Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                                    அனைவருக்கும் இயேசு உயிர்ப்பின் வாழ்த்துக்கள்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 இறந்த இயேசு உயிர்த்தெழுந்தபின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 10: 34a, 37-43

அந்நாள்களில் பேதுரு பேசத் தொடங்கி, "திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றிய பின்பு கலிலேயா முதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும். கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்ததால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார். யூதரின் நாட்டுப் புறங்களிலும் எருசலேம் நகரிலும் அவர் செய்த அனைத்திற்கும் நாங்கள் சாட்சிகள். மக்கள் அவரைச் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்றார்கள். ஆனால் கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பிக் காட்சி அளிக்கச் செய்தார்.

ஆயினும் அனைத்து மக்களுக்குமல்ல, சாட்சிகளாகக் கடவுள் முன் தேர்ந்துகொண்டவர்களுக்கு மட்டுமே, அவர் காட்சியளித்தார். இறந்த அவர் உயிர்த்தெழுந்த பின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள்.

மேலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நடுவராகக் கடவுளால் குறிக்கப்பட்டவர் இயேசுதாம் என்று மக்களுக்குப் பறைசாற்றவும் சான்று பகரவும் அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவரது பெயரால் பாவமன்னிப்புப் பெறுவர் என்று இறைவாக்கினர் அனைவரும் அவரைக் குறித்துச் சான்று பகர்கின்றனர்" என்றார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 118: 1-2. 16-17. 22-23 (பல்லவி: 24)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்.

அல்லது

அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!

1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. 2 "என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு" என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! பல்லவி

16 ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. 17 நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன். பல்லவி

22 கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! 23 ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
 மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து அமர்ந்திருக்கிறார்.

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-4

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்.

இவ்வுலகு சார்ந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது.

கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும்பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


அல்லது

நீங்கள் புதிதாய்ப் பிசைந்த மாவாய் இருப்பீர்கள். ஆகையால், பழைய புளிப்பு மாவைத் தவிர்க்க வேண்டும்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 6b-8

சகோதரர் சகோதரிகளே, சிறிதளவு புளிப்பு மாவு, பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா? எனவே புளிப்புச் சத்துள்ள பழைய மாவைத் தூக்கி எறிந்துவிடுங்கள். அப்போது நீங்கள் புதிதாய்ப் பிசைந்த மாவாய் இருப்பீர்கள். உண்மையில் நீங்கள் புளிப்பற்ற மாவாய்த்தான் இருக்கிறீர்கள்.

ஏனெனில் நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் பழைய புளிப்பு மாவைத் தவிர்க்க வேண்டும். தீமை, பரத்தைமை போன்ற புளிப்பு மாவோடு அல்ல, மாறாக நேர்மை, உண்மை போன்ற புளிப்பற்ற அப்பத்தோடு பாஸ்காவைக் கொண்டாடுவோமாக.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


தொடர் பாடல்

இன்று இதைச் சொல்ல வேண்டும் அல்லது பாட வேண்டும்.

எண்கிழமை நாள்களில், விரும்பினால், சொல்லலாம்.


பாஸ்காப் பலியின் புகழ்தனையே பாடிப் புகழ்வோம் கிறிஸ்தவரே.

மாசில் இளமறி மந்தையினை மாண்பாய் மீட்டுக்கொணர்ந்தாரே; மாசறு கிறிஸ்துவும் தந்தையுடன் மாசுறு நம்மை இணைத்தாரே.

சாவும் உயிரும் தம்மிடையே புரிந்த வியத்தகு போரினிலே உயிரின் தலைவர் இறந்தாலும் உண்மையில் உயிரோடாளுகின்றார். வழியில் என்ன கண்டாய் நீ?

மரியே, எமக்கு உரைப்பாயே.

உயிரோடுள்ள கிறிஸ்து பிரான் கல்லறைதன்னைக் கண்டேனே; உயிர்த்து எழுந்த ஆண்டவரின் ஒப்பரும் மாட்சியும் கண்டேனே.

