|
01 ஐனவரி 2018 |
|
புது வருடம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
"ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக்
காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது
அருள் பொழிவாராக!
எண்ணிக்கை ஆகமத்திலிருந்து வாசகம்
6:22-27
ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும்
சொல்: நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை: "ஆண்டவர்
உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை
உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம்
திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக! "இவ்வாறே
அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்: நானும்
அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
தி.பா:
67;1-2,,4-5.7
=================================================================================
பல்லவி: கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!
கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக
ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்;
பல்லவி
பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர்.
வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! பல்லவி
ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின்
நாடுகளை வழிநடத்துகின்றீர்.பல்லவி
கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும்
உம்மைப் போற்றுவார்களாக. பல்லவி
கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர்
அவருக்கு அஞ்சுவராக!பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
இனி நீங்கள் அடிமைகளல்ல: பிள்ளைகள்தாம்:
பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள்.
திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய
திருமுகத்திலிருந்து வாசகம் 4:4-7
சகோதர சகோதரிகளே, காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த
நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப்
பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும்
அனுப்பினார். நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின்
ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்: அந்த ஆவி "அப்பா,
தந்தையே" எனக் கூப்பிடுகிறது. ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல
பிள்ளைகள்தாம்: பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள்.
இது கடவுளின் செயலே.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில்
இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார். அல்லேலூயா
=================================================================================
நற்செய்தி
வாசகம்
=================================================================================
புனித லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து
வாசகம்.2:16-21
அக்காலத்தில் இடையர்கள் விரைந்து சென்று மரியாவையும்
யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும்;
கண்டார்கள். பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச்
சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட யாவரும்,
இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர்.
ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச்
சிந்தித்துக் கொண்டிருந்தார். இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை
அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து
பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு
எல்லாம் நிகழ்ந்திருந்தது. குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய
வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே
வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 1
=================================================================================
அன்னையின் ஆசியோடு!
இன்று புத்தாண்டு விழா. இறைவனின் அன்னையாம் தூய மரியாவின்
பெருவிழா. நம் வாழ்வின் அனைத்து நிகழ்வுகளையும் நம் தாயின் ஆசியோடு
தொடங்குதுதானே நமது பண்பாடு. எனவே, இந்தப் புத்தாண்டையும் இறைவனின்
தாயும், நம் விண்ணக அன்னையுமான மரியாவின் ஆசியோடு தொடங்குவோமா!
இந்தப் புதிய ஆண்டில் ஒரு புதிய நல்ல பழக்கம் ஒன்றை நாம்
மேற்கொண்டால் என்ன? குறி;ப்பாக, அது நம் ஆன்மீக வாழ்வை வளப்படுத்தும்
பழக்கமாக இருந்தால் மிகவும் நல்லது. எடுத்துக்காட்டாக,
நாள்தோறும் விவிலியம் வாசித்து செபிப்பது, அல்லது நாள்தோறும் 3
திருப்பாடல்களை செபிப்பது, அல்லது வாரம் ஒருமுறை உண்ணாநோன்பிருப்பது,
அல்லது வாரம் ஒருநாள் தொலைக்காட்சியையோ, அலைபேசியையோ பயன்படுத்தாமல்
இருப்பது என்று ஏதாவது ஒரு புதிய பழக்கத்தை இந்த ஆண்டின் முதல்
நாளில் இருந்து தொடங்கினால் என்ன? நல்ல பழக்கங்கள் நம் ஆளுமையை
வளர்த்து, நம் வாழ்வை வளப்படுத்துகின்றன. உளவியலாளர்கள்
சொல்கிறார்கள் எந்த ஒரு பழக்கமும் உருவாக ஒரு செயலைத் தொடர்ந்து
21 நாள்கள் செய்தால் அது பழக்கமாக மாறிவிடும் என்று. ஆம், 21
நாள்கள் என்பதுதான் ஒரு பழக்கத்தை உருவாக்கவோ, நிறுத்தவோ
தேவைப்படும் நாள்கள்.
இன்று முதல் ஒரு நல்ல செயலைத் தேர்ந்தெடுத்து, அதனை 21 நாள்கள்
தொடர்ந்து கடைப்பிடித்து, நம் வாழ்வின் தொடர்பழக்கமாக அதனை
மாற்றுவோம். நம் அன்புத் தாய் அன்னை மரியா அதற்கான ஆசியை நமக்கு
வழங்குவார்.
