Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                     20 மே 2018  
                                         தூய ஆவியானவர் பெருவிழா
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================

தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் பேசத் தொடங்கினார்கள்.


திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 1-11

பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது சீடர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். திடீரென்று கொடுங்காற்று வீசுவதுபோன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர்.

தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத் தொடங்கினார்கள். அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூத மக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர். அந்த ஒலியைக் கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக் கேட்டுக் குழப்பமடைந்தனர்.

எல்லாரும் மலைத்துப்போய், "இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பது எப்படி?" என வியந்தனர்.

"பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும் பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும், யூதரும், யூதம் தழுவியோரும், கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம் மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக் கேட்கிறோமே!" என்றனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் -  திபா 104: 1ab,24ac. 29bc-30. 31,34 (பல்லவி: 30)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

அல்லது: அல்லேலூயா.

1ab என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! 24ac ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. பல்லவி

29bc நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். 30 உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். பல்லவி

31 ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! 34 என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
தூய ஆவியின் கனிகள்.

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 16-25

சகோதரர் சகோதரிகளே, நான் சொல்கிறேன்: தூய ஆவியின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழுங்கள்; அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள். ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு முரணானது. தூய ஆவியின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது. இவை ஒன்றுக்கொன்று எதிராய் உள்ளதால் நீங்கள் செய்ய விரும்புவதை உங்களால் செய்ய முடிவதில்லை. நீங்கள் தூய ஆவியால் வழிநடத்தப்பட்டால், திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களாய் இருக்கமாட்டீர்கள்.

ஊனியல்பின் செயல்கள் யாவருக்கும் தெளிவாய்த் தெரியும். அவை பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலை வழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவை ஆகும். இத்தகையவற்றில் ஈடுபடுவோர் இறையாட்சியை உரிமைப்பேறாக அடைவதில்லை என்று நான் ஏற்கெனவே சொன்னேன். அதையே இப்போதும் மீண்டும் சொல்கிறேன்.

ஆனால் தூய ஆவியின் கனியோ அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும். இவையுள்ள இடத்தில் திருச்சட்டத்திற்கு இடமில்லை.

கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பை அதன் இழிவுணர்ச்சிகளோடும் இச்சைகளோடும் சேர்த்துச் சிலுவையில் அறைந்துவிட்டார்கள். தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயலுவோம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீ பற்றியெரியச் செய்தருளும். அல்லேலூயா.

தொடர் பாடல்

தூய ஆவியே, எழுந்தருள்வீர், வானினின்றுமது பேரொளியின் அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.

எளியவர் தந்தாய், வந்தருள்வீர், நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர், இதய ஒளியே, வந்தருள்வீர்.

உன்னத ஆறுதலானவரே, ஆன்ம இனிய விருந்தினரே, இனிய தண்மையும் தருபவரே.

உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே, வெம்மை தணிக்கும் குளிர் நிழலே, அழுகையில் ஆறுதலானவரே.

உன்னத பேரின்ப ஒளியே, உம்மை விசுவசிப்போருடைய நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.

உமதருள் ஆற்றல் இல்லாமல் உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை, நல்லது அவனில் ஏதுமில்லை.

மாசு கொண்டதைக் கழுவிடுவீர். வறட்சியுற்றதை நனைத்திடுவீர், காயப்பட்டதை ஆற்றிடுவீர்.

வணங்காதிருப்பதை வளைத்திடுவீர், குளிரானதைக் குளிர் போக்கிடுவீர், தவறிப்போனதை ஆண்டருள்வீர்.

இறைவா உம்மை விசுவசித்து, உம்மை நம்பும் அடியார்க்குக் கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.

புண்ணிய பலன்களை வழங்கிடுவீர், இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர், அழிவிலா இன்பம் அருள்வீரே.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================

தூய ஆவியார் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 26-27; 16: 12-15

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள்.

ஏனெனில் நீங்கள் தொடக்கமுதல் என்னோடு இருந்து வருகிறீர்கள். நான் உங்களிடம் சொல்லவேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது. உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்.

அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப் போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார். தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் "அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்" என்றேன்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

சிந்தனை:

50ம் நாள் கொண்டாட்ட பெருவிழா இவ்விழா. தொடக்கத்தில் நீரில் அசைவாடிய ஆவி (தொநூ 01:02) அன்னை மரியாவை ஆட்கொண்ட ஆவி (லூக் 01:35) எலிசபெத்தம்மாளை ஆட் கொண்ட ஆவி (லூக் 01:41) இயேசுவின் வாழ்வில் நிறைந்திருந்த ஆவி (லூக் 03:22) திருஅவையில் பொழியப்பட்ட பெந்தகோஸ்து பெருவிழா இவ்விழா.

புனிதர்களை பரிசுத்தப்படுத்த தன் கொடைகளையும், வரங்களையும், கனிகளை தந்த ஆவியானவர், நம்மை அவிஷேகம் செய்து வழிநடத்துகின்றார். அந்த ஆவியை அணைத்து விடாது, வாழ முன்வரும் எல்லாரையும் பரிசுத்தத்தில் வாழச் செய்கின்றார். சீடர்களைப் போல செபத்தில் நிலைத்திருப்போம்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
துணையாளராம் தூய ஆவியார்!   (பெந்தகொஸ்தேப் பெருவிழா)

பிரபல பியானோ இசைக் கலைஞராகிய இஞ்ஞாசி படேரவ்ஸ்கி (Ignace Paderewski) நடத்திவந்த இசைக் கச்சரியைப் பார்ப்பதற்காக ஒரு தாய் இசையில் மிகவும் ஆர்வமாக இருந்த தன்னுடைய ஐந்து வயது மகனை கூட்டிக்கொண்டு போனார். அதன்மூலம் அந்தத் தாய் தனது மகனுக்கு இசையில் இன்னும் ஆர்வத்தை ஊட்டவேண்டும் என்று நினைத்தார்.

இசைக் கச்சேரி நடைபெற இருந்த அரங்கில் நுழைந்த தாயானவள் முன் வரிசையில் போய் அமர்ந்துகொண்டார், அவர் அருகிலே அவருடைய மகனும் அமர்ந்துகொண்டான். தற்செயலாக அந்தத் தாயானவள் திரும்பிப் பார்த்தபோது அவருடைய நீண்ட நாளையத் தோழி பக்கத்துக்கு இருக்கையில் அமர்ந்திருந்தார். எனவே, அவர் அருகிலிருந்த தனது மகனை மறந்துவிட்டு, தோழியோடு பேசத் தொடங்கிவிட்டார்.

