Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

லூர்து மாதாவின் மன்றாட்டு மாலை


 

 
Our lady of Lourdes's Feast
11 Fevrier















 
அமலோற்பவ கன்னி மாதாவே ! சொல்லொணா சோதிக் கதிர் வீச, சூரியன் ஒளி தங்கிய சுத்த வெள்ளை உடை அணிந்து, தெய்வீக வடிவு அலங்காரத்தோடு அன்று எழுந்தருளி வந்து, தன்னந்தனிமையான லூர்து மலைக் கெபியில் காட்சி தரக் கருணை புரிந்த உமது கிருபாகடாட்சத்தை நினைத்தருளும். உமது திருக்குமாரன் உமக்குக் கட்டளையிட்ட மட்டற்ற வல்லமையையும் நினைவு கூர்ந்தருளும். புதுமையில் பிரபல்லியமான லூர்து மலை மாதாவே, உமது பேறு பலன்களின் மீது நிறைந்த நம்பிக்கை வைத்து உமது தயவு ஆதரவை அடைய இதோ ஓடி வந்தோம். உமது தரிசன வரலாறுகளின் உண்மையை உணர்ந்து ஸ்திரப்படுத்தின பரிசுத்த பாப்பானவரை உமது திருக்கர வல்லபத்தால் காத்தருளும்

தேவ இரக்க நேச மனோகரம் அடங்கிய இரட்சண்ணிய பொக்கிஷங்களைத் திறந்து அவைகளை எங்கள் மீது பொழிந்தருளும். உம்மை மன்றாடிக் கேட்கும் எங்கள் விண்ணப்பங்கள் எதுவும் வீண் போக விடாதேயும். மாசற்ற கன்னிகையான லூர்து மலை மாதாவே, தேவரீர் எங்கள் தாயாராகையால், எங்கள் மன்றாட்டுக்களைத் தயவாய்க் கேட்டருளும். ஆமென்

லூர்து ஆண்டவளே ! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

புனித லூர்து மாதாவுக்கு நவநாள்

(உத்தம மனஸ்தாபப்பட்ட பின் புனித லூர்து மாதா சுரூபத்தின் அல்லது படத்தின் முன் பின்வரும் ஜெபங்களை மும்முறை சொல்லவும் )

இறைவனின் தாயாகிய புனித கன்னி மரியாயின் தூய மாசில்லாத உற்பவம் துதிக்கப்படுவதாக
எங்கள் லூர்து நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
எங்கள் மாதாவே! எங்கள் பேரில் இரக்கமாயிரும்

எங்கள் லூர்து நாயகியே! பரிசுத்த திரித்துவத்தின் நேசத்திற்காகவும் மகிமைக்காகவும் எங்களைக் குணப்படுத்தியருளும்
எங்கள் லூர்து நாயகியே! பாவிகள் மனந்திரும்புவதற்காக எங்களைக் குணப்படுத்தியருளும்

வியாதிக்காரர்களின் ஆரோக்கியமே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

ஜென்ம பாவமில்லாமல் உற்பவித்த அர்சிஷ்ட மரியாயே ! உம்மை மன்றாடுகிற எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

புகழ்மாலை
ஆண்டவரே இரக்கமாயிரும்(2)

கிறிஸ்துவே இரக்கமாயிரும்(2)
ஆண்டவரே இரக்கமாயிரும்(2)
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் நன்றாகக் கேட்டருளும்
பரலோகத்தில் இருக்கிற பிதாவாகிய சருவேசுரா
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சருவேசுரா
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
பரிசுத்த ஆவியாகிய சருவேசுரா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
தூய திருத்துவமாயிருக்கிற ஏக சருவேசுரா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
-  
புனித மரியாயே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்   
- திவ்விய இரட்சகரை எங்களுக்கு அளித்த அமலோற்பவ மாதாவே, எங்களுக்காக
   வேண்டிக்கொள்ளும்