மன்றாட்டு:
அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நீர் தந்திருக்கிற
இந்தப் புதிய ஆண்டு என்னும் கொடைக்காக உமக்கு நன்றி
கூறுகிறோம். இந்தப் புதிய ஆண்டில் உமது ஆசிக்காக இறைஞ்சுகிறோம்.
நாங்கள் தொடங்க விரும்பும் ஒரு நல்ல பழக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்க
உமது ஆவியின் ஆற்றலை எங்களுக்குத் தந்தருளும். ஆமென்
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 2
=================================================================================
மரியா இறைவனின் தாய்!
இன்னும் மண்ணில் பிறக்காத குழந்தை ஒன்று இறைவனிடத்தில் மிக உருக்கமாகக்
கேட்டது, "நாளைய நாளில் நீர் என்னை மண்ணுலகிற்கு அனுப்பப்போவதாக
அறிந்தேன். அப்படி நீர் என்னை அனுப்பும் பட்சத்தில் - ஒரு குழந்தையாக
நான் பிறக்கும் பட்சத்தில்
- அங்கே எப்படி நான் வாழ்வது?". அதற்கு
இறைவன் அதனிடம், "உன்னுடைய வருகைக்காக தேவதை ஒருத்தி
காத்துக்கொண்டிருக்கின்றாள். அவள் உனக்குத் தேவையான அத்தனையும்
பார்த்துக்கொள்வாள்" என்றார்.
"நான் மண்ணுலகிற்கு போனபின்பு, உம்மிடத்தில் நான் பேசவேண்டும்
என்று நினைக்கின்றேன். அப்போது நான் என்ன செய்வது?" என்று கேட்டது
குழந்தை. "அதைப் பற்றி ஒன்றும் கவலைப்படாதே, உன்னுடைய தேவதை உன்னுடைய
கைகளைக் கூப்பிவைத்து, உன்னை என்னிடத்தில் ஜெபிக்க வைப்பாள்,
அதன்மூலம் நீ என்னிடத்தில் பேசிக்கொள்ளலாம்" என்றார் இறைவன்.
தொடர்ந்து குழந்தை இறைவனிடம், "இங்கே நான் பாதுகாப்பாக இருந்துவிட்டேன்.
ஆனால், நான் மண்ணுலகிற்குப் போனபின்பு, எனக்கு ஆபத்து வருகின்றபோது,
என்னை யார் பாதுகாப்பார்?" என்று கேட்டது. அதற்கு இறைவன் மிகவும்
அமைதியாக, "உன்னுடைய தேவதை உனக்கு எந்தவொரு ஆபத்தும் வராமல்,
ஏன் தன்னுடைய உயிரைத் தந்தாவது உன்னைப் பாதுகாத்துக்கொள்வாள்"
என்றார்.
இறுதியாகக் குழந்தை தன்னுடைய முகத்தை மிகவும் சோகமாக
வைத்துக்கொண்டு சொன்னது, "நான் மண்ணுலகிற்குப் போனபின்பு, உம்முடைய
திருமுகத்தைக் காணமுடியாது போய்விடுமே, அப்போது உமது திருமுகத்தைக்
காண்பதற்கு நான் என்ன செய்வது?". "மண்ணுலகில் உனக்கென்று ஒரு
தேவதை இருக்கிறாளே, அவள் உன்னை என் பக்கம் திருப்புவாள், உன்னை
என்னுடைய திருமுகத்தைக் காணச்செய்வாள்" என்றார் இறைவன். குழந்தை
சற்று பொறுமை இழந்து, "எதற்கெடுத்தாலும் தேவதை இருக்கிறாள், தேவதை
இருகின்றாள் என்று சொல்கின்றீரே, யார் அந்த தேவதை?" என்று கேட்டது.
இறைவன் மிகவும் சாந்தமாக, "அந்தத் தேவதை (உன்னுடைய) அம்மா
தான்" என்றார்.
ஆம், இந்த மண்ணுலகில் நமக்காக இருக்கின்ற தேவதை, தெய்வம், இறைவி
எல்லாம் "அம்மா"தான். இந்த உன்னதத்தை உணர்ந்துதான், "இறைவன்
எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்பதால்தான் தாயினைப்
படைத்தார்" என்று யூதப் பழமொழி சொல்கின்றது.
இன்று தாயாம் திருச்சபை "மரியா இறைவனின் தாய்" என்னும்
பெருவிழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றது. ஆண்டின் முதல் நாளான இன்று,
அன்னையின் அடிதொட்டு தொடங்குவது உண்மையில் மிகப் பெரிய ஆசிர்வாதம்தான்.
