Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                     02 ஜூன் 2018  
                                     ஆண்டவரின் விண்ணேற்றம்  - 3ம் ஆண்டு
     
=================================================================================
முதல் வாசகம்

=================================================================================
எங்கள் கண்கள் முன்பாக, இயேசு மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 1: 1-11

தெயோபில் அவர்களே, இயேசு தாம் தெரிந்துகொண்ட திருத்தூதர்களுக்கு அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்ய வேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார். விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் செய்தவை, கற்பித்தவை யாவற்றையும் குறித்து எனது முதலாம் நூலில் நான் எழுதினேன்.

இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப்பற்றிக் கற்பித்தார்; பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடிருப்பதைக் காண்பித்தார். அவர்களோடு சேர்ந்து உண்ணும்போது அவர்களிடம், "நீங்கள் எருசலேமை விட்டு நீங்க வேண்டாம். என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள். யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாள்களில் தூய ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள்" என்று கூறினார்.

பின்பு அங்கே கூடியிருந்தவர்கள் அவரிடம், "ஆண்டவரே, இஸ்ரயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத் தரும் காலம் இதுதானோ?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்துவைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல; ஆனால் தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்" என்றார்.

இவற்றைச் சொன்னபின்பு, அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது. அவர் செல்லும்போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருந்தார்கள்.

அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி, "கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றம் அடைந்ததைக் கண்டீர்கள் அல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்" என்றனர்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா: 47: 1-2. 5-6. 7-8 (பல்லவி: 5b)
=================================================================================
 பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். அல்லது: அல்லேலூயா. _

1 மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். 2 ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. பல்லவி

5 ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். 6 பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். பல்லவி

7 ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். 8 கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். பல்லவி

இரண்டாம் வாசகமும் நற்செய்தி வாசகமும் 3 ஆண்டு கால சூழற்சி முறையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கொண்டாடப்படும் ஆண்டிற்கு ஏற்ப, அவற்றைத் தேர்ந்துகொள்க.

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
 கிறிஸ்து விண்ணுலகிற்குள்ளேயே நுழைந்திருக்கிறார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 9: 24-28; 10: 19-23

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து மனிதரின் கையால் அமைக்கப்பட்டதும் உண்மையான தூயகத்திற்கு முன்னடையாளமாய் இருப்பதுமான இவ்வுலகத் தூயகத்திற்குள் நுழையாமல் விண்ணுலகிற்குள்ளேயே நுழைந்திருக்கிறார். அங்கே இப்போது நம் சார்பாகக் கடவுளின் திருமுன் நிற்கிறார். தலைமைக் குரு விலங்குகளின் இரத்தத்துடன் ஆண்டுதோறும் தூயகத்திற்குள் செல்வார்.

அதற்கு மாறாக, கிறிஸ்து தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுத்தார். அதை மீண்டும் மீண்டும் செய்யவில்லை. அவ்வாறு செய்திருப்பாரென்றால், உலகம் தோன்றிய காலந்தொட்டு, அவர் மீண்டும் மீண்டும் துன்புற்றிருக்கவேண்டும். அதற்கு மாறாக, உலகம் முடியும் காலமான இப்போது தம்மையே பலியாகக் கொடுத்து, பாவங்களைப் போக்குவதற்காக ஒரே முறை உலகில் வெளிப்படுத்தப் பட்டார். மனிதர் ஒரே முறை சாவுக்கு உட்படுகின்றனர்.

பின்னர் இறுதித் தீர்ப்பு வருகிறது. இதுவே அவர்களுக்கென உள்ள நியதி. அவ்வாறே, கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும்பொருட்டு ஒரே முறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒரு முறை தோன்றுவார். ஆனால், பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும்பொருட்டே தோன்றுவார். சகோதரர் சகோதரிகளே, இயேசுவின் உடலைக் கோவிலின் திரைச் சீலைக்கு ஒப்பிடலாம். இத்திரைச்சீலை வழியாகத் திருத்தூயகத்திற்குள் நுழைய நமக்குத் துணிவு உண்டு.

ஏனெனில் அவர் இரத்தம் சிந்தி நமக்கெனப் புதியதொரு வழியைத் திறந்து வைத்துள்ளார். இதுவே வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் வழி. மேலும் கடவுளுடைய இல்லத்தின்மீது அதிகாரம் பெற்ற பெரிய குரு ஒருவர் நமக்கு உண்டு. ஆதலால், தீய மனச்சான்றிலிருந்து விடுவிக்கப்பட்ட உள்ளமும் தூய நீரில் கழுவப்பட்ட உடலும் உடையவர்களாய், நேரிய உள்ளத்தோடும் மிகு உறுதியான நம்பிக்கையோடும் அவரை அணுகிச் செல்வோமாக. நமக்கு வாக்களித்தவர் நம்பிக்கைக்கு உரியவர்.


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 28: 19.20

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இயேசு சீடர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார்.

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 46-53

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களிடம், "மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், பாவ மன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்' என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்.

இதோ, என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் அவ்வல்லமையால் ஆட்கொள்ளப்படும் வரை இந்நகரத்திலேயே இருங்கள்" என்றார்.

பின்பு இயேசு பெத்தானியாவரை அவர்களை அழைத்துச் சென்று தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார். அவர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர் அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார். அவர்கள் அவரை வணங்கிவிட்டுப் பெருமகிழ்ச்சியோடு எருசலேம் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் கோவிலில் எப்போதும் கடவுளைப் போற்றியவாறு இருந்தார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.


சிந்தனை

இயேசு தம் காட்சிகள், உடனிருப்பு, அன்பு வார்த்தைகள் மற்றும் செயல்பாடுகள் வழியாக சீடர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தியப் பின் விண்ணகமே தன் தாய்நாடு என்று விண்ணக வீட்டை அடைகின்றார். புரியாத புதிராக மறைபொருளான இந்நிகழ்வு உத்வேகத்தையும். புதுத்தெம்பையும் சீடர்களுக:கு அளித்தது. உடலளவில் இயேசு அவர்களோடு இல்லையென்றாலும் அவருடைய ஆவியின் வல்லமை அவர்களோடு இருப்பதை சீடர்கள் முழுமையாக உணர்ந்தனர். உலகின் கடைசி எல்லை வரைக்கும் அவரைப் பற்றி அறிவிக்க ஆவல் கொண்டு பெருமகிழ்ச்சியுடன் செயல்பட்டனர். இறைவனின் சந்நிதி மனதிற்கு நிம்மதி என்று உணர்ந்து அவரின் சாட்சிகளாய் வாழ்வோம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 இயேசுவின் விண்ணேற்றம்

(திருத்தூதர் பணிகள் 1: 1-11; எபிரேயர் 9: 24-28; 10: 19-23; லூக்கா 24: 46- 53)

நீங்கள் சாட்சிகள்!

