Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                      
                                                       ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் (60: 1-6)

எருசலேமே! எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! இதோ! இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும்! பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர்.

உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்; அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்; தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்; உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர்.

அப்பொழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்; உன் இதயம் வியந்து விம்மும்; கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்; பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும். ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்; மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்; சேபா நாட்டினர் யாவரும் பொன், நறுமணப் பொருள் ஏந்திவருவர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா 72: 1-2. 7-8. 10-11. 12-13 (பல்லவி: 11) Mp3
=================================================================================
 பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.

1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.
2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக.
-பல்லவி

7 அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.
8 ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார்.
-பல்லவி

10 தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டு வருவார்கள்.
11 எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள். எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள்.
-பல்லவி

12 தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார்.
13 வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்.
-பல்லவி


================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
புறவினத்தாரின் திருத்தூதர் என்று அழைக்கப்படும் புனித பவுலடியார் பிற இன மக்களும் கிறிஸ்து இயேசுவை அறிந்து புதிய உடன்படிக்கையின் பங்காளிகளாக மாறுகின்றனர் என்று இவ்வாசகத்தில் கூறுகின்றார்.



பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளர் என இப்போது வெளியாக்கப்பட்டுள்ளது.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் (3: 2-3a,5-6)

சகோதரர் சகோதரிகளே, உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன். அந்த மறைபொருள் எனக்கு இறைவெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது.

அந்த மறைபொருள் மற்ற தலைமுறைகளில் வாழ்ந்த மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

ஆனால், இப்போது தூய ஆவி வழியாகத் தூய திருத்தூதருக்கும் இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும், வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 2: 2

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் விண்மீன் எழக் கண்டோம்; அவரை வணங்க வந்திருக்கிறோம். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
அரசரை வணங்க வந்திருக்கிறோம்.

புனித மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (2: 1-12)

ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, "யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்" என்றார்கள்.

இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று. அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்றுகூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான்.

அவர்கள் அவனிடம், "யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும். ஏனெனில், `யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்' என்று இi றவாக்கினர் எழுதியுள்ளார்" என்றார்கள்.

பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக் கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்துகொண்டான்.

மேலும் அவர்களிடம், "நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்" என்று கூறி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான்.

அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றி குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது.

அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.

வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து, பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.

ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
திருக்காட்சிப் பெருவிழா

(எசாயா 60: 1-6; எபேசியர் 3: 2-3, 5-6, மத் 2: 1-12)

எல்லாருக்குமான இறைவன்

நிகழ்வு

டோனி டி மெல்லோவின் கதை இது. ஓர் ஊரில் இறையடியார் ஒருவர் இருந்தார். அவர் இறைவனைத் தொழாத நாளில்லை. அப்படிப்பட்டவர் ஒருநாள் இறைவனிடம் மிக உருக்கமாக வேண்டிக்கொண்டிருக்கும்போது, இறைவன் அவருக்கு முன்பாகத் தோன்றினார். இறைவனின் தரிசனத்தை சிறிதும் எதிர்பார்த்திராத இறையடியார், அவருக்கு முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.

பின்னர் அவர் இறைவனைப் பார்த்து, "இறைவா! உன் கருணையோ கருணை. எளியவன் என்னைப் பார்க்க வந்திருக்கின்றாயே... சொல்லும் உமக்காக நான் என்னவேண்டுமானாலும் செய்கிறேன்"என்றார். உடனே இறைவன் அவரைப் பார்த்து, "எனக்கு ஃபுட்பால் ஆட்டம் பார்க்கவேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. பக்கத்தில் எங்காவது ஃபுட்பால் ஆட்டம் நடந்துகொண்டிருந்தால் என்னை அங்கு கூட்டிக்கொண்டு போவாயா?"என்று கேட்டார். "இதோ உடனே கூட்டிக்கொண்டு போகிறேன் சாமி"என்று இறையடியார் இறைவனை ஃபுட்பால் ஆட்டம் நடைபெற இருந்த ஒரு மைதானத்திற்குக் கூட்டிக் கொண்டு போனார்.

அவர்கள் மைதானத்திற்குள் சென்ற சிறிது நேரத்தில் போட்டி ஆரம்பமானது. அன்றைய நாளில் போட்டியானது கிறிஸ்தவர்கள் அணிக்கும் சீக்கியர்கள் அணிக்கும் இடையே நடைபெற்றது. போட்டி தொடங்கிய சிறுதுநேரத்திலே கிறிஸ்தவர்களின் அணியைச் சேர்ந்தவர்கள் முதல் கோலைப் போட்டார்கள். இதைப் பார்த்துவிட்டு இறைவன் மிகவும் உற்சாகமாகக் கத்தினார். தன்னுடைய தலையில் அணிந்திருந்த தொப்பியை மேலும் கீழும் தூக்கிப் போட்டுப் பிடித்தார். இதைப் பார்த்த இறையடியாருக்கு மிகவும் வியப்பாக இருந்தது. இறைவன் ஃபுட்பால் ஆட்டத்தை நன்றாக இரசிக்கிறார் போலும், இரசிக்கட்டும் என்று நினைத்துவிட்டு, எதுவும் கேட்காமல் அமைதியாக இருந்தார்.

நேரம் ஆக ஆக, போட்டி இன்னும் சூடுபிடித்தது. யாரும் எதிர்பாராத தருணத்தில் சீக்கியர்களின் அணியைச் சேர்ந்தவர்கள் ஒரு கோலைப் போட்டார்கள். இதைப் பார்த்துவிட்டு இறைவன் முன்புபோல் உற்சாகத்தில் கத்தினார், தன்னுடைய தொப்பியைக் கழற்றி மேலும் கீழும் தூக்கப் போட்டுப் பிடித்தார். இது இறையடியாருக்கு இன்னும் ஆச்சரியத்தைத் தந்தது. உடனே அவர் இறைவனை அழைத்து, "இறைவா! நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்? கிறிஸ்தவ மதமா? சீக்கிய மதமா?"என்று கேட்டார். அதற்கு இறைவன், "நான் எந்த மதத்தைச் சார்ந்தவன் என்பதைவிட எல்லாருக்கும் சொந்தமானவன், எல்லாரும் என்னுடைய மக்கள். அதனால்தான் நான் இரு தரப்பினரும் கோல்போட்ட போது மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன்"என்றார்.

இறைவன் எல்லாருக்கும் பொதுவானவர். அவரை ஒரு குறிப்பிட்ட பிரிவிற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட குலத்திற்கோ மட்டும் சொந்தமாக்குவது அர்த்தமற்ற செயல்.

குழதை இயேசுவைத் தேடிவந்த ஞானிகள்

இறைவன் எல்லாருக்கும் பொதுவானவர் என்ற உண்மையினை உணர்த்தும் திருக்காட்சி பெருவிழாவை அல்லது மூன்று ஞானிகளுடைய பெருவிழாவை இன்று நாம் கொண்டாடி மகிழ்கின்றோம். வானவியல் அறிஞர்களான இந்த மூன்று பேருமே வானத்தில் தோன்றிய விண்மீனைப் பார்த்துவிட்டு, யூதர்களின் அரசர் தோன்றியிருக்கின்றார் என்று உறுதிசெய்துகொண்டு, அவரைப் பார்க்க காணிக்கைப் பொருட்களோடு எருசலேமை நோக்கி வருகிறார்கள். வந்து குழந்தை இயேசுவைச் தரிசிகிறார்கள். பின்னர் தங்களுடைய இல்லத்திற்கு மாற்றுப் பாதையில் திரும்பிச் செல்கிறார்கள்.

இன்று இம்மூன்று ஞானிகளின் விழாவைக் கொண்டாடுகின்ற இவ்வேளையில், இவ்விழா நமக்குச் சொல்லும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.


இறைவன் வாக்கு மாறாதவர்

விண்மீன் வழிகாட்டுதலின் பேரில் எருசலேமிற்கு வந்த மூன்று ஞானிகளும், அங்கிருந்த ஏரோது மன்னனிடம் சென்று, "யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரை வணங்க வந்திருக்கிறோம்?"என்கிறார்கள். இதைக் கேட்டு ஏரோது கலங்கினாலும் தலைமைக் குருக்களையும் மறைநூல்கள் அறிஞர்களையும் கூப்பிட்டு, "மெசியா எங்கே பிறப்பார்?"என்று கேட்க, அவர்கள் பெத்லகேம் என்று சொல்கிறார்கள். இங்கேதான் நாம் ஒன்றை ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். மெசியா பெத்லகேமில்தான் பிறப்பார் என்ற செய்தி மறைநூல் அறிஞர்களுக்கும் தலைமைக்குருக்களும் தெரிந்தபோதும், அவர்கள் மூன்று ஞானிகள் சொன்னதைக் கேட்டு இயேசுவை/மெசியாவைப் பார்க்கச் செல்லவில்லை. மாறாக மூன்று ஞானிகள்தான் இறைவார்த்தையை நம்பி, இயேசுவைக் காணச் செல்கின்றார்கள். கடைசியில் கண்டுகொள்ளவும் செய்கிறார்கள்.