இதற்கிடையில் சரியான நேரத்தில் இசைக் கச்சேரி ஆரம்பமானது, முதலில் மேடையில் மெல்லிய ஒளி தோன்றியது. அந்த மெல்லிய வெளிச்சத்தில் சிறுவன் ஒருவன் பியானோவிற்கு முன்பாக அமர்ந்து "Twinkle Twinkle Little Star" என்னும் பாடலை வாசித்துக்கொண்டிருந்தான். முன்வரிசையில் அமர்ந்திருந்த தாயானாள் அந்தச் சிறுவனைக் கூர்ந்து கவனித்தபோதுதான் தெரிந்தது அது தன்னுடைய மகன் என்று. மகனை அவ்வாறு பார்த்த தாய் ஒருவிதமான பதற்றமடைந்தார். தன்னுடைய மகன் இஞ்ஞாசி படேரவ்ஸ்கி வாசிக்கும் பியானோவை வாசிப்பதா?, என்ன நடக்கப்போகின்றதோ என்று ஒருவிதமான தடுமாற்றத்தோடு மகனைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது மேடையில் இஞ்ஞாசி படேரவ்ஸ்கி தோன்றினார். அரங்கில் திரண்டிருந்த மக்கள் அனைவரும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினார்கள். இஞ்ஞாசி படேரவ்ஸ்கியைப் பார்த்ததும் சிறுவன் பியானோவை வாசிப்பதை நிறுத்தினான். உடனே அவர் அவனிடம், "நிறுத்தவேண்டாம், தொடர்ந்து வாசி" என்று சொல்லிக்கொண்டே அவன் வாசித்துக்கொண்டிருந்த Twinkle Twinkle Twinkle Little Star பாடலுக்கு வலுசேர்க்கும் விதமாக பக்கவாட்டில் இருந்த கட்டைகளை பாடலுக்கு ஏற்றவாறு மாற்றி மாற்றிப் பிடித்தார். அது சிறுவன் வாசித்துக்கொண்டிருந்த பாடலை இன்னும் இனிமையாக்கியது. தொடர்ந்து சிறுவன் வாசிக்க, அவனுக்குத் துணையாக இஞ்ஞாசி படேரவ்ஸ்கி பக்கவாட்டில் இருந்த கட்டைகளை வாசிக்க வாசிக்க அந்த இசை மிகச் சிறந்த இசையாக மாறிப்போனது. இதைக் கேட்டு அரங்கில் திரண்டிருந்த அனைவரும் (சிறுவனின் தாய் உட்பட) கைகளைத் தட்டி தங்களுடைய வாழ்த்துகளை அவர்களுக்குத் தெரிவித்துக்கொண்டார்கள்.

இசை மேதை இஞ்ஞாசி படேரவ்ஸ்கியும் ஐந்து வயது சிறுவனும் பியானோ வாசித்த அந்த அற்புத நிகழ்வு, பயந்தாகோழிகளாக இருந்த சீடர்கள் தூய ஆவியின் வருகைக்குப் பிறகு எந்தளவுக்கு துணிச்சல் மிக்க மனிதர்களாக மாறினார்கள் என்பதை நமக்கு நினைவூட்டுவதாக இருக்கின்றது. ஆம், இசை மேதை இஞ்ஞாசி படேரவ்ஸ்கியின் வருகைக்குப் பிறகு சிறுவனின் பியானோ வாசிப்பு இன்னொரு லெவலுக்குச் சென்றதுபோல தூய ஆவியின் வருகை சீடர்களைப் புதிய மனிதர்களாகவே மாற்றியது என்று சொன்னால் அது மிகையாகாது.

இன்று நாம் தூய ஆவியின் விழாவை, அதாவது பெந்தகொஸ்தே விழாவைக் கொண்டாடுகின்றோம். இந்த நாளில்தான் தூய ஆவியானவர் சீடர்கள் மீது இறங்கி வருகின்றார், அவர்களை புதிய மனிதர்களாக மாற்றுகின்றார். மகிழ்ச்சி பொங்கும் தூய ஆவியானவரின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில், இவ்விழா நமக்கு உணர்த்து செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

ஆண்டவர் இயேசு இந்த உலகினை விட்டுப்போவதற்கு முன்பாக தன்னுடைய சீடர்களிடம், "நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால் அவரை தந்தையாம் கடவுள் உங்களிடம் அனுப்புவார்" என்பார் (யோவான் 16:7) இயேசு சொன்னதுபோன்றே அவருடைய விண்ணேற்றத்திற்குப் பிறகு தூய ஆவியானவர் சீடர்கள் மீது இறங்கி வருகின்றார். அதுவரைக்கும் பயந்து பயந்து வாழ்ந்துவந்த சீடர்கள் தூய ஆவியின் வருகைக்குப் பிறகு துணிச்சலோடு ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு எடுத்துரைகின்றார்கள். ஆகையால், தூய ஆவியின் வருகை திருச்சபையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது என்று நாம் உறுதியாகச் சொல்லலாம். இத்தகைய வல்லமைமிக்க தூய ஆவியார் எத்தகையவர் எத்தகையர் என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்த்துவிட்டு, கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் பவுலடியார் கூறுகின்ற தூய ஆவியின் தூண்டுதலுக்கு ஏற்ப எப்படி நாம் வாழலாம் என சிந்தித்துப் பார்ப்போம்.

தூய ஆவியாரைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்கின்றபோது அவர் உண்மையை வெளிப்படுத்துகின்றவராக இருக்கின்றார் என்பார் இயேசு கிறிஸ்து. இது முற்றிலும் உண்மை. இக்கட்டான சூழ்நிலையில் அல்லது குழப்பமான சூழ்நிலையில் நாம் இருக்கும்போது, தூய ஆவியானவரை நோக்கி நாம் எழுப்பும் ஜெபம், நமக்கு சரியான பாதையை, உண்மையை எடுத்துரைப்பதாக இருக்கின்றது என்று சொன்னால் அது மிகையாகாது. தூய ஆவியானவர் நம்மை முழு உண்மையை நோக்கி வழிநடத்துபவராக, உண்மையை வெளிப்படுத்துபவராக இருக்கக்காரணம் அவரே உண்மையாக இருக்கின்றார் என்பதுதான் நிதர்சனம். யோவான் எழுதிய முதல் திருமுகத்தில் வாசிக்கின்றோம், "தூய ஆவியாரே உண்மை" என்று (1 யோவா 5:6). ஆகையால், தூய ஆவியாரே உண்மை, அவரே நம்மை முழு உண்மையை நோக்கி வழிநடத்தக்கூடியவர் என்பதை உணர்ந்து, எப்போதும் அவருடைய பாதுகாப்பில் வாழ்வோம்.

