|
02
ஏப்ரல் 2019 |
|
தவக்காலம்
4ம் வாரம்
செவ்வாய் - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
கோவிலிலிருந்து தண்ணீர் வருவதைக் கண்டேன்; அது பாயும் இடமெல்லாம்
யாவும் உயிர் வாழும்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 47: 1-9,12
அந்நாள்களில் வானதூதர் என்னைக் கோவிலின் நுழைவாயிலுக்கு
மீண்டும் அழைத்து வந்தார். அங்கு நான் கோவிலின் வாயிற்படியின்
கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன்.
ஏனெனில், கோவில் கிழக்கு நோக்கி இருந்தது. தண்ணீர், கோவில் மற்றும்
பீடத்தின் தெற்குப் பக்கத்திலிருந்து வந்தது. அவர் என்னை வடக்கு
வாயில் வழியாய் அழைத்து வந்து கிழக்கு நோக்கிய வெளிவாயிலின்
வெளிப்பகுதிக்கு இட்டுச் சென்றார். இதோ! தண்ணீர் தெற்குப் பகுதியிலிருந்து
பாய்ந்துகொண்டிருந்தது.
அம்மனிதர் கையில் ஓர் அளவு நூலைப் பிடித்துக்கொண்டு கிழக்கு
நோக்கிச் சென்று, ஆயிர முழம் அளந்தார். பின்னர் கணுக்காலளவு
ஆழமுள்ள அத்தண்ணீர் வழியாய் என்னை அழைத்துச் சென்றார்.
அவர் மேலும் ஆயிர முழம் அளந்து என்னை முழங்காலளவு ஆழமுள்ள தண்ணீரில்
அழைத்துச் சென்றார். மேலும் ஆயிர முழம் அளந்து இடுப்பளவு தண்ணீரில்
என்னை நடத்திச் சென்றார்.
அவர் மேலும் ஆயிர முழம் அளந்தார். ஆனால் இப்போது அது ஆறாக ஓடியது.
எனவே என்னால் அதைக் கடக்க இயலவில்லை. ஏனெனில் தண்ணீர் உயர்ந்து
நீந்திப் போகுமளவுக்கு ஆழமுடையதாய், யாராலும் நடந்து கடக்க
முடியாத ஆறாய் ஓடியது.
அவர் என்னிடம்,
'மானிடா! இதைப் பார்த்தாயா?' என்றார்.
பின்னர் அவர் என்னை ஆற்றின் கரைக்கு அழைத்துச் சென்றார். நான்
அங்கே சென்றபோது ஆற்றின் இரு கரைகளிலும் எண்ணற்ற மரங்கள் நிற்கக்
கண்டேன்.
அவர் என்னிடம் உரைத்தது: "இத்தண்ணீர் கிழக்குப் பகுதியை
நோக்கிப் பாய்ந்து அராபாவில் சேர்கிறது. அங்கு அது கடலோடு கலக்கிறது.
அது கடலோடு கலக்கையில் அத்தண்ணீர் அங்கு நல்ல தண்ணீராக மாறும்.
இந்த ஆறு பாயுமிடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும். அங்கு ஏராளமான
மீன்கள் இருக்கும். ஏனெனில் இத்தண்ணீர் பாய்ந்து அங்குள்ள நீரை
நல்ல நீராய் மாற்றும். எனவே அது பாயுமிடமெல்லாம் யாவும் உயிர்
வாழும். பலவகையான பழமரங்கள் ஆற்றின் இருமருங்கிலும் வளரும்;
அவற்றின் இலைகள் உதிரா; அவற்றில் கனிகள் குறையா. ஒவ்வொரு மாதமும்
அவை கனி கொடுக்கும்; ஏனெனில் தூயகத்திலிருந்து தண்ணீர் அவற்றிற்குப்
பாய்கின்றது. அவற்றின் கனிகள் உணவாகவும் இலைகள் மருந்தாகவும்
பயன்படும்."
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா:46: 1-2. 4-5. 7-8 (பல்லவி: 7)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; நமக்கு அரணாயும் இருக்கின்றார்.
