Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                     19 ஜனவரி 2020  
                                                           பொதுக்காலம் 2 ஆம் வாரம்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
உலகம் முழுதும் மீட்பு அடைய, உன்னை ஒளியாக ஏற்படுத்தினோம்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49:3, 5-6

ஆண்டவர் என்னிடம், "நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன்" என்றார். யாக்கோபைத் தம்மிடம் கொண்டு வரவும், சிதறுண்டு இஸ்ரயேலை ஒன்று திரட்டவும் கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார்; ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப்பெற்றவன்; என் கடவுளே என் ஆற்றல்; அவர் இப்பொழுது உரைக்கிறார்; அவர் கூறுவது யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும் இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ? உலகம் முழுவதும் மீட்பை அடைதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா 40:1 மற்றும் 3, 6-7, 7-8, 9 Mp3
=================================================================================
 பல்லவி: ஆண்டவரே உம் அடியான்; உம் திருவுளத்தை நிறைவேற்ற இதோ வருகின்றேன்

1 நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார்.
3 புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்; - பல்லவி

6 பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர்.
7 எனவே, 'இதோ வருகின்றேன்; - பல்லவி

7 என்னைக்குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது;
8 என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்;
உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது' - பல்லவி

9 என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்;
நான் வாயை மூடிக் கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். - பல்லவி


================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் நம் ஆண்டவராம் இயேசுவிடமிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக!

தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-3


கொரிந்து நகரிலுள்ள கடவுளின் திருச்சபைக்கு அவர் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாக அழைக்கப்பட்ட பவுலும் சகோதரராகிய சொஸ்தேனும் எழுதுவது; இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்றுத் தூயோராக்கப்பட்டு இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ள உங்களுக்கும், எல்லா இடங்களிலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிக்கையிடும் யாவருக்கும், நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக! இயேசு கிறிஸ்து நமக்குமட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர்.


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(யோவா 1: 14a, 12a)
அல்லேலூயா, அல்லேலூயா! "வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார்' அல்லேலூயா.
 
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இதோ கடவுளின் செம்மறி! இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்.

தூய யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1:29-34


மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன். இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்; தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன்" என்றார். தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது; "தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவர் மீது இருந்ததைக் கண்டேன். இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் "தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர்" என்று என்னிடம் சொல்லியிருந்தார். நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன். "


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
I
எசாயா 49: 3, 5-6
II 1கொரிந்தியர் 1: 1-3
III யோவான் 1: 29-34

இயேசு என்னும் கடவுளின் ஆட்டுக்குட்டி

நிகழ்வு

ஒரு சமயம் மிகச்சிறந்த பிரசங்கியாரான - மறையுரையாளரான சார்லஸ் ஸ்பெர்ஜன் (C.H.Spurgeon), இலண்டனில் உள்ள கிறிஸ்டல் அரண்மனையில் மறையுரை ஆற்றுவதற்கு சிறப்பு அழைப்புப் பெற்றிருந்தார். மறையுரை ஆற்றுவதற்கு முந்தைய நாள் இவர் தன்னுடைய நெருங்கிய நண்பரைக் கூட்டிக்கொண்டு, மறையுரையாற்றும் அரங்கத்திற்குச் சென்றார். அரங்கத்தில் இவர் மறையுரை ஆற்றும் இடத்தில் நின்றுகொண்டு, தான் பேசுவது அரங்கத்தில் எங்கிருந்து கேட்டாலும் கேட்கிறதா என்று சோதித்துப் பார்ப்பதற்காகத் தன்னுடைய நண்பரை அரங்கத்தில் ஆங்காங்கே நிற்கச் சொல்லி, "இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகத்தின் பாவத்தைப் போக்குபவர்" என்ற வார்த்தைகளை மீண்டும் மீண்டுமாக உரக்கச் சொன்னார். சார்லஸ் ஸ்பெர்ஜனின் நண்பரும், "நீர் பேசுவது அரங்கத்தின் எந்தப் பகுதியிலிருந்து கேட்டாலும் நன்றாகக் கேட்கின்றது" என்று அவரிடம் சொன்னார்.

