|
11
ஏப்ரல் 2019 |
|
தவக்காலம்
5ம் வாரம் வியாழன் - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
எண்ணற்ற நாடுகளுக்கு நீ தந்தை ஆவாய்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 17: 3-9
அந்நாள்களில் ஆபிராம் பணிந்து வணங்க, கடவுள் அவரிடம் கூறியது:
"உன்னுடன் நான் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே: எண்ணற்ற
நாடுகளுக்கு நீ தந்தை ஆவாய்.
இனி உன் பெயர் ஆபிராம் அன்று;
'ஆபிரகாம்' என்ற பெயரால் நீ அழைக்கப்படுவாய்.
ஏனெனில் எண்ணற்ற நாடுகளுக்கு உன்னை நான் மூதாதையாக்குகிறேன்.
மிகப் பெருமளவில் உன்னைப் பலுகச் செய்வேன்; உன்னிடமிருந்து
நாடுகளை உண்டாக்குவேன். உன்னிடமிருந்து அரசர்கள் தோன்றுவர். தலைமுறை
தலைமுறையாக உன்னுடனும், உனக்குப்பின் வரும் உன் வழிமரபினருடனும்
என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன். இதனால் உனக்கும்
உனக்குப்பின் வரும் உன் வழிமரபினருக்கும் நான் கடவுளாக இருப்பேன்.
நீ தங்கியிருக்கும் நாட்டையும் கானான் நாடு முழுவதையும் என்றுமுள்ள
உரிமைச் சொத்தாக உனக்கும் உனக்குப்பின் உன் வழிமரபினருக்கும்
வழங்குவேன். நான் அவர்களுக்குக் கடவுளாக இருப்பேன்" என்றார்.
மீண்டும் கடவுள் ஆபிரகாமிடம், "நீயும் தலைமுறைதோறும் உனக்குப்
பின் வரும் உன் வழிமரபினரும் என் உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க
வேண்டும்" என்றார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா:105: 4-5. 6-7. 8-9 (பல்லவி: 8a)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில்
கொள்கின்றார்.
4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை
இடையறாது நாடுங்கள்! 5 அவர் செய்த வியத்தகு செயல்களை
நினைவுகூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய்
மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். பல்லவி
6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட
யாக்கோபின் பிள்ளைகளே! 7 அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின்
நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. பல்லவி
8 அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்;
ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை
நினைவுகூர்கின்றார். 9 ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும்
ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில்
கொண்டுள்ளார். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
திபா 95: 8b. 7b
உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக்கொள்ளாதீர்கள். மாறாக ஆண்டவரின்
குரலைக் கேட்பீர்களாக.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உங்கள் தந்தை ஆபிரகாம், நான் வரும் காலத்தைக் காண முடியும் என்பதை
முன்னிட்டுப் பேருவகை கொண்டார்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 51-59
அக்காலத்தில் இயேசு யூதர்களிடம், "என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர்
என்றுமே சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்"
என்றார்.
யூதர்கள் அவரிடம், "நீ பேய் பிடித்தவன்தான் என்பது இப்போது
தெரிந்துவிட்டது. ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினர்களும் இறந்தார்கள்.
ஆனால் என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்
என்கிறாயே! எங்கள் தந்தை ஆபிரகாமைவிட நீ பெரியவனோ? ஆபிரகாம்
இறந்தார்; இறைவாக்கினரும் இறந்தனர். நீ யாரென்று
நினைத்துக்கொண்டிருக்கிறாய்?" என்றார்கள்.
இயேசு மறுமொழியாக, "நானே என்னைப் பெருமைப்படுத்தினால், அது
எனக்குப் பெருமை இல்லை. என்னைப் பெருமைப்படுத்துபவர் என் தந்தையே.
அவரையே நீங்கள் உங்கள் தந்தை என்றும் சொல்கிறீர்கள். ஆனால் அவரை
உங்களுக்குத் தெரியாது; எனக்குத் தெரியும். எனக்கு அவரைத்
தெரியாது என நான் சொன்னால் உங்களைப் போல நானும் பொய்யனாவேன்.
