|
|
|
திருவருகைக்காலம் முதல் வாரம்
மரியாவின் அமல உற்பவம் 08
டிசம்பர் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை
உண்டாக்குவேன்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 9-15,20
ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, "நீ எங்கே இருக்கின்றாய்?"" என்று கேட்டார். "உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன்.
ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன்.
எனவே, நான் ஒளிந்து
கொண்டேன்" என்றான் மனிதன்.
"நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ
உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?"" என்று கேட்டார்.
அப்பொழுது அவன், "என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப்
பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்" என்றான்.
ஆண்டவராகிய கடவுள், "நீ ஏன் இவ்வாறு
செய்தாய்?" என்று
பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், "பாம்பு என்னை ஏமாற்றியது,
நானும் உண்டேன்" என்றாள்.
ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், "நீ இவ்வாறு செய்ததால், கால்நடைகள்,
காட்டு விலங்குகள் அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய். உன் வயிற்றினால்
ஊர்ந்து உன் வாழ்நாள் எல்லாம் புழுதியைத் தின்பாய். உனக்கும்
பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்.
அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக்
காயப்படுத்துவாய்" என்றார். மனிதன் தன் மனைவிக்கு
"ஏவாள்" என்று
பெயரிட்டான்; ஏனெனில் உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
- திபா 98: 1. 2-3ab. 3c-4 (பல்லவி: 1a)
=================================================================================
பல்லவி: ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்.
1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு
செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும்
அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி
2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம்
நீதியை வெளிப்படுத்தினார். 3ab இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட
தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி
3c உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப்
பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள்.
பல்லவி
=================================================================================
இரண்டாம் வாசகம்
=================================================================================
உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக்
கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய
திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-6, 11-12
சகோதரர் சகோதரிகளே, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும்
கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி
அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். நாம்
தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம்
தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத்
தேர்ந்தெடுத்தார்.
அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக்
கொள்ள அன்பினால் முன்குறித்து வைத்தார். இதுவே அவரது விருப்பம்;
இதுவே அவரது திருவுளம். இவ்வாறு தம் அன்பார்ந்த மகன் வழியாக நம்மீது
ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந்தருளியதால் அவரது புகழைப்
பாடுகிறோம். கடவுள் தமது திருவுளத்தின் திட்டத்தின்படி அனைத்தையும்
செயல்படுத்தி வருகிறார். அவரது தீர்மானத்தால் நாம் முன்குறிக்கப்பட்டு,
கிறிஸ்து வழியாய் அவரது உரிமைப்பேற்றுக்கு உரியவரானோம். இவ்வாறு
கிறிஸ்துவின் மேல் முதலில் நம்பிக்கை வைத்த நாங்கள் கடவுளுடைய
மாட்சியைப் புகழ்ந்து பாட வேண்டுமென அவர் விரும்பினார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
லூக் 1: 28
அல்லேலூயா, அல்லேலூயா! அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்மோடு
இருக்கிறார்; பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி
வாசகம்
=================================================================================
இதோ, கருவுற்று ஒரு மகனைப்
பெறுவீர்.
+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
1: 26-38
ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள
நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர்
தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு
மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.
வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள்நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர்
உம்மோடு இருக்கிறார்" என்றார்.
இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ
என்று எண்ணிக் கொண்டிருந்தார்.
வானதூதர் அவரைப் பார்த்து, "மரியா, அஞ்ச வேண்டாம்; கடவுளின்
அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப்
பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்;
உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை
ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின்மீது
என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது""
என்றார்.
அதற்கு மரியா வானதூதரிடம், "இது எப்படி நிகழும்? நான் கன்னி
ஆயிற்றே!"" என்றார்.
வானதூதர் அவரிடம், "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை
உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது.
அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம்
முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற
இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில்,
கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" என்றார்.
பின்னர் மரியா, "நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு
நிகழட்டும்"" என்றார்.
அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 1
=================================================================================
மரியாவின் அமல உற்பவம் (டிசம்பர் 08)
நிகழ்வு
முன்பொரு காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான். அவன் மக்களை அதிகம்
அன்புசெய்தான். மக்களும் அவனை அதிகமாக அன்பு செய்தார்கள். அப்படிப்பட்ட
அரசன் ஒருநாள் தன்னுடைய அமைச்சர் மற்றும் படைவீரர்களோடு நகர்வலம்
சென்றான். அவன் சென்ற வழியில் குழந்தை ஒன்று அழுதுகொண்டிருந்தது.
அதைக் கவனித்த அரசன் அந்தக் குழந்தையை தன்னுடைய கையில் ஏந்தி,
"பிள்ளாய்! ஏன் இப்படி அழுகின்றாய்?, உனக்கு என்ன வேண்டும்
சொல், நான் அதைத் தருகின்றேன்?" என்றான். அதற்கு அந்த குழந்தை,
"நான் என்னுடைய தாயை விட்டுப்பிரிந்து வழிதவறி வந்துவிட்டேன்.
அவளிடம் மீண்டுமாக நான் போகவேண்டும்" என்று அழுதுகொண்டே சொன்னது.
அதற்கு அரசன், "நான் உன்னை உன்னுடைய தாயிடத்தில் கொண்டுபோய்
விடுகிறேன். ஆனால் அவள் எப்படி இருப்பாள் என்பதை மட்டும்
சொல்?" என்றான். "என்னுடைய தாய் மிகவும் அழகாக இருப்பாள்" என்றது
அந்தக் குழந்தை.
உடனே அரசன் தன்னுடைய நாட்டில் இருக்கும் அனைத்து அழகான
தாய்மார்களையும் அரண்மனைக்கு வருமாறு தண்டோரா போட்டு அறிவித்தான்.
அரசனுடைய அறிவிப்பைத் தொடர்ந்து நாட்டில் இருந்த அழகான
தாய்மார்கள் எல்லாரும் அரண்மனைக்கு வந்தார்கள். ஆனால் அந்தக்
கூட்டத்தில் யாருமே குழந்தையின் தாயாக இருக்கவில்லை. அவர்கள்
நீண்ட நேரம் காத்திருந்தார்கள். கடைசியல் பெண்ணொருத்தி மெலிந்த
தேகத்தோடு கொஞ்சம் கருமை நிறத்தில் அரண்மனைக்கு உள்ளே
நுழைந்தான். அவளுடைய முகத்தில் தன்னுடைய குழந்தையை இழந்த சோகம்
தெரிந்தது. அவளைப் பார்த்த குழந்தை அம்மா என்று சொல்லிக்கொண்டு
ஓடிவந்து, அவளுடைய தோளைக் கட்டிப்பிடித்து அணைத்துக் கொண்டது.
எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த அரசனுக்கு ஆச்சரியம்
தாங்கமுடியவில்லை. "அழகான தாய் என்று சொல்லிவிட்டு, இப்படி
மெலிந்த தேகத்தோடு கருமை நிறத்தில் இருக்கும் பெண்ணொருத்தியை
தாயென்று கட்டிக்கொள்கிறதே" என்று ஒரு கணம் அவன் யோசித்தான்.
பின்னர் அவன் குழந்தைக்கு தன்னுடைய தாய் எப்போதுமே அழகானவள் என்ற
உண்மையை உணர்ந்தவனாய் ஆறுதல் அடைந்தான்.
ஆம், நம் அனைவருக்கும் எப்போதுமே நம்முடைய தாயானவள் அழகானவள்.
அதிலும் குறிப்பாக பாவ மாசில்லாது இந்த மண்ணுலகத்தில் பிறந்த
நம் அன்புத் தாய் அன்னை மரியா இன்னும் அழகானவள்.
வரலாற்றுப் பின்னணி
இன்று நாம் அன்னை மரியாவின் அமலோற்பவப் பெருவிழாவைக் கொண்டாடி
மகிழ்கின்றோம். இவ்விழா தொடக்கத்தில் பல்வேறு பெயர்களில்
கொண்டாப்பட்டு வந்தாலும் 1854 ஆம் ஆண்டு டிசம்பர் 8 நாள்தான்
திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் "மரியாவின் அமலோற்பவப்
பெருவிழா" என்ற பெயரில் கொண்டாட அதிகாரப் பூர்வமாக
அறிவித்தார். மேலும் அவர் தான் எழுதிய Ineffabilis Deus என்ற
மடலில் "மனுக்குல மீட்பரான இயேசு கிறிஸ்துவின் பயன்களை
முன்னிட்டு கன்னிமரி கருவான நொடிப்பொழுதிலேயே எல்லாம் வல்ல
இறைவனது அருளாலும் சலுகையாலும் ஜென்மப் பாவமாசு அணுகாதவளாய்த்
தோன்றினார்" என்று குறிப்பிட்டு அமலோற்பவியான கன்னி மரியா என்ற
விசுவாசப் பிரகடனத்தை அறிவித்தார்.
திருத்தந்தையின் அறிவிப்பை உறுதிசெய்யும் வகையில் 1858 ஆம்
ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் நாள் பிரான்சு நாட்டில் உள்ள லூர்து
நகரில் பெர்னதத் என்ற பதினான்கு வயது சிறுமிக்குக் காட்சி
கொடுத்த மரியா "நாமே அமல அற்பவம்" என்று அறிவித்தார்.
அன்றிலிருந்து இன்றுவரை மரியா அமலோற்பவி என்பதை நினைவுகூரும்
வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 8 நாள் மரியாவின்
அமலோற்பவப் பெருவிழாவைக் கொண்டாடி வருகின்றோம். இந்த நேரத்தில்
இவ்விழா உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப்
பார்ப்போம்.
பழைய ஏற்பாட்டில் தாவீது அரசன் ஆண்டவருக்காக கோவில் கட்ட
நினைத்தபோது, ஆண்டவர் அவரிடம், "நீ மிகுதியான குருதியைச்
சிந்தினாய், பெரும் போர்களை நடத்தினாய்; எனக்கு முன்பாகத்
தரையில் நீ மிகுதியான குருதியைச் சிந்தியதால், என் பெயருக்கு
நீ கோவில் கட்ட வேண்டாம்" என்கிறார் ( 1 குறி 22 :8),
கடவுளுக்கு கோவில் கட்ட இருப்பவர் தூய்மையாக இருக்கவேண்டும்
என்று நினைக்கும் அவர், தன்னுடைய மகனைப் பெற்றெடுக்க இருக்கும்
பெண் எவ்வளவு தூய்மையாக இருக்கவேண்டும் என்று
நினைத்திருப்பார்?. ஆதலால்தான் பாவக்கறை சிறுதும் இல்லாத
தன்னுடைய மகன் இயேசு பிறக்க பாவமாசு அணுகாத மரியவைத்
தேர்ந்தெடுக்கின்றார். அதற்காக அவர் மரியாவை ஜென்மப்
பாவத்திலிருந்து விடுக்கின்றார்; அவரை இறைவன் தங்கும்
இல்லிடமாக மாற்றுகின்றார். இத்தகைய சிறப்புகளைக் கொண்டவளாய்
விளங்கியதால்தான் வானதூதர் கபிரியேல் கூட, "அருள் மிகப்
பெற்றவரே வாழ்க, ஆண்டவர் உம்முடனே" என்று வாழ்த்துகிறார் (லூக்
1: 28). ஆகவே மரியாவின் அமலோற்பவத்தை நினைவுகூறும் வேளையில்
கடவுள் மரியாவுக்கு அளித்த மிகப்பெரிய பேற்றினை நினைவுகூர்ந்து
பார்ப்போம்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
மரியாவின் அமலோற்பவப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நாளில்,
இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப்
பார்த்து நிறைவு செய்வோம்.
தூய மாசற்ற வாழ்க்கை வாழ முயற்சிப்போம்
மரியா பாவ மாசின்றிப் பிறந்தார், அது மட்டுமல்லாமல் பாவத்
தூண்டுகை இல்லாது இருந்தார். அவருடைய விழாவை கொண்டாடும் நாம்
அவரைப் போன்று மாசற்ற தூய வாழ்க்கை வாழ்கின்றோமா? என
சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
திருத்தந்தை தூய இரண்டாம் யோவான் பவுல் கூறுவார், "இன்றைக்கு
மனிதர்கள் பாவம் என்ற உணர்வே இல்லாமல்
வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இதுதான் இன்றைய காலத்தின்
மிகப்பெரிய பாவம்" என்று. இது முற்றிலும் உண்மை. மனிதர்கள்
கடவுளுக்கும் பயப்படாமல், தங்களுடைய மனசாட்சிக்கும் பயப்படாமல்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒருசிலர் தங்களுடைய
மனசாட்சியை அடகு வைத்து வாழ்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில்
மரியாவின் மாசற்ற தன்மையை நினைத்துப் பார்ப்பது மிகவும்
பொருத்தமானதாகும். அவர் தன்னையே கடவுளுக்கு உகந்த தூய, நறுமணம்
வீசும் பலிபொருளாக ஒப்புக்கொடுத்தார். நாமும் நம்மையே
கடவுளுக்கு உகந்த தூய பலிபொருளாக ஒப்புக்கொடுக்கவேண்டும் (எபே
5:2). அதுதான் நம்முன்னே இருக்கும் மிகப்பெரிய சவாலாக
இருக்கின்றது.