நிகழ்வு

ஒரு கிராமத்தில் எல்லார்க்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த கிறிஸ்தவர் ஒருவர் இருந்தார். அவர் இறைவனிடம் வேண்டும்போதெல்லாம், 'இறைவா! நீர் என்னை சாட்சியாக விளங்கவேண்டும் என்று சொல்கிறீர். நான் யார்க்கு சாட்சியாக விளங்கவேண்டும் என்பதை ஓர் அடையாளத்தின் வழியாக எனக்கு வெளிப்படுத்தும்' என்று வேண்டிவந்தார்.

ஒருநாள் அவர் வேலை விடயமாக தன்னுடைய ஊரிலிருந்து பத்துக்கிலோமீட்டர் தொலைவில் இருந்த நகர்க்குச் செல்லவேண்டி வந்தது. எனவே அவர் ஒரு பேருந்து ஏறி சன்னலோரமாய் இருந்த இருக்கையில் அமர்ந்தார். பேருந்து ஒரு நிறுத்தத்தில் நிற்கவே, ஒரு கனமான ஆள் பேருந்தில் ஏறி, அந்தக் கிறிஸ்தவரின் பக்கத்தில் வந்து அமர்ந்தார். இதைப் பார்த்த கிறிஸ்தவர்க்குக் கோபம் கோபமாய் வந்தது. 'என்ன ஆள் இவர்! பேருந்தில்தான் அவ்வளவு இருக்கைகள் காலியாக இருக்கின்றன! அப்படியிருக்கும்போது இவர் இப்படி நம்மை இடித்துக்கொண்டு அமர்ந்திருக்கின்றாரே. அடுத்த நிறுத்தத்தில் பேருந்து நிற்கும்போது வேறோர் இருக்கைக்கு மாறிக்கொள்ளவேண்டும்' என்று தன்னுடைய மனத்திற்குள் சொல்லிக்கொண்டார்.

பேருந்து வேகம் எடுக்கத் தொடங்கியது. அப்பொழுது அந்தக் கிறிஸ்தவரின் அருகில், அவரை நெருக்கிக் ண்டு அமர்ந்திருந்த அந்தக் கனமான மனிதர், கிறிஸ்தவரிடம் தேம்பித் தேம்பி அழுதவாறே, "ஐயா! நான் ஒரு மிகப்பெரிய பாவி... அப்படிப்பட்ட நான் மீட்புப் பெறவேண்டும்... அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டார். அந்த மனிதர் அழுதுகொண்டே இவ்வாறு சொன்னதைக் கேட்ட கிறிஸ்தவர், 'ஒருவேளை இந்த மனிதர்தான் நான் சாட்சியாக இருந்து, இயேசுவைப் பற்றி அறிவிக்கவேண்டிய மனிதரோ' என்று யோசிக்கத் தொடங்கினார். பின்னர் அவர் ஆண்டவரிடம் தான் எழுப்பிய கேள்விக்கான பதில் கிடைத்துவிட்ட நம்பிக்கையில், அம்மனிதர்க்கு இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து, அவரை இயேசுவின் நம்பிக்கை கொள்ள வைத்து, அவர் புதியதொரு வாழ்க்கை வாழ வழிவகுத்தார்.

இயேசுவி வழியில் நடக்கின்ற நாம் ஒவ்வொருவரும் அவரைப் பற்றிய நற்செய்தியை எல்லார்க்கும் அறிவித்து, சாட்சிகளாகத் திகழவேண்டும் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவும் நமக்கு இத்தகைய செய்தியைத்தான் எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

சாட்சிகளாகத் திகழ அழைக்கும் இயேசு

உயிர்த்த ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களோடு நாற்பது நாட்கள் இருந்து, பலவிதங்களில் தேற்றியபின்பு, அவர்களுக்கு முன்பாக விண்ணேற்றம் அடைகின்றார். அவர் விண்ணேற்றம் அடைவதற்கு முன்னம், தன் சீடர்கட்க்குக் கொடுக்கும் கட்டளைத்தான், நீங்கள் என்னுடைய சாட்சிகளாக இருந்து, உலகமெங்கும் சென்று நற்செய்தி அறிவிக்கவேண்டும் என்பதாகும். சாட்சியாக இருப்பது என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்வோம். அதன்பிறகு திருத்தூதர்கள் எப்படி சாட்சிகளாகத் திகழ்ந்தார்கள் என்று தெரிந்துகொள்வோம். சாட்சியாக இருப்பது என்னவென்றால்,இயேசுவைப் பற்றிக் கண்டதையும் கேட்டதையும் மக்களுக்கு அறிவிப்பது. தலைமைச் சங்கத்தார் திருத்தூதர்களான பேதுரு மற்றும் யோவானிடம், இயேசுவைப் பேசவோ கற்பிக்கவோ கூடாது என்று சொன்னபோது, அவர்கள், "நாங்கள் கண்டதையும் கேட்டதையும் பற்றி எங்களால் அறிவிக்காமல் இருக்கமுடியாது" என்பார்கள் (திப 4:20) இதுதான் சாட்சியாக இருப்பதாகும்.