அவரை எனக்குத் தெரியும். அவருடைய வார்த்தையையும் நான் கடைப்பிடிக்கிறேன்.
உங்கள் தந்தை ஆபிரகாம் நான் வரும் காலத்தைக் காண முடியும் என்பதை
முன்னிட்டுப் பேருவகை கொண்டார்; அதனைக் கண்டபோது மகிழ்ச்சியும்
கொண்டார்" என்றார்.
யூதர்கள் இயேசுவை நோக்கி, "உனக்கு இன்னும் ஐம்பது வயதுகூட ஆகவில்லை;
நீ ஆபிரகாமைக் கண்டிருக்கிறாயா?" என்று கேட்டார்கள்.
இயேசு அவர்களிடம், "ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன்
என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.
இதைக் கேட்ட அவர்கள் அவர்மேல் எறியக் கற்களை எடுத்தார்கள். ஆனால்
இயேசு மறைவாக நழுவிக் கோவிலிலிருந்து வெளியேறினார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை:
உங்க குழந்தைக்கு என்ன பெயர்.
இந்த பெயருக்கு என்ன அர்த்தம்.
தெரியாது.
இந்த பெயரை எப்படி கண்டுபிடிச்சிங்க.
எங்க வீட்டில் உள்ள எல்லாரின் பெயரிலும் உள்ள ஆங்கில முதல் எழுத்தை
எடுத்து, உருவாக்கினேன்.
இது ஒரு தகப்பனாரின் பதில்.
இன்றைக்கு கணனியை பார்த்து, சின்னத்திரையை பார்த்து, புதிதாக,
வித்தியாசமாக இருக்க வேண்டும், புரட்சி என்று நினைத்து,
பெற்றோர் பெயரிடுவது, வருங்காலத்தில் குழந்தைகளை வாழ்விலே அர்த்தம்
இல்லாத பெயர் என்று நினைக்க தோன்றுமே என்று பெற்றோர் ஏன் அறிவதில்லை.
மனிதனுக்கு பெயர் முக்கியமானது.
பெயரை வைத்து, ஒரு மனிதனை அடையபடுத்துகின்றோம்.
பெயரின் அர்த்தம் தெரிந்து அந்த மனிதன் வாழ்விலே சாதிக்க
நினைக்கலாம்.
அர்த்துமுள்ள, சாதித்த மனிதர்களின், புனிதர்களின், விவிலிய கதாபாத்திரங்களின்
பெயர்களை குழந்தைக்கு இட்டு, அவர்களிலே லட்சிய தாகம் ஏற்படுத்துவதும்
பெற்றோரின் கடமையே.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
தொடக்க நூல் 17: 3-9
ஆண்டவர் ஆபிரகாமோடு செய்துகொண்ட உடன்படிக்கை
நிகழ்வு
ஒரு கிராமத்திலிருந்த மிகவும் பின்தங்கிய குடும்பத்திலிருந்து
அனிதா என்ற மாணவி, நகரில் இருந்த ஒரு கல்லூரில் படித்து வந்தார்.
பனிரண்டாம் வகுப்பில் அதிகமான மதிப்பெண்களைப் பெற்ற அவர் கல்லூரியிலும்
நன்றாகப் படித்து வந்தார். ஒருநாள் காலையில் வகுப்பெடுக்க வந்த
பேராசிரியை செல்வி, மாணவி அனிதா மிகவும் வருத்தத்தோடு இருப்பதைப்
பார்த்துவிட்டு, அவரை வகுப்பு முடிந்தபின்பு தன்னை வந்து சந்திக்குமாறு
கேட்டுக்கொண்டார். மாணவி அனிதாவும் பேராசிரியை செல்வி தன்னிடம்
சொன்னது போன்று வகுப்பு முடிந்தபின்பு அவரைப் போய்ச் சந்தித்தார்.
