றினத்தார் சீறி எழுவதேன்? மக்களினங்கள் வீணாகச் சூழ்ச்சி
செய்வதேன்? பூவுலகின் அரசர்களும் தலைவர்களும் ஆண்டவருக்கும்
அவர்தம் மெசியாவுக்கும் எதிராக அணிவகுத்து நின்றனர்' என்று உரைத்தீர்.
அதன்படியே இந்நகரில் உம்மால் அருள்பொழிவு பெற்ற உம் தூய ஊழியராகிய
இயேசுவுக்கு எதிராக ஏரோதும் பொந்தியு பிலாத்தும் பிற இனத்தவரோடும்
இஸ்ரயேல் மக்களோடும் ஒன்றுதிரண்டனர். உமது கைவன்மையும் உமது
திட்டமும் முன்குறித்த அனைத்தையும் அவர்கள் செய்து முடித்தனர்.
இப்போது கூட ஆண்டவரே, அவர்கள் அச்சுறுத்துவதைப் பாரும். உம் அடியார்
முழுத் துணிவுடன் உமது வார்த்தைகளை எடுத்துக் கூற அருள்
தாரும். உமது தூய ஊழியர் இயேசுவின் பெயரால் உமது கையை நீட்டி
நோயுற்றோருக்கு நலமளியும்; அடையாளங்களும் அருஞ்செயல்களும் நடைபெறச்
செய்யும்." இவ்வாறு மன்றாடியவுடன் அவர்கள் கூடியிருந்த இடம்
அதிர்ந்தது. அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்களாய்க்
கடவுளின் வார்த்தைகளைத் துணிவுடன் எடுத்துக் கூறினர்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா: 2: 1-3. 4-6. 7-9 (பல்லவி: 12c)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, உம்மிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும்
பேறுபெற்றோர்.
அல்லது: அல்லேலூயா.
1 வேற்றினத்தார் சீறி எழுவதேன்? மக்களினங்கள் வீணாகச் சூழ்ச்சி
செய்வதேன்? 2 ஆண்டவர்க்கும் அவர்தம் அருள்பொழிவு பெற்றவர்க்கும்
எதிராகப் பூவுலகின் அரசர்கள் அணிவகுத்து நிற்கின்றார்கள்; ஆள்வோர்
ஒன்றுகூடிச் சதிசெய்கின்றார்கள்; 3 `அவர்கள் பூட்டிய தளைகளைத்
தகர்ப்போம்; அவர்கள் வைத்த கண்ணிகளை நம்மிடமிருந்து அறுத்தெறிவோம்'
என்கின்றார்கள். பல்லவி
4 விண்ணுலகில் வீற்றிருப்பவர் எள்ளி நகைக்கின்றார்; என் தலைவர்
அவர்களைப் பார்த்து ஏளனம் செய்கின்றார். 5 அவர் சினமுற்று அவர்களை
மிரட்டுகின்றார்; கடுஞ்சினத்தால் அவர்களைக் கலங்கடிக்கின்றார்;
6 என் திருமலையாகிய சீயோனில் நானே என் அரசரைத் திருநிலைப்படுத்தினேன்.
பல்லவி
7 ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கின்றேன்: நீர் என்
மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன். 8 நீர் விரும்புவதை
என்னிடம் கேளும்; பிற நாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்;
பூவுலகை அதன் கடையெல்லைவரை உமக்கு உடைமையாக்குவேன். 9 இருப்புக்
கோலால் நீர் அவர்களைத் தாக்குவீர்; குயவன் கலத்தைப்போல அவர்களை
நொறுக்குவீர்'. பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
கொலோ 3: 1
அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் கிறிஸ்துவோடு உயிர் பெற்று எழுந்தவர்களானால்
மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின்
வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். அல்லேலூயா.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் தரப்படும் அல்லேலூயா வசனத்திற்குப் பதிலாக,
தூய ஆவி விழாவுக்குப்பின் தரப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து எதாவது
ஒன்றைப் பயன்படுத்தலாம். (காண்க: பக்கம் 630 முதல்)
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மறுபடியும் பிறந்தாலன்றி, எவரும் இறையாட்சியைக்
காண இயலாது.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
3: 1-8
அக்காலத்தில் பரிசேயர் ஒருவர் இருந்தார்; அவர் பெயர் நிக்கதேம்.