தூய ஆவியாரைக் குறித்து இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்கின்ற செய்தி அவர் வலுவூட்டுகிறவர் என்பதாகும். சீடர்கள் யாவரும் யூதர்களுக்கு அஞ்சி தங்களை அறைக்குள் அடைத்துக்கொண்டு வாழ்ந்துவந்தார்கள். அப்போதுதான் பெந்தகொஸ்தே என்னும் ஐம்பதாம் நாளில் அதாவது அறுவடைப் பெருவிழாவில் எல்லா இனத்தாரும் கூடி இருக்கின்றபோது தூய ஆவியார் அவர்கள் மீது நெருப்புப் போன்ற நாவுகள் வடிவில் இறங்கி வருகின்றார். நெருப்பு கடவுளின் பிரசன்னத்தை நமக்கு எடுத்துரைப்பதாக இருக்கின்றது (விப 19:16-18). நாவுகள் என்பது வாய் அல்லது வாய்ச்சொல்லோடு தொடர்புடையதாக இருக்கின்றது. தூய ஆவியார் நெருப்புப் போன்ற நாவுகள் வடிவில் எல்லார் மீது இரங்கி வந்ததால் சீடர்கள் வலுபெற்றவர்களாய் உணர்கின்றார்கள். எனவே, அவர்கள் துணிவோடு ஆண்டவர் இயேசுவைப் பற்றிய எடுத்துரைக்கின்றார்கள்.

விவிலியத்தில் தூய ஆவியானவரைப் பற்றி எங்கெல்லாம் சொல்லப்படுகின்றதோ அங்கெல்லாம் வாழ்வும், வலுவும் இணைந்தே வருகின்றது என்பதை நாம் மறுக்கமுடியாது. தொடக்க நூல் முதல் அதிகாரத்தில் வெறுமையாய் இருந்த உலகில் தூய ஆவியார் தண்ணீரில் அசைவாடிக்கொண்டிருந்தார் என்னும் வார்த்தையும் (தொநூ 1:2), எசேக்கியேல் புத்தகத்தில் உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்ற நிகழ்வும் (37) தூய ஆவியார் வாழ்விற்கும், வலுவிற்கும் ஊற்றாக இருக்கின்றார் என்னும் உண்மையை உணர்ந்துகொள்ளலாம். ஆகையால், தூய ஆவியார் நமக்கு உண்மையை வெளிப்படுத்துபவராக இருக்கின்றார் என்னும் உணரும் அதே வேளையில், அவர் நமக்கு வலுவூட்டுகிறவராகவும் இருக்கின்றார் என்கிற உண்மையை உணர்ந்தவர்களாய் வாழ்வோம்.

தூய ஆவியாரைக் குறித்து இன்றைய இறைவார்த்தை நமக்கு சொல்லுகின்ற மூன்றாவது செய்தி அவர் ஆண்டவரைக் குறித்து சான்று பகர்வர், சீடர்களையும் சான்று பகரச் செய்வார் என்பதாகும். நற்செய்தியில் இயேசு மிகத் தெளிவாகச் சொல்கின்றார், "அவர் (தூய ஆவியார்) வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். தூய ஆவியார் ஆண்டவர் இயேசுவைக் குறித்து எத்தகைய சான்று பகர்ந்தார் என்பதை யோவான் தன்னுடைய முதல் திருமுகத்தில் மிக அழகாகக் கூறுகின்றார், "நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவரென தூய ஆவியார் சான்று பகர்கின்றார்" என்று (1 யோவா 5:6). ஆம். தூய ஆவியார் இயேசு எப்படிப்பட்டர் என்பதை இந்த உலகிற்கு எடுத்துக் கூறி சான்றுபகர்கின்றார். அது மட்டுமல்லாமல், சீடர்களும் ஆண்டவர் இயேசுவைப் பற்றிச் சான்று பகர்வதற்கும் உறுதியாக இருக்கின்றார். இவ்வாறு அவர் ஆண்டவர் இயேசுவைப் பற்றி சான்று பகர்வதில் சிறந்து விளங்குகின்றார்.

இவ்வாறாக தூய ஆவியார் உண்மையை வெளிப்படுத்துகின்றவராக, நமக்கு வலுவூட்டுகின்றவராக, ஆண்டவர் இயேசுவைப் பற்றி சான்று பகற்கின்றவராகிய இருக்கின்றார் என்பதை நினைத்துப் பார்க்கும்போது அது நமக்கு பெருமகிழ்ச்சியைத் தருவதாக இருக்கின்றது.

இதுவரைக்கும் தூய ஆவியார் எப்படிப்பட்டவர் என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்த்த நாம், அவருடைய தூண்டுதலுக்கு ஏற்ப வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டிருக்கின்றோம். இன்றைய இரண்டாம் வாசகத்தில் (கலாத்தியருக்கு எழுதப்பட்ட திருமுகம்) பவுலடியார், "சகோதர சகோதரிகளே, நீங்கள் ஆவியின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழுங்கள்" என்பார். தூய ஆவியின் தூண்டுதல் - கனிகள் -என்ன என்பதை அவரே வரிசைப்படுத்துவார், "அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவையே ஆகும் என்று அவர் சொல்வார். இப்படி தூய ஆவியின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழும்போது இறையாட்சியை உரிமைப் பேறாக பெற்றுக்கொள்வது உறுதி. ஆனால், நடைமுறை வாழ்க்கையில் அப்படியெல்லாம் நம்மால் நடக்க முடிவதில்லை. நாம் தூய ஆவியின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழாமல், ஊனியல்புக்கு ஏற்ப வாழ்கின்றோம். அதனாலேயே இறையாட்சிக்கு உட்பட முடியாமல் ( 5:21) கடவுளை விட்டு வெகு தொலைவில் போய்விடுகின்றோம். நம்முடைய சிற்றின்ப நாட்டங்கள் நம்மைக் கடவுளை விட்டு வெகுதொலைவில் கொண்டுபோய்விடுகின்றது.