"என்ன அனிதா! வழக்கமாக வகுப்பில் மிகவும் மகிழ்ச்சியாகயும்
கலகலப்பாகவும் இருக்கும் நீ, இன்றைக்கு எதற்கு இவ்வளவு வருத்தத்தோடு
இருக்கிறாய்?" என்று கேட்டார். அதற்கு மாணவி அனிதா அவரிடம்,
"அது ஒன்றுமில்லை. கல்லூரியில் பணம் கட்டுவதற்கு (College Fees)
இன்றைக்குத்தான் கடைசி நாள். வீட்டில் அவ்வளவு வசதியில்லை...
அதனால்தான் என்ன செய்வதென்று தெரியாமல்
யோசித்துக்கொண்டிருக்கின்றேன்" என்றார்.
"அவ்வளவுதானே சங்கதி! இம்முறை உன்னுடைய கல்லூரிக் கட்டணத்தை
நானே கட்டிவிடுகிறேன். ஆனால், நமக்குள் ஓர் ஒப்பந்தம்
செய்துகொள்வோம்" என்றார் பேராசிரியை செல்வி. "என்ன ஒப்பந்தம்.
சொல்லுங்கள்" என்று தயக்கத்தோடு கேட்டார் மாணவி அனிதா. "அது ஒன்றுமில்லை.
நீ கல்லூரில் நன்றாகப் படிக்கக்கூடிய மாணவி! அப்படியென்றால் நீ
கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்றபிறகு, அக்கம் பக்கத்தில் உள்ள
குழந்தைகளுக்கு மாலைநேரக் கல்வி (Tution) எடுக்கலாம்தானே. அப்படி
நீ கல்லூரி முடிந்து, வீட்டிற்குச் சென்றபிறகு மாலைநேரக் கல்வி
எடுத்தால், அதிலிருந்து ஓரளவாவது பணம் கிடைக்கும்தானே. அந்தப்
பணத்தை நீ எனக்குத் தரவேண்டாம். உன்னுடைய கல்லூரிக் கட்டணத்தைச்
செலுத்த உனக்கு உதவியாக இருக்கும் அல்லவா! இந்த ஒப்பந்தத்திற்கு
நீ சம்பாதித்தால் இந்தமுறை உனக்கான கல்லூரிக் கட்டணத்தை நான்
செலுத்திவிடுகிறேன்" என்றார் பேராசிரியை செல்வி. அவர் சொன்ன இந்த
ஒப்பந்தத்திற்கு மாணவி அனிதாவும் மனப்பூர்வமாகச் சம்மத்தித்தார்.
இதற்குப் பின்பு மாணவி அனிதா, பேராசிரியை செல்வியோடு
செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி ஒவ்வொருநாளும் கல்லூரிவிட்டு
வீடுவந்த பிறகு, அக்கம் பக்கத்திலுள்ள மாணவ மாணவிகளுக்கு
மாலைநேரக் கல்வி சொல்லிக்கொடுத்தத் தொடங்கி, அதிலிருந்து
கிடைத்த பணத்தைக்கொண்டு, கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்திக் கல்லூரிப்
படிப்பை முடித்தார். தொடர்ந்து அவர் மேற்படிப்புப் படிக்கின்றபோதும்
இதே அணுகுமுறையைக் கையாண்டார். இப்பொழுது அவரிடம் பாடம் படிப்பதற்கு
ஏராளமான மாணவர்கள் வந்தார்கள். அவர்களுடைய வருகையினால் மாணவி
அனிதாவின் பொருளாதாரத் தேவைகள் பூர்த்திசெய்யப்பட்டன. இப்படியே
மாலைநேரக் கல்வி கற்றுக்கொடுப்பதன் வழியாகக் கிடைத்த பணத்தைக்
கொண்டு, கல்லூரிக் கட்டணத்தை செலுத்தி ஒரு கட்டத்தில் மாணவி அனிதா
முனைவர் அனிதாவாக, அதாவது டாக்டர் அனிதாவாக மாறினார்.