அவர் யூதத் தலைவர்களுள் ஒருவர்.
அவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து, "ரபி, நீர் கடவுளிடமிருந்து
வந்த போதகர் என்பதை நாங்கள் அறிவோம். கடவுள் தம்மோடு இருந்தாலன்றி,
நீர் செய்யும் இவ்வரும் அடையாளங்களை யாரும் செய்ய இயலாது" என்றார்.
இயேசு அவரைப் பார்த்து, "மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக்
காண இயலாது என மிக உறுதி யாக உமக்குச் சொல்கிறேன்" என்றார்.
நிக்கதேம் அவரை நோக்கி, "வயதானபின் ஒருவர் எப்படிப் பிறக்க
முடியும்? அவர் மீண்டும் தாயின் வயிற்றில் புகுந்து பிறக்க
முடியுமா?" என்று கேட்டார்.
இயேசு அவரைப் பார்த்து, "ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி
இறையாட்சிக்கு உட்பட இயலாது என்று மிக உறுதியாக உமக்குச்
சொல்கிறேன். மனிதரால் பிறப்பவர் மனித இயல்பை உடையவர். தூய ஆவியால்
பிறப்பவர் தூய ஆவியின் இயல்பை உடையவர். நீங்கள் மறுபடியும் பிறக்க
வேண்டும் என்று நான் உமக்குக் கூறியது பற்றி நீர் வியப்படைய
வேண்டாம்.
காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக்
கேட்கிறது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்குச்
செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும்
இது பொருந்தும்" என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை:
பிறக்க வேண்டும். மீண்டும் பிறக்க வேண்டும். இந்த பிறப்பு
முந்தைய பிறப்பைப் போல அல்ல மாறாக ஆவியிலும்" உண்மையிலும் பிறந்திட
வேண்டும். இந்த பிறப்பு நம்மை உலகை வெல்லச் செய்யும்.
உலகை வென்ற இயேசு இயேசுவின் பிறப்பு ஆவியினாலேயே நடந்தது. ஆண்மகனின்
விருப்பத்தினால் அல்ல.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்களாய்க்
கடவுளின் வார்த்தைகளைத் துணிவுடன் எடுத்துக் கூறினர்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 23-31
தங்கள் குரலைக் கடவுள்பால் எழுப்பி மன்றாடினர்
நிகழ்வு
1940 - களில் சீனாவில் உள்ள 'செங்கியு' (Shenkiu) தீவில் டிக்
மார்கரெட் ஹில்லிஸ் என்ற தம்பதியர் வாழ்ந்துவந்தனர். இந்தத்
தம்பதியர் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்களாக இருந்தாலும்,
இறைவனிடம் உறுதியான நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வந்தார்கள். இவர்களுக்கு
ஒரு வயதில் ஜானி என்ற ஆண் குழந்தையும் ஆனி என்ற பிறந்த இரண்டு
மாதங்களே ஆன பெண் குழந்தையும் இருந்தார்கள். இவர்களுடைய
வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில்,
டிக் அப்பெண்டிஸைடிஸ் என்னும் குடல்நோயினால் பாதிக்கப்பட்டு
வீட்டில் ஓயவேடுத்து வந்தார்.