1 கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்; இடுக்கணுற்ற
வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே. 2 ஆகையால், நிலவுலகம்
நிலைகுலைந்தாலும், மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும்
எங்களுக்கு அச்சமென்பதே இல்லை. பல்லவி
4 ஆறு ஒன்று உண்டு, அதன் கால்வாய்கள் உன்னதரான கடவுளின் திரு
உறைவிடமான நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன. 5 அந்நகரின் நடுவில்
கடவுள் இருக்கின்றார்; அது ஒருபோதும் நிலைகுலையாது; வைகறைதோறும்
கடவுள் துணை அதற்கு உண்டு. பல்லவி
7 படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; யாக்கோபின் கடவுளே
நமக்கு அரண். 8 வாரீர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்! அவர் உலகில்
ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்! பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
51: 10a,12a
கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும். உம்
மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உடனே அம்மனிதர் நலமடைந்தார்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-3a,5-16
யூதர்களின் திருவிழா ஒன்று வந்தது. இயேசுவும் எருசலேமுக்குச்
சென்றார். எருசலேமில் ஆட்டு வாயிலுக்கு அருகில் ஐந்து மண்டபங்கள்
கொண்ட குளம் ஒன்று உண்டு. எபிரேய மொழியில் பெத்சதா என்பது அதன்
பெயர்.
இம்மண்டபங்களில் உடல்நலமற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர்,
முடக்கு வாதமுற்றோர் ஆகியோர் திரளாய்ப்படுத்துக் கிடப்பர்.
முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரும் அங்கு இருந்தார்.
இயேசு அவரைக் கண்டு, நெடுங்காலமாக அவர் அந்நிலையில் இருந்துள்ளதை
அறிந்து, "நலம்பெற விரும்புகிறீரா?" என்று அவரிடம் கேட்டார்.
"ஐயா, தண்ணீர் கலங்கும்போது என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள்
இல்லை. நான் போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார்" என்று
உடல்நலமற்றவர் அவரிடம் கூறினார்.
இயேசு அவரிடம், "எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு
நடந்து செல்லும்" என்றார்.
உடனே அம்மனிதர் நலமடைந்து தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு
நடந்தார்.
அன்று ஓய்வுநாள். யூதர்கள் குணமடைந்தவரிடம், "ஓய்வுநாளாகிய இன்று
படுக்கையை எடுத்துச் செல்வது சட்டத்திற்கு எதிரான செயல்" என்றார்கள்.
அவர் மறுமொழியாக, "என்னை நலமாக்கியவரே உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு
நடந்து செல்லும்' என்று என்னிடம் கூறினார்" என்றார். "
'படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்' என்று உம்மிடம்
கூறியவர் யார்?" என்று அவர்கள் கேட்டார்கள்.
ஆனால் நலமடைந்தவருக்கு அவர் யாரெனத் தெரியவில்லை. ஏனெனில் அவ்விடத்தில்
மக்கள் கூட்டமாய் இருந்ததால் இயேசு அங்கிருந்து நழுவிப்
போய்விட்டார்.
பின்னர் இயேசு நலமடைந்தவரைக் கோவிலில் கண்டு, "இதோ பாரும்,
நீர் நலமடைந்துள்ளீர்; இதைவிடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க
இனிப் பாவம் செய்யாதீர்" என்றார்.
அவர் போய், தம்மை நலமாக்கியவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தார்.
ஓய்வுநாளில் இயேசு இதைச் செய்ததால் யூதர்கள் அவரைத்
துன்புறுத்தினார்கள்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
உடனே அம்மனிதர் நலமடைந்தார்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-3a,5-16
உடல் பலவீனமானவர்களுக்கு உதவு
நிகழ்வு
நீண்ட நாட்களாகக் குழந்தையே இல்லாத ஓர் அருமையான கணவன் - மனைவிக்கு
அழகானதொரு மகன் பிறந்தான். அவனுக்கு எழில் என்று பெயர்சூட்டிய
அந்தக் கணவனும் மனைவியும் அவன்மீது தங்களுடைய மொத்த அன்பையும்
காட்டி வந்தனர். 'எழில்தான் தங்களுடைய வாழ்வில் எல்லாம்' என்று
நினைத்து வாழ்ந்து வந்த அந்தக் கணவன் மனைவியினுடைய வாழ்வில்
திடிரென்று புயல்வீசத் தொடங்கியது.
அப்பொழுது எழிலுக்கு நான்குவயது இருக்கும். நன்றாக ஓடியாடி
விளையாடிக்கொண்டிருந்த எழிலால் திடிரென்று நடக்கமுடியாமல் போனது.