பின்னாளில் டாக்டர் அனிதா உயர்ந்து, சொந்தமாக ஒரு பள்ளிக்கூடத்தையே
நடத்தும் பேறுபெற்றார்.
சாதாரண நிலையில் இருந்த மாணவி அனிதா, முனைவர் (டாக்டர்) அனிதாவாக
உயர்ந்ததற்குக் காரணம், அவர் பேராசிரியை செல்வியோடு
செய்துகொண்ட ஒப்பந்தம் அல்லது உடன்படிக்கையும் அந்த உடன்படிக்கைக்கு
ஏற்ப நடந்துகொண்டதுதான் என்றால், அது மிகையாகாது. இன்றைய முதல்
வாசகமும் ஓர் உடன்படிக்கையைக் குறித்து எடுத்துக் கூறுகின்றது.
அது யாராருக்கும் இடையே நடந்த உடன்படிக்கை? எப்படிப்பட்ட உடன்படிக்கை?
என்பதை இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
ஆண்டவருக்கும் ஆபிரகாமிற்கும் இடையே நடந்த உடன்படிக்கை
தொடக்க நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய
கடவுள் ஆபிரகாமோடு உடன்படிக்கை செய்துகொள்கின்றார். அந்த உடன்படிக்கையின்படி,
ஆபிரகாம் எண்ணற்ற மக்களுக்குத் தந்தையாக இருப்பார் எனவும் அவருடைய
வழிமரபினருக்கு கானான் நாடு வழங்கப்படும் என்றும் அதற்கு ஈடாக
அவரும் அவருடைய வழிமரபினரும் ஆண்டவரோடு செய்துகொண்ட உடன்படிக்கையைக்
கடைப்பிடித்து வாழவேண்டும் என்று சொல்லப்படுகின்றது.
ஆபிராகம் முதிர்ந்த வயதினராக இருந்தாலும், தான் எண்ணற்ற மக்களுக்குத்
தந்தையாக இருப்பேன் என்று ஆண்டவர் சொன்னதை நம்பி, அவருடைய உடன்படிக்கையின்படி
நடந்தார். ஒருசில சமயங்களில் அவருடைய வழிமரபினர் ஆண்டவரோடு
செய்துகொண்ட உடன்படிக்கையை மீறினாலும், அதை மிகப்பெரியத் தவறு
என உணர்ந்து, உடன்படிக்கையைக் கடைப்பிடித்து வந்தார்கள். இறுதியில்
வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டையும் பரிசாகப் பெற்றார்கள்.
நாம் நேரடியாக ஆபிரகாமின் வழிமரபினர் ஆகமுடியாவிட்டாலும், இயேசுவின்மீது
வைக்கும் நம்பிக்கையினால் (கலா 3: 6-9) ஆபிரகாமின் வழிமரபாகி,
இறைவன் கொடுக்கின்ற ஆசியை பெற்றுக்கொள்ளலாம்.
ஆதலால் நாம், ஆபிரகாம் எப்படி ஆண்டவரோடு செய்துகொண்ட உடன்படிக்கைக்கு
நம்பிக்கைக்குரியவராக இருந்தாரோ, அதுபோன்று நாமும் இறைவன்மீது
நம்பிக்கை வைத்து, அந்த நம்பிக்கைக்கு ஏற்ப வாழ்ந்து, அவர் தருகின்ற
கொடைகளை பெற்று மகிழ்வோம்.
சிந்தனை
'என் நியமங்களைக் கடைப்பிடிப்பதில் கவனமாயிருங்கள்; அப்போது
நாட்டில் நலமாய் இருப்பீர்கள்' (லேவி 25: 18) என்பார் ஆண்டவர்.