இப்படிப்பட்ட தருணத்தில், அரசு அதிகாரி ஒருவர் செங்கியுத்
தீவிற்கு வந்து, ஜப்பான் நாட்டுப்படை விரைந்துவரைந்து
செங்கியுத் தீவின்மீது போர்த்தொடுக்க இருப்பதாகவும் அதனால் அங்குள்ள
மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்குப் போகுமாறு
சொல்லிவிட்டுச் சென்றார். அவர் கொடுத்த இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து
செங்கியுத் தீவில் இருந்த எல்லாரும் பாத்துகாப்பான இடத்தைத்தேடிச்
சென்றார்கள். டிக்கினால் எங்கும் போகமுடியாது என்பதாலும்
கையில் இரண்டு கைக்குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதாலும் இவர்களையெல்லாம்
கூட்டிக்கொண்டு பாதுகாப்பாக இடம் தேடி அலைவது மிகவும் கஷ்டம்
என்பதாலும், இறைவனை நம்பி வாழக்கின்றவர்களுக்கு இறைவனின் துணை
எப்போதும் இருக்கும் என்ற நம்பிக்கையில், மார்கரெட் ஹில்லிஸ்
வேறு எங்கும் போகாமல், அங்கேயே இருந்தார்.
அடுத்தநாள் வந்தது. மார்கரெட் ஹில்லிஸ் வழக்கமாகத் தூங்கி எழுந்ததும்
இறைவார்த்தை அடங்கிய நாட்காட்டியைப் பார்ப்பது வழக்கம். அன்றைய
நாளில் அவர் விவிலிய நாட்காட்டியைப் பார்த்தபோது அதில்,
"அச்சம் என்னை ஆட்கொள்ளும் நாளில் உம்மையே நம்பியிருப்பேன்
(திபா 56:3) என்ற இறைவார்த்தை இடம்பெற்றிருந்தது. இதைப் பார்த்ததும்
மார்கரெட் ஹில்லிஸின் உள்ளத்தில் ஒருவிதமான தைரியம் பிறந்தது.
தொடர்ந்து அவர் வீட்டின் முன்பக்கமாக இருந்த சாளரத்தின் வழியாக
வெளியே பார்த்தபோது, ஆட்கள் நடமாட்டம் இன்றித் தீவே
வெறுச்சோடிக் காணப்பட்டது. அப்போது அவர் இறைவனிடம், "என்ன நடந்தாலும்
அதைத் துணிவோடு எதிர்கொள்ள ஆற்றலைத் தா" என்று மன்றாடினார். அன்றைய
நாளில் போர்வீரர்கள் யாரும் அத்தீவிற்கு வரவில்லை. அதனால் அவரும்
அவருடைய கணவர் மற்றும் பிள்ளைகள் நிம்மதியாகச் தூங்கச்
சென்றார்கள்.
மறுநாள் காலையில், தொலைவில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு
விழித்தெழுந்தார். பின்னர் விவிலிய நாட்காட்டியில் என்ன இருக்கிறது
என்று அவர் பார்த்தபோது, அதில், "இப்பொழுது அஞ்சவேண்டாம். உங்களையும்
உங்கள் குழந்தைகளையும் பேணிக்காப்பேன்" (தொநூ 50:21) என்ற இறைவார்த்தை
இடம்பெற்றிருந்தது. இதைப் பார்த்தபோதுதான் அவருக்கு நினைவுக்கு
வந்தது, குழந்தைகளுக்கு உணவுக்கு என்ன செய்வது என்று. அப்போது
அவருடைய வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. அவர்,
யாராக இருக்கும் என்ற பதற்றத்துடன் கதவைத் திறந்துபார்த்தார்.
அங்கே மூதாட்டி ஒருத்தி, ஒரு கூடையில் கொஞ்சம் பாலும் கூடவே ஓரிரு
அவித்த முட்டைகளையும் வைத்துக் காத்திருந்தார். மார்கரெட்
ஹில்லிஸ் அந்த மூதாட்டியை அதற்கு முன்பாக அத்தீவில் பார்த்ததே
கிடையாது. இருந்தாலும் தன்னுடைய நிலையை உணர்ந்துதான் 'இறைவன்
பாலும் முட்டையும் கொடுத்து அந்த மூதாட்டியை அனுப்பி
வைத்திருக்கிறார் போலும்' என நினைத்துக்கொண்டு, அவரிடமிருந்து
பாலையும் முட்டையையும் வாங்கிக்கொண்டு அவருக்கு நன்றி
சொல்லிவிட்டு உள்ளே வந்தார். தொலைவில் துப்பாக்கிச் சத்தம்
கேட்டபோதும், அது பக்கத்தில் வரவே இல்லை. அதனால் அந்த நாளும்
எந்தவோர் ஆபத்துமின்றி முடிந்தது.
