Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       செப்டம்பர்  
                                    பொதுக்காலம் 23ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்     திருச்சிலுவையின் மகிமை விழ
=================================================================================
கொள்ளிவாய்ப் பாம்பைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்.

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 21: 4-9

அந்நாள்களில் ஏதோம் நாட்டைச் சுற்றிப் போகும்படி ஓர் என்ற மலையிலிருந்து இஸ்ரயேல் மக்கள் "செங்கடல் சாலை" வழியாகப் பயணப்பட்டனர்; அவ்வழியை முன்னிட்டு மக்கள் பொறுமை இழந்தனர். மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசினர்: "இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது" என்றனர்.

உடனே ஆண்டவர் கொள்ளிவாய்ப் பாம்புகளை மக்களிடையே அனுப்பினார்; அவை கடிக்கவே இஸ்ரயேல் மக்களில் பலர் மாண்டனர். அப்போது மக்கள் மோசேயிடம் வந்து, "நாங்கள் பாவம் செய்துள்ளோம்; நாங்கள் ஆண்டவருக்கும் உமக்கும் எதிராகப் பேசியுள்ளோம்; அவர் இந்தப் பாம்புகளை அகற்றிவிடும்படி நீர் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளும்" என்றனர்.

அவ்வாறே மோசே மக்களுக்காக மன்றாடினார். அப்போது ஆண்டவர் மோசேயிடம், "கொள்ளிவாய்ப் பாம்பு ஒன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்" என்றார்.

அவ்வாறே மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 78: 1-2. 34-35. 36-37. 38 (பல்லவி: 7b)
=================================================================================
பல்லவி: இறைவனின் செயல்களை மறவாதிருங்கள்.

1 என் மக்களே, என் அறிவுரைக்குச் செவிசாயுங்கள்; என் வாய்மொழிகளுக்குச் செவிகொடுங்கள். 2 நீதிமொழிகள் மூலம் நான் பேசுவேன்; முற்காலத்து மறைச் செய்திகளை எடுத்துரைப்பேன். பல்லவி

34 அவர்களை அவர் கொன்றபோது அவரைத் தேடினர்; மனம் மாறி இறைவனைக் கருத்தாய் நாடினர். 35 கடவுள் தங்கள் கற்பாறை என்பதையும் உன்னதரான இறைவன் தங்கள் மீட்பர் என்பதையும் அவர்கள் நினைவில் கொண்டனர். பல்லவி

36 ஆயினும், அவர்கள் உதட்டளவிலேயே அவரைப் புகழ்ந்தார்கள்; தங்கள் நாவினால் அவரிடம் பொய் சொன்னார்கள். 37 அவர்கள் இதயம் அவரைப் பற்றிக்கொள்வதில் உறுதியாய் இல்லை; அவரது உடன்படிக்கையில் அவர்கள் நிலைத்து நிற்கவில்லை. பல்லவி

38 அவரோ இரக்கம் கொண்டவராய், அவர்கள் குற்றத்தை மன்னித்தார்; அவர்களை அழித்து விடவில்லை, பலமுறை தம் கோபத்தை அடக்கிக்கொண்டார். தம் சினத்தையெல்லாம் அவர்களுக்கு எதிராய் மூட்டவில்லை. பல்லவி



இரண்டாம் வாசகம்

இயேசு தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தினார்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 6-11

சகோதரர் சகோதரிகளே, கடவுள் வடிவில் விளங்கிய இயேசு, கடவுளுக்கு இணையாய் இருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.

ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக `இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா நாவுமே அறிக்கையிடும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவே, உம்மை ஆராதித்து வாழ்த்துகின்றோம்; ஏனெனில், உம் சிலுவையாலே உலகை மீட்டீரே. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மானிட மகன் உயர்த்தப்பட வேண்டும்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-17

அக்காலத்தில் இயேசு நிக்கதேமிடம் கூறியது: "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை. பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர். தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்."

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
திருச்சிலுவை மகிமை விழா

புண்ணிய வாழ்வு வாழ்ந்து வந்த துறவி ஒருநாள் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் அவர் இறந்து மேலுலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார். மேலுலகில் அவர் இறுதித் தீர்ப்புக்காக கடவுளுக்கு முன்பாக நிறுத்தப்பட்டார். அவருக்குப் பக்கத்தில் சாத்தான் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு, அதிலிருந்து துறவி செய்த தவறுககளை (?) அடுக்கிக்கொண்டே போனது.

தான் செய்யாத தவறுகளையெல்லாம்கூட சாத்தான் அடுக்கிக்கொண்டே போனதால், துறவி அதிர்ச்சியடைந்து நின்றார். சாத்தான் எல்லாவற்றையும் வாசித்து முடிக்கும்வரை துறவி பொறுமையாக இருந்தார். வாசித்து முடித்ததும் துறவி சாத்தானைப் பார்த்து, "நீ இன்னும் ஒன்றை வாசிக்க மறுத்துவிட்டாய்" என்றார். சாத்தான், "அது என்ன?" என்று கேட்டு நின்றது.