இவ்வேளையில், இன்று நாம் கொண்டாடுகின்ற விழா நமக்கு எடுத்துரைக்கும்
செய்தி என்ன? என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
கி.பி.431 ஆம் ஆண்டு, எபேசு நகரில் நடைபெற்ற திருச்சங்கம்
"மரியா இறைவனின் தாய்" என்னும் விசுவாசப் பிரகடனத்தை அறிக்கையிட்டது.
அன்றிலிருந்து இன்றுவரை மரியாவை இறைவனின் தாயாகப் பாவித்து ஒவ்வொரு
ஆண்டும் ஜனவரித் திங்கள் முதல் நாளில், விழா எடுத்துக்
கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். மரியா இறைவனின் தாயாகின்றபோது,
இறைவனின் அன்புப் பிள்ளைகளாகிய நமக்கும் தாய் என்பதுதான் உண்மை.
எனவே, ஒரு தாய்க்குரிய வாஞ்சையுடன் மரியா எப்படியெல்லாம் நமக்குத்
துணை புரிகின்றார், நம்மை ஆசிர்வதிக்கின்றார் என்று இப்போது
பார்ப்போம்.
மரியா, இந்த உலகமே உயிருக்குப் பயந்து, (நம்மை விட்டு) ஓடிபோனாலும்,
ஓடிப்போகாத ஒரு தாய் என்று சொன்னால் மிகையாகாது. உரோமை அரசாங்கம்
இயேசு கிறிஸ்துவின்மீது சிலுவையைச் சுமத்தி, கல்வாரி மலையில்
அறைந்து கொன்றபோது, அவரோடு யாருமே இல்லை, மரியா மட்டும்தான்
அவரோடு இருந்தார். அப்படியானால், இயேசுவோடு இறுதிவரைக்கும் இருந்த
ஒரே சொந்தம் தாய் மரியா என்பதுதான் உண்மை. இயேசுவோடு மட்டுமல்ல,
நம்மோடும் இறுதிவரைக்கும் இருக்கின்ற ஒரே சொந்தம் தாய் (மரியா)
என்பதுதான் அசைக்கக் முடியாத உண்மை. அதனால்தான் முன்னாள் அமெரிக்க
அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஒருமுறை இவ்வாறு சொன்னார், "தாயைப்
பெற்றிருக்கின்ற யாரும் ஏழை இல்லை" என்று. ஆம், நமக்கென்று ஒரு
தாய் இருகின்றாள், அவள் நம்மை ஒருபோதும் விட்டு விலகிவிடாத
தாய், அவள் நம்மோடு இருக்கின்றபோது, நாம் ஒன்றும் ஏழைகள் இல்லை,
மாறாக ஆசிர்பெற்ற மக்கள்.
அடுத்ததாக, மரியா தன்னுடைய மகன் இயேசுவுக்காக, இன்று நமக்காக
பல்வேறு தியாகங்களை மேற்கொண்ட, மேற்கொள்ளும் ஒரு தியாகச் சுடர்.
ஒரு குழந்தையைப் பெற்று, வளர்த்து, ஆளாக்கி அழகுபார்ப்பதற்கு
ஒரு சாதாரண தாய் எவ்வளவு தியாகங்களை மேற்மேற்கொள்கின்றாளோ, அவ்வளவு
தியாகங்களையும் மேற்கொண்டவர் அன்னை மரியா. அது மட்டுமல்லாமல்
தான் பெற்றெடுத்த மகன் தனக்காக வாழாமல், மனுக்குல மீட்புக்காக
தன்னுடைய வாழ்வைத் தியாகம் செய்தவர். அப்படிப்பட்ட தியாகச்
செம்மலை ஈன்றெடுத்து, அவரை மனுக்குல மீட்புக்காக தியாகம் செய்த
மரியாவின் தியாக உள்ளத்தை எப்படி வார்த்தைகளால் விவரித்துச்
சொல்வது?..
வழக்கமாக தாயின் தியாகத்தை பெலிக்கான் பறவையோடு ஒப்பிடுவார்கள்.