மனிதன் எப்படி சிற்றின்பங்களுக்காக எல்லாவற்றையும் இழக்கின்றான் என்பதற்கு சொல்லப்படுகின்ற கதை.

இளைஞன் ஒருவன் தன் தந்தையின் மாடுகளை காட்டுப் பகுதியில் மேய்த்து வந்தான். அவன் மேய்த்து வந்த ஒவ்வொரு மாட்டின் கழுத்திலும் ஒரு சிறியமணி கட்டப்பட்டிருந்தது. அந்த மணி எழுப்புகின்ற ஓசையை வைத்தே மாடுகள் எங்கே இருக்கின்ற என்று அவன் எளிதாய் கண்டுகொண்டான்.

ஒருநாள் அவன் மாடுகள் மேய்த்துக்கொண்டிருந்தபோது வழிப்போக்கன் ஒருவன் வந்தான். அவன் இளைஞனிடம், "தம்பி! மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் மணிகள் மிகவும் அருமையாக இருக்கின்றனவே, அவையெல்லாம் எவ்வளவு ரூபாய் பெறும்" என்று கேட்டான். அதற்கு இளைஞன், "மிஞ்சி மிஞ்சிப் போனால், எல்லாம் சேர்த்து ஆயிரம் ரூபாய் பெறும்" என்றான். "நான் உனக்கு மூவாயிரம் ரூபாய் தருகின்றேன். எல்லா மாடுகளின் கழுத்திலும் கட்டப்பட்டிருக்கும் மணிகளையும் எனக்குக் கழற்றித் தருவாயா?" என்று கேட்டான் வழிபோக்கன். "சாதாராண மணிகளுக்கு மூவாயிரம் ரூபாயா" என்று வாயைப் பிளந்த இளைஞன் எல்லா மாடுகளின் கழுத்தில் இருந்த மணிகள் அனைத்தையும் கழற்றிக் கொடுத்துவிட்டான். இப்போது மாடுகளின் கழுத்தில் மணிகள் இல்லை.

மறுநாள் அவன் வழக்கம்போல காட்டுப்பகுதியில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான். அன்றைக்கு வெயில் அதிகமாக இருந்தது. அதனால் அவன் அருகிலே இருந்த மர நிழலில் அமர்ந்தான். அப்படியே தூங்கிப் போனான். சிறிது நேரத்தில் அவன் கண்விழித்துப் பார்த்தபோது மேய்ந்துகொண்டிருந்த மாடுகள் ஒன்றுகூட இல்லை. அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது மாடுகள் களவுபோனது முந்தைய தினத்தில் வந்த வழிபோக்கனின் சதித்திட்டம் என்று. மாடுகளில் கழுத்தில் மணி இருந்தால், அது ஒலி எழுப்பே என்பதை அவன் நன்றாக அறிந்துதான், மணிகளைப் பூராம் என்னிடமிருந்து விலைகொடுத்து வாங்கிகொண்டு, இன்றைக்கு என்னையே ஏமாற்றிவிட்டான்" என்று அந்த இளைஞன் தன்னையே நொந்துகொண்டான்.

சிறிய தொகைக்காக எல்லா மாடுகளையும் - சொத்துகளையும் - இழந்த இளைஞனைப் போன்றுதான் நாமும் ஊனியல்பின் படி வாழ்ந்து, கடவுள் கொடுக்கின்ற இறையாட்சியை இழந்துவிடுகின்றோம்.

ஆகவே, நாம் ஊனியல்புகளின் படி நடவாமல், தூய ஆவியின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழும்போது இறைவன் தரும் எல்லா ஆசியையும் பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி. எனவே, நமக்கு வாழ்வுளிகும், வலுவூட்டும் உண்மையை வெளிபடுத்தும் தூய ஆவியின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
"தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்".

நீங்கள் தூய ஆவியால் எப்பொழுதும் நிரப்பப்பட்டிருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இது மிக அவசியம். ஏனென்றால் வாழ்க்கைக்கு மகிழ்ச்சி மிக அவசியம். மகிழ்ச்சி இல்லாத வாழ்க்கையை நீங்கள் விரும்பமாட்டிP;ர்கள். யார்தூய ஆவியால் நிரப்பப்பட்டிருக்கிறார்களோ அவர்களிடம் இந்த மகிழ்ச்சி எப்போதும் இருக்கும். இறைவனின் தூய ஆவி படைக்கும் ஆற்றலுடையது. நீர்த்திரள் மேல் அசைந்தாடிய கடவுளின் ஆவி உலகைப் படைத்ததைத் தொடக்க நூலில் படிக்கிறோம். மண்ணால் மனிதனை உருவாக்கி உயிர் மூச்சை ஊதி மனிதனைப் படைத்ததும் ஆவியின் செயலே.பாவத்தில் வாழ்விழந்த மனிதனின் பாவங்களை மன்னித்து மகிழச்சி நிறைந்த மனித வாழ்வைக் கொடுப்பதும் ஒரு புது படைப்பு அல்லவா. பாவமன்னிப்பு பெறும் மனிதர்கள் தூய ஆவியால் நிரப்பப்படுகிறார்கள். அவர்கள் புதுப்படைப்பாக மாறுகிறார்கள். பாவம் அவர்களிடம் இல்லை. எனவே மனதில் ஒரு தெய்வீக அமைதி குடிகொள்கிறது. இதயத்தில் இனம்புரியாத நிறை மகிழ்ச்சி நிறைந்திருக்கிறது. பாவ மன்னிப்பு பெற்று தூய ஆவியால் நிறைந்திருப்போர் வாழ்வில் என்னதான் தடையிருந்தாலும் எப்படித்தான் நான்கு சுவர்களுக்கும் பூட்டி வைத்தாலும் கொடுக்கும் உங்கள் தெய்வம் கூரையை கிழித்து உங்களுக்கு தன் கொடையாம் மகிழ்ச்சியை, அமைதியை, செல்வத்தை குறையின்றி வழங்குவார். உயிர்த்த இயேசு இதையே இன்றைய வாசகத்தில் தன் சீடர்கள்மேல் ஊதி, தூய ஆவியை வழங்கி, பாவமன்னிப்பைக் கொடுத்து அமைதியும் மகிழ்ச்சியும் வாக்களிக்கிறார். நீங்களும் பெற்று மகிழுங்கள்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
"இயேசு சீடர்கள்மேல் ஊதி, "தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும்..." என்றார்" (யோவான் 20:22-23)