சான்று பகர்ந்த தூதரையும் போர்த்திய பரிவட்டத்தினையும் அவர்தம் தூய துகிலினையும் நேராய்க் கண்ணால் கண்டேனே.

கிறிஸ்து என்றன் நம்பிக்கை, கல்லறை நின்று உயிர்த்தாரே, இதோ, உமக்கு முன்னாலே செல்வர் கலிலேயாவிற்கே.

மரித்தோர் நின்று உண்மையிலே கிறிஸ்து உயிர்த்தது யாமறிவோம். வெற்றிகொள் வேந்தே, எம்மீது நீரே இரக்கங் கொள்வீரே.


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
1 கொரி 5: 7b-8b

அல்லேலூயா, அல்லேலூயா! நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் நாம் ஆண்டவரின் பாஸ்காவைக் கொண்டாடுவோமாக. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-9

வாரத்தின் முதல் நாளன்று விடியற்காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார்.

எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்ற சீடரிடமும் வந்து, "ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!" என்றார்.

இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவைவிட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை. அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்ற துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.

பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார்; கண்டார்; நம்பினார். இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
மரணத்தை வென்ற மாவிரன். வேற்றி வீரராய் உயிர்த்து விட்டார் எனும் செய்தியை பெண்கள் சீடர்கள் அறிவித்தனர். அவர்களது சந்திப்பின் நம்பிக்கை நங்கூரமானது. இன்றைக்கு உயிர்த்த இயேசுவை செபத்தில், தியானத்தில், அருளடையாளத்தில், சந்திக்கும் நாம் எப்படி அறிவித்து வருகின்றோம். உயிர்ப்பு இல்லையேல் கிறிஸது இல்லை. கிறிஸ்து இல்லையேல் திருச்சபை இல்லை. அவரின் உயிர்ப்பிலே கட்டப்பட்டவர்களே கிறிஸ்தவர்கள்.

புதிய வரலாறு. புரட்சி வரலாறு

மரணத்தை வென்ற மாபெரும் மகிழ்ச்சி வரலாறு.

இயேசு உடலோடு உயிர்த்தெழுந்த வரலாறு.

எனவே இன்று அக்களிப்போம். அகமகிழ்வோம்.

சீடர் கல்லறைவாயிலில் குனிந்து பார்த்தபொழுது, துணிகளை மட்டும் தான் காண முடிந்தது. "குனிந்த பார்வை" என்பது முழுப்பார்வை அல்ல. மீண்டும் சீடர்கள் நேரிடையாக கல்லறைக்குள் நுழைந்து பார்த்தபொழுது இயேசு உண்மையிலேயே உயிர்ந்துவிட்டார் என்பதைக் கண்டு நம்பினர். மறைநூல் வாக்கை நினைவு கூர்ந்து புரிந்து கொண்டனர். மீண்டும் அவரோடு உண்டு, குடித்து, உறவாடி, அனுபவம் பெற்று அவனியெங்கும் சான்று பகிர்ந்தனர்.

பொய்மையிலந்து உண்மைக்கும்

இருளிலிருந்து ஒளிக்கும்

மரணத்திலிருந்து: உயிர்ப்புக்கும்.

கடந்து செல்கின்ற வாழ்வே உயிர்ப்பு வாழ்வு. நிலை வாழ்வு. நம்பிக்கையோடு நாமும் புதிய பாஸ்காவைத் தொடர்வோம்.


உயிர்ப்புக்கு சாட்சியங்கள் பலவுண்டு. காட்சியளிக்கச் செய்தார் என்று பேதுரு மொழிகின்றார். காட்சியை கண்டதோடு மட்டுமில்லை, அவரோடு உண்டனர். இதற்கெல்லாம் சான்று பகர்கின்றார். நம்பிய திருத்தூதர்கள் சொல்ல கேட்கும் நாமும், நம்பிக்கையில் தளர்வுறாது பயணிப்போம்.

