Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் போனிஃபேஸ் ✠(St. Boniface)
   
நினைவுத் திருநாள் : (ஜூன் / Juin 05)
✠ புனிதர் போனிஃபேஸ் ✠(St. Boniface)

 *பேராயர்/ ஜெர்மானியர்களின் அப்போஸ்தலர்/ மறைசாட்சி :
(Archbishop of Mainz/ Apostle of the Germans/ Martyr)

*பிறப்பு : கி.பி. 675
கிரெடிடன், டெவன்
(Crediton, Devon)

*இறப்பு : ஜூன் 5, 754 (வயது 79)
டோக்கும் அருகே, ஃப்ரிஸியா
(Near Dokkum, Frisia)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
லூதரன் திருச்சபை
(Lutheran Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

*முக்கிய திருத்தலம் :
ஃபுல்டா பேராலயம்
(Fulda Cathedral)

*நினைவுத் திருநாள் : ஜூன் 5

*பாதுகாவல் :
ஃபுல்டா, ஜெர்மானியா, இங்கிலாந்து
(Fulda, Germania, England)

"வின்ஃப்ரிட்" (Winfrid) அல்லது "வின்ஃப்ரித்" (Wynfrith) எனும் திருமுழுக்கு பெயர் கொண்ட புனிதர் போனிஃபேஸ், "ஆங்கிலோ-சாக்ஸன் இங்கிலாந்து" (Anglo-Saxon England) நாட்டின் "வெஸ்செக்ஸ்" (kingdom of Wessex) அரசில் பிறந்து, "ஃபிராங்கிஷ்" (Frankish Empire) பேரரசின் ஜெர்மானிய பிரதேசங்களில் எட்டாவது நூற்றாண்டில் "ஆங்கிலோ-சாக்ஸன் மறைப்பணி" (Anglo-Saxon mission) ஆற்றிய முன்னணி கிறிஸ்தவ துறவி ஆவார்.

ஜெர்மானியர்களின் அப்போஸ்தலர் (Apostle of the Germans) என அறியப்படும் இவர், "ஆங்கிலேய பெனடிக்டைன் துறவி" (English Benedictine monk) ஆவார். தம்மை தேடி வந்த மடாதிபதி பதவியைத் துறந்த இவர், ஜெர்மானிய பழங்குடி மக்களின் கிறிஸ்தவ மன மாற்றத்திற்காக தமது வாழ்நாள் முழுதையும் அர்ப்பணித்தார்.

கிறிஸ்தவ மரபுவழி மற்றும் திருத்தந்தையின்மீது கொண்ட விசுவாசம் ஆகிய பண்புகளில் இவர் தனித்து நின்றார்.

மதிப்பும் வசதி வாய்ப்புகளும் உள்ள குடும்பத்தில் பிறந்த வின்ஃப்ரிட் தமது தந்தையின் விருப்பங்களுக்கு மாறாக, சிறு வயதிலேயே தமது வாழ்க்கையை துறவறத்திற்கு அர்ப்பணித்தார். அருகாமையிலுள்ள பெனடிக்டைன் துறவியர் மடத்தில் சேர்ந்து இறையியல் கல்வி கற்றார்.

தமது 30 வயதில் குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்ட இவர், இலத்தீன் மொழியின் இலக்கண உரை எழுதினர். கி.பி. 716ம் ஆண்டு, இவரது மடாதிபதியான "வின்பெர்த்" (Wynberth of Nursling) என்பவர் மரித்ததால் இவர் அப்பதவியை ஏற்க அழைக்கப்பட்டார். ஆனால் இந்த நிலைப்பாட்டை நிராகரித்த வின்ஃப்ரிட், மறை பணிகளுக்காக "ஃபிரிசியா" (Frisia) மற்றும் "ஜெர்மானியா" (Germania) நாடுகளை நோக்கி விரைந்தார்.

முதலில் அவர் "யூட்ரெச்ட்" (Utrecht) நாடு சென்றடைந்தார். அங்கே, கி.பி. 690ம் ஆண்டு முதல் மறைபணியாற்றிய "ஃபிரிசியர்களின் அப்போஸ்தலர்" (Apostle of the Frisians) என்றழைக்கப்படும் "வில்லிபிரார்டை" (Willibrord) சந்தித்தார். ஒரு வருடம் அங்கே தங்கிய வின்ஃப்ரிட், கிராமப்புறங்களில் மறை போதனை பணியாற்றினர். ஆனால், அக்காலத்தில், "சார்ள்ஸ் மார்ட்டேல்" (Charles Martel) மற்றும் "ஃபிரிசியா" அரசனான (King of the Frisians) "ராட்பாட்" (Radbod) ஆகிய அரசர்களிடையே நடந்த போரினால் இவர்களாற்றிய மறைபணி வெற்றியடையவில்லை.