(இன்றைக்கு இருப்பதுபோன்று தெளிவான ஒலி அமைப்பு (Sound System) அன்றைக்குக் கிடையாது. இதனாலேயே சார்லஸ் ஸ்பெர்ஜன் தன்னுடைய நண்பரின் உதவியுடன் கிறிஸ்டல் அரண்மனையில் இருந்த அரங்கில், தான் பேசுவது எல்லா இடத்திலும் கேட்கின்றதா என்று சோதித்துப் பார்த்தார்.

சார்லஸ் ஸ்பெர்ஜனும் அவருடைய நண்பரும் அரங்கில் ஒலியமைப்பைக் குறித்துச் சோதித்துப் பார்த்த பின்னர், அங்கிருந்து நகர்ந்து சென்றனர். இதற்கிடையில், அந்த அரங்கின் கூரையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பணியாளர் ஒருவர் சார்லஸ் ஸ்பெர்ஜன் மீண்டுமாக மீண்டுமாகச் சொன்ன வார்த்தைகளால் தொடப்பட்டார். "இயேசு உலகின் பாவத்தைப் போக்குகின்றார் என்றால், அவர் என்னுடைய பாவத்தையும் போக்குவார்தானே! அப்படியானால், நான் என்னுடைய பாவ வாழ்க்கையிலிருந்து விலகி, இயேசுவிடம் சரணடைந்து, புதியதொரு வாழ்க்கை வாழவேண்டும்" என்று தனக்குள் சொல்லிக்கொண்டு, புதிய மனிதனாக வாழத் தொடங்கினார்.

இயேசு நம்முடைய பாவங்களை மன்னித்து நமக்குப் புதுவாழ்வு தருகின்றார். அதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய இறைவார்த்தையும் குறிப்பாக நற்செய்தி வாசகமும் நமக்கு இதே செய்தியைத்தான் எடுத்துக்கூறுகின்றது. ஆதலால் நாம், இயேசு எப்படி நம்முடைய பாவங்களைப் போக்கி, நமக்குப் புதுவாழ்வு தருகின்றார் என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

உலகின் பாவங்களைப் போக்கும் இயேசு

நற்செய்தியில், இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட திருமுழுக்கு யோவான், "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்" என்கின்றார். திருமுழுக்கு யோவான் இயேசுவைக் குறித்துத் தன் சீடர்களிடம் இவ்வாறு சொன்னது, அவர்களுக்குப் பாஸ்கா ஆட்டினையும் (விப 12) குற்றம்நீக்கப் பலிக்காக ஒப்புக்கொடுக்கப்படும் ஆட்டினையும் (லேவி 14: 12, 21,24; எண் 6:12) நினைவுபடுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

எருசலேம் திருக்கோயிலில் காலை, மாலை என இரண்டு வேளையிலும் குற்றம்நீக்கப் பலியாக ஆடுகள் பலிகொடுக்கப்பட்டன (விப 29: 38-42). திருமுழுக்கு யோவான் இயேசு கிறிஸ்துவைப் பற்றி மேலே சொன்ன வார்த்தைகள், இயேசுவை உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற ஆட்டுக்குட்டியாக நமக்கு எடுத்துக்கூறுகின்றன. இறைவாக்கினர் எசாயா நூலில் இடம்பெறுகின்ற "(அவர்) அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டி போலும்..." (எசா 53:7) என்ற வார்த்தைகள் இந்த உண்மையை இன்னும் தெளிவாக்குகின்றன.

இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய இன்னொரு முக்கியமான செய்தி, திருமுழுக்கு யோவான் இயேசு கிறிஸ்துவை, "கடவுளின் ஆட்டுக்குட்டி" என்று சொல்லிவிட்டு, "இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்" என்று சொல்கிறார் அல்லவா. இதில் "பாவத்தைப் போக்குபவர்" என்று என்பதை இரண்டு விதங்களில் புரிந்துகொள்ளலாம் என்பதுதான். ஒன்று, இயேசு உலகிலிருந்து பாவத்தை எடுத்துவிட்டதாகவும் (Take away) இரண்டு, இயேசு உலகின் பாவத்தை, துன்பத்தை எப்படிச் தன்மேல் சுமந்துகொண்டாரோ (எசா 53:4) அதுபோன்று சுமந்துகொண்டார் (Take Up) என்றும் புரிந்துகொள்ளலாம்.
ஆம், இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவருடைய பாவத்தை பாவத்தையும் தன்மேல் சுமந்துகொண்டு, நமக்கு மீட்பளித்தார்.