அவனுடைய பெற்றோர் அவனை மருத்துவமனைக்குத் தூக்கிச்சென்று
சிகிச்சை அளித்துப் பார்த்தபொழுதுதான், அவனுடைய நரம்பு மண்டலம்
பாதிக்கப்பட்டிருக்கின்றது என்ற உண்மை தெரியவந்தது இதை அறிந்த
அவனுடைய பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள்.
'பலவருடங்களுக்குப் பிறகுப் பிறந்தக் நம் குழந்தைக்கு இப்படியோர்
நிலைமையா?' என்று அவர்கள் வருத்தப்பட்டார்கள். இருந்தாலும், எவ்வளவு
பணம் செலவானாலும் பரவாயில்லை, மகனை அவனுடைய முந்தைய நிலைக்குக்
கொண்டுவரவேண்டும் என்று எத்தனையோ மருத்தவமனையை ஏறி இறங்கினார்கள்.
ஏறக்குறைய இரண்டாண்டுகால சிகிச்சைக்குப் பின், அவனால் ஓரளவு
நடக்க முடிந்தது.
இதற்குப் பிறகு எழிலின் பெற்றோர் அவனைத் தங்களுடைய வீட்டிற்கு
மிக அருகில் இருந்த ஓர் ஆங்கில வழிக்கல்விப் பள்ளியில்
சேர்த்து படிக்க வைத்தனர். அவனும் அங்கு நன்றாகப் படித்துவந்தான்.
ஒருநாள், பள்ளிக்கூடம் முடிந்ததற்கான மணி ஒலித்தவுடன் எல்லா மாணவர்களும்
வெளியே வேகமாக ஓடிவந்தனர். எல்லாரும் வெளியே வந்தபிறகு எழில்
மெல்ல நடந்துவந்தான். ஆனால், அவன் தனியாக வரவில்லை. அவனுடைய நண்பன்
அன்பரசனின் துணையுடன் வந்தான். உண்மையாகவே, பள்ளிக்கூடத்தில்
அன்பரசன்தான் எழிலுக்கு உற்ற துணையாக இருந்து, எழில் எங்கு
சென்றாலும் அவனோடு சென்று, அவனுக்குப் பக்க பலமாக இருந்தான்.
இதனால் நடப்பதற்கு கஷ்டப்பட்ட எழில் அன்பரசனின் உதவியால் அந்தக்
கஷ்டத்தை மறந்து பள்ளிக்கூட நாட்களை மிகவும் மகிழ்ச்சியாக செலவழிக்கத்
தொடங்கினான்.
இந்நிகழ்வில் வரும் எழிலுக்கு பக்க பலமாக இருந்த அன்பரசனைப்
போன்று, உடல் பலவீனமாக இருக்கும் ஒவ்வொருக்கும் ஓர் அன்பரசன்
கிடைத்தால், அவர்களுடைய வாழ்க்கை எத்துணை அழகாக இருக்கும்!
யோசித்துப் பார்க்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.
உடல்நலமற்றிருந்தவருக்கு உதவியாய் வந்த இயேசு
நற்செய்தியில் இயேசு, பெத்சதா குளத்தருகில் முப்பத்தெட்டு ஆடுகளாக
உடல் நலமற்றுப் படுத்தபடுக்கையாய் கிடந்த ஒருவருக்குக் குணமளிக்கின்ற
நிகழ்வினைக் குறித்து வாசிக்கின்றோம். உடல் நலமற்றிருந்த அந்த
மனிதர் முப்பத்தெட்டு ஆண்டுகளாகப் படுக்கையில் கிடந்தார் என்பது,
இஸ்ரயேல் மக்கள் பாலைவனத்தில் முப்பத்தெட்டு ஆண்டுகளாக அலைந்து
திரிந்ததை நினைவூட்டுகின்றது (இச 2:14). இவ்வளவு நீண்டகாலமாக
படுக்கையில் கிடந்த அந்த மனிதரை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்தது
மிகவும் வியப்பாக இருக்கின்றது. அப்படிப்பட்ட மனிதர்மீது இயேசு
அன்புகொண்டு, அவரைக் குணப்படுத்துகின்றார்.
இயேசு அம்மனிதரை நலமாக்கிய விதம் மிகவும் புதுமையாக இருக்கின்றது.