தூய பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தில் (இன்றைய இரண்டாம்
வாசகம்) கூறுவார், "நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம்
திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள்
நம்மை கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார் (எபே 1:4) என்று.
ஆகவே, நாம் தூயோராகவும் மாசற்றோராகவும் விளங்க வேண்டும்
அதுதான் இறைவனிடமிருந்து எதிர்பார்க்கும் ஒன்றாகும்.
இது ஒரு யூதக் கதை. ஒருநாள் ரெப் லிப் (Reb Lieb) என்ற யூத
இளைஞர் மெஸ்ரிச்சர் மாகித் (Mezritcher Maggid) என்ற இரபியை
பார்க்கச் சென்றார். வழியில் ரெப் லிப் தன்னுடைய நண்பரைச்
சந்திக்க நேர்ந்தது. நண்பர் அவரிடம், "எங்கே செல்கிறாய்?"
என்று கேட்டார். அதற்கு ரெப்லிப், "நான் மெஸ்ரிச்சர் மாகித்
என்ற இராபியைச் சந்திக்கச் செல்கிறேன்" என்றார். அதற்கு
அவருடைய நண்பர் அவரிடம், "ஓ! அவர் கொடுக்கும் மறைநூல்
விளக்கங்களை அறிந்துகொள்ளப் போகிறாயா?" என்று கேட்டார். அதற்கு
ரெப் லிப், "இல்லை இல்லை, நான் அவரிடமிருந்து அவரை தூய்மையான
வாழ்க்கையை பாடமாகக் கற்றுக்கொள்ளப்போகிறேன். அவரைப் போன்ற
தூய்மையான மனிதர் இந்த உலகத்தில் பார்க்க முடியாது" என்றார்.
ரெப் லிப், மெஸ்ரிச்சேர் மாகிதின் தூய்மையைக் கண்டு
வியந்ததுபோன்று, நம்முடைய தூய்மையான வாழ்வைக் கண்டு,
மற்றவர்கள் வியக்கும் நாள் எந்நாளோ?.
ஆகவே, மரியாவின் அமலோற்பவப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த
நாளில் அவரிடமிருந்து அவரைப் போன்று தூய மாசற்ற வாழ்க்கை வாழக்
கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா
வாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.
"தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக்
காண்பர்" (மத் 5:8).
=====================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2
=================================================================================
நம்பியவாரே நிகழட்டும்!
ஓர் ஊரில் ஒரே தெருவில் ஒரு செருப்பு விற்கும்
தொழிலாளியும், ஒரு செல்வந்தரும் இருந்தனர். செருப்புத்
தொழிலாளி தினமும் தான் செருப்புக் கடையின் ஓரத்தில் தன்னுடைய
இஷ்ட தெய்வத்தின் படம் ஒன்றை வைத்து அதை வணங்கி வந்தான். செல்வந்தரோ
தினமும் காலையில் குளித்துவிட்டு, பல மணி நேரம் பூஜை செய்து வந்தார்.
ஒரு நாள் வானதூதர் ஒருவர் கடவுளைப் பார்த்து, "அந்தச் செல்வந்தர்
மிகுந்த பக்திமானாக இருக்கிறார்; தினமும் உங்களுக்குப் பல மணி
நேரம் பூஜை எல்லாம் செய்கிறார், அவருக்கு ஏதாவது செய்யக்கூடாதா?"
என்றார். கடவுளும் அதற்குச் சம்மதித்துவிட்டு வானதூதரை பூலோகத்துக்கு
அனுப்பினார். போகும்போது வானதூதரைப் பார்த்து, "நீங்கள் கீழே
சென்று, "நான் கடவுளிடமிருந்து வருகிறேன்," என்று செல்வந்தரரிடம்
சொல்லுங்கள். அவர் "தற்பொழுது கடவுள் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?"
என்று கேட்பார். அதற்கு நீங்கள் "கடவுள் தற்போது ஓர் ஊசியின்
காது வழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருக்கிறார்" என்று பதில்
சொல்லுங்கள்" என்று சொல்லி அனுப்பினார்.
"அப்படியே அந்தச் செருப்பு தைக்கும் தொழிலாளியையும் போய்ப்
பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்" என்று சொல்லி அனுப்பினார் கடவுள்.
வானதூதரும் முதலில் அந்தச் செல்வந்தரின் வீட்டுக்கு சென்றர்.
பூஜை எல்லாம் முடித்துவிட்டு வந்த செல்வந்தர், வானதூதரிடம்,
"நீங்கள் யார்?" என்று கேட்க, வானதூதர் தான் கடவுளிடமிருந்து
வருவதாகச் சொல்கிறார். அதற்கு அந்தச் செல்வந்தர் "தற்போது கடவுள்
என்ன செய்துகொண்டு இருக்கிறார்?" என்று கேட்க, வானதூதரும், கடவுள்
ஒர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருப்பதை
பார்த்தாகச் சொன்னார்.. அதற்கு அந்த செல்வந்தர் "அது எப்படி
முடியும்? இது என்ன நடக்கிற காரியமா?" என்று கேட்டார்.
வானதூதர் அடுத்து அந்தச் செருப்புத் தொழிலாளியைப் பார்க்கச்
சென்றார். அவரிடமும் இதே சம்பாஷணை நடைபெற்றது. ஆனால் கடைசி பதிலுக்கு
அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி, "இதில் என்ன விந்தை? ஒரு
பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், அவருக்கு யானையை ஊசியில்
நுழைப்பது என்ன பெரிய விஷயமா?" என்று பதில் சொன்னார்.
இது வெறும் கதையாக இருந்தாலும், இதில் நாம் புரிந்துக்கொள்ள
வேண்டிய தத்துவம் ஒன்று அடங்கி இருக்கின்றது. அதுதான் கேள்வி
கேட்காத நம்பிக்கை. கடவுளால் எதையும் செய்ய முடியும் என்று நம்பவேண்டும்.