உலகிற்கு வாழ்வுதரும் இயேசு

இன்றைய நற்செய்தி வாசகம், இயேசுவை உலகின் பாவங்களைப் போக்குபவர் என்று சுட்டிக்காட்டுகின்ற அதே வேளையில், அவரை உலகிற்கு வாழ்வுதருபவராகச் சுட்டிக்காட்டுகின்றது. அது எப்படி என்று சிந்தித்துப் பார்ப்போம்.

நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சான்று பகரும்பொழுது, நானோ தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கின்றேன்... இயேசுவோ தூய ஆவியாரால் திருமுழுக்குக் கொடுப்பார் என்று கூறுகின்றார். தூய ஆவியால் திருமுழுக்கு என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். இயேசு விண்ணேற்றம் அடைவதற்கு முன்பாகத் தன் சீடர்களிடம், "இன்னும் சில நாள்களில் நீங்கள் தூய ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள்" (திப 1:5) என்பார். இயேசு சொன்னது போன்றே அவர்கள் பெந்தக்கோஸ்து நாளில் தூய ஆவியால் திருமுழுக்குப் பெற்றார்கள். இங்கு தூய ஆவியால் திருமுழுக்கு என்பதை பழைய பாவவாழ்விற்கு இறந்து, கிறிஸ்துவின் உடலில் ஓர் உறுப்பாக மாறுவது என்று அர்த்தப்படுத்திக்கொள்ளலாம் (1கொரி 12:13). கிறிஸ்துவின் உடலில் ஒரு உறுப்பாக மாறிவிட்டோம் என்றால், நாம் புதுவாழ்வு அடைந்துவிட்டோம் என்பதுதான் உண்மையான அர்த்தமாக இருக்கின்றது.

ஆகையால், இயேசு தரும் தூய ஆவியினால் திருமுழுக்கின் மூலம் நாம் அனைவரும், அதிலும் குறிப்பாக அவர்மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் புதுவாழ்வினைப் பெறுவார்கள் என்பது உறுதி.

திருமுழுக்கு யோவானைப் போன்று இயேசுவைச் சுட்டிக்காட்ட அழைப்பு

இயேசுவை உலகின் பாவங்களைப் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டியாக, தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுத்து நமக்கு வாழ்வளிப்பவராகச் சுட்டிக்காட்டும் இன்றைய நற்செய்தி வாசகம், நமக்கோர் அழைப்பினை விடுக்கின்றது. அது என்ன அழைப்பெனில் எனில், இயேசு கிறிஸ்துவை இவ்வுலகிற்குச் சுட்டிக்காட்டுவதாகும்.

திருமுழுக்கு யோவான் இயேசு கிறிஸ்துவை, "இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி" என்று தன்னுடைய சீடர்களுக்குச் சுட்டிக்காட்டினார். மட்டுமல்லாமல், இப்படிப்பட்ட பணியினை அவர் மிகுந்த தாழ்த்தியோடு செய்தார். அவர் நினைத்திருந்தால், "நான்தான் மெசியா" என்று சொல்லியிருக்கலாம். மக்களும் அதனை ஏற்றுகொள்ளத் தயாராக இருந்தார்கள் (யோவா 1:19); ஆனால், அவர் அப்படிச் செய்யாமல், மெசியாவைச் சுட்டிக்காட்டுபவராக செயல்படுகின்றார். அதுவும் தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு செயல்படுகின்றார்.