-- சாவிலிருந்து விடுதலையடைந்து உயிர்த்தெழுந்த இயேசு சீடர்களுக்குத் தோன்றுகிறார்; அவர்கள்மேல் "ஊதுகிறார்" (யோவா 20:22). இயேசு புரிந்த இச்செயல் நமக்கு வழக்கத்துக்கு மாறாகத் தோன்றலாம். ஆனால் அங்கே ஓர் ஆழ்ந்த இறையியல் கருத்து உள்ளது. அதாவது, உலகைப் படைத்த கடவுள் "நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊதினார்; மனிதனும் உயிர் உள்ளவன் ஆனான்" (காண்க: தொநூ 2:7). எனவே, இயேசு சீடர்கள்மேல் ஊதி அவர்களுக்குத் தூய ஆவியை வழங்குவது ஒரு "புதிய படைப்பாக" அர்த்தம் பெறுகிறது. இயேசு திருமுழுக்குப் பெற்றபோது அவர்மேல் தூய ஆவி இறங்கிவந்தார். இயேசு தூய ஆவியால் திருமுழுக்கு வழங்குவார் என யோவான் சான்று பகர்ந்தார் (யோவா 1:32-34). சிலுவையின் அடியில் மரியாவும் இயேசு அன்புசெய்த சீடரும் நின்றுகொண்டிருந்தபோது புதிதாகப் பிறந்த திருச்சபைக்குத் தூய ஆவி வழங்கப்பட்டார் (யோவா 19:26-27,30). இப்போதோ, உலகம் அனைத்திற்கும் பணிசெய்ய அனுப்பப்படுகின்ற சீடர்களுக்குத் தூய ஆவி வழங்கப்படுகிறது (யோவா 20:22). இயேசு உலகின் பாவங்களைப் போக்குகின்ற ஆட்டுக் குட்டியாக வந்து தூய ஆவியால் திருமுழுக்கு அளித்ததை யோவான் அறிவித்ததுபோல (யோவா 1:35-36), இங்கே சீடர்களுக்குத் தூய ஆவி வழங்கப்பட்டு, அவர்களது பணி "பாவங்களை மன்னிக்கும்" பணியாக விளக்கப்படுகிறது.

-- இயேசு உலகத்தின் பாவங்களைப் போக்கிவிட்டார்; உலகத்தின் மீது வெற்றிகொண்டுவிட்டார். அந்த வெற்றியில் சீடர்களுக்கும் பங்களிக்கப்படுகிறது; அவர்களும் இயேசுவின் அதிகாரத்தில் பங்கேற்கின்றனர். அவர்கள் இயேசுவின் பணியை ஆற்றும்போது சிலர் அவர்களை ஏற்பர், வேறு சிலர் அவர்களை ஏற்காமல் இருப்பர். இயேசுவின் வாழ்விலும் அப்படியே நிகழ்ந்தது. பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக நாம் இயேசுவை நம்பி ஏற்க வேண்டும் என சீடர்கள் அறிவிக்க அனுப்பப்படுகிறார்கள்; அந்த அறிவிப்பை ஏற்போர் பாவ மன்னிப்பைப் பெற்று, கடவுளோடு அன்புறவில் இணைவார்கள்; கடவுள் வழங்குகின்ற மன்னிப்புச் செய்தியை ஏற்க மனமில்லாமல் தங்கள் மனம்போல வாழ்வோர் மன்னிப்புப் பெற மாட்டார்கள் (யோவா 20:23). இயேசு நமக்கு வழங்கிய தூய ஆவியால் திருமுழுக்குப் பெற்ற நாம் பாவ மன்னிப்பு அடைந்துள்ளோம். அந்த மகிழ்ச்சி நம் உள்ளத்தை நிரப்ப வேண்டும். நாம் பெற்ற மன்னிப்பு அனுபவத்தை நாம் பிறரோடு பகிர்ந்திட வேண்டும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 வல்லமையும், அன்பும், கட்டுப்பாடும் கொண்ட ஆவி

 தூய ஆவியார் ஞாயிறு

 திருத்தூதர் பணிகள் 2:1-11
 1 கொரிந்தியர் 12:3-7,12-13
யோவான் 20:19-23

"பிளவுண்ட நாவுகள் இறங்கி வந்து பிளவுபட்ட மானிடத்தை இணைத்தது" - இப்படி பொத்தாம் பொதுவாக சொல்லி பெந்தகோஸ்தே திருநாளின் பொருளை விளக்கிவிட முடியுமா?

"தூய ஆவியானவர் திருவிழா" நம்முள் நிறைய கேள்விகளை எழுப்புகிறது:

1. இவரை எப்படி அழைப்பது? "தூய ஆவி" என்று அழைப்பதா? அல்லது "தூய ஆவியார்," அல்லது "தூய ஆவியானவர்" என்று அழைப்பதா?

2. "தந்தை" மற்றும் "மகன்" என்னும் இருவருக்குள் இருக்கும் உறவே தூய ஆவி என்றும், இந்த தூய ஆவியே மூவொரு இறைவன் என்று கற்பிக்கும் கத்தோலிக்க திருஅவை, கணவன்-மனைவி-பிள்ளை என்ற உருவகத்தையும் கொடுக்கின்றது. ஆனால், இந்த உருவகம் அடுத்த பிரச்சினைக்கு வழி வகுக்கிறது. "தூய ஆவியானவர்" உறவின் கனியாகிய குழந்தை என்றால், அது அல்லது அவர் மற்ற இருவரைவிட சிறியவர் என்று ஆகிவிடுவதில்லையா?

3. "தந்தை உலகைப் படைத்தார்," "மகன் உலகை மீட்டார்," "தூய ஆவி உலகை வழிநடத்துகிறார்" என்று அவர்களின் செயல்கள் அடிப்படையிலான புரிதலும் தூய ஆவியானவரைப் பற்றி நமக்கு முழுமையாகச் சொல்வதில்லை.

4. இன்று "பெந்தகோஸ்தெ" என்றழைக்கப்படும் பிரிந்த சபையினர் தூய ஆவியானவரை மட்டுமே இறைவனாகக் கருதுகின்றனர். பொட்டு அணியக்கூடாது, பூ அணியக் கூடாது, வெள்ளைநிற ஆடைதான் அணிய வேண்டும் என்று சொல்லி நம் தெருக்களில் வழிநடக்கும் இவர்கள், "நீங்கள் அக்கினி அபிஷேகம் பெற்றுவிட்டீர்களா?" என்று நம் வயிற்றில் புளியைக் கரைக்கிறார்கள்.

5. "அருங்கொடையாளர்கள்" ("Charismatics") என்று தங்களையே அழைக்கும் ஒரு சிறு பகுதியினர், நம் திருஅவை மரபிற்குள் இருந்துகொண்டே ஒரு மாற்று வழிபாட்டு முறையையும் முன்வைக்கின்றனர்.

பவுல், எபேசு நகரில் எதிர்கொண்ட கேள்விதான் இங்கே நினைவிற்கு வருகிறது: "தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்றுகூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே!" (காண். திப 19:1-10)

இந்த நாளின் பொருளைப் புரிந்து கொள்ளுமுன் "தூய ஆவி" என்னும் பெயரைப் புரிந்து கொள்வோம்.

விவிலியத்தில் "தூய ஆவி" என்ற பெயர் நான்கு நிலைகளில் கையாளப்படுகின்றது:

அ. "ஆண்டவரின் ஆவி." எபிரேயத்தில் "ருவா" என்ற வார்த்தையை "ஆவி" என்று மொழிபெயர்க்கிறோம். இந்த "ஆவி" தான் படைப்பின் தொடக்கத்தில் நீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தவர் (காண். தொநூ 1:2). ஆதாமின் உடலுக்குள் ஊதப்பட்டவர். அரசர்கள் மற்றும் இறைவாக்கினர்கள்மேல் இறங்கி வந்தவர். இயேசுவின் திருமுழுக்கின்மேல் அவர்மேல் இறங்கி வந்தவரும், அவரை பாலைநிலத்திற்கு அழைத்துச் சென்றவரும், "ஆண்டவரின் ஆவி என்மேல் உளது" என்று இயேசு தொழுகைக்கூடத்தில் சொன்னவரும் இவர்தான்.

ஆ. "இயேசுவின் ஆவி." தன் உயிர்ப்புக்குப் பின் தன் சீடர்கள் மேல் ஊதுகின்ற இயேசு, "தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்" என்கிறார். இங்கே தூய ஆவியானவர் இயேசுவின் கொடையாக, அவரிடமிருந்து ஊற்றெடுக்கின்றார்.

இ. "மூவொரு இறைவனில் ஓர் ஆள்." தன் இறுதி இராவுணவில் சீடர்களின் பாதங்களைக் கழுவிவிட்டு அவர்களோடு தொடர்ந்து உரையாடும் இயேசு (காண். யோவா 13 -1 6) அவர்களிடம், "தூய ஆவியானவர்" என்னும் துணையாளரைத் தான் அனுப்பவதாகவும், அவர் அவர்களுக்கு எல்லாவற்றையும் கற்பிப்பார், நினைவூட்டுவார் என்றும் வாக்களிக்கின்றார். இங்கே இயேசு மூவொரு இறைவனின் மூன்றாம் ஆளைச் சுட்டிக்காட்ட "தூய ஆவி" என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகின்றார். இந்தப் புரிதலை பிற்கால திருமடல்களிலும் பார்க்கின்றோம். உதாரணத்திற்கு, கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமடலை நிறைவு செய்யும் பவுல், "ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!" (2 கொரி 13:13) என எழுதுகின்றார்.

ஈ. தூய பவுலடியாரின் திருமடல்களுக்கு வரும்போது அங்கே புதியதொரு புரிதலைப் பார்க்கின்றோம். "ஊனியல்பு," "ஆவிக்குரிய இயல்பு" என்று இருதுருவ வாழ்க்கை நிலைகளை எடுத்துச் சொல்லும் பவுல், ஒரு கட்டத்தில் "ஆவிக்குரிய இயல்பு" என்பது இயல்பாகவே நம் ஒவ்வொருவரிடமும் இருப்பதுபோல எழுதி முடிக்கின்றார் (காண். கலா 5:16-26).

இந்த நான்கு புரிதல்களில் எந்தப் புரிதலை நாம் எடுத்துக் கொள்வது என்ற குழப்பத்திலிருந்து நாம் தெளிவாவதற்கே தூய ஆவியானவரின் துணை தேவைப்படுகிறது!

திருத்தூதர்கள் மேல் இன்று தூய ஆவியானவர் இறங்கி வந்த நிகழ்வை வாசிக்குமுன் முதல் ஏற்பாட்டில் தூய ஆவியானவர் எப்படி இருந்தார் என்பதைப் புரிந்து கொள்வோம்:

அ. "ஒருசிலருக்கு மட்டுமே தூய ஆவியானவர்." முதல் ஏற்பாட்டில் தூய ஆவியானவர் ஒருசிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டார். குறிப்பாக, அரசர்கள் மட்டும் இறைவாக்கினர்கள். ஆக, ஒரே அரண்மனையில் இருந்தாலும் அரசர்மேல் தூய ஆவியானவர் இருப்பார். ஆனால், அரசி மேலோ, பணிப்பெண் மேலோ இருக்கமாட்டார். இறைவாக்கினர்மேல் இருப்பாhர். ஆனால், சாதாரண மக்கள்மேல் இருக்க மாட்டார்.

ஆ. "நிபந்தனைக்குட்பட்டவர்." தூய ஆவியானவர் ஒருவருக்கு கொடுக்கப்படுவதுபோல அவரிடமிருந்து திரும்பவும் எடுத்துக்கொள்ளப்படுவார். உதாரணத்திற்கு, சிம்சோன் பிறக்கும்போதே ஆண்டவரின் ஆவி அவருக்குள் இருக்கின்றார். அவரின் குழந்தைப் பருவத்தில் அவரை ஆட்டுவிக்கின்றார். ஆனால், அவரின் தலை மழிக்கப்பட்டபோது, அவரிடமிருந்து ஆவியானவர் விலகுகின்றார். அதேபோல, சவுல் அரசராக அருள்பொழிவு செய்யப்பட்டபோது அவர்மேல் தூய ஆவியானவர் இருக்கிறார். ஆனால், தாவீதின் மேல் பொறாமை கொண்டு அவரை அம்பு எய்து கொல்ல முயலும்போது, ஆண்டவரின் ஆவி அவரைவிட்டு அகல்கின்றார்.