அந்த நம்பிக்கைதான் எல்லாவற்றிற்கு அடித்தளம்.
நற்செய்தி வாசகத்தில் பார்வையற்ற இருவர் பார்வை பெறுகின்றனர்.
இதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தது. அவர்களுடைய நம்பிக்கைதான்
என்று சொன்னால் அது மிகையாகாது.
ஆண்டவர் இயேசு தம் சொந்த ஊரை விட்டு வெளியே சென்றபோது, பார்வையற்ற
இருவர், "தாவீதின் மகனே" எங்களுக்கு இரங்கும் என்கின்றார். ஆண்டவர்
இயேசு பயணப்பட்டுக் கொண்டிருக்கும்போது நிச்சயம் தம் சீடர்களுக்கும்
மக்களுக்கும் எதையாவது போதித்துக்கொண்டே சென்றிருக்கவேண்டும்.
ஏனென்றால், ஒரு யூத இராபி தன்னுடைய பயணத்தின்போதுதான் மக்களுக்கு
நிறைய போதிப்பார். அந்த வகையில் இயேசுவும் தன்னுடைய சீடர்களுக்கும்
மக்களுக்கும் எதையாவது போதித்திருப்பார். அப்படியாக ஆண்டவர் இயேசு
போதித்துக்கொண்டு செல்லும்போதுதான் பார்வையற்ற இவர்கள் இருவரும்
இயேசுவை நோக்கிக் கத்துகின்றார்கள்.
இயேசு அவர்களுடைய நம்பிக்கையைச் சோதிப்பதற்காகவே அவர்களுடைய குரல்
கேட்காதது போன்று இருக்கின்றார். ஏனென்றால், நிறைய நேரங்கில்
வீதியில் பிச்சையெடுத்துச் கொண்டிருப்பவர்கள் மற்றவர்களுடைய
கவனத்தைப் பெறுவதற்காகவே சத்தம்போட்டுக் கத்துவார்கள். அதனாலும்,
அவர்களுடைய நம்பிக்கையைச் சோதிக்கும் பொருட்டும் இயேசு அவர்களைக்
கண்டு கொள்ளாமலே போகின்றார். ஆனால் அவர்கள் தொடர்ந்து கத்திக்
கொண்டே இருந்ததால், அவர்களைத் தனியாகப் பார்க்கின்றார். கடவுளுடைய
வல்லமையை நாமேதான் பெறவேண்டிய ஒழிய, அடுத்தவர் இதில் நமக்கு
உதவி செய்ய முடியாது என்பதை ஆண்டவர் இயேசு மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார்.
பின்னர் இயேசு அவர்களிடம், "நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?"
என்று கேட்கின்றார். அவர்களும் ஆம் என்று சொல்ல, "நீங்கள் நம்பிய
வண்ணமே உங்களுக்கு நிகழட்டும்" என்று சொல்லி அவர்களை அனுப்பி
வைக்கின்றார். அவர்களது நம்பிக்கை அவர்களுக்கு நலம் தந்தது.
ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், பார்வையற்ற அவ்விருவரைப்
போன்று நாமும் நம்பிக்கையோடு இருக்கவேண்டும். அப்படியிருந்தால்,
இறைவனிடமிருந்து எல்லா ஆசிர்வாதமும் பெறுவோம் என்பது உறுதி.
நாம் இறைவனிடம் நம்பிக்கை கொண்டு வாழ்வோம், அதன்வழியாக இறையருள்
பெறுவோம்
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 3
=================================================================================
இயேசுவின் பதிலாளிகள் நாம்!
இரண்டாம் உலகப்போரின் போது, ஜெர்மனியில் உள்ள மன்ஸ்டர்
(Munster) என்ற இடத்தில் இருந்த தேவாலயமானது, குண்டுவீசப்பட்டு
முற்றிலுமாக சிதைந்துபோனது. ஆலயத்தில் இருந்த இயேசுவின் பாடுபட்ட
சிரூபம் மட்டுமே எப்படியோ தப்பித்தது.
போர் முடிந்து, மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியபிறகு,
ஆலயத்தை மறுசீரமைக்கும் பணியானது மிக மும்முரமாக நடைபெற்றது.
அப்போது குண்டுவீச்சில் உடைந்துபோனத இயேசுவின் பாடுபட்ட சிரூபத்தை
என்ன செய்யலாம் என்ற ஒரு பேச்சு வந்தது. அப்போது ஒருசிலர், அந்த
பாடுபட்ட சிரூபத்தை மாற்றிவிட்டு புதிதாக, வேறொரு சிரூபத்தை
வைப்போம் என்றனர். இன்னும் ஒருசிலர் பாடுபட்ட சிரூபத்தில் இயேசுவின்
இரு கைகள்தானே உடைந்திருக்கின்றன, அவற்றை மட்டும்
மாற்றிவிட்டால் போதுமானது என்றார்.
இப்படி ஒவ்வொருவரும் ஒரு கருத்தைச்
சொல்லிக்கொண்டிருக்கும்போது, கடைசியாக பெரியவர் ஒருவர் எழுந்தார்.
அவர், "இருக்கின்ற இந்த பாடுபட்ட சிரூபத்தை மாற்றிவிட்டு
வேறொரு சிரூபத்தை வைக்கவும் வேண்டாம், அதில் வேறு கைகளையும்
பொருத்தவும் வேண்டாம். மாறாக, கைகள் இல்லாத சிரூபத்தை அப்படியே
வைத்துவிட்டு, அதன் அருகே, "எனக்குக் கைகள் இல்லை, உங்களுடைய
கைகளைத் தாருங்கள் (I Have no Hands, lend me yours) என எழுதி
வைத்துவிடுவோம். அது பார்ப்பதற்கு மிகவும் அர்த்தம் நிறைந்ததாக
இருக்கும்' என்றார். பெரியவர் சொன்னதைக் கேட்டு, ஆலயத்தின்
நிர்வாகிகள் அப்படியே செய்தனர்.