இறைவன் சொன்ன சொல் மாறாதவர் (13:8), அப்படிப்பட்டவருடைய வார்த்தைகளை நம்பிச் செயல்பட்ட மூன்று ஞானிகளைப் போன்று நாமும் செயல்பட்டால், இறைவனின் ஆசிரைப் பெறுவது உறுதி.

இயேசு இறைவன் எல்லாருக்கும் பொதுவானவர்


இயேசுவைக் காணவந்த மூன்று ஞானிகளுமே யூதர்கள் அல்ல, அவர்கள் புறவினத்தார். அப்படியிருந்தபோதும் யூதர்களின் அரசர் (?) என்று அறியப்பட்ட இயேசு, அவர்களுக்கும் தன்னை வெளிப்படுத்துகின்றார். இது ஆண்டவராகிய இயேசு யூதர்களுக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் பொதுவானவர் என்ற உண்மையை மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றது. இறைவன் எல்லாருக்கும் பொதுவானவர் என்றால், இறைவன் என் குலத்திற்கு, என் இனத்திற்கு மட்டும்தான் சொந்தம் என்று சொந்தம் கொண்டாடுவது எந்த விதத்தில் நியாயம்? அது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளத் தக்க ஒன்று.

இறைவன் எல்லாருக்கும் பொது என்றால், யாவரும் ஓர் குலம், ஒரு தாயின் மக்கள் என்பதுதான் நிஜம்

நேர்மையான உள்ளத்தோடு ஆண்டவரைத் தேடுவோர், அவரைக் கண்டுகொள்வர்

திருக்காட்சிப் பெருவிழா நமக்குக் கொடுக்கும் மிக முக்கியமான செய்தி, நாம் நேர்மையான உள்ளத்தோடு ஆண்டவரைத் தேடினோம் என்றால், அவரை நிச்சயமாக கண்டுகொள்வோம் என்பதாகும். மூன்று ஞானிகளும் இயேசுவை முழு மனதாக, அதே நேரத்தில் நேர்மையான உள்ளத்தோடு தேடினார்கள். இடையில் அவர்கள் ஏராளமான பிரச்சினைகளைச் சந்தித்திருக்கக்கூடும். அவற்றைக் கண்டெல்லாம் அவர்கள் மனந்தளராமல் ஆண்டவரைத் தேடினார்கள். இறுதியில் கண்டுகொள்ளவும் செய்தார்கள். நாமும் அவர்களைப் போன்று ஆண்டவரைத் தேடினால், நிச்சயம் கண்டுகொள்வோம் என்பது உறுதி.

சிந்தனை

இன்றைக்கு கடவுளின் பெயராலே பிளவுபட்டுக் கிடக்கின்றோம். இந்தக் கோவில் எங்களுக்குத்தான் சொந்தம், அவர்கள் இதில் வழிபட உரிமை என்று வேற்றுமை பாராட்டுகின்றோம். ஆனால், இறைவன் ஒருவர்தான், அவர் எல்லாருக்கும் பொதுவானவர். அப்படிப்பட்டவரை நாம் நம்மிடம் இருக்கின்ற வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமை உணர்வோடு வழிபடுவோம். அவரை முழு உள்ளத்தோடு தேடி, அவருக்கு உகந்த மக்களாவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================


ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா

I எசாயா 60: 1-6

II எபேசியர் 3: 2-3a, 5-6

III மத்தேயு 2: 1-12


எல்லாருக்கும் தன்னை வெளிப்படுத்தும் கடவுள்


நிகழ்வு

இரண்டு நண்பர்கள் சந்தித்துக் கொண்டார்கள். அப்பொழுது ஒருவர் மற்றவரிடம், "கடவுள் இருக்கிறாரா?" என்றார். "ஆம். இதில் என்ன சந்தேகம்?" என்றார் மற்றவர். உடனே முதலாமவர், "கடவுள் இருக்கிறார் என்று சொல்கிறீர்... அப்படியானால் ஏன் அவர் ஒருவருடைய கண்களுக்குத் தென்படுவதில்லை" என்றார். இரண்டாமவரோ, "எல்லாருக்கும் தென்படவேண்டும் என்பதற்காகவே அவர் ஒருவருக்குத் தென்படாமல் இருக்கிறார்" என்றார்.

"நீ சொல்வது எனக்கு விளங்கவில்லை; சற்று விளக்கமாக சொல்லும்" என்று முதலாமவர் கேட்டபொழுது, இரண்டாமவர் அவரைத் தன் அறைக்கு அழைத்துச்சென்று மின்விசிறியைக் காட்டி, "இந்த மின்விசிறியில் எத்தனை இறக்கைகள் உள்ளன?" என்றார். அதற்கு முதலாமவர் "மூன்று" என்று பதிலளித்தார். பின்னர் இரண்டாமவர் மின்விசிறியை சுழலவிட்டார். அது வேகமாகச் சுழன்றது. அதைப் பார்த்துவிட்டு இரண்டாமவர் முதலாமவரைப் பார்த்து, "இப்போது மின்விசிறியில் இருக்கும் இறக்கைகள் உன்னுடைய கண்களுக்குத் தெரிகின்றனவா?"என்றார். "தெரியவில்லை. ஆனால் உணரமுடிகிறது" என்றார் முதலாமவர்.

"மிகச் சரியாய் சொன்னீர்" என்ற இரண்டாமவர், தொடர்ந்து அவரிடம் பேச தொடங்கினார்: "மின்விசிறி சுழலாமல் இருந்தபோது, அதில் உள்ள இறக்கைகள் தெளிவாகத் தெரிந்தன என்றீர். அது சுழன்றபோது இறக்கைகள் இருப்பது உனக்குத் தெரியவில்லை என்கிறீர். இதற்குக் காரணம், மின்விசிறி சுழன்றுகொண்டே இருப்பதால்தான். இதுபோன்றுதான் கடவுள். கடவுள் எங்கும் சுழன்றுகொண்டே இருக்கிறார் அல்லது அவர் எங்கும் வியாபித்திருக்கிறார். இப்படி அவர் எங்கும் வியாபித்திருப்பதால், உனக்கும் எனக்கும் மட்டுமல்ல, எல்லாருக்கும் பொதுவானவராக இருக்கிறார். அதனாலேயே அவர் கண்களுக்குத் தென்படுவதில்லை; அவரை உணர மட்டுமே முடிகிறது."

ஆம். கடவுள் எங்கும் வியாபித்திருக்கிறார்; எல்லாருக்கும் பொதுவானவராக இருக்கின்றார். அதனாலேயே அவர் ஒருவருடைய கண்களுக்குத் தென்படுவதில்லை; அவரை உணர மட்டுமே முடிகிறது. இன்று நாம் எல்லாருக்கும் பொதுவான கடவுளாகிய இயேசு தன்னை உலகிற்கு வெளிப்படுத்திய திருக்காட்சிப் பெருவிழாவை கொண்டாடி மகிழ்கிறோம். இப்பெருவிழா நமக்கு உணர்த்துகின்ற செய்தி என்ன? இவ்விழாவிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன? ஆகியவற்றைக் குறித்து இப்போது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஞானிகளுக்குத் தன்னை வெளிப்படுத்திய இயேசு

மத்தேயு எழுதிய நற்செய்தி நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில், கீழ்த்திசையிலிருந்து வந்த ஞானிகளுக்கு ஆண்டவர் இயேசு தன்னை வெளிப்படுத்துவதை குறித்துக் வாசிக்கின்றோம். இந்தக் கீழ்த்திசை ஞானிகள் அரசர்களாக இருக்கலாம் என்பதை இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், வருகின்ற, "மன்னர் உன் உதய கதிர்நோக்கி நடைபோடுவர்"(எசா 60:3) என்ற இறைவார்த்தை எடுத்தியம்புதாக இருக்கிறது. ஆம் மன்னாதி மன்னரான இயேசுவைப் பார்க்க மன்னர்கள் வந்தார்கள். அவர்களுக்கு ஆண்டவர் இயேசு தன்னை வெளிப்படுத்தினார்.

லூக்கா நற்செய்தியில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை ஒட்டி நடைபெறக்கூடிய நிகழ்வுகளில், இடையர்களுக்கு ஆண்டவர் இயேசு தன்னை வெளிப்படுத்துவதாக வாசிக்கிறோம். மத்தேயு நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, அரசர்களுக்கு அல்லது ஞானிகளுக்குத் தன்னை வெளிப்படுத்துவதாக வாசிக்கின்றோம். இவையெல்லாம் நமக்கு ஓர் உண்மையை உரக்கச் சொல்வதாக இருக்கிறது. அது என்னவெனில் கடவுள் எல்லாருக்கும் பொதுவானவர் என்பதாகும். ஆம். கடவுள் யூதருக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் பொதுவானவராக இருக்கிறார். அதனாலேயே அவர் கீழ்த்திசையிலிருந்து வந்த ஞானிகளுக்கும் சமூகத்தில் மிகவும் வறியநிலையில் இருந்த இடையர்களுக்கும் தன்னை வெளிப்படுத்திகின்றார்.