அத்தகைய உயிர்ப்பின் மகிமை, மாட்சிமை நமக்கும் உண்டு என்பதுவே நம்முடைய நம்பிக்கை. அதனையடைய நாமும் மண்ணுலகில் இருப்பவர்களைப் போல எண்ணுவது, பேசுவது இல்லாமல் விண்ணுலகில் இருப்பவர்களைப் போல எண்ண, பேச முற்படவே பவுல் அழைக்கின்றார். அப்பொழுது நாமும் மாட்சிமையடைவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
கிறிஸ்து உயிர்த்தார் அல்லேலூயா!

இரண்டாம் உலகப் போர் மிகத் தீவிரம் அடைந்திருந்த தருணம். அந்த ஆண்டில் வந்த புனித வாரத்தின் புதன்கிழமை அன்று, அதிகாலை வேளையில், பிரான்சு நாட்டில் இருந்த ஒரு பிரசித்த பெற்ற தேவாலயத்தில் பெண்ணொருத்தி கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்தாள். அவளுடைய அழுகைச் சத்தம் ஆலயத்தின் பின்னால் இருந்து ஜெபித்துக்கொண்டிருந்த குருவானவரை ஏதோ செய்தது.

உடனே குருவானவர் அழுதுகொண்டிருந்த பெண்மணியின் அருகே வந்து, "ஏனம்மா! இந்த அதிகாலை வேளையில் இப்படி அழுதுகொண்டிருக்கின்றாய்? உனக்கு ஏதாவது பிரச்சனையா? உன்னுடைய பிரச்னையை என்னிடம் சொல். என்னால் முடிந்த மட்டும் உனக்கு நான் உதவி செய்கிறேன்" என்றார். அந்தப் பெண்மணியோ அழுகையை அடக்கமுடியாதவளாய், தன்னுடைய கையில் வைத்திருந்த தந்தியை எடுத்து, குருவானவரிடம் கொடுத்து, "என் மகன் நாட்டிற்காக இராணுவத்தில் பணியாற்றிக்கொண்டு வருகின்றான். ஆனால், போர்க்களத்தில் என்ன நடந்ததோ தெரியவில்லை. நேற்று இரவு "என் மகனைக் காணவில்லை, அவனை எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை" என்று தந்தி வந்திருக்கின்றது. அந்தத் தந்திதான் உங்களுடைய கையில் இப்போது இருப்பது. என்னுடைய ஒரே மகனும் என்னைவிட்டுப் போய்விட்டானே, இப்போது நான் என்ன செய்வேன்?" என்றாள். அதற்கு குருவானவர் அந்தத் தாயிடம், "கவலைப்படாதீர்கள் அம்மா! உங்களுடைய மகனுக்கு ஒன்றும் ஆகியிருக்காது. நீங்கள் கவலைப்படாமல் வீட்டிற்குச் செல்லுங்கள்" என்று சாந்தப்படுத்தி, குருவானார் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

அடுத்த நாள் பெரிய வியாழன். அன்றைய தினத்தில் குருவானவர் திருப்பலியை நிறைவேற்றும்போது தற்செயலாக முன்வரிசையில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தார். அங்கு முந்தைய தினத்தில் மகனைக் காணவில்லை என்று அழுத பெண்மணி, அன்றைக்கும் அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தார். அந்தத் தாயின் நிலை கண்டு, அவளுக்காகத் திருப்பலியில் மிக உருக்கமாக ஜெபித்தார். திருப்பலி முடிந்த பிறகும்கூட குருவானவர் அந்த தாயினை சந்தித்து, அவரைத் தேற்றினார். மறுநாள் பெரிய வெள்ளி. அன்றைக்கும் அந்தத் தாயானவள் ஆலயத்தில் அமர்ந்து அழுதுகொண்டே இருந்தாள். அன்றைய நாளில் அவளுடைய அழுகையில் அதிகமான வேதனை வெளிப்படுவதை அறிந்து குருவானவர் அவளுக்காகவும், அவளுடைய மகனுக்காகவும் வழிபாட்டில் மிக உருக்கமாக ஜெபித்தார்.