இ. "அவர் ஒரு ஆற்றல்." தூய ஆவியானவர் என்பவர் ஆற்றல், அல்லது சக்தி. அவர் ஒரு மனிதர் அல்லர்.

இந்த மூன்று புரிதல்களும் இன்றைய முதல் வாசகத்தில் புரட்டிப்போடப்படுகின்றன:

அ. "அனைவருக்கும் தூய ஆவி." திருத்தூதர்களும், அன்னை மரியாளும் தூய ஆவியானவரைப் பெறுகின்றனர். மேலும் இவர்கள் கைகளை விரிக்கும் அனைவர்மேலும் தூய ஆவியானவர் அருளப்படுகின்றார்.

ஆ. "நிபந்தனைகள் அல்லாதவர்." ஒருவருக்கு ஒருமுறை வழங்கப்படும் தூய ஆவி அவரிடமிருந்து திரும்ப எடுக்கப்படுவதில்லை. அவர் தூய ஆவியின் ஆற்றல் பெற்ற வாழ்க்கையை வாழவில்லை என்றாலும், அந்த ஆவியானவர் அழியாத முத்திரையாக அவரின் உள் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கின்றார்.

இ. "அவர் ஒரு மனிதர்." மூவொரு இறைவனின் மூன்றாம் நபராக இருக்கும் இவர் வெறும் ஆற்றல் அல்லது சக்தி மட்டுமல்ல. மாறாக, மூன்றாவதாக இருக்கின்ற ஒரு மனிதர். இவரின் பெயரால் ஆசி வழங்கவும் முடியும் (காண். 2 கொரி 13:13).

இவ்வாறாக, முதல் ஏற்பாட்டுப் புரிதலைவிட இரண்டாம் ஏற்பாட்டுப் புரிதல் மாறுபட்டு நிற்கின்றது.

இன்றைய முதல் வாசகத்தின்படி (காண். திப 2:1-11) தூய ஆவியானவர் பெந்தக்கோஸ்து என்னும் நாளில் திருத்தூதர்கள்மேல் பொழியப்படுகின்றார். எதற்காக இந்த நாளை இறைவன் தெரிவு செய்ய வேண்டும்? இதற்கு ஐந்து காரணங்களைச் சொல்கின்றது வரலாறு:

1. "பெந்தக்கோஸ்து" என்னும் சொல்லுக்கு ஐம்பதாவது நாள் என்பது பொருள். இது அறுவடைக்காக நன்றி செலுத்தும் யூதத் திருவிழா. பாஸ்கா திருவிழாவுக்குப் பின் ஐம்பதாவது நாள் இது கொண்டாடப்பட்டது (காண். லேவி 13:15). யூதர்கள் தங்கள் முதற்கனிகளை தங்கள் இல்லங்களுக்கு கொண்டு வந்த இந்த நாளில்தான் திருத்தூதர்கள் ஆவியின் கொடைகளை முதற்கனிகளாகப் பெறுகின்றனர்.

2. மோசேக்கு சீனாய் மலையில் பத்துக் கட்டளைகள் கொடுக்கப்பட்டதை இந்த நாளில்தான் யூதர்கள் நினைவுகூர்ந்தனர். இந்தக் கட்டளைகள் நமக்கு வெளியில் இருப்பவை. ஆனால் எரேமியா புதிய கட்டளைகள் நமக்கு உள்ளேயே இருக்கும் (31:33) என முன்னுரைக்கின்றார். நம் உள் உறையும் கட்டளையாக, நம் மனச்சான்றின் ஒளியாக இங்கே இறங்கி வருகிறார் தூய ஆவியானவர்.

3. மோசே மலைக்கு ஏறிச்சென்று கட்டளைகளைப் பெற்று வந்ததுபோல, இயேசு விண்ணேற்றம் அடைந்து தூய ஆவியானவரை அனுப்புகின்றார்.

4. மலையிலிருந்து இறங்கி வந்த மோசே வெறும் சத்தங்களை மட்டும் எழுப்பினார் என்றும், அந்தச் சத்தங்களை அங்கே கூடியிருந்த மக்கள் 70 மொழிகளில் கேட்டனர் என்றும் சொல்கிறது தாக்குமா 26 என்னும் ரபிக்களின் விளக்கவுரை. இதேபோல, தூய ஆவியால் நிரப்பப்பட்ட திருத்தூதர்களின் பேச்சை அங்கே கூடியிருந்தவர்கள் தத்தம் மொழிகளில் கேட்கின்றனர்.

5. தோரா அல்லது சட்டம் யூதர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. ஆனால், தூய ஆவியானவர் எல்லாருக்கும் கொடுக்கப்படுகின்றார். மேலும், இங்கே; இறங்கி வரும் பிளவுண்ட நாவுகள், முதல் ஏற்பாட்டு பாபேல் நிகழ்வையும் நினைவூட்டுகின்றன (காண். தொநூ 11:1-9). தங்களுக்கென்ற ஒரே நகரம், ஒரே மொழி, ஒரே கோபுரம் எனக் கட்ட விரும்பியவர்களின் நாவுகள் பிளவுபடுகின்றன. இங்கே பிளவுபட்ட நாவுகள் எல்லாரையும் இணைக்கின்றனர். அங்கே கோபுரம் கட்டி மக்கள் கடவுளிடம் ஏறிச் செல்ல விரும்பினர். இங்கே கடவுளே தன் ஆவியானவரின் வழியாக இறங்கி வருகின்றார்.

முதல் வாசகத்தில் திருத்தூதர்கள் இரண்டு நிலைகளில் துணிச்சல் பெறுகின்றனர்:

அ. அவர்களின் நா கட்டவிழ்க்கப்படுகிறது. அவர்கள் வௌ;வேறான மொழிகளில் (க்ளோசலாலியா) பேசத் தொடங்குகின்றனர். மொழி அவர்களுக்கு இனி தடையல்ல.