இதில் வேடிக்கை என்னவெனில், எங்கோ இருந்து வந்த புறவினத்து மக்களான கீழ்த்திசை ஞானிகள் ஆண்டவனுடைய திருக்காட்சியைக் கண்டார்கள்; ஆனால் எருசலேமில் இருந்த தலைமைக் குருக்களும் ஏரோது அரசனும் இயேசுவைக் கண்டு கொள்ள முடியவில்லை. அதற்கு முக்கியமான காரணம், கீழ்த்திசை ஞானிகள் இயேசுவை நல்ல உள்ளத்தோடு தேடினார்கள். அதனால்தான் அவர்கள் ஆண்டவர் இயேசுவின் திருக்காட்சியைக் கண்டார்கள். கொடுங்கோலன் ஏரோதைச் சார்ந்தவர்களும் இயேசுவைக் கொல்லவேண்டும் என்று தேடினார்கள். அதனால் அவர்களால் இயேசுவை கண்டுகொள்ள முடியவில்லை. நாம் எத்தகைய மனநிலையோடு இயேசுவைத் தேடுகிறோம் என்பது குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பலநேரங்களில் நாம் இயேசு நல்ல மனதோடு தேடுவதில்லை; தன்னால நாட்டங்களுக்கத் தேடுகின்றோம். அதனாலேயே இயேசுவைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றோம். எப்பொழுது நாம் இயேசுவை நல்ல மனத்தோடு அல்லது நேர்மையான உள்ளத்தோடு தேடுகின்றோமோ (எபி 10:22) அப்பொழுது அவரைக் காண்போம் என்பது உறுதி.

பிற இனத்தவரும் இயேசுவின் உடன் பங்காளிகளாக முடியும்


ஆண்டவர் இயேசுவின் திருக்காட்சிப் பெருவிழா நமக்கு உணர்த்தக்கூடிய இரண்டாவது முக்கியமான செய்தி, பிற இனத்தவரும் இயேசுவின் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும், வாக்குறுதியின் உடன் பங்காளிகளுமாக மாறமுடியும் என்பதாகும்.

பிறப்பினால் இயேசு யூதர்களுக்குச் சகோதரராக இருக்கமுடியும். இத்தகைய பேறு மற்ற இனத்தவருக்குக் கிடைக்காமல் போகலாம்; ஆனால் நர்செஇதியிநால் இயேசுவினுடைய உடன் உரிமையாளரும் உடன் பங்காளிகளாகவும் முடியும். அதைப் புனித பவுல் மிக அழகாகச் சுட்டிக்காட்டுகிறார். மத்தேயு நற்செய்தி பன்னிரண்டாவது அதிகாரத்தில் கூட, இயேசு இதே செய்தியை நமக்கு எடுத்துக் கூறுகிறார். அங்கு அவர், "விண்ணுலகில் இருக்கின்ற என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என்னுடைய தாயும் சகோதரரும் சகோதரியும் ஆவார்" (மத் 12:50) என்பார். அப்படியானால் நாம் நற்செய்தியின் மூலம், அதாவது இயேசு கிறிஸ்துவின் மூலம், தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதன் மூலம் அவருடைய சகோதரர் சகோதரிகளாக மாற முடியும் என்பது உறுதி.

ஆண்டவரைத் தேடுவோருக்குக் கிடைக்கும் ஆசி

ஆண்டவருடைய திருக்காட்சி பெருவிழா நமக்கு உணர்த்துகின்ற மூன்றாவது மிக முக்கியமான செய்தி, ஆண்டவரைத் தேடுவோர்க்கு அவர் தரும் மகிழ்ச்சியாகும்.



கீழ்த்திசை ஞானிகள் ஆண்டவரைத் தேடி வந்தபோது அவரைக் கண்டு மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தார்கள் என்று நற்செய்தியில் வாசிக்கிறோம். ஆம் யாரெல்லாம் ஆண்டவரைத் தேடுகிறார்களோ அதுவும் நல்ல, நேர்மையான உள்ளத்தோடு தேடுகிறார்களோ அவர்களுக்கு ஆண்டவர் மகிழ்ச்சியும் இன்னபிற ஆசியையும் தந்து, அவர்களைத் தன்னுடைய அருளால் திரும்புகிறார். இது உறுதி. திருப்பாடல் ஆசிரியர்கூட, "சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரைத் நாடுவோருக்கு நன்மையும் எதுவும் குறைவுபடாது"(திபா 34: 10) என்று கூறுவார்.

ஆகவே, நாம் கீழ்த்திசை ஞானிகளைப் போன்று ஆண்டவரை தேடிச்செல்வோம். அதன் மூலம் அவர் தருகின்ற மகிழ்வையும் எல்லாவிதமான ஆசியையும் நிரம்பப் பெறுவோம்.

சிந்தனை

"ஆண்டவரைத் தேடுங்கள்; வாழ்வீர்கள்"(ஆமோ 5:4) என்பார் இறைவாக்கினர் ஆமோஸ். ஆகவே நாம் கீழ்த்திசை ஞானிகளைப் போன்று நல்ல மனத்தோடு ஆண்டவரை தேடிச் செல்வோம் அதன்மூலம் அவர் தருகின்ற மகிழ்வையும் எல்லாவிதமான ஆசியையும் நிறைவாகப் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
"கிழக்கிலிருந்து ஞானிகள் வந்து, 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீண் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்' என்றார்கள்" (மத்தேயு 2:2)

கீழ்த்திசை ஞானியர் இயேசுவை வணங்கினர் என்னும் செய்தி மத்தேயு நற்செய்தியில் இடம் பெறுகிறது. மனிதராகப் பிறந்த இறைக் குழந்தை இஸ்ரயேலரை மட்டுமன்றி உலக மக்கள் அனைவரையும் மீட்க வந்தார் என்னும் கருத்து இவ்வரலாற்றில் கூறப்படுகிறது. கீழ்த்திசை ஞானியர் பிற இனத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் நேரிய உள்ளத்தோடு கடவுளைத் தேடுகின்ற எல்லா மனிதருக்கும் அடையாளமாக அமைகின்றார்கள். இயற்கையில் தோன்றிய ஒரு சிறப்பு நிகழ்வு அவர்களைக் கடவுளிடம் இட்டுச் செல்கிறது. அதாவது, அதிசய விண்மீன் ஒன்று அந்த ஞானியருக்கு வழிகாட்டியாக அமைந்து அவர்களை வழிநடத்துகிறது.

மனிதர் கடவுளைத் தேடிக் கண்டுபிடிக்க உருவாக்கப்பட்டவர்கள். அவர்களுடைய உள்ளத்தின் ஆழத்தில் கடவுள் வேட்கை பதிந்துள்ளது. எனவேதான் தொடக்க காலத்திலிருந்தே மனிதர் கடவுளைத் தேடி வந்துள்ளனர். சில வேளைகளில் மனிதர்கள் கடவுளைத் தவறாக அடையாளம் கண்டதுண்டு. ஏன், இன்றுகூட கடவுள் என்றால் யார் என்னும் கேள்விக்கு ஒத்த கருத்துடைய பதில் கிடைப்பது அரிது. ஆனால் அமைதியின்றி அலைமோதுகின்ற மனித உள்ளம் கடவுளைக் கண்டு, உணர்ந்து அனுபவிக்கின்ற நிலையில்தான் உண்மையான அமைதியைக்; கண்டடையும். கடவுளிடமிருந்து அகன்று போகின்ற வேளைகளில் நம் உள்ளத்தில் சஞ்சலம் உண்டாவதை நாம் உணர்கின்றோம். ஞானியருக்கு வழிகாட்டிய விண்மீன் அவர்களுடைய பார்வையிலிருந்து மறைந்த வேளைகளில் அவர்களும் வழிதடுமாறியதுண்டு. ஆனால் அவர்களுடைய தேடல் தொடர்ந்தது. விண்மீன் காட்டிய ஒளியும் இறுதிவரை குறைபடவில்லை. கடவுளின் அருள் என்னும் ஒளி நம் இதயத்தில் ஒளிர்ந்து, நம்மை வழிநடத்துவதை நாம் உணர வேண்டும். நம் இதயம் நம்மில் தூண்டுகின்ற ஆழமான ஆவல்களை நாம் உதறித் தள்ளிவிடாமல் தொடர்ந்து வழிநடந்தால் உலகின் ஒளியாகிய கிறிஸ்துவைக் கண்டுகொள்வோம். ஒளிபெற்ற நாம் நம் நம்பிக்கைப் பயணத்தை மீண்டும் தொடர்வோம். பிறரை இயேசுவிடம் இட்டுச்செல்கின்ற சாட்சிகளாக மாறிடுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
================================================================================= இரண்டாம் முறை விண்மீன்

 ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா

 எசாயா 60:1-6
 எபேசியர் 3:2-3, 5-6
 மத்தேயு 2:1-12

"நம் அனைவருக்கும் இரண்டு வாழ்க்கை உண்டு. இரண்டாம் வாழ்க்கை எப்போது தொடங்குகிறது என்றால், 'இருப்பது ஒரு வாழ்க்கைதான்' என்ற புரிதல் வரும்போது" என்பது டுவிட்டர் வாக்கு. "வாழ்வில் இரண்டாம் வாய்ப்பு வருவதில்லை" என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், வாழ்வில் இரண்டாம் வாய்ப்புக்கள் வரவே செய்கின்றன. எப்படி?

சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய, "எ கிறிஸ்மஸ் கேரல்" (ஒரு கிறிஸ்து பிறப்பு பாடல்) பிரபலமான நாவல். அந்த நாவலின் கதாநாயகன் எபநேசர் ஸ்க்ரூகே கிறிஸ்துமசுக்கு முந்திய மாலை தன் அலுவலகத்தில் அமர்ந்திருப்பார். இங்கிலாந்தின் குளிரின் நடுக்கத்தில் அவருடைய அலுவலக கிளார்க் கூனிக்குறுகி அமர்ந்திருப்பார். ஏனெனில், எபரேசர் தன் அலுவலகத்தை வெதுவெதுப்பாக்க பணத்தைச் செலவிட மாட்டார். எபநேசரின் உறவினர் ஒருவர் அவரை கிறிஸ்துமஸ் பார்ட்டிக்கு வருமாறு அழைப்பார். அந்த நேரத்தில் இன்னும் இருவர் கிறிஸ்துமஸ் நன்கொடை கேட்டு வருவார்கள். 'கிறிஸ்துமஸ்...  ஒரு ஹம்பக்!' என்று விரட்டி விடுவார். இரவில் தன் வீடு திரும்பிய அவருக்கு இறந்து போன தன் பிஸினஸ் பார்ட்னர் ஜேக்கப் மார்லியின் ஆவி காட்சிதரும். மார்லி தன்னுடைய பழைய தன்னலமான வாழ்விற்குத் தண்டனையாக பெரிய சங்கிலியைக் கட்டி அவர் இழுத்துக்கொண்டு செல்வதுபோல காட்சியில் இருக்கும். 'இந்த தண்டனையிலிருந்து நீ தப்பித்துக்கொள்' என மார்லியின் ஆவி எபநேசரை எச்சரிக்கும். 'இன்னும் சில இரவுகளில் மூன்று ஆவிகள் உனக்குத் தோன்றும்' என்றும் சொல்வார் மார்லி. அப்படியே தூங்கிப்போவார் எபநேசர். 'நேற்றைய கிறிஸ்துமஸ்' என்ற முதல் ஆவி வந்து எபநேசரை அவருடைய குழந்தைப் பருவத்திற்கு அழைத்துப்போய்க் காட்டும். தன் குழந்தைப் பருவ, இளமைப்பருவ நிகழ்வுகளை நினைத்து மகிழ்வார் எபநேசர். 'இன்றைய கிறிஸ்துமஸ்' என்ற இரண்டாம் ஆவி எபநேசரை லண்டன் தெருக்கள் வழியாக அழைத்துச் செல்லும். அந்த நேரத்தில் தன் மேலாடைக்குள் 'அறியாமை,' 'தேவை' என்று இரண்டு குழந்தைகள் ஒளிந்திருப்பதைக் காண்பார் எபநேசர். 'நாளைய கிறிஸ்துமஸ்' என்ற மூன்றாம் ஆவி இறந்துபோன ஒருவர் படும் துன்பத்தைக் காட்டும். அந்த இறந்துபோன நபரின் கல்லறையில் 'எபநேசர்' என எழுதியிருக்க, நம் கதாநாயகர் உடனே, தன் தவற்றை உணர்ந்து, 'என் 'அறியாமை,' மற்றும் என் 'தேவை' இவற்றுக்காக நான் வருந்துகிறேன்' என்று சொல்லி, வருவோர் போவோர், தேவையில் இருப்போர் அனைவருக்கும் தன் பணத்தைக் கொடுத்துவிட்டு, தன் உறவினரின் கிறிஸ்துமஸ் பார்ட்டிக்கு மகிழ்வுடன் செல்வார். இதுபோல அவர் தொடர்ந்து கருணை, தாராள உள்ளம், அன்பு, பரிவு கொண்டவராக விளங்குவதாக நாவல் முடிவுறும்.

எபநேசர் ஸ்க்ரூகேயைப் பொறுத்தவரையில் தான் கண்ட காட்சி அவருடைய இரண்டாம் வாழ்க்கையின் தொடக்கமாக இருக்கிறது. இவரைப் போலவே, புனித பவுல், அண்ணல் அம்பேத்கர், மகாத்மா காந்தி, அன்னை தெரசா என்று எல்லாருமே தங்கள் வாழ்வில் இறையனுபவம் பெற்றவுடன் தங்களின் இரண்டாம் வாழ்க்கையை புதிய பொலிவுடன் மாற்றி எல்லாருக்கும் எல்லாம் என ஆகின்றனர்.

இன்றைய நாளில் 'இரண்டாம் கிறிஸ்துமஸ்' என்று கிராமங்களில் சொல்லப்படுகின்ற 'ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழாவைக்' கொண்டாடுகிறோம். கீழைத்திருச்சபைகள் இன்றைய நாளைத்தான் கிறிஸ்து பிறப்பு நாளாகக் கொண்டாடுகின்றனர்.

'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?' என்று ஏரோதிடம் வருகின்ற கீழ்த்திசை ஞானியர், 'முன்பு எழுந்த விண்மீன் மீண்டும் தோன்றுவதை - இரண்டாம் முறை தோன்றுவதை - கண்டுகொள்கின்றனர்.' ஆக, இவர்கள் முதல் முறை பார்த்த விண்மீன் இவர்களை ஏரோதின் அரண்மனைக்குத்தான் அழைத்துச் சென்றது. இரண்டாம் முறை பார்த்த விண்மீன்தான் இவர்களை பெத்லகேமிற்கு அழைத்துச் செல்கிறது. இவ்வாறாக, வாழ்வின் ஆச்சர்யங்கள் இரண்டாம் முறைகளிலும் சாத்தியம் என்பதை உணர்த்துகின்றன இன்றைய வாசகங்கள்.

இன்றைய முதல் வாசகம் (காண். எசா 60:1-6) எசாயா இறைவாக்கினர் நூலின் மூன்றாம் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள் திரும்பி வர அனுமதி பெற்ற காலகட்டத்தில் எழுதப்பட்டது இப்பகுதி. இன்றைய வாசகப் பகுதியில், 'எழு! உலகிற்கு ஒளி வீசு!' என்று எருசலேமைத் தூண்டி எழுப்புகிறார் எசாயா. ஏனெனில், 'உன் ஒளி தோன்றியுள்ளது,"ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது.' ஒளியும் மாட்சியும் ஆண்டவரின் காணக்கூடிய வெளிப்பாடுகள் (காண். எசே 1:4, விப 24:15-17). இவ்வாறாக, இருளடைந்து பாழடைந்து கேட்பாரற்றுக் கிடந்த நகரம் கடவுள் இரண்டாம் முறை வந்ததால் ஒளிர்கிறது. இவர்கள் அடிமைகளாக்கப்படும் முன் இருந்த ஒளி அடிமைத்தனத்தால் இருண்டு போனது. இரண்டாம் முறை இப்போது நகரம் ஒளிருமாறு மக்களைக் கவ்வியிருந்த இருளை அகற்றுகிறார் கடவுள். கடவுள் இரண்டாம் முறை வந்ததை ஒரு பெரிய ஒருங்கிணைவாக முன்வைக்கிறார் எசாயா: (அ) பிற இனத்தார் எருசலேம் நோக்கி வருவர், (ஆ) நாடுகடத்தப்பட்ட, இழுத்துச் செல்லப்பட்ட புதல்வர், புதல்வியர் தோளில் தூக்கிவரப்படுவர், (இ) கடலின் திரள் செல்வம், சொத்துக்கள், ஒட்டகத்தின் பெருந்திரள் எருசலேம் வரும், (உ) 'பொன்' (அரசனுக்கு), 'நறுமணப்பொருள்' (கடவுளுக்கு) ஏந்தி வருவர் மக்கள். இவ்வாறாக, கடவுளே அரசனாகவும் இருப்பார் என்பது குறிக்கப்படுகிறது. இக்கடவுள் எருசலேமிற்கு மட்டும் கடவுள் அல்ல. மாறாக, அனைத்து நாடுகளுக்கும் கடவுளாகவும் அரசனாகவும் இருப்பார்.

ஆக, எருசலேம் புத்துயிர் பெற்றதை அகில உலக புத்துயிர்ப்புக்குமான இரண்டாம் வாய்ப்பாகப் பார்க்கிறார் எசாயா. நாடுகடத்தப்பட்ட எருசலேம் மக்கள் தங்கள் நாடு திரும்புகின்றனர். அவர்களின் வருகை அனைத்துலக நாடுகளையும் சேர்த்துக் கொண்டு வருவதாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்கள் பெற்ற இரண்டாம் ஒளி அவர்களுக்கு மட்டுமல்லாமல், உலக மக்களுக்கும் வெளிச்சமாகவும், மாட்சியாகவும் இருக்கிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 3:2-3, 5-6), 'நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும் ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்னும் மறைபொருள்' தூய ஆவி வழியாகத் தனக்கும், திருத்தூதருக்கும், இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டிருப்பதாக முன்வைக்கின்றார். யூதராக இருந்தால்தான் ஒருவர் கிறிஸ்தவராகவும், கிறிஸ்தவ சபையின் உறுப்பினராகவும் இருக்க முடியும் என்ற புரிதலில் இருந்த எபேசு நகரத் திருச்சபைக்கு, யூதரல்லாத புறவினத்தாரும் நம்பிக்கையின் வழியாக மறைபொருளில் பங்கெற்க முடியும் என அறிவுறுத்துகின்றார். பவுலின் இந்த வார்த்தைகள் இன்று நமக்கு மிகச் சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், அன்றைய காலகட்டத்தில் இது ஒரு பெரிய மறுமலர்ச்சியை உண்டாக்கியது. ஏனெனில், பவுலின் இதே உறுதிப்பாட்டால்தான் இன்று நீங்களும், நானும் கிறிஸ்தவராக இருக்கிறோம்.