சாட்சியாக இருப்பது என்ன என்று அறிந்து நாம், இயேசுவின் சீடர்கள் எப்படி சாட்சிகளாக இருந்தார்கள்? நாம் எப்படி சாட்சிகளாக இருப்பது? என்று அறிந்துகொள்வோம். இயேசு தன்னுடைய சீடர்களிடம் 'நீங்கள் சாட்சிகள்' என்று என்று சொல்லிவிட்டு, அவர்களை அப்படியே விட்டுவிடவில்லை. மாறாக, தந்தை வாக்களித்த வல்லமையை அவர்கட்க்கு அனுப்புவதாகச் சொல்கின்றார். சொன்னதோடு மட்டுமல்லாமல், பெந்தக்கோஸ்து நாளில் தூய ஆவியாரை அவர்களிடம் அனுப்பி, அவர்களை வல்லமை நிறைந்தவர்களாக மாற்றுகின்றார். தூய ஆவியாரைப் பெற்றுக்கொண்ட அவர்கள் மிகுந்த வல்லமையோடு (திப 4:33) இயேசுவுக்குச் சான்று பகர்கின்றார்கள். திருமுழுக்கின்போது தூய ஆவியாரைப் பெற்றுக்கொண்ட நாமும் ஆண்டவரை இயேசுவைப் பற்றி மிகுந்த வல்லமையோடு சான்றுபகர்வது தேவையான ஒன்று என்பதை மறந்துவிடக்கூடாது.

தந்தையின் வலப்பக்கம் அமரும் இயேசு

இயேசுவின் விண்ணேற்றம், அவருடைய வழியில் நடக்கின்ற ஒவ்வொருவரையும் சாட்சியாகத் திகழவேண்டும் என்று சொல்லும் அதே வேளையில், அவர் தந்தையின் வலப்பக்கம் அமர்ந்து (உரோ 8:34) நமக்காகப் பரிந்துபேசுகின்றார் (எபி 7:25) என்ற செய்தியையும் மிக அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொல்கின்றது. மேலும் தந்தையின் வலப்பக்கம் அமரும் இயேசு, நமக்காகப் பரிந்துபேசுவதோடு மட்டுமல்லாமல், ஒரு தலைமைக் குருவைப் போன்று சோதனைகளை வெல்வதற்கான அருளையும் (எபி 4: 14-16) இரக்கமிக்க இறைவனைப் போன்று யார் யாரெல்லாம் தங்களுடைய பாவங்களை ஒப்புக்கொண்டு அறிக்கையிடுகின்றார்களோ, அவர்களை மன்னிக்கின்றவராகவும் (1 யோவா 1: 6-10) இருக்கின்றார். ஆகையால், இத்தகைய நன்மைகளை நமக்கு வழங்கும் இயேசுவின் விண்ணேற்றம், அவர்மீது நம்பிக்கை கொண்டு வாழும் ஒவ்வொருவர்க்கும் மிகப்பெரிய கொடையென்று சொன்னால் அது மிகையாகாது.

தன்னை வணங்குவோர்க்கு ஆசி வழங்கும் இயேசு

நாம் ஒவ்வொருவரும் இயேசுவுக்குச் சாட்சிகளாகத் திகழவேண்டும், விண்ணேற்றமடைந்த இயேசு தந்தையின் வலப்பக்கம் அமர்ந்து நமக்கு ஏராளமான ஆசியை வழங்குகிறார் என்று எடுத்துச் சொல்லும் இன்றைய இறைவார்த்தை, இன்னொரு முக்கியமான செய்தியையும் எடுத்துச் சொல்கின்றது. அது என்னவெனில், இயேசுவிடமிருந்து ஆசியைப் பெறவேண்டும் என்றால், அவரை வணங்கவேண்டும் என்பதாகும்.

நற்செய்தியில் இயேசு தன்னுடைய திருத்தூதர்களைப் பெத்தானியியா வரை அழைத்துச் சென்று தம் கைகளை உயர்த்தி ஆசி வணங்கினார்... சீடர்களை அவரை வணங்கிவிட்டு மகிழ்வோடு எருசலேம் திரும்பிச் சென்றார்கள் என்று வாசிக்கின்றோம். இதை வேறு விதமாகச் சொல்லவேண்டும் என்றால், திருத்தூதர்கள் இயேசுவை வணங்கினார்கள், அதனால் அவர்கட்க்கு ஆசி வழங்கினார் என்று சொல்லலாம். அப்படியென்றால், இயேசுவிடமிருந்து ஆசியைப் பெறுவதற்கு அவரை வணங்குதற்கு மிகவும் தேவையான ஒன்றாக இருக்கின்றது. இங்கே சொல்லப்படுகின்ற 'வணங்கு' என்ற வார்த்தையை ஒரு சடங்காக மட்டும் பார்க்காமல், அதை ஒரு வாழ்வியலாகப் பார்த்து, நம்முடைய நற்செயல்களின் மூலமும் நம்பிக்கையின் மூலமும் வணங்கினால் இயேசுவிடமிருந்து நிச்சயம் ஆசியைப் பெறுவோம் என்பது உறுதி.

சிந்தனை

'நம்பிக்கையில் இரு வகை உண்டு. சடங்குமுறைகளை அப்படியே கடைப்பிடிப்பது ஒரு வகை. சடங்குமுறைகளையும் கடந்து, சமயத்தின் பேருண்மைகளை வாழ்ந்து காட்டுவது இன்னொரு வகை' என்பார் அலெக்ஸ்சாண்டர் மெக்கல் ஸ்மித் என்ற அறிஞர். நாம் இயேசுவின் போதனைகளை கடமைக்குக் கேட்டுவிட்டு அப்படியே நின்றுவிடாமல், அவற்றைக் கடைப்பிடித்து உயிர்த்த இயேசுவுக்குச் சாட்சிகளாகத் திகழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா
=================================================================================
 மறைதலே இறைமை


திருத்தூதர் பணிகள் 1:1-11
எபிரேயர் 9:24-28, 10:19-23
 லூக்கா 24:46-53

'ஆண்டவராகிய இயேசு, மகிமையின் மன்னர்,
பாவத்தையும் இறப்பையும் தோற்கடித்த வெற்றி வீரர்,
வானதூதர் வியப்புற வானங்களின் உச்சிக்கு ஏறிச் சென்றார்.
இவ்வாறு அவர் சென்றது
எங்கள் தாழ்நிலையை விட்டு அகல வேண்டும் என்பதற்காக அன்று.
மாறாக, எங்கள் தலைவரும் முதல்வருமாகிய அவர்
முன்னரே சென்ற அவ்விடத்திற்கு
அவர் உறுப்பினர்களாகிய நாங்களும்
அவரைப் பின் தொடர்ந்து செல்வோம் என்று
நம்பிக்கை கொள்வதற்காகவே'

இன்றைய திருப்பலியின் தொடக்கவுரையில் நாம் காணும் தூய அகுஸ்தினாரின் இவ்வார்த்தைகள் இன்றைய நாளின் பொருளை மிக நேர்த்தியாக நமக்கு எடுத்துரைக்கின்றன.

'இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து...' (9:51) என லூக்கா இயேசுவின் பயணத்தை முன்கூட்டியே தொடங்கி வைக்கிறார். இயேசுவின் வாழ்வில் நிறைவு அவரின் விண்ணேற்றம். லூக்காவின் இந்தப் புரிதலுக்கு மூன்று பின்புலங்கள் இருந்தன:

பின்புலம் 1: இருதுருவ சிந்தனை

ஒளி-இருள், பகல்-இரவு, நன்மை-தீமை என இருதுருவ சிந்தனைக்குப் பழக்கப்பட்டது மனித மனம். இந்த இருதுருவ சிந்தனையின் படி, இறங்கி வரும் யாரும் ஏறிச் செல்ல வேண்டும். ஆக, இறங்குதல்-ஏறுதல் அவசியம். இயேசு, கடவுளின் மகன், பிறந்து, இறங்கி வந்தார் என்றால், அவர் இறந்து, ஏறிச் செல்ல வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை வட்டம் முழுமை அடையும்.

பின்புலம் 2: அடுக்கு உலக சிந்தனை

கிரேக்க சிந்தனையாளர் பிளேட்டோ தொடங்கி காலங்காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது 'அடுக்கு உலகம்.' அது என்ன அடுக்கு உலகம்? இந்த உலகத்தில் மூன்று அடுக்குகள் உள்ளன. மேல் அடுக்கு வானம், நடு அடுக்கு பூமி, கீழ் அடுக்கு பாதாளம். கடவுளர்கள், குட்டிக் கடவுளர்கள், தூதர்கள் ஆகியோரின் உறைவிடம் மேல் அடுக்கு. தீயவர்கள், கொடியவர்கள், தீமை இவர்களின் உறைவிடம் கீழ் அடுக்கு. இந்த இரண்டிற்கு நடுவில் உள்ள அடுக்கில் இருப்பவர்கள் இரண்டு பண்புகளையும் தங்களுக்குள் கொண்டிருப்பவர்கள். ஆனால் இந்த அடுக்கு ஒரு நிழல் அடுக்கு. இங்கு காணும் எல்லாம் மேல் மற்றும் கீழ் அடுக்குகளின் ஜெராக்ஸ் பிரதிகள். மேல் அடுக்கிலிருந்து நடு அடுக்கிற்கு வந்த இயேசு, தன் இறப்பால் கீழ் அடுக்கையும் சந்தித்துவிட்டு, மீண்டும் மேல் அடுக்கிற்கு ஏறிச் செல்கின்றார். நடு அல்லது கீழ் அடுக்கு அவரைத் தன்னகத்தே வைத்துக்கொள்ள இயலாது. ஏனெனில் அவர் மேலடுக்கைச் சார்ந்தவர்.

பின்புலம் 3: மறைதல்-நிறைதல் சிந்தனை

லூக்கா ஒரு மருத்துவர். மருத்துவத்தின் முக்கியமான கூறு 'மறைதல்-நிறைதல்.' புரியலையா? நமக்கு வரும் நோய்களுக்கு காரணம் என்ன? 'இருக்க வேண்டிய ஒன்று மறைந்தால்' (எ.கா. இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல்) 'இருக்கக் கூடாத ஒன்று நிறைந்தால்' (எ.கா. இரத்தத்தில் சர்க்கரை நிறைதல்) அது நோய். மருத்துவரின் பணி என்ன? 'குறையை நிறைவு செய்வது,' 'நிறைதலை கரைத்துக் குறைப்பது.' அதிகம் மறைந்தாலும் ஆபத்து. அதிகம் நிறைந்தாலும் ஆபத்து. இயேசு மறைய வேண்டும். சீடர்கள் நிறைய வேண்டும். ஆனால், இயேசுவும் முழுமையாக மறைந்துவிடக் கூடாது. சீடர்களும் முழுமையாக நிறைந்துவிடக் கூடாது. இந்த இரண்டையும் சமன்படுத்த லூக்கா கையில் எடுக்கும் இறையியல்கூறுதான் விண்ணேற்றம். ஒரு சின்ன அறையில் லேன் நெட்வொர்க் கனெக்ஷன் வழியாக இயேசுவை சீடர்களோடு இணைத்து வைத்திருந்த லூக்கா, அவரை அப்படியே தூக்கி உயரமான ஒரு வைஃபை ரவுட்டராக மாற்றிவிடுகின்றார். இப்போது இயேசுவோடு யாரும் தங்களை இணைத்துக் கொள்ள முடியும். தேவையானதெல்லாம் 'நம்பிக்கை' என்ற ஐந்தெழுத்து பாஸ்கோட் மட்டுமே.

இந்த மூன்றும் விண்ணேற்றம் என்பதைப் புரிந்து கொள்ள நமக்குப் பின்புலமாக இருந்தாலும், விண்ணேற்றத்தை ஏற்றுக்கொள்ளவும், நம்பவும், புரிந்து கொள்ளவும் மூன்று கூறுகள் தடைகளாக நிற்கின்றன:

தடை 1: இயேசுவின் உடல்

மனித உடல் அல்லது உரு ஏற்றதால் இயேசு பிறந்தார். வளர்ந்தார். சாப்பிட்டார். காணாமல் போனார். கிடைத்தார். நடந்தார். பேசினார். சிரித்தார். அழுதார். இறந்தார். உயிர்த்தும் விட்டார். உயிர்த்தவர் வெறும் ஆவியாக வராமல் உடலோடு வந்தார். சீடர்களுக்குத் தோன்றினார். தன் உடலைத் தொட்டுப் பார்க்கச் சொன்னார். சாப்பிட்டார். வழிநடந்தார். அப்பம் பிட்டார். இதுவரைக்கும் சரி. ஆனால், விண்ணேற்றம் அடையும்போது அவர் உடலோடு மேலே சென்றாரா? ஆம் என்று சொல்கிறது எருசலேம் விண்ணேற்ற ஆலயம். அங்கே இயேசுவின் இரண்டு அகன்ற பாதத்தடங்கள் இருக்கின்றன. ஒரு ராக்கெட் மேலெழும்பி செல்வதுபோல, புவிஈர்ப்பு விசையை வென்று, புவிஈர்ப்பு மண்டலத்தைக் கடந்து அவர் மேலே சென்றிருக்க வேண்டும். சரி போய்விட்டார். ஆனால், மனித உடலை வைத்து அவர் அங்கே என்ன செய்வார்? தந்தைக்கு உடல் இல்லை. தூய ஆவியானவருக்கு உடல் இல்லை. இவருக்கு மட்டும் உடல் இருக்குமா? இன்னும் அந்த உடலில் காயங்கள் இருக்குமா? (இருக்க வேண்டும் - ஏனெனில் மாறாதவராக இருந்தால்தானே அவர் கடவுள்!) உடல் என்று ஒன்று இருந்தால் உடை என்ற ஒன்றும் இருக்க வேண்டும். உடை இல்லாத மனித உடலை அதுவும் கடவுள்-மனிதனின் உடலை நாம் நினைத்துப் பார்க்கவும் முடியுமா? மாற்று உடைக்கு இயேசு என்ன செய்வார்? அல்லது பாதி வழி சென்ற இயேசுவின் உடல் மறைந்து ஆவியாக மாறிவிட்டதா? மனித உடலோடு இயேசு சென்றார் என்று நாம் சொல்வதே, மற்ற விலங்குகள், பறவைகள், தாவரங்களின் உடலுக்கு நாம் இழைக்கும் தீங்கு இல்லையா? மனித உடலே சிறந்தது என ஹோமோ ஸேபியன்ஸ் ஸேபியன்ஸ் தற்பெருமை கொள்வது முறையா? இயேசுவின் உடல் அவரின் விண்ணேற்றத்தை நாம் புரிந்து கொள்ள தடையாக இருக்கிறது.

தடை 2: காலம்-இடம்; கூறு

மாற்கு நற்செய்தியாளர் இயேசுவின் விண்ணேற்றம் பற்றி எழுதும்போது, 'இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்' (16:19) என எழுதிவிட்டு, உடனே, 'ஆண்டவரும் திருத்தூதர்களோடு உடனிருந்தார்' (16:20) என முரண்படுகின்றார். காலத்தையும், இடத்தையும் கடந்து கடவுளோடு வலப்புறம் அமர்ந்திருக்கும் ஒருவர், காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்ட திருத்தூதர்களோடு எப்படி உடனிருக்க முடியும்? உண்மையாகவே உடனிருந்தாரா? அல்லது உடனிருப்பு என்பது திருத்தூதர்களின் ஒரு உள்ளுணர்வு போல இருந்ததா? அதாவது, இறந்து போன நம் நண்பர் அல்லது உறவினர் இருக்கிறார் என்று நாம் சொல்கிறேன் என்றால், 'என் கம்ப்யூட்டர் என்னுடன் இருக்கிறது' என்பது போன்ற 'இருப்பு' அல்ல அது. மாறாக, அது ஒரு உள்ளுணர்வு. ஆக, காலமும்-இடமும் இயேசுவின் உடலை ஒட்டிய இரண்டாம் தடை.

தடை 3: பார்த்தவர்கள் எழுதவில்லை, எழுதியவர்கள் பார்க்கவில்லை

இயேசுவின் விண்ணேற்றம் பற்றி மாற்கும், லூக்காவும் மட்டுமே எழுதுகின்றனர். மத்தேயுவின் இயேசு இம்மானுவேலன் ('கடவுள் நம்மோடு') என்பதால், மத்தேயு இயேசுவை நம்மோடு தங்க வைத்து விடுகிறார். மத்தேயுவின் இயேசு விண்ணேற்றம் அடைவதில்லை (காண். மத் 28:20). விண்ணேற்றத்தைப் பார்த்த திருத்தூதரும் நற்செய்தியாளரும் இயேசு அன்பு செய்த சீடருமான யோவான் இந்த மாபெரும் நிகழ்வு குறித்து மௌனம் காக்கின்றார். 'பிள்ளைகளே சாப்பிட வாருங்கள்' என்று இயேசு அழைத்தார் என சின்ன சின்ன உரையாடலையும் பதிவு செய்த யோவான் இதைப் பற்றி ஏன் எழுதவில்லை? அல்லது இயேசு விண்ணேறிச் செல்லவில்லையா? மேலும், இந்த நிகழ்வை தன் நற்செய்தியிலும் (24:50-53), தன் திருத்தூதர் பணிகளிலும் (1:6-11) பதிவு செய்யும் லூக்கா, இந்த நிகழ்வு நடந்த நேரத்தை முரண்டுபட்டு எழுதுகின்றார்: இந்த நிகழ்வு இயேசுவின் உயிர்ப்பு நாள் அன்று நடந்ததாக நற்செய்தியிலும் (24:51), நாற்பது நாட்களுக்குப் பின் நடந்ததாக திருத்தூதர் பணிகளிலும் (1:9-11) எழுதுகின்றார்.

இந்தத் தடைகளை ஒட்டி ஒரு வார்த்தைச் சிக்கலும் இருக்கிறது: 'விண்ணேற்றமா?' (ascension) அல்லது 'விண்ணேற்பா?' (assumption)

முதல் ஏற்பாட்டில் ஏனோக்கு (தொநூ 5:24) மற்றும் இறைவாக்கினர் எலியாவும் (2 அர 2:2), இரண்டாம் ஏற்பாட்டில் இயேசுவும் விண்ணேற்றம் அடைந்தனர் என்றும், திருத்தந்தை 12ஆம் பயஸ் அவர்களின் 1950 நவம்பர் 1 பிரகடனத்தின்படி அன்னை மரியாள் விண்ணேற்பு அடைந்தார் என்றும் கூறுகின்றோம். இங்கே 'விண்ணேற்றம்' என்பது செய்வினை (active voice). 'விண்ணேற்பு' என்பது செயப்பாட்டுவினை (passive voice). விண்ணேற்றம் அடைந்தவர்கள் தாங்களாகவே, தங்களின் ஆற்றலால் ஏறிச் செல்கின்றனர். இவர்களுக்கு மற்றவர்களின் துணை தேவையில்லை. ஆனால் மரியாவோ கடவுளால் அல்லது தூதர்களால் எடுத்துக் கொள்ளப்படுகின்றார். அவர் ஏறிச் செல்ல மற்றவர்களின் துணை தேவைப்படுகிறது. முன்னவர்கள் ஆண்கள் என்பதால் தாங்களாகவே ஏறிச்சென்றார்களோ? ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடுதான் இந்த வார்த்தை மாற்றங்களோ? தெரியவில்லை!