ஆமாம், இன்றைக்கு இயேசுவுக்கு நம்முடைய கைகள் தேவைப்படுகின்றன,
எல்லாரையும் ஆசிர்வதிக்கவும் அரவணைக்கவும். இயேசுவுக்கு நம்முடைய
இதழ்கள் தேவைப்படுகின்றன, எல்லாரையும் பார்த்து புன்னகைக்கவும்
யாருமில்லாதவர்களுடைய உள்ளத்தில் அன்பினை விதைத்தவும். இயேசுவுக்கு
நம்முடைய கால்கள் தேவைப்படுகின்றன, எளியவரைத் தேடி உதவிசெய்யவும்
ஆதரிக்கவும். இயேசுவுக்கு நம்முடைய நாவு தேவைப்படுகின்றது, எல்லாருக்கும்
இறைவார்த்தையை எடுத்துரைக்கவும் இனியவை பேசவும். இவை எல்லாவற்றுக்கும்
மேலாக, இன்றைக்கு இயேசுவுக்கு நாம் தேவைப்படுகின்றோம். அவர் கண்ட
இறையாட்சி கனவு நனவாக்கவும் நானிலமெங்கும் நன்மை செய்யவும். ஆம்,
இயேசுவுக்கு நாம் தேவைப்படுகின்றோம். அவர் கண்ட இறையாட்சிக்
கனவு நனவாகவும் நானிலமெங்கும் நன்மை செய்யவும்
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, நகர்கள், சிற்றூர்கள் எங்கும்
சென்று நற்செய்தியை அறிவிக்கின்றார்; நோயாளிகளைக் குணப்படுத்துகின்றார்;
எல்லார் மீதும் பரிவுகொள்கின்றார். இவை எல்லாவற்றையும் செய்து
முடித்தபின்பு, பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுகின்றார்.
மத்தேயு நற்செய்தியில் வருகின்ற இப்பகுதி, நமக்கு உணர்த்தும்
செய்தி என்ன என்று இப்போது சிந்தித்துப் பார்த்து
நிறைவுசெய்வோம்.
ஆண்டவர் இயேசு இந்த உலகத்திற்கு வந்தது, எல்லாரும் வாழ்வு பெறுவதற்காக,
அதுவும் நிறைவாகப் பெறுவதற்காக (யோவா 10:10). அதற்காக அவர் நற்செய்தியை
அறிவிக்கின்றார், மக்கள்மீது பரிவுகொண்டு அவர்களிடமிருந்த
நோயாளிகளைக் குணப்படுத்துகின்றார், இன்னும் பல்வேறு பணிகளைச்
செய்கின்றார். இப்படி இருக்கின்ற சமயத்தில், தான் தொடங்கிய இந்த
நற்செய்திப் பணி, தான் கண்ட இறையாட்சிக் கனவு தன்னோடு நின்றுவிடக்கூடாது
என்பதற்காக திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்கின்றார், அவர்கள் மூலம்
தான் தொடங்கிய பணி தொடர்ந்து நடைபெறவேண்டும் என்று
யாசிக்கின்றார்.
அடுத்ததாக, திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்கும்போது
பன்னிருவராகத் தேர்ந்தெடுக்கின்றார். பன்னிரெண்டு என்றால்,
இஸ்ரயேலில் இருந்த பன்னிரெண்டு குலங்களை உள்ளடக்கியதாக இருக்கும்,
அது எல்லா மக்களுக்கும் பணிசெய்வதற்கான ஓர் அடையாளமாக இருக்கும்
என்பதால், பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்கின்றார். இயேசு
தேர்ந்தெடுத்த இந்த பன்னிரு திருத்தூதர்களில் படித்தவர் உண்டு,
படிக்காதவர் உண்டு, பணக்காரர் உண்டு, ஏழைகள் உண்டு. இப்படி எல்லாத்
தரப்பினரையும் உள்ளடக்கியதாக இருக்கின்றது இயேசு தேர்ந்தெடுத்த
திருத்தூதர் குலாம். இவர்கள் வழியாக இயேசு, தான் கண்ட கனவினை
நனவாக்கவும் தான் செல்லமுடியாத இடங்களுக்கு அவர்களைப் போகவும்
செய்கின்றார்.
'இயேசு இறைமகன் தானே, ஒற்றை ஆளாக இருந்து, எல்லாவற்றையும் அவராக
செய்து முடித்திருக்கலாமே' என்று நாம் கேள்வி எழுப்பலாம். இங்கே
ஒன்றை நம்முடைய கவனத்தில் கொள்ளவேண்டும். அது என்னவென்றால்,
கடவுள் இந்த உலகத்திற்கு மெசியாவை அனுப்பியபோது, மரியா என்ற ஒரு
மனுசி வழியாகத்தான் அனுப்பினார். அவர் வழியாக கடவுள் இந்த உலகிற்கு
மீட்பினை வழங்கினார். அதுபோன்றுதான், இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில்
இறையாட்சியை நிறுவ நினைத்தபோது அதைத் தன் சீடர்கள் வழியாக
நிறைவேற்றுகின்றார். இவ்வாறு இயேசு மனித உறவை நாடுபவராக இருக்கின்றார்.
அன்றைக்கு திருத்தூதர்கள் வழியாக இறையாட்சியை இந்த மண்ணில்
நிறுவ விரும்பிய இயேசு, இன்று நம் வழியாக அதைச் செய்ய
நினைக்கின்றார். நாம், அவர் கண்ட கனவு நனவாக அவரோடு ஒத்துழைப்போம்,
அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
அன்னை மரியாளின் இறைப்பற்று
இறைவனின் முன் தன்னையே ஓர் அடிமைநிலைக்குக் கையளித்த அன்னை மரியாளின்
தாழ்ச்சி நமக்கெல்லாம் சிறந்த எடுத்துக்காட்டு. கடவுள் எதைச்சொன்னாலும்,
அதை செய்வதற்கு தயாராக இருக்கிறேன் என்பதுதான் அன்னைமரியாளின்
வார்த்தைகளின் பொருள். கடவுள் தான் அவளது வாழ்வில் எல்லாம் என்பதனை
இந்த வார்த்தைகளில் வெகு எளிதாக வெளிப்படுத்திவிடுகிறார். அது
ஏதோ, சாதாரண வார்த்தைகள் அல்ல, மாறாக, வாழ்வின் அனுபவம் தந்த
பாடம். சிறு வயதிலிருந்தே, அன்னை மரியாள் கடவுளோடு
நெருங்கியிருக்கிறாள். கடவுளின் பிரசன்னத்தை தன்னுள்ளே அதிகமாக
உணர்ந்தவன் அன்னை கன்னிமரியாள். அந்த அனுபவம்தான், கபிரியேல்
தூதுவரின் செய்தியினை, சந்தேகமில்லாமல் ஏற்றுக்கொள்ள
துணைபுரிந்தது.