பெலிக்கான் பறவை தன்னுடைய குஞ்சுகளுக்கு இரை கிடைக்காதபோது, தன்னுடைய
கூரிய, சிவந்த அலகினால் தன்னுடைய மார்பினில் குத்தி, அதிலிருந்து
வழிகின்ற இரத்தத்தைக் கொண்டு குஞ்சுகளுக்கு உணவூட்டும். தாயும்
கூட அப்படித்தான் தன்னுடைய பிள்ளை நன்றாக இருக்கவேண்டும்,
வாழ்வில் உயரவேண்டும் என்பதற்காக, தன்னுடைய உடலை வருத்திகொண்டு
பல்வேறு தியாகங்களைச் செய்கின்றாள். அதனால்தான் "ஈரேழு ஜென்மங்கள்
எடுத்தாலும் உழைத்தாலும் உனக்கிங்கு நான் பட்ட கடன்தீருமா?" என்று
தாயின் தியாகத்திற்கு ஈடாக எதையும் கொடுத்துவிட முடியாது என்கிறார்
கவிஞர் வாலி.
இப்படி நமக்காக பல்வேறு தியாகங்களை மேற்கொள்கின்ற, இறுதிவரைக்கும்
உடனிருக்கின்ற தாய், அன்னை மரியைப் பெற்றிருப்பது உண்மையில்
நாம் பெற்ற பாக்கியம்தான். இந்த அன்னையின் அன்பு மக்களாக, அவருக்கு
உகந்தவராக வாழவேண்டும் என்றால், அந்த அன்னை நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது
ஒன்றே ஒன்றுதான். அது வேறொன்றுமில்லை "அவர் (இயேசு) சொல்வதையெல்லாம்
செய்வதுதான்" (யோவா 2:5). நாம் இயேசு சொன்ன வழியில் நடக்கும்போது,
நாம் அன்னையின் அன்பு மக்களாக மாறுவதோடு மட்டுமல்லாமல், இயேசுவின்
அன்புச் சகோதர சகோதரிகளாக மாறுகின்றோம் என்பது உண்மையாகின்றது.
இயேசு அல்லது இறைவன் சொன்ன வழியில் நாம் நடக்கும்போது, அவர்
நமக்கு இன்று மூன்று ஆசிர்வாதங்களைத் தருவதாக வாக்களிக்கின்றார்.
பாதுகாப்பு, அருள், அமைதி ஆகிய இம்மூன்றும்தான் இறைவன் தருகின்ற
ஆசிர்வாதங்கள். (இன்றைய முதல் வாசகம்),
ஆகவே, மரியா இறைவனின் தாய் என்னும் விழாவைக் கொண்டாடுகின்ற
நாம், மரியா நம்மீது கொண்டிருக்கும் அளவுகடந்த அன்பினை உணர்ந்து,
அவருடைய அன்பு மக்களாக வாழ முயற்சி செய்வோம். அதே நேரத்தில் இறைவனுடைய
வழியில் நடப்போம். அதன்வழியாய் இறையருள் நிறைவாய் பெறுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 3
=================================================================================
இறைவனின் தாய், அன்னை மரியா
ஆண்டின் முதல் நாளாகிய இத்திங்களன்று, திருஅவை,
இந்நாளை, இறைவனின் தாய் அன்னை மரியாவின் பெருவிழாவாக
சிறப்பித்தது. உள்ளூர் நேரம் 10 மணிக்கு, அதாவது, இந்திய
மற்றும் இலங்கை நேரம், பிற்பகல் 2.30 மணிக்கு வத்திக்கான்
புனித பேதுரு பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை
வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். அன்னை மரியாவை
மையப்படுத்தி, அவர் வழங்கிய மறையுரையின் சுருக்கம்:
அன்னை மரியாவின் மிக உயரிய சிறப்புப் பட்டமான "இறைவனின் தாய்"
என்ற பெயருடன் ஆண்டின் முதல் நாளை நாம் துவக்குகின்றோம். ஏன்
அன்னை மரியாவை நாம், "இயேசுவின் தாய்" என்று அழைக்காமல்,
"இறைவனின் தாய்" என அழைக்கிறோம் என்பது குறித்து சிந்திக்க
வேண்டும். அன்னை மரியாவில் மனு உருவெடுத்த இறைமகன்,
நம்மைப்போல் மனித நிலைகளை எடுத்துக்கொண்டார். அன்னை மரியாவை,
இறைவனின் தாய் என நாம் அழைக்கும்போது, கடவுள், மனித
குலத்திற்கு அருகாமையில் உள்ளார் என்பது நமக்கு
நினைவூட்டப்படுகிறது. வானகத்தின் இறைவனும், முடிவற்றவருமான,
கடவுள், நம்மோடு இருப்பதற்கென, நம்மைப்போல் உருவெடுத்தார்.,
மனிதன் தனியாக இல்லை, அவன் அநாதையும் அல்ல, என்பதை அறியும்போது
மகிழ்கிறோம். அன்னை மரியாவின் கைகளில் இருக்கும் இயேசு
பாலனைப்போல், நாமும் இறைவனின் கைகளில் குழந்தையாக உள்ளோம்.