அதற்கு துறவி, "என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நான் செய்த பாவங்கள் அனைத்தையும் சிலுவையில் சிந்திய இரத்ததினால் கழுவிப் போக்கிவிட்டார். இதுதான் நீ உன்னுடைய புத்தகத்தில் எழுதாத ஒன்று" என்றார். இதைக் கேட்டதும் சாத்தான் ஒரு வார்த்தையும் பேசாமல் அமைதியானது. ஆம், நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் ஆண்டவர் இயேசு, தான் சிலுவையில் சிந்திய இரத்ததினால் கழுவிப் போக்கிவிட்டார். இப்போது நாம் துயவர்களாக இருக்கின்றோம்.

இன்று நாம் திருச்சிலுவையின் மகிமைப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். சிலுவை யூதர்களுக்கு தடைக்கல்லாகவும், புறவினத்தாருக்கு மடமையாகவும் இருந்தது ( 1 கொரி 1:23) ஆனால் ஆண்டவர் இயேசு தன்னுடைய பாடுகள் மற்றும் உயிர்ப்பின் வழியாக அதனை வெற்றியின் சின்னமாக மாற்றினார். எனவே சிலுவை என்பது அவமானத்தின் சின்னம் கிடையாது, அது வெற்றியின் சின்னமாகும்.

இந்த வேளையில் திருச்சிலுவை மகிமை விழா எப்படி வந்தது, இவ்விழா நமக்கு உண்மை என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

கிபி. 312 ஆம் ஆண்டில் உரோமைப் பேரரசை யார் ஆட்சி செய்வது என்ற குழப்பம் கான்ஸ்டாண்டிநோபுலுக்கும், மாக்ஜெஸ்டியுசுக்கும் இடையே ஏற்பட்டது. இந்த நேரத்தில் கான்ஸ்டாண்டிநோபுள் கிறிஸ்தவர்களின் ஜெப உதவியை நாடினான். கிறிஸ்தவர்களும் அவனுக்காக ஜெபித்தார்கள். அப்போது ஒருநாள் வானத்தில் சிலுவை அடையாளம் தோன்றி கான்ஸ்டாண்டிநோபுள் வெற்றிபெறுவான் என்று சொல்லியது. அதைபோன்றே கான்ஸ்டாண்டிநோபுள் வெற்றிபெற்று அரசனானான். அன்றே அவன் கிறிஸ்தவ மதத்தை அரசாங்க மதமாக அறிவித்தான். சிலுவை கான்ஸ்டாண்டிநோபுலுக்கு வெற்றியைக் கொணர்ந்தது.

அதன்பிறகு கி.பி. 326 ஆம் ஆண்டு ஹெலினா என்ற புனிதர் எருசலேம் நகர் சென்றபோது அங்கே இயேசு அறையப்பட்ட சிலுவையை கண்டுபிடித்தார். அதைத் திருச்சிலுவையாக போற்றிப் பெருமைப்படுத்தினார். மக்களுக்கும் அதற்கு வணக்கமும், மரியாதையும் செலுத்தத் தொடங்கினார்கள். ஆனால் கி.பி.614 ஆண்டு பெர்சிய மன்னனாகிய சொஸ்ரோஸ் என்பவன் இந்த திருச்சிலுவையை கைப்பற்றிக்கொண்டு சென்று ஈரானில் வைத்தான். இதனை ஹெராகிளியஸ் என்று மன்னன் 629 ஆம் ஆண்டு மீட்டு, கால்நடையாகவே அதனை எருசலேமில் கொண்டுவந்து சேர்த்தான். அவன் திருச்சிலுவையைக் கொண்டுவந்த நாள் செப்டம்பர் 14. அதன் நினைவாகத் தான் திருச்சிலுவை மகிமை விழாவை உலகம் முழுவதும் செப்டம்பர் 14 ஆம் தேதி கொண்டாடுக்கின்றோம்.

இப்போது இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம். தொடக்கத்தில் சொன்னது போல சிலுவை அவமானத்தின் சின்னம் கிடையாது. வெற்றியின் சின்னம். உரோமையர்கள் நாட்டைக் காட்டிக்கொடுத்தவர்களுக்கும், திருடர்களுக்கும் சிலுவை மரத்தைத் தந்தார்கள். ஆனால் ஆண்டவர் இயேசுவோ ஒரு தவறும் செய்யாதவர். அப்படியிருந்தும் அவருக்கு அந்த சிலுவை மரணம் கொடுக்கப்பட்டது. இயேசு தனக்குக் கொடுக்கப்பட்ட சிலுவையை சிலுவை மரணத்தை - வெற்றியாக மாற்றினார். ஆகவே இந்த உண்மையை நாம் உணர்ந்துகொண்டு வாழவேண்டும்.

