Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தவக்காலப்பாடல்கள் -மரணிக்கப் பிறந்தவர்  


மரணிக்கப் பிறந்தவர் விண்ணின் சுதன் - அதை
தரணிக்குச் சொல்லுது சாம்பல் புதன்
சிலுவைச் சாம்பல் நெற்றியிலே - மரச்
சிலுவை மரணம் வெற்றியிலே

அடையாளங்களை அறிந்து கொள்வோம்- உயர்
அர்த்தங்களை நாம் தெரிந்து கொள்வோம்

சாம்பலை நெற்றியில் பூசிக் கொள்வோம் - நாம்
பாவத்தை தூரமாய் வீசிச் செல்வோம்

சாம்பல் என்பது தவத்தின் தொடக்கம்
தவங்கள் எல்லாம் மீட்பில் அடக்கம் !
தன்னை உணர்தல் மனதின் திருப்பம்
திருந்தி வருதல் இறைவன் விருப்பம்

தவநாள் வருவது அழுதிடவா
தலைவனை விடாது தொழுதிடவா
ஒறுத்தல் முயற்சிகள் எடுத்திடவா - நாம்
தவறுகள் வராமல் தடுத்திடவா

சிலுவை என்பது தியாகச் சின்னம்
வலியை அன்பு ஏற்கும் திண்ணம் !
நெற்றியில் அதனை அணிந்த பின்னும்
நெஞ்சினில் ஏனோ பாவியின் எண்ணம்

தவநாள் வருவது திருந்திடவே
தவறுகள் உணர்ந்து வருந்திடவே !
மனிதம் மனதில் மலர்ந்திடவே - இறை
அன்பின் அருகில் இருந்திடவே !

சாம்பல் புதனில் மாற்றம் பிறக்கும்
பாவம் அழிந்தால் வாழ்க்கை சிறக்கும்
தீயில் குருத்து ஓலைகள் இறக்கும
நேசன் உயிர்ப்பு விண்ணைத் திறக்கும்

அன்பை அறிவதே தவக்காலம்
தன்னைத் தருவதே தவக்காலம்
மனம்போல் வாழும் மனிதர்களை - மனம்
திரும்பச் செய்வதே தவக்காலம்.







 

தவக்காலம் இது தவக்காலம்
வாழ்வுகள் மலர்ந்திடும் அருட்காலம்