திருமுழுக்கு யோவானைப் போன்று ஆண்டவர் இயேசுவை இவ்வுலகிற்குச் சுட்டிக்காட்டுகின்றோமோ? அதுவும் தாழ்ச்சியான உள்ளத்தோடு சுட்டிக்காட்டுகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் இயேசுவை இவ்வுலகிற்குச் சுட்டிக்காட்ட மறந்து, நம்மைச் சுட்டிக்காட்டிக்கொண்டிருக்கின்றோம் அல்லது நம்மை முன்னிலைப்படுத்திக் கொண்டிருகின்றோம். இத்தகைய ஒரு தவறான போக்கினை நம்மிடமிருந்து அப்புறப்படுத்திவிட்டு, திருமுழுக்கு யோவானைப் போன்று இயேசுவைச் சுட்டிக்காட்டும் சுட்டுவிரல்களாக இருந்து செயல்படவேண்டும். அதுவே காலத்தின் கட்டாயம்.

சிந்தனை

"சிலுவையின்மீது தம் உடலில் நம் பாங்களை அவரே சுமந்தார்" (1 பேது 2: 24) என்பார் புனித பேதுரு. ஆகவே, நம்முடைய பாவங்களைத் தன்னுடைய உடலில் சுமந்த இயேசுவை, திருமுழுக்கு யோவானைப் போன்று இவ்வுலகிற்குச் சுட்டிக்காட்டி, அவர்களை இயேசுவிடம் அழைத்து வருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
இரு கேள்விகள்

ஆண்டின் பொதுக்காலம் 2ம் ஞாயிறு
(ஜனவரி 19, 2020)

எசாயா 49:3, 5-6
1 கொரிந்தியர் 1:1-3
யோவான் 1:29-34

பாரக் ஒபாமா அவர்களின் துணைவியார் திருமதி. மிஷல் ஒபாமா அவர்கள் எழுதி புகழ்பெற்ற நூல், 'பிகமிங்' என்பது. குழந்தைகளிடம் நாம், 'நீ வயது வந்தபின் என்னவாகப் போகிறாய்?' எனக் கேட்கிறோம். ஆனால், வயது வந்தவர்களிடம், 'நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்?' என்று மட்டுமே கேட்கிறோம். குழந்தைப் பருவம் மட்டும்தான் மாற்றத்தின் பருவம் என்றும், வயது வந்த பருவம் இருத்தலின் பருவம் எனவும் நினைக்கிறோம். இது தவறு! நாம் ஒவ்வொரு பொழுதும் மாறிக்கொண்டே இருக்கிறோம் - 'வி ஆர் பிகமிங் எவ்ரி மொமண்ட்' - இப்படியாக எழுதுகிறார் மிஷல்.

நாம் எப்படி மாறுகிறோமோ அதுவேதான் நம்முடைய இருத்தலாக இருக்கின்றது என்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

வரலாற்றில் பெரிய முத்திரை பதித்த யாரை எடுத்தாலும் - மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர், ஆபிரகாம் லிங்கன், பெருந்தலைவர் காமராஜர் போன்றோர் - இவர்கள் தங்களுடைய வாழ்வில் இரண்டு கேள்விகளுக்கு விடை தெரிந்தவர்களாக இருந்தனர்:

ஒன்று, 'நான் யார்?'

இரண்டு, 'நான் யாருக்காக?'

இக்கேள்விகளில், 'நான் யார்?' என்பது ஒருவருடைய வேர் என்றால், 'நான் யாருக்காக?' என்பது அவருடைய கிளை என்று சொல்லலாம். இந்த இரண்டு கேள்விகள் கேட்பதும் ஒருவர் வளர்ந்துகொண்டே இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

உளவியல் மற்றும் மெய்யியலில் அதிகமாக வலியுறத்தப்படும் கேள்வி, 'நான் யார்?' என்பதுதான். இதற்கு விடையாக நாம் நம்முடைய பெயர், ஊர், பெற்றோர், குடும்ப பின்புலம், படிப்பு, வேலை ஆகியவற்றைக் குறிப்பிடுகிறோம். மெய்யிலாளர் சாக்ரடிசு, 'உன்னையே நீ அறிந்துகொள்!' என்றார். ஆனால், இதிலிருந்து புறப்பட்டு, 'நீ யாருக்காக என்பதை அறிந்துகொள்!' என்பதில்தான் மெய்ஞ்ஞானம் இருக்கிறது. இந்த மெய்ஞ்ஞானத்தை நோக்கியே கீழைத்தேய ஞானம் இருந்தது.