மறுநாள் அவர் தூங்கி எழுந்து, விவிலிய நாட்காட்டியைப்
பார்த்தபோது அதில், "நான் உம்மை நோக்கி மன்றாடும் நாளில் என்
எதிரிகள் புறமுதுகிட்டு ஓடுவர்" (திபா 56:9) என்ற இறைவார்த்தை
இடம்பிடித்திருந்தது. இந்த இறைவார்த்தை, மார்கரெட் ஹில்லிஸின்
உள்ளத்தில், தனக்கும் தன்னுடைய குடும்பத்திற்கும் எந்தவோர்
ஆபத்தும் ஏற்படாது' என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. நேரம்
நேரம் ஆக ஆக மக்கள் பேசுகின்ற சத்தம் கேட்டது. உடனே அவர்
கதவதைத் திறந்து, அங்கிருந்தவர்களிடம் விசாரித்துப்
பார்த்தார். அப்போதுதான், ஜப்பானியப் படையானது செங்கியுத்
தீவிற்கு வராமல் வேறொரு பக்கம் போய்விட்டது என்ற உண்மை
தெரியவந்தது. இதைக் கேட்டதும் மார்கரெட் ஹில்லிஸ் தன்னுடைய
வீட்டிற்கு வந்து, இறைவன்மீது தான் வைத்த நம்பிக்கை
வீண்போகவில்லை... இறைவன் தன்னுடைய வேண்டுதலைக் கேட்டுவிட்டார்
என்று இறைவனுக்கு நன்றிசெலுத்தத் தொடங்கினார்.
நம்பிக்கையோடு இறைவனிடம் மன்றாடும்போது, அவர் நம்முடைய
வேண்டுதலுக்குச் செவிசாய்த்துக் காப்பார் என்ற உண்மையை
இந்நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. இன்றைய
முதல் வாசகமும், இறைவன் தங்களை ஆபத்திலிருந்து காத்ததற்கும்
இனிமேலும் தங்களை வழிகாட்டவும் இறைவனிடம் மன்றாடும் இயேசுவின்
சீடர்களைக் குறித்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது
சிந்தித்துப் பார்ப்போம்.
ஒரே மனத்துடன் கடவுளிடம் வேண்டிய சீடர்கள்
திருத்தூதர் பணிகள் நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்
வாசகத்தில், பேதுரும் யோவானும் தலைமைச் சங்கத்திடமிருந்து
பத்திரமாகத் திரும்பி வந்ததைத் தொடர்ந்து, சீடர்கள் அனைவரும்
ஒரே மனத்துடன் தங்களுடைய குரலை எழுப்பி, இறைவனுக்கு நன்றி
சொல்கிறார்கள். அதே நேரத்தில் இறைவார்த்தையை இன்னும் துணிவோடு
அறிவிக்க ஆற்றலைத் தருமாறு இறைவனிடம் மன்றாடுகின்றார்கள்,
சீடர்கள் அனைவரும் ஒரே மனத்துடன் இறைவனை நோக்கி
வேண்டிக்கொண்டது நமக்கு ஒரு முக்கியமான செய்தியை எடுத்துச்
சொல்கின்றது. அது என்னவெனில், நம்முடைய வாழ்வில்
இறைவேண்டலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழவேண்டும்
என்பதாகும். சீடர்கள், இறைவன் தங்களை ஆபத்துகளிலிருந்து
காக்கவேண்டும் என்று வேண்டவில்லை. மாறாக ஆபத்துகளை
மனவுறுதியோடு, துணிச்சலோடு எதிர்கொள்வதற்கான ஆற்றலைத்
தரவேண்டும் என்று மன்றாடுகின்றார்கள். நம்முடைய
மன்றாட்டுகளிலும் இறைவன் நமக்கு ஆபத்துகளை எதிர்கொள்வதற்கான
ஆற்றலையும் துணிச்சலையும் கேட்டு மன்றாடுவோம்.