சரியாக ஒரு வருடத்தின் பிறகு பெருநிலப்பகுதிக்கு திரும்பிய வின்ஃப்ரிட், நேராக அங்கிருந்து ரோம் நகர் சென்றார். திருத்தந்தை இரண்டாம் கிரகோரி (Pope Gregory II) இவரது பெயரை "போனிஃபேஸ்" என்று மாற்றினார். ஜெர்மானியாவின் மறைபணிகளுக்கான ஆயராக (Missionary Bishop for Germania) இவரை நியமித்தார். ஜெர்மனியில் உள்ள ஹெஸ் (Hess) என்ற பகுதிக்கு சென்றார். திருச்சபையின் நிறுவனங்களோ, மறைமாவட்டங்களோ இல்லாத பிரதேசத்துக்கு ஆயரானார். அதன்பின்னர் அவர் எப்போதுமே இங்கிலாந்து நாட்டுக்கு திரும்பிப் போகவில்லை. ஆனால் அவர் தனது வாழ்நாளில் தமது நாட்டு மக்களோடும் உறவினர்களுடனும் தொடர்பு கொண்டிருந்தார்.

ஜெர்மனி முழுவதும் இருந்த மூட நம்பிக்கைகளையும், தவறான கொள்கைகளையும் கூண்டோடு அழிக்க போனிஃபேஸ் முடிவு செய்தார். ஒருமுறை மக்கள் அனைவரையும் ஒன்றாக கூட்டி, அவர்கள் தெய்வமாக வழிபட்டு வந்த ஒரு வளர்ந்த ஓக் மரத்தின் முன் நிற்க வைத்து, அம்மரத்தை ஒரு கோடாரி வைத்து வெட்டினார். அம்மரம் 4 துண்டுகளாக பிரிந்து விழுந்தது. இதனால் கடவுளின் சினம் பேராபத்துடன் வரப்போகிறது என்று அம்மக்கள் கதிகலங்கினர்.

எந்த வித ஆபத்தும் இல்லாமற் போகவே, அவர்கள் நம்பிய தெய்வங்கள் பயனற்றவை என்ற முடிவுக்கு வந்தனர். அதன்பின் அவர்கள் கடவுள் ஒருவரே என்பதை உணர்ந்தனர். மக்கள் கூட்டம் கூட்டமாக கிறிஸ்துவுக்குள் மனம் மாறினார்கள். அங்கே சிறு தேவாலயத்தைக் கட்டி, அதனை புனிதர் பேதுருவுக்கு (Saint Peter) அர்ப்பணித்தார். இச்சிற்றாலயம், "ஃபிரிட்ஸ்லர்" (Fritzlar) மாநிலத்தில் கிறிஸ்தவ துறவற பணிகளுக்கான ஆரம்பமாக இருந்தது. பாகனிசம் (Paganism) இதனால் இங்கே இவரால் தனி ஒரு மனிதரால் வேரறுக்கப்பட்டது.

"ஃபிராங்கிஷ்" (Frankish) மேயர்களின் ஆதரவு போனிஃபேஸுக்கு அவசியமாக இருந்தது. 723ம் ஆண்டு முதல் போனிஃபேஸ் அரசன் "சார்ள்ஸ் மார்ட்டேலின்" (Charles Martel) பாதுகாப்பில் இருந்தார்.

கி.பி. 732ம் ஆண்டு, போனிஃபேஸ் இரண்டாம் முறையாக ரோம் பயணித்தார். இம்முறை, திருத்தந்தை மூன்றாம் கிரகோரி (Pope Gregory III) இவரை முழு ஜெர்மானிய பிராந்தியத்துக்கும் பேராயராக நியமித்தார். போனிஃபேஸ் ஆயிரக்கணக்கான மக்களை திருமுழுக்கு அளித்து மனம் மாற்றினார்.