இயேசு தாமாகவே அவரிடம் சென்று, "நீர் நலம்பெற விரும்புகிறீரா?"
என்று கேட்கின்றார். அவர் இயேசு கேட்ட கேள்விக்கு ஆமாம் என்று
பதில் சொல்லாமல், தன்னுடைய இயலாமையையும் அடுத்தவரின் கண்டுகொள்ளாத்
தன்மையையும் அவரிடம் எடுத்துச் சொல்கின்றார். அதன்பிறகுதான் இயேசு
அம்மனிதரிடம், "எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு
நடந்து செல்லும்" என்று சொல்லி குணப்படுத்துகின்றார்.
இயேசுவைப் போன்று நாமும் 'எளியவர்'மீது இரங்குவோம்
முப்பத்தெட்டு ஆண்டுகளாக உடல் நலமற்றிருந்த அம்மனிதரைக் இயேசு
குணப்படுத்தியது அவர் மெசியா என்பதை நிரூபிக்கின்றது (எசா 35:
3-6) எப்படியென்றால், மெசியா காலத்தில் என்னென்ன நடக்கும் என்று
இறைவாக்கினர்கள் சொன்னது இயேசுவில் நிறைவேறுகின்றது. மேலும் இந்நிகழ்வு
நாமும் நம்மோடு வாழக்கூடிய எளியவர், வறியவர், உடல் நலமற்றோர்,
மாற்றுத்திறனாளிகள்மீது இரக்கம்கொண்டு வாழ அழைப்புத் தருகின்றது.
பெத்சதா என்றால், இரக்கத்தின் அல்லது அருளின் வீடு என்பது
பொருள். இங்கு இயேசுவின் இரக்கம் அந்த உடல்மற்றவர்மீது வெளிப்பட்டதுபோல்,
நம்முடைய இரக்கம் மற்றவர்களிடம் வெளிப்படச் செய்வோம். இயேசுவின்
உண்மையான சீடர்களாவோம்.
சிந்தனை
'இறக்கத்தானே பிறந்தோம். அதுவரை இரக்கத்தோடு இருப்போம்' என்பார்
அன்னைத் தெரசா. ஆகையால், நாம் நம்மோடு வாழக்கூடிய உடல் நலமற்றோர்,
மாற்றுத்திறனாளிகள் இன்னும் பல்வேறு பிணிகளால், பிரச்சினைகளால்
வருந்துவோர்மீது இயேசுவைப் போன்று இரக்கத்தோடும் அன்போடும கரிசனையோடும்
நடந்துகொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
விரும்பினால் ஆசிரும் நலமும் பெறுவோம்
ஒருவன் ஆற்றங்கரையின் ஓரத்தில் அமர்ந்துகொண்டு தூண்டிலைத் தண்ணீரில்
போட்டுவிட்டு மிகப் பொறுமையாக வெகு நேரம்
காத்துக்கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த பெரியவர் ஒருவர்
அவனைப் பார்த்துக் கேட்டார், "எவ்வளவு மீன்கள்
பிடித்திருக்கிறாய்?"
அதற்கு அவன் அவரிடத்தில், "நான் இப்பொழுது பிடிக்கப் போகும் ஒரு
மீனையும் இனிமேல் பிடிக்கப் போகும் இரண்டு மீன்களையும்
சேர்த்து மூன்று மீன்கள் பிடித்திருப்பேன்" என்றான் மிகவும் நம்பிக்கையுடன்.
அவனுடைய வார்த்தைகளைக் கேட்ட பெரியவர், "நீ விரும்பியது போன்று
நடக்கட்டும்" என்று அவனை வாழ்த்திவிட்டுச் சென்றார்.
அவன் அங்கிருந்து போனபோது தான் விரும்பியது போன்று மூன்று மீன்களைப்
பிடித்திருந்தான்.