சிந்தனை
'எந்தவொரு பிரச்சினையும் இல்லாத வாழ்க்கை வாழவேண்டும் என்று
இறைவனிடம் மன்றாடாதே. பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான ஆற்றலைத்
தா என்று இறைவனிடம் மன்றாடு" என்பார் பிலிப் ப்ரூக்ஸ் என்ற
அறிஞர். ஆகவே, சீடர்களைப் போன்று நாமும் பிரச்சினைகளை
எதிர்கொள்வதற்கான ஆற்றலைக் கேட்டு மன்றாடுவோம். அதன்வழியாக
இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மறுபடியும் நாம் பிறக்கவேண்டும்
சில ஆண்டுகளுக்கு முன்பாக அலாஸ்கா மாகாணத்தில் உள்ள
எஸ்கிமோக்கள் குடியிருப்பில் திடிரென்று கொள்ளைநோய் பரவத்
தொடங்கியது. யாருமே எதிர்பாராத வண்ணம் வந்த அந்தக் கொள்ளை
நோயினால் ஏராளமான மக்கள் செத்து வீழ்ந்தார்கள். இந்த நேரத்தில்
அவர்களுக்கு மத்தியில் பணிசெய்த அருட்தந்தைதான் அனைவருக்கும்
மருத்துவச் சேவைகள் புரியதும், இறந்தோரை நல்லடக்கம்
செய்வதுமாய் பரபரப்பாய் இருந்தார்.
இதற்கிடையில் அந்த குடியிருப்புக்கு 60 கிலோமீட்டர்
தொலையிலிருந்த மற்றொரு எஸ்கிமோக்கள் குடியிருப்பிலும் கொள்ளை
நோய் பரவி நிறையப் பேர் இறந்துபோனார்கள். இச்செய்தியைக் கேட்டு
அருட்தந்தை அவர்கள் அந்த இடத்திற்குப் பயணப்பட்டார்.
அங்கே ஒவ்வொரு வீட்டின்மீது முன்பாகவும் இறந்தோரின் உடலானது
கிடத்தப்பட்டு இருந்தது, அது மட்டுமல்லாமல் கொள்ளை நோய் தாக்கி
ஏராளமான பேர் தெருவில் கிடத்தப்பட்டு இருந்தார்கள்.
அவர்களுக்கெல்லாம் அருட்தந்தை அவர்கள் சிறப்பான முறையில்
மருத்துவ சேவை செய்து அவர்களைக் காப்பாற்றினார். இன்னொரு
இடத்தில் கொள்ளை நோய் தாக்கி சாகும் தருவாயில் சில மனிதர்கள்
கிடத்தப்பட்டு இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருடைய கைகளிலும்
ஒரு தாள் சுருட்டி வைக்கப்பட்டிருப்பதை அவர் கண்டார். அது என்ன
தாள்?, அதில் என்ன எழுதி இருக்கின்றது? என்று அருட்தந்தை
தாளைத் திறந்து பார்த்தார். அந்தத் தாளில், "இதைக் குருவானவர்
மட்டுமே இதைப் படிக்கவேண்டும் என்று சொல்லி, அவர்கள் தாங்கள்
செய்த பாவங்கள் அனைத்தையும் எழுதி இருந்தார்கள். அது
மட்டுமல்லாமல், குருவானவர் வந்து எங்களுடைய பாவங்களை
மன்னிக்கும் பட்சத்தில் நாங்கள் நாங்கள் நிம்மதியாக இறப்போம்"
என்றும் எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வொருவருடைய கையிலும் இருந்த
தாளிலும் இதே வார்த்தைகள்தான் எழுதப்பட்டிருந்தன.
இதைப் படித்த குருவானவர் அவர்களுக்கு பாவ மன்னிப்புக்
கொடுத்தார். என்னே ஆச்சரியம்!. குருவானவர் அவர்களுக்குப் பாவ
மன்னிப்புக் கொடுத்த சிறுது நேரத்திலே அவர்கள் உடலில்
தெளிர்ச்சி பெற்றார்கள்; படுத்த படுக்கையாய் கிடந்தவர்கள்
அப்படியே எழுந்து நிற்கத் தொடங்கினார்கள். அங்கே கூடி
இருந்தவர்கள் அனைவருக்கும் நடந்தது அனைத்தும் வியப்பைத்
தந்தது. எல்லாரும் கடவுளைப் புகழ்ந்துகொண்டே அங்கிருந்து
சென்றார்கள்.