அடுத்ததாக இயேசுவின் சீடர்களாகிய நாம் ஒவ்வொருவரும், இறையாட்சிப் பணியாளர்களும் சிலுவையை துணிவோடு சுமக்க முன்வரவேண்டும். நற்செய்தியில் இயேசு கூறுவார், "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தன் சிலுவையை நாள்தோறும் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" என்று. ( லூக் 9:23). ஆம், இயேசுவின் சீடர்களாகிய நாம் ஒவ்வொரும் சிலுவையை சாபமாக அல்ல, மாறாக வரமாகத் தூக்கிக்கொண்டு அவரைப் பின்பற்றவேண்டும். அப்போதுதான் அவருடைய உண்மையான சீடர்களாக இருக்க முடியும்.

நிறைவாக அன்றாடம் நாம் பயன்படுத்தும் சிலுவை அடையாளத்தை பொருள் உணர்ந்ந்து பயன்படுத்த வேண்டும். காரணம் சிலுவை வாழ்வைத் தரக்கூடியது. இஸ்ரேயல் மக்கள் பாம்பினால் கடிபட்டு, இறந்தபோது அவர்கள் வெண்கலத்தால் ஆனா பாம்பைப் பார்த்தார்கள். வாழ்வைப் பெற்றார்கள். அதுபோன்று நாமும் வாழ்வில் துன்பம், துயரம் இவற்றையெல்லாம் சந்திக்கின்றபோது சிலுவையப் பார்த்தோமென்றால் வாழ்வைப் பெறுவோம் என்பது உறுதி.

எனவே சிலுவை அடையாளத்தை பொருள் உணர்ந்து பயன்படுத்துவோம், சிலுவையின் உண்மைப் பொருளை உணர்வோம். சிலுவையின் பாதையில் நடப்போம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
திருச்சிலுவையின் மகிமை விழா

இன்று திருச்சபையானது திருச்சிலுவை மகிமைப் பெருவிழாவைக் கொண்டாடுகிறது. ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இவ்விழா 'திருச்சிலுவையின் மகிமை', 'சிலுவையின் வெற்றி', 'பெருமைமிகு திருச்சிலுவை நாள்", 'உயிர்வழங்கும் அரிய சிலுவை உயர்த்தப்பட்ட நாள்' என பல்வேறு சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறது.

இப்பெருவிழாவைக் கொண்டாடும் வேளையிலே, இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்க்கும்முன் இதனுடைய வரலாற்றுப் பின்புலத்தை சற்று ஆய்ந்து பார்ப்போம்.

நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த கான்ஸ்டன்டைன் என்ற உரோமைப் பேரரசரின் அன்னை, புனித ஹெலெனா அவர்கள், ஒருமுறை புனித பூமிக்கு திருப்பயணம் மேற்கொண்டபோது அங்கே ஒரு குறிப்பிட்ட இடத்தில் பூமியை அகழ்வதற்கு அவர்கள் தூண்டப்பட்டார். அவ்விடத்தை அகழ்ந்தபோது, மூன்று சிலுவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அம்மூன்று சிலுவைகளில் இயேசு அறையப்பட்டச் சிலுவை எது என்பதைக் கண்டுபிடிக்க, புனித ஹெலெனா ஒரு சோதனையை மேற்கொண்டார். அதாவது மரணப் படுக்கையில் போராடிக் கொண்டிருந்த ஒரு பெண்ணை அவர் அவ்விடத்திற்குக் கொணர்ந்தார். அப்பெண், முதல் இரு சிலுவைகளைத் தொட்டபோது, அவரிடம் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. மாறாக மூன்றாவது சிலுவையை அவர் தொட்டதும் குணமடைந்தார். எனவே, அச்சிலுவையே இயேசு அறையப்பட்டச் சிலுவை என புனித ஹெலெனா அறிந்துகொண்டார்.

அச்சிலுவையைக் கண்டுபிடித்த இடத்தில், புனித கல்லறைக் கோவில் நிறுவப்பட்டது. இக்கோவில், 335ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு, செப்டம்பர் 13, 14 ஆகியத் தேதிகளில் அர்ச்சிக்கப்பட்டது. இந்த அர்ச்சிப்பின் நினைவாகத்தான் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 14ம் தேதியன்று திருச்சிலுவை உயர்த்தப்பட்டத் திருநாள் என்று திருச்சபை கொண்டாடப்படுகிறது. இயேசு அறையப்பட்ட சிலுவையின் ஒரு பெரிய துண்டு புனித கல்லறைக் கோவிலில் பாதுக்காக்கப்பட்டு வருகின்றது.