2020ம் ஆண்டை நம் தமிழகத் திருஅவை இளைஞர் ஆண்டாகக் கொண்டாடி மகிழ்கிறது. இந்த ஆண்டில் மையமாக வைத்துச் சிந்திக்கப்படும், நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், 'கிறிஸ்து வாழ்கிறார்' என்ற ஊக்கவுரையில், இளைஞர்களின் பாதைகளைப் பற்றிப் பேசுகின்ற இடத்தில், 'இளைஞர்கள் தங்களுடைய வாழ்வைச் சீராக அமைத்துக்கொள்ள இவ்விரு கேள்விகள் கேட்பது அவசியம்: 'நான் யார்?' அதைவிட, 'நான் யாருக்காக?'' என்கிறார். இக்கேள்விகளுக்கு விடைகள் காணும் இளைஞர்களே வெற்றியாளர்கள்.

இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் நாம் சந்திக்கும் மூன்று நபர்கள் - எசாயா, பவுல், இயேசு - இக்கேள்விகளுக்கு விடை தெரிந்தவர்களாக இருக்கின்றனர்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 49:3,5-6), முதல் பகுதி இஸ்ரயேல் மக்களைப் பார்த்துக் கடவுள் பேசுவதாகவும், இரண்டாம் பகுதி இறைவாக்கினர் அல்லது இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய அழைப்பு பற்றி தாங்களே பேசுவதாகவும் அமைந்துள்ளது. இஸ்ரயேல் அல்லது இறைவாக்கினர் யார்? 'அவர் ஊழியன். கருப்பையிலிருந்து ஊழியனாக உருவாக்கம் பெற்றவர். ஆண்டவர் பார்வையில் மதிப்பு பெற்றவர். ஆண்டவரைத் தன் ஆற்றலாக் கொண்டவர். இவர் யாருக்காக? யாக்கோபின் குலங்களுக்காக, இஸ்ரயேலில் சிதறடிக்கப்பட்டவர்களுக்காக. இறைவாக்கினர் தன்னுடைய முதல் கேள்விக்கு விடை கண்டதால், இரண்டாம் கேள்விக்கும் எளிதாக விடை காண்கின்றார். 'நான் யார்?' என்று அறிந்துகொண்ட அடுத்த நொடி, 'நான் யாருக்காக?' என்பதை அறிந்து தொடர்ந்து தன் பணியைச் செய்கின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 கொரி 1:1-3) புனித பவுல் கொரிந்து நகரத் திருஅவைக்கு எழுதும் முதல் திருமடலின் தொடக்கமாக இருக்கிறது. வருகின்ற ஏழு வாரங்கள் தொடந்து நாம் இத்திருமுகத்திலிருந்தே வாசிப்போம். பவுலைப் பொறுத்தவரையில் கொரிந்து நகரத் திருச்சபை அவருக்கு 'அடங்காத குழந்தை.' கொரிந்து நகரத் திருச்சபையில் விளங்கிய பிளவுகள், பரத்தைமை, சிலை வழிபாடு, வழிபாட்டுப் பிறழ்வுகள் ஆகியவற்றைப் பற்றிக் கேள்விப்படுகின்ற பவுல் அவர்களைக் கடிந்தும், அறிவுறுத்தியும் இம்மடலை எழுதுகின்றார். கடிந்துரைக்கும், அறிவுறுத்தும் இம்மடலை மிகவும் இனிமையான வார்த்தைகளால் தொடங்குகிறார்: 'கொரிந்து நகரிலுள்ள கடவுளின் திருச்சபைக்கு ... திருத்தூதனாக அழைக்கப்பட்ட ... இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்று, தூயோராக்கப்பட்டு, இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ள உங்களுக்கு ...' பவுலின் வார்த்தைகளில் கோபமோ, மனவருத்தமோ, உளக்கசப்போ இல்லை. இத்தொடக்க வார்த்தைகளில் தான் யார் என்பதையும் தன்னுடைய பணி யாருக்கு என்பதையும் தெளிவாக உரைப்பதோடு, கொரிந்து நகர மக்கள் யார் என்பதையும் அவர்களுடைய பணி யாருக்கு என்பதையும் எடுத்துரைக்கின்றார். பவுல் யார்? திருத்தூதர். பவுல் யாருக்காக? கடவுளின் திருச்சபைக்காக, கடவுளுக்காக. கொரிந்து மக்கள் யார்? இறைமக்கள், தூயவர்கள். இவர்கள் யாருக்காக? கிறிஸ்துவுக்காக.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 1:29-34), இயேசு தன்னிடம் வருவதைக் கண்ட திருமுழுக்கு யோவான், 'அவர் யார்?' என்பதையும் - 'கடவுளின் செம்மறி', 'அவர் யாருக்காக?' - 'உலகின் பாவத்தைப் போக்க' என்பதையும் மிக அழகாகச் சுட்டிக்காட்டுகின்றார். இங்கே 'செம்மறி' என்ற உருவகம், பாவக்கழுவாய்க்குப் பயன்படுத்தப்படும் பலி ஆட்டையோ, அல்லது போக்கு ஆட்டையோ, அல்லது பாஸ்கா திருநாளன்று கொல்லப்படும் ஆட்டுக்குட்டியையோ குறிக்கும். மேலும், இப்பகுதியில் தான் யார் என்பதையும், தான் யாருக்கு என்பதையும் திருமுழுக்கு யோவானும் தெளிவாக உணர்ந்திருப்பதை நாம் காண்கின்றோம்.