-
வேத கிருபையின் அதிசயத்துக்குரிய எத்தனமான மாதாவே,
-
லூர்து மலைக் கெபியில் தரிசனமான அமலோற்பவ மாதாவே,
- உலகத்ததை வெறுத்தல் அவசியம் என்று காண்பிக்க ஏகாந்த தலத்தில் தரிசனமான அமலோற்பவ மாதாவே,
-
மோட்ச பிரதாபத்தின் மிகுதியைக் காண்பிக்க பூங்கதிர்களை அணிந்திருந்த திருமேனியுடன்  தரிசனமான அமலோற்பவ மாதாவே,
- ஞான சௌந்தர்யத்திற்கு மிஞ்சின சௌந்தர்யமில்லையென்று காண்பிக்க அழகின் அவதாரம் போல் தரிசனமான அமலோற்பவ மாதாவே,
ஆத்தும சுத்தத்திற்கு மேலான சுத்தமில்லையென்று காண்பிக்கச் சுத்த வெண் ஆடையை உடுத்தியவராய் தரிசனமான அமலோற்பவ மாதாவே,
- கற்பென்பது வானோர்கடுத்த புண்ணியமென்று காண்பிக்க மேகமற்ற வானம்போன்ற நீலக் கச்சுக் கட்டிக்கொண்டவராய் தரிசனமான அமலோற்பவ மாதாவே,
-
கற்புக்குக் காவல் ஒடுக்க வணக்கம் என்று காண்பிக்க நெடுமுக்காட்டைப் போர்த்துக் கொண்டவராய் தரிசனமான அமலோற்பவ மாதாவே,
-  நாங்கள் நாடவேண்டிய கதி மோட்சம் என்று காண்பிக்க அண்ணார்ந்தவராய்த் தரிசனமான அமலோற்பவ மாதாவே,
ஐம்பத்தி மூன்று மணிச்செபத்தை அடிக்கடி சொல்லுதல் உத்தம பத்திக் கிருத்தியமென்று காண்பிக்கச் செபமாலையைத் திருக்கரத்தில் ஏந்தியவராய்த் தரிசனமான அமலோற்பவ  மாதாவே,

-  கல்லும் முள்ளும் நிறைந்த வனமாகிய இந்த உலகத்தில் நீரே எங்களுக்கு துணையென்று காண்பிக்கக் கற்பாறையில் படர்ந்த முள்ளு
றோசாச் செடியை காலாலே மிதித்தவராய்த் தரிசனமான அமலோற்பவ மாதாவே,
தாழ்ச்சியும் தரித்திரமும் உள்ளவர்கள் போல் நீர் மிகுந்த பட்சமாயிருக்கிறீரென்று 
  காண்பிக்க ஒரு ஏழையான சிறுபெண்ணுக்கு தரிசனமான அமலோற்பவ மாதாவே,