ஆக, பிற இனத்தாருக்கு நம்பிக்கையின் வழியாக வழங்கப்படும் இரண்டாம் வாய்ப்பாக இருக்கிறது கிறிஸ்துவின் மறையுடலாகிய திருச்சபை.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 2:1-2) 'ஞானிகள் வருகை' பற்றிப் பேசுகின்றது. நமக்கு மிகவும் தெரிந்த வாசகப் பகுதிதான். இவர்கள் ஏன் வர வேண்டும்? இவர்கள் இறையியல் தேவையையும், இலக்கியத் தேவையையும் நிறைவு செய்ய வருகின்றனர். 'இயேசுவை புதிய மோசே' என்ற இறையியலாக்கம் செய்ய விரும்புகிறார் மத்தேயு. ஆக, பாலன் இயேசுவை எகிப்திற்கு அனுப்பினால்தான் அவரை அங்கிருந்து அழைத்து வர முடியும். இப்போது திருக்குடும்பம் இருப்பது பெத்லகேமில். பெத்லகேமில் நடக்கும் இலக்கிய நிகழ்வு எகிப்துக்கு நகர்ந்தால்தான் இறையியல் சாத்தியமாகும். எனவே, குழந்தையை எகிப்திற்கு அனுப்ப வேண்டியதன் இறையியல் மற்றும் இலக்கியத் தேவையை நிறைவு செய்ய வருகின்றனர் 'ஞானிகள்.'

இவர்கள் யார்? இவர்கள் 'ஞானியரோ,"அரசர்களோ' அல்லர். இவர்களை பிரிவினை சபை விவிலியம் 'சாஸ்திரிகள்' என சரியாக மொழிபெயர்க்கிறது. இவர்கள் வானியல் பண்டிதர்கள். நட்சத்திரங்களையும், அவற்றின் நகர்வுகளையும், பறவைகள் மற்றும் விலங்குக் கூட்டங்களின் இடம் பெயர்தலையும் வைத்த வருங்காலத்தைக் கணிக்கத் தெரிந்தவர்கள். அவ்வளவுதான்! ஏனெனில், இவர்கள் அரசர்களாக இருந்திருந்தால், 'நீங்கள் போய்ப் பாருங்கள்' என்று ஏரோது அரசன் இவர்களை அனுப்பியிருக்க மாட்டான். 'நீங்கள் இங்கே தங்கி இளைப்பாறுங்கள். நான் காவலாளிகளை அனுப்பி விசாரிக்கிறேன்' என்று இவர்களை அரண்மனையில் அமர்த்தியிருப்பான். மேலும், இவர்கள் மூன்று பேர் அல்லர். இவர்கள் கொண்டு வந்த காணிக்கைப் பொருள்களை வைத்து நாம் 'மூன்று நபர்கள்' வந்ததாகச் சொல்கிறோம். மேலும், இவர்கள் 'ஞானியர்' என அழைக்கப்படுகின்றனர். ஆனால், 'யூதர்களின் அரசனாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?' என்று யூதர்களின் அரசன் ஏரோதிடம் போய்க் கேட்பது ஞானம் அன்று. ஏரோது தன் அரியணையைத் தக்க வைக்க தன் குடும்பம் முழுவதின் இரத்தத்தையும் குடித்தவன். இத்தகைய அரசனிடம் போய் மற்றொரு அரசனைப் பற்றி விசாரிப்பது 'கொள்ளிக் கட்டையால் தலையைச் சொறிவதற்குச் சமமாக' இருந்திருக்கும். ஆனாலும், நம் நிகழ்வின்படி அவர்கள் அரண்மனைக்குத்தான் செல்கிறார்கள். ஏனெனில், இத்தகையோரின் சேவை அரசர்கள் எதிர்காலத்தைக் கணிப்பதற்கு அவர்களுக்கு உதவியாக இருந்தது. ஆகவேதான், இவர்கள் அரசனிடம் செல்கிறார்கள். மேலும், இவர்கள் எதையும் மூடி மறைக்காத, அதே நேரத்தில், துணிச்சல் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

"அவரது விண்மீன் எழக் கண்டோம்" - இதுதான் அவர்கள் பெற்றிருந்த அடையாளம்.

ஏரோது தன் குள்ளநரித்தனத்தால், 'நீங்கள் சென்று குழந்தையைக் குறித்து திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று குழந்தையை வணங்குவேன்' என்று சொல்லி அவர்களை அனுப்பி வைக்கின்றான்.

அந்த நேரத்தில்தான் இரண்டாம் முறை அந்த விண்மீன் தோன்றுகின்றது. அரண்மனையின் உயரமான சுவர்கள் அதை மறைத்ததா? அல்லது ஏரோதின்முன் இவர்கள் மண்டியிட்டதால் விண்மீன் இவர்களுக்கு மறைவாயிருந்ததா? - தெரியவில்லை நமக்கு. ஆனால், 'அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைகிறார்கள்.' மத்தேயு முதல் முறையாக அவர்களின் மகிழ்ச்சி என்ற உணர்வைப் பதிவு செய்கின்றார். வீட்டிற்குள் செல்லும் அவர்கள் குழந்தைக்கு தங்கம் (அரச நிலையின் அடையாளம்), தூபம் (இறை நிலையின் அடையாளம்), வெள்ளைப் போளம் (மனித நிலையின் அடையாளம்) பரிசளிக்கின்றனர். கனவில் எச்சரிக்கப்பட்டு வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்புகிறார்கள்.

இந்நிகழ்வில் இவர்கள் ஏரோதின் அரண்மனைக்கு வந்தது ஒருமுறைதான். வந்த வழி ஒருமுறைதான். இயேசுவைக் கண்டதும் ஒருமுறைதான். திரும்பும் வழியும் ஒருமுறைதான். ஆனால், விண்மீனைக் கண்டது மட்டும்தான் இரண்டுமுறை. அதுவும் இரண்டாம் முறை அவர்கள் கண்ட விண்மீன் அவர்களின் பாதையை முழுவதுமாக மாற்றிப் போடுகின்றது.

இவ்வாறாக, முதல் வாசகத்தில் எருசலேம் இரண்டாம் முறை ஒளி பெற்று, கடவுளின் மாட்சியால் துலங்குகிறது. இரண்டாம் வாசகத்தில் புற இனத்தார் நம்பிக்கையின் வழி இரண்டாம் வாழ்வைப் பெறுகின்றனர். நற்செய்தி வாசகத்தில் இரண்டாம் முறை கண்ட விண்மீன் சாஸ்திரிகளுக்கு யூதர்களின் அரசனை அடையாளம் காட்டுகிறது.

வாழ்வின் இனிமைகள் இரண்டாம் முறையிலும் சாத்தியம் என்கிறது இன்றைய வழிபாடு. ஞானம் என்பது முதல் முறை எழுந்து நிற்பது அல்ல. மாறாக, முதல் முறை விழுந்து இரண்டாம் முறை எழுந்து நிற்பது.

இன்றைய நம் உலகம் முதல் முறைகளையே பெரிதும் கொண்டாடுகிறது. முதல் முறையில் வெல்லாதவர்களைத் தேவையற்றவர்கள் என முத்திரை குத்திவிடுகிறது. புனித அகுஸ்தினரின் வாழ்வை எடுத்துக்கொள்வோம். தன் மனமாற்றத்திற்கு முன் அவருடைய முதல் வாழ்வு அமைதியில்லாமல் இருக்கிறது. ஆனால், அதை அவர் விரக்தியாக எடுத்துக்கொள்ளவில்லை. இரண்டாம் வாழ்விற்குள் அடியெடுத்து வைக்கின்றார். மிகப்பெரிய இறையியலாராக மாறுகின்றார். மானிக்கேய சிந்தனையால் முதல் வாழ்வைக் கழித்த அவர், இறைவனில் தன் இரண்டாம் வாழ்வைக் கழிக்கிறார்.

2019ஆம் ஆண்டு தொடங்கி சில நாள்கள் கடந்திருக்கின்றன. 'இனி குடிக்க மாட்டேன், "இனி கோபப்பட மாட்டேன், "இனி உடல்நலம் கவனிப்பேன்,"இனி வாக்கிங் போவேன், "இனி என் நேரம் வீணாக்க மாட்டேன்' என்று கடந்த ஆண்டு வாக்குறுதிகள் எடுத்து, நிறைவேற்ற முடியாமல் போயிருப்போம். அல்லது எடுத்த ஆறு நாள்களுக்குள் மீறியிருப்போம். ஆனால், அதற்காக நம்மை நாமே சபித்து குற்ற உணர்வு கொள்ள வேண்டாம். மீண்டும் ஒருமுறை வாழப் பழகுவோம். வாழ்வில் எல்லாமே ஒருமுறைதான் இந்த உலகம் பல இனியவர்களையும்  இழந்திருக்கும்.