ஆகவே, நாம் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, அவர் நமக்குக்
கொடுத்திருக்கும் கட்டளைகளைக் கருத்தாய்க் கடைப்பிடித்து
வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய்ப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
யோவான் 8: 51-59
இயேசுவின் வார்த்தையைக் கடைபிடிப்போர் என்றுமே சாகமாட்டார்
நிகழ்வு
மேற்கு வெர்ஜினியாவில் உள்ளது கிரான்ட்வியூ என்ற நகரம். இங்குள்ள
ட்ரீம்ஸ் வெஸ்ட்மின்ஸ்டர் ஆலயத்தில் 03-03-2019 அன்று இரவு,
மின்கசிவு காரணமாகப் பயங்கரத் தீவிபத்து ஏற்பட்டது. இரவுநேரம்
என்பதால் செய்தி அங்கிருந்த தீயணைப்புத் துறையினருக்குத் தாமதமாகவே
கிடைத்தது. அப்படியிருந்தும் அவர்கள் தீயை அணைக்க விரைந்து வந்தனர்.
அவர்கள் தீவிபத்து நடந்த இடத்திற்கு வருவதற்குள் தீயானது ஆலயம்
முழுவதும் பரவி எரிந்துகொண்டிருந்தது. உடனே அவர்கள் தீயை அணைக்கக்
கடுமையாகப் போராடினார்கள். ஆனாலும் அவர்களால் தீயைத் தங்களுடைய
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. நீண்டநேரப் போராட்டத்திற்குப்
பின்புதான் அவர்களால் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர
முடிந்தது. தீயின் தீவிரம் ஓரளவுக்குத் தணிந்ததும் அவர்கள்
ஆலயத்திற்குள்ளே சென்று தீயை அணைக்க முயன்றனர். அப்பொழுது அவர்கள்
கண்ட காட்சி அவர்களை ஆச்சரியப்பட வைத்தது. ஆலயமே தீயில் எரிந்துகொண்டிருந்தபோது
அங்கே வைக்கப்பட்டிருந்த திருவிவிலியங்கள் தீயின் நாவுகள்
தீண்டாமல் அப்படியே இருந்தன.
இந்நிகழ்வு இயேசு சொன்ன, "விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால்,
என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா" (லூக்கா 21:33) என்பதை நினைவுபடுத்துவதாக
இருக்கின்றது. உண்மையாகவே இயேசுவின் வார்த்தைகளுக்கு அழிவே இல்லை.
அப்படிப்பட்ட வார்த்தைகளைக் கடைபிடிப்போர் அழியாமல்
நிலைவாழ்வைப் பெறுவார் அல்லது சாகமாட்டார் என்கின்றது இன்றைய
நற்செய்தி வாசகம். அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப்
பார்ப்போம்.
நிலைவாழ்வைத் தரும் இயேசுவின் வார்த்தைகள்
நற்செய்தி வாசகத்தில் இயேசு யூதர்களிடம், "என் வார்த்தையைக் கடைபிடிப்போர்
என்றுமே சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்"
என்கின்றார். இயேசு இவ்வாறு சொன்னதைக் கேட்ட யூதர்கள் அவருக்கெதிராகக்
கிளர்ந்தெழுகிறார்கள். யூதர்களுடைய வாதமெல்லாம் ஆபிரகாம் இறந்தார்;
இறைவாக்கினர்களும் இறந்தார்கள். இவர்கள் எல்லாரையும்விட இயேசு
பெரியவரா? என்பதுதான். யூதர்கள் முன்வைத்த இந்த வாதத்திற்கு அல்லது
கேள்விக்கு, இயேசு, "ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கின்றேன்"
என்று பதிலளிக்கின்றார் இயேசுவின் இவ்வார்த்தைகளை, ஆண்டவராகிய
கடவுள் எரியும் முட்புதரிலிருந்து மோசேயிடம் பேசிய,
"இருக்கின்றவராகிய இருக்கின்றவர் நானே" (விப 3:14) என்ற
வார்த்தைகளோடு இணைந்துச் சிந்தித்துப் பார்த்தால் இன்னும் அர்த்தம்
விளங்கும்.