பாவங்கள் மன்னிக்கப்பட்டு, கடவுளின் மக்களாக மாறும்போது நாம்
புது 'வாழ்வினை'ப் பெறுகின்றோம் என்பதை இந்த நிகழ்வு அருமையாக
எடுத்துக்கூறுகின்றது.
நற்செய்தி வாசகத்தில் பரிசேயரும் யூதத் தலைவர்களில் ஒருவருமான
நிக்கதேம் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து, "ரபி, நீர்
கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை நாங்கள் அறிவோம், கடவுள்
தம்மோடு இருந்தாலன்றி, நீர் செய்யும் இவ்வரும் அடையாளங்களை
யாரும் செய்ய இயலாது" என்கிறார். அதற்கு இயேசு அவரிடம்,
"மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது"
என்கிறார். இயேசு சொன்னதைப் புரிந்து கொள்ளாதவராய் அவர்,
"வயதானபின் ஒருவர் எப்படிப் பிறக்கமுடியும்?, அவர் மீண்டும்
தாயின் வயிற்றில் புகுந்து பிறக்க முடியுமா? என்கிறார். இயேசு
அவரிடம், "ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி
இறையாட்சிக்கு உட்பட இயலாது" என்கிறார்.
இயேசு சொன்ன 'மறுபடியும் பிறக்கவேண்டும்' என்பதற்கு விவிலிய
அறிஞர்கள் மூன்று விதமான விளக்கங்களைத் தருகிறார்கள். அதில்
முதலாவது விண்ணக அரசில் நாம் உட்படுவது தொடர்பாக இருக்கின்றது.
இயேசு கிறிஸ்து தான் கற்றுக்கொடுத்த ஜெபத்தில் 'உமது ஆட்சி
வருக' என்பார் (மத் 6:10). யாராரெல்லாம் விண்ணக அரசிற்கு
இறையரசுக்கு உட்படுகிறார்களோ அவர்கள் அனைவரும் இறையாட்சிக்
காணமுடியும் என்பதுதான் அவர்கள் தரும் முதலாவது விளக்கம்
ஆகும். இரண்டாவதாக 'மறுபடியும் பிறக்கவேண்டும்' என்பதை
நிலைவாழ்வைப் பெறுதல் என்ற பொருளில் விளக்கம் தருவார்கள்.
மூன்றாவதாகக் 'மறுபடியும் பிறக்கவேண்டும்' என்பதை கடவுளின்
பிள்ளைகள் ஆகவேண்டும் என்ற பொருளில் விளக்கம் தருவார்கள்.
இந்த மூன்று விளக்கங்களில் மூன்றாவது விளக்கமே மிகவும்
பொருத்தமாக இருக்கின்றது. நாம் நம்முடைய குற்றங்களை உணர்ந்து,
திருந்தி, ஆண்டவரிடம் திரும்பி வரும்போது 'அதுவே மறுபிறப்பாக
இருக்கின்றது. இயேசு சொல்லும் உதாரி மைந்தன் உவமையில் இளைய
மகன் தன்னுடைய குற்றத்தை உணர்ந்து, தந்தையிடம் திரும்பி
வருகிறான். அப்போது புதுவாழ்வினைப் பெறுகின்றான். நாமும்
நம்முடைய குற்றங்களை உணர்ந்து திருந்தி, பாவ மன்னிப்பினைப்
பெறும்போது வாழ்வினைப் பெறுகின்றோம். மேலே சொல்லப்பட்ட
நிகழ்வில் வரும் மனிதர்களும் தங்களுடைய குற்றங்களுக்கு பாவ
மன்னிப்பினைப் பெற்ற போது வாழ்வினைப் பெற்றார்கள்.