'தொடங்கியது எல்லாம் இனியதாக முடியும். அப்படி இனியதாக இல்லை என்றால் அது இன்னும் முடியவில்லை' என்பார் ஆஸ்கார் வைல்ட். எருசலேம் மக்களின் பயணம் பாபிலோனியாவின் அடிமை இருளில் முடியவில்லை. புறவினத்தாரின் பயணம் தங்கள் பாவ வாழ்க்கையோடு முடியவில்லை. சாஸ்திரிகளின் பயணம் ஏரோதின் அரண்மனையோடு முடியவில்லை. இரண்டாம் முறை ஒளி வந்தது. இரண்டாம் முறை வாழ்க்கை வந்தது. இரண்டாம் முறை விண்மீன் வந்தது.

இரண்டாம் முறை வரும் விண்மீனைக் காண மூன்று படிகள் அவசியம்: (அ) இதுதான் விண்மீன் எனத் தெரிய வேண்டும், (ஆ) பழைய விண்மீனோடு அதைப் பொருத்திப் பார்க்க வேண்டும், (இ) 'இதுவே அது' என்று முடிவு எடுத்து பயணம் தொடர வேண்டும்.

நாம் சந்தித்த பாபிலோனியாவும், ஏரோதுகளும் போதும். கொஞ்சம் அண்ணாந்து பார்ப்போம். வாழ்க்கை மீண்டும் விண்மீனாக ஒளிரும். ஏனெனில், முதல் முறை பார்த்ததும், பார்த்ததை மறந்ததும் நம் தவறாக, சந்தர்ப்ப சூழலாக இருக்கலாம். ஆனால், இரண்டாம் முறை பார்ப்பதும், விண்மீனைத் தொடர்வதும் நம் தெரிவாக இருக்க வேண்டும். தெரிவு பிறக்க தெளிவு பிறக்கும்.

அந்தத் தெளிவில் பெத்லகேம் குழந்தை நம்மில் ஒளிரும். ஏனெனில், முதல் மட்டுமல்ல. இரண்டாவதும் வெற்றியே!

திருக்காட்சிப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)

+++++++++++++++

=================================================================================
திருப்பலி முன்னுரை
=================================================================================
ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா 05 01 2020

உள்ளத்தில் எழுந்திருக்கும் இறைவனை உணர்ந்து கொண்டு, தேடிச் சென்ற மூன்று ஞானிகளைப் போல இன்றைய திருக்காட்சி பெருவிழா திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு வருகை தந்திருக்கும் உங்கள் அனைவரையும் வரவேற்கின்றோம்.

மாட்டுத்தொழுவத்தில் மானிடனாய் பிறந்து, இவ்வுலகை மீட்டெடுக்க வந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, மூன்று ஞானிகளையும் கடல்கடந்து வரச் செய்தது. நாமும் அது போல இறைவனை நாடித் தேடும் போது திருக்காட்சி பெருவிழா அர்த்தமுள்ளதாக அமைகின்றது.

இன்றைய முதல் வாசகத்தில், எசாயா இறைவாக்கினர் கஷ்டங்களை அனுபவிக்கின்ற பாபிலோனிய மக்களுக்கு இறைவன் விடுதலை தருவதை எடுத்தியம்பியுள்ளார். கஷ்டங்களை இறைவனிடம் முறையிடும் முன், கஷ்டங்கள் மத்தியில் இறைவன் நம்மோடு இருக்கின்றார் என்பதை விசுவசித்து இறைவனில் களிகூருவோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், மூன்று ஞானிகள் கடல் கடந்து வந்து, பொன்னும், தூபமும், வெள்ளைப்போளமும் தந்து, பிறந்திருக்கும் மெசியாவை நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்கி மகிழ்வதைக் காண்கின்றோம்.

ஞானம் இவ்விடத்தில் அன்புக்கு முன் பணிந்து நிற்கின்றது. நாமும் அது போல நமது திறமையில் கர்வம் கொள்ளாமல், திறமையைத் தந்தவர் இறைவன் என்று பாசத்தைப் பகிர்ந்து, அன்பில் இணைந்து, மகிழ்ந்து வாழ்வோம். அப்பொழுதுதான் இறைவனின் திருக்காட்சி என்னும் ஒளி நம்முள் ஏற்றப்பட்டு, உலகை ஒளிர்விக்கும். இந்த சிந்தனைகளோடு இப்பலியில் இணைவோம்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 5
=================================================================================

ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா

 ஒளி - பார்த்தலும் பதிலிறுத்தலும்

(ஜனவரி 3, 2021)
 எசாயா 60:1-6
எபேசியர் 3:2-3, 5-6
 மத்தேயு 2:1-12
கீழைத்தேய திருஅவைகளின் கிறிஸ்து பிறப்பு விழா என்று சொல்லப்படும் திருக்காட்சிப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். 'பிற இனத்தாருக்கு ஒளியாகிய கிறிஸ்துவில் எமது மீட்பின் மறைபொருளை இன்று வெளிப்படுத்தினீர். சாவுக்கு உரிய எங்களது மனிதத்தன்மையில் அவர் தோன்றியபோது அவருக்கு உரிய சாகாத்தன்மையின் மாட்சியால் எங்களைப் புதுப்பித்தீர்' என்று இன்றைய நாளை இறையியலாக்கம் செய்கிறது திருப்பலியின் தொடக்கவுரை.
லூக்கா நற்செய்தியாளரின் பதிவின்படி இடையர்கள் என்னும் யூதர்களுக்குத் தம்மை வெளிப்படுத்திய கிறிஸ்து, இன்று, மத்தேயு நற்செய்தியாளரின் பதிவின்படி ஞானியர் என்னும் புறவினத்தாருக்குத் தம்மை வெளிப்படுத்துகின்றார். இயேசுவின் சமகாலத்தவருக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில், 'யூதர்களுக்கு மட்டுமே மீட்பு உண்டு. யூதர்கள் மட்டுமே கடவுளால் தெரிவுசெய்யப்பட்டவர்கள். யூதர்கள் மட்டுமே தூய்மையானவர்கள். யூதர்களுக்கு மட்டுமே மெசியா' என்று எண்ணிக்கொண்டிருந்த காலத்தில், புறவினத்தாருக்கும் மீட்பு, புறவினத்தாரும் தெரிவுசெய்யப்பட்டவர்கள், புறவினத்தாரும் தூய்மையானவர்கள், அவர்களுக்கும் மெசியா தோன்றுவார் என்று முன்வைக்கப்படும் கருதுகோள் அவ்வளவு ஏற்புடையதாக இருந்திருக்காது. இந்தக் கருதுகோளையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 3:2-3,5-6) நாம் வாசிக்கின்றோம். யூதர்களுக்கு மட்டுமே மீட்பு என்ற எண்ணம் மேலோங்கியிருந்த காலத்தில், பவுல் எபேசுநகர் திருஅவைக்கு எழுதுகின்ற திருமடலில், 'நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும், வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள்' என எழுதுகின்றார். இந்த ஒற்றை வரியால்தான் நாம் அனைவரும் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம். ஏனெனில், நாம் பிறப்பிலேயே யூதர்கள் அல்லர். ஆக, இன்றைய நாள் நம்முடைய கிறிஸ்து பிறப்பு பெருவிழா.
இன்றைய முதல் வாசகம் (காண். எசா 60:1-6) எசாயா இறைவாக்கினர் நூலின் மூன்றாம் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள் திரும்பி வர அனுமதி பெற்ற காலகட்டத்தில் எழுதப்பட்டது இப்பகுதி. இன்றைய வாசகப் பகுதியில், 'எழு! உலகிற்கு ஒளி வீசு!' என்று எருசலேமைத் தூண்டி எழுப்புகிறார் எசாயா. ஏனெனில், 'உன் ஒளி தோன்றியுள்ளது,' 'ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது.' ஒளியும் மாட்சியும் ஆண்டவரின் காணக்கூடிய வெளிப்பாடுகள் (காண். எசே 1:4, விப 24:15-17). இவ்வாறாக, இருளடைந்து பாழடைந்து கேட்பாரற்றுக் கிடந்த நகரம் கடவுள் வந்ததால் ஒளிர்கிறது. இவர்கள் அடிமைகளாக்கப்படும் முன் இருந்த ஒளி அடிமைத்தனத்தால் இருண்டு போனது. இப்போது நகரம் ஒளிருமாறு மக்களைக் கவ்வியிருந்த இருளை அகற்றுகிறார் கடவுள். கடவுள் வந்ததை ஒரு பெரிய ஒருங்கிணைவாக முன்வைக்கிறார் எசாயா: (அ) பிற இனத்தார் எருசலேம் நோக்கி வருவர், (ஆ) நாடுகடத்தப்பட்ட, இழுத்துச் செல்லப்பட்ட புதல்வர், புதல்வியர் தோளில் தூக்கிவரப்படுவர், (இ) கடலின் திரள் செல்வம், சொத்துக்கள், ஒட்டகத்தின் பெருந்திரள் எருசலேம் வரும், (உ) 'பொன்' (அரசனுக்கு), 'நறுமணப்பொருள்' (கடவுளுக்கு) ஏந்தி வருவர் மக்கள். இவ்வாறாக, கடவுளே அரசனாகவும் இருப்பார் என்பது குறிக்கப்படுகிறது. இக்கடவுள் எருசலேமிற்கு மட்டும் கடவுள் அல்ல. மாறாக, அனைத்து நாடுகளுக்கும் கடவுளாகவும் அரசனாகவும் இருப்பார்.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 2:1-2) 'ஞானிகள் வருகை' பற்றிப் பேசுகின்றது. நமக்கு மிகவும் தெரிந்த வாசகப் பகுதிதான். இவர்கள் ஏன் வர வேண்டும்? இவர்கள் இறையியல் தேவையையும், இலக்கியத் தேவையையும் நிறைவு செய்ய வருகின்றனர். 'இயேசுவை புதிய மோசே' என்ற இறையியலாக்கம் செய்ய விரும்புகிறார் மத்தேயு. ஆக, பாலன் இயேசுவை எகிப்திற்கு அனுப்பினால்தான் அவரை அங்கிருந்து அழைத்து வர முடியும். இப்போது திருக்குடும்பம் இருப்பது பெத்லகேமில். பெத்லகேமில் நடக்கும் இலக்கிய நிகழ்வு எகிப்துக்கு நகர்ந்தால்தான் இறையியல் சாத்தியமாகும். எனவே, குழந்தையை எகிப்திற்கு அனுப்ப வேண்டியதன் இறையியல் மற்றும் இலக்கியத் தேவையை நிறைவு செய்ய வருகின்றனர் 'ஞானிகள்.'
இவர்கள் யார்? இவர்கள் 'ஞானியரோ,' 'அரசர்களோ' அல்லர். இவர்களை, பிரிவினை சபை சகோதரர்களின் விவிலியம், 'சாஸ்திரிகள்' என சரியாக மொழிபெயர்க்கிறது. இவர்கள் வானியல் பண்டிதர்கள். நட்சத்திரங்களையும், அவற்றின் நகர்வுகளையும், பறவைகள் மற்றும் விலங்குக் கூட்டங்களின் இடம் பெயர்தலையும் வைத்த வருங்காலத்தைக் கணிக்கத் தெரிந்தவர்கள். அவ்வளவுதான்! ஏனெனில், இவர்கள் அரசர்களாக இருந்திருந்தால், 'நீங்கள் போய்ப் பாருங்கள்' என்று ஏரோது அரசன் இவர்களை அனுப்பியிருக்க மாட்டான். 'நீங்கள் இங்கே தங்கி இளைப்பாறுங்கள். நான் காவலாளிகளை அனுப்பி விசாரிக்கிறேன்' என்று இவர்களை அரண்மனையில் அமர்;த்தியிருப்பான். மேலும், இவர்கள் மூன்று பேர் அல்லர். இவர்கள் கொண்டு வந்த காணிக்கைப் பொருள்களை வைத்து நாம் 'மூன்று நபர்கள்' வந்ததாகச் சொல்கிறோம். நம் நிகழ்வின்படி அவர்கள் அரண்மனைக்குத்தான் செல்கிறார்கள். ஏனெனில், இத்தகையோரின் சேவை அரசர்கள் எதிர்காலத்தைக் கணிப்பதற்கு அவர்களுக்கு உதவியாக இருந்தது. ஆகவேதான், இவர்கள் அரசனிடம் செல்கிறார்கள். மேலும், இவர்கள் எதையும் மூடி மறைக்காத, அதே நேரத்தில், துணிச்சல் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
'அவரது விண்மீன் எழக் கண்டோம்' - இதுதான் அவர்கள் பெற்றிருந்த அடையாளம்.
ஏரோது தன் குள்ளநரித்தனத்தால், 'நீங்கள் சென்று குழந்தையைக் குறித்து திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று குழந்தையை வணங்குவேன்' என்று சொல்லி அவர்களை அனுப்பிவைக்கின்றான்.
அந்த நேரத்தில்தான் இரண்டாம் முறை அந்த விண்மீன் தோன்றுகின்றது. அரண்மனையின் உயரமான சுவர்கள் அதை மறைத்ததா? அல்லது ஏரோதின்முன் இவர்கள் மண்டியிட்டதால் விண்மீன் இவர்களுக்கு மறைவாயிருந்ததா? - தெரியவில்லை நமக்கு. ஆனால், 'அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைகிறார்கள்.' மத்தேயு முதல் முறையாக அவர்களின் மகிழ்ச்சி என்ற உணர்வைப் பதிவு செய்கின்றார். வீட்டிற்குள் செல்லும் அவர்கள் குழந்தைக்கு தங்கம் (அரச நிலையின் அடையாளம்), தூபம் (இறை நிலையின் அடையாளம்), வெள்ளைப் போளம் (மனித நிலையின் அடையாளம்) பரிசளிக்கின்றனர். கனவில் எச்சரிக்கப்பட்டு வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்புகிறார்கள்.
இன்றைய முதல் வாசகத்தில், எருசலேம் நகரம் ஒளி வீசுகிறது. அதைக் காணுகின்ற இஸ்ரயேல் மக்களும், புறவினத்து மக்களும் பதிலிறுப்பு செய்கின்றனர். அவர்களது பதிலிறுப்பு திரும்பி வருதலில் இருக்கின்றது.
இரண்டாம் வாசகத்தில், 'ஒரு காலத்தில் இருளாய் இருந்த எபேசு நகர மக்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறார்கள். அவர்கள் ஒளிபெற்ற மக்களாக வாழ வேண்டும்' (காண். எபே 5:8). புறவினத்தாருக்கு கிறிஸ்துவின் மீட்பு என்னும் ஒளி வழங்கப்பட, அவர்களும் அதற்குப் பதிலிறுப்பு செய்கின்றனர்.
நற்செய்தி வாசகத்தில், ஒளியைக் காணுகின்ற கீழ்த்திசை ஞானியர், அந்த ஒளியைப் பின்தொடர்ந்து வந்து, ஒளியாம் கிறிஸ்துவைக் கண்டுகொள்கின்றனர்.
ஒளியைப் பார்த்தலும் பதிலிறுத்தலும் நமக்குத் தரும் வாழ்வியல் பாடங்கள் எவை?
1. இருவகைக் காணுதல்:
கீழ்த்திசை ஞானியரின் ஞானம் நமக்கு ஆச்சர்யத்தைத் தருகிறது. ஏன்? அவர்கள் தங்களுக்கு வெளியே இருக்கின்ற விண்மீனின் ஒளியைக் காண்கின்றனர். அதே வேளையில், தங்கள் கனவில் வெளிப்படுத்தப்பட்ட ஒளியைக் கண்டு, வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்புகின்றனர். ஆக, தங்களுக்கு வெளியே நடப்பது பற்றிய அறிவும், தங்களுக்கு உள்ளே இருக்கின்ற உள்ளுணர்வு பற்றிய அறிவும் அவர்களுக்கு ஒருங்கே அமைந்திருந்தது. இதுதான் ஞானம். பல நேரங்களில் அறிவார்ந்த பலர் தங்களுக்கு வெளியே நடக்கும் நிகழ்வுகள் பற்றித் தெளிவாக இருப்பர். ஆனால், அவர்கள் தங்கள் உள்ளங்களில் வீசும் ஒளியைக் கண்டுகொள்ள மறந்துவிடுவர். சீராக்கின் ஞானநூல் ஆசிரியர் உள்ளத்தின் ஒளி பற்றி இப்படி எழுதுகிறார்: 'உன் உள்ளத்தின் அறிவுரையில் உறுதியாய் நில். அதைவிட நம்பத்தக்கது உனக்கு வேறெதுவுமில்லை. காவல் மாடத்தின்மேல் அமர்ந்திருக்கும் ஏழு காவலர்களைவிட மனித உள்ளம் சில வேளைகளில் நன்கு அறிவுறுத்துகின்றது ... உன்னத இறைவனிடம் மன்றாடு. அப்பொழுது அவர் உன்னை உண்மையின் வழியில் நடத்துவார்' (சீஞா 37:13-15). இன்றைய திருநாளின் ஞானியர் தங்கள் உள்ளத்தின் அறிவுரையை ஏற்றனர். அதற்கேற்ற பதிலிறுப்பு செய்தனர். இன்று நாம் புறக் காணுதல் மற்றும் அகக் காணுதல் நிலைகளில் எப்படி இருக்கிறோம்?
2. மூவகை பதிலிறுப்புகள்:
ஏரோது ஒளியைக் கண்டு அஞ்சுகிறார், எருசலேம் நகரத்தவர் ஒளியைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர், ஞானியர் ஒளியைப் பின்தொடர்கின்றனர். ஒளி அல்லது உண்மை பல நேரங்களில் நமக்கு அச்சத்தை விளைவிக்கலாம். நம்மில் சிலர் நோய்வாய்ப்பட்டிருந்தாலும் மருத்தவரிடம் செல்வதைத் தவிர்ப்போம். ஏனெனில், நம்மிடம் உள்ள நோயை மருத்துவர் கண்டுபிடித்துவிட்டால், அல்லது நம் நோய் பற்றிய உண்மைநிலை நமக்குத் தெரிந்துவிட்டால், அதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. மக்கள் ஒளியைக் கண்டு அஞ்சுவதை இயேசுவும் நிக்கதேமிடம் சொல்கின்றார்: 'ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர் ... தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள்' (காண். யோவா 3:19-21). ஏரோதுவின் அரியணை ஒளியை அவரிடமிருந்து மறைத்தது. எருசலேம் நகர மக்கள் ஒளியைக் கண்டனர். ஆனால், அன்றாட கவலைகளுக்கே அவர்களுக்கு நேரம் சரியாக இருந்ததால் அவர்கள் ஒளியைக் கண்டுகொள்ளவில்லை. தங்கள் வாழ்வின் இன்ப துன்பங்களிலிருந்து எழுந்து பார்க்கவோ, அந்த ஒளியைப் பின்பற்றவோ அவர்களுக்குத் தோன்றவில்லை. சில வேளைகளில் நமக்கும் இதே மனநிலை வரலாம். 'பின்னர் பார்த்துக்கொள்ளலாம்!' என்று தள்ளிப் போடலாம். ஆனால், ஞானியர் உடனடியாகப் பதிலிறுப்பு செய்கின்றனர். ஒளியைப் பின்தொடர்தல் கடினமாக இருந்தாலும் பின் தொடர்கின்றனர். ஏனெனில், அவர்களுடைய பயணம் பெரும்பாலும் இரவில்தான் நடந்திருக்கும்.
3. இரண்டாம் முறை விண்மீன்:
நம் பாதையும் பதிலிறுப்பும் தெளிவாக இருந்தால், நாம் தீயவனின் அரண்மனையில் இருந்தாலும் விண்மீன் மீண்டும் தோன்றும். விண்மீன் இரண்டாம் முறை தோன்றுவதைக் கண்ட ஞானியர் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றனர். தங்களின் பயணமும் பாதையும் சரியானது என்பது உறுதி செய்யப்பட்டதன் அடையாளமாக அதைக் காண்கின்றனர். நாம் நம் கனவுகள் நோக்கிச் செல்லும்போது ஒட்டுமொத்த பிரபஞ்சமும் நம்முடன் சேர்ந்து ஒத்துழைக்கிறது என்ற இரசவாதமும் (காண். பவுலோ கோயலோ, தி ஆல்கெமிஸ்ட்) இதுவே. இன்று நம் இலக்குகள் அல்லது நட்சத்திரங்கள் நோக்கி நாம் வழிநடக்கும்போது இதே அனுபவத்தை நாமும் பெற்றிருக்கலாம். அப்படி இருக்க நம் இலக்குகளை நோக்கி நகர்வதிலிருந்து நாம் பின்வாங்குவது ஏன்?
இறுதியாக,
'அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக. நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக!' எனப் பாடுகின்றார் திபா ஆசிரியர் (காண். 72). நிலவின், கதிரவனின், விண்மீனின் ஒளி உள்ளவரை அதைப் பார்த்தலும், அதற்குப் பதிலிறுத்தலும் தொடரும். பாதையிலும் பாதையின் இறுதியிலும் நம் கண்கள் அவரைக் காணும்.
திருக்காட்சிப் பெருவிழா நல்வாழ்த்துகள்!
(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)