யூதர்கள் இயேசுவிடம் நீர் ஆபிரகாமைவிடப் பெரியவரோ என்று
கேட்கின்றபோது, அவர் அவர்களிடம், நான் ஆபிரகாமிற்கு முன்பாக,
அதாவது படைப்பின் தொடக்கத்திலிருந்தே இருக்கின்றேன் என்று பதிலளிகின்றார்.
இப்படிப் படைப்பின் தொடக்கத்திலேயே இருக்கின்ற இயேசுவின்
வார்த்தைகளைக் கடைப்பிடிப்போர் எப்படிச் சாகமுடியும்?. நிச்சயமாகச்
சாகமாட்டார்கள்!. அதனால்தான் இயேசு யூதர்களிடம், "என்
வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள்" என்கின்றார்.
சாகாமை என்பது உடலில் சாகாமை அல்ல
'என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகாமாட்டார்' என்று
இயேசு சொன்னதை யூதர்கள் மேலெழுந்தவாரியாகப் புரிந்துகொண்டார்கள்.
குறிப்பாக அவர்கள் உடலின் சாகாமை என்றே புரிந்துகொண்டார்கள்.
அதனால்தான் அவர்கள் கடவுளின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடந்தும்
ஆபிரகாமும் இறைவாக்கினர்களும் இறந்துபோனார்களே? என்று கேள்வி
கேட்கின்றார்கள். இயேசு சொல்ல வந்தது அதுவல்ல, அதைவிட உயர்ந்தது.
அது ஆன்மாவின் சாகாமை. அத்தகைய கொடையை எல்லாரும் பெற்றுக்கொள்ள
முடியாது. அதை யாராரெல்லாம் இயேசுவை முழுமையாக நம்பி, அவரை ஏற்றுக்கொண்டு,
அவருடைய வார்த்தையின்படி நடக்கின்றார்களோ அவர்கள் மட்டுமே
பெற்றுக்கொள்ள முடியும். எத்தனையோ தூயவர்களும் மறைசாட்சிகளும்
இறையடியார்களும் இயேசுவை ஆழமாக நம்பி, அவரது வார்த்தையின்படி
நடந்தார்கள். அதனால்தான் அவர்கள் இந்த மண்ணுலகத்தை விட்டுப்
பிரிந்துபோனபின்னும் மக்களுடைய மனங்களில் அரியாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்கள்.
நாம் அவர்களைப் போன்று வாழ்ந்தோமெனில், அவர்களுக்குக் கிடைத்த
ஆசி நமக்கும் கிடைக்கும் என்பது உறுதி.
ஒருவர் இயேசுமீது வைக்கும் நம்பிக்கை எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமாக
இருக்கின்றது
யூதர்கள் இயேசுவை இறைமகன் என்று ஏற்றுக்கொள்ளவில்லை (யோவா
1:11) அதனால்தான் அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளாமல், அவருக்கு
எதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள்; அவரோடு விதண்டாவாதம் செய்தார்கள்.
ஒருவேளை அவர்கள் இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து, அவரை ஏற்றுக்கொண்டிருந்தால்
அவர் அளித்த வாழ்வினை அவர்களால் பெற்றுக்கொண்டிருக்க முடியும்.
துரதிஸ்டம் என்னவெனில், அவர்கள் கடைசிவைக்கும் இயேசுவை இறைமகனாக
ஏற்றுகொள்ளவில்லை என்பதே உண்மை. நாம் யூதர்களைப் போன்று இல்லாமல்,
இயேசுவை நம்பி அவருடைய வார்த்தைகளைக் கடைப்பிடித்து, அவர் தருகின்ற
நிலைவாழ்வினை பெற்றுக்கொள்ள முயற்சி செய்வோம்.
சிந்தனை
'மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு
பெறவேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம்' என்பார் இயேசு
(யோவா 6:40). நாம் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டு, அவருடைய
வார்த்தைகளைக் கடைப்பிடித்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள்
நிறைவாய்ப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
|
|