கி.பி. 73738ம் ஆண்டுகளில், போனிஃபேஸின் மூன்றாவது ரோம் பயணத்தின்போது, இவர் ஜெர்மனிக்கான திருத்தந்தையின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். இவரது மூன்றாவது ரோம் பயணத்தின் பின்னர், அரசன் சார்ள்ஸ் மார்ட்டேல் (Charles Martel) பவேரியாவில் (Bavaria) "சல்ஸ்பர்க்", "ரெஜென்ஸ்பர்க்", ஃப்ரெய்சிங்", மற்றும் "பஸ்சாவு" (Salzburg, Regensburg, Freising, and Passau) ஆகிய நான்கு மறைமாவட்டங்களை தோற்றுவித்து அவற்றை பேராயர் போனிஃபேஸின் உயர்மரைமாவட்டம் மற்றும் பெருநகரத்தின் கீழே கொடுத்தார்.

பின்னர் தன் கையால் முதன்முதலாக திருமுழுக்கு பெற்ற பிரீஸ்லாந்து மக்களிடையே சென்று மறைபரப்பு பணியை தொடர்ந்தார். பிரிஸ்லாந்தின் வடகிழக்கு பகுதியில் இருள் மங்கிக்கிடந்தது. அம்மக்கள் ஆயரில்லா ஆடுகளை போல இருந்தனர். அப்போது தமது 73ம் வயதில் அம்மக்களை ஒன்றாக கூட்டி கிறிஸ்து உயிர்ப்பு விழாவிற்கு அடுத்த ஞாயிறன்று ஞானஸ்நானம், உறுதிபூசுதல் கொடுக்க "டொக்கு" என்ற இடத்தில் ஏற்பாடு செய்தார். புதிய கிறிஸ்தவர்களின் வருகைக்காக தம் குடிசையில் காத்துக் கொண்டிருக்கும்போது, சில கொள்ளைக்காரர்களால் தாக்கப்பட்டார். பேராயரின் உடன் பணியாளர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் "கிறிஸ்துவுக்காக உயிரைக் கொடுப்போம்" என்று போனிஃபேஸ் கூறும் போதே, முதல் அடி அவர் மேல் விழ, அன்னாரின் உயிர் பிரிந்தது. அவரோடு இணைத்து உடன் இருந்தவர்களும் கொல்லப்பட்டனர். இன்று இத்தனை நூற்றாண்டுகளாக ஜெர்மனியும், ஃபிரான்சும் ஆழமான விசுவாசமுள்ள நாடுகளாக காட்சியளிக்கின்றன என்றால் அதற்கு அடித்தளமிட்டவர், இரத்தம் சிந்தி உரமிட்டவர் புனிதர் போனிஃபேஸ் என்பதை எவராலும் மறக்க இயலாது.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தூய போனிபேஸ் (ஜூன் 05)


"உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்" (மத் 5:44)

வாழ்க்கை வரலாறு

போனிபேஸ் 680 ஆம் ஆண்டு, இங்கிலாந்து நாட்டில் உள்ள தேவோன்ஷிர் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் சிறுவனாக இருந்த சமயத்தில் ஒருநாள் துறவிகள் இவருடைய இல்லத்திற்கு வந்தார்கள். அப்போது அவர்களுடைய நடவடிக்கைகள், பழக்கவழக்கம் எல்லாவற்றையும் பிற்காலத்தில் தானும் துறவியாகவேண்டும் என்னும் ஆசைகொண்டார். அந்த ஆசை பின்னாளில் நனவாகவும் மாறியது என்பது வரலாறு.

போனிபேசுக்கு ஏழு வயது நடக்கும்போது ஆசிர்வாதப்பர் சபைத் துறவிகள் நடத்தி வந்த பள்ளியில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். அங்கு இவர் கல்வியிலும் சிறந்து விளங்கினார். பின்னாளில் அங்கேயே துறவியாகவும் மாறினார். துறவியாக மாறிய பின்பு திருத்தந்தை இரண்டாம் கிரகோரியாரின் வேண்டுகோளின் பேரில் மேற்கு ஜெர்மனிக்குச் சென்று ஆண்டவருடைய நற்செய்தியை வல்லமையோடு எடுத்துரைக்கத் தொடங்கினார். இவருடைய மறைபோதனையால் பலரும் திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவ மறையைப் பின்பற்றத் தொடங்கினார்கள்.

சில காலம் அங்கு பணியாற்றிய போனிபேஸ் 722 ஆம் ஆண்டு உரோமைக்குத் திரும்பினார். அங்கே அவரை ஆயராகத் திருப்பொழிவு செய்தார்கள். இத்தனைக்கும் அவர் தனக்கு ஆயர் பதவி வேண்டாம் என்று சொல்லியும் கூட அவர் ஆயராக நியமிக்கப்பட்டார்.

ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்ட பின்பு போனிபேஸ் மீண்டுமாக முன்பு பணியாற்றிய இடத்திற்குச் சென்றார். இந்தமுறை அவர் அங்கு சென்றபோது புதுவிதமான பிரச்சனை ஒன்றைச் சந்தித்தார். அது என்னவென்றால் கிறிஸ்துவா? பிற தெய்வங்களா? யார் பெரியவர் என்ற விவாதம் மக்கள் மதத்திலே நிலவிக் கொண்டிருந்தது. இந்த சமயம் பார்த்து போனிபேஸ், மக்கள் தெய்வம் என வழிபட்டுக் கொண்டிருந்த ஒரு பெரிய மரத்தை வெட்டி வீழ்த்தினார். இதைப் பார்த்துவிட்டு மக்களெல்லாம், "தெய்வம் தங்கியிருக்கும் இந்த மரத்தை இவர் இப்படி வெட்டிவிட்டாரே, இவருக்கு என்ன ஆகப்போகுதோ" என்று பேசத் தொடங்கினார்கள். ஆனால், இவருக்கு எந்தவொரு ஆபத்தும் நேரவில்லை. அப்போது மக்கள் உணர்ந்துகொண்டார்கள் கிறிஸ்துதான் எல்லாரிலும் பெரியவர் என்று.

இந்த நிகழ்விற்குப் பிறகு பலர் கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்கள். போனிபேசும் மக்களிடமிருந்த மூட நம்பிக்கையோடு வல்லமையோடு விரட்டி அடித்தார். இவர் மூட நம்பிக்கைக்கு எதிராக எவ்வளவுதான் போராடினாலும் மக்களிடமிருந்து மூடநம்பிக்கைகளை அறவே அகற்ற முடியவில்லை. இதனால் இவர் புதிய புதிய திருச்சபைகளை உருவாகுவதிலும், நிறைய ஆலயங்களைக் கட்டி, மக்களுடைய விசுவாசத்தைக் கட்டி எழுப்புவதிலும் மிகுந்த அக்கறை காட்டினார். இப்படி இவர் ஆற்றிய பணிகளைப் பார்த்துவிட்டு 752 ஆம் ஆண்டு இவரை பேராயராக உயர்த்தினார்கள்.

பேராயராக உயர்ந்த பின்பும்கூட இவர் வல்லமையோடு ஆண்டவருடைய வாக்கை மக்களுக்கு அறிவித்து வந்தார். 755 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் ஆண்டு, நெதர்லாந்தில் இருந்த மக்களுக்கு இவர் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத சிலர் இவர்மீது பாய்ந்து இவரைக் கொன்று போட்டார்கள். இவர் தன்னைக் கொன்றவர்களை மனதார மன்னித்துவிட்டு, ஆண்டவருடைய கைகளில் தன்னுடைய ஆன்மாவை ஒப்படைத்துவிட்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1874 ஆம் ஆண்டு, ஒன்பதாம் பத்திநாதரால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய போனிபேசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. கீழ்ப்படிந்து வாழ்வோம்

தூய போனிபேசின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடம் கீழ்படிதல் ஆகும். இவர் திருத்தந்தைக்கு எப்போதும் கீழ்படிந்து வாழ்ந்தார். ஜெர்மனிக்குச் சென்று நற்செய்தி அறிவி என்று சொன்னபோதும் ஆயராக உயர்த்தப்பட்டபோதும் எந்தவொரு மறுப்பும் சொல்லாமல் கீழ்ப்படிதலோடு ஏற்றுக்கொண்டார்.

தூய போனிபேஸ் அடிக்கடிச் சொல்லக்கூடிய வார்த்தைகள், குருக்கள் ஆயர்களுக்கும் ஆயர்கள் திருத்தந்தைக்கும் திருத்தந்தை ஆண்டவர் இயேசுவுக்கும் கீழ்படிந்து நடக்கவேண்டும் என்று. இது உண்மையிலும் உண்மையான வார்த்தைகள். என்றைக்கு திருச்சபையில் கீழ்ப்படிதல் இருக்கின்றதோ, அன்றைக்கே திருச்சபை வளர்ந்து எழில்மிகு மாளிகையாகக் காட்சியளிக்கும் என்பது உண்மை.

ஆகவே, தூய போனிபேசின் நினைவுநாளைக் கொண்டாடும், அவரைப் போன்று ஆண்டவரின் நற்செய்தியை வல்லமையோடு எடுத்துரைப்போம். கீழ்ப்படிந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா