Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                     13 மே 2018  
                                                        ஆண்டவரின் விண்ணேற்பு விழா
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
எங்கள் கண்கள் முன்பாக, இயேசு மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 1: 1-11

தெயோபில் அவர்களே, இயேசு தாம் தெரிந்துகொண்ட திருத்தூதர்களுக்கு அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்ய வேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார்.

விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் செய்தவை, கற்பித்தவை யாவற்றையும் குறித்து எனது முதலாம் நூலில் நான் எழுதினேன்.

இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப்பற்றிக் கற்பித்தார்; பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடிருப்பதைக் காண்பித்தார்.

அவர்களோடு சேர்ந்து உண்ணும்போது அவர்களிடம், "நீங்கள் எருசலேமை விட்டு நீங்க வேண்டாம். என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள். யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாள்களில் தூய ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள்" என்று கூறினார்.

பின்பு அங்கே கூடியிருந்தவர்கள் அவரிடம், "ஆண்டவரே, இஸ்ரயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத் தரும் காலம் இதுதானோ?" என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், "என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்துவைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல; ஆனால் தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்" என்றார்.

இவற்றைச் சொன்னபின்பு, அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது.

அவர் செல்லும்போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருந்தார்கள். அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி, "கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றம் அடைந்ததைக் கண்டீர்கள் அல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்" என்றனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா  47: 1-2. 5-6. 7-8 (பல்லவி: 5b)
=================================================================================
பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.

அல்லது: அல்லேலூயா.

1 மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். 2 ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. பல்லவி

5 ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். 6 பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். பல்லவி

7 ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். 8 கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================

கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறும் அளவுக்கு நாம் முதிர்ச்சியடைவோம்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-13

சகோதரர் சகோதரிகளே, ஆண்டவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்; நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள்.

நீங்கள் ஒரே எதிர்நோக்குக் கொண்டு வாழ அழைக்கப் பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பதுபோல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே; திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே; அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர். கிறிஸ்து கொடுக்க விரும்பும் அளவுக்கேற்ப நம் ஒவ்வொருவருக்கும் அருள் அளிக்கப்பட்டுள்ளது. ஆகையால்தான், "அவர் உயரே ஏறிச் சென்றார்; அப்போது, சிறைப்பட்ட கைதிகளை இழுத்துச் சென்றார்; மனிதருக்குப் பரிசுகளை வழங்கினார்" என்று மறைநூல் கூறுகிறது.

"ஏறிச் சென்றார" என்பதனால் அதன் முன்பு மண்ணுலகின் கீழான பகுதிகளுக்கு அவர் இறங்கினார் என்று விளங்குகிறது அல்லவா? கீழே இறங்கியவர்தான் எங்கும் நிறைந்திருக்கும்படி எல்லா வானுலகங்களுக்கும் மேலாக ஏறிச் சென்றவர்.

அவரே சிலரைத் திருத்தூதராகவும், சிலரை இறைவாக்கினராகவும், வேறு சிலரை நற்செய்தியாளர்களாகவும், ஆயர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார். திருத்தொண்டாற்ற இறைமக்களை ஆயத்தப்படுத்தவும், கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்பவும் இவர்களை அவர் ஏற்படுத்தினார்.

அதனால் நாம் எல்லாரும் இறைமகனைப் பற்றிய அறிவிலும் நம்பிக்கையிலும் ஒருமைப்பாட்டை அடைவோம். கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறும் அளவுக்கு நாம் முதிர்ச்சியடைவோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 28: 19.20

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
கிறிஸ்து விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்.

+மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 15-20

அக்காலத்தில் இயேசு பதினொருவருக்குத் தோன்றி, அவர்களை நோக்கி, "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்.

நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்" என்று கூறினார்.

இவ்வாறு அவர்களோடு பேசியபின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்.

அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

சிந்தனை:

விண்ணகத்தில் இருந்து மண்ணகம் வந்தவர், மீண்டும் விண்ணகம் செல்கின்றார். தந்தையாம் கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்து நமக்காக பரிந்து பேசுவார். நம்முடைய விண்ணக வாழ்வுக்கு வழிகோலுகின்றார்.

இப்பணியைத் தொடர சீடர்களுக்கு தன் ஆவியைத் தந்து, ஆற்றலோடு தொடர பணிக்கின்றார். அழைக்கப்பட்டவர்கள் அத்தனைப் பேருக்கும், அபிஷேகத்தைத் தந்து, ஆசீர்வதிக்கின்றார்.

எல்லா திக்குகளிலும் அறிவிக்கப்பட வேண்டும். எங்குமே அவரது நாமம் போற்றப்பட வேண்டும். அடுத்த ஊருக்கும் போவோம். ஆங்கும் நான் அறிவிக்க வேண்டும் என்று சொன்னவர் அவர். அவரை வழிநடத்திய ஆவி நம்மையும் வழிநடத்த நாமும் பணியாற்றிட வேண்டும்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
விண்ணேறிச் சென்று, தந்தையின் வலப்பக்கம் அமர்ந்த இயேசு


ஒரு சமயம் பிரபல மறைபோதகரான பில்லி கிரகாம் (Billy Graham) ஒரு நகருக்கு போதிக்கச் சென்றார். அவ்வாறு அவர் போதிக்கச் சென்றபோது உடனடியாக அனுப்பவேண்டிய ஒரு கடிதத்தை அனுப்புவதற்காக அந்நகரில் இருந்த அஞ்சல்நிலையத்தை நீண்ட நேரமாகத் தேடினார். எவ்வளவுதான் அவர் கடுமையாகத் தேடினாலும் அவரால் அஞ்சல் நிலையம் எங்கிருக்கின்றது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

அப்போது அந்த வழியாக ஓர் இளைஞன் வந்தான். அவனை நிறுத்திய பில்லி கிரகாம், "இந்த நகரில் அஞ்சல் நிலையம் எங்கிருக்கின்றது?" என்று கேட்டார். அவனும் அஞ்சல் நிலையம் எங்கிருக்கின்றது என்று மிகத் தெளிவாக சுட்டிக்கட்டினான். அவன் அஞ்சல் நிலையம் எங்கிருக்கின்றது என்று சரியாகச் சுட்டிக்காட்டியதைக் கண்டு மகிழ்ந்துபோன அவர், அவனிடம், "தம்பி! நான் பாப்டிஸ்ட் திருச்சபையைச் சார்ந்த ஒரு மறைபோதகர். இன்று மாலை இங்கிருக்கும் ஆலயத்தில் மக்களுக்கெல்லாம் எப்படி விண்ணகம் செல்லலாம் என்பதற்கான வழியைச் சுட்டிக்காட்டப் போகின்றேன். நீயும் வரலாம்" என்றார்.

அதைக் கேட்ட இளைஞன், "நிச்சயம் உங்களால் மக்களுக்கு விண்ணகம் செல்வதற்கான வழியைச் சுட்டிக்காட்ட முடியாது" என்றான். "ஏன் அவ்வாறு சொல்கிறாய்?" என்று பில்லி கிரகாம் கேட்க, "உங்களுக்கு அஞ்சல் நிலையம் எப்படிச் செல்லவேண்டும் என்பதற்கே வழி தெரியவில்லை, நீங்கள் எல்லாம் எப்படி மக்கள் விண்ணகம் செல்வதற்கான சொல்ல முடியும்?" என்று கேட்டான். பில்லி கிரகாமால் பதில் சொல்ல முடியவில்லை.

பில்லி கிரகாமிற்கு வேண்டுமானால் விண்ணகம் செல்வதற்கான வழி தெரியாமல் இருக்கலாம், ஆனால், ஆண்டவர் இயேசுவுக்கு விண்ணகம் செல்கின்ற வழி தெரியும். ஏனென்றால், அவர்தான் முதன்முதலாக விண்ணகம் ஏறிச் சென்று, தந்தையின் வலப்பக்கம் அமர்ந்து பரிசு பேசுகின்றார். ஆம், இன்று நாம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து விண்ணகம் சென்ற விழாவை - விண்ணேற்றப் பெருவிழாவைக் - கொண்டாடி மகிழ்கின்றோம். இந்நாளில் ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழா நமக்குக் கூறுகின்ற செய்தியை ஆழமாக சிந்தித்துப் பார்ப்போம்.

ஆண்டவர் இயேசு இறந்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த பின்பு உடனடியாக விண்ணகம் செல்லவில்லை. அவர் நாற்பது நாட்கள் தன்னுடைய சீடர்களோடு இருந்து அவர்களைத் தேற்றுக்கின்றார், மறு பயிற்சி அளித்து, அவர்களை இன்னும் வலுவுள்ளவர்களாக மாற்றுகின்றார். அதன்பின்னே அவர் விண்ணேற்றம் அடைகின்றார். இயேசு விண்ணகம் சென்றதால் அல்லது அவர் இந்த மண்ணகம் விட்டுச் சென்றதால் நமக்கு ஏதாவது இழப்பு ஏற்படுமோ என்றுகூட நாம் நினைக்கலாம். இயேசுவின் விண்ணேற்றத்தினால் நமக்கு இழப்பு இல்லை, மாறாக அதனால் நாம் நிறைய பலன்களைப் பெறலாம் என்றுதான் சொல்லவேண்டும்.

இயேசுவின் விண்ணேற்றத்தினால் நாம் அடையும் நன்மைகள் என்னென்ன வென்று இப்போது பார்ப்போம்.

இயேசுவின் விண்ணேற்றத்தினால் நாம் அடையக்கூடிய முதலாவது நன்மை தூய ஆவியின் வருகை ஆகும். ஆம், இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகுதான் தூய ஆவியின் வருகையானது நிகழும். யோவான் நற்செய்தியில் ஆண்டவர் இயேசு மிகத் தெளிவாக எடுத்துரைப்பார், "நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார், நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன்" என்று (யோவா 16:7) ஆம், இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகுதான் தூய ஆவியாரின் வருகை நிகழும், அதன்பிறகுதான் அவருடைய வழிநடத்துதல் சாத்தியப்படும். ஆகையால், இயேசுவின் விண்ணேற்றத்தினால் தூய ஆவியைக் கொடையாகப் பெற்றுக்கொள்ளலாம் என நாம் மிக உறுதியாகச் சொல்லலாம்.

இப்போது இங்கே ஒரு கேள்வி எழும். து என்னவெனில், "இயேசு விண்ணேற்றம் அடைந்துவிட்டால், அதன் தொடர்ச்சியாக தூய ஆவியால் இங்கே வந்துவிட்டால், ஆண்டவர் இயேசுவின் பிரசன்னம் இந்தப் பூவுலகில் இருக்காதா?" என்பதுதான் அக்கேள்வி. தூய ஆவியானவர் வந்துவிட்டால், இயேசுவின் பிரசன்னம் இங்கு இருக்காது என்பதில்லை. அவர் உலகம் முடியும்வரை நம்மோடு இருப்பார் (மத் 28:20). எனவே, இயேசுவின் விண்ணேற்றத்தினால், அவர் நம்மை விட்டு முற்றிலுமாக போய்விட்டார் என நினைக்காமல், அவர் இறுதிவரைக்கும் நம்மோடு இருக்கின்றார் என்னும் உண்மையை உணர்வோம், அவர் நமக்குக் கொடையாகத் தரும் தூய ஆவியின் வழிகாட்டுதலை ஆழமாக உணர்ந்துகொள்வோம்.

இயேசுவின் விண்ணேற்றத்தினால் நாம் அடையும் இரண்டாவது நன்மை இயேசுவின் பரிந்து பேசுதலாகும். ஆம், விண்ணேற்றம் அடைந்த இயேசு தந்தையின் வலப்பக்கம் அமர்ந்து, அங்கே அவர் தந்தையிடம் நமக்காகப் பரிந்துபேசுகின்றார் என்று விவிலியம் நமக்கு சான்று பகர்கின்றது (எபி 7: 25). இயேசு தந்தைக் கடவுளிடம் பரிந்து பேசுகின்றபோது நமக்கு அருளுக்கு மேல் அருள் கிடைக்கும் என்பதுதான் உண்மை.

தந்தைக் கடவுளோ இரக்கமே வடிவானார். அவர் நமக்குப் பல்வேறு ஆசிர்வாதங்களை வழங்கக்கூடியவர். அப்படி இருக்கும் சூழ்நிலையில் இயேசு கிறிஸ்து தந்தையின் வலப்பக்கம் அமர்ந்து நமக்காகப் பரிந்துபேசும்போது நமக்கு இரட்டிப்பு ஆசிர் கிடைக்கும் என நாம் உறுதியாகச் சொல்லலாம்.

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது ஒரு கல்லூரியிலோ சேர்வதற்கு சமூகத்தில் இருக்கும் மிக முக்கியப் பிரமுகர்களிடமிருந்து பரிந்துரைக் கடிதம் பெற்றுச் செல்கின்றோம். அந்தப் பரிந்துரைக் கடிதம் நாம் நினைத்ததைப் பெற்றுக்கொள்வதற்கு உறுதியாக இருக்கின்றது. அது போன்று தந்தைக் கடவுளிடமிருந்து நாம் அருளையும் ஆசிரையும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றால், மகனாகிய இயேசுவிடம் பரிந்துபேசினாலே போதும், நம்முடைய வேண்டுதல் நிறைவேறும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது.

இயேசுவின் விண்ணேற்றத்தினால் நாம் பெறுகின்ற மூன்றாவது நன்மை இயேசுவின் இரண்டாம் வருகையாகும். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தின் இறுதியில் இயேசு விண்ணேற்றம் அடைவதையே பார்த்துக்கொண்டிருந்த சீடர்களிடம் வெண்ணுடை அணிந்த இருவர், "கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார் என்கின்றனர். ஆகையால், இயேசுவின் விண்ணேற்றம் அவருடைய இரண்டாம் வருகைக்கான ஓர் அறிவிப்பு என நாம் உறுதியாகச் சொல்லலாம். இயேசுவின் இரண்டாம் வகுகையில் நாம் இந்த மண்ணகத்தில் நேர்மையாளர்களாக வாழ்ந்திருக்கும் பட்சத்தில், அவர் அதற்கேற்ற கைமாறை நமக்குத் தருவார் என்பது உறுதி. இதுவும் நமக்கு ஒரு விதத்தில் நன்மை என்றுதான் சொல்லவேண்டும்.

எனவே, இயேசுவின் விண்ணேற்றம் நமக்கு இழப்பல்ல, அது ஆசிர்வாதம்தான் என நாம் உறுதியாக நம்புவோம்.

இதுவரைக்கும் இயேசுவின் விண்ணேற்றத்தினால் நாம் என்ன நன்மைகளைப் பெற்றுக்கொள்கின்றோம் என்று சிந்தித்த நாம், ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றம் நமக்கு எத்தகைய அழைப்பினைத் தருகின்றது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களுக்கு விடுக்கின்ற அழைப்பு, "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்" என்பதாகும். ஆம், நற்செய்தி அறிவிப்புதான் இயேசுவின் சீடர்களுக்கு, இயேசுவைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு அவர் விடுக்கின்ற முதன்மையான அழைப்பாக இருக்கின்றது. இயேசுவின் சீடர்கள் அவருடைய அழைப்பினை ஏற்று நற்செய்தியை அறிவித்தார்கள், அதற்காக தங்களுடைய இன்னுயிரையும் துறந்தார்கள். இயேசுவின் வழியில் நடக்கும் நாம் நற்செய்தி அறிவிப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்கின்றோமா? நற்செய்தி அறிவிப்பின் மீது தாகம் கொண்டு வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இயேசு சபைத் தலைவராக (Superior General) பதினைந்து ஆண்டுகளாக இருந்தவர் அருட்தந்தை அருப்பே அவர்கள். அவர் எப்படி ஆண்டவருடைய நற்செய்தியை அறிவிக்கும் பணியாளாக மாறினார் என்பதற்காக சொல்லப்படுகின்ற நிகழ்வு.

அருப்பே அவர்கள் மாட்ரிட் பல்கலைகழகத்தில் மருத்துவப் படிப்பு படித்துக்கொண்டிருந்தார். படிப்பில் அவர் மிகத் திறமையானவராகவே விளங்கினார். அவரோடு இருந்த அனைவரும், பிற்காலத்தில் அவர் ஒரு மிகச் சிறந்த மருத்துவராக உயர்வார் என்று நினைத்தார்கள். 1926 ஆம் ஆண்டு, அதாவது அவருக்கு பத்தொன்பது வயது நடந்துகொண்டிருக்கும்போது ஒருநாள் அவர் லூர்து நகருக்குச் சென்று, அங்கு நடைபெற்ற வழிபாட்டில் கலந்துகொண்டார். அப்போது அவருக்குப் பின்னால், ஒரு தாய் நடக்க இயலாத தன்னுடைய முப்பது வயது மதிக்கத்தக்க மகனை சக்கர நாற்காலியில் வைத்துக்கொண்டு, "இயேசுவே, நடக்க இயலாத என் மகனுக்கு இரங்கும்" என்று உரக்கக் கத்தினார். இதைக் கேட்டு வழிபாட்டை நடத்திக் கொண்டிருந்த ஆயர் நற்கருணை ஆண்டவரை எடுத்துவந்து அந்தத் தாயின் மகன்மீது வைத்து ஜெபித்தார்.

என்ன ஆச்சரியம்! சிறிது நேரத்திலே நடக்க முடியாத அந்தத் தாயின் மகன் எழுந்து நடக்கத் தொடங்கினான். இந்த நிகழ்வு அருப்பே வாழ்வில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் தன்னுடைய அறைக்கு வந்தபோது அவரால் சரியாகப் படிக்க முடியவில்லை. அவருடைய நண்பர்கள் எல்லாம், "ஏன் இந்த மாற்றம்?" என்று கேட்டபோது, அவர், நிகழ்ந்தவற்றை எல்லாம் எடுத்துச் சொன்னார். அது மட்டுமல்லாமல், "ஆண்டவர் இயேசு என்னுடைய உள்ளத்தைத் தொட்டுவிட்டார், அவருக்காகவே என்னுடைய வாழ்வை அர்ப்பணிக்கப் போகிறன்" என்று சொன்னார். மூன்று மாதங்களுக்குப் பிறகு அவர் லயோலாவில் இருந்த இயேசு சபையில் சேர்ந்து இயேசுவுக்காக, அவருடைய நற்செய்திக்காக தன்னை முழுமையாய் அர்ப்பணித்தார்.

இயேசுவால் தொடப்பட்ட அருப்பே, அவருடைய நற்செய்திக்காக, தன்னை முழுமையாய் அர்ப்பணித்தது மிகவும் சிறப்பான ஒன்று. நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் சீடர்களைப் போன்று, தந்தை அருப்பே போன்று நற்செய்திக்காக நம்மை முழுமையாய் அர்ப்பணிக்க வேண்டும் என்பதுதான் இயேசு நமக்கு அழைப்பாக இருக்கின்றது. நற்செய்தி அறிவிக்கவின்றபோது கடவுளின் பராமரிப்பு, ஆசிர்வாதம் நமக்கு எப்போதும் உண்டு என்பதை இயேசு சுட்டிக்காட்டத் தவறவில்லை.

ஆகவே, நாம் ஒவ்வொருவரும் ஆர்வமிக்க ஆண்டவருடைய நற்செய்திப் பணியாளர் ஆவோம், ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றத்தில் பெருமகிழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
விண்ணேற்றம் - பின்புலங்களும், தடைகளும், புரிதல்களும்

 திருத்தூதர் பணிகள் 1:1-11
 எபேசியர் 4:1-13
 மாற்கு 16:15-20

"ஆண்டவராகிய இயேசு, மகிமையின் மன்னர்,

பாவத்தையும் இறப்பையும் தோற்கடித்த வெற்றி வீரர்,

வானதூதர் வியப்புற வானங்களின் உச்சிக்கு ஏறிச் சென்றார்.

இவ்வாறு அவர் சென்றது

எங்கள் தாழ்நிலையை விட்டு அகல வேண்டும் என்பதற்காக அன்று.

மாறாக, எங்கள் தலைவரும் முதல்வருமாகிய அவர்

முன்னரே சென்ற அவ்விடத்திற்கு

அவர் உறுப்பினர்களாகிய நாங்களும்

அவரைப் பின் தொடர்ந்து செல்வோம் என்று

நம்பிக்கை கொள்வதற்காகவே"

இன்றைய திருப்பலியின் தொடக்கவுரையில் (பழைய மொழிபெயர்ப்பு) நாம் காணும் தூய அகுஸ்தினாரின் இவ்வார்த்தைகள் இன்றைய நாளின் பொருளை மிக நேர்த்தியாக நமக்கு எடுத்துரைக்கின்றன.

இயேசுவின் விண்ணேற்றம் பற்றி இரண்டாம் ஏற்பாட்டில் நாம் மூன்று இடங்களில் வாசிக்கின்றோம்: மாற்கு 16:19-20, லூக்கா 24:50-53 மற்றும் திப 1:9-11. இதில் விநோதம் என்னவென்றால் விண்ணேற்றத்தின்போது உடனிருந்த சீடர்களான மத்தேயுவும், யோவானும் இந்த நிகழ்வை பதிவு செய்யாமலே விடுகின்றனர். மேலும், மாற்கு 16:9-20 இறைவாக்குப் பகுதியை (இன்றைய நற்செய்தி வாசகப் பகுதி) விவிலியத்தில் பார்த்தால் இந்தப் பகுதி அடைப்புக்குறிகளுக்குள் இருக்கும். காரணம், இது மாற்குவின் உண்மையான நற்செய்திப் பகுதியில் இல்லை. மாறாக, பின்னர் அவரது சீடர்கள் சேர்த்துக்கொண்ட பிரதியில்தான் இருக்கிறது. மத்தேயு நற்செய்தியாளர் ஏன் பதிவு செய்யவில்லை? என்ற கேள்விக்கு ஆய்வாளர்கள் சொல்லும் பதில் என்னவென்றால், "கடவுள் நம்மோடு" என வந்த இயேசு எப்படி திரும்பிச் செல்ல முடியும்? அவர் என்றும் நம்மோடுதான் இருக்கிறார் என்று மத்தேயு இதன் வழியாக இயேசுவின் உடனிருப்பைச் சொல்கிறாராம் நமக்கு.

லூக்கா தன் நற்செய்தியிலும், தன் திருத்தூதர் பணிகள் நூலிலும் இந்த நிகழ்வை எழுதுகின்றார். ஆனால், இரண்டு இடங்களிலும் வௌ;வேறு விதமாக எழுதுகின்றார். விண்ணேற்றம் பெத்தானியாவில் நிகழ்வதாக நற்செய்தியில் எழுதும் லூக்கா, திருத்தூதர் பணிகள் நூலில் எருசலேமில் நிகழ்வதாக எழுதுகிறார். (மதுரைக்கும், தூத்துக்குடிக்குமான தூரம் இது!) நற்செய்தியில் இயேசு ஆசீ கூறுகின்றார். ஆனால், இங்கே பேசிக்கொண்டிருக்கிறார். அங்கே சீடர்கள் வணங்கிவிட்டு எருசலேம் திரும்புகிறார்கள். ஆனால் இங்கே வானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மிக முக்கியமாக, அங்கே இயேசுவே விண்ணிற்கு ஏறிச்செல்கின்றார் (செய்வினை). ஆனால் இங்கே அவர் விண்ணிற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றார் (செயப்பாட்டுவினை).

இப்படி ஒன்றுக்கொன்று முரண்பட்ட பதிவுகள் இருக்க இயேசு விண்ணேற்றம் அடைந்தாரா? என்ற கேள்வியும் எழுகின்றது.

இயேசுவின் விண்ணேற்றம் ஒரு வரலாற்று நிகழ்வு என்று சொல்வதை விட இறையியல் நிகழ்வு என்றே நான் சொல்வேன். லாஜிக் இதுதான்! கீழே வந்த இயேசு, மேலே ஏறிச்செல்ல வேண்டும். அவர் இறக்க முடியாது. ஏன்னா அவர் கடவுள். இங்கேயே இருக்கவும் முடியாது. ஏன்னா, வர்ற யாரும் இங்கே நிரந்தரமாகத் தங்கிவிடமுடியாதுதானே. ஆக, இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட ஒன்றுதான் விண்ணேற்றம்.

முதல் ஏற்பாட்டில் முதன்முதலாக விண்ணேற்றம் அடைந்தவர் ஏனோக்கு என்றாலும் (தொநூ 5:24), தொடர்ந்து வந்த மோசே (இச 34) மற்றும் எலியா (2 அரச 2:2) தான் விண்ணேற்றம் அடைந்தவர்கள் எனச் சொல்லப்படுகின்றனர். மோசேயின் இறப்பு பற்றியும், அவருடைய கல்லறை எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது என்றும் இச 34 சொன்னாலும், அவர் விண்ணேற்றம் அடைந்ததாகவே இரபிக்களின் நூல்கள் சொல்கின்றன. ஆக, இயேசுவின் உருமாற்ற நிகழ்வின்போது அவருடன் உடனிருந்த மோசே மற்றும் எலியாவைப்போலவே இயேசுவும் விண்ணேற்றம் அடைந்துவிட்டார் என இயேசுவை புதிய மோசேவா, புதிய எலியாவாக முன்வைக்கின்றார் லூக்கா.

ஆக, விண்ணேற்றம் இயேசுவுக்கு தேவைப்பட்டதோ இல்லையோ, இயேசுவின் சீடர்களுக்கும், அவரைத் தொடர்ந்து வந்த திருச்சபைக்கும் தேவைப்பட்டது. இன்னும் தேவைப்படுகிறது.

விண்ணேற்றம் பற்றிய புரிதலுக்கு மூன்று பின்புலங்கள் தேவை:

பின்புலம் 1: இருதுருவ சிந்தனை

ஒளி-இருள், பகல்-இரவு, நன்மை-தீமை என இருதுருவ சிந்தனைக்குப் பழக்கப்பட்டது மனித மனம். இந்த இருதுருவ சிந்தனையின் படி, இறங்கி வரும் யாரும் ஏறிச் செல்ல வேண்டும். ஆக, இறங்குதல்-ஏறுதல் அவசியம். இயேசு, கடவுளின் மகன், பிறந்து, இறங்கி வந்தார் என்றால், அவர் இறந்து, ஏறிச் செல்ல வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை வட்டம் முழுமை அடையும்.

பின்புலம் 2: அடுக்கு உலக சிந்தனை

கிரேக்க சிந்தனையாளர் பிளேட்டோ தொடங்கி காலங்காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது "அடுக்கு உலகம்." அது என்ன அடுக்கு உலகம்? இந்த உலகத்தில் மூன்று அடுக்குகள் உள்ளன. மேல் அடுக்கு வானம், நடு அடுக்கு பூமி, கீழ் அடுக்கு பாதாளம். கடவுளர்கள், குட்டிக் கடவுளர்கள், தூதர்கள் ஆகியோரின் உறைவிடம் மேல் அடுக்கு. தீயவர்கள், கொடியவர்கள், தீமை இவர்களின் உறைவிடம் கீழ் அடுக்கு. இந்த இரண்டிற்கு நடுவில் உள்ள அடுக்கில் இருப்பவர்கள் இரண்டு பண்புகளையும் தங்களுக்குள் கொண்டிருப்பவர்கள். ஆனால் இந்த அடுக்கு ஒரு நிழல் அடுக்கு. இங்கு காணும் எல்லாம் மேல் மற்றும் கீழ் அடுக்குகளின் ஜெராக்ஸ் பிரதிகள். மேல் அடுக்கிலிருந்து நடு அடுக்கிற்கு வந்த இயேசு, தன் இறப்பால் கீழ் அடுக்கையும் சந்தித்துவிட்டு, மீண்டும் மேல் அடுக்கிற்கு ஏறிச் செல்கின்றார். நடு அல்லது கீழ் அடுக்கு அவரைத் தன்னகத்தே வைத்துக்கொள்ள இயலாது. ஏனெனில் அவர் மேலடுக்கைச் சார்ந்தவர்.

பின்புலம் 3: மறைதல்-நிறைதல் சிந்தனை

மருத்துவத்தின் முக்கியமான கூறு "மறைதல்-நிறைதல்." புரியலையா? நமக்கு வரும் நோய்களுக்கு காரணம் என்ன? "இருக்க வேண்டிய ஒன்று மறைந்தால்" (எ.கா. இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல்) "இருக்கக் கூடாத ஒன்று நிறைந்தால்" (எ.கா. இரத்தத்தில் சர்க்கரை நிறைதல்) அது நோய். மருத்துவரின் பணி என்ன? "குறையை நிறைவு செய்வது," "நிறைதலை கரைத்துக் குறைப்பது." அதிகம் மறைந்தாலும் ஆபத்து. அதிகம் நிறைந்தாலும் ஆபத்து. இயேசு மறைய வேண்டும். சீடர்கள் நிறைய வேண்டும். ஆனால், இயேசுவும் முழுமையாக மறைந்துவிடக் கூடாது. சீடர்களும் முழுமையாக நிறைந்துவிடக் கூடாது. இந்த இரண்டையும் சமன்படுத்த தேவை விண்ணேற்றம்.

ஒரு சின்ன அறையில் லேன் நெட்வொர்க் கனெக்ஷன் வழியாக இயேசுவை சீடர்களோடு இணைத்து வைத்திருந்த நற்செய்தியாளர்கள், அவரை அப்படியே தூக்கி உயரமான ஒரு வைஃபை ரவுட்டராக மாற்றிவிடுகின்றார். இப்போது இயேசுவோடு யாரும் தங்களை இணைத்துக் கொள்ள முடியும். தேவையானதெல்லாம் "நம்பிக்கை" என்ற ஐந்தெழுத்து பாஸ்கோட் மட்டுமே.

இந்த மூன்றும் விண்ணேற்றம் என்பதைப் புரிந்து கொள்ள நமக்குப் பின்புலமாக இருந்தாலும், விண்ணேற்றத்தை ஏற்றுக்கொள்ளவும், நம்பவும், புரிந்து கொள்ளவும் மூன்று கூறுகள் தடைகளாக நிற்கின்றன:

தடை 1: இயேசுவின் உடல்

மனித உடல் அல்லது உரு ஏற்றதால் இயேசு பிறந்தார். வளர்ந்தார். சாப்பிட்டார். காணாமல் போனார். கிடைத்தார். நடந்தார். பேசினார். சிரித்தார். அழுதார். இறந்தார். எப்படியோ உயிர்த்தும் விட்டார். உயிர்த்தவர் வெறும் ஆவியாக வராமல் உடலோடு வந்தார். சீடர்களுக்குத் தோன்றினார். தன் உடலைத் தொட்டுப் பார்க்கச் சொன்னார். சாப்பிட்டார். வழிநடந்தார். அப்பம் பிட்டார். இதுவரைக்கும் சரி. ஆனால், விண்ணேற்றம் அடையும்போது அவர் உடலோடு மேலே சென்றாரா? ஆம் என்று சொல்கிறது எருசலேம் விண்ணேற்ற ஆலயம். அங்கே இயேசுவின் இரண்டு அகன்ற பாதத்தடங்கள் இருக்கின்றன. ஒரு ராக்கெட் மேலெழும்பி செல்வதுபோல, புவிஈர்ப்பு விசையை வென்று, புவிஈர்ப்பு மண்டலத்தைக் கடந்து அவர் மேலே சென்றிருக்க வேண்டும். சரி போய்விட்டார். ஆனால், மனித உடலை வைத்து அவர் அங்கே என்ன செய்வார்? தந்தைக்கு உடல் இல்லை. தூய ஆவியானவருக்கு உடல் இல்லை. இவருக்கு மட்டும் உடல் இருக்குமா? இன்னும் அந்த உடலில் காயங்கள் இருக்குமா? (இருக்க வேண்டும் - ஏனெனில் மாறாதவராக இருந்தால்தானே அவர் கடவுள்!) உடல் என்று ஒன்று இருந்தால் உடை என்ற ஒன்றும் இருக்க வேண்டும். உடை இல்லாத மனித உடலை அதுவும் கடவுள்-மனிதனின் உடலை நாம் நினைத்துப் பார்க்கவும் முடியுமா? மாற்று உடைக்கு இயேசு என்ன செய்வார்? அல்லது பாதி வழி சென்ற இயேசுவின் உடல் மறைந்து ஆவியாக மாறிவிட்டதா? மனித உடலோடு இயேசு சென்றார் என்று நாம் சொல்வதே, மற்ற விலங்குகள், பறவைகள், தாவரங்களின் உடலுக்கு நாம் இழைக்கும் தீங்கு இல்லையா? மனித உடலே சிறந்தது என ஹோமோ ஸேபியன்ஸ் ஸேபியன்ஸ் தற்பெருமை கொள்வது முறையா? இவ்வாறாக, இயேசுவின் உடல் அவரின் விண்ணேற்றத்தை நாம் புரிந்து கொள்ள தடையாக இருக்கிறது.

தடை 2: காலம்-இடம்; கூறு

மாற்கு நற்செய்தியாளர் இயேசுவின் விண்ணேற்றம் பற்றி எழுதும்போது, "இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்" (16:19) என எழுதிவிட்டு, உடனே, "ஆண்டவரும் திருத்தூதர்களோடு உடனிருந்தார்" (16:20) என முரண்படுகின்றார். காலத்தையும், இடத்தையும் கடந்து கடவுளோடு வலப்புறம் அமர்ந்திருக்கும் ஒருவர், காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்ட திருத்தூதர்களோடு எப்படி உடனிருக்க முடியும்? உண்மையாகவே உடனிருந்தாரா? அல்லது உடனிருப்பு என்பது திருத்தூதர்களின் ஒரு உள்ளுணர்வு போல இருந்ததா? அதாவது, இறந்து போன என் அப்பா என்னுடன் இருக்கிறார் என்று நான் சொல்கிறேன் என்றால், "என் கம்ப்யூட்டர் என்னுடன் இருக்கிறது" என்பது போன்ற "இருப்பு" அல்ல அது. மாறாக, அது ஒரு உள்ளுணர்வு. ஆக, காலமும்-இடமும் இயேசுவின் உடலை ஒட்டிய இரண்டாம் தடை.

தடை 3: பார்த்தவர்கள் எழுதவில்லை, எழுதியவர்கள் பார்க்கவில்லை

இயேசுவின் விண்ணேற்றம் பற்றி மாற்கும், லூக்காவும் மட்டுமே எழுதுகின்றனர். மத்தேயுவின் இயேசு இம்மானுவேலன் ("கடவுள் நம்மோடு") என்பதால், மத்தேயு இயேசுவை நம்மோடு தங்க வைத்து விடுகிறார். மத்தேயுவின் இயேசு விண்ணேற்றம் அடைவதில்லை (காண். மத் 28:20). விண்ணேற்றத்தைப் பார்த்த திருத்தூதரும் நற்செய்தியாளரும் இயேசு அன்பு செய்த சீடருமான யோவான் இந்த மாபெரும் நிகழ்வு குறித்து மௌனம் காக்கின்றார். "பிள்ளைகளே சாப்பிட வாருங்கள்" என்று இயேசு அழைத்தார் என சின்ன சின்ன உரையாடலையும் பதிவு செய்த யோவான் இதைப் பற்றி ஏன் எழுதவில்லை? அல்லது இயேசு விண்ணேறிச் செல்லவில்லையா? மேலும், இந்த நிகழ்வை தன் நற்செய்தியிலும் (24:50-53), தன் திருத்தூதர் பணிகளிலும் (1:6-11) பதிவு செய்யும் லூக்கா, இந்த நிகழ்வு நடந்த நேரத்தை முரண்டுபட்டு எழுதுகின்றார்: இந்த நிகழ்வு இயேசுவின் உயிர்ப்பு நாள் அன்று நடந்ததாக நற்செய்தியிலும் (24:51), நாற்பது நாட்களுக்குப் பின் நடந்ததாக திருத்தூதர் பணிகளிலும் (1:9-11) எழுதுகின்றார்.

இந்தத் தடைகளை ஒட்டி ஒரு வார்த்தைச் சிக்கலும் இருக்கிறது: "விண்ணேற்றமா?" (செய்வினை) அல்லது "விண்ணேற்பா?" (செயப்பாட்டுவினை)

முதல் ஏற்பாட்டில் ஏனோக்கு (தொநூ 5:24) மற்றும் இறைவாக்கினர் எலியாவும் (2 அர 2:2), இரண்டாம் ஏற்பாட்டில் இயேசுவும் விண்ணேற்றம் அடைந்தனர் என்றும், திருத்தந்தை 12ஆம் பயஸ் அவர்களின் 1950 நவம்பர் 1 பிரகடனத்தின்படி அன்னை மரியாள் விண்ணேற்பு அடைந்தார் என்றும் கூறுகின்றோம். இங்கே "விண்ணேற்றம்" என்பது செய்வினை. "விண்ணேற்பு" என்பது செயப்பாட்டுவினை. விண்ணேற்றம் அடைந்தவர்கள் தாங்களாகவே, தங்களின் ஆற்றலால் ஏறிச் செல்கின்றனர். இவர்களுக்கு மற்றவர்களின் துணை தேவையில்லை. ஆனால் மரியாவோ கடவுளால் அல்லது தூதர்களால் எடுத்துக் கொள்ளப்படுகின்றார். அவர் ஏறிச் செல்ல மற்றவர்களின் துணை தேவைப்படுகிறது. முன்னவர்கள் ஆண்கள் என்பதால் தாங்களாகவே ஏறிச்சென்றார்களோ? ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடுதான் இந்த வார்த்தை மாற்றங்களோ? தெரியவில்லை!

ஆனால், லூக்கா நற்செய்தியில் "அனாஃபெரோ" என்ற வினைச்சொல் செயப்பாட்டுவினையிலும் ("அனஃபெரெட்டோ"), திருத்தூதர் பணிகளில் "எபைரோ" என்ற வினைச்சொல் செயப்பாட்டுவினையிலும் ("எபெர்தெ") உள்ளது. மேலும், ஒரே நிகழ்வைக் குறிக்க லூக்கா வௌ;வேறு வினைச்சொற்களைப் பயன்படுத்துவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த வார்த்தைகளை நாம் உள்ளபடி மொழிபெயர்த்தால், "அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார்" என்றும் "அவர் எடுத்துக்கொள்ளப்பட்டார்" என்றும் சொல்ல வேண்டும். ஆக, "இயேசு விண்ணேற்றம் அடைந்தார்" என்பது நம் புரிதலுக்கான மொழிபெயர்ப்பே அன்றி, பாட மொழிபெயர்ப்பு அல்ல.

இவ்வளவு தடைகளும், மொழியியல் சிக்கல்களும் இருக்க, இயேசுவின் விண்ணேற்றத்தை எப்படி புரிந்து கொள்வது?

கேள்வியை மாற்றிக் கேட்டால், பிரச்சினை தீர்ந்துவிடும்.

எப்படி விண்ணேற்பு? என்று கேட்பதை விடுத்து, ஏன் விண்ணேற்பு? என்று கேட்டால் விண்ணேற்பின் பொருள் தெரிந்துவிடும்.

விண்ணேற்றம் இயேசுவின் வாழ்வில் மூன்று நிலைகளில் அர்த்தம் பெறுகின்றது:

1. தன் மண்ணக பணிவாழ்வு முடிந்து, இன்று தன் தந்தையின் இல்லம் திரும்புகின்றார் (காண். பிலி 2:3-6).

2. தன் சீடர்களிடம் தன் பணியை ஒப்புவிக்கின்றார். தன் இறையரசுப் பணியைத் தொடர்ந்தாற்ற அவர்களுக்குக் கட்டளையிடுகின்றார். விண்ணேற்றம் ஒரு பிரியாவிடை நிகழ்வு. விவிலியத்தில் உள்ள பிரியாவிடை நிகழ்வுகளில் மூன்று மட்டுமே மிக நீளமானவை: இஸ்ரயேலின் குலமுதல்வர் யாக்கோபு (தொநூ 49-50), திருச்சட்டம் வழங்கிய மோசே (இச 33-34), புதிய இஸ்ரயேலின் நம்பிக்கை மற்றும் திருச்சட்டத்தின் நிறைவாம் இயேசு (திப 1:1-11). இந்த மூன்று பிரியாவிடைகளும் நான்கு கூறுகளைக் கொண்டுள்ளன: அ) ஆசியுரை, ஆ) பிரிவு, இ) பார்த்தவர்களின் பதில் மற்றும் ஈ) கீழ்ப்படிதல் அறிக்கை. இயேசு கைகளை உயர்த்தி ஆசீர் அளிக்கும் நிகழ்வும் முதல் ஏற்பாட்டு நிகழ்வுகளின் பிரதிபலிப்பாகவே அமைகின்றது (லேவி 9:22, சீஞா 50:20-21). ஆசியளித்தல் தரும் மகிழ்ச்சி லூக்கா நற்செய்தியின் முதல் மற்றும் இறுதி நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது (1:56, 2:20,43,45, 24:9,33, 8:13, 15:7,10). இயேசுவின் சீடர்கள் மகிழ்ச்சியோடு ஆலயம் திரும்பி இறைவனைப் புகழ்கின்றனர்.

3. துணையாளராம் தூய ஆவியானவரை அவர்கள்மேல் அனுப்புவதாக வாக்குறுதி தருகின்றார் (திப 1:4-5).

இயேசுவின் உயிர்ப்பைப் போலவே, அவரின் விண்ணேற்றமும் ஒரு நம்பிக்கையின் மறைபொருளே. "நம்பிக்கை" என்ற இந்த ஒற்றைச் சொல்லை நீக்கிவிட்டால், இந்த நிகழ்விற்கும் நமக்கும் தொடர்பே இல்லை. "விண்ணேற்றம் என்னும் நம்பிக்கையை" நாம் எப்படி வாழ்வாக்குவது? விண்ணேற்றம் தரும் வாழ்வியல் பாடங்கள் எவை?

பாடம் 1: மறைதலும் மலர்தலும் இறைமை

இயேசுவை மனிதனாக்க அவருக்கு மனுவுருவாதல் தேவைப்பட்டதுபோல, அவரை இறைவனாக்க அவருக்கு விண்ணேற்றம் தேவை. "தேவை" என்பதால் இவை உருவாக்கப்பட்டவை என்று பொருள் கொள்ளக் கூடாது. மறைந்திருக்கும் வரைதான் அவன் பெயர் மறையவன் அல்லது இறைவன். ஆகையால்தான் இறைவனைப் பற்றிய அறிவை மறை-கல்வி என்கிறோம். தெரிந்துவிட்டால் அவர் இறைவன் அல்ல. கண்களுக்குத் தெரியாததால் அவர் இல்லை என்பதும் அல்ல. கண்களுக்குத் தெரியக்கூடியவை எல்லாம் மாறக்கூடியவை. மாறாதவைகள் கண்களுக்குப் புலனாவதில்லை. நம் உடலின் கண்களை மறைக்கும் அளவுக்கு நம் கன்னம் வீங்கிவிட்டது என வைத்துக்கொள்வோம். நம்மால் எதையும் பார்க்க முடியாது. என்னால் பார்க்க முடியவில்லை என்பதற்காக என் முன் இருப்பவை எல்லாம், இல்லாதவை என ஆகிவிடுமா? ஒருபோதும் இல்லை. "ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல் மங்கலாய்க் காண்கிறோம். ஆனால் அப்போது நேரில் காண்போம்" (1 கொரி 13:12). இயேசு விண்ணேற்றத்தின்போதுதான் இறைவனாகின்றார். மறையும்போதுதான் இறைவனாகின்றார். மறைந்த இயேசு மீண்டும் மலர்கின்றார். எப்படி? "ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்து அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்" (மாற் 16:20) என பதிவு செய்கின்றார் மாற்கு. இவ்வாறாக, வாய்ச்சொல்லாக இருந்தவற்றிற்கு ஒரு பிணைப்பத்திரமாக மலர்கிறது இயேசுவின் உடனிருப்பு. விண்ணேற்றம் அடைந்து மறைந்த இறைமை திருத்தூதர்கள் வாழ்வில் உடனிருப்பாக மலர்கிறது.

பாடம் 2: சீடர்களின் பணி

இன்றைய நற்செய்தி வாசகத்தில் தன் சீடர்களின் பணி என இயேசு குறிப்பிடுவது ஒன்றே ஒன்று: "நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்." "நற்செய்தி" என்ற வார்த்தைக்கான வரைமுறையை "இயேசுகிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்" (1:1) என்று பதிவு செய்து, இந்த வசனத்திற்குப் பின் வரும் அனைத்துமே நற்செய்தி என்கிறார் மாற்கு. ஆக, நற்செய்தி அறிவிப்பு என்பது இNயுசுவின் வரலாற்ற உடனிருப்பையும், செயல்பாடுகளையும் மற்றவர்களுக்கு எடுத்துரைப்பது. தொடர்ஓட்டத்தில் ஒரு வீரரின் கையிலிருந்து மற்ற வீரரின் கைக்கு மாறும் குச்சியைப்போல, ஒலிம்பிக் தீப ஓட்டத்தில் ஒருவரின் கையிலிருந்து அடுத்தவரின் கைக்கு மாறும் தீபம் போல விண்ணரசுப் பணி இயேசுவின் கையிலிருந்து இன்று நம் கைக்கு மாறுகின்றது. எந்த அளவிற்கு இது ஒரு கொடையோ, அந்த அளவிற்கு இது ஒரு கடமை. "விளையாட்டு வீரர் எவரும் விதிமுறைகளுக்குட்பட்டு விளையாடினால் மட்டுமே வெற்றிவாகை சூட முடியும" (2 திமொ 2:5)

பாடம் 3: எதிர்நோக்கு

"அவர் மீண்டும் வருவார்" (திப 1:11) என்ற வார்த்தைகள்தாம் நாம் காத்திருப்பதற்கான எதிர்நோக்கை நமக்குத் தருகின்றன. எதிர்நோக்கில் தயக்கம் அறவே கூடாது (எபி 10:23). நம் வாழ்வின் ஒவ்வொரு செயலையும் உந்தித் தள்வது எதிர்நோக்கே. காலையில் எழுவோம் என்ற எதிர்நோக்கு இருப்பதால் தான் இரவு தூங்கச் செல்லுமுன் "வேக்அப் கால்" வைக்கின்றோம். படிப்பது, பயணம் செய்வது, வேலை தேடுவது, தேடிய வேலையில் சம்பாதிப்பது, திருமணம் முடிப்பது, அருள்நிலை வாக்குறுதி கொடுப்பது என எல்லா வாழ்க்கை நிகழ்வுகளிலும், நிழல்களிலும் எதிர்நோக்கி இழையோடியிருக்கின்றது. இந்த எதிர்நோக்குகளுக்கெல்லாம் தாயாக இருப்பது, "அவர் மீண்டும் வருவார்" என்ற எதிர்நோக்கும், "நாமும் அங்கு செல்வோம்" என்ற எதிர்நோக்கும்தான். வெறும் மண்ணோடு மண்ணாக முடியப்போகும் வாழ்க்கைக்கா நாம் இவ்வளவு மெனக்கெடுகிறோம்? நாம் மண்ணைச் சார்ந்தவர்கள் அல்லர். விண்ணைச் சார்ந்தவர்கள். ஆக, எதிர்நோக்கு என்னும் விளக்கு எந்நேரமும் எரிந்துகொண்டிருக்கட்டும். மேலும், நாம் விண்ணைச் சார்ந்தவர்கள் என்பதால் நம் எண்ணங்களும் உயர்ந்த எண்ணங்களாகவே இருக்கட்டும் (காண். கொலோ 3:1).

பாடம் 4: அண்ணாந்து பார்க்காதீங்க!

"கலிலேயரே, ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருக்கிறீர்கள்?" (திப 1:11) என்ற கேள்வி நம்மைப் பார்த்தும் கேட்கப்படுகிறது. அண்ணாந்து பார்க்கும் ஆன்மீகம் வேண்டாம். குனிந்து வாழ்வைப் பார்க்கும் ஆன்மீகம் அவசியம். "அவர் வருகிறார்!" என்பதற்காக அவரைத் தேடி வீட்டைவிட்டு ஓட வேண்டாம். அண்ணாந்து பார்க்க வேண்டாம். சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து சாப்பிடுங்கள். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்களா. தொடர்ந்து செய்யுங்கள். பஸ்ஸில் இருக்கிறீர்களா, தொடர்ந்து பயணம் செய்யுங்கள். ரேஷன் கடையில் வரிசையில் நிற்கிறீர்களா, தொடர்ந்து நில்லுங்கள். நோயுற்ற ஒரு நபரோடு மருத்துவமனையில் பேசிக்கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து பேசுங்கள். டிவி பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து பாருங்கள். விளையாடிக் கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து விளையாடுங்கள். ஏனெனில், அவர் இவற்றிலும் வருகின்றார். எல்லாவற்றிலும் அவரால் வர முடியும்.

பாடம் 5: புறப்பட்டுச் செல்தல்

இயேசுவின் பிரிவை அனுபவிக்கும் சீடர்களின் முதல் உணர்வு "அடுத்து என்ன?" என்பதுதான். நடந்தவற்றை திறனாய்வு செய்துகொண்டோ, அல்லது "அவர் இன்னும் இங்கே இருந்திருக்கலாம்" என்று புலம்பிக்கொண்டோ இருக்கவில்லை. உடனே புறப்டுகின்றனர். "அழுதுகிட்டே இருந்தாலும் உழுதுகிட்டே இருக்கணும்" என்பது கிராமத்துச் சொலவடை. அழுகை நம் பசி தீர்க்குமா? உழுதல்தான் தீர்க்கும். இவ்வாறாக, நம் அன்றாட வாழ்வில் நாம் பிறர்நோக்கிப் புறப்பட்டுச்சென்று நம்பிக்கையின் விதையை விதைக்க நம்மை அழைக்கிறார் இயேசு.

"நம்மேல் கொண்ட பரிவினால் அவர் விண்ணிலிருந்து இறங்கி வந்தார்.

இன்று அவர் தனியே விண்ணேறிச் சென்றாலும், அவரோடு நாமும் உடன் செல்கிறோம்.

ஏனெனில் அருளால் நாமும் அவரோடு இணைந்துள்ளோம்!"

(தூய அகுஸ்தினார்)

விண்ணேற்றப் பெருநாள் வாழ்த்துக்களும், செபங்களும்!

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!