ஆனால், லூக்கா நற்செய்தியில் 'அனாஃபெரோ' என்ற வினைச்சொல் செயப்பாட்டுவினையிலும் ('அனஃபெரெட்டோ'), திருத்தூதர் பணிகளில் 'எபைரோ' என்ற வினைச்சொல் செயப்பாட்டுவினையிலும் ('எபெர்தெ') உள்ளது. மேலும், ஒரே நிகழ்வைக் குறிக்க லூக்கா வௌ;வேறு வினைச்சொற்களைப் பயன்படுத்துவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த வார்த்தைகளை நாம் உள்ளபடி மொழிபெயர்த்தால், 'அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார்' என்றும் 'அவர் எடுத்துக்கொள்ளப்பட்டார்' என்றும் சொல்ல வேண்டும். ஆக, 'இயேசு விண்ணேற்றம் அடைந்தார்' என்பது நம் புரிதலுக்கான மொழிபெயர்ப்பே அன்றி, பாட மொழிபெயர்ப்பு அல்ல.

இவ்வளவு தடைகளும், மொழியியல் சிக்கல்களும் இருக்க, இயேசுவின் விண்ணேற்றத்தை எப்படி புரிந்து கொள்வது?

கேள்வியை மாற்றிக் கேட்டால், பிரச்சினை தீர்ந்துவிடும்.

எப்படி விண்ணேற்பு? என்று கேட்பதை விடுத்து, ஏன் விண்ணேற்பு? என்று கேட்டால் விண்ணேற்பின் பொருள் தெரிந்துவிடும்.

விண்ணேற்றம் இயேசுவின் வாழ்வில் மூன்று நிலைகளில் அர்த்தம் பெறுகின்றது:

1. தன் மண்ணக பணிவாழ்வு முடிந்து, இன்று தன் தந்தையின் இல்லம் திரும்புகின்றார் (காண். பிலி 2:3-6).

2. தன் சீடர்களிடம் தன் பணியை ஒப்புவிக்கின்றார். தன் இறையரசுப் பணியைத் தொடர்ந்தாற்ற அவர்களுக்குக் கட்டளையிடுகின்றார். விண்ணேற்றம் ஒரு பிரியாவிடை நிகழ்வு. விவிலியத்தில் உள்ள பிரியாவிடை நிகழ்வுகளில் மூன்று மட்டுமே மிக நீளமானவை: இஸ்ரயேலின் குலமுதல்வர் யாக்கோபு (தொநூ 49-50), திருச்சட்டம் வழங்கிய மோசே (இச 33-34), புதிய இஸ்ரயேலின் நம்பிக்கை மற்றும் திருச்சட்டத்தின் நிறைவாம் இயேசு (திப 1:1-11). இந்த மூன்று பிரியாவிடைகளும் நான்கு கூறுகளைக் கொண்டுள்ளன: அ) ஆசியுரை, ஆ) பிரிவு, இ) பார்த்தவர்களின் பதில் மற்றும் ஈ) கீழ்ப்படிதல் அறிக்கை. இயேசு கைகளை உயர்த்தி ஆசீர் அளிக்கும் நிகழ்வும் முதல் ஏற்பாட்டு நிகழ்வுகளின் பிரதிபலிப்பாகவே அமைகின்றது (லேவி 9:22, சீஞா 50:20-21). ஆசியளித்தல் தரும் மகிழ்ச்சி லூக்கா நற்செய்தியின் முதல் மற்றும் இறுதி நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது (1:56, 2:20,43,45, 24:9,33, 8:13, 15:7,10). இயேசுவின் சீடர்கள் மகிழ்ச்சியோடு ஆலயம் திரும்பி இறைவனைப் புகழ்கின்றனர்.

3. துணையாளராம் தூய ஆவியானவரை அவர்கள்மேல் அனுப்புவதாக வாக்குறுதி தருகின்றார் (திப 1:4-5).
இயேசுவின் உயிர்ப்பைப் போலவே, அவரின் விண்ணேற்றமும் ஒரு நம்பிக்கையின் மறைபொருளே. 'நம்பிக்கை' என்ற இந்த ஒற்றைச் சொல்லை நீக்கிவிட்டால், இந்த நிகழ்விற்கும் நமக்கும் தொடர்பே இல்லை. 'விண்ணேற்றம் என்னும் நம்பிக்கையை' நாம் எப்படி வாழ்வாக்குவது? விண்ணேற்றம் தரும் வாழ்வியல் பாடங்கள் எவை?