ஆகவே, நாம் ஒவ்வொருவரும் ஆண்டவரோடு நல்லுறவை
ஏற்படுத்திக்கொள்வோம், அதன்வழியாக மறு வாழ்வை, புது வாழ்வைப்
பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
யோவான் 3: 1-8
மறுபடியும் பிறப்பவரால் மட்டுமே இறையாட்சியைக் காணமுடியும்
நிகழ்வு
பல ஆண்டுகளுக்கு முன்பாக இங்கிலாந்து நாட்டில் பெண்ணொருத்தி
இருந்தாள். அவள் மிகவும் அழுக்கான உடை அணிந்துகொண்டு, தெருவில்
போவோர் வருவோரிடமெல்லாம் பிச்சை எடுத்து உண்டு வந்தாள். சில
சமயங்களில், யாரும் அவளுக்குப் பிச்சை போடவில்லை என்றால்,
குப்பைத் தொட்டியில் கிடக்கக்கூடிய எச்சில் உணவை எடுத்து உண்டு
வந்தாள். யாராவது அவளைப் பார்த்து, 'பிச்சைக்காரி' என்று
திட்டிவிட்டால், உடனே அவள் அவர்களிடம், "என்னை யாரென்று
நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்... நான் எவ்வளவு பெரிய
ஆளாக்கும்..." என்று கோபம் கொப்பளிக்கப் பேசுவாள். அவர்களும்,
'சரி இவளிடம் எதற்கு வம்பை வளர்க்கவேண்டும்' என்று அவளிடம்
எதுவும் பேசாமல் கடந்து போய்விடுவார்கள். இப்படியே பல நாட்கள்
தொடர்ந்தன.
ஒருநாள் அந்தப் பெண்ணுக்கும் ஒரு கடைக்காரருக்கும் இடையே
வாய்த்தகராறு ஏற்பட்டது. வாய்த்தகராறு முற்றி சண்டையில் போய்
முடிந்தது. கடைசியில் ஒரு காவல்துறை அதிகாரி வந்துதான்
சண்டையைத் தீர்த்துவைத்தார். அதற்குப் பின்பு அக்காவல்துறை
அதிகாரி, அப்பெண்ணைக் காவல்நிலையத்திற்குக்
கூட்டிக்கொண்டுபோய், உண்மையில் அவளுக்கு என்ன பிரச்சினை என்று
விசாரித்துப் பார்த்தார். விசாரணையின் முடிவில், அந்தப் பெண்
ஒரு பெரிய அரசாங்க அதிகாரியின் மகள் என்பதும் இருபது
ஆண்டுகளுக்கு முன்பாக அவள் பணப்பையோடு கடைக்குச் சென்றபோது,
திருடர்கள் சிலர் அவளிடமிருந்து பணத்தைப் பறிப்பதற்காகத்
தலையில் தடியால் அடித்ததால் அந்நிலைக்கு ஆளானாள் என்பதும்
தெரியவந்தது. இதற்குப் பின்பு அக்காவல்துறை அதிகாரி, பெண்
காவலாளிகளைக் கூப்பிட்டு அவளை நன்றாகக் குளிக்க வைத்து,
புத்தாடை உடுத்தி, அவளைப் புதுப் ண்ணாக மாற்றி, அவளுடைய
வீட்டில் கொண்டுபோய்ச் சேர்த்தார்.
மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் அந்தப் பெண்ணானவள் எப்படி
அழுக்குப் பெண்ணாக இருந்து, புதுப் பெண்ணாக மாறி, புதியதொரு
வாழ்க்கை வாழத் தொடங்கினாளோ, அதுபோன்று கடவுள் நம்
ஒவ்வொருவருக்கும் கொடுத்த வாழ்வென்னும் கொடையைப் பாவத்தில்
அல்லது பாவத்தால் தொலைத்துவிட்டு பாவிகளாக இருக்கின்ற நாம்
புதிய மனிதர்களாக மாறி, புதுப்படைப்பாக மாறவேண்டும். அது
எப்படி என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக
சிந்தித்துப் பார்ப்போம்.