தனது வாழ்வில் தனக்கென்று எதற்குமே அன்னை கன்னிமரியாள் ஆசைப்பட்டது
கிடையாது. அவளது எண்ணமெல்லாம் கடவுள்தான். அவள் சிந்தனையெல்லாம்
கடவுளைத்தழுவியதாக இருந்தது. இந்த உலகத்திலே அவளுக்கென்று இருந்த
உறவாக கடவுளைப்பார்த்தாள். கடவுள் தான் அவளுக்கு உலகம். கடவுள்
இல்லாத ஒரு வாழ்வை அவளால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.
அத்தகைய ஒரு இறைப்பற்று தான், அவளது விசுவாசத்தை இறுதிவரை உறுதியுள்ளதாக
வைத்திருந்தது. வாழ்வில் என்ன நடந்தாலும் பொறுமையாக, நிதானமாக
இருக்கச்செய்தது. யார் "உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்' என்று
முன்மொழியப்பட்டவரே இறந்தபோதிலும், அவளது நம்பிக்கை இறக்கவில்லை.
நிதானம் இழக்கவில்லை. கடவுளது அற்புதத்திற்காக, அதிசயத்திற்காக
பொறுமையாக இருக்கிறார்.
கடவுளோடு நெருங்கி இருக்கும் பண்பை அன்னை மரியாள் நமக்குக்கற்றுத்தருகிறார்.
அன்னை மரியாளின் பார்வையில் நாம் கடவுளைப்பார்த்தோமென்றால்,
வாழ்வின் எந்த சூழ்நிலையிலும் நாம் நிதானம் இழக்க மாட்டோம்.
கடவுளைப்பற்றிய சந்தேகம் கொள்ள மாட்டோம். அதற்காக இறைவனை மன்றாடுவோம்.-
அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================
அன்னை மரியின் அமல உற்பவம் !
இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,
லூர்து நகரில் பெர்னதத்துக்குக் காட்சி தந்தபோது, அன்னை மரியா
தன்னைப் பற்றிச் சொன்னது: நாமே அமல உற்பவம். பெர்னதத் பங்குத்
தந்தையிடம் சென்று தான் கண்ட காட்சிகளையெல்லாம் சொன்னபோது நம்பாத
பங்குத் தந்தை, நாமே அமல உற்பவம் என்று அன்னை சொன்னதாக பெர்னதத்
சொன்னபோதுதான் அந்தக் காட்சிகள் உண்மையானவை என்று நம்பினார்.
அன்னை மரியே தன்னைப் பற்றி வெளிப்படுத்திய இந்த இறையியல் உண்மையைத்
திருச்சபையின் தொடக்க காலத்திலிருந்தே கிறித்தவர்கள் நம்பி ஏற்றுக்கொண்டுள்ளனர்.
கடவுளின் தாயாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மரியாவை இறைவன் தாயின்
கருவிலேயே தூய்மை நிறைந்தவராக உருவாக்கினார் என்பதே இந்த
விசுவாச சத்தியத்தின் பொருள். நாம் மாசற்றோராகவும், தூயோரகவும்
அவர் திருமுன் நிற்க வேண்டுமென்று உலகம் தோன்றுமுன்பே கடவுள்
நம்மைக் கிறிஸ்துவுக்குள் தேர்ந்துகொண்டார் (எபே 1:4) என்று இறைவார்த்தை
கூறுகிறது. உலகம் உருவாகுமுன்பே கடவுள் நம் ஒவ்வொருவரையும்
தேர்ந்துகொண்டாரென்பது உண்மையென்றால், நம் அனைவருக்கும்
மாதிரியாக அன்னை மரியாவையும் உலகம் உருவாகும் முன்பே தூயவராக,
சென்ம மாசற்றவராக, அமல உற்பவியாக இறைவன் தேர்ந்தெடுத்தார் என்பதில்
எந்த வியப்பும், அதை நம்புவதில் எந்தத் தயக்கமும் இருக்க
முடியாதல்லவா!
மன்றாடுவோம்: தூய்மையின் உறைவிடமே இறைவா, உமது திருமுன் தூயோராகவும்,
மாசற்றவராகவும் விளங்க எங்கள் அனைவரையும் நீர் தேர்ந்தகொண்டீரெ.
உம்மைப் போற்றுகிறோம். அதற்கு முன்னோடியாக அன்னை மரியாவைத்
தாயின் வயிற்றிலேயே மாசற்றவராகத் தேர்ந்துகொண்டீரெ. அதற்காக உம்மை
வாழ்த்துகிறோம். நாங்கள் தூயவராக என்றும் வாழ எங்களுக்கு அருள்
தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
- அருள்தந்தை குமார்ராஜா
--------------------------
"வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, 'அருள்மிகப்பெற்றவரே
வாழ்க!
ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்றார்" (லூக்கா 1:28)
அன்பார்ந்த இணையதள நண்பர்களே!
-- அன்னை மரியாவை இயேசுவின் தாய் எனப் போற்றுகின்ற திருச்சபை
அதே அன்னையைக் "கடவுளின் தாய்" எனவும் வாழ்த்திப் புகழ்கின்றது.
கடவுளுக்கு நாம் அளிக்கின்ற ஆராதனையை நாம் மரியாவுக்கு வழங்குவதில்லை.
ஏனென்றால் மரியா கடவுளின் படைப்பு. கடவுளுக்கு நிகரான நிலை அவருக்குக்
கிடையாது. ஆனால் கடவுளின் திருமகனாகிய இயேசுவை அந்த அன்னை இந்த
உலகிற்குப் பெற்றுத் தந்தார். எனவே, அவருக்குச் சிறப்பு மரியாதை
செலுத்துவது பொருத்தமே என திருச்சபை கற்பிக்கிறது. வானதூதர் கபிரியேல்
மரியாவுக்குத் தோன்றுகிறார். "அருள்மிகப் பெற்றவரே" என்று
கூறி அவரை வாழ்த்துகிறார் (காண்க: லூக் 1:28). பழைய கத்தோலிக்க
மொழிபெயர்ப்பில் "அருள்நிறைந்தவளே, வாழ்க" என்று இலத்தீன் பாடத்தின்
நேர் தரவாக இருந்தது. புராட்டஸ்டாண்டு சபையினரின் பெயர்ப்பில்
"கிருபை பெற்றவளே, வாழ்க" என்றுள்ளது. உண்மையிலேயே கடவுள் மரியாவுக்கு
ஒரு சிறப்பான மாண்பை அளித்தார் என்பதில் ஐயமில்லை; அதற்கான
விவிலிய ஆதாரமும் உள்ளது. ஆனால் கத்தோலிக்க திருச்சபை மரியாவைக்
கடவுளின் நிலைக்கு உயர்த்தி வழிபடுகிறது என்று சிலர் குற்றம்
காண்கிறார்கள். இவ்வாறு குற்றம் காண்பது சரியல்ல என்பதைச்
சுட்டிக்காட்டியாக வேண்டும். அண்மையில் ஒரு வலைப்பதிவில் கண்டது
இது: கேள்வி: "மரியாளை வணங்கக் கூடாது (றழசளாippiபெ ஆயசல ளை
ளin) என உரோமன் கத்தோலிக்கர்களுக்கு விளக்குவது எப்படி?" இதற்கு
தரப்படுகின்ற பதில்: "இயேசு பூமிக்கு வர மரியாள் ஒரு பாத்திரமாக
இருந்தாள். அவள் ஒரு பாக்கியமான பெண்தான். அதில் சந்தேகமில்லை.