இந்தக் கேள்விகளை நம் வாழ்வோடு எப்படி பொருத்திப் பார்ப்பது?

நம் வாழ்வில் பல நேரங்களில், 'நான் யார்?' என்ற கேள்வியைக் கேட்டிருப்போம். ஆனால், 'நான் யாருக்காக?' என்று நான் என்னையே கேட்கும் அத்தருணத்தில்தான் என்னுடைய வாழ்வு மாற்றம் பெறுகிறது.

இக்கேள்விகளுக்கான விடை மூன்று நிலைகளில் வரலாம்:

1. இறைவனிடமிருந்து:
முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் அல்லது இறைவாக்கினர் எசாயாவுக்கு இக்கேள்விகளின் விடைகள் இறைவனின் வெளிப்பாட்டிலிருந்து வருகின்றன. ஆண்டவராகிய கடவுள்தாமே அவருக்கு இவற்றை வெளிப்படுத்துகின்றார். மேலும், ஆண்டவரின் வாக்குறுதிகள் எதிர்கால வாக்குறுதிபற்றியதாகவும் இருக்கின்றன.

2. தன் குழுமத்திலிருந்து:
இரண்டாம் வாசகத்தில் பவுல் இக்கேள்விகளுக்கான விடைகளைதத் தன்னுடைய இலக்கு மக்களாகிய கொரிந்து நகரத் திருச்சபையிடமிருந்து பெற்றுக்கொள்கின்றார். தன்னுடைய குழுமத்தின்மேல் கோபமோ அல்லது மனத்ததாங்கலோ கொள்ளாமல் மிகவும் மனமுதிர்ச்சியோடு தேடுகின்றார் பவுல்.

3. தன் சகோதரர் அல்லது நண்பர்களிடமிருந்து:
நற்செய்தி வாசகத்தில் இயேசு யார் என்ற அடையாளமும், அவர் யாருக்காக என்பதற்கான விடைகளும் திருமுழுக்கு யோவனிடமிருந்து வருகின்றன.

இன்றைய நாளில், நாம் இவ்விரண்டு கேள்விகளுக்கு விடை காண முயல்வோம்: 'நான் யார்?' 'நான் யாருக்காக?'

இக்கேள்விகளுக்கான விடைகள் தெரிந்தால், 'உமது திருவுளம் நிறைவேற்ற நானும் வருகிறேன் ஆண்டவரே' (காண். திபா 40) என்று திருப்பாடல் ஆசிரியர் போல (இன்றைய பதிலுரைப்பாடல்) நாமும் அவரிடம் சரணாகதி அடைய முடியும். இக்கேள்விகளுக்கான விடைகளில் அவருடைய உடனிருப்பும் உற்சாகமும் நிறைய இருக்கும்.