614 ஆம் ஆண்டு பெர்சிய நாட்டு அரசன் மெசபத்தோமியாவின்மீது (புனித நாடுகள் இருக்கும் பகுதி) படையெடுத்துக் சென்று அங்கிருந்த குருக்கள், கன்னியர்கள் கிறிஸ்தவர்கள் என்று பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றொழித்து, அங்கே இருந்த திருச்சிலுவையை எடுத்துக்கொண்டு போய்விட்டான். அதை 627 ஆம் ஆண்டு ஹெராக்ளியஸ் என்ற அரசன்தான் மீட்டுக்கொண்டு வந்து மீண்டும் அதே இடத்தில் நிறுவினான். அன்றிலிருந்து மகிமை பொருந்திய திருச்சிலுவை அதே இடத்தில் இருந்து அனைவருக்கும் அருள்பாலித்துக்கொண்டிருக்கிறது.

தூய ஆண்ட்ருஸ் இவ்வாறு கூறுவார், "திருச்சிலுவை நம்மை இருளிலிருந்து, ஒளிக்கு அழைத்து வந்தது. அதுவே நமக்கு வாழ்வு தந்தது; விண்ணகத்தின் கதவைத் திறந்து தந்தது" என்று. ஆம், இது எவராலும் மறுக்கமுடியாத உண்மை. பவுலடியார் கூட இதே கருத்தை 1 கொரி 1:18 ல் வலியுறுத்துவார். "சிலுவையைப் பற்றிய போதனை அழிவுறுவோருக்கு மடமை, ஆனால் மீட்புப் பெறும் நமக்கோ கடவுளின் வல்லமை" என்று.

இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் ஏதோம் என்ற நாட்டைச் சுற்றி வரும்போது, ஓர் என்ற மலையிலிருந்து "செங்கடல் சாலை" வழியாகப் பயணப்படும்போது மோசேக்கும், கடவுளுக்கும் எதிராகக் கிளர்ந்தெழுகிறார்கள். இதனால் கடவுள் அவர்கள்மீது சினம் கொண்டு கொள்ளிவாய்ப் பாம்புகளை அனுப்பி சாகடிக்கிறார். ஆனால் மோசே மீண்டும் கடவுளிடத்தில் மன்றாடுகிறபோது, அவர் அவர்கள்மீது இரக்கம் கொண்டு, "வெண்கலப்பாம்பு ஒன்றைச் செய்து, அதனை மக்கள் நடுவே வை, அப்போது பாம்பினால் கடிபட்ட எவரும் அதனைப் பார்க்கிறபோது உயிர்பிழைப்பார்கள்" என்று மோசேயிடம் கூறுகிறார். மோசேயும் அவ்வாறே செய்ய, இஸ்ராயேல் மக்கள் உயிர்பிழைக்கிறார்கள்.

இப்பகுதியில் வரக்கூடிய வெண்கலப்பாம்பு திருச்சிலுவையின் முன் அடையாளமாக இருக்கிறது. எவ்வாறெனில் வெண்கலப்பாம்பைப் பார்த்தவர்கள் வாழ்வுபெற்றதுபோல திருச்சிலுவையை பார்ப்பவர்கள் வாழ்வு பெறுவார்கள்.

பொதுவாக சிலுவை மரணமானது அல்லது சிலுவையானது மிகவும் இழிவாகக் கருதப்பட்டது. இது கொடியவர்களுக்கும், நாட்டைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கும்தான் வழங்கப்படும். ஆனால் அப்படிப்பட்ட சிலுவைச் சாவை ஆண்டவர் இயேசு நம்மீது கொண்ட அன்பினால் மகிழ்வோடு ஏற்றுக்கொள்கிறார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் படிக்கின்றோம், "கடவுள் தன்மையில் விளங்கிய அவர், தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்கு கீழ்படிபவரானார்" என்று. ஆம், இயேசு தன்னை வெறுமையாக்கி, அடிமையின் கோலம்கொண்டு, சிலுவை மரணம் ஏற்றார் என்றால் அது அவர் நம்மீது கொண்ட அளவுகடந்த அன்புகொண்டிருக்கிறார் என்பதே உண்மை. தந்தைக் கடவுள் தன் மகனாகிய இயேசுவையே இவ்வுலகிற்கு அளித்தார் என்றால், இயேசு அதனைச் செயல்படுத்தினார். அதனால்தான் கடவுள், ஆண்டவர் இயேசுவை எப்பெயருகும் மேலாக உயர்த்துகிறார். நாமும் இறைவனின் திட்டத்தின்படி வாழ்ந்தோம் என்றால் கடவுள் நம்மை மேலும், மேலும் உயர்த்துவார்.

இயேசுவின் குழந்தைப் பருவத்தில் நடந்த நிகழ்ச்சியாகச் சொல்வர்.

ஒருமுறை இயேசு, பைட்ஸ் என்ற சிறுவனோடு பேசிக்கொண்டிருந்தபோது அவனித்தில், "எதிர்காலத்தில் நீ என்னவாக போகிறாய்?" என்று கேட்டார். அதற்கு பைட்ஸ், "நான் மிகப்பெரிய தச்சராக மாறி, அரசர் அமர்வதற்கான சிம்மாசனம் ஒன்றைச் செய்வேன். அரசர் அதில் அமர்ந்துகொண்டு எல்லா மக்களுக்கும் ஆசி வழங்குவார்" என்றான். இயேசுவும் சரி என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். பைட்ஸ் சில நாட்களுக்குப் பிறகு ஜாப்பா என்ற ஓர் இடத்திற்கு குடிபெயர்ந்தார்.

ஆண்டுகள் பல கழிந்தன. அப்போது இயேசுவை சிலுவையில் அறைய, பிரத்யோகமான சிலுவைமரம் ஒன்று தேவைப்பட்டது. எனவே அப்படிப்பட்ட சிலுவைமரம் செய்வதற்குப் பெயர்போன பைட்ஸ் அங்கே அழைத்துவரப்பட்டான். அவன் இயேசுவுக்குதான் சிலுவை செய்ய வந்திருக்கிறோம் என்று தெரியாமல் செய்தான்.

ஒரு சில நாட்களுக்கு பிறகு உண்மையை அறிந்துகொண்டு இயேசு அறையப்பட்டிருந்த சிலுவையை நோக்கி ஓடினான். அவரைப் பார்த்ததும் "நானே உமக்கு சிலுவை செய்யும்படி ஆகிவிட்டதே" என்று கண்ணீர்விட்டு அழுதான். அப்போது இயேசு அவனிடம், "நீ சிறுவயதில் என்னிடம் என்ன சொன்னாய் என்று யோசித்துப் பார். அரசன் அமர்வதற்காக சிம்மாசனம் செய்வேன், அதிலே அரசர் அமர்ந்துகொண்டு எல்லா மக்களுக்கும் ஆசி வழங்குவார் என்று சொன்னாய். இப்போது அனைத்துலகின் அரசனாகிய நான் இந்த சிலுவை என்ற சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டு எல்லாருக்கும் ஆசி வழங்குகிறேன் பார்" என்று சொன்னார். இதைக் கேட்டு அவன் அமைதி அடைந்தான்.

சிலுவை அவமானச் சின்னமல்ல, அது அரியாசனம்; அது வெற்றியின் சின்னம் என்பதையே இந்நிகழ்வு உணர்த்துகிறது.

நாம் நமக்கு மீட்பைத்தரும் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் அன்பை உணர்ந்து, அவரைப் போன்று இறைவழியில் நடப்போம். இறையாசிரை நிறைவாய்ப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
திருச்சிலுவையின் மகிமை விழா

நிகழ்வு

மிகச்சிறந்த மறைபோதரும் பேராயருமான புல்டன் ஷீன் ஒருமுறை குறிப்பிட்ட வார்த்தைகள்: "நான் பல்வேறு நூல்களை எழுதியிருக்கின்றேன். அவையெல்லாம் ஏதோ ஒரு கேள்விக்கு பதில் சொல்வதாக இருக்கும். ஆனால் நான் எழுதிய இயேசுவின் வாழ்க்கை வரலாறு (Life of Christ) என்ற புத்தகம் சிலுவையின்மீது அறையப்பட்ட இயேசுவின் பேரன்பை, அவர் இந்த மனுக்குலத்தின்மீது கொண்டிருந்த இரக்கத்தை உணர்ந்துகொள்வதாகவே எழுதப்பட்டது. சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த கிறிஸ்துவின் பேரன்பை விளக்கிச் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை".

வரலாற்றுப் பின்னணி

312 ஆம் ஆண்டு, அக்டோபர் 20 ஆம் நாள், உரோமையை ஆண்டுவந்த கொன்ஸ்டன்டின் என்ற மன்னன் மாஜென்சியஸ் என்ற மன்னனோடு போர்தொடுக்கச் சென்றான். அவ்வாறு அவன் எதிரி நாட்டுப் படையோடு போர்தொடுக்கச் செல்லும்போது சிலுவை பொறித்த கொடிகளை ஏந்திச் சென்றான். இதனால் அவன் அந்தப் போரில் வெற்றிபெற்றான். அதன் நிமித்தமாக கிறிஸ்தவ மதத்தை அரசாங்க மதமாக அறிவித்தான்.

இது நடந்து 13 ஆம் ஆண்டுகள் கழித்து, கொன்ஸ்டன்டின் மன்னனின் தாயார் தூய ஹெலனா என்பவர் எருசலேம் நகருக்குப் புனித பயணம் மேற்க்கொண்டார். அவர் கல்வாரி மலைக்குச் சென்று, அகழ்வாராட்சியில் ஈடுபட்டபோது, அங்கே மூன்று சிலுவைகள் இருப்பதைக் கண்டார். இந்த மூன்று சிலுவைகளில் எது இயேசு கிறிஸ்து அறையப்பட்ட சிலுவை என்ற குழப்பம் ஏற்பட்டது. எனவே, அவர் ஒரு கைசூம்பிய மனிதனை அழைத்து, அந்த மூன்று சிலுவைகளையும் தொடுமாறு சொன்னார். உடனே அம்மனிதன் மூன்று சிலுவைகளையும் தொட்டபோது, அதிலிருந்த ஒரு சிலுவையிலிருந்து ஆற்றல் வெளிப்பட அம்மனிதருடைய கை குணமடைந்தது. இதைப் பார்த்த தூய ஹெலனா அந்த திருச்சிலுவையை உரோமை நகருக்குத் தூக்கிகொண்டு வந்து, ஆலயம் ஒன்றைக் கட்டி எழுப்பி, அதில் திருச்சிலுவை வைத்தார். அவர் திருச்சிலுவையை உரோமையில் உள்ள ஆலயத்தில் நிறுவிய நாள் 326 ஆம் ஆண்டு, செப்டம்பர் 14 ஆம் நாள். அன்றிலிருந்து திருச்சிலுவை உயர்த்தப்பட்ட நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அதன்பிறகு 614 ஆம் ஆண்டு, பெர்சிய மன்னன் சொஸ்ரோஸ் (Chosroas) என்பவன் உரோமை நகரின் மீது படையெடுத்துச் சென்று, திருச்சிலுவையை தூக்கிச் சென்றான். இதனைக் கேள்விப்பட்ட ஹெரக்லியுஸ் என்று மன்னன் 628 ஆம் ஆண்டு, பெர்சியா நாட்டின்மீது படையெடுத்துச் சென்று, திருச்சிலுவையை மீட்டுக்கொண்டு வந்தான். திருச்சிலுவையை மீட்டுக்கொண்டு வரும்போது அதனை ஆடம்பரமாக அலங்கரித்து, தூக்கிப்பார்த்தான். அவனால் ஒரு அடிகூட நகர்த்த முடியவில்லை. அப்போது அங்கிருந்த ஆயர், "இயேசு சுமந்து வந்த சிலுவை எளிமையின் அடையாளம், அதனை நீ ஆடம்பரமாக தூக்கிப் பார்த்தால் எப்படி நகரும்" என்று சொன்னார். இதைக் கேட்ட அரசன், தாழ்ச்சியோடு திருச்சிலுவையை தூக்கினான். இப்போது திருச்சிலுவை எளிதாக நகர்ந்தது. பின்னர் அவன் திருச்சிலுவையை உரோமை நகரில் உள்ள ஆலயத்தில் போய் நிறுவினான்.

இப்படியாக திருச்சிலுவைக்கு வணக்கம் செலுத்தும் வழக்கம் திருச்சபை முழுவதும் படிப்படியாக வளர்ந்தது. 1970 ஆம் ஆண்டு வரை இவ்விழா திருச்சிலுவை உயர்த்தப்பட்ட நாள் என்றே கொண்டாடப்பட்டு வந்தது. 1970 ஆம் ஆண்டுக்குப் பிறகு இவ்விழா திருச்சிலுவையின் மகிமை விழா என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அவமானத்திற்கு உரிய சிலுவைமரணம் அல்லது சிலுவைச்சாவு என்பது நாட்டைக் காட்டிக்கொடுத்தவர்களுக்கும் துரோகிகளுக்கும் தான் கொடுக்கப்பட்டது. இப்படிப்பட்ட கொடிய தண்டனைமுறை தொடக்கத்தில் பொனிசியர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. அதன்பிறகுதான் உரோமையர்கள் அவர்களிடமிருந்து இப்படிப்பட்ட தண்டனைமுறையை எடுத்துக்கொண்டு, தங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களுக்குக் கொடுத்தார்கள். இயேசு ஒரு பாவமும் அறியாதவர்; ஒரு குற்றமும் செய்யாதவர். அப்படிப்பட்டவருக்கு சிலுவைச் சாவு தண்டனையாகக் கொடுக்கப்பட்டது. ஆனாலும் அவர், அவமானமாகக் கருத்தப்பட்ட சிலுவையை, தன்னுடைய மரணத்தினால் வெற்றியின் சின்னமாக மாற்றுகின்றார். ஆகவே, சிலுவை என்பது அவமானத்தின் சின்னம் கிடையாது. மாறாக, அது வெற்றியின் சின்னம் என்பதை இயேசு தன்னுடைய மரணத்தினால் நிரூபிக்கின்றார்.

எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன்பாக சிலுவை அடையாளம் போட்டு, தொடங்குகின்ற நாம், அதற்கு எவ்வளவு மதிப்பிருக்கின்றது, அதற்கு நாம் எப்படி மரியாதை செலுத்தவேண்டும் என்பதை சிந்தித்து பார்ப்போம்.

திருச்சிலுவை கற்றுத்தரும் பாடம்

திருச்சிலுவையின் மகிமை விழாவைக் கொண்டாடும் நாம், இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. திருச்சிலுவை: இயேசு இந்த மனுக்குலத்தின்மீது கொண்ட அன்பின் வெளிப்பாடு

தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் கூறுவார், "நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால், நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக்காட்டியுள்ளார் (உரோ 5: 7-8). ஆம், நாம் பாவிகளாக இருந்தும் கிறிஸ்து நமக்காக உயிர்கொடுக்கிறார் என்றால், அது உண்மையிலே கடவுள்/ இயேசு கிறிஸ்து நம்மீது கொண்ட அன்பை வெளிக்காட்டுவதாகவே இருக்கின்றது.
ஆகையால் ஒவ்வொருமுறையும் நாம் சிலுவையை உற்றுப் பார்க்கின்றபோது கடவுள் / நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மீது கொண்ட அளவு கடந்த அன்பினை ஆழமாக உணர்ந்துகொள்ளவேண்டும்.

2. திருச்சிலுவை: நன்மைகளின் ஊற்று

திருத்தந்தை பெரிய சிங்கராயர், "திருச்சிலுவை நன்மைகளின் ஊற்று" என்று குறிப்பிடுகின்றார். அது முற்றிலும் உண்மை. எப்படியென்றால் நம்முடைய கிறிஸ்தவ வாழ்விற்கான எல்லா நலன்களையும் திருச்சிலுவையிடமிருந்து பெறுகின்றோம்.

ஒருசமயம் புண்ணிய வாழ்வு வாழ்ந்து வந்த குருவானவர் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் அவர் நடுத்தீர்ப்புக்காக கடவுளின் அரியணை முன்பாக நிறுத்தப்பட்டார். ஒருபக்கம் சாத்தான் நின்றுகொண்டு அவர் மண்ணுலகத்தில் வாழ்ந்தபோது செய்த தவறுகளாக ஒவ்வொன்றாக பட்டியலிட்டது. எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த குருவானார், "எல்லாவற்றையும் சொல்லிவிட்டாய். ஆனால் இன்னும் ஒன்றே ஒன்று மட்டும் விட்டுவிட்டாய்" என்றார். "அது என்ன?" என்று கேட்டது சாத்தான். அதற்கு குருவானார், "இயேசு சிலுவையில் சிந்திய தன்னுடைய விலை மதிக்கப்பெறாத இரத்தத்தினால் என்னுடைய பாவம் முழுவதையும் முற்றிலுமாக கழுவிப்போக்கி விட்டார்" என்றார். இதைக் கேட்ட சாத்தான் எதுவும் பேசாது அமைதியானது. ஆம், இயேசு சிலுவையில் சிந்திய இரத்தத்தினால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் முற்றிலுமாகக் கழுவிப் போக்கிவிட்டார். இப்போது நாம் மாசற்றவர்களாக இருக்கின்றோம்.

ஆகையால் நாம் பாவத்திலிருந்து விடுதலை பெற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல், நன்மைகளை அதிகதிகமாக பெற்றுக்கொள்கின்றோம் எனப் புரிந்த்கொள்ளவேண்டும்.

3. திருச்சிலுவை: அவமானத்தின் சின்னமல்ல, வெற்றியின் சின்னம்

தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் கூறுவார், "யூதர்கள் அரும் அடையாளங்கள் வேண்டும் என்று கேட்கின்றார்கள்; கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள். ஆனால், நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பறைசாற்றுகின்றோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாகவும் இருக்கின்றது. ஆனால், அழைக்கப்பட்டவர்கள், யூதரானாலும் கிரேக்கரானாலும், அவர்களுக்கு கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கின்றார்" ( 1 கொரி1: 22-24). சிலுவை நமக்கு மீட்பின் சின்னமாக, வெற்றியின் சின்னமாக விளங்குகின்றது என்பதையே பவுலின் வார்த்தைகளிலிருந்து நாம் படித்து அறிகின்றோம்.

கிறிஸ்தவர்களாகிய நாம் சிலுவையை எத்தகைய கண்ணோட்டத்தோடு பார்க்கின்றோம் என சிந்தித்துப் பார்க்கவேண்டும். சிலுவையை துன்பமாகப் பார்க்கின்றோமா? அல்லது துன்பங்களையும் தாங்கிக்கொண்டு மீட்பைப் பெற்றுத்தந்த இயேசுவின் சிலுவையை வெற்றியின் சின்னமாகப் பார்கின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

"திருச்சிலுவை மரமிதோ, இதிலேதான் தொங்கியது உலகத்தின் இரட்சணியம்" என்று புனித வெள்ளியன்று குருவானவர் திருச்சிலுவையை கையில் ஏந்தி பாடுவதைக் கேட்டிருப்போம். சிலுவையினாலே நமக்கு மீட்பு வந்தது, சிலுவையினாலேயே நமக்கு சிம்மாசனம் வந்தது என்பது அவ்வார்த்தைகள் கற்றுத்தரும் பாடம்.