நம்முடைய வாழ்வும் தாழ்வும் நம்முடைய விருப்பத்தைப் பொறுத்தே
என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து முப்பதெட்டு ஆண்டுகளாக
உடல் நலம் குன்றியிருந்த ஒருவரைக் குணப்படுத்துகிறார். விவிலிய
அறிஞர்கள் இந்த நிகழ்வில் வரும் மனிதரை இஸ்ரயேல் இனத்தோடு ஒப்பிட்டுப்
பேசுவர். இஸ்ரயேல் மக்கள் எப்படி பாலைவனத்தில் முப்பத்தெட்டு
ஆண்டுகளாக (?) வேதனை அனுபவித்தார்களோ அது போன்று உடல் நலம்
குன்றிய இந்த மனிதரும் முப்பதெட்டு ஆண்டுகளாக படுத்த படுக்கையாய்
கிடக்கிறார். ஆண்டவர் இயேசு அப்படிப்பட்ட மனிதர்மீது இரக்கம்
கொண்டு அவரைக் குணப்படுத்துகிறார்.
இயேசு அம்மனிதரைக் குணப்படுத்திய விதம் நம்முடைய
சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. இயேசு அவரிடம், "நலம்பெற
விரும்புகிறாயா?" என்று கேட்கின்றார். எதற்கு இயேசு
அவரிடத்தில் இப்படிப்பட்ட ஒரு கேள்வியைக் கேட்கவேண்டும்,
அவருடைய நிலையைக் கண்டு அவருக்கு இயேசு நலமளித்திருக்கலாமே என
நாம் எண்ணலாம். ஆனால் முப்பதெட்டு ஆண்டுகளாக படுத்த
படுக்கையாய் கிடந்த மனிதர், எதற்கு நாம் நலம்பெற வேண்டும்?,
ஒருவேளை நலம்பெற்றாலும் இனிமேலும் நம்மால் எப்படி வாழ
முடியும்? என்று நினைத்திருக்கலாம். அதனால்தான் இயேசு
அவரிடத்தில் நலம்பெற விரும்புகிறாயா? என்று கேட்கின்றார்.
இயேசு இப்படிக்கேட்ட உடன் அவர், "ஐயா, தண்ணீர் கலங்கும்போது
என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை. நான் போவதற்கு முன்
வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார்" என்று குணம்பெறுவதற்கான
தன்னுடைய விருப்பத்தை தெரியப்படுத்துகிறார். உடனே இயேசு
அவரிடத்தில், "எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு
நடந்து செல்லும்" என்கிறார். உடனே அம்மனிதர் நலமடைந்து
தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்கிறார்.
மனித விருப்பமும் இறை விருப்பமும் ஒன்றாக, ஒரே நேர்கோட்டில்
இணையும்போது அங்கே அதிசயங்களும் அற்புதங்களும் நிகழ்கின்றது
என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்றாக இருக்கின்றது. இயேசு
நிகழ்த்துகின்ற பெரும்பாலான புதுமைகளில் மனித விருப்பம்
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது என்று
சொன்னால் அது மிகையாகாது. கானானியப் பெண்மணியின் மகளை இயேசு
குணப்படுத்துகிறபோதும் இயேசு, "அம்மா உமது நம்பிக்கை பெரிது.
நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்" என்கிறார் (மத் 15:
28). ஆக, அடிப்படையில் நம்முடைய விரும்பம் நாம் குணம்பெற,
ஆசிரைப் பெற முக்கியப் பங்காற்றுகின்றது.
தூய அகுஸ்தினாரும் இதைத்தான், "உன் விரும்பம் இன்றி உன்னைப்
படைத்த கடவுள் உன் விரும்பமின்றி உன்னை மீட்க மாட்டார்"
என்பார்.
இயேசு அம்மனிதரைக் குணப்படுதியதோ ஓய்வுநாள். ஓய்வுநாளில் இயேசு
இத்தகைய ஒரு செயலைச் செய்ததும் இது சட்டத்திற்கு எதிரான ஒரு
செயல் என்கின்றனர் அங்கிருந்த யூதர்கள். நாம் நல்ல காரியம்
செய்கின்றபோது அதிலே குறை கண்டுபிடிக்கும் மனிதர்களை இது
சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. முப்பத்தெட்டு ஆண்டுகளாக
அந்த மனிதர் படுத்த படுக்கையாய் கிடந்தார். அப்போதெல்லாம் அவரை
யாருமே கண்டுகொள்ளவில்லை, அவர் குணமடைந்ததும் அவர்மீதும்,
அவரைக் குணப்படுத்திய இயேசுவின் மீது குறை கண்டுபிடிக்க
ஓடிவந்து வந்தது மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது.
இயேசுவின் மனநிலையோ மக்கள் வாழ்வு பெற வேண்டும் என்பதுதான்.