பாடம் 1: மறைதலே இறைமை

இயேசுவை மனிதனாக்க அவருக்கு மனுவுருவாதல் தேவைப்பட்டதுபோல, அவரை இறைவனாக்க அவருக்கு விண்ணேற்றம் தேவை. 'தேவை' என்பதால் இது உருவாக்கப்பட்டது என்று பொருள் கொள்ளக் கூடாது. மறைந்திருக்கும் வரைதான் அவன் பெயர் மறையவன் அல்லது இறைவன். ஆகையால்தான் இறைவனைப் பற்றிய அறிவை மறை-கல்வி என்கிறோம். தெரிந்துவிட்டால் அவர் இறைவன் அல்ல. கண்களுக்குத் தெரியாததால் அவர் இல்லை என்பதும் அல்ல. கண்களுக்குத் தெரியக்கூடியவை எல்லாம் மாறக்கூடியவை. மாறாதவைகள் கண்களுக்குப் புலனாவதில்லை. நம் உடலின் கண்களை மறைக்கும் அளவுக்கு நம் கன்னம் வீங்கிவிட்டது என வைத்துக்கொள்வோம். நம்மால் எதையும் பார்க்க முடியாது. என்னால் பார்க்க முடியவில்லை என்பதற்காக என் முன் இருப்பவை எல்லாம், இல்லாதவை என ஆகிவிடுமா? ஒருபோதும் இல்லை. 'ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல் மங்கலாய்க் காண்கிறோம். ஆனால் அப்போது நேரில் காண்போம்' (1 கொரி 13:12). இயேசு விண்ணேற்றத்தின்போதுதான் இறைவனாகின்றார். மறையும்போதுதான் இறைவனாகின்றார். இதை இன்றைய இரண்டாம் வாசகத்திலும், நற்செய்தி வாசகத்திலும் பார்க்கின்றோம். இரண்டாம் வாசகத்தில் இயேசுவை புதிய உடன்படிக்கையின் தலைமைக்குருவாக உருவக்கின்ற எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், 'அதனால்தான் கிறிஸ்து மனிதரின் கையால் அமைக்கப்பட்ட இவ்வலகின் தூயகத்திற்குள் நுழையாமல், விண்ணகத்திற்குள்ளேயே நுழைந்திருக்கிறார்' (9:24) என்றும், 'அவர் புதியதொரு வழியைத் திறந்து வைத்துள்ளார். இதுவே வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் வழி' (10:20) என்றும் எழுதுகின்றார். நற்செய்தி வாசகத்தில் இயேசு 'ஆசி வழங்கிக் கொண்டிருந்தார்' (24:51) என எழுதுகின்றார் லூக்கா. 'ஆசி வழங்குதல்' என்பது தலைமைக்குருவின் பணி மற்றும் உரிமை. இயேசு மேலே ஏறிச்சென்றவுடன், சீடர்கள் 'நெடுஞ்சாண்கிடையாக' விழுகின்றனர் ('ப்ரோஸ்குனேயோ'). இது கடவுள் முன் மட்டுமே மனிதர்கள் செய்யும் செயல். ஆக, சீடர்கள் இங்கே இயேசுவை இறைவனாக ஏற்றுக் கொள்வதன் வெளி அடையாளமே இந்த நெடுஞ்சாண்கிடை வணங்குதல். 'கடவுள் நம்மோடு' என இறங்கி வந்தவர், 'கடவுள் நமக்காக' என ஏறிச் செல்கின்றார்.

பாடம் 2: சீடர்களின் பணி

இன்றைய நற்செய்தி வாசகத்தில் தன் சீடர்களின் பணி என இயேசு குறிப்பிடுவது இரண்டு: ஒன்று, மனமாற்றம். இரண்டு, மன்னிப்பு. மேலும், 'இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்' (லூக் 24:48) என்கிறார் இயேசு. 'நீங்கள் சாட்சிகள்' என்னும் சொல்லாடல் இன்றைய முதல் வாசகத்திலும் (திப 1:8) உள்ளது. 'சாட்சி' என்பது நீதிமன்றச் சொல். சாட்சியம்தான் தீர்ப்பின் போக்கையே மாற்றும். சாட்சி சொல்பவருக்கும், சாட்சி சொல்லப்படுபவருக்கும் முரண் இருக்கக் கூடாது. சாட்சி சொல்பவர் தான் யார் சார்பாக சாட்சி சொல்கிறாரோ, அவரின் மனநிலையைத்தான் அவர் பிரதிபலித்தல் வேண்டும். 'மனமாற்றம்,' மற்றும் 'மன்னிப்பு' இந்த இரண்டைத்தான் இயேசு நம்மிடம் விரும்புகின்றார். நம் இறைவன் கனிவின், கருணையின் இறைவன். அவர் நம்மைத் தண்டிப்பவர் அல்லர். ஆகையால்தான் இன்றைய இரண்டாம் வாசகமும், 'ஆதலால், தீய மனச் சான்றிலிருந்து விடுவிக்கப்பட்ட உள்ளமும் தூய நீரில் கழுவப்பட்ட உடலும் உடையவர்களாய், நேரிய உள்ளத்தோடும் மிக உறுதியான நம்பிக்கையோடும் அவரை அணுகிச் செல்வோமாக' (எபி 10:22) என்று ஊக்கம் தருகின்றது. ஆக, மனமாற்றம், மன்னிப்பு, சாட்சியம் இம்மூன்றும் சீடர்களாகிய நம் பண்புகளாக இருத்தல் நலம். தொடர்ஓட்டத்தில் ஒரு வீரரின் கையிலிருந்து மற்ற வீரரின் கைக்கு மாறும் குச்சியைப்போல, ஒலிம்பிக் தீப ஓட்டத்தில் ஒருவரின் கையிலிருந்து அடுத்தவரின் கைக்கு மாறும் தீபம் போல விண்ணரசுப் பணி இயேசுவின் கையிலிருந்து இன்று நம் கைக்கு மாறுகின்றது. எந்த அளவிற்கு இது ஒரு கொடையோ, அந்த அளவிற்கு இது ஒரு கடமை. 'விளையாட்டு வீரர் எவரும் விதிமுறைகளுக்குட்பட்டு விளையாடினால் மட்டுமே வெற்றிவாகை சூட முடியும' (2 திமொ 2:5)

பாடம் 3: எதிர்நோக்கு

'அவர் மீண்டும் வருவார்' (திப 1:11) என்ற வார்த்தைகள்தாம் நாம் காத்திருப்பதற்கான எதிர்நோக்கை நமக்குத் தருகின்றன. எதிர்நோக்கில் தயக்கம் அறவே கூடாது (எபி 10:23). நம் வாழ்வின் ஒவ்வொரு செயலையும் உந்தித் தள்வது எதிர்நோக்கே. காலையில் எழுவோம் என்ற எதிர்நோக்கு இருப்பதால் தான் இரவு தூங்கச் செல்லுமுன் 'வேக்அப் கால்' வைக்கின்றோம். படிப்பது, பயணம் செய்வது, வேலை தேடுவது, தேடிய வேலையில் சம்பாதிப்பது, திருமணம் முடிப்பது, அருள்நிலை வாக்குறுதி கொடுப்பது என எல்லா வாழ்க்கை நிகழ்வுகளிலும், நிழல்களிலும் எதிர்நோக்கி இழையோடியிருக்கின்றது. இந்த எதிர்நோக்குகளுக்கெல்லாம் தாயாக இருப்பது, 'அவர் மீண்டும் வருவார்' என்ற எதிர்நோக்கும், 'நாமும் அங்கு செல்வோம்' என்ற எதிர்நோக்கும்தான். வெறும் மண்ணோடு மண்ணாக முடியப்போகும் வாழ்க்கைக்கா நாம் இவ்வளவு மெனக்கெடுகிறோம்? நாம் மண்ணைச் சார்ந்தவர்கள் அல்லர். விண்ணைச் சார்ந்தவர்கள். ஆக, எதிர்நோக்கு என்னும் விளக்கு எந்நேரமும் எரிந்துகொண்டிருக்கட்டும். மேலும், நாம் விண்ணைச் சார்ந்தவர்கள் என்பதால் நம் எண்ணங்களும் உயர்ந்த எண்ணங்களாகவே இருக்கட்டும் (காண். கொலோ 3:1).