சோறு சமைக்க வேண்டுமென்றால் ஒரு பாத்திரம் (உழழமநச) தேவைப்படுகின்றது.
சமைத்தப்பின்பு சோறுதான் சாப்பிட வேண்டும். பாத்திரத்தை (உழழமநச)
அல்ல. மரியாள் பாத்திரம். இயேசு அந்த உணவு. மரியாளை வழிபடுவது
பாத்திரத்தைக் கடித்துச் சாப்பிடுவது போன்று இருக்கிறது".
-- மேலே தரப்பட்ட மேற்கோளிலிருந்து நாம் அறிவது என்ன? சிலர் கத்தோலிக்கர்
பற்றி உண்மையிலேயே தவறான கருத்துக் கொண்டிருப்பது தெளிவாகவே
தெரிகிறது. கத்தோலிக்கர் மரியாவைக் கடவுளாகக் கருதுவதும் இல்லை,
நம் மீட்பரும் இடைநிலையாளருமாகிய இயேசு கிறிஸ்துவுக்கு நிகராக
மரியாவைக் கொள்வதும் இல்லை. இரண்டாம் வத்திக்கான் சங்கம்
(1962-1965) இந்த உண்மையை அழகாக எடுத்துரைக்கிறது. திருச்சபை
வழக்கில் கடவுளுக்கு நாம் அளிக்கின்ற வழிபாடு "ஆராதனை" (யனழசயவழைn)
எனவும் மரியாவுக்கு நாம் அளிக்கின்ற மரியாதை "வணக்கம்" (எநநெசயவழைn)
எனவும் கலைச்சொற்களால் குறிக்கப்படுகின்றன. இதோ வத்திக்கான் சங்கம்
தரும் போதனை: "திருச்சபை மரியாவைத் தனிப்பட்டதொரு வணக்கத்தால்
(எநநெசயவழைn) தக்க காரணத்துடன் பெருமைப்படுத்துகிறது. ஏனெனில்...இவர்
கடவுளின் தூய்மைமிகு தாய் ஆவார். தூய கன்னியை தொடக்க முதலே, நம்பிக்கை
கொண்டோர் 'கடவுளின் தாய்' என்றழைத்து வணங்கினர்... திருச்சபையில்
என்றும் இருந்துள்ள இவ்வணக்கம் உண்மையிலேயே தனிப்பட்டது; மனிதரான
வாக்குக்கும் தந்தைக்கும் தூய ஆவியார்க்கும் நம் அளிக்கும் ஆராதனையிலிருந்து
(யனழசயவழைn) உள்ளியல்பிலேயே இது வேறுபட்டது; இந்த ஆராதனையை (யனழசயவழைn)
இவ்வணக்கம் (எநநெசயவழைn) மிகச் சிறந்தவிதமாய் ஊக்குவிக்கும்
எனலாம்" (திருச்சபை, எண் 66).
மன்றாட்டு
இறைவா, உம் திருமகனின் தாயாக நீர் தேர்ந்தெடுத்த அன்னை மரியாவிடம்
துலங்கிய ஆழ்ந்த நம்பிக்கை எங்கள் வாழ்விலும் விளங்கிட அருள்தாரும்.
"கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" (லூக்கா1:37)
அன்பார்ந்த இணையதள நண்பர்களே!
-- கிறிஸ்து பிறந்த விழாவை டிசம்பர் மாதம் 25ஆம் நாம்
கொண்டாடுகிறோம். அதற்கு சரியாக ஒன்பது மாதங்களுக்கு முன்னர்,
மார்ச் 25ஆம் நாள், இயேசுவின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்ட நிகழ்ச்சியைத்
திருச்சபை நினைவுகூர்கிறது. கடவுளின் தூதர் மரியாவிடம் சென்று,
அவர் கருவுற்று ஒரு மகனைப் பெறுவார் என அறிவிக்கிறார் (லூக்
1:26-33). திருமண ஒப்பந்தம் ஆகியிருந்தும் கணவரோடு கூடி
வாழாதிருந்த மரியா, "இது எப்படி நிகழும்?" என்று கேட்ட
கேள்விக்கு வானதூதர் அளித்த பதில்: "கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை"
(லூக் 1:37) என்பதாகும். மனிதர் பல திறமைகளைப் பெற்றிருக்கின்றனர்.
ஆனால் அவர்களுடைய திறமைக்கு ஒரு எல்லை உண்டு. எவ்வளவுதான் அறிவுத்
திறன் கொண்டிருந்தாலும் மனிதரால் கூடுமான சாதனைகள் அளவுக்கு உட்பட்டவையே.
ஆனால் "கடவுளால் எல்லாம் கூடும்". இவ்வாறு கடவுள் வல்லமை
மிக்கவர் என நாம் கூறும்போது இரு அடிப்படையான உண்மைகளை வலியுறுத்துகின்றோம்.
முதலில், கடவுள்தாம் நம்மை உருவாக்கியவர். எனவே, நாம் கடவுளின்
படைப்புகள் என்பதாலும் கடவுள் நம்மைப் படைத்தவர் என்பதாலும் மனிதர்
ஒருபோதுமே கடவுளைப் போல வல்லமை மிக்கவர்களாக மாறிட இயலாது. இரண்டாவது,
கடவுள் விரும்பினால் நம்மை மனித நிலையிலிருந்து உயர்ந்த
நிலைக்குக் கொண்டுசெல்ல இயலும். இதையே நாம் மீட்பு என்கிறோம்.
அதாவது, கடவுள் நம்மீது இரக்கம் கொண்டு, தம் ஒரே மகனை நம் மீட்பராக
அனுப்பி, நம்மைத் தம் வாழ்வில் நிறைவாகப் பங்குபெற அழைத்துள்ளார்.
இது கடவுள் ஆற்றிய அரும்செயலாகும்.
-- எனவே, மனிதரால் இயலாதது ஒன்றுமில்லை என நாம் கூறலாமா? கடவுளின்
அருளை நாம் பெறும்போது நாம் கடவுளின் நிலைவாழ்வில் பங்கேற்பதால்
நாம் ஒருவிதத்தில் கடவுள் தன்மையைப் பெறுகிறோம். இதனால் மனித
நிலை தன் நிறைவைப் பெறுகிறது. நாமும் கடவுளின் வல்லமையால் திடம்
பெறுகிறோம். எனவே நாமும் தூய பவுலோடு சேர்ந்து, "எனக்கு வலுவூட்டுகிறவரின்
துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு" எனக் கூறலாம்
(பிலி 4:13). நம்மை உறுதிப்படுத்துகின்ற கடவுளோடு நாம் எப்போதும்
இணைந்திருந்தால் நம் வாழ்விலும் அதிசய செயல்கள் நிகழும்.
மன்றாட்டு
இறைவா, உம் திருவுளத்தை நிறைவேற்ற எங்களுக்கு அருள்தாரும்.
--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்
.
"நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே
எனக்கு நிகழட்டும்"
அன்பார்ந்த இணையதள நண்பர்களே!
நம் அன்னை மரியாவின் விசுவாச அறிக்கை இது. இன்று தான் அறிக்கையிட்டதை
தன் வாழ்வின் இறுதிவரையிலும் வாழ்ந்து காட்டினாள். இந்த
விசுவாச அறிக்கையின் அடிப்படையில் தன் வாழ்க்கை முழுவதும் கட்டி
எழுப்பினாள். அவர் வாழ்வின் எல்லா நிகழ்வுகளிலும் வலுவூட்டி,
வழிநடத்திச் சென்றது இந்த விசுவாச அறிக்கை.
தன் விசுவாச அறிக்கை குருட்டு நம்பிக்கை அல்ல; மாறாக ஆழ்ந்த அறிவுப்பூர்வமானது
என்பதை மரியா தன் பலவேறு கேள்விகளில் உறுதிப்படுத்துகிறார். வானதூதரின்
வாழ்த்தில் மயங்கிவிடவில்லை. மிகப்பெரிய பதவியிலும் அசந்துவிடவில்லை.
தன் கேள்விகளைக் கேட்கிறார். சந்தேகங்களை நிவர்த்தி
செய்கிறார். வானதூதரால் சொல்லப்பட்ட செய்தியின் சான்றுகளை உறுதிசெய்கிறார்.
அறிவுப்பூர்வமாகச் சில உண்மைகளைக் கண்ட பின் அறிவுக்கு அப்பாற்பட்ட
ஆண்டவனின் ஆற்றலுக்கு தன்னை அர்ப்பணிக்கிறாள். இவ்வாறு விசுவாசத்தற்கு
விளக்கம் தருகிறார் அன்னை மரியா.
ஆகவே விசுவாசம், கடவுள் நம்பிக்கை இவை மூட நம்பிக்கை அல்ல. அறிவில்
ஆரம்பமாகி ஆண்டவனின் அருளில் நிறைவடைவது.முழுமையாக அதன் காரண
காரியங்களை அறிவுப்பூரவமாகத் தெறிந்துகொண்ட காரணத்தால்,தன்
வாழ்வின் எல்லாச் சூழலிலும் குறிப்பாக நிரபராதியான தன்அன்பு
மகனை இளம் வயதில் குற்றவாளியாகச் சிலுவையில் அறைந்து கொன்றதை
அமைந்த உள்ளத்தோடு ஏற்றுக்கொள்ள முடிந்தது.இது விசுவாசம்.
'நான் ஆண்டவரின் அடிமை' என்றதன் வாழ்க்கை வடிவம். இந்த விசுவாச
அறிக்கையும் வாழ்வும் நம் அன்னையை உலகம் போற்றும் பெண்ணாக,
விண்ணக அரசியாக உயர்த்தியுள்ளது. அந்த அன்னையை வேண்டுவோம். அருள்
நிறைந்த மரியே வாழ்க.. .. ..இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.
--அருட்திரு ஜோசப் லியோன்
நற்செய்தி: அருள் நிறைந்தவர்
நாளை கன்னி மரியாளின் அமல உற்பவப் பெருவிழாவைக்
கொண்டாடுகிறோம். 'சாந்த்தா இம்மாகொலாத்தா' என்று இத்தாலியில்
கொண்டாடப்படும் இந்நாளில்தான் எல்லா வீடுகளிலும், தெருக்களிலும்
கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டங்களுக்கான தயாரிப்புக்கள் நடைபெறும்.
அமல உற்பவம் தயாரிப்பின் நாள்.
தன் மகனை இவ்வுலகிற்கு அனுப்ப அன்னை மரியாளை கடவுள் தயாரிக்கும்
நாள்.
தயாரிப்பு இரண்டு நிலைகளில் நடந்தேறுகிறது: ஒன்று, தயாரிப்பு
என்பது இறைவன் அன்னை மரியாளுக்குக் கொடுக்கும் கொடை. இரண்டு,
தயாரிப்பு என்பது அன்னை மரியாளின் சரணாகதி செயல். ஆக, கொடையும்
செயலும் இணைந்து செல்லும் நாள் இந்நாள்.
'உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது' என வானதூதர் மரியாளிடம்
மொழிகின்ற இடத்திலேயே அன்னை மரியாளின் அமல உற்பவம் அழகாக
புரிந்துவிடுகிறது.
'நாமே அமல உற்பவம்' என்று தன்னை லூர்து நகரில் வெளிப்படுத்தினார்
மரியாள்.
நாம் ஒவ்வொருவருமே ஏதோ ஒரு நோக்கோடு படைக்கப்பட்டு இவ்வுலகிற்கு
அனுப்பப்பட்டவர்கள்தாம். இறைமகனை நம் வயிற்றில் தாங்கும்
பாக்கியம் இல்லாதவர்களாக இருக்கலாம். ஆனால், நாம் வாழும் அனைத்தும்
பாக்கியமே என்பதை தன் வாழ்க்கையால் நமக்கு உணர்த்திவிட்டார் மரியாள்.
_ Fr. Yesu Karunanidhi, Madurai.
|
|