-   உம்மை நேசித்து நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்கு அசாத்தியமானது ஒன்றுமில்லை என்று காண்பிக்க அந்தச் சிறுபெண் மூலமாய் ஒரு நீரூற்றை  பிறப்பித்தருளிய அமலோற்பவ மாதாவே
-  உம்முடைய வல்லமையும் கிருபையும் அளவிட்டு சொல்ல முடியாது என்று காண்பிக்க அந்த நீரூற்றுத் தாராளமாய் சுரந்து வழிந்தோடவும், கணக்கற்ற வியாதியஸ்தருக்கு ஆரோக்கியத்தை அளிக்கவும் செய்தருளிய அமலோற்பவ மாதாவே,
- பாவிகளை நன்நெறியில் திருப்புகின்ற லூர்து நாயகியே,
- நீதிமான்களை உறுதிப்படுத்துகின்ற லூர்து நாயகியே,
- செத்தவர்களுக்கு உயிர் கொடுக்கின்ற லூர்து நாயகியே,
- குருடருக்குப் பார்வை அளிக்கின்ற லூர்து நாயகியே,
- செவிடருக்குக் கேள்வியைத் தருகின்ற லூர்து நாயகியே,
- சப்பாணிகளை நடக்கச் செய்கின்ற லூர்து நாயகியே,
- நோயாளிகளைக் குணமாக்குகின்ற லூர்து நாயகியே,
- கஸ்திப்படுகிறவர்களைத் தேற்றுகின்ற லூர்து நாயகியே,
- சகல அவசரங்களிலும் உதவியாயிருக்கிற லூர்து நாயகியே,
- மேன்மேலும் மன்றாடப்படுகின்ற லூர்து நாயகியே,
- லூர்து என்னும் திருத்தலத்திற்குக் கணக்கற்ற சனங்களை வரச் செய்கின்ற அமலோற்பவ மாதாவே,
-
எங்கள் தாயாகிய திருச்சபைக்காக,உம்மை மன்றாடுகிறோம் லூர்து மாதாவே
- பரிசுத்த பாப்பானவருக்காக - உம்மை மன்றாடுகிறோம் லூர்து மாதாவே
- எங்கள் தேசத்துக்காக - உம்மை மன்றாடுகிறோம் லூர்து மாதாவே
- பல தண்டனைகளுக்குப் பாத்திரமாயிருக்கிற எங்களுக்காக - உம்மை மன்றாடுகிறோம் லூர்து மாதாவே
- எங்கள் பெற்றோர், புத்திரர், உறவினர் மித்திரர்களுக்காகவும்,- உம்மை மன்றாடுகிறோம் லூர்து மாதாவே
- எங்கள் எதிரிகளுக்காகவும்- உம்மை மன்றாடுகிறோம் லூர்து மாதாவே
- சகல பாவிகள் பதிதர் பிற சமயத்தவர்களுக்காகவும் - உம்மை மன்றாடுகிறோம் லூர்து மாதாவே

- உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே,

   எங்களைப் பொறுத்தருளும் யேசுவே

- உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே,
 
  எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் யேசுவே
- உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே,

   எங்கள் மேல் இரக்கமாயிரும் யேசுவே


மு- யேசுகிறிஸ்துநாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரராய் இருக்கத்தக்கதாக
து- பரிசுத்த செபமாலை மாதாவே!  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.



செபிப்போமாக;
சருவேசுரா சுவாமி! முழுமனதுடனே தெண்டனாக விழுந்து கிடக்கின்ற எங்களைப் பார்த்து அமலோற்பவ லூர்து நாயகியுடைய வேண்டுதலினாலே நாங்கள் பாவ வழியைவிட்டுப் புண்ணிய நெறியைப் பற்றிக் கொள்ளவும் தேவ அருளோடே மரித்து மோட்ச பேரின்பத்தை அடையவும் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்துவின் பெயராலே ஆமென்.


புனித லூர்து அன்னையிடம் மன்றாட்டு

மகிமை நிறை லூர்து அன்னையே, அமல உற்பவியே, இரக்கத்தின் தாயே, உடல் நலமற்றோருக்கு ஆரோக்கியமே, பாவிகளின் அடைக்கலமே, துயருருவோரின் ஆறுதலே, உம்மைத் தேடி வந்தேன் என்மேல் மனமிரங்கும், என் தேவைகள், தொல்லைகள், துன்பங்கள் எல்லாம் உமக்குத் தெரியும். உம்மிடம் நம்பிக்கையோடு வந்தவர்கள் உடல் உள்ள நலம் பெற்றுள்ளனர். இந்த நம்பிக்கையோடு தாயன்போடு கூடிய உமது பரிந்துரைக்காக நான் வந்துள்ளேன். என் விண்ணப்பங்களைக் கேட்டு உம் திருமகனிடமிருந்து அவற்றை எனக்குப் பெற்றுத் தந்தருளும். உமது திருப் பண்புகளை நான் பின்பற்றவும் , உம்மோடு ஒரு நாள் மகிமையில் பங்கேற்கவும் எனக்கு அருளைப் பெற்றுத் தாரும் ஆமென்


அடைக்கலமும் ஆதரவும் புகலிடமும் உன் பதியே
அண்டி வந்தோம் நாங்களம்மா உன்னருளால் காத்தருள்வாய்