மனித குலம் இறைவனுக்கு மதிப்பு மிக்கது. ஆகவே, மனிதனுக்கு
ஆற்றும் பணி, இறைவனுக்கு ஆற்றும் பணியாகிறது. தாயின் வயிற்றில்
கருவானது முதல், அனைத்து உயிர்களும், முதியோர், நோயாளிகள்,
துன்புறுவோர் என, ஒவ்வொரு உயிரும் வரவேற்கப்பட்டு,
அன்புகூரப்பட்டு உதவப்படவேண்டும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம், " மரியா,
இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்தி சிந்தித்துக்
கொண்டிருந்தார்" என்பதைப் பார்த்தோம். கிறிஸ்து பிறப்பு
காலத்தில் ஒரு வார்த்தை கூட அன்னை மரியா பேசியதாக இல்லை.
பல்வேறு நேரங்களில், பல்வேறு வழிகளில் பேசி வந்த இறைவன்,
இப்போது, காலம் முழுமைபெற்றபோது, எப்படி அமைதியின் உருவாக,
பேசமுடியாத குழந்தையாக உள்ளாரோ, அதேபோல், அன்னை மரியாவும்,
இயேசு பாலனுடன் கொண்டிருந்த ஒருமைப்பாட்டில் அமைதி காக்கிறார்.
நாமும், குடிலை அமைதியில் உற்றுநோக்கும்போது, நம் வாழ்வின்
அர்த்தத்தை காண்டுகொள்கிறோம். நாம் அமைதி காக்கும்போது, நம்
உள்ளத்தில் இறைவன் பேசுவதற்கு அனுமதிக்கிறோம்.
அன்னை மரியா தன் உள்ளத்தில் இருத்தி சிந்தித்தவை, மகிழ்வும்,
சோகங்களுமே. ஒரு பக்கத்தில், இயேசுவின் பிறப்பு, யோசேப்பின்
அன்பு, இடையர்களின் வருகை, ஒளிமிக்க ஓர் இரவு என பல விடயங்கள்
மகிழ்வளித்தாலும், மறுபக்கம், வருங்காலம் குறித்த அச்சமும்,
வீடற்ற நிலையும், சோகங்களாக இருந்தன. அனைத்தையும் அவர் தன்
இதயத்தில் இருத்தி அங்கிருக்கும் இறைவனுடன் உரையாடினார்.
நாமும் நம் துயர்கள் குறித்து உரையாடலை மேற்கொள்வோம், நம்முள்
இருக்கும் இறைவனுடன். நம்மை தன் இதயத்தில் வைத்து காக்கும்
இறைவன், இப்போது நம் வாழ்வில் குடிகொள்ள வந்துள்ளார்.
அனைத்தையும் அமைதியாக ஏற்று, இறைவனிடம் கொணர்வது, அன்னை
மரியாவின் இரகசியம். அன்னை மரியாவைப்போல் நாமும் இருக்க
வேண்டும் என இறைவன் விரும்புகிறார், அதாவது, எளிய மனதினராக,
பொருள் செல்வம் இல்லையெனினும், அன்பில் செல்வந்தராக,
குற்றமற்றவராக, இயேசுவில் இணைந்து, இறைவனை நம் இதயத்திலும்,
நமக்கு அடுத்திருப்பவரை நம் வாழ்விலும் கொண்டிருப்பவர்களாக
செயல்படவேண்டும் என்று.
அன்னை மரியாவின் மீது பக்தி கொண்டிருப்பது, கிறிஸ்தவ
வாழ்வுக்கு தேவையான ஒன்றாகும். அன்னையைப் பார்த்து, எதெது நம்
வாழ்வுக்கு முக்கியான தேவை என்பதை கற்றுக் கொள்வோம். நம்
அனைவருக்கும் ஓர் அன்னையின் இதயம் தேவை. ஆம், இறைவனின் அன்பை
உணரவும், நமக்கு அடுத்திருப்போரின் இதயத்துடிப்புக்களை அறிந்து
கொள்ளவும், அன்னையின் இதயம் தேவை. உன்னத படைப்பாம், அன்னை
மரியா, இந்த ஆண்டில், இறைமகனின் அமைதியை நமக்கும்,
இவ்வுலகிற்கும் வழங்குவாராக.
இவ்வாறு தன் மறையுரையை வழங்கினார் திருத்தந்தை.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி |
|