மறுநாள் சனிக்கிழமை. அதாவது உயிர்ப்புப் பெருவிழா கொண்டாட்டத்தின் ஒருசில மணித்துளிகளுக்கு முன்பாக, உயிர்ப்புப் பெருவிழா வழிபாட்டிற்கு எல்லாம் தயாராக இருக்கின்றதா? என்று குருவானவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தார். அப்பொழுது மகனைக் காணவில்லை என்று மூன்று நாட்களாக அழுதுகொண்டிருந்த தாயானவள் அவரிடம் வந்தாள். ஆனால், அவள் முன்பு இருந்ததைப் போன்று இல்லை, அவளுடைய முகத்தில் ஒருவிதமான மாற்றம் பிறந்திருந்தது. அவள் குருவானவரிடம் ஒரு தந்தியைக் கொடுத்து, "சுவாமி! போர்க்களத்தில் என் மகன் காணாமல் போய்விட்டதாகச் சொன்னேனே. அவன் இப்போது கிடைத்துவிட்டான் என்று தந்தி வந்திருக்கின்றது. அந்தத் தந்திதான் இது" என்று அந்தத் தாயானவள் தன்னிடம் இருந்த தந்தியை எடுத்து, குருவானவரிடம் படிக்கக் கொடுத்தார். தந்தியைப் படித்துப் பார்த்த குருவானவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

"இயேசு கிறிஸ்து இறந்து உயிர்த்தெழுந்ததுபோல், உங்களுடைய மகனும் உயிர்த்தெழுந்திருக்கின்றான் - காணாமல் போய் கிடக்கப்பெற்றிருகின்றான். அதனால் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். இந்த உயிர்ப்புப் பெருவிழா உங்களுக்குத்தான் மிகவும் பொருள் நிறைந்தது" என்று வாழ்த்தி, அவரை அனுப்பி வைத்தார்.



போர்க்களத்தில் காணாமல் போன அந்தத் தாயின் மகன் கிடைக்கப் பெற்றதைப் போன்று - உயிர்த்தெழுந்ததைப் போன்று - நம் ஆண்டவர் இயேசுவும் சாவை வென்று வெற்றிவீரராக உயிர்த்தெழுந்துள்ளார். ஆகையால், நாம் இறைவனுக்கு நன்றி சொல்லுவோம். அது மட்டுமல்லாமல் இந்த உயிர்ப்புப் பெருவிழாவில் உயிர்த்த ஆண்டவர் இயேசு நமக்குத் தரும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

இயேசுவின் உயிர்ப்பு ஒரு கட்டுக்கதையோ அல்லது ஒரு பொய்யான பரப்புரையோ அல்ல. அது உண்மையிலும் உண்மையானது. இதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது.

இயேசு உண்மையாகவே உயிர்த்தெழுந்தார் என்பதற்கு நம்மிடம் இருக்கும் முதன்மையான சான்று வெற்றுக் கல்லறையாகும். ஆம், வாரத்தின் முதல்நாளில் இயேசு அடக்கம் செய்துவைப்பட்ட கல்லறைக்கு வந்த மகதலா மரியா, அங்கு கல்லறையை மூடியிருந்த கல் அகற்றப்பட்டு, கல்லறை வெறுமையாக இருப்பதைப் பார்த்தார். ஆனால், அவரால் இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் என்று நம்பமுடியவில்லை. அவரோ திகைத்துப் போய், நடந்தவற்றை எல்லாம் திருத்தூதர்களிடம் எடுத்துச் சொல்ல விரைகின்றார். அவர் திருத்தூதர்களிடம் நடந்தவற்றைச் சொன்னதும், பேதுருவும் யோவானும் கல்லறைக்கு விரைந்து வருகின்றார்கள். பேதுரு முதலில் கல்லறைக்குள் செல்கின்றார். அவருக்குப் பின்னால் யோவான் கல்லறைக்குள் செல்கின்றார். கல்லறையில் இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டு, மற்ற துணிகளோடு இல்லாமல், தனியாக சுருட்டி வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கின்றார். கண்டார், ஆண்டவர் இயேசு உண்மையாகவே உயிர்த்தெழுந்துவிட்டார் என்று நம்புகின்றார். அந்த வகையில் வெற்றுக் கல்லறை ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புக்கு முதன்மையான சான்றாகத் திகழ்கின்றது.