முழு உண்மையை அறிந்துகொள்ளவேண்டும் என்ற தேடலில் ஈடுபட்ட
நிக்கதேம்
நற்செய்தி வாசகத்தில், நிக்கதேம் என்ற பரிசேயர், இயேசுவைச்
சந்திக்க ஓரிரவில் அவரிடம் வருகின்றார். இந்த நிக்கதேம் மற்ற
பரிசேயர்களைப் போன்றவர் அல்ல (மத் 23). இவர், இயேசு எருசலேமில்
பாஸ்கா விழாவின்போது செய்த அருமடையாளங்களைக் கண்டு அவர்மீது
நம்பிக்கைகொண்டவர் (யோவா 2: 23). மட்டுமல்லாமல், இவர் யூதத்
தலைவர்களுள் ஒருவர். அப்படிப்பட்ட இவர் இயேசுவோடு பேசவேண்டும்,
அவரிடமிருந்து முழு உண்மையை அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக
அவரிடம் வருகின்றார். அதுவும் இரவுநேரத்தில். இரவுநேரத்தில்
அவர் இயேசுவிடம் வந்தார் என்பதை, 'எந்தவொரு தொந்தரவும்
இல்லாமல் இயேசுவோடு பேசலாம்' என்ற எண்ணத்தோடு வந்திருக்கலாம்
என்று புரிந்துகொள்ளலாம். அப்படிப்பட்டவர் இயேசுவைப் பார்த்து,
"ரபி, கடவுள் தம்மோடு இருந்தாலன்றி, நீர் செய்யும்
இவ்வருமடையாளங்களை யாரும் செய்ய முடியாது" என்கின்றார்.
அப்பொழுதுதான் இயேசு, "மறுபடியும் பிறந்தாலன்றி எவரும்
இறையாட்சியைக் காண இயலாது" என்று கூறுகின்றார்.
இயேசு நிக்கதேமிடம் கூறியதில் உள்ள அர்த்தம் என்னவென்று
இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
தூய ஆவியாரால் பிறப்பதே மறுபடியும் பிறப்பு
இயேசு நிக்கதேமிடம் கூறியதை அவர், தாயின் கருவில் மீண்டுமாகத்
தோன்றிப் பிறப்பதாக எண்ணிக் கொள்கின்றார். உண்மையில் இயேசு
அவரிடம் சொன்னது, தூய ஆவியரால் பிறப்பது. அது எப்படி நிகழும்
என்பதை இங்கே நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
தூய ஆவியாரால் பிறப்பது என்பது, 'உயிருள்ளதும்
நிலைத்திருப்பதும் அழியாவித்துமாகிய இறைவார்த்தையை உள்ளத்தில்
தாங்கிக்கொண்டு (1பேதுரு 1:23), தூய ஆவியாரின் துணையுடன்,
அவருடைய தூண்டுதலின்படி வாழ்வதாகும் (கலா 5:16). அதுதான்
மறுபடியும் பிறப்பதாகவும். தூய ஆவியாரின் தூண்டுதலின்படி
இறைவார்த்தைக்கு ஏற்ப வாழ்கின்ற எவரும் பாவ வாழ்க்கை வாழ்வது
கிடையாது, அவர் புதுபடைப்பாக மாறி, புதுவாழ்க்கை வாழ்வார்
என்பதே உண்மை. அப்படி நாம் தூய ஆவியாரால் நிரப்பப்பட்டு,
இறைவார்த்தையின்படி வாழ்ந்தொமெனில், நாம் மறுபடியும்
பிறந்தவர்கள் ஆவோம். இறையாட்சியையும் நாம் நமது உரிமைச்
சொத்தாக்கிக் பெற்றுக்கொள்வோம் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை.
சிந்தனை
'கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், ஆவிக்குரிய
இயல்பைக் கொண்டிருப்பீர்கள்' (உரோ 8:9) என்பார் தூய பவுல்.
ஆகவே, நாம் பெற்றுக்கொண்ட தூய ஆவியாரை இழந்துவிடாமல், அவருடைய
இயல்பைக் கொண்டு, அவருக்கு உகந்த மக்களாக மாறி,
புதுப்பிறப்படைவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
|
|