ஆகவே, திருச்சிலுவை மகிமை விழாவைக் கொண்டாடும் இன்று, நாம் திருச்சிலுவைக்கு தகுந்த மரியாதை செலுத்துவோம். இயேசுவைப் போன்று நம்முடைய வாழ்வில் வரும் சிலுவைகளைத் துணிவோடு ஏற்றுக்கொள்வோம். இயேசுவின் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

திருச்சிலுவையின் மகிமை விழா

இன்று திருச்சிலுவையின் மகிமை பெருவிழாவை கொண்டாடுகிறோம்.

இன்று நாம் அருவருப்பான ஒன்றைப் பார்த்தால் 'ஹாரிப்ல்' என்கிறோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் உரோமையர்கள் 'எக்ஸ் க்ருசே' ('சிலுவையிலிருந்து') என்பார்கள். மனிதர்கள் பார்வையில் அருவருப்பான ஒன்றை இன்று நாம் மகிமையின் சின்னமாகக் கொண்டாடுகிறோம்.

சிலுவை நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று. எங்கு பார்த்தாலும் சிலுவை நம் கண்முன் நிற்கிறது.

கணிதத்தில் க்ராஸ் என்பது கூட்டல் அல்லது பெருக்கல்.

அல்ஜிப்ராவில் க்ராஸ் என்பது வெறுமை.

டிராஃபிக்கில் க்ராஸ் என்றால் ஆம்புலன்ஸ்.

பேட்டரியிலும், இரத்த வகையிலும் க்ராஸ் என்பது பாஸிட்டிவ்.

அடையாளங்களில் க்ராஸ் என்றால் 'தடை செய்யப்பட்டது'

ஏ பி சி டி இயில் க்ராஸ் என்றால் எக்ஸ்

சாலைகளில் க்ராஸ் என்றால் சந்திப்பு

உரோமை எழுத்தில் க்ராஸ் என்றால் பத்து

விடைத்தாளில் க்ராஸ் என்றால் தவறு

ஏடிஎம் பின்னை பதிவு செய்யும் போது க்ராஸ் என்றால் சீக்ரெட்

இப்படி திரும்பும் எல்லாப் பக்கமும் தெரியும் க்ராஸ் நமக்குச் சொல்வது என்ன?

'சிலுவை' என்றால் என்னைப் பொறுத்தவரையில் 'வாழ்வின் அடுத்த பக்கம்.'

இளமையிலிருந்து பார்க்கும் அதன் அடுத்த பக்கம் முதுமை சிலுவை.

பிறப்பின் சிலுவை இறப்பு.

விருப்பின் சிலுவை வெறுப்பு.

உடல்நலத்தின் சிலுவை நோய்.

நாம் ஒன்றை எடுக்கும்போதே அதன் அடுத்த பக்கமும் வருகிறதே. அந்த அடுத்த பக்கம்தான் சிலுவை. ஒரு புத்தகத்தின் முதல் பக்கத்தை திறக்கும் நாம் அதன் கடைசி பக்கத்தில் அதை மூடித்தான் வைக்க வேண்டும். திரைப்படத்தின் தொடக்கத்தைப் பார்க்கும் நாம் அதன் முடிவையும் வாசிக்க வேண்டும். ஒன்றைத் தொடங்கும்போது அதன் முடிவும் நம் முன் வந்துவிடுகிறது. அந்த அடுத்த பக்கம்தான் சிலுவை.

சிலுவை என்றால் நம் நொறுங்குநிலை.

சிலுவை என்றால் நம் உறுதியில்லாத நிலை.

சிலுவை என்றால் நம் உடையும்நிலை.

சிலுவையை நோக்கிய நம் பார்வையை மூன்று நிலைகளில் விவிலியம் பதிவு செய்கிறது:

அ. 'இந்தச் சிலுவை உமக்கு வேண்டாம்' என இயேசுவிடம் சொல்கிறார் பேதுரு.

சில நேரங்களில் நாமும் சிலுவை வேண்டாம் என நினைக்கிறோம். ஆனால் இது எதார்த்தம் அல்ல.

ஆ. 'இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கும்' என்கின்றனர் வழிப்போக்கர்கள்.

இந்நிலையில் நாம் சிலுவையிலிருந்து பாதியிலிருந்து ஓடிவிட நினைக்கிறோம்.

இ. 'நீர் அரசுரிமை பெற்று வரும்போது என்னை நினைவுகூறும்' என்கிறார் நல்ல கள்வன்.

இவர்தான் சிலுவையை சரியாகப் புரிந்தவர். சிலுவையை அரியணையாகவும், இயேசுவை அரசராகவும், அவரின் முள்முடியை அரச கிரீடமாகவும், கையின் ஆணிகளை ஆயுதங்களாகவும் பார்க்க இவரால் மட்டுமே முடிந்தது.

ஆக, சிலுவையின் மறுபக்கத்தையே பார்க்க வைத்தவர் இவரே.

வாழ்வின் மறுபக்கம்தான் சிலுவை.


- Rev. Fr. Yesu Karunanidhi

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!