பாடம் 4: அண்ணாந்து பார்க்காதீங்க!

'கலிலேயரே, ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருக்கிறீர்கள்?' (திப 1:11) என்ற கேள்வி நம்மைப் பார்த்தும் கேட்கப்படுகிறது. அண்ணாந்து பார்க்கும் ஆன்மீகம் வேண்டாம். குனிந்து வாழ்வைப் பார்க்கும் ஆன்மீகம் அவசியம். 'அவர் வருகிறார்!' என்பதற்காக அவரைத் தேடி வீட்டைவிட்டு ஓட வேண்டாம். அண்ணாந்து பார்க்க வேண்டாம். சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து சாப்பிடுங்கள். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்களா. தொடர்ந்து செய்யுங்கள். பஸ்ஸில் இருக்கிறீர்களா, தொடர்ந்து பயணம் செய்யுங்கள். ரேஷன் கடையில் வரிசையில் நிற்கிறீர்களா, தொடர்ந்து நில்லுங்கள். நோயுற்ற ஒரு நபரோடு மருத்துவமனையில் பேசிக்கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து பேசுங்கள். டிவி பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து பாருங்கள். விளையாடிக் கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து விளையாடுங்கள். ஏனெனில், அவர் இவற்றிலும் வருகின்றார். எல்லாவற்றிலும் அவரால் வர முடியும்.

பாடம் 5: மகிழ்ச்சி

இயேசுவின் பிரிவை அனுபவிக்கும் சீடர்களின் முதல் உணர்வு 'பெருமகிழ்ச்சி' ('காராஸ் மெகாலெஸ்') என்று பதிவு செய்கின்றார் லூக்கா (லூக் 24:52). இந்தச் சொல்லாடலை மீண்டும் ஒருமுறை வானதூதரின் வார்த்தையாகப் பதிவு செய்கின்றார்: 'அஞ்சாதீர்கள். இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்' (லூக் 2:10). இயேசுவின் பிறப்பு, பணி, உயிர்ப்பு, விண்ணேற்றம் என அவரின் வாழ்வு நமக்குத் தருவது மகிழ்ச்சி ஒன்றே. இந்த மகிழ்ச்சி நம் உள்ளத்திலும், இல்லத்திலும் நிறைவாக இருந்து, நாம் செய்வது அனைத்திலும் வெற்றி கண்டு, வளமோடும், நலமோடும் வாழ்தலே அவருக்கு மாட்சி.

'நம்மேல் கொண்ட பரிவினால் அவர் விண்ணிலிருந்து இறங்கி வந்தார்.
இன்று அவர் தனியே விண்ணேறிச் சென்றாலும், அவரோடு நாமும் உடன் செல்கிறோம்.
ஏனெனில் அருளால் நாமும் அவரோடு இணைந்துள்ளோம்!'
(தூய அகுஸ்தினார்)

விண்ணேற்றப் பெருநாள் வாழ்த்துக்களும், செபங்களும்!

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)

=================================================================================
ஆண்டவரின் விண்ணேற்றம் -முன்னுரை
=================================================================================
பிரியமானவர்களே!
ஆண்டவரின் விண்ணேற்பு பெருவிழாவிற்கு வந்துள்ள உங்களை அன்புடனே அழைக்கின்றேன்.

உயிர்ப்புக்குப் பின்னர் உடனிருந்து ஊக்குவித்த இறைமகன் இயேசு, தன்னுடைய பணியை திருதூதர்களிடம் ஓப்படைத்து விட்டு, தூயஆவியையும் வாக்களித்து விட்டு, தந்தையிடம் திரும்பி செல்கின்றார். நமக்காக ஒருவர் பரிந்து பேச தந்தையின் இருப்பிடத்தில் உண்டு என்பதனை உறுதி செய்யவும், நாமும் அத்தகைய மாட்சியை காண்போம் என்பதனை உறுதிப்படுத்தவும் விண்ணகம் செல்கின்றார்.

அவர் விட்டுச் சென்ற பணியினை தொடர நாம் எத்தகைய செயல்களில் நம்மை உட்படுத்தியிருக்கிறோம் என்ற வினாவுடனே பலியிலே பங்கெடுத்து மன்றாடுவோம்.

மன்றாட்டு

திருஅவையை உறுதிப்படுத்தும். உம்முடைய பணியினை தொடரும் பணியாளர்கள் வாக்களித்த ஆவியின் அருளால், மீட்பின் நற்செய்தியை துணிவுடனே அறிவிக்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எம் தலைவர்களை ஆசீர்வதியும். நற்செய்தியின் விழுமியங்களை அவாகளது உள்ளத்தில் பதியச் செய்யும். நாட்டை நல்லமுறையில் நடத்திச் செல்ல, நல்ல இதயத்துடனே உழைத்திட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எங்களை ஆசீர்வதியும். நாங்கள் பணிவாழ்வின் தொடர் ஓட்டத்தில், உம் மேலான எண்ணங்களை அணையாது காத்து, எடுத்துச் சென்று எல்லா தீக்குகளிலும் உள்ள உள்ளங்களுக்கு பகிர்ந்தளிக்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பங்கேற்கும் எம்மை பயன்படுத்தும். அண்ணார்ந்து பார்த்து மகிழ்வதோடு மட்டுமல்லாமல், அன்றாட வாழ்வின் நிகழ்வுகளில் நாங்கள் பொறுப்புடனே நடந்து, கடமையை செவ்வனே செய்திட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இளைவர்களை ஆசீர்வதியும். அடுத்த கட்ட பயண இலக்கு அறிய விரும்பும் எம்மவர்களை ஆவியின் அருளால் வழிநடத்தி, அவர்களுக்கான உம் திட்டம் அறிந்து பயணிக்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!