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
=================================================================================
திருப்பலி முன்னுரை
=================================================================================

கடவுளின் செம்மறியைக் காண ஆவலோடு ஓடி வந்திருக்கும் அன்புள்ளங்களை பொதுக்காலம் 02ஆம் ஞாயிறு திருப்பலிக்கு அன்புடனே வரவேற்கின்றோம்.

தான் படைத்த மக்களை பாவங்களிலிருந்து மீட்பதற்காக தன் ஒரே மகனை பலியாகக் கொடுத்த இறை தந்தையின் அன்பின் ஆழம் உணர்ந்து, அதே அன்பை நம் வாழ்விலும் பிரதிபலிக்க இப்பலியில் மன்றாடுவோம்.

இன்றைய முதல் வாசகத்தில் சிதறுண்ட மக்களை ஒன்று திரட்ட கடவுளின் ஊழியனாக இயேசு அனுப்பப்பட இருப்பதை எசாயா இறைவாக்கினர் முன்னறிவிக்கின்றார். நாமும் நம் உறவுகளிலும் சுற்றத்திலும் சமுதாயத்திலும் பல்வேறு காரணங்களால் சிதறுண்டு கிடக்கும் உள்ளங்களை ஒன்று சேர்ப்போம்.

ஆண்டவரே, உமது திருவுளம் நிறைவேற்ற இதோ நான் வருகிறேன் என்று தன்னையே முழுவதுமாக மனுக்குலத்தின் மீட்புக்காகக் கையளித்த இறை மகனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, உலகில் ஒளி வீசும் சுடர்களாகத் திகழ, உறவுகளை ஒன்று சேர்த்து இறையன்பின் ஆட்சியை உருவாக்க இப்பலியில் இணைந்து மன்றாடுவோம்.

இறைமக்களின் மன்றாட்டுகள்

1. இறைத்திருவுளம் நிறைவேற்ற விரைந்த எம் இறைவா!
உம் அன்பின் ஆட்சியை இவ்வுலகில் அமைக்க நீர் எமக்குத் தந்த திரு அவைப் பணியாளர்களை நிறைவாக ஆசீர்வதித்து, உம் பணியில் அவர்கள் மேற்கொள்ளும் சவால்களில் உடனிருந்து வெற்றி அளிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

2. சிதறுண்ட இஸ்ரயேலை ஒன்றுதிரட்ட அனுப்பட்டவரே எம் இறைவா!
பல்வேறு மொழி பேசும் மக்களைக் கொண்டுள்ள எம் தாய் திரு நாட்டை ஆட்சி செய்யும் தலைவர்களை ஆசீர்வதியும். பல்வேறு அரசியல் சூழ்ச்சிகளினாலும் கொள்கையினாலும் சிதறுண்டு கிடக்கும் நாட்டை முன்னேற்ற எம் தலைவர்களோடு உடனிருந்து வழி நடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

3. பிற இனத்தாருக்கு ஒளியாக ஏற்படுத்தப்பட்டவரே எம் இறைவா!
ஆற்றலோடு மாற்றம் நோக்கி என்ற இலக்கோடு பயணிக்கும் எம் இளைய தலைமுறையை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம். இளைஞர் ஆண்டில் இவர்கள் எடுத்துச் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும் நீரே வழிகாட்டியாக இருந்து தொடர்ந்து வரும் ஆண்டுகளிலும் பணியினைத் தொடர்ந்து ஒளிவீசித் துலங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

4. உம் பிள்ளைகளாகும் உரிமையை அளித்தவரே எம் இறைவா!
குட்டித் திரு அவையாம் குடும்பங்களை ஆசீர்வதியும். குடும்பங்களில் அமைதி, ஒற்றுமை நிலைத்து நிற்கவும், பிள்ளைகள் பெற்றோருக்கும் பெரியோருக்கும் கீழ்படிந்து தங்கள் வாழ்க்கைப் பாதையில் உம் நெறிகளைப் பின்பற்றி வாழ அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.



 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!