==============================================================
இறைமக்களின் மன்றாட்டுகள்
=================================================================================
1. மண்ணில் தோன்றிய விண்மீனே எம் இறைவா!
எம் திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, திருஅவைப் பணியாளர்கள், உம்மைச் சந்திக்க வழிகாட்டிய விண்மீன் போல இறைப் பாதையை எங்களுக்கு காட்டும் கருவியாக செயல்படவும், இறைப் பாதையில் மக்களை வழிநடத்தி, சமூக பங்களிப்பை உறுதி செய்யும் வகையில் செயல்பட வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

2. அடிமைத்தனத்திலிருந்து மக்களை மீட்டவரே எம் இறைவா!
எம் நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள், மக்களை அடிமைப்படுத்தாமலும், மக்களுக்கு எதிரான சட்டங்களையும், வரிகளையும் திரும்பப் பெறவும், மக்களுக்கு சேவை செய்யும் மனதைத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

3. உம்மைத் தேடி வந்த ஞானிகளுக்கு தம்மை வெளிப்படுத்தியவரே எம் இறைவா!
நாங்களும் இறை அனுபவம் பெற தடையாக உள்ள சோம்பல், பாவம், கவனச்சிதறல். முயற்சியின்மை ஆகியவற்றை விடுத்து, உம்மை நாடித் தேடவும், உம் மீட்பைக் கண்டடைய வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

4. விண்ணகக் கதவுகளைத் திறந்து ஆசீர்வதிப்பவரே எம் இறைவா!
பயிர்கள் வளர போதிய இயற்கை காலச் சூழ்நிலையைத் தந்து, வேளாண்மை ஏற்றம் பெறவும், பொருளாதாரம் பெருகவும், குடும்பங்களில் அமைதி, மகிழ்ச்சி பெருகவும், படிக்கும் மாணவர்கள் சிறந்த ஞானம் பெற்று திகழவும், வேலைவாய்ப்பு திருமணம், குழந்தை வரம் வேண்டுவோர் உமதருளால் பெற்றுக் கொள்ளும் வரம் வேண்டுமென்று உம்மை கெஞ்சி மன்றாடுகின்றோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நன்றி: திருமதி ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

எழுந்து ஒளிவீசு என்று எம்மைப் பணித்த எம் இறைவா!
உலகின் ஒளியாம் இயேசு கிறிஸ்துவின் சீடராய் இவ்வுலகில் வலம் வரத் தேவையான விசுவாசத்தையும், உறுதியான உள்ளத்தையும், எதிர்வரும் இடர்களையும், சவால்களையும் ஏற்றுக் கடைசிவரை உமது அன்பில் நிலைத்திருந்து உமக்குச் சாட்சிப் பகர உம் திருஅவையினர் அனைவரையும் வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார் என்று அமைத்த எம் இறைவா!
நாங்கள் ஒரு சிறுவட்டத்துக்குள் அடங்கிவிடாமல் நீர் படைத்த இவ்வுலகில் வாழும் அனைத்து மக்களையும் உம்மைப்போல் அன்புச் செய்யவும், ஏழை எளியோர்களையும் குடும்பத்திலுள்ள முதியோர்களையும், ஆதரவற்றவர்கைளையும் நேசிக்கவும், அரவணைத்து அவர்களின் வாழ்வாதரங்களை உயர்த்தவும் நாங்கள் உழைத்திட நல்மனதினைப் பெற்றிட வேண்டிய வரங்களைத் தருமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எமைப் படைத்து ஆளும் எம் இறைவா!
வேற்றுநாட்டினரான மூன்று ஞானிகளும் ஒன்றிணைந்துக் குழந்தை இயேசுவைத் தேடி ஞானம் பெற்றது போல் இன்றைய சூழலில் இளைஞர்கள் தான் திருச்சபையின் வலுவான தூண்கள் என்பதை உணர்ந்து இன்றைய கலாச்சாரச் சூழலில் தங்களின் தேவையை எடுத்து இறையாண்மையைக் கட்டிக் காத்து இறைமகனின் உடனிருப்பை உணர்ந்து ஒன்றிணைந்துச் செயலாற்ற வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நல்லாயனே இறைவா!
நாங்கள் அனைவரும் எங்களின் வாழ்வில் கிறிஸ்துவை வெளிப்படுத்த தடையாக இருக்கும் கர்வம், ஆணவம், பொறாமை, போட்டி மனப்பான்மை போன்றவைகளை களைந்து கிறிஸ்துவுக்கு சான்று பகர்கிறவர்களாக திகழ இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஒளியான எம் இறைவா!
இளைஞர், இளம்பெண்கள் தங்கள் வாழ்வில் உம்மை அறியாமல் வாழ்ந்தக் காலங்களில் தங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப, இவ்வுலகச் சிற்றின்பங்களைப் பெரிதாகக் கருதி அதற்கு ஏற்பத் தங்கள் வாழ்வை இழந்த நிலையில் தங்களைத் தேற்றுவதற்கு யாரும் இல்லையே என்று ஏங்கித் தவிக்கும் இவர்களுக்கு நீர் உமது உடனிருப்பை நிறைவாகப் பொழிந்து உமது ஆவியின் அருளை நிறைவாய் பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

கீழ்ப்படிதலின் மகிமையை உம் திருக்குடும்பத்தின் வழியாக உணர்த்திய எம் இறைவா!
எங்கள் குடும்பங்களில் இறைமகன் வாழ்ந்துக் காட்டிய அதே வழியை, நாங்களும் கடைபிடித்து, எங்கள் குடும்பங்கள் கோவிலாய் ஒளிர்ந்திட, எமக்கு சுயநலமற்ற அன்பும், அடுத்திருப்பவருடன் நட்பு பாராட்டும் நல்ல உள்ளங்களையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பாதுகாப்பின் நாயகனே!
எம் பங்கில் இருக்கின்ற நோயாளிகள், முதியவர்கள், கைவிடப்பட்டவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்து அவர்களை உமது அன்பில் திளைக்கவைக்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.




 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!