இயேசுவின் உயிர்ப்புக்கு இரண்டாவது சான்றாக இருப்பது திருத்தூதர்களின் சான்றுகள்தான். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் பேதுரு, "இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார், யூதர்களோ அது பிடிக்காமல், அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றார்கள். ஆனால், கடவுளோ அவரை மூன்றாம்நாள் உயிர்த்தெழச் செய்தார். இதற்கு அவரோடு இருந்த நாங்கள் சாட்சிகள்" என்கிறார். எனவே, திருத்தூதர்களின் சான்றுகளை வைத்து இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் என நாம் உறுதியாக நம்பலாம். ஆண்டவர் இயேசுகூட, "இக்கோவிலை இடித்து விடுங்கள். நான் இதை மூன்று நாட்களில் கட்டி எழுப்புவேன்" என்று கூறி, தான் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவேன் என்று தன்னுடைய உயிர்ப்பைக் குறித்து முன்கூட்டியே சொல்கின்றார்.

ஆகையால், வெற்றுக் கல்லறை, சீடர்களின் சான்றுகள், இயேசுவின் வார்த்தைகள் இவையெல்லாம் வைத்து இயேசு உண்மையாகவே உயிர்த்தெழுந்துவிட்டார் என்று நாம் உறுதிபடச் சொல்லச் சொல்லலாம். பவுலடியார் இன்னும் ஒரு படி மேலே சென்று, "கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், நாங்கள் அறிவித்த நற்செய்தியும், நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் வீண்: ( 1கொரி 15:14) என்று சொல்லி, இயேசுவின் உயிர்ப்பில்தான் திருச்சபை கட்டியெழுப்பப் பட்டிருக்கின்றது என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார். எனவே, இயேசுவின் உயிர்ப்பு கட்டுகதையோ, பொய்யான பரப்புரையோ அல்ல, மாறாக அது உண்மையானது என்பதை உறுதியாக நம்பலாம்.

இயேசுவின் உயிர்ப்பு மெய்யானது என்பதை பல்வேறு சான்றுகளின் சான்றுகளின் வழியாக அறிந்த நாம், இயேசுவின் உயிர்ப்பை எப்படி அர்த்தமுள்ளதாக்கப் போகின்றோம் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவின் உயிர்ப்பை மக்களுக்கு அறிவிக்கின்றபோது திருத்தூதர்கள் குறிப்பாக பேதுரு, "இவற்றிற்கு நாங்கள் சாட்சிகள்" என்பார். சாட்சிகள் என்று சொல்லும்போது அதில் மூன்று முக்கிய உண்மைகள் உள்ளடங்கி இருக்கின்றன. ஒன்று இயேசுவை முழுமையாக அறிதல். இரண்டு அறிந்ததை மக்களுக்கு அறிவித்தல். மூன்று அதற்காக உயிரைத் தருதல் என்பதாகும். பேதுரு உட்பட திருத்தூதர்கள் அனைவரும் இயேசுவை முழுமையாக அறிந்து, அறிந்தததை மக்களுக்கு அறிவித்து, அதற்காக தங்களுடைய உயிரையும் தந்தார்கள். நாம் இயேசுவின் உயிர்ப்புக்குச் சாட்சிகளாகச் திகழவேண்டும் என்றால், இயேசு உயிர்த்துவிட்டார் என்று அறிந்திருப்பது மட்டும் போதாது, அறிந்ததை அடுத்தவருக்கு அறிவிக்கவேண்டும். அதனை நம்முடைய வாழ்வாக்கவேண்டும். அப்போதுதான் நாம் இயேசுவின் உயிர்ப்புக்கு சாட்சிகளாகத் திகழ முடியும்.