ஆ. அவர்களின் இல்லக் கதவுகள் திறக்கப்படுகின்றன. "எல்லாம் முடிந்தது!" என பயந்து கொண்டு, விரக்தியிலும், கவலையிலும் சோர்ந்திருந்தவர்கள் தங்களின் கதவுகளைத் திறந்து வெளியே வருகின்றனர். இனி யாரும் அவர்களை அடைத்து வைக்கவோ, அவர்களின் வேகத்திற்கு தடை போடவோ முடியாது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 12:3-7,12-13) தூய ஆவியாரின் இருப்பு அல்லது பிரசன்னம் என்பது செயல்களில் வெளிப்படவேண்டும் என்கிறார் தூய பவுல். மேலும், திருஅவையில் தூய ஆவி பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைக்கும் அடிப்படையான இணைப்பாக இருக்கிறார். அதாவது, நீங்களும் நானும் வேறு வேறு கொடைகளைப் பெற்றிருந்தாலும் திருச்சபையில் ஒன்றாய் இருக்கிறோம் என்றால், வேறுபாடுகளைக் கடந்த ஓர் ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடியவர் தூய ஆவி.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 20:19-23) இயேசு தான் உயிர்த்த (விண்ணேற்றம் அடைந்த) நாளில் தன் சீடர்கள்மேல் ஊதுகின்றார். ஊதி, "தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்" என்கிறார். முதல் ஏற்பாட்டில் "ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்" (தொநூ 2:7) - முதல் ஆதாம் உயிர்பெறுகின்றான். இங்கேயும் கடவுளாகிய இயேசு சீடர்கள்மேல் ஊத அவர்கள் அவரின் உயிர்மூச்சைப் பெற்றுக்கொள்கின்றனர். இவ்வாறாக, கடவுளின் பழைய செயலை புதிய செயலாக நிறைவு செய்கின்றார் இயேசு.

இறுதியாக, இவ்வளவு விளக்கங்களுக்குப் பின் தூய ஆவி என் வாழ்வில் யார்? என்ற கேள்வியைக் கேட்போம். தூய ஆவியார் வெறும் அருங்கொடை இல்லத்தில் கிடைப்பவரா? அல்லது திருமுழுக்கு மற்றும் உறுதிப்பூசுதல் அருளடையாளங்களில் மட்டும் நம்மிடம் வருபவரா? தூய ஆவியின் செயல்பாட்டை நாம் நம் அன்றாட வாழ்வில் தடுக்கின்றோமா? (காண். 1 தெச 5:19)

பெந்தகோஸ்தே நிகழ்வின் சவாலாக நாம் 2 திமொத்தெயு 1:7 எடுத்துக்கொள்வோம்:

"கடவுள் நமக்கு கோழையுள்ளம் தரும் ஆவியை அல்ல. மாறாக, வல்லமையும், அன்பும், கட்டுப்பாடும் கொண்ட ஆவியையே வழங்கியுள்ளார்."

திமொத்தெயு திருப்பொழிவின் போது பெற்ற அருள்கொடைகளை அவருக்கு நினைவுறுத்துகின்ற பவுல், "கோழையுள்ளம்" விடுத்து "வல்லமையும், அன்பும், கட்டுப்பாடும்" கொண்டிருக்க அவரை அழைக்கின்றார். கோழையுள்ளம் இருக்கும் இடத்தில் வல்லமை, அன்பு, கட்டுப்பாடு இருக்காது. கோழையுள்ளம் எதையும் துணிந்து முன்னெடுக்காது. அன்புக்கென்று வரையறைகளை விதித்துக்கொள்ளும். கட்டுப்பாடு இல்லாமல் இருக்கும். நாம் வாழ்வில் பலவற்றை இழக்கக் காரணம் இந்தக் கோழையுள்ளம். கோழையுள்ளத்தில் இயல்பாகவே பயமும், குற்றவுணர்வும் குடியிருக்கும் - அடுத்து என்ன நடக்குமோ? என்ற பயம். அய்யோ அன்று இப்படி நடந்து விட்டதே? என்ற குற்றவுணர்வு.

இந்துக்கள் சாமியை கும்பிட்டுவிட்டு சிறிது திருநீற்றை அள்ளி தலையில் பூசிக்கொள்வர் அல்லது தலையில் போட்டுக்கொள்வர். இது எதைக்குறிக்கிறது என்றால் தான் வணங்கும் கடவுளின் ஆவி தன்னிடம் வந்துவிட்டதன் அடையாளமான ஆங்கரிங் தான் அது. இந்த ஆங்கரிங் கிடைத்தவுடன் எந்தக் கப்பலையும் (!) அவர்களால் நிறுத்துவிட முடிகிறது. எந்த வகை காற்று மற்றும் புயலையும் எதிர்க்க முடிகிறது. ஆக, இயல்பாகவே நம்மிடம் இருக்கின்ற ஆவியை நாம் மறந்துவிடுகிறோம். இந்த பெந்தகோஸ்தே விழாவில் அவருடைய இருப்பை நாம் அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்வோம்.

இந்த இருப்பு நம்மை வல்லமை, அன்பு, கட்டுப்பாடு நோக்கி நகர்த்துவதாக.

இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர்கள் "வல்லமை" கொண்டவர்களாக புறப்பட்டுச் செல்கின்றனர்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் முதல் கிறிஸ்தவர்கள் "அன்பு" கொண்டவர்களாக ஒரே உடலாக இணைகின்றனர்.

இன்றைய மூன்றாம் வாசகத்தில் திருத்தூதர்கள் "கட்டுப்பாடு" பெற்றவர்களாக ஆண்டவரின் அமைதியால் ஆட்கொள்ளப்படுகின்றார்கள்.

தூய ஆவி என்பது நம் செல்ஃபோனில்; இருக்கும் சிம் கார்டு மாதிரி. அதை நாம் பார்ப்பது கிடையாது. ஆனால், அது தன் நெட்வோர்க்கோடு இணைந்துகொண்டு தன்னில் இணைந்திருக்கும் அனைவரையும் இணைக்கிறது. இந்த சிம்கார்டுக்கும் வேலிடிட்டி உண்டு. அதை நாம் புதுப்பிக்காமல் விட்டுவிட்டால் அது அப்படியே முடங்கிவிடும். "என் ஆவியின் செயல்பாட்டை நான் அணைத்துவிட மாட்டேன்" என்ற உறுதியோடு அவரின் செயல்பாடுகள் நம்மில் நாளும் வளம்பெற இன்று மன்றாடுவோம்.

தூய ஆவியார் பெருவிழா வாழ்த்துக்கள்.

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!