அதனால் அவர் ஓய்வுநாள் என்றெல்லாம் பாராது குணப்படுத்தினார்.
இதிலும் குறை கண்டுபிடித்தார்கள் என்றால் பரிசேயக்கூட்டம்
எவ்வளவு கீழ்த்தரமானவர்கள் என்பதை நாம் கற்பனை செய்து
பார்த்துக்கொள்ளலாம். ஆகையால், இயேசுவிடத்தில் இருந்த இரக்க
குணத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும், அது மட்டுமல்லாமல்,
நம்முடைய வாழ்க்கையில் நலமும் ஆசிரும் பெற வேண்டும் என்றால்
அதற்கு நல் விரும்பம் கொண்டிருக்கவேண்டும். நற்செய்தியில்
வரும் மனிதர் தான் குணமடைய வேண்டும் என்று விருப்பம்
கொண்டிருந்தார், அதனால் குனம்பெற்றார்.
எனவே, நாம் நம்முடைய வாழ்வு வளம்பெற விருப்பம் கொண்டிருப்போம்,
அதோடு இறைவனிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்போம், அதன்வழியாக
இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
கோவிலிலிருந்து தண்ணீர் வருவதைக் கண்டேன்; அது பாயும் இடமெல்லாம்
யாவும் உயிர் வாழும்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 47: 1-9,12
இந்த ஆறு பாயுமிடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும்
நிகழ்வு
மிகப்பெரிய மறைபோதகரான டி.எல்.மூடி (D.L.Moody) ஒரு கூட்டத்தில்
பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு கண்ணாடிக் குடுவையை எடுத்து, அதை
மக்களிடம் காட்டி, "அன்பார்ந்த மக்களே! இந்தக் கண்ணாடிக்
குடுவையில் உள்ள காற்றினை எப்படி வெளியேற்றுவது?" என்று
கேட்டார். உடனே கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து, "ஒரு
துருத்தியை வைத்து, இந்தக் கண்ணாடிக் குடுவையில் உள்ள காற்று
முழுவதையும் உறிஞ்சி எடுத்து விடலாம்" என்றார். அவருக்குப் பதிலளித்துப்
பேசிய டி.எல்.மூடி, "இந்தக் கண்ணாடிக் குடுவையில் உள்ள
காற்றினை ஒரு துருத்தியை வைத்து உறிஞ்சி எடுக்கும்போது, இதிலுள்ள
காற்று முழுவதும் வெளியே எடுக்கப்படலாம். அதே நேரத்தில் அழுத்தத்தில்
இந்தக் கண்ணாடிக் குடுவையே உடைவதற்கு வாய்ப்பிருக்கிறது" என்கின்றார்.
இன்னும் ஒருசிலர் அவர் கேட்ட கேள்விக்கான பதிலை அளித்தார்கள்.
ஆனால், யாருடைய பதிலும் சரியான பதிலாக இல்லை. இறுதியில் அவரே
அவருடைய கேள்விக்கான பதிலை அவர்களிடம் சொன்னார்: "இந்தக் கண்ணாடிக்
குடுவையில் உள்ள காற்றினை அகற்றுவதற்கு மிகச் சுலபமான வழி, இந்தக்
குடுவை முழுவதும் தண்ணீரால் நிரப்புவதுதான்."
இதைச் சொல்லிவிட்டு அவர் அவர்களிடம் தொடர்ந்து பேசினார்: "ஒரு
நல்ல கிறிஸ்தவர் என்பவர், தன்னிடம் இருக்கும் பாவத்தை அகற்றினால்
மட்டும் போதாது. அவர் தூய ஆவியாரால் தன்னை முற்றிலும் நிரப்பி,
அவருடைய தூண்டுதலுக்கு ஏற்ப வாழவேண்டும். அப்பொழுதுதான் அவர்
ஒரு நல்ல கிறிஸ்தவராக இருக்கமுடியும். அப்படியில்லாமல் அவர் தன்னுடைய
வாழ்விலிருந்து பாவத்தை/தீமையை மட்டும் அகற்றிவிட்டு, தூய ஆவியாரால்
தன்னை நிரப்பவில்லையென்றால், அவருடைய வாழ்வில் வெறுமை மட்டுமே
மிஞ்சும்."