ஒரு சமயம் ஒரு குருவானவரும், சோப்பு தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தவரும் காலார நடந்துபோய்க் கொண்டிருந்தார்கள். இரண்டாமவருக்கு கடவுள்மீது நம்பிக்கை கிடையாது. அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு போகும்போது, வழியில் அப்பாவி மனிதன் ஒருவனை முரடர்கள் சிலர் கடுமையாக தாக்கிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் இருவரையும் பார்த்த முரடர்கள் அங்கிருந்து ஓடிவிட்டார். அப்போது சோப்பு தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவர் குருவானவரிடம், "இந்த உலகத்தில் கடவுள் என்ற ஒருவர் கிடையவே கிடையாது. அவர் மட்டும் இருந்திருந்தால் இந்தக் கொடுமைகள் எல்லாம் நடக்காது அல்லவா?" என்றார். அதற்கு குருவானவர் பதில் ஒன்றும் சொல்லாமல், அப்படியே சென்றார்.

சிறுது தூரத்தில் அழுக்குத் துணியுடன் சிறுவன் ஒருவன் எதிரே நடந்து வந்துகொண்டிருந்தான். அவனைப் பார்த்த குருவானவர், சோப்பு தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவரிடம், "இந்த உலகத்தில் சோப்பு என்ற ஒன்று கிடையாது என்றார். அதற்கு அவர், ஏன் அப்படிச் சொல்கின்றீர்கள்?" என்று கேட்டார். "சோப்பு என்ற ஒன்று இருந்திருந்தால், இந்தச் சிறுவன் இப்படி அழுக்குத் துணியுடன் திரியமாட்டான் அல்லவா" என்றார் குருவானார். "அழுக்குப் போகவேண்டும் என்றால், சோப்பினைப் பயன்படுத்தவேண்டும். அதைவிடுத்து, சோப்பைப் பயன்படுத்தாமல், உலகத்தில் சோப்பே இல்லை என்று எப்படிச் சொல்லலாம்" என்றார்.

உடனே குருவானவர் அவரிடம், "இப்போது சொன்னீர்களே அழுக்குப் போகவேன்றால் சோப்பைப் பயன்படுத்த வேண்டும் என்று, அது போன்றுதான் உலகில் உள்ள தீமைகள் குறைந்து நன்மைகள் பெருகவேண்டும் என்றால், மக்கள் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழவேண்டும். அப்படி வாழாமல், கடவுள் இந்த உலகத்தில் இல்லவே இல்லை என்று ஒருபோதும் சொல்ல முடியாது" என்றார்.

ஆம், கடவுள் இந்த உலகத்தில் இருக்கின்றார் என்பதை நம்முடைய வாழ்வால் நிரூபிக்கவேண்டும் என்பதைப் போன்று, ஆண்டவர் இயேசு உண்மையாகவே உயிர்த்தெழுந்து விட்டார் என்பதை நம்முடைய சாட்சிய வாழ்வால் நிரூபிக்கவேண்டும்.

இயேசு இந்த உலகிற்கு அன்பையும், உண்மையான அமைதியையும், மன்னிப்பையும் கொண்டு வந்தார். நாம் அவருடைய விழுமியங்களின் படி நடக்கும்போது இயேசு உண்மையாகவே உயிர்த்துவிட்டார் என உறுதிபடச் சொல்லலாம். மட்டுமல்லாமல், இன்றைய இரண்டாம் வாசகத்தில் (கொலோசையருக்கு எழுதப்பட்ட திருமுகம்) பவுலடியார், "கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றையே நாடுகள்" என்பார். கடவுளுக்கு உகந்த வாழ்ந்த வாழ்வதே மேலுலகு சார்ந்த வாழ்க்கையாகும்.

ஆகவே, இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடும் நாம், அவருடைய உயிர்த்தெழுதலில் நம்பிக்கை கொள்வோம், அவருடைய உயிர்ப்புக்கு சாட்சிகளாகத் திகழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!