Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரபபாடல்கள் 1539-தயை செய்வாய் நாதா தூய வெள்ளி

தயை செய்வாய் நாதா என் பாவங்களை நீக்கும்

1. அன்புடனே ஏழை என்மேல் இரக்கம் வையும்
அனுதபித்து என் பிழையை அகற்றுமையா
பாவமதை நீக்கி என்னைப் பனிபோலாக்கும்
தோஷமெல்லாம் தீர்த்து என்னைத் தூய்மையாக்கும்

2. என்குற்றம் நான் அறிவேன் வெள்ளிடைமலைபோல்
தீவினையை மறவாதென் மனது என்றும் - உம்
புனிதத்தைப் போக்கித்தான் பாவியானேன் - நீர்
தீமையென்று கருதுவதைத் துணிந்து செய்தேன்

3. பாவத்தில் ஜென்மித்தேன் நீயறிவாய்
தோஷத்தில் பெற்றெடுத்தாள் என் தாயே - உம்
தீர்ப்புத்தனில் குற்றமோ குறையோ இல்லை - நின்
முடிவுகளில் நீதியையும் எதிர்ப்பாரில்லை

4. உள்ளத்தில் உண்மையை நீர் விரும்புகின்றீர் - என்
ஆத்துமத்தின் அந்தரத்தில் அறிவை ஊட்டும்
என் பாவம் தீர்ப்பாயின் தூய்மையாவேன்
பனிவெண்மைக்குயர்வாகப் புனிதமாவேன்

5. மகிழ்வூட்ட நான் கேட்டு இன்புறுவேன்
நொறுங்கிய என் எலும்புகளோ ஆனந்திக்கும் - என்
பாதகத்தைக் கண்ணோக்கிப் பார்க்காதேயும்
தோஷத்தைத் துடைத்து என்னைச் சுத்தமாக்கும்

6. தூயமனம் எனக்கொன்று தந்தருளும்
திடவுள்ளம் எனக்களித்துக் காத்திடுவாய்
உனைவிட்டு நீக்கிடாதீர் பாவி என்னை
எனைவிட்டுன் ஆவியையோ அகற்றிடாதீர்

7. மறுபடியுன் துணைதந்து மகிழ்வழித்து - என்
மனப்போக்கின் ஆர்வத்தை நிலைநிறுத்தி
பாதகர்க்குன் போக்குகளைப் புகட்டுவேன் நான்
தீயவர்கள் உன் திருவடிக்குத் திரும்பிடுவார்

8 என்துணை நீ ஏகபரா எனைக்காத்திடும் - என்
நா என்றும் உன் அன்பை உச்சரிக்கும் - என்
வாயிதழைத் திறந்தருளும் வல்ல தேவா - அது
வான்மட்டும் உன் புகழைப் போற்றிடுமே!

9 பலிகள் எல்லாம் உன் மனதைப் பற்றவேயில்லை
தகனப்பலி நான் கொடுத்தேன் தள்ளிவிட்டாய்
நொந்தழும் என் உள்ளத்தைச் சமர்ப்பிப்பேன்
தாழ்ச்சியுள்ள இதயத்தை தள்ளிடாய் நீ

10. வல்லவராம் பிதாவையும் நாம் வாழ்த்திடுவோம்
சுதன் யேசுக்கிறிஸ்துவுக்கும் ஸ்தோத்திரமே - நம்
உள்ளத்தில் குடிகொள்ளும் ஆவிக்கும்
என்றென்றும் புகழ் ஒலிக்க ஆமேன் (தயை செய்வாய்)

 

உனக்காக நான் மரித்தேனே, எனக்காக நீ என்ன செய்தாய்?