ஒரு கிறிஸ்தவர் தன்னை முற்றிலும் தூய ஆவியாரால் நிரப்பி வாழ்வது
அவருடைய வாழ்விற்கு அர்த்தத்தைத் தரும் என்ற உண்மையை எடுத்துச்
சொல்லும் இந்நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய முதல் வாசகமும்
உயிருள்ள தண்ணீராம் தூய ஆவியார் பொங்கிப் பரவுகின்ற இடங்களிலெல்லாம்
உயிர்கள் வாழும் என்ற உண்மையை எடுத்துச் சொல்கின்றது. அது எப்படி
என்பதை இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
தூயகத்திலிருந்து பாய்ந்து எல்லா உயிரினங்களுக்கும்
வாழ்வளிக்கும் தண்ணீர்
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட முதல்
வாசகத்தில், இறைவாக்கினர் எசேக்கியேல் ஒரு காட்சி
காண்கின்றார். அக்காட்சியில் ஒரு மனிதர் அவரைத்
திருக்கோவிலுக்குக் கூட்டிச் செல்கின்றார். அங்கு
தூயகத்திலிருந்து தண்ணீர் எல்லா இடங்களுக்கும் பாய்ந்தோடி, அது
பாய்ந்தோடும் இடங்களில் எல்லாம் வளம்கொழிக்கச் செய்கின்றது.
மேலும் அந்தத் தண்ணீர் பாய்ந்தோடும் இடங்களிலெல்லாம் மரங்கள்
செழித்து வளர்ந்து, கனி கொடுக்கின்றது; ஏராளமான உயிரினங்கள்
வாழ்வதற்கும் காரணமாக இருக்கின்றது. அது மட்டுமல்லாமல், அந்தத்
தண்ணீர் கடலில் கலக்கின்றபோது, அது நல்ல தண்ணீராக மாறுகின்றது.
இவ்வாறு தூயகத்திலிருந்து வரும் அந்தத் தண்ணீர் எல்லா
உயிரினங்கள் வளர்வதற்கும் காரணமாக இருக்கின்றது.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலில் குறிப்பிடப்படும் இத்தண்ணீர்
யார்? இதன் தன்மை என்ன? என்று சிந்தித்துப் பார்ப்பது இன்னும்
சிறப்பானது
உயிருள்ள தண்ணீர் என்னும் தூய ஆவியார்
இன்றைய முதல் வாசகத்தைக் குறித்து இன்னும் தெளிவாகப்
புரிந்துகொள்ள வேண்டுமெனில், அதை யோவான் நற்செய்தியில் (யோவா
7: 37-39) இயேசு பேசுகின்ற வார்த்தைகளோடு இணைத்துச்
சிந்தித்துப் பார்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
இயேசு கூறுவார், "யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம்
வரட்டும்; என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும். மறைநூல்
கூறுவது போல் அவருடைய உள்ளத்திலிருந்து வாழ்வு தரும் தண்ணீர்
ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்." யோவான் நற்செய்தியாளர் இயேசு
கூறிய இவ்வார்த்தைகளைப் பதிவுசெய்துவிட்டு, தன்னிடம் நம்பிக்கை
கொண்டிருப்போர் பெறப்போகும் தூய ஆவியாரைக் குறித்தே இயேசு
இவ்வாறு சொன்னார் என்பார். அப்படியென்றால், வாழ்வுதரும்
தண்ணீர் தூய ஆவியார் என்பதும் இயேசுவிடம் நம்பிக்கை
கொள்வோருக்கு அவர் தூய ஆவியாரை வழங்குவார் என்பதும்
உண்மையாகின்றது. இத்தகைய வாழ்வு தரும் தண்ணீராம் தூய ஆவியாரை
நமக்கு வழங்கப் போகும் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டு
வாழ்கின்றமா? என்பது சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒரு
கேள்வியாக இருக்கின்றது.
சிந்தனை
'மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது; நீர்த்திரளின்மேல்
கடவுளின் ஆவியார் அசைவாடிக்கொண்டிருந்தார்' என்கிறது
தொடக்கநூல் (தொநூ 1:2). தூய ஆவியார் எங்கு இருந்தாரோ அங்கு
வாழ்வு இருந்தது. அத்தகைய தூய ஆவியாரால் நாம் நிரப்படப்பட,
நாம் இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து, அவருடைய வார்த்